Quantcast

நாம் முன்பு ஸ்ரீரங்கம் சேஷராயர் மண்டப தூண்களை பார்த்தோம். இதை நம் இளம் ஓவியர்கள் எவ்வாறு அருமையாக வரைந்தனர் என்றும் பார்தோம். அவ்வாறு வரைந்த நண்பர் திரு பிரசாத் அவர்களுடன் பேசும் பொது, அமர ஓவியர் திரு சில்பி அவர்களின் புகை படம் இல்லை என்று வருந்தினார். அப்போது வரலாறு.காம் திரு கோகுல் அவர்கள் இட்ட இழை நினைவுக்கு வந்தது. எனினும் பிரசாத்துக்கு தமிழ் படிக்க கடினம் என்பதால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தருகிறேன் என்றேன். அப்போது அதே பக்கத்தில் ஓவியர் சில்பியும் இதே தூண் சிற்பத்தை வரைந்த படம் கிடைத்தது அனைத்தையும் இணைத்து இங்கே இடுகிறேன்.

srirangam sesharaya mandabam.jpg
srirangam pillar.jpg

Temple : Srirangam Sri Ranganathaswami Temple - Trichy, Tamilnadu, India
Location : Sesharayar Mandapa
Features : The mandapa is finely sculpted with various figures. Silpi captures the essence of this complicated and delicate sculpture
Collection sent by : Prof.S.Swaminathan
Original series : Thennatuch Chelvangal
Magazine courtesy : Ananda Vikatan


சில்பியே சிகரம்

சே. கோகுல்

(நன்றி - தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997)

கருவிலேயே திருவுடையவர்களாகப் பிறப்பவர்களின் புகழ் காலத்தால் மறையாதது. ஆழமான உழைப்பின் பலன்களை எந்தக் கறையானும் அரித்துவிட முடியாது. நோக்கத்தில் உயர்வையே நாடிச் செல்லும் எண்ணத்தின் நுட்பம் மாபெரும் நோன்பாகவே மலர்ந்திருக்கும். வளையாத முதுகு, கண்ணாடி கேட்காத கண்கள், தீர்க்கமான பார்வை. அதிலும் தெளிவில் முதிர்ந்ததோர் மோன நிலை. தூரிகையைத் தாங்கிய விரல்கள் தொட்ட கோடுகளெல்லாம் உயிர் பேசும். அதிகம் சிரிக்கத் தெரியாவிட்டாலும் அரைப் புன்னகையில் உதடுகள் பிரியாத ஒரு அழகு மலர்ச்சி. அகன்ற நெற்றியில் அடுக்காக மூன்று திருநீற்றுக் கோடுகள். நெற்றியின் நடுவில் அகன்ற குங்குமப் பொட்டு.

silpi-sikaram.jpg

ஒரு ஓவிய மாமேதையின் பெருமைக்குரிய திருவடிவம்தான் இது. எல்லோருக்கும் உரியவராகிவிட்ட “சில்பி”தான் அவர்கள்.

அவரது கைவண்ணத்தால் கவரப்படாத தென்னாட்டுத் திருக்கோயில்களிலுள்ள மூர்த்திகளே கிடையாது என்று சொல்லலாம். எல்லோரது இல்லங்களையும் கோயில்களாக்கிய பெருமை அந்தத் திருக்கரங்களுக்கே உண்டு.

இந்த நன்முத்தைப் பெற்றெடுத்த பெரும்பேறு நாமக்கல்லுக்கு 1919ம் ஆண்டில் உரியதானது. சிறுவனின் பெயர் சீனிவாசன். இளவயது முதலே இதர பாடங்களைவிட ஓவியத்துறையிலேயே உள்ளத்தை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டவன் சீனிவாசன். தேசியப் பெருங்கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையவர்கள் மிகச்சிறந்த ஓவியரும் கூட. சீனிவாசனுடைய திறமைகளை நன்கு கவனித்த கவிஞரவர்கள் சென்ன எழும்பூரிலுள்ள ஓவியக் கலைக்கல்லூரியில் சேர்த்து, அவனது செயலாக்கத் திறனை முழுமையாக்கிக்கொள்ளும்படி அறிவுரை கூறினார்.

