காளிங்க நர்த்தனம்- அற்புத வெண்கலச் சிலை

திரு. பிரசாத் அவர்கள் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர் தான். அவரது உயர்ந்த கலைத் திறனை நமது பதிவுகளில் ஏற்கனவே கண்டிருக்கிறோம். ஆனால் இன்று நாம் காணப்போவது அவரது மற்றுமொரு புதிய அவதாரம். கண்ணனின் பிறந்தநாளாகிய ஜன்மாஷ்டமியன்று ஒரு அற்புத வெண்கலச் சிலையின் அருமையான படங்களை நமக்கு அளித்திருக்கும் திரு. அசோக்குடன் இணைந்து, புகழ் பெற்ற ஊத்துக்காடு காளிங்க நர்த்தனம் பற்றி நமக்காக ஒரு பதிவு இடுகிறார்.

சோழக் கைவினைஞரின் உயர்ந்த மேலான திறமைக்கு அறிமுகம் தேவை இல்லை. எனது அனுபவத்தின் சாரத்தை வார்த்தைகளால் வெளியிடுவது இயலாத ஒன்று என்று நன்கு அறிந்திருக்கிறேன். எனவே, அந்த தெய்வீக அனுபவத்தை வாசகர்களே பெறுவதற்கு முயற்சிக்கிறேன். இன்று நான், இந்த உயர்ந்த செல்வதை நீங்கள் அதிக ஆர்வத்துடன் கண்டு களிக்க, எனக்கு தெரிந்த அளவில் அதனை விவரிக்கவும், எண்ணங்களை பகிர்ந்துகொள்ளவும் விழைகிறேன். இதனை துவங்குகையில் எல்லாம் வல்ல இறைவனிடம் இந்த அற்புதத்தை விவரிக்கும் சக்தியை எனக்கு அளிக்க பிரார்த்தனை செய்கிறேன், ஏனெனில் சில அற்புதங்களை விவரிப்பதை விட சுயமாக அனுபவிப்பதே மேலானது என்று கருதுகிறேன்.

இன்று நாம், அகந்தை கொண்ட நாகத்தை அடக்கிய அற்புத நடனத்தை மிக நேர்த்தியாக உலோகத்தில் செதுக்கப்பட்டுள்ள சிற்பம் – காளிங்க மர்தன கிருஷ்ணனின் சிற்பத்தைக் காண்போம்.

முதலில் சிற்பத்தை முழுமையாகக் காண்போம். கொடுமையே உருவாக இருக்கும் நாகமாகிய காளிங்கனுக்கு பாடம் கற்று கொடுக்கவும், அதே நேரத்தில் தான் யார் என்று உலகிற்கே எடுத்துக்காட்டவும், காளிங்கனின் தலை மீது தெய்வீக நடனம் ஆடும் விதமாக இந்த சிற்பம் அமைந்துள்ளது. ஒரு செயலின் ஓட்டம், அழகு, அதன் வேகம், மேலும் அச்செயல் சொல்லும் கதை இவற்றை சிற்பத்திலே அற்புதமாய் கொண்டு வருவதில் சோழ சிற்பிகளுக்கு நிகர் அவர்களே! ஒரு முறை சிற்பத்தைக் கண்ட உடனேயே அதன் தொடர்ச்சியான நிகழ்வுகள் நினைவில் நின்று மனதில் பதியும் வண்ணம் சிற்பத்தை செதுக்கிவிடுகின்றனர்.

கண்ணனின் வலது பாதத்திலிருந்து துவங்கி இடஞ்சுழியாக அவனது அற்புத சிற்பத்தின் தோற்ற அமைப்பை காண்போம். இது ஒரு நிலையான வடிவம் அல்ல என்பதை சிற்பத்தை கண்டதுமே உணருமாறு வடித்த சிற்பியின் கலை நுணுக்கத்தை வியக்காமல் இருக்க முடியாது. இது தொடரும் நிகழ்வுகளின் ஒரு பகுதி மட்டுமே. மேலும் அந்த நொடியின் வேகம் மிகச் சிறப்பாக காண்பிக்கப்பட்டுள்ளது.

தூக்கிய வலது திருவடியை பாருங்கள். இன்னும் சில வினாடிகளில் இந்த பாதம் எவ்வாறு நாகத்தின் தலையில் இறங்கும் என்று கற்பனை செய்ய முடிகிறதா? அந்த பாதத்தின் அழுத்தத்தை உணர முடிகிறதா? அந்த கொடிய நாகத்திற்கு அது மரண அடியாக இருக்காது. இருப்பினும் அதற்கு ஒரு திடமான செய்தி நிச்சயம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


அநேகமாக இப்படி தான் பாம்பின் தலையில் பாதம் இறங்கும்.

இந்த தனித்துவம் வாய்ந்த வெண்கலச் சிலையை கவனித்து பார்த்தோமானால், இடது பாதத்திற்கும் நாகத்தின் தலைக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி இருப்பதை காணலாம் – ஆக, கிருஷ்ணரின் எடை முழுவதும் பாம்பின் வாலைப் பற்றி இருக்கும் கரம் தாங்கும் விதமாக உள்ளது – இந்த சிற்பியும் அவனது அற்புத கலைத்திறனும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

இப்போது கண்ணனின் இடது கரத்தை பார்ப்போம். மிக நளினமாக பாம்பின் வாலை பற்றியிருக்கிறார். சற்றே சிந்தித்து பாருங்கள். உங்கள் கரத்தில், உங்கள் தோள் உயரத்திற்கு உள்ள எடை அதிகமான ஏதேனும் ஒன்றை பற்றியிருந்தால், அதிலும், அது நிலை கொள்ளாமல் நெளிந்து கொண்டிருக்கும்போது, உங்கள் கைகள் எத்தனை வலுவாக அதை பற்றியிருக்கும்? மேலும் தசைகள் எத்தனை திடமாக அதை இறுக்கி பிடித்திருக்கும்? எத்தனை அசௌகரியமாக இருந்திருக்கும்? ஆனால், இங்கு நாம் பார்ப்பது என்ன?

