Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘மதுரை’

நண்பர் தக்ஷின் அவர்கள் மதுரை சென்று விட்டு ஒரு அற்புத சிற்ப்பத்தின் அருமையான படத்தை பூதகி / பூதனை என்ற தலைப்புடன் முகநூலில் இட்டவுடன் மனதில் எழுந்த முதல் கேள்வி ”குட்டிக் கண்ணனை கொல்ல வந்த பொல்லாத அரக்கியா இது ?”

mystery+sculpture+from+madurai

பூதனை பற்றி மனதளவில் நாம் வைத்திருந்த உருவம் நாம் பெரும்பாலும் கதைகளிலும் சில சிற்பங்களிலும் பார்த்ததன் விளைவு தான். இதோ இங்கே நண்பர் அர்விந்த் அவர்கள் அளித்த படம் - சோழர் கால புள்ளமங்கை சிற்பம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் சுதை உருவம் - ஒரு கொடூர அரக்கி அவளின் உடலில் இருந்து ரத்தம் அனைத்தையும் உறிந்து எடுத்தவாறு உள்ள காட்சிகளே அதிகம். எனினும் கண்ணனும் யசோதை போலும் இல்லை - அந்த பெண்மணியின் முகபாவம் ஒரு கலக்கம் கலந்த துயர நிலையில் உள்ளது.

Boothanai+pullamangai
boothanai+bigtemple

இங்கே இருப்பதோ மிகவும் அழகு வாய்ந்த பெண்மணி. வேறு யாராக இருக்க முடியும்? சில குறிப்புகளில் இந்த சிற்பம் ஹரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி என்றும் கையில் இருப்பது இறந்த குழந்தை லோஹிதாசன் என்றும் உள்ளன. எனினும் அந்தக் கதையில் சந்திரமதி ஒரு அடிமையாக விற்கப்படுகிறாள். பின்னரே லோஹிதாசன் இறப்பு வருகிறது. இங்கே இத்தனை ஆபரணங்களுடன் சிற்பி செதுக்க வாய்ப்பே இல்லை என்று தான் தோன்றுகிறது. மேலும் குழந்தை நன்றாக இருப்பது போலும் பால் அருந்த உதடுகளை வைத்திருப்பது போலவே உள்ளது.

baby+puckering+its+lips
mystery+sculpture+from+madurai
who+could+she+be

இன்னும் அருகில் சென்று படம் எடுத்து ஆராய வேண்டும் என்று நண்பர்கள் பலரிடம் கேட்டுப் பார்த்தேன். அதிர்ஷ்டவசமாக ராமன் அவர்கள் மதுரை சென்று வேண்டிய படங்களை எடுத்து அனுப்பினார்.

சாதாரண படம் வேண்டும் என்று மட்டும் நான் கேட்கவில்லை. மிக அருகில் சென்று குழந்தையின் வலது மார்பின் படம் தேவை என்று கூறினேன். ஏன் ?

நாம் முன்னர் விஷ்ணு மார்பின் உள்ள ஸ்ரீவத்சம் என்ற மறு பற்றிய பதிவு நினைவில் உள்ளதா ? அதில் வரும் கடைசி படத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

baby
baby+closer
smiling+baby

குழந்தையும் நிறைய அணிகலன் போட்டுக்கொண்டு சிரிப்பது போலவே உள்ளது. இந்த விதமான ஆரம் கண்ணன் மற்றும் சம்பந்தர் சிலைகளில் நாம் முன்னர் பார்த்துள்ளோம்.

Dancing-Balakrishna Michael C. Carlos Museum of Emory University
krishna auckland musuem
sambandar sin musuem

எதற்காக வலது மார்பின் படம் தேவை? கல்லில் சிற்பி இந்த சிலையை வடிக்கும் பொது, சில இடங்களில் சிறு உளி வைத்து செதுக்க வேண்டும், அப்படியும் சில இடங்களில் அவனால் முழுவதுமாக செதுக்க இயலவில்லை.

right+chest+not+sculpted
smiling+baby

இடது மார்பை முழுவதுமாக செதுக்கிய அவன், வலது மார்பை செதுக்க வாகு இல்லை. இது நீங்களே பாருங்கள்.