ஆறாண்டுகள் நீண்ட பயிற்சியில் அவரது ஆர்வத்தையும் தகுதியையும் கல்லூரி முதல்வர் திரு.டி.பி.ராய் செளத்திரி அவர்கள் மதிப்பிட்டு சீனிவாசனுடைய தேர்ச்சியை இருமடங்காக்கி இரண்டாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு உயர்த்தினார். பேனாவும் மையும் கொண்டு எழுதும் சித்திரக் கோடுகள் அவருக்கு எளிதில் கைவந்தன. எல்லோரும் வியக்கும் வண்ணம் அமைந்திருந்த அந்தச் சித்திரங்கள் திரு.செளத்ரி அவர்களால் பெரிதும் புகழப்பட்டது. மேல்நாட்டு ஓவியர்கள் பலரையும் மிஞ்சக்கூடிய வகையில் சீனிவாசனின் ஓவியங்கள் அமைந்திருந்ததாக அவர் புகழ்ந்தார்.

சீனிவாசன் மாணவனாக இருந்தபோது ஓவியர் “மாலி” அவர்களின் கேலிச்சித்திரங்களால் மிகவும் கவரப்பட்டார். அதே போன்று பின்னாளில் சீனிவாசனின் ஓவியங்கள் மாலியையும் மிகவும் கவர்ந்தன. இந்தப் பிணைப்பே சீனிவாசன் இருபத்தியிரண்டு ஆண்டுகள் ஆனந்த விகடனில் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

இயல்பாகவே சீனிவாசனுக்கு மனித முகங்களைத் தீட்டுவதினும் கட்டிடங்களை ஓவியங்களாக்குவதிலேயே அதிக ஆர்வமிருந்தது. அதனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய மாலி சீனிவாசனுக்கு “சில்பி” என்னும் பெயர் சூட்டி, தெய்வ வடிவங்களையும் திருக்கோயில்களையும் மட்டுமே தீட்டும் பணிக்கு ஆயத்தம் செய்தார்.

கல்லிலே சிற்பி செதுக்கியுள்ள சிற்பங்களுக்கு மூன்று பரிமாணங்கள் மட்டுமின்றி இழைந்த ஒருவகை உயிர்ப்பும் உண்டு. புகைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ள சிற்பங்களில் பரிமாணங்கள் நிழலாக நிலைத்திருக்கும். ஆனால் உயிர்ப்பு உள்ளூர உணரமுடியாமல்தான் இருக்கும். அந்தக் குறையைக் களைந்து முழுமையான நிறைவுள்ள சிற்பங்களை - குறிப்பாக தெய்வ சித்திரங்களை - சில்பி அவர்களால் மட்டுமே வரைய முடிந்தது.

பக்தி, தூய்மை, பரவசம் ஆகிய மூவிழைப் பின்னலே உணர்வாக அவர் வரைந்த படங்களில் தெய்வம் தானே நிலைத்து நின்றது. அமைதியான சூழ்நிலையில் பக்தர்கள் தரிசனம் முடிந்து ஏகாந்தமான வேளையில் கர்ப்பகிருகத்தில் இருக்கும் தூண்டா விளக்கின் மயங்கிய ஒளியில் சில்பி அவர்களால் அவ்வளவு தெளிவாக அந்த அருள் முகத்தை எப்படி வரைய முடிகிறது என்கிற அதிசயத்திற்கு சில்பி கொடுக்கும் விளக்கம் “வண்ணத்தின் கலவைகளை சரியான அளவில் அமைத்துக்கொள்வதுதான் என் செயல். காட்சி கொடுக்கும் அந்த தெய்வந்தான் என் விரல்களோடு இணைந்து தன்னை எழுதி வைத்துக் கொள்கிறது. படைப்பின் முழுமைக்கும் காரணம் அந்தப் பரம்பொருள்தான். நான் வெறும் கருவி !”

Silpi at work.jpg

கர்ப்பகிருஹத்திலுள்ள மூல மூர்த்தியை வரையுமுன்பு அதன் ஆபரணங்களைத் தனியே ஒரு தாளில் முதலில் வரைபட நகல் எடுத்து, அந்தந்தக் கற்களின் வண்ணங்களையும் குறித்துக்கொண்டு, மூர்த்தியைப் பூர்த்தி செய்யும்போது அந்தந்த ஆபரணங்களை வரைந்து தானே அதனைப் பூட்டியதைப்போல் பரவசமடைவார். இந்தப் பரவசத்தை தெய்வம் சில்பிக்கு அளித்ததால்தான் அந்த சான்னித்தியத்தை சித்திரங்களில் நம்மால் நன்கு உணர முடிகிறது. தனது படங்களை வரைந்து முடித்தவுடன் மறைந்துவிட்ட காஞ்சி முனிவர் பரமாச்சாரியாரிடம் எடுத்துச் சென்று அவரது பூரண ஆசியுடன் வீட்டுக்குக் கொண்டுவந்து விசேஷ பூஜைகள் செய்வார்.