வளைந்த கரம், பாம்பின் வாலை ஒரு பட்டுத் துணியை பிடித்திருப்பது போன்று பற்றியிருக்கிறது. இதை பார்க்கும்போதே இது ஒரு சிறு பிள்ளையின் விளையாட்டு என்று தெரிகிறது. அவனுக்கு இந்த நாகம் ஒரு பெரிய விஷயமே அல்ல. ஒரு பெரும் நாகத்தின் வாலை ஒரு சிறிய துணியை பற்றியிருப்பது போல் பற்றியிருக்கிறான். இருப்பினும், இந்த முழு வடிவத்தையும் வைத்துப் பார்க்கும்போது, இத்தகைய தோற்றம் அமைப்பதில் உள்ள சிக்கல் விளங்கும்.

அடுத்து நாம் கண்ணனின் முகத்தை காண்போம். அவனது மந்திரப்புன்னகையே அவன் அந்த நாகத்திற்கு ஆபத்து விளைவிக்க விரும்பவில்லை என்று காட்டுகிறது. மேலும் முகத்திலோ ஒரு துளி கோபமோ, செருக்கோ, வலியோ, பெருமையோ ஒன்றும் தெரியவில்லை. அங்கே தெரிவதெல்லாம் ஒரு சிறிய குழந்தையின் அப்பழுக்கில்லாத மகிழ்ச்சி. மேலும் கூர்ந்து கவனியுங்கள். அவன் அந்த நாகத்தை பார்க்கவில்லை, யாரையும் எதனையும் குறிப்பாக பார்க்கவில்லை. அவனது பார்வை, இந்த முழு பிரபஞ்சத்தையே காண்கிறது. அவனது முகம் சற்றே சாய்வாக உள்ளது. இங்கே நாம் மறுபடியும் அவனது நடனத்தின் வேகத்தை நினைத்து பார்க்கவேண்டும். பாம்பின் தலை மீது தனது பாதத்தை வைக்கும் முன்பு அவனது தலை நளினமாக அசைகிறது.

இங்கே நாட்டியமாடுபவரின் தலை, நடனத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு அசைகிறது பாருங்கள்.

இப்போது அவரது அபய ஹஸ்தத்தை காண்போம். காண்பவரின் எண்ணத்திற்கு ஏற்ற மாதிரியே காட்சிகளின் பொருளும் வேறுபடும் என்று சொல்வர். அவனது இடையர்குல நண்பர்களுக்கு, கவலை வேண்டாம் என்று கூறுவது போல் உள்ளது. எண்ணிலடங்கா முனிவர்களுக்கும், தேவர்களுக்கும், காப்பதற்கு தாம் இருப்பதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. இறுமாப்பு கொண்ட நாகதிற்கும், அமைதியை அழிக்க நினைக்கும் மற்றவருக்கும், எச்சரிக்கை செய்வது போல் உள்ளது. நாக குடும்பத்திற்கோ, அவர்களது இறைஞ்சலை தான் செவிமடுத்து அருள் புரிவதாக சொல்வது போல் உள்ளது. இன்னும் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை கொண்டதாக அவனது அபய ஹஸ்தம் காட்சி அளிக்கிறது. அவை அனைத்தையும் எடுத்துக்கூறும் திறன் எனக்கு இல்லை.

இந்த சிற்பத்தைக் கண்டதும் நான் அனுபவித்த ஆனந்தத்தை ஓரளவிற்கேனும் உங்களிடையே சேர்க்க முடிந்தது என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன். மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வாசகர்கள் அனைவருக்கும் ஒரு விண்ணப்பம் செய்து கொள்ள விரும்புகிறேன். நமது பாரம்பரியம் விலை மதிக்க முடியாதது. பற்பல படையெடுப்புகள், மனிதரின் பேராசைகள் மற்றும் இயற்கை சீற்றங்களையும் தாண்டி அவை இன்றும் இருப்பதே மிகப் பெரிய அதிசயம் ஆகும். எனவே, இனி நீங்கள் காணும் சிற்பங்கள் மற்றும் சிலைகளை புதிய கோணத்தில் காணுங்கள் என்று வாசகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு சிற்பமும் தனக்குள் பல விஷயங்களை அடக்கியுள்ளன. ஒவ்வொரு சிற்பம் உருவாவதற்கு பின்பும் நமது பண்டைய சிற்பிகளின் கலை உணர்ச்சி, சக்தி, வலி மற்றும் உழைப்பு அடங்கியுள்ளது. அவற்றை பாதுகாப்பது நமது பொறுப்பு மட்டுமல்ல, நமது புனிதமான கடமையும் ஆகும்.
இந்த காலத்தைக் கடந்த கலைச்செல்வங்களை உயர்த்துங்கள். இவை நமது முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்ற பரிசு அல்ல. இவை நம் குழந்தைகள் நமக்கு அளித்துள்ள கடன் என்பதை நினைவில் வைத்திருங்கள். நமது வருங்கால சந்ததியினருக்கு இவற்றை நாம் திருப்பி அளிக்க வேண்