சரி, மார்பின் மேல் உள்ள அணிகலன்களை தனியாக பார்ப்போம்.

baby+ornaments+left+chest

இதுவரை கூர்ந்து கவனித்து இருந்தால் வலது மார்பில் உள்ள அந்த சிறிய புடைப்பு தெரிந்திருக்கும்

smiling+baby+chest

இப்போது பாருங்கள்.

smiling+baby
smiling+baby+chest
smiling+baby+chest+mark

இதோ நின்ற கோலத்தில் பெருமாளின் வலது மார்பில் தெரியும் முக்கோண மறு. இதனை குழந்தையின் மார்பில் இருப்பதுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

IMG00014-20090818-1431
chola vishnu stone
closeup of srivatsam
srivatsam
vishnu

பூதனை பற்றி மேலும் படிக்க கீதா அம்மாவின் அருமையான பதிவை பாருங்கள்.

கம்சன் பூதனையை கோகுலம் சென்று அந்தக் குழந்தையைக் கண்டு பிடித்து அதற்கு விஷப் பால் ஊட்டும்படிக் கேட்டுக் கொண்டான்.

பூதனையோ மறுக்கின்றாள். என்னால் முடியாது என்று சொல்கின்றாள். ஏற்கெனவே அனைவரும் அவளைக் கண்டாலே ஓடி ஒளிவதையும், அவளின் உடன்பிறந்தவர்களே அவளைக் கண்டால் வராதே என்று சொல்லுவதையும் தன்னுடைய முகத்தைப் பார்ப்பதே பாவம் என அவர்கள் நினைப்பதையும், அவ்வாறே நடந்து கொள்ளுவதையும் சொல்கின்றாள் பூதனை

“பூதனை, நான் ஒரு வார்த்தை சொன்னால் போதும், மகத வீரர்கள் உன்னையும், ப்ரத்யோதாவையும், வெறும் கைகளால் கொன்று விடுவார்கள். வாழ்வோ, சாவோ, என்னை மீறி நீயோ, ப்ரத்யோதாவோ ஒன்றும் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. என் கட்டளையை மீறி உங்கள் வாழ்வில் எதுவும் இல்லை.” என்றான் கம்சன். பூதனை வாயே திறக்கவில்லை. “இங்கே நிற்காதே, போ உடனே

கோகுலத்தில் அந்த மாதம் பெளர்ணமி தினத்தன்று அவர்களின் குலதெய்வம் ஆன கோபநாத் மஹாதேவருக்குத் திருவிழா வந்தது.

யசோதைக்குச்செய்தி வந்தது, மதுராவிலே யாரோ பெரிய அந்தணக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, கோகுலத்தின் கோபநாத் மஹாதேவருக்கு முக்கியப் பிரார்த்தனையை நிறைவேற்ற வந்து கொண்டிருக்கின்றாள் என.

செய்தி வந்த போது யமுனைக்கரைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த யசோதை, உடனேயே இரு இளைஞர்களை அனுப்பி வரும் விருந்தாளியை வீட்டுக்கு அழைத்துப் போய், உபசரித்துவிட்டுப் பின்னர் யமுனைக்கரைக்கு அழைத்து வரும்படி அனுப்பி வைத்தாள் அவர்களும் சென்றார்கள்.

மேலும் படிக்க

என்ன நடந்தது ?.

பூதனை அந்தக் கிருஷ்ணன் முகத்தையே பார்த்தாள். நீல நிறம் ஒளிவிட்டுப் பிரகாசிக்க, சுருண்ட கூந்தல் நெற்றியில் இருந்து தொங்கிக் குழல்கற்றைகள் முகத்தையே மறைக்க, கண்கள் இரண்டும் விஷமத்தனத்தை எடுத்துக் காட்ட, முகம் முழுதும் விஷமத்தனமான சிரிப்போடு விளையாடும் அந்தக் குழந்தையைப் பார்த்தாலே எடுத்துக் கொஞ்சிக் கட்டி அணைக்கவேண்டும் போல் தாபம் மேலிட்டது பூதனைக்கு.