ஆனந்த விகடனிலிருந்து விலகிய பின்பு பவன்ஸ் ஜர்னலில் பணிபுரிந்தார். மேலும் கலைமகள், தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, அமுதசுரபி ஆகிய பல தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் அவர் நிறையக் கோயில் சிற்பங்களை வரைந்துள்ளார்.

சில்பி அவர்களின் குடும்பம் சிறியது. அவர் பணிகளில், அவர் அனுஷ்டித்த ஆசாரக் கிரமங்களுக்குக் குறையாமல் அவருக்கு உதவி புரிந்தவர் மனைவி திருமதி பத்மா அவர்கள். ஒல்லியான வடிவம், குறையாத புன்னகையை சீதனமாகக் கொண்ட குளிர் முகம், விருந்தோம்பலில் தனக்குத்தானே நிகராக விளங்கிய அன்னபூரணி. சிறிய வயதிலேயே உடல் நலிவுற்று 1968ல் இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டார். அவர்களது ஒரே மகன் மாலி என்கிற மகாலிங்கம். ஒரே பெண் சாரதா.

இவ்வளவு பெரிய மேதை தன் கலையை பின்தொடரத் தக்கதொரு சீடனை நீண்ட நாட்கள் தேடிக்கொள்ளவில்லை. 1981ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 14ம் நாள் - பொங்கலன்று ஒரு அதிசயம் நடந்தது. பதினைந்து வயதுச் சிறுவன் ஒருவன். பால்மணம் கமழும் பளிங்கு முகம். தன் தந்தையுடன் சில்பியைக் காண வருகிறான். கிரிதரன் என்னும் அந்தச் சிறுவனின் படங்களைப் பார்த்த சில்பி கிறங்கிப் போகிறார். அவன் வயதில் தான்கூட அத்தனை நுட்பமாகப் படம் வரைந்ததில்லையென்று கூறி அவனை வாயார வாழ்த்துகிறார்.

தனது கலைப்ப(¡)ணிக்குத் தகுதியுள்ளதொரு இளஞ்செல்வன் வாரிசாகக் கிடைத்ததையெண்ணி மிகவும் பூரித்துப் போனார் சில்பி. தனது மனைவியின் பெயரான பத்மாவையும் தன்னுடைய இயற்பெயரின் ஈற்றுப்பகுதியான வாசனையும் இணைத்து கிரிதரனுக்குப் பத்மவாசன் என்னும் பெயரைச் சூட்டினார். “எங்களின் இருவரது ஆசியும் உன் பெயராகவே என்றும் நிலைத்து, பத்மத்தில் வாசம் செய்யும் பிரம்மனாகவே - முதற் படைப்பாளியாகவே உன் புகழ் நின்று நிலைக்கட்டும்” என வாழ்த்தினார். அந்தச் சிறுவன்தான் இன்று பிரபல ஓவியரான திரு.பத்மவாசன். கல்கியின் சரித்திர நாவல்களுக்குப் புதிய சித்திரம் தீட்டித் தமிழக சித்திரக்காரர்களின் வரிசையில் அழியாத இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள திரு பத்மவாசனின் படங்களில் கமழும் இறைத்தன்மைக்கு சில்பியே மூலகாரணம்.

தனது வாழ்க்கைப்பணிகள் முடிந்த பின்பு - அதாவது கோயில்களிலுள்ள தெய்வ மூர்த்தங்களைப் படம் எழுதி முடித்த பின்பு - அர்த்தமில்லாத வாழ்க்கை அவலங்களில் உழன்றுகொண்டிருக்கக்கூடாது - இறைவனின் திருவடிகளை விரைவில் அடைந்துவிடவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பார் சில்பி. குடும்ப வாழ்க்கையிலும் தனது குழந்தைகளிடமும் பற்று வைத்திருந்தாலும் மனதளவில் ஒரு துறவியைப்போலத்தான் வாழ்க்கை நடத்திவந்தார் அவர்.

