மீண்டும் அதே ஸ்ரீரங்கம் தூண்கள்…. கல்லில் இவை அனைத்தையும் செதுக்கிய அந்த அழகை - அந்த திறமையை நாம் சரியாக உணர, ரசிக்க இன்னும் இரண்டு இழைகள் இடுகிறேன்….
முதலில் அந்த குதிரை வீரன் மற்றும் குதிரையின் அழகு …அடுத்து வரும் மடலில் தூணின் அடியில் மற்றும் பக்கத்தில் இருக்கும் சிற்பங்கள்…
குதிரை மற்றும் அதன் மேல் இருக்கும் வீரனைப்பற்றி விரிவான உரை எழுதலாம் என்று இருந்தேன்….ஆனால் படங்களையே பேச விடுகிறேன்
குதிரையின் வால் ரோமங்கள், அதன் குழம்பு, கடிவாளம், அதன் பற்கள்,
வெளி தொங்கும் நாக்கு ……
அந்த வீரனின் வாள், அதன் கைப்பிடி - அது வளைந்து இருக்கும் பாணி - அது கல் என்பதால் அதற்க்கு பலம் ஊட்ட அதை பின்னாலிருக்கும் தூணுடன் முட்டுக் கொடுத்து …. அடுத்த தூணில் இருக்கும் வீரனின் கையில் ஒரு சிறு குத்தீட்டி …. ( அடுத்த தூணில் அது சிதைந்து உள்ளது )
ஐரோப்பிய நண்பர் ஒருவர் ஒருமுறை சொன்னார் - அங்கே உள்ள குதிரை வீரர்களின் சிற்பத்தை வடிக்கும் பொது - குதிரை முன் இரு கால்களையும் தூக்கிய வாறு வடித்தால் அவர் போரில் வீர மரணம் எய்தார் என்றும், ஒரு கால் மட்டும் தூக்கி இருந்தால் அவர் போரில் பெற்ற காயத்தில் பிறகு உயிர் துறந்தார் என்றும் ….நான்கு கால்களும் தரையில் இருந்தால் அவர் இயற்கையாக இறந்தார் என்றும் ஒரு விதிமுறை உண்டு என்று …. இது உண்மையா ??
……தொடரும்
மறுமொழி அளிக்கவும் »
இப்போது நாம் இந்த அருமையான சிறப்ப தூண்களின் அடியில் இருக்கும் சிற்பங்களை பார்போம்…. மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது என்பதற்கு சான்று போல ….. சிறிய இடத்தில் என்ன என்ன வடிவங்களை சித்தரிக்கிறான் பாருங்கள்…
முதல் இரண்டு படங்கள் - இந்த சிறு சிற்பங்கள் இருக்கும் இடத்தை விளக்கும் உற்று பாருங்கள்.. இவை அனைத்தும் ஒரே கல் என்பது நினைவில் வைத்து மீண்டும் பாருங்கள்…
நாம் பெரும்பாலும் கோவில் தூண்களில் பார்க்கும் யாழி ( கீழே இருக்கும் யானையின் துதிக்கையை மேல் நின்று பிடிக்கும் யாழி ….) இங்கே தூணிற்குள் இருக்கும் சிறு சிற்பத்தில் வரும் காட்சியுனுள் புகுத்தி உள்ளனர்… நடுவில் ஓய்யாரமாய் இடையில் கைவைத்து நிற்கும் பாவை…
ஆஹா…..நாய் குட்டி போல துள்ளி வரும் கஜேந்திரனை அன்போடு அணைக்கும் பெருமாள். வாய் பொத்தி ராமனின் உபதேசத்தை பெரும் ஹனுமன். மிக நேர்த்தியாக யானை மேல் அமர்ந்திருக்கும் விஷ்ணு. அவருக்கு மேலே இருக்கும் தோரணத்தில் தான் என்ன ஒரு வேலை பாடு.
பறக்கும் கருடனின் மேல் சங்கு சக்ரதாரி. அந்த காட்சியை கருடனை போலவே பெருமாளை தூக்கும் ஹனுமன்…( அப்போதும் பாதங்களை பிடித்திருக்கும் கோலம் அருமை ). அரியணையில் அதிகார தோரணையில் அமர்ந்திருக்கும் அவனின் கால் படியும் ஹனுமான். லக்ஷ்மியுடன் பெருமாள்…
சரி இது என்ன -எதோ பட்டாபிஷேகம் போல உள்ளது -ஒரு புறம் ஹனுமனும் மற்றொரு புறம் கருடனும் கலசத்தை எடுத்து வர… பவ்யமாய் கை கூப்பி நிற்கும் லக்ஷ்மணன்
இது என்ன - பாற்கடல் கடையும் காட்சி….கீழே இடம் இல்லை என்பதால் - பெருமாளை கூர்மமாக காட்டாமல் தனது இரு கரங்களால் மத்து ( மலையை )தூக்கி பிடித்துள்ளார்….ஆனால் அது என்ன இரு குரங்குகள்.?? சரி இது யார்…தோளில் ஒரு மான் குட்டி,,,காலுக்கு ஒருபுறம் ஒரு நாய் குட்டி…அந்த புறம் ஒரு பெண் ..காலில் முள் தைத்ததோ….பெரும்பாலும் நம் படங்களில் வருவதை காட்டிலும் இங்கே மாறுகிறதே…
மேலும் பல சண்டை பயிற்சி காட்சிகள் ..மொத்தத்தில் ஒவ்வொரு தூணும் ஒரு கலை பெட்டகம்..
மறுமொழி அளிக்கவும் »
அண்மைய மறுமொழிகள்