ஆனால் இந்தக் குழந்தையைத் தான் அவள் கொல்லவேண்டும். அதுதான் அவளுக்கு இடப்பட்டிருக்கும் வேலை. பேசாமல் வேலையையே விட்டுடலாமா என்று கூட எண்ணினாள். இந்தக் குழந்தையைக் கொல்லுவதை விடக் கம்சன் கையால் அவள் இறந்துவிடலாமோ என்று எண்ணினாள். அவள் மட்டும் இறந்தால் பரவாயில்லை, அவள் கணவன் ப்ரத்யோதாவும் இறக்க நேரிடும். பின்னர் அவளுடைய எட்டுக் குழந்தைகளின் கதி என்னாவது? கம்சனின் கடுங்கோபம் அவளுடைய மொத்தக் குடும்பத்தையும், குலத்தையும் பாதிக்குமே. ம்ம்ம்ம்., இந்தக் குழந்தையைக் கொல்லுவதுதான் தன்னுடைய கடைசிக் கடமையாக வைத்துக் கொள்ளவேண்டும். பூதனை அந்தக் குழந்தையையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். குழந்தை அவள் பார்வையால் ஈர்க்கப் பட்டு அவளைப் பார்க்க பூதனை குழந்தையைக் கவரத் தன் கைகளால் தட்டி, வாயால் சத்தம் கொடுத்துக் குழந்தையைக் கூப்பிட்டாள் தன் பக்கம். குழந்தையும் அவளைப் பார்த்து மிக மிக மோகனமாய்ச் சிரித்தது. ஒரு கணம், ஒரே கணம் தன்னை மறந்த பூதனை பின்னர் நிதானத்துக்கு வந்தாள், தன்னிரு கைகளையும் நீட்டிக் குழந்தையைக் கூப்பிட, அவனும் வந்து அவள் கைகளில் அடைக்கலமானான்.

குழந்தையைக் கைகளில் ஏந்திய பூதனைக்குத் தன்னை அறியாமல் அந்தக் குழந்தைக்கு அமுதூட்டத் தோன்றியது. அப்போது அவள் நினைவில் வந்தது, யமுனையில் குளித்ததும், ஒருவருக்கும் தெரியாமல் தன் மார்பில் விஷம், கொடிய விஷத்தைத் தடவிக் கொண்டது. இம்மாதிரிக் கொடிய விஷத்தை மார்பில் தடவிக் கொண்டு சிறு குழந்தைகளுக்குப் பாலூட்டுவது போல் பல குழந்தைகளைத் தான் இத்தனை நாட்களாய்க் கொன்று வந்திருப்பதும், இப்போது கம்சனின் ஆணை இந்தக் குழந்தையையும் இம்மாதிரிக் கொல்லுவது என்பதே என்பது நினைவில் வர அவள் மனதில் போராட்டம். என்றாலும் அதையும் மீறித் தாய்மை உணர்வும், குழந்தையின் அழகும், இத்தனன அழகான குழந்தைக்குத் தன்னிடம் உள்ள எதைத் தான் தரக் கூடாது என்ற உணர்வும் மேலோங்கியது. குழந்தை அவள் கைகளில் மீண்டும் சிரித்தான். அந்தச் சிரிப்பில் தன் வயமிழந்த பூதனை தன்னை அறியாமலேயே குழந்தைக்குப் பாலூட்டத் தொடங்கினாள்.

பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
குறங்குவளைவந்துகாணீரே
குவிமுலையீர். வந்துகாணீரே

மீண்டும் ஒருமுறை சிற்பத்தை பார்த்தேன் - மேலே கூறப்படும் அனைத்து உணர்ச்சிகளும் அந்த முகத்தில் இருப்பது போலவே தெரிந்தது. அது பாதகி பூதனை அல்ல சந்தர்ப்ப வசத்தால் வஞ்சிக்கப்பட்ட ஒரு தாய் முகமே என்றும் புரிந்தது.

மறுமொழி அளிக்கவும் »

கடவுளுக்கும் கடவுளுக்கும் போட்டியா? இல்லை என் கடவுளுக்கும் உன் கடவுளுக்கும் போட்டியா? பெரும்பாலும் இது மாதிரி சர்ச்சைக்குரிய வாதங்களை தவிர்க்க முயற்சிப்போம்.

ஆனால் சில நேரங்களில் இவை அத்து மீறிப் போகும் பொழுது, நாம் அந்த வாதங்களை சரியான முறையில் பார்ப்பதற்கு முன் முதலில் அங்கே என்ன இருக்கிறது என்பதை எடுத்துரைக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவற்றில் எது சரி எது தவறு என்ற அனைத்தும் இன்றும் அப்படியே இருக்கும் என்பது சாத்தியம் இல்லை. எனினும் அன்று என்ன இருந்தது என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். இருப்பதை ஆராய்ந்து பார்க்கும் முன்னரே போர்க்கொடி தூக்குவது நல்லதன்று. சிற்பம் என்பது எங்கும் நிறைந்திருக்கும் ஒன்றை மனிதனின் மனதால் கட்டுப்படுத்தி செதுக்கப்பட்ட பொருள் என்று மட்டும் பார்க்காமல் மனதை கட்டுப்படுத்தி அடுத்த நிலைக்கு எடுத்தும் செல்லும் கருவி என்றே நாம் பார்க்கவேண்டும்.