வாழும் நாட்களில் அவரை நன்கு பெருமைப்படுத்தத் தவறிய தமிழ்ச் சமுதாயம் அவர் வரலாறாகிவிட்ட இன்றைய நிலையிலும் அவரது பெருமைகளையும் அருமைகளையும் வரும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூறி அவர்கள் திறமைகளை சீரமைக்க ஏன் முன்வரமாட்டேன் என்கிறது என்பதுதான் இன்னமும் பெரும்புதிராக உள்ளது. காலம் மாறட்டும். கண்கள் திறக்கட்டும். கடமை விளங்கட்டும். கருதியதை முடிக்கட்டும்.

சிகரங்கள் அசையாமல் அமைதியைக் காத்துக்கொண்டு உயரத்தின் எல்லையை ஒட்டிப்பிடித்துக்கொண்டு நிற்கின்றன. ஆனால் உணர்வால் உயர்ந்த சிகரம், உண்மையால் உயர்ந்த சிகரம், உறுதியால் உயர்ந்த சிகரம், உத்தமப் பண்புகளால் உயர்ந்த சிகரம், ஒழுக்கத்தால் உயர்ந்த சிகரம், உழைப்பால் உயர்ந்த சிகரம் - ஒப்பற்ற கலைச் செல்வரான சில்பி சீனிவாசன்தான்.

Sources:
http://www.varalaaru.com/default.asp?articleid=443
http://www.varalaaru.com/default.asp?articleid=561

அது சரி, இந்த அருமையான சிற்பங்களை உடைய சேஷ ராயர் மண்டபத்தின் தற்போதையா
நிலவரம் …அடுத்து பார்ப்போம்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , ,

தொடர்புடைய இடுகைகள்:


இன்று ஒரு அற்புத சிற்ப வடிவம் - தாராசுரம் கோயில் சிற்பம் - தொலைவில் இருந்து முதலில் பார்ப்போம் - அடுத்த முறை நீங்கள் அங்கு செல்லும் பொது அடையாளம் கொண்டு ரசிக்கலாம் அல்லவா. படத்தை பாருங்கள் - ஆணை முகனை அல்ல , அவன் அடியில் கொஞ்சம் வலது புறம் பாருங்கள்.

Darasuram ganesha panel.jpg
the periapuranam panel location.JPG
closer.JPG

நுண்ணிய சிற்பம் - இதன் அளவை அறிய அங்கே இருக்கும் வாலி வாதம் சிற்பத்தின் முன்னர் இருக்கும் பேனாவை வைத்து புரிந்துகொள்ளுங்கள் . இதில் ஒரு அற்புத கதை , நாயனார் சரித்திரம் - ஒரு கதையையே ஒரே சிற்பத்தில் வடித்துள்ளனர். இதை எனக்கு திரு குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள் விளக்கினார்கள்.

the full panel.JPG
vaalivadham for scale.jpg

கதைக்கு முன் கருத்து :

புண்ணியங்களுள்ளே சிவபுண்ணியம் சிறந்தது. சிவபுண்ணியங்களுள்ளே சிவபூசை சிறந்தது. சிவபூசையினும் சிறந்தது மாகேசுரபூசை. மகேசுரராகிய சிவனை வழிபடும் அடியார்கள் மாகேசுரர் எனப்படுவர்கள். மாகேசுர பூசையாவது மாகேசுரர்களை விதிப்படி பூசித்து, அவர்களுக்கு அன்னம் ஊட்டுதலாம்.

