Quantcast

தொகுப்புக்காக செப்டம்பர் 13th, 2010

கலைச் செல்வங்களை ரசிக்கும் தன்மையை எப்படி நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்பது. அவர்களை எப்படி இந்த பொக்கிஷங்களை பாதுகாக்க வைப்பது. அவர்களது ரசனையை எப்படி தூண்டுவது. இவை போன்ற கேள்விகள் எங்கள் மனதில் தினமும் எழும். இன்றைய தலைமுறை சதா சர்வகாலமும் இணையம், அதில் உள்ள இணைய விளையாட்டு, காமிக்ஸ் என்றே செல்கிறது என்று பார்க்காமல், அவற்றையும் ஒரு வளரும் துறையாக பார்த்து , அவற்றை கொண்டும் இள நெஞ்சங்களிடம் நம் கருத்துக்களை எடுத்துச் செல்லலாம் என்பதே எங்கள் கருத்து. அதன் அடிப்படையில் இன்று காஞ்சி கைலாசநாதர் சிற்பம் ஒன்றையும் ( எனக்கு மிகவும் பிடித்த சிற்பம் ) அதை ஒட்டிய கதையை இன்றைய இணைய ஓவிய காமிக்ஸ் போலவும் சேர்த்து பார்ப்போம்.

கதை ஒன்றும் பெரியது அல்ல. மகாபாரதத்தில் வன பர்வத்தில் , அர்ஜுனன் தனியே சிவ பெருமானிடத்தில் இருந்து பாசுபத அஸ்திரத்தை பெற தவம் செய்ய இமயம் செல்கிறான். கடுந்தவம் புரியும் அவனை சோதிக்க
ஈசனே கிராடன் ( வேடன் ) உருவிலும், உமை ஒரு வேடர் குல பெண்ணாகவும் வனத்தினுள் வருகின்றனர். அப்போது முகசுரன் என்றஅசுரன் காட்டுப்பன்றி உருவம் தரித்து அர்ஜுனனை நோக்கி விரைந்து வருகிறான். வில்லுக்கு ஒரு விஜயன் ஆயிற்றே, உடனே காண்டீபத்தை எடுத்து பன்றியின் தலைக்கு நாணைத் தொடுக்கிறான் பார்த்தன். அதே வேளையில் இன்னொரு புறத்தில் இருந்து பன்றியின் பின்புறம் ஒரு அம்பு பாய்கிறது. அங்கே வில்லேந்தி நிற்கிறான் கிராடன். அர்ஜுனன் சினம் கொண்டு, பின்னால் இருந்து நாணை எய்வது வீரனுக்கு அழகா என்று கேட்க, அவனோ இது வேட்டை.. யுத்தம் அல்ல !!, காட்டு மிருகங்களுக்கு போர் நீதி செல்லாது என்கிறான் ( வாலி வதம் ? ) அப்படியே பன்றி யாருடையது என்று வாக்குவாதம் நடக்கிறது.

வாக்குவாதம் முற்ற கைக்கலப்பும் ஆரம்பம். காண்டிபதை கொண்டு அக்னி கொடுத்த தீராத பாணங்களை தரும் கூடையில் இருந்து அம்புகளை மழையென பொழிய வைத்தான் குந்தி புத்திரன். எனினும் அந்த வேடனோ சிறிதும் சிரமம் இல்லாமல் அனைத்தையும் தடுத்து விட்டான். உடனே காண்டீபத்தை ஈட்டி போல வேடன் மேல் பாய்ச்சுகிறான் அர்ஜுனன். அதை அப்படியே பிடித்து இழுத்துப் பறித்து விடிகிறான் அந்த வேடன். அர்ஜுனனுக்கு இன்னும் கோபம், உடனே மல்யுத்தம் செய்ய அவன் மேல் பாய்கிறான். ஆனாலும் வேடனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. அர்ஜுனுக்கு மூச்சு வாங்கி தலை சுற்றுகிறது, வேடனோ ஒரு வியர்வை துளி கூட சிந்தாமல் நகைத்துக் கொண்டே போர்புரிகிறான். இதனை கண்ட அர்ஜுனன், சண்டையை நிறுத்தி விட்டு, ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து , வேடனை வீழ்த்த மகேசனின் ஆசி கூறி, மலர்களை சமர்ப்பிக்கிறான். என்ன ஆச்சரியம், லிங்கத்திற்கு அவன் இடும் மலர்கள் வேடனை அலங்கரிக்கின்றன. உண்மை புரிந்த அர்ஜுனன் மகேசனிடம் சரண் புகுந்தான். இன்னொரு வழக்கில் சண்டை இடும்போது அர்ஜுனன் ஈசனின் காலை பிடித்தானாம், தன மலர் பதம் பிடிக்கும் பக்தரை தடுத்துத்ஆட்கொள்ளும் ஈசன், அப்போது போரை நிறுத்தி அவனை அணைத்தார் என்றும் வருகிறது. எனினும் நாம் இன்று பார்ப்பது இருவரும் சண்டை போட்டனர்.

