Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘ எமன்’


வணக்கம் நண்பர்களே, இன்று நாம் மீண்டும் எனக்கு மிகவும் பிடித்தமான மல்லைக்கு பயணிக்கிறோம். இன்னும் ஒரு அற்புத படைப்பு இந்தச் சிற்பம். நாம் முன்னரே பார்த்தது தான் , ஆனால் வேறு ஒரு கண்ணோட்டத்தில். ( இந்தக்கால கட்டுடல் அந்தக்காலத்தில் )

mallai mahisha

ஆம்!. மகிஷாசுரமர்தினி சிற்பம் தான். இந்த சிற்பத்தை முழுவதுமாக ரசிக்க மூன்று நான்கு பதிவுகள் தேவை. எனவே இதோ முதல் பதிவு. தேவியை பார்ப்போமா…

‘சித்திரம் பேசுதடி. சிந்தை மயங்குதடி’ என்பது போல பேசாமலேயே நம்மை மயக்கும் சிற்பம் இது. தனது கை இல்லை கல் வண்ணத்தால் நம்மை கிறங்க வைக்கிறான் சிற்பி. அவற்றை பார்க்கும் முன்னர் முதலில் கதையை பார்ப்போம்.

வழக்கம் போல ஒரு அசுரன். மகிஷன். வரம் கேட்டு கடுந்தவம் புரிந்து பிரம்மனை வரவழைத்து அழியா வரம் கேட்கிறான். பிறப்பு என்றால் இறப்பும் நியதி. அதனால் சாகாவரம் தர இயலாது என்று நான்முகன் மறுக்க, தனது வரத்தை சற்று மாற்றிக் கொள்கிறான் மகிஷன். தனது வலிமையின் மீது இருந்த ஆணவத்தால், தன்னை எந்த ஆணாலும் எதிர்க்க முடியாது என்று இருக்க, மிகவும் புத்திசாலித்தனம் என்று நினைத்து தான் மடித்தால் ஒரு பெண்ணின் கையாலேயே மடிய வேண்டும் என்று வரம் கேட்கிறான். நான்முகனும் அவ்வாறே கொடுத்து விட, தவத்தின் பலத்தாலும் தனது அசுர குணத்தாலும் உலகை வென்று அடுத்து தேவலோகத்தின் மேல் படை எடுக்கிறான் மகிஷன். அவனது செயலை முறியடிக்க அனைத்து தெய்வங்களும் ஒன்று கூடி ஒரு தேவியை உருவாக்கி அவளுக்கு தங்கள் சக்திகளை கொடுக்கிறார்கள். எவ்வாறு… ( நன்றி கீதா அம்மா ) தேவி மகாத்தியத்தில் இருந்து வரிகளை எடுத்து அதற்க்கு தமிழில் விளக்கங்களும் தந்தார்.

ஷூலம்ஷூலாத் விநிஷ்க்ருஷ்ய ததெள தஸ்யை பிநாகத்ருக்

பிநாகபாணியான ஈசன் தனது சூலத்திலிருந்து ஒரு சூலத்தைத் தோற்றுவித்து அவளுக்குக் கொடுத்தார்.

சக்ரஞ் ச தத்தவான் க்ருஷ்ண: ஸமுத்பாத்ய ஸ்வசக்ரத:
கரிய திருமால் தன் சக்கரத்தினின்று ஒரு சக்கரத்தை உண்டாக்கி அளித்தார்.

சங்கஞ் ச வருண: சக்திம் ததெள தஸ்யை ஹுதாஸன:

வருணன் சங்கத்தையும், அக்கினி சக்தி ஆயுதத்தையும் கொடுத்தனர்.

மாருதோ தத்தவாம்ச்சாபம் பாணபூர்ணே ததேஷுதீ

வாயு பகவான் வில்லையும் அம்பையும் பாணங்கள் நிறைந்த அம்பறாத்தூணியையும் அளித்தார்.

வஜ்ர-மிந்த்ர: ஸமுத்பாத்ய குலிசா-தமராதிப:

இந்திரன் தனது குலிசத்தில் இருந்து தோற்றுவிக்கப் பட்ட வஜ்ராயுதத்தையும் யானையாகிய ஐராவதத்தில் இருந்து தோற்றுவிக்கப் பட்ட மணியையும் கொடுத்தான்.

குலிசம் இங்கே இடி என்ற பொருளில் வரும் என எடுத்துக் கொள்ளலாம்

ததெள தஸ்யை ஸஹஸ்ராக்ஷோ கண்டா-மைராவதாத் கஜாத்

காலதண்டாத்-யமோ தண்டம் பாசஞ் சாம்புபதிர்ததெள

யமன் காலதண்டத்தில் இருந்து தண்டத்தையும், வருணன் பாசத்தையும் அளித்தனர்.

ப்ரஜாபதிச் சாக்ஷமாலாம் ததெள் ப்ரஹ்மா கமண்டலும்

பிரஜாபதியாகிய பிரம்மா அக்ஷமாலையையும் கமண்டலுவையும் கொடுத்தார்.