மாகேசுர பூசைசெய்யு முறைமை கூறுதும். சிவனடியார்களைத் தூரத்தே கண்டவுடனே, அவர்களுடைய சாதியையும் குணத்தையும் ஆராயாமல் விபூதி ருத்திராக்ஷம் முதலிய சிவவேடமே பொருள் எனக் கொண்டு, அவர்களை மனிதர் எனக் கருதாது சிவன் எனவே புத்திபண்ணி, இருக்கைவிட்டு எழுந்து, அகமகிழ்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் குவித்தகைகளை உடையராய் விரைந்து எதிர்கொண்டு, அவர்களுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து, இன்சொற்களைச் சொல்லி, வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து, கரகநீர் கொண்டு அவர்கள் திருவடிகளை விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து உள்ளம்பருகி, அத்திருவடிகளை மெல்லிய வஸ்திரத்தினால் ஒற்றி, அவர்களை ஆசனத்திலே இருத்தி, பத்திரபுஷ்பங்களாலே பூசித்து, தூபதீபங் காட்டி, பூமியில் விழுந்து நமஸ்கரித்து, கைப்பு புளிப்பு தித்திப்பு துவர்ப்பு கார்ப்பு உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையை உடையனவாய் உண்ணப்படுவது தின்னப்படுவது நக்கப்படுவது பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை, அவரவர் பிரீதிப்படி அமுது செய்வித்து, “சரீரம் எடுத்ததனாலே பெறும் பயனை இன்றன்றோ பெற்றேன்” என்று சற்காரவசனம் சொல்லி, அவர்கள் போம்பொழுது அவர்களுக்குப் பின் பதினான்கு அடி போய் வழிவிடுக. சிவனடியார்களைச் சாதிகுணம் குறியாது சிவன் எனவே புத்தி பண்ணல் வேண்டும் என்பதற்குப் பிரமாணம்.

இப்போது கதை :

“இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத்தொகை.

இயலா விடைச்சென்ற மாதவர்க் கின்னமு தாவிதைத்த
வயலார் முளைவித்து வாரி மனையலக் கால்வறுத்துச்
செயலார் பயிர்விழுத் தீங்கறி யாக்கு மவன்செழுநீர்க்
கயலா ரிளையான் குடியுடை மாறனெங் கற்பகமே

மன்னியலே ளாண்டொன்மை யிளைசை மாறர்
வறுமையா லுணவுமிக மறந்து வைகி
யுன்னருநள் ளிருண்மழையி லுண்டி வேண்டி
யும்பர்பிரா னணையவய லுழுது வித்துஞ்
செந்நென்முளை யமுதுமனை யலக்கா லாக்கிச்
சிறுபயிரின் கறியமுது திருந்தச் செய்து
பன்னலரு முணவருத்தற் கெழுந்த சோதிப்
பரலோக முழுதாண்ட பான்மை யாரே.

இளையான்கடியென்னும் ஊரிலே, வேளாளர் குலத்திலே, எத்தொழிலினும் சிறந்த வேளாண்மையால் வரும் குற்றமற்ற அளவிறந்த செல்வத்தையும், சிவனடியார்கண் மேலே முழுமையும் பதிந்த அன்பு கொண்ட சிந்தையையும் உடையவராகிய மாறனார் என்பவர் ஒருவரிருந்தார். அவர் தம்முடைய கிருகத்துக்கு வரும் சிவபத்தர்கள் எந்த வருணத்தாராயினும், மெய்யன்போடு அவர்களை எதிர்கொண்டு, அஞ்சலிசெய்து, இன்சொற்களைச் சொல்லி, வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்து, கரகநீர் கொண்டு அவர்கள் திருவடிகளை விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து, உள்ளும்பருகி, அத்திருவடிகளை மெல்லிய வஸ்திரத்தினாலொற்றி, ஆசனத்திலிருத்தி, சைவாகம விதிப்படி அருச்சித்து நமஸ்கரித்து, பின்பு கைப்பு, புளிப்பு, தித்திப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையையுடையனவாய், உண்ணப்படுவது, தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை அவரவர் பிரீதிப்படி திருவமுதுசெய்விப்பார்.

இப்படித் தினந்தோறும் மாகேசுரபூசை பண்ணுதலாகிய சிவபுண்ணியத்தினாலே செல்வம் அபிவிருத்தியாக, அவர் குபேரனை ஒத்து வாழ்ந்திருந்தார்.

அப்படியிருக்குங் காலத்திலே, சிவபெருமான், அவ்விளையான்குடிமாற நாயனார் இந்தச் செய்கையைச் செல்வம் வந்தகாலத்திலன்றி வறுமை வந்த காலத்தினும் தளராது செய்யவல்லவர் என்பதையும், தாம் நல்லோர்களுக்கு வறுமையைக் கொடுத்தல் அவர்கள் நயத்தின் பொருட்டே என்பதையும், அந்நயம் இறுதியிலேயே பலிக்கும் என்பதையும், அக்கருத்தறியாது அதற்குள்ளே புண்ணியஞ் செய்த நமக்குக் கடவுள் இடர்செய்தாரே என்று தம்மை நோதல் பழுதாம் என்பதையும், பிறர்க்குத் தெரிவித்து உய்விக்கும்பொருட்டுத் திருவுளங்கொண்டு, அந்நாயனாரிடத்திலே உள்ள செல்வமெல்லாம் நாடோறும் சுருங்கி வறுமை யெய்தும்படி அருள்செய்தார்.