நன்றி திரு அபிலாஷ் நாராயணன் , அவர்களுக்கு, நம்முடன் அவரது கணினி ஓவியத்தை பகிர்ந்துக்கொண்டமைக்கு.

kirata+graphic

அவரது மற்ற படைப்புகளை காண

திரு அபிலாஷ் நாராயணன்

சரி, இப்போது நாம் காஞ்சி கைலாசநாதர் ஆலயம் செல்கிறோம். வெகு நாட்களுக்கு முன்னரே இந்த சிற்பத்தை ஒட்டிய பதிவை இங்கு போட்டிருக்க வேண்டும் - எனக்கு அவ்வளவு பிடிக்கும் இந்த சிற்பம். அதில் உள்ள உயி்ரோட்டம், காட்சி அமைப்பு எல்லாமே அபாரம். இது இரு கதாநாயகர்கள் நடிக்கும் படத்தின் விளம்பரம் போல இருக்கும் இந்த சிற்பத்தை திரு அபிலாஷ் அவர்களின் ஓவியத்துடன் மோத விடுவோம்.

படங்களுக்கு நன்றி: திரு அர்விந்த் மற்றும் திரு சுவாமிநாதன்

kirataarjunam+kanchi

சிற்பத்தை நன்றாக பாருங்கள். இரு வீரர்கள், ஒருவரை ஒருவர் எதிர் நோக்கி சண்டை இட தயாராக நிற்கும் காட்சி. இருவர் கையிலும் வில், மற்றொரு கையில் அம்பு, அல்லது அம்பை எடுக்கு செல்லும் கை. முதுகில் அம்புகள் வைக்கும் கூடை ( இருபுறமும் இவை இருப்பது நேர்த்தி ) , ஒருவர் இடுப்பில் மற்றும் உடைவாள். இது கிராடார்ஜுன கதை தான் என்பதை சந்தேகம் இன்றி நிறுவ இருவரின் பின்னால் நேர்த்தியாக ஒரு காட்டுப் பன்றியை செதுக்கி உள்ளான் சிற்பி.

boar
boar1

இப்போது ஒரு கடினமான கேள்வி, இதில் ஈசன் யார், அர்ஜுனன் யார். சற்று அருகில் சென்று பார்ப்போம்.

kirata+arjuna+kanchi

குறிப்பாக அவர்கள் அணிந்திருக்கும் உடை , ஆபரணம் மற்றும் தலை அலங்காரங்களை பாருங்கள்.

arjuna.jpg
kirata

இருவருக்கும் உள்ள வேற்றுமை என்ன - பட்டியல் இடுவோம்.

சிற்பத்தின் இடது புறம் ( நீங்கள் பார்க்கும்போது வலது புறம்) - இருக்கும் வீரன் ஒரு நீண்ட கிரீடத்தையும், மார்பில் பூணூலையும் அணிகிறான். மற்ற வீரனோ தலையை கொண்டாய் போல கட்டிக்கொண்டு, மார்பில் சன்னவீர என்னும் குறுக்கு பட்டைகளை அணிகிரான். அவன் மட்டுமே உடைவாளை வைத்துள்ளான்.

நமக்கு தெரிந்த மட்டிலும் அர்ஜுனன் ஒரு துறவி போல தவம் செய்து ( கடைசியில் காற்றை மட்டுமே சுவாசித்து பல மாதங்கள் கடுந்தவம் புரிந்தான் என்று நினைக்கிறோம். மகாபாரத்திலும் அவன் காண்டீபம் என்னும் வில்லுடன் ஒரு அற்புத தங்க கைப்பிடி கொண்ட உடைவாளை கொண்டிருந்தான் என்ற குறிப்புகள் உள்ளன.

சரி, அது அப்படி நிற்க , நாம் கிராட உருவத்தை பற்றி படிப்போம். கிராடன் ஒரு வேடன், அதுவும் ஈசனை பொதுவாக ஜடா மகுடத்துடனே நாம் காண்கிறோம். மேலும் திரு நாகசுவாமி அவர்களின் குறிப்புகளில் , சோழ வடிவத்தில் கிராட உருவம் ஒரு வேடன், அதுவும் உருண்டை தொப்பையுடனும், மார்பில் சன்னவீர கொண்டும், தலையை கொண்டாய் போட்டுக் கொண்டு இருக்க காண்கிறோம் என்கிறார்.

Kirata or Tripurantaka


However in many Chola sculptures and also Bronzes (Melapperumpallam image) Kirata will be shown like a hunter with round bellied body , beard and cannavira. His hair would be tied as a bun-like knot and not the jata-makuta one sees in the Tripurari form.

இவை அனைத்தும் கொண்டு பார்க்கையில் கிரீடம் அணிந்திருப்பது அர்ஜுனன் என்றும் மற்றவர் ஈசன் என்றும் நான் நினைக்கிறேன், உங்கள் எண்ணம் என்ன.

என்ன, கலக்கல் பிடித்தா ?

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 1  1