Quantcast

இன்று மீண்டும் நண்பர் சதீஷ் உபயம் - ஒரு அற்புத வடிவம் - தாராசுரம்.

kungiliya kalayanar 1

மிக சிறிய சிற்பம் என்பதால் முதலில் இதனை மார்கண்டேயர் அல்லது கண்ணப்பர் கதை என்று நினைத்தேன்.

kungiliya kalayanar 2

பிறகு அடுத்து உள்ள சிற்பத்தில் கண்ணப்பர் உள்ளார் என்பதை கவனித்தேன்.

kannappar

அப்போது இவர் யார். உற்று பாருங்கள்.

kungiliya kalayanar

லிங்கம் சற்று சாய்ந்து உள்ளது. ஆஹா , இது குங்கிலிய கலைய நாயனார் புராணம் .

கதை படிக்க

http://www.geocities.com/arumuganavalar/kungilayakalayanayanaar.ஹ்த்ம்ல்

சோழமண்டலத்திலே, திருக்கடவூரிலே, பிராமண குலத்திலே, சிவபத்தியிற்சிறந்த கலயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அந்தத்திருப்பதியிலே திருவீரட்டான மென்னுந் திருக்கோயிலில் வீற்றிருக்கின்ற பரமசிவனுக்குத் தினந்தோறும் குங்குலியத்தூபம் இட்டுவந்தார். இட்டு வருங்காலத்திலே, பரமசிவனுடைய திருவருளினாலே அவருக்கு வறுமையுண்டாயிற்று. உண்டாகியும், அவர் தாஞ்செய்யுந் திருப்பணியைத் தவறாமல் நடத்திவந்தார். வறுமை மிகுதியினாலே நிலங்களை விற்றும், அடிமைகளை விற்றும், செலவழித்தார். இப்படி எல்லாம் செலவானமையால், அவருடைய மக்களும் சுற்றத்தவர்களும் வருந்தினார்கள்.

ஒருநாள் அவர்மனைவியார், அரிசி முதலியன வாங்குதற்கு ஒன்றும் இல்லாமையால் இரண்டுநாளாகப் பட்டினியிருந்து வருந்துகின்ற புதல்வரையும் சுற்றத்தாரையும் பார்த்து இரங்கி, தம்முடைய தாலியை அக்கணவர் கையிலே கொடுத்து, “இதற்கு நெல் வாங்கிக் கொண்டு வாரும்” என்றார். குங்குலியக்கலயநாயனார் அந்தத் தாலியை வாங்கிக் கொண்டு, நெல்லுக் கொள்ளும்படி போனார். போம்பொழுது வழியிலே ஒருவணிகன் குங்குலியப் பொதி கொண்டு தமக்கு எதிரே வரக்கண்டு, மனமகிழ்ந்து “சுவாமிக்குத் தூபம் இடும்படி குங்குலியத்தைப் பெற்றுக் கொண்டேன். இதினும் பார்க்க மேலாகிய பேறு உண்டோ” என்று சொல்லி, தம்முடைய கையில் இருந்த தாலியைக் கொடுத்து, அந்தக் குங்குலியப் பொதியை வாங்கிக்கொண்டு, ஆலயத்துக்கு விரைந்து சென்று, அங்குள்ள பண்டாரத்திலே அக்குங்குலியத்தை வைத்துவிட்டு, சுவாமியைத் துதித்துக்கொண்டு அங்கே இருந்தார். அவர் அங்கே இருக்க, வீட்டிலே அவர் மனைவியாரும் மக்களும், பசியினாலே வாடி, அன்று ராத்திரியிலே இளைப்புற்று நித்திரை செய்யும் பொழுது; கருணாகரராகிய கடவுள் அவ்வீடு முழுவதிலும், பொற்குவியலும் நெற்குவியலும் அரிசிக்குவியலும் பிறவளங்களும் நிறைந்து கிடக்கும்படி அருள்செய்து, அம்மனைவியாருக்குச் சொப்பனத்தில் தோன்றி, அநுக்கிரகஞ் செய்தார். உடனே அவர் விழித்தெழுந்து, அங்கே இருக்கின்ற செல்வத்தைக் கண்டு, பரமசிவனுடைய திருவருளை வியந்து ஸ்தோத்திரஞ் செய்துகொண்டு, தம்முடைய நாயகராகிய குங்குலியக்கலயநாயனாருக்குத் திருவமுது பாகம் பண்ணப் பிரயத்தனஞ்செய்தார். கிருபாநிதியாகிய பரமசிவன் குங்குலியக் கலயநாயனாருக்குத் தோன்றி, “நீ மிகப் பசி கொண்டிருக்கின்றாய். உன்வீட்டுக்குப் போய்ப் பாலும் அன்னமும் உண்டு துன்பத்தை ஒழி” என்று திருவாய்மலர்ந்தருளினார். குங்குலியக் கலயநாயனார் அதைக் கேட்டுக் கைகூப்பி வணங்கி அவருடைய ஆஞ்ஞையை மறுத்து இருத்தற்கு அஞ்சி, அதனைச் சிரசின் மேலே வகித்து திருக்கோயிலினின்றும் நீங்கிப் போய்த் தம்முடைய வீட்டினுள்ளே புகுந்தார். புகுந்த நாயனார் அவ்வீடெங்கும் நிறைந்திருக்கின்ற நிதிக்குவைகளைக் கண்டு, மனைவியாரை நோக்கி “இந்தச் சம்பத்துக்கள் எல்லாம் எப்படி வந்தன” என்று கேட்க; அவர் “எம்பெருமானுடைய திருவருளினால் வந்தன” என்றார். அதுகேட்ட நாயனார் “ஒன்றுக்கும் பற்றாத சிறியேனையும் ஆட்கொள்ளும் பொருட்டு நமது கடவுளுடைய கருணை இருந்தபடி இப்படியோ” என்று கடவுளை வணங்கினார். மனைவியார் விரைவிலே கணவரையும் சிவனடியார்களையும் விதிப்படி தூப தீபங்களால் ஆராதனை செய்து, திருவமுது செய்வித்தார். குங்குலியக்கலயநாயனார் பரமசிவனுடைய திருவருளினாலே பெருஞ்செல்வமுடையவராகி, சிவனடியார்களைத் தயிர் நெய் பாலோடு திருவமுது செய்வித்து வந்தார்.