இந்த தளத்தின் நோக்கம் சிற்பங்களில் மறைந்து இருக்கும் கதைகளையும் நுணுக்கங்களையும் அனைவரும் விளங்கும் வண்ணம் எடுத்துச் சொல்வதே. கடந்து வந்த பாதை கரடு முரடானது. பல மதங்கள் காலப்போக்கில் ஒன்றுக்கொன்று போட்டி போட்டன, ஒரே மதங்களினுள்ளும் இந்த போட்டி நிலவியது. எனினும் இவையும் நமது பாரம்பரியத்தின் இழையாக பிணைந்து விட்டன. இவற்றில் சரி தவறு என்ற வாதங்களை எடுத்தாண்டு எதிரிகளாக நிற்காமல் இருப்பதை இருந்தாக பாருங்கள் என்பது முதல் வேண்டுகோள். இப்படி பார்க்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள் தயவு செய்து இப்போதே மேலும் படிக்காமல் விலகி விடுங்கள் என்பது இரண்டாவது வேண்டுகோள்.

என்னடா பில்ட் அப் பெரியதாக இருக்கிறதே என்று பார்க்க வேண்டாம். இது போன்ற சர்ச்சை வடிவங்கள் பல உண்டு. ஏன் பரவலாக காணப்படும் லிங்கோத்பவர், காண்பதற்கரிய சரபேஸ்வரர் என்று ஒரு பக்கம். வாமன அவதாரத்தில் கங்கை உரு பெற்ற கதை சொல்லும் சிற்பங்கள் என்று இன்றைய சினிமா படம் போல ஆடியன்சுக்கு ஏற்ப சிற்பங்களும் செதுக்கப்பட்டன. அரசர்களும் தங்களுக்குப் பிடித்த தெய்வங்களை உயர்த்தியும் போற்றியும் குறிப்பிட்ட மதத்தை வளர்த்தனர். நாம் இன்று இரு சிற்பங்களை பார்க்க போகிறோம். விஷ்ணு அனுக்ரஹா மூர்த்தி / சக்கர தானர், இது மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் சிற்பம், காலத்தால் மாலிக் கபூர் தாக்குதலுக்கு பின்னர் உருவானதாக இருக்கலாம். மற்றொன்று அதையும் விட பழமை வாய்ந்த எட்டாம் நூற்றாண்டு ராஜ ஸிம்ஹ பல்லவனின் காஞ்சி கைலாசநாதர் கோயில் சிற்பம்.

சிற்பங்களை ஒட்டிய கதை ஏதோ நான் ஓட்டுகின்ற கதை அல்ல என்பதை முதலிலேயே தெளிவு படுத்த அப்பர் சுவாமிகளின் தேவாரத்தை இங்கே எடுத்துக் கொடுத்துள்ளேன்.

ஆறாம் திருமுறை

பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
திருமாலுக் காழி யளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

ஒரு வழியாக சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லியாகி விட்டது. இப்போது கதைக்குள் செல்வோம். வழக்கம் போல இந்த கருவை கொண்டு பல கதைகள் உள்ளன.

முதல் பாகம்:

ஜலந்தரன் என்னும் சமுத்திரராஜனின் மகன் தன்னுடைய ஆட்சியை எங்கும் நிலைநாட்ட, தேவலோகம், மற்ற தேவர்கள் அனைவரையும் தனக்குக் கீழ் கொண்டு வர எண்ணினான். அவன் மனைவியான பிருந்தை பதிவிரதை என்பதாலும், சிவ பக்தை என்பதாலும் அவளின் சிவ பக்தியும், கற்பின் சக்தியும் அவனைக் கட்டிக் காத்ததால் யாராலும் இந்த ஜலந்தரனை அழிக்கமுடியவில்லை.ஆனாலும் ஈசனோடும் ஜலந்தரன் போர் புரிகிறான். ஈசனுக்கோ, தன் பக்தையின் கணவனை எங்ஙனம் அழிப்பது என்று தன்னுடனும் போருக்கு வரும் ஜாலந்தரனைத் திருப்பி அனுப்புகிறார்.மகாவிஷ்ணுவின் மூலமே அவனை அழிக்கவேண்டும் என எண்ணினார் ஈசன்.

