இன்றைக்கு நாம் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஒரு அற்புத தூண் சிற்பம் பார்க்கிறோம். யார் இவர்?
http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=127
கோயில் என்பது எல்லா ஆலயத்திற்கும் பொதுப்பெயர்.
அதுவே சிறப்புப் பெயராகக் குறிப்பிட்ட ஒரு தலத்தைக் குறிக்கு மானால் அது அதனுடைய மிக்க உயர்வைக்குறிக்கும்.
அங்ஙனம் உயர்வுபற்றிய காரணத்தால் இத்தலம் கோயில் என்னும் பெயர் பெற்றது.
இத்தலத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள்:
- பெரும்பற்றப் புலியூர் - பெரும்பற்றினால் புலிப்பாதன் பூசித்த ஊராதலால் இப்பெயர் பெற்றது - ஆம் இதுவே தில்லை / சிதம்பரம்
பெரிய புராணத்தில் :
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1200&padhi=72&startLimit=41&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
பொருவ ருந்தவத் தான்புலிக் காலனாம்
அருமு னியெந்தை அர்ச்சித்து முள்ளது
பெருமை சேர்பெரும் பற்றப் புலியூரென்று
ஒருமை யாளர்வைப் பாம்பதி ஓங்குமால்.
ஒப்பற்ற தவத்தையுடைய புலிக்காலர் (வியாக்கிர பாதர்) எனும் என் தந்தையாரால் வழிபடப் பெற்றதும், பெருமை மிகுந்த பெரும்பற்றப் புலியூர் என்று அழைத்தற்குரியதும், பெருமை கள் பலவும் வந்தடைதற்குரியதுமான தில்லைப்பதி, ஒருநெறிய மனம் வைத்து உணர்வோர்க்குச் சேமவைப்பாக இருப்பதாம்.
வியாக்கிரம் - புலி; பாதர் - காலினையுடையவர். இவர் மத்தியந்தன முனிவரின் மகனார் ஆவர். சிவவழிபாட்டைத் தவறாது செய்த இவருக்குச் சிவபெருமான் நேரில் தோன்ற, அவரிடம் சிவ வழிபாட்டிற்குப் பழுதற்ற மலர் எடுக்க நகங்களில் கண்களும், மலர் பறித்தற்கென மரங்களில் ஏறுங்கால் வழுக்காமல் இருப்பதற்கெனப் புலிக்காலும் கையும் பெற்றவர். இவர் திருமகனார் உபமன்னியு முனிவராவார். பெரும்பற்றப் புலியூர் - பெரும்பற்றை உடைய புலி யூர். அஃதாவது எல்லாப் பற்றும் அற்றாரது உள்ளத்துப் பற்றுடையதாய்ப் பற்றப்படுவது. ஒருமையாளர் - ஒருநெறிய மனம் வைத்தவர்.
தேவாரத்தில் :
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idField=6001&padhi=001
அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
.. அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
.. திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
.. கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
.. பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
எவ்வளவு தகுதி உடையவரும் தம் முயற்சியால் அணுகுதற்கு அரியவன், அந்தணர்களின் உள்ளத்தில் உள்ளவன். மாற்றுதற்கு அரிய வேதத்தின் உட்பொருளாகியவன், நுண்ணியன், யாரும் தம் முயற்சியால் உணரப்படாத மெய்ப்பொருள் ஆகியவன். தேனும் பாலும் போன்று இனியவன். நிலைபெற்ற ஒளிவடிவினன், தேவர்களுக்குத் தலைவன், திருமாலையும் பிரமனை யும், தீயையும், காற்றையும், ஒலிக்கின்ற கடலையும்மேம்பட்ட மலைகளையும் உடனாய் இருந்து செயற்படுப்பவன் ஆகிய மேம்பட்டவன். புலிக்கால் முனிவனுக்கு உறைவிடமாகிய தில்லையை உகந்து எழுந்தருளும் அப்பெருமானுடைய மெய்ப் புகழைப்பற்றி உரையாடாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களாம்.
ஆம், இவர் தான் புலிக்கால் முனி. பார்த்து மகிழுங்கள் .


English
தமிழ்
அண்மைய மறுமொழிகள்