அப்படிச் செல்வம் சுருங்கவும், நாயனார் மாகேசுரபூசையிலே பதிந்த தம்முடைய மனம் சிறிதும் சுருங்குதலின்றி, தம்மிடத்துள்ள நிலங்கள் முதலியவற்றை விற்றும், தம்மைக் கூட விற்று இறுக்கத்தக்க அவ்வளவு கடன்களை வாங்கியும், முன்போலவே தாஞ்செய்யும் திருப்பணியை விடாது செய்து வந்தார்.

அவர், மழைக்காலத்திலே மழைபெய்யும் ஒருநாள் இரவில் நெடுநேரம் எதிர்பார்த்திருந்தும், ஒருவருடைய உதவியும் இல்லாமல், பகல்முழுதும் போசனஞ்செய்யாமையால் பசி அதிகப்பட்டு; வீட்டுக்கதவைப் பூட்டிய பின்பு; திருக்கைலாசபதியானவர் சைவவேடங்கொண்டு எழுந்தருளிவந்து, கதவைத் தட்டி அழைக்க; நாயனார் கதவைத் திறந்து, அவரை உள்ளே அழைத்துக் கொண்டுபோய், மழையினால் நனைந்த அவருடைய திருமேனியை வஸ்திரம் கொண்டு துடைத்து, இருத்தற்கு இடங் கொடுத்து, அவருக்கு அமுதூட்டல் வேண்டும் என்னும் ஆசை மிகுதியால் தம்முடைய மனைவியாரை நோக்கி, “இந்தச் சைவர் மிக பசிகொண்டு வந்திருக்கின்றார். நமக்கு முன்னமே போசனத்துக்கு ஒன்றுமில்லை. ஆயினும், இவருக்கு எப்படியும் அன்னங்கொடுக்கவேண்டுமே; இதற்கு யாது செய்வோம்” என்றார்.

அதற்கு மனைவியார் “வீட்டிலே ஒரு பதார்த்தமும் இல்லை. அயலவர்க்கும் இனி உதவமாட்டார்கள். நெடுநேரம் ஆயிற்று. அரிசிக்கடன் கேட்கபோவதற்கு வேறிடமும் இல்லை. பாவியாகிய நான் இதற்கு யாது செய்வேன்” என்று சொல்லி, பின்பு “இன்று பகற்காலத்திலே வயலில் விதைக்கப்பட்ட ஈரத்தால் முன்னமே முளைகொண்டிருக்கின்ற நெல்லை வாரிக் கொண்டு வந்தால், இயன்றபடி அன்னஞ் சமைக்கலாம். இதுவேயன்றி, வேறொருவழியும் அறியேன்” என்று சொல்லித் துக்கித்தார்.

இந்த வார்த்தை செவிப்புலப்படுதற்குமுன், இளையான்குடிமாறநாயனார் மிக மனமகிழ்ந்து, அதற்கு உடன்பட்டு மிக மழைபொழிகின்ற மகா அந்தகாரமயமாகிய அத்தராத்திரியிலே ஒரு பெரிய இறைகூடையைத் தலையிலே கவிழ்த்துக்கொண்டு, காலினாலே தடவிக் குறிவழியே தம்முடைய வயலிற்சென்று, அதிலே அதிக மழையினால் நீர்மேலே மிதக்கின்ற நென் முளைகளைக் கையினாலே கோலி வாரி, இறை கூடை நிறைய இட்டு, தலையிலே வைத்துச் சுமந்துகொண்டு சீக்கிரம் திரும்பி வந்தார்.

அவரை எதிர்ப்பார்த்துக்கொண்டு வாயிலிலே நின்ற மனைவியார் மனமகிழ்ச்சியோடு அந்த நென்முளையை வாங்கி, சேறு போம்படி நீரினாலே கழுவியூற்றி, பின்பு தம்முடைய பிராணநாயகரை நோக்கி, “அடுப்பிலே நெருப்பு மூட்டுதற்கு விறகு இல்லையே” என்று சொல்ல, அவர் கிலமாயிருக்கின்ற வீட்டின் மேற்கூரையிலுள்ள வரிச்சுக்களை அறுத்து விழுத்தினார்.