இப்படி நடக்குங்காலத்திலே, திருப்பனந்தாளென்னும் திருப்பதியில் வீற்றிருக்கின்ற சிவலிங்கம் சாய்ந்திருக்கின்றமையால், அதனை நிமிரப்பண்ணிக் கும்பிடுதற்கு விரும்பி, இராசாவானவர் தம்முடைய யானைகளெல்லாவற்றையும் பூட்டி இழுப்பித்தார். இழுப்பித்தும், அது நிமிராமையால் அகோராத்திரம் தீராத கவலையுற்றிருந்தார். குங்குலியக்கலய நாயனார் அந்தச் சமாசாரத்தைக் கேள்வியுற்று சுவாமி தரிசனஞ்செய்யும்பொருட்டுத் திருப்பனந்தாளை அடைந்தார். அங்கே சிவலிங்கத்தை நிமிரப்பண்ணவேண்டுமென்கின்ற ஆசையாய் இராஜாவருத்தமுறுதலையும், சேனைகள் யானைகளோடு சிவலிங்கத்தை இழுத்துத் தங்கள் கருத்து முற்றாமையால் பூமியின்மேலே வலி குறைந்து விழுந்து இளைத்தலையும் கண்டு, மனசிலே துன்பங்கொண்டு, “அடியேனும் இளைப்பைத் தருகின்ற இந்தத் திருப்பணியைச் செய்ய வேண்டும்” என்று விரும்பி, சிவலிங்கத்திலே கட்டப்பட்ட கயிற்றைத் தம்முடைய கழுத்திலே கட்டிக்கொண்டு இழுத்தார். உடனே சிவலிங்கம் நிமிர்ந்தது. அப்படி நிமிர்ந்தது அவர் புறத்திலே கட்டி இழுத்து அக்கயிற்றினாலே அன்று; அகத்திலே கட்டியிழுத்த அன்புக்கயிற்றினாலேயாம். அது கண்டு இராஜாவும் சேனைகளும் மிகுந்த களிப்பையடைந்தார்கள். இராஜா குங்குலியக்கலயநாயனாரை நமஸ்கரித்து வியந்து ஸ்தோத்திரம் பண்ணி, சுவாமிக்கு வேண்டிய திருப்பணிகள் பலவற்றை நிறைவேற்றிக்கொண்டு தம்முடைய நகரத்துக்குப் போய்விட்டார்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், பெப்ரவரி 5th, 2009 அன்று 5:05 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 7 மறுமொழிகள்

  1  

காதலாகி கசிந்து அன்பு பெருக அதனால் ஆனந்த கண்ணீர் பெருக போற்றும் அடியவர்க்கு இறைவன் எளிதில் அருள்வான். அந்த அடியவரின் புகழ் பரப்பும் அடியவர்க்கும் அடியாராகிய தங்களுக்கும் அருள்வான்.

பெப்ரவரி 5th, 2009 at 8:06
  2  

குங்கிலியம் இட்ட கதை தெரியும், மற்றது இப்போவே அறிந்தேன். நன்றி.

மார்ச் 1st, 2009 at 13:35
  3  

குங்கிலிய கலயநாயனாரின் பக்திமிகு
சரிதத்தை அழகு தமிழில் தெளிவாக
எடுத்துச் சொன்னதைக் கண்டு மகிழ்ந்தேன்.
மிக்கநன்றி!

அன்புடன்,
தங்கமணி.

ஜூன் 14th, 2010 at 11:43
  4  

மிக்க நன்றி திரு தங்கமணி அவர்களே.

ஜூன் 14th, 2010 at 14:07
சரஸ்,பினாங்கு
  5  

வணக்கம். நாயன்மார்களின் பக்தி சொட்டும் புராணம் சிறப்பு சேர்த்தது. நன்றி. கலைய நாயனாரின் பாடல்கள் கிடக்கப்பெறுமாயின் நன்றியுடையவலாவேன்

ஆகஸ்ட் 23rd, 2011 at 5:58
  6  

hello Saras, below could be of use to you

Dear Vijay,

I am not sure what that reader is looking for.
If it is songs about his life - from periya puranam - they can be found here:

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1211&padhi=72&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

ஆகஸ்ட் 23rd, 2011 at 16:15
  7  

very nice

பெப்ரவரி 3rd, 2012 at 15:53

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி