Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘நந்தி’

முந்தைய பதிவில் மகேசன் கையில் விடத்தை எடுக்கும் காட்சியை பார்த்தோம். இந்த பதிவு அதன் தொடர்ச்சி. ஊத்துக்கோட்டை அருகில் இருக்கும் சுருட்டுப்பள்ளி ( சென்னை திருப்தி வழியில் சுமார் அறுபது கிலோ மீட்டர் தொலைவில் ) இருக்கும் சிற்பத்தை கொண்டு, நண்பர் மருத்துவர் திரு ஷங்கர் குமார் அவர்கள் அருமையான புதிய நடையில், நண்பர் திரு அசோக் கிருஷ்ணசுவாமி அவர்களது படங்களுடன் இதோ ஆலங்குடியானின் அற்புதக்கோலம்.

திருச்சிற்றம்பலம்.

‘முடியாதுன்னா முடியாதுதான்! எவ்ளோ கெஞ்சிக் கேட்டாலும் இதான் பதில்!’ தனது தலையை இப்படியும் அப்படியுமாக வேகமாக ஆட்டியபடியே தீர்மானமாகச் சொல்கிறார் நந்தியார்!

பரிதாபமாகக் கெஞ்சியபடி நின்ற கூட்டம் நிம்மதி இழந்து தவிக்கிறது.

மஹாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன், வாயு, அக்னி, வருணன், நாரதர், மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, இன்னும் இவர்களுடன் எண்ணிலடங்காத் தேவர்களும், முனிவர்களும் அங்கே பதற்றத்துடன் நிற்கிறார்கள்.

agathiyar+co
ganesha+muruga+with+consorts
kubera.jpg
perumal+markandeyar

‘எல்லாம் இவரால் வந்தது’ எரிச்சலுடன் முணுமுணுக்கிறார் வாயு பகவான்.

தன்னைப் பார்த்துத்தான் சொல்கிறார் எனப் புரிந்த இந்திரன், ‘நான் என்ன எனக்காகவே கேட்டேன்? நம்ம எல்லாருக்காவும்தானே?’ எனப் பதிலுக்கு முறைக்கிறார்.

‘சரி, சரி, இப்ப பழசையெல்லாம் கிளற வேண்டாம்’ எனச் சமாதானப் படுத்த முனைந்தார் பிரமதேவன்.

‘அதெப்படி? வாயு பகவான் சொல்வதும் சரிதானே? இந்திரன் அமிர்தம் வேணும்னு கேட்கப்போனதாலதானே இத்தனை அமர்க்களமும் ஆச்சு.’ எனச் சிண்டு முடிந்தார் நாரதர்.

‘விடாம, துரத்தித் துரத்தி நம்மளையெல்லாம் இம்சை படுத்தின ராக்ஷசர்களோட தொல்லை பொறுக்க முடியாமத்தானே பாற்கடலைக் கடைஞ்சு அமிர்தம் எடுக்க முடிவு செஞ்சோம்? அப்பவும் நம்மளோட சக்தி மட்டும் அதுக்குப் போறாதுன்னுதானே, வேற வழியில்லாம அவர்களையும் கூடச் சேர்த்துகிட்டோம்? இப்படியெல்லாம் ஆகும்னு யார் கண்டா?’ எனச் சற்று தைரியமாகக் குரலை உயர்த்தினார் இந்திரன்.

‘நீ சொல்றதுல்லாம் வாஸ்தந்தான். யாரு இல்லைன்னாங்க? வாசுகியை கயிறா வைச்சுகிட்டு, வடவரையை மத்தாட்டமா கடைஞ்சோம். எங்கே தலைப் பக்கத்தைப் பிடிச்சா பாம்பு கடிச்சிருமோன்னு பயந்துபோயி, நீங்கள்லாம் வாலைப் பிடிச்சுண்டீங்க பாரு, அங்கதான் தப்பாயிடுச்சு. அந்த முரட்டு அரக்கர்கள்லாம் சேர்ந்து வாசுகியோட தலையைக் கெட்டியாப் பிடிச்சு நசுக்கிட்டாங்க பாவிப்பசங்க! வலி தாங்க முடியாம அது தன்னோட வேலையைக் காட்டிடிச்சு. பொங்கிவந்த அந்த ஆலகால விஷத்தைப் பார்த்ததுமே, அதோட உக்ரம் தாங்கமுடியாம எல்லாருமா ‘துண்டைக் காணும், துணியைக் காணும்’னு ஓடிட்டீங்க.’ என நிறுத்தினார் பிரமன்.

‘நான் சொல்லலை…. கொஞ்சம் சீண்டிவிட்டாப் போதும். என்னோட தந்தையார் எல்லா விஷயத்தையும் சொல்லாம நிறுத்த மாட்டார்’ என்பதுபோல ஒரு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தார் நாரதர்!

அதைக் கவனியாதவர்போல பிரமன் தொடர்கிறார்.

‘விஷமா, அப்பிடியே சீறிப் பாயறது. அந்த உஷ்ணம் தாங்காம, லோகமே…. இந்தப் பிரபஞ்சமே கிடுகிடுத்துப் போயிடுத்து! எனக்கா கையும் ஓடலை, காலும் ஓடலை. என்ன பண்றதுன்னே புரியலை எனக்கு! நேரா அந்த ஆபத்பாந்தவன் சாக்ஷாத் பரமசிவனை விட்டா வேற வழியில்லைன்னு புரிஞ்சிடுத்து.’

‘நிஷ்டையுல இருந்த பரமேச்வரனைப் பாக்கறதுகாக, அப்பவும், இதோ கெஞ்சிக் கூத்தாடிண்டு நிக்கறோமே, அப்படித்தான் இந்த நந்தி பகவான்கிட்ட மன்னாடி, ஒருவழியா அவரையும் மீறிண்டு உள்ளே போயிட்டேன். எல்லாம் புரிஞ்சவர்மாதிரி, தன்னோட கடைக்கண்ணால, பக்கத்துல் நிக்கற சுந்தரரைப் பாக்கறார் சர்வேச்வரன்.’

‘அடுத்த நொடியே, சுந்தரரைக் காணலை அங்கே! சித்த நாழியுல, கையுல அந்த விஷத்தை எடுத்துகிட்டு வரார் அந்தப் பிரபு! கொஞ்சங்கூட முகத்துல இருக்கற களை மாறவேயில்லை அவருக்கு! இத்தனைக் கொடிய விஷத்தைக் கையுல வச்சிண்டிருக்கோமேன்ற பதட்டமே இல்லாம வரார்! அப்படியே வந்து பவ்யமா சிவன் முன்னாடி கையை நீட்டிண்டு நிக்கறார்.’

‘அப்போ நடந்ததுதான் பெரிய ஆஸ்சர்யம்!…. நீங்கள்லாந்தான் அங்கே அப்போ இல்லியே! அதனாலத்தான் இவ்வளவு விவரமாச் சொல்றேன்…… பரமசிவன் லேசாக் கண்ணைத் திறந்து பார்க்கிறார். சுந்தரமூர்த்தி நாயனாரின் கையிலிருக்கிற விஷத்தை நொடிப்பொழுதுல எடுத்து, என்னப் பண்ணப் போறாரோன்னு நினைக்கறதுக்கு முன்னாடியே, அப்படியே வழிச்சு தன்னோட வாயுல போட்டுக்கறார்!’

‘என்ன ஒரு கருணை! இந்த லோகத்தும் மேல அவருக்குத்தான் எவ்வளவு அக்கறை! வெளியிலும் இருக்கக் கூடாது அந்த விஷம். தூக்கி எறியவும் இயலாது. எங்கேன்னு எறியறது அதை? இருக்கற ஒவ்வொரு கணமும் அதால இந்தப் பிரபஞ்சத்துக்கே ஆபத்து!! அப்படிப்பட்ட அந்த கடுமையான ஆலகால விஷத்தை இந்த லோக க்ஷேமத்துக்காகத் தானே குடிக்க முடிவு பண்ணின அந்தக் கருணையை நினைச்சு பரவசப்படற அந்த நேரத்துலதான்’ ….என ஒரு இடைவெளி கொடுத்து சுற்றி இருந்தவர்கள் முகத்தைப் பார்க்கிறார் பிரம்மா!

அனைவர் முகத்திலும் ஆச்சரியமும், வியப்பும், திகைப்பும் ஓட பிரம்மாவையே பார்க்கின்றனர்.

அனைவரின் கவனமும் தன் மேல்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிரமன் தொடர்கிறார்! நாரதர் முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை தவழ்கிறது!

‘ம்ம்ம். மேலே சொல்லுங்க! அப்படி என்ன நடந்தது அப்போ?’ என ஆவலை அடக்கமுடியாமல் வருணன் கேட்கிறார்.

‘வாயில் போட்ட விஷம் இன்னும் தொண்டையைத் தாண்டலை! பக்கத்துல உட்கார்ந்திருந்த உமாதேவி, தனது கையால் பரமேச்வரனோட கழுத்தை இறுக்கிப் பிடிக்கறார்! விஷம் உள்ளே இறங்காம, அப்படியே தொண்டையிலியே நின்னுடுத்து!’

‘ஏன் இப்படிப் பண்ணிட்டார்னு நாங்கள்லாம் திகைச்சுப் போயிட்டோம்! அப்பத்தான் இந்த அற்புதத்தோட அருமை புரிஞ்சுது எனக்கு! யார் இந்தப் பரமேச்வரன்? அகில லோகத்துக்கும் ஆதார சுருதியே இவர்தானே! இவரோட ஆட்டத்தாலத்தானே அகிலமே ஆடறது.. ஆடிக்கொண்டு இருக்கு! அப்படிப்பட்டவரோட வயிற்றுக்குள்ளே இந்த விஷம் இறங்கிட்டா, அப்பறம் இதை வெளியுல வைக்கறதுக்கு அர்த்தமே இல்லாமப் போயிடுமே! அது மட்டும் உள்ளே போயிட்டா, அந்த விஷம் தன்னோட வேலையைச் செஞ்சுடுத்துன்னா, இந்த லோகமே அழிஞ்சு போயிடாதா?

‘இதைப் புரிஞ்ச ஒரே ஆள் பார்வதிதான்! லோகமாதாவாச்சே அவர்! சர்வலோக ஜெகன்மாதாவுக்கு அந்தச் சிவனை விடவும் இன்னும் அதிகமான அக்கறை இந்த ஜீவராசிகள் மேலே! அதனாலத்தான், அந்த ஆலகாலத்தை அப்படியே பரமசிவனோட தொண்டைக்குக் கீழே போகவிடாம தடுத்து கருணை பண்ணியிருக்கார்! இப்படி ஒர்த்தருக்கு மேலே ஒர்த்தரா அவங்க இரண்டு பேரும் பண்ணின அற்புதத்தாலதான் இன்னைக்கு நாமெல்லாம் இப்படி நின்னு பேசிகிட்டு இருக்கோம்’ எனச் சொல்லிவிட்டு அனைவரையும் பெருமிதத்துடன் பார்த்தார்!

‘அந்த அற்புதத்துக்கு ஈடு இணை உண்டா? ஆனா, அதுக்கு அப்புறம் நடந்ததாக் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தாலத்தானே இப்ப நாம இங்கே இப்படி நின்னுகிட்டிருக்கோம்’ என அவரை நிகழ்காலத்துக்கு இட்டு வருகிறார் பெருமாள்!

‘இதோ, இங்க நிக்கறானே இந்த நாரதன், இவன் தான் அதைச் சொன்னவன்! அவனையே கேளுங்க’ என்று நாரதரைப் பார்க்கிறார் பிரமன்.

‘அதான் ஏற்கெனவே சொல்லியாச்சே! விஷத்தை எடுத்து முழுங்கின சிவபெருமான், அது உள்ளேயும் போகாம, வெளியேவும் வராம, அப்படியே அசதியா சாய்ஞ்சுட்டாராம்! அந்த மலைமகள்தான், அவரைத் தன்னோட மடியுல சாய்ச்சுண்டாராம்! இப்ப அப்படியே கண்ணைத் திறக்காம, அந்த சர்வேச்வரன் காலை நீட்டிப் பள்ளி கொண்டிருக்கிறாம்’ என்றார் நாரதர்!

pallikondeshwara+surutuppalli
umai
umai+shiva

‘என்னது? பள்ளிகொண்டாரா பரமசிவன்? அது என்னோட வேலையாச்சே! அவர் கண்ணை மூடிண்டு படுத்துட்டா இந்த லோகம் என்ன ஆகிறது? அதான் இந்த பிரபஞ்சமே இருளோன்னு இருக்கு. அவரைப் பார்த்து, அவருக்கும், என்னோட சகோதரி மீனாக்ஷிக்கும் அவ்வளவு துணிச்சலா இந்த லோக நன்மைக்காக இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினதுக்காக, என்னோட வணக்கத்தையும், பாராட்டையும் சொல்லலாம்னு பார்த்தா இந்த நந்தி உள்ளே விடமாட்டேன் என்கிறாரே,’ என அங்கலாய்க்கிறார் பாரளந்த பரமன்.

மற்ற எல்லாரைப் போல இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நந்தி பகவான், மஹாவிஷ்ணுவிடம் வந்து, ‘பெருசா ஒண்ணுமில்லை. லேசா தலை சுற்றுகிறாற்போல் இருக்குன்னு சொல்லிட்டு, அம்மையின் மடியில் சயனித்திருக்கிறார் எம்பெருமான். அவர் நிஷ்டையில் இருக்கும்போது எப்படி எவரையும் உள்ளே செல்ல எனக்கு அனுமதி கிடையாதோ, அதே போலத்தான் இதுவும். ‘என்றவர், உடனேயே, ‘கொஞ்சம் இருங்க. உள்ளே ஏதோ சத்தம் கேட்கிறது. என்னன்னு பார்த்துவிட்டு வருகிறேன்’ எனச் சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.

விஷயம் கேள்விப்பட்ட சூரியனும் தனது அன்றாடப் பணிகளை முடித்துவிடும் தருவாயில் லேசாக எட்டிப்பார்க்கத் துவங்கினான்!

moongod
sungod

‘நான் உதயமாக இன்னும் கொஞ்சம் நேரமிருக்கிறது. அதற்குள் சிவதரிசனம் கிடைத்தால் நல்லாயிருக்குமே’ எனச் சந்திரன் கைகளைப் பிசைந்து கொள்கிறான்.

அவன் நினைத்ததுபோலவே அருளுறை அன்னை உடன்வர, ஆலவாய் அண்ணல் அன்புப் புன்னகை பூத்தவண்ணம் வெளியே வந்து தரிசனம் தருகிறார்!

அகிலத்தையே தங்கள் கருணையால் காப்பாற்றிய அம்மையப்பனைக் கண்டதும் அனைவர் முகத்திலும் சொல்லவொண்ணா மகிழ்ச்சி ததும்புகிறது!

‘ஆலமுண்ட அண்ணலே போற்றி! அகிலம் காத்தருளிய அன்னையே போற்றி போற்றி!’ எனும் முழக்கம் விண்ணைப் பிளக்கிறது!

“தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!”

திருச்சிற்றம்பலம்!

மறுமொழி அளிக்கவும் »

நான் திரு பிரதீப் சக்ரவர்த்தி அவர்களை நேரில் பார்த்தது இல்லை (இதுவரை). சென்ற மே மாதம் முக நூல் அறிமுகம் கிடைத்தது. முதல் உரையாடல் முடிந்தவுடனே புரிந்தது. இவர் சாதாரண நபர் இல்லை என்று. கூகிளார் உதவியுடன் அவர் நாளேடுகளுக்கு எழுதிய பதிவுகள் கிடைத்தன. இப்படி ஒரு விவேகமும் தீர்க்க சிந்தனையும் அத்துடன் நல்ல ஆராய்ச்சி செய்து மக்களுக்கு சென்றடையும் எளிய முறையில் எடுத்துச் செல்லும் நோக்கம் உடைய இவர், எழுத்து வடிவில் மட்டும் அல்லாமல், வெற்றிகரமாக சென்னையில் ஒரே வருடத்தில் முப்பது ஆலய நடை (டெம்பிள் வாக் ) நடத்தினார் என்பதையும் படித்தேன். சமீபத்தில் அவர் ஆற்றிய சில உரைகளின் படமும் இணையத்தில் கிடைத்தது. அப்போது தான் புரிந்தது நவீன ஆடைகளுக்குள் பழைய காலத்து கதாகாலக்ஷேபம் செய்யும் வித்தகர்கள் போன்று ஹாஸ்யம் கலந்து மக்களை தன வசம் இழுத்து நல்ல கருத்துக்களை அவர்கள் ரசிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்லும் வசீகரம் கொண்ட ஒரு வித்துவான் இருக்கிறார் என்று.

profile page

இப்படி இருக்கையில், அவர் விரைவில் இரு நூல்களை வெளியிடுகிறார் என்றதும் மகிழ்ந்தேன். தஞ்சை பற்றிய ஒரு நூல் ” Thanjavur - A Cultural History” மற்றும் ” தமிழகக் கோயில் வாகனங்கள் “. முதல் நூல் விரைவில் வெளிவர இருக்கிறது. இரண்டாவது நூல் சமீபத்தில் சன்மார் நிறுவன பதிப்பகமான கலம்க்ரியா அவர்கள் உதவியுடன் வெளிவந்துள்ளது.

வாகனம் என்றவுடன் நினைவுகள் சலசலவென பின்னோக்கி ஓடின. ஏன் முதல் மிதிவண்டி - பி எஸ் ஏ நிறுவனம் எஸ் எல் ஆர்!, கொஞ்சம் போன பின்னர் அட்லாஸ் நிறுவன எம் டி பி! அப்பாவின் லாம்பி ஸ்கூட்டர், பல ஆண்டுகள் கழிந்த பின்னர் பஜாஜ் சேடக்! அப்போது சாலைகளில் நான்கு பேர் ஒரே சேடக் மேல் பயணம் செய்யும் பொது அருகில் செல்லும் அம்பாசடர் அல்லது ஃபியட் கார்கள் (பெங்களூர் ஆசாமிகள் மட்டும் அந்த பிரீமியர் பத்மினியை விட மாட்டார்கள்!!). நடுவில் ஸ்டாண்டர்ட் 20000, மின்மினி போல வந்து மறைந்தது. பிறகு மாருதி 800 களின் ஆதிக்கம் என்று, நமக்கோ அந்நாட்களில் அர்னால்டு படம் பார்த்துவிட்டு ஹர்லி டேவிட்சன் மோகம், ராயல் என்பீல்ட் புல்லட் என்று ஏழைக்கு ஏற்ற எள்ளுண்டை!! ஒரு சிறு வரலாறு. எனினும் நாம் இன்று இன்னும் பின்னோக்கிச் செல்கிறோம், கால் நடை, மற்றும் கால்நடை வாகனங்களே இருந்த காலம். அந்தப் பாரம்பரியத்தை இன்றும் போராடி காத்து நிற்கும் கோயில் வாகனங்கள்.

ஆம் போராட்டம் தான். வருடத்தில் ஒரு நாளோ இரண்டு நாட்களோ வெளியில் வரும் இவை, அதுவும் தமிழ் நாட்டில் தினசரி பூஜை நடத்தவே திண்டாடும் நிலையில் உள்ள கோயில்களில் விழா எடுக்க எங்கே முடிகிறது, அப்படியும் விழா நடந்த பின்னர், பூட்டிய இருட்டு அறைகளுக்குள் வசிக்கும் இவற்றை பற்றி யாரும் கவலைப்படுவது இல்லை. ஆலயத்தை சுற்றி வரும்போது கண்ணில் பட்டால் பார்ப்பது கூட இல்லை. இந்த நிலை அங்கு தூண்களில் உள்ள அருமையான சிற்பங்கள், விமான/கோபுர சுதை வேலைப்பாடுகள் என்று பல கலை பொக்கிஷங்களின் இன்றைய அவல நிலை தான். அப்படி இருக்கும் இவற்றில் வாகனங்களைப் பற்றி எழுத எண்ணிய பிரதீப் அவர்களுக்கு முதலில் ஒரு பாராட்டு.

Temple+vahanas+of+tamilnadu

நூல் முகம் பார்த்தவுடனே நெஞ்சம் கொள்ளை போனது. அருமையான கோட்டோவியம். முகப்படம் மட்டும் அல்ல, ஒவ்வொரு வாகனத்தையும் அருமையாக வரைந்துள்ளார் திரு V. விஜயகுமார் அவர்கள். மென்மேலும் இப்படி பல ஓவியங்களைப் படைத்து அமரர் சில்பி மற்றும் ஓவியர் பத்மவாசன் போன்று வரவேண்டும் என்று வாழ்த்துக்கள். மேலும் இந்த முழு நூலையும் இரு மொழிகளில் படைத்திருப்பது வரவேற்கத்தக்கது. முதல் பார்வையிலேயே இந்த நூல் ஆர்வலர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆசிரியரின் முன்னுரை படிக்கும் போது ஆரம்பமே வித்தியாசமாக இருந்தது. இப்படி எதற்காக ஒரு முன்னுரை ஆரம்பம் என்று தோன்றியது? தனது நிலையை தைரியமாகவும் தெளிவாகவும் விளக்க ஆசிரியரின் இந்த வெளிப்படையான எழுத்துக்கள் நமது சமயத்தில் இன்றும் இருக்கும் பிரிவுகள் பற்றி நினைவூட்டின. தொடர்ந்து படிக்கையில் அவர் நூல் அறிமுகத்தில் சுட்டிக்காட்டும் ஒரு கல்வெட்டுக் குறிப்பு நூலின் தன்மையையும் ஆசிரியரின் நோக்கங்களையும் அருமையாக எடுத்துக்காட்டியது.

நூலின் பொருளடக்கம் இதோ. பல அறிய வாகனங்களைத் தேடி பிடித்து விவரித்துள்ளார் பிரதீப்.

contents

நமக்கென்று நூலில் இருந்து ஒரு சிறப்பு பார்வை - அதிகார நந்தி.

adhikara+nandhi+content
adhikara+nandhi+sketch

எனக்கு மிகவும் பிடித்த வாகனம் கைலாச வாகனம், அடியில் சிக்கி இருக்கும் இராவணன் , தனது ஒரு தலையை கொய்து தன கையையே தண்டாக கொடுத்து நரம்புகளை மீட்டும் காட்சி அருமை.

kailasa+vahanam

அடுத்து ஆடு வாகனம், ஆமாம் சரியாகத் தான் படிக்கிறீர்கள். பிரதீப் எந்த அளவிற்கு இந்த நூலிற்காக உழைத்துள்ளார் என்பது இந்த வாகனத்திற்கு அவர் கொடுக்கும் இலக்கிய சான்றுகள் மூலம் தெரிகிறது.

aadu+vahanam

எல்லா வாகனங்களும் பிராணிகள், பறவைகள் , தேவர்கள் என்பது இல்லை. சில மரங்களும் வாகனங்களாக உள்ளன. நமது முன்னோர் இயற்கையை எப்படி கொண்டாடி வழிபட்டனர் என்பதன் குறிப்புகளே இவை. (நாம் இந்தப் பாடத்தை என்று தான் கற்போமோ!)

நமது மதம் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து இருக்கிறது. அதில் வரும் புராணக் கதைகள், அத்துடன் வரும் முரண்பாடுகள், எல்லாம் அழகு தான். ஒரு புலி வாகனத்தை பற்றிய சிறு குறிப்பில் கூட வாதம் ஏற்படலாம் என்பதும் அழகு தான்.

நூல் ஆசிரியர், ஓவியர், மற்றும் இதை உருவாக்கி வெளி கொண்டுவந்த அனைவருக்கும் பாராட்டுக்கள். நூலை படிக்கும் போதே, முன்னிரவு நேரத்தில் ஜன நெரிசல் நிறைந்த வீதியில், தாரை தப்பட்டை ஓசையுடன், ஆடி ஆடி பவனி வரும் கம்பீர வாகனத்தின் மேல் அமர்ந்து வரும் சுவாமி தரிசனம் மட்டும் அல்லாமல், ஒளியுடன் மண்ணெண்ணெய் உமிழும் பெட்ரோமாக்ஸ் விளக்கின் வாசமும் வருகிறது.

பின் குறிப்பு: தற்போது நூல் முதல் பிரதிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. விரைவில் அடுத்த பிரதி வெளிவரும் !

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 5  1  2  3  4  5 »