ஸமஸ்த-ரோம-கூபேஷு நிஜரச்மீன் திவாகர:

அவளுடைய மயிர்க்கால்களில் பிரகாசிக்கும்படியான கிரணங்களைச் சூரியன் அளித்தான்.
காலச்ச தத்தவான் கட்கம் தஸ்யாச் சர்ம ச நிர்மலம்!

காலன் கத்தியையும் நிர்மலமான கேடயத்தையும் அளித்தான்.

சரி, சிற்பத்திற்கு வருவோம். போருக்கு செல்லும் தேவியின் அழகோ அழகு. எட்டு கைகளுடன், சிங்கத்தின் மீது அமர்ந்து, ஒரு கம்பீரத்துடன் பார்க்கும் அந்த முகம்

mallai mahisha suramardhini
the majestic pose
what a mahestic pose
does look like she is smiling
the rich onamentation well she does look like smiling
hand stretching the bow string

நாணை வில்லில் ஏற்றி நிற்கும் பாணி, வில்லை பிடித்திருக்கும் கரத்தை பாருங்கள். கட்டை விரல் வில்லின் மீது படர, மற்ற விரல்கள் பலத்துடன் பற்றி இருக்கும் காட்சி, வில்லை வளைத்து இழுத்து கயிற்றை பிடித்திருக்கும் கரமோ இன்னும் அற்புதம். அதற்க்கு ஏற்றார்போல உடலை சற்று விறைப்பாக செதுக்கி இருப்பது .. உயிரோட்டம்

does look like she is smiling
hand stretching the bow string
the hand holding the bow

அடுத்து நம் கண்ணுக்கு சட்டென படுவது - தண்டம். யமனின் கால தண்டம். இது தண்டமோ அல்லது (G)கதையோ என்ற கேள்வி வராமல் இருக்க, சற்று படத்தை உற்று பார்ப்போம்.

the baton
the hand weilding the baton

கைப்பிடி கதை போல இருந்தாலும், உருண்டையாகவே இருக்கிறது. மேலும் தண்டத்தின் மேல் பாகம் நன்கு உருண்டு உள்ளதை நாம் தெளிவாக பார்க்க முடிகிறது. தண்டம் சிங்கத்தின் பிடரி பக்கம் முடிவதாலும், அதை அடுத்து சிங்கத்தின் பிடரி ரோமங்களின் வேலைப்பாடு இருப்பதால், சிதைந்த கூரிய கத்தி அல்ல என்று நாம் தெளிவாகவே சொல்லலாம்.

மேலும் மற்ற கரங்களில் உள்ள ஆயுதங்கள் என்ன என்னவென்பதை படங்களை கொண்டு பட்டியலுடன் ஒப்பிட்டு கூறுங்கள் பார்க்கலாம்.

2
hand holding the bell
hand holding the discuss
the hand holding the conch

ஆமாம், ஈசனிடம் பெற்ற சூலம் எங்கே?. ஒருவேளை வில்லையும் நாணையும் பிடிக்க இரு கரங்கள் தேவைப்பட்டதால் சிற்பி சூலத்தை விட்டு விட்டாரோ?

சிற்பத்தின் அழகை ரசிக்க இன்னும் ஒரு படம். படைப்பு சிற்பம், அதிலும் இப்படிப்பட்ட சிற்பத்தை வடித்த சிற்பி, தேவியை சிங்கத்தின் மீது சவாரி செய்வது போல காட்ட வேண்டும். இங்கே பாருங்கள், வலது கால் எப்படி முழுமையாக வெளியில் நீட்டி செதுக்கி உள்ளான் என்று.

the foot

இப்போது நீங்கள் மனதில் இந்த சிற்பத்தை ஒரு தனி படைப்பாக பார்க்காமல், ஒரு குடைவரையின் ஒரு பக்க சுவர் ( மறு பக்கம் இருப்பது நாம் முன்னர் பார்த்த சேஷ சயன பெருமாள் ),

Mahisha suramardhini cave facade
mallai anthasayana panel
mallai mahisha suramardhini panel

ஒரு மலையினுள் குடைந்த அதிசயம் இது. புரிகிறதா.

மறுமொழி அளிக்கவும் »


இன்று மீண்டும் திரு சதீஷ் அவர்களின் உதவியால், தஞ்சை பெரிய கோவிலிலுள்ள, எனக்கு மிகவும் பிடித்த சிற்பத்தின் அற்புத புகைப்படம் கிடைத்துள்ளது.

