சில தினங்களுக்கு முன் - அந்தகன் வதம் எல்லோரா சிற்பம் பார்த்தோம். இப்போது அங்கேய இன்னொரு வடிவம் - உள் சுவர்களில் செதுக்கப்பட்ட சிற்பம். மிகவும் சிதைந்த நிலையில் சிற்பம் இருந்தாலும், மிக அருமையான உணர்வுகளை வெளி கொணரும் சிற்பம்.
ஈசனின் கோபம் சற்று தணிந்த நிலையில் உள்ளது. உமையோ அதிகார தோரணையில் அமர்து இருக்கிறாள். ஈசனின் காலில் மிதிபடும் ஒரு அசுரனின் உருவம் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது - அவன் கையில் ஒரு ஆயுதம் / கதை - ஒருவேளை இது கதையின் முதல் பாகமோ - உமையை தாக்க செல்லும் அசுரனோ ? சரியாக தெரியவில்லை.
எனினும் சூலத்தின் உச்சியில் - அந்தகன் குத்து பட்டு இருக்கும் காட்சி மிக அருமை. சாகும் தருவாயில் இரு கரம் கூப்பி சரண் அடையும் அந்தகன் - அருமை.
மறுமொழி அளிக்கவும் »
முன்னர் கஜமுகாசுர வதம் பார்த்தோம், இன்றைக்கு அந்தகன் வதம் - ஒரு மிகப் பெரிய சிற்பம் - எல்லோரா.
முதலில் கதை - ஒரு முறை ஈசன் தவத்தில் இருக்கும்போது உமை விளையாட்டுத் தனமாய் தனது விரல்களால் ஈசனின் மூன்று கண்களையும் மூடினாள். அதனால் அண்ட சராசரமும் இருளில் தவித்தது. அப்போது ஈசனின் நெற்றிக்கண் சூட்டினால் உமையின் கை வேர்க்க, அந்த வியர்வைத் துளிகளினால் ஒரு குருட்டு அசுரக் குழந்தை உரு பெற்றது. பார்க்க மிக அருவருப்பைத் தந்த அந்தகனைக் கண்டு உமை அஞ்ச - அதை ஈசன் ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுக்கு கொடுத்து விட்டார். ஹிரண்யாக்ஷன்னை விஷ்ணு வதம் செய்ய, குருட்டுக் குழந்தை பெரியவனாகி அசுரர்களுக்கு தலைமை ஏற்று - கடுந்தவம் புரிந்து பிரமனிடத்தில் வரம் கேட்டது - சாகாதிருக்க வரம். அதைத் தர பிரம்மன் மறுக்க, அந்தகன் தான் தனது அன்னையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் - தான் தனது அன்னை மீது மோப்க வெறி கொண்டு ஆசை பட்டால் இறக்க வேண்டும் என்றும், இறக்கும் தருவாயில் தனக்கு கண் பார்வை வர வேண்டும் என்றும் வரம் பெற்றான். அவனுக்கு தன் அன்னையை பார்க்க வேண்டும் என்று அப்படி ஒரு ஆசை - அசுரனுக்கும் தாய் பாசம்.
பல காலம் கழிந்த பின், அந்தகன் பூலோகத்தில் ஜீவராசிகளுக்கு பல இன்னல்கள் தந்த பின், மேல் உலகுக்கும் வந்து அங்கு உள்ள பெண்களை கவர்ந்து செல்ல முற்பட்டான். அப்போது உமையின் அழகை செவி வழி செய்தியாகக் கேட்டு , அவளுக்காக ஈசனிடம் போரிட்டான். அப்போது அவனுக்கு அது அவனது பெற்றோர் என்று தெரியாது. ஈசனும் கடும் போர் புரிந்து முடிவில் தனது சூலாயுதத்தால் அவனை குத்தி மேல உயர்த்த - அவன் கண் திறந்து தனது பெற்றோரை தரிசித்தான்.
சிற்பத்தை இப்போது பாருங்கள் - பதினைந்து அடி உயரம் , உமை அஞ்சி மிக்க பதற்றமாக, ஈசனோ கடுங் கோபத்தில் - கோரைப் பற்கள், பிதுங்கும் கண்கள் என இருக்கும் அந்தகனை ஈட்டியால் குத்தி மேலே உயர்த்திப் பிடித்து - ஆனால் சாகும் தருவாயில், தன் அனைத்து வலியையும் பொறுத்து - இரு கரம் கூப்பி தனது பெற்றோர் இடத்தில் சரண் அடையும் அந்தகன் - அருமை.
இதோ குறிப்பு. ( வதம் மட்டும் தான் அங்கு உள்ளது - மீதி மிச்சம் எல்லாம் எனக்கு பாட்டி சொன்ன கதை )
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=1&Song_idField=10120&padhi=012&startLimit=5&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
1.12.5
அறையார்கழ லந்தன்றனை அயின்மூவிலை யழகார்
கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்
முறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு
முறையான்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.
ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த அந்தகாசுரனைக், கூரிய மூவிலை வடிவாய் அமைந்த குருதிக்கறைபடிந்த அழகிய நீண்ட வேலின் முனையில் குத்தி ஏந்திய சிவபெருமானது இடம் யாதெனில், முனிவர்கள் பலரும் வேதங்கள் பலவும் சொல்லி நறுமலர் சந்தனம் முதலான பொருள்களைக் கொண்டு முறைப்படி சார்த்தி வழிபடுகின்ற திருமுதுகுன்றமாகும். அதனை நாம் அடைவோம்.
மறுமொழி அளிக்கவும் »
அண்மைய மறுமொழிகள்