மனைவியார் அவைகளை முறித்து, அடுப்பிலே மாட்டி, நென்முளையை ஈரம் போய்ப் பதமாகும்படி வறுத்து, பின் அரிசியாக்கி, நீர் வார்த்துக் காய்ந்திருக்கின்ற உலையில் அதையிட்டு, சோறாக்கி, தம்முடைய நாயகரைப் பார்த்து, “இனிக் கறிக்கு யாதுசெய்வோம்” என்றார், உடனே நாயனார் புறக்கடைத் தோட்டத்திற்குச் சென்று, குழியினின்றும் மேற்படாத சிறுபயிர்களைக் கையினாலே தடவிப் பிடுங்கிக் கொண்டு வந்து, கறி சமைக்கும்படி கொடுக்க; மனைவியார் அவைகளை வாங்கி ஆய்ந்து, நீரினாலே கழுவி, தமது சாமர்த்தியத்தினால் வெவ்வேறு கறியமுது செய்து முடித்து, நாயகருக்கு அமுதும் கறியும் பாகம் பண்ணப்பட்டமையைத் தெரிவித்து, “சைவரை அமுதுசெய்விப்போம்” என்று சொன்னார்.

நாயகர், நித்திரை செய்பவர்போலக் காட்டிய ஐயருக்குச் சமீபத்திற்சென்று, “சுவாமீ! அமுதுசெய்ய எழுந்தருளும்” என்று சொல்லி அழைக்க; அவர் ஒரு சோதிவடிவமாய் எழுந்து தோன்றினார். அதைக் கண்ட இளையான்குடிமாறநாயனாரும் மனைவியாரும் திகைத்து நின்றார்கள். பின்பு பரமசிவன் பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய்த் தோன்றி, இளையான்குடிமாறநாயனாரை நோக்கி, “அன்பனே! நம்முடைய அடியார்களை அமுதுசெய்வித்த நீ உன்மனைவியோடும் நம்முடைய பதத்தை அடைந்து, பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிரு” என்று திருவாய்மலர்ந்தருளி அந்தர்த்தானமாயினார்.

இப்போது சிற்பம்

கல் பேசுமா ? இதோ கதையே சொல்கிறது பாருங்கள். மிகவும் உன்னிப்பாக பார்க்க வேண்டும். கதை மனதில் பதிந்ததா? சிற்பத்தை நீங்கள் பார்க்கும் வண்ணம், வலம் இருந்து இடம் - கதை நகரும்படி செதுக்கி உள்ளான் சிற்பி. மூன்றே காட்சிகள் ,

முதல் காட்சி:

first scene.JPG

மாரர் தலையில் கூடை, அவரை எதிர்ப்பார்த்துக்கொண்டு வாயிலிலே நின்ற மனைவியார் மனமகிழ்ச்சியோடு அந்த நெல்முளையை வாங்குகிறார்.

இரண்டாம் காட்சி:

second scene.JPG

அடியார் - ஒரு மனையில் அமர்ந்து , அவர்களுக்கு எதிரில் ஒரு முக்காலியில் அமுது. அதை அன்புடன் அன்னவெட்டி ( கரண்டி )கொண்டு பரிமாறும் மாரர் துணைவி. அமுதை ஒரு கையில் எடுத்து சுவைத்து - இப்போது தான் சிற்பத்தின் / சிற்பியின் மிக அருமையான கற்பனை - ஜோதி வடிவமாக ஈசன் மாறுவதை எப்படி காட்டிஉள்ளான் பாருங்கள். அடியாரின் தலையில் ஒரு சிறு நெருப்பு, அதன் அருகில் அதைவிட சற்று பெரிய தீ , அதை அடுத்து ஒரு தீ பிழம்பு .

கடை காட்சி:

last scene.JPG

பரமசிவன் பார்வதிதேவியாரோடும் காட்சி அளித்தல். அபாரம்.

the full panel.JPG

இந்த அளவில் இப்படி ஒரு அற்புத கதையை சுருக்கி செதுக்கிய சோழ சிற்பியின் கலை திறன் நம்மை மலைக்க வைக்கிறது.

Source; http://bhakthimalar.blogspot.com/2007/02/blog-post_24.html
Image courtesy: http://www.kumbakonam.info/kumbakonam/darsuam/index.htm

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

 Page 103 of 135  « First  ... « 101  102  103  104  105 » ...  Last »