காரணம்? சிறு வயதில் என்னை உறங்க வைக்க என் தந்தையார் எனக்கு இந்த கதையை பாட்டாக படிப்பார். இன்றும் நினைவில் உள்ளது. என் மகனும் இந்த பாட்டைகேட்டால் தூங்கிவிடுவான்

எமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான்
சாம்ப சிவா பக்தன் என்றால் தொடமாட்டான்
சிவ சிவ சிவ என்ற நாமம் சொல்லடா
மானுடனே உனக்கிதில் பாரம் என்னடா

மார்க்கண்டேயனின் கதை நாம் அனைவரும் அறிந்ததே. ம்ருகண்டு முனிவரும் அவரது துணைவி மருடவதி பிள்ளைப் பேறு வேண்டி கடுந்தவம் புரிந்தனர். தவத்தின் பயனாக அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், ,” அறிவிலர்களாய் நூறு பிள்ளைகள், இல்லையேல் அறிவு ஜீவியாய் பதினாறே ஆண்டுகளே ஆயுள் உள்ள மகன், இதில் ஒன்றை தேர்ந்து எடு்ப்பீர்களாக,” என்றார். எதிர்பார்த்தபடியே அறிவில் சிறந்த பிள்ளையை அவர்கள் வேண்ட அவ்வாறே ஒரு மகனை அவர்கள் பெறுகின்றனர். மார்கண்டேயன் என்று பெயர் சூட்டி, அன்பும், அறமும் திகழ வளர்கிறது குழந்தை.

பாலகன் பதினாறு வயதை நெருங்க நெருங்க, பெற்ற மனங்கள் பதறுகின்றன. பெற்றோரின் கவலை முகங்கள் கண்டு துளைத்துத் துளைத்துச் சிறுவன் வினவ,அவர்களும் தங்கள் தவப்பயனாக அவன் பிறந்தாலும், அதிலுள்ள நிபந்தனையான 16 வயதில் மரணமெனும் செய்தியையும் கூறி அழுகின்றனர். காலனின் ஈசனே தனக்கு நித்திய பூஜா மூர்த்தியாய் இருக்கையில், மரணம் தன்னை நெருங்காது எனும் தீர்க்க முடிவோடு, மார்க்கண்டேயன் தினந்தோறும் சிவ லிங்க பூஜையில் ஈடுபடுகிறான். அவ்வாறே, குறிப்பிட்ட நாள் வருகையில், எமன் தனது பாசக் கயிற்றை வீச தக்க தருணத்தை எதிர் நோகியுள்ளான்.

மார்க்கண்டேயனோ, எமனுக்கு அஞ்சி ஓடி, சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்தவாறு உயிர் பிச்சைக்கான பூசையிலுள்ளான்! காலம், காலன் இரண்டும் நிற்காதல்லவா? பொறுமை இழந்த எமன் தன் பாசக்கயிற்றை மார்க்கண்டேயனை நோக்கி வீசுகையில், சிவலிங்கத்திலும் சேர்ந்தே விழுகிறது. தன் பக்தன் தன்னை ஆலிங்கனம் செய்து பூசை செய்வதைக் கூட மதியாமல், தன் பணியை செய்த (!) எமனின் செயலால் கோபம் கொண்ட சிவன், லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு, காலால் காலனை எட்டி உதைக்கிறார். ஆனால், காலன் தனது பணியைச் செய்வதையே சிவனாரே தடுத்த மாதிரி ஆகிவிடுமல்லவா? எனவே, மார்க்கண்டேயனின் ஆயுள் ‘என்றும் பதினாறு’ என்ற அரிய வரம் தந்து அருள்கிறார்.

kalantaka.jpg

இதுவே கதை - இப்போது சிற்பம். மூன்று காட்சிகள் - மேல் இருந்து கீழ்.
முதல் காட்சி:

காலன் மார்கண்டேயனை துரத்தி வர, அவன் சிவ லிங்கத்தை கட்டிக்கொண்டு இருப்பது போல அற்புதமான சிற்பம்.

yama chasing Markandeya.JPG

அடுத்து, ஈசன் காலனை உதைத்து கீழே விழும் எமன். ( ஒரு வருடம் முன்னர் நண்பர் ஸ்ரீவத்சன் எடுத்த படத்தையும், இப்போது சதீஷ் எடுத்த படத்துடன் ஒப்பிட்டிப் பாருங்கள் - ஈசன் கையில் இருக்கும் சூலம் - இப்போது முழுவதுமாக சிதைந்து விட்டது !!!)

see the detailing on the trident of shiva.jpg
shiva vs yama.JPG
tanjore markandeya panel.JPG

கடைசி காட்சி - சாகா வரம் பெற்ற மார்கண்டேயன் தன் இரு கை கூப்பி ஈசனை வணங்குகிறான்

markandeya saved.JPG

இதோ அப்பர் இந்த கதையை அற்புதமாக பாடியிருக்கும் தேவாரம்:

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=4107&padhi=113+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே

தன்னை மயக்கிய யமபயமாகிய துன்பம் தீருமாறு அக்காலத்தில் அர்ச்சித்த பிரமசாரியான மார்க்கண்டேயனுக்காகக் கரிய உடம்பு, வளைந்த ஒளி பொருந்திய பற்கள் தீயைப் போன்ற சிவந்த மயிர்முடி, மடித்த நா இவற்றை உடைய கொடிய கூற்றுவன் உடல் நடுங்குமாறு அவனை உதைத்து அவ்விடத்திலே அவனை உருளச்செய்த சிவந்த திருவடிகளை உடையவன் திருக்கடவூரில் உகந்தருளி உறைகின்ற உத்தமனாகிய சிவபெருமான் ஆவான்.

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 1  1