மஹாவிஷ்ணுவும் அதற்கு உடன்பட்டு சிவனுக்கு வழிபாடுகள் செய்கின்றார். ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை அர்ச்சித்து விஷ்ணு வழிபட ஆயிரமாவது தாமரை இல்லாமல் 999 தாமரைகளே இருக்கின்றன. எண்ணிக்கையில் ஒன்று குறைவதைக் கண்ட விஷ்ணு ஆயிரமாவது தாமரைக்காகத் தன் கண்ணைப் ( அவன் தான் கமலக்கண்ணன் ஆயிற்றே!! ) பிடுங்கி அர்ச்சிக்கிறார்…. (இதோ காஞ்சி கைலாசந்தர் கோயில் சிற்பம்.)

kailasanatha+panel

பல்லவ சிற்பியின் தனித்துவம் இங்கும் தெரிகிறது. ஈசன் அமர்ந்திர்க்கும் பாணியில்தான் என்ன ஒரு யதார்த்தம். ஒரு காலை மடித்து , வலது கரத்தை ஆசனத்தில் முட்டுக் கொடுத்து அமர்ந்திருக்கும் காட்சி அருமை. தலைக்கு மேலே மற்ற இரு கைகளும் என்ன செய்கின்றன? ஏதோ தலைப்பாகையை கட்டுவது போல உள்ளது, அருகில் உமையம்மை. பெருமாள் ஒரு காலை மடித்து, இரு கரங்களிலும் தாமரை மலர்களை சிவனுக்கு அளிப்பது போல உள்ளது. இன்னொரு இடது கரம் கண்ணப்பர் போல தனது இடது கண்ணை பறிக்க செல்கிறது.

closeup+vishnu+shiva+parvathi
shiva+parvathi
vishnu+offerring+his+eye

சிற்பி இங்கே பின்னணியில் உள்ள கதைக்கு ஏற்ப சிற்பத்தை செதுக்கி உள்ளான். ஒரு வேளை அதில் நமக்கு எதாவது சொல்ல வருகிறானோ. தான் யார் என்பதை மறந்து அவனுடன் ஒன்றாகும் நிலையே பக்தி அல்லவா?

கதையின் அடுத்த பகுதியையும் மதுரை சிற்பதையும் அடுத்து பார்ப்போம்.

பெருமாளின் செய்கையை பார்த்து, ஈசன் பிரத்யக்ஷமாகி அவரைத் தடுத்துத் தரையில் காலால் கீறி ஒரு வட்டம் வரைகிறார். அதைச் சக்கரமாக வரைந்து அதைப் பெயர்த்தெடுத்து அந்தச் சக்கரத்தின் மூலம் ஜலந்தரனைக் கொல்லச் சொல்கிறார். இதுவே அறுபத்து நாலு சிவ வடிவங்களின் புராணக்கதைகளிலும்,ஈசனின் வீரச் செயல்களைப் பற்றிச் சொல்லும்போதும் வேறுவிதமாய் ஈசனே அந்தச் சக்கரத்தை ஜலந்தரன் மேல் வீசி எறிந்து அவனை இரண்டாகப் பிளந்ததாயும் வரும். பின்னரே அந்தச் சக்கரத்தை விஷ்ணுவுக்குக் கொடுத்ததாய்ச் சொல்வார்கள். நமக்கு இப்போது தேவை ஈசன் பெருமாளுக்கு சக்கரம் தருவது மட்டுமே.

இந்த காட்சியை மதுரை சிற்பதில் பாருங்கள்.

chakradharanar+madurai

விஷ்ணு மற்றும் சிவன், அருகில் நான்முகன். கைகளில் உள்ள ஆயுதங்களைக் கொண்டு யார் யார் என்று தெளிவாக புரிகிறது. இந்த காலத்தில் ஆகமங்கள் மேலோங்கி நின்று சிற்பியின் திறனை தாங்கள் இட்ட சட்டங்களுள் கொண்டுவந்து விட்டன. எனவே பல்லவ சிற்பதில் பார்த்த உயிரோட்டம் இங்கே இல்லை. சிற்பம் சிலையாக சொல்லும் கதையை சொல்வதில் மட்டும் தன் கவனத்தை செலுத்துகிறது.

shiva+presenting+to+vishnu
vishnu
vishnu+detail

தூண் சிற்பம் தான், எனினும் சிற்பி இன்னும் சற்று சமமான முறையில் அனைவரையும் காண்பித்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. கலைக் கண்ணோடு பார்ப்பவருக்கும் சரி சமயக் கண்ணோடு பார்ப்போருக்கும் சரியாக இருந்திருக்கும். ஏன் சொல்கிறேன் என்றால் வெவ்வேறு அளவில் செதுக்கியதால் சக்ராயுதத்தை பெருமாளின் அளவுக்கு ஏற்ப செதுக்க , அது ஈசனின் கையில் சொப்பு போல தெரிகிறது…..இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

shiva+giving+discus+to+vishnu

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 3  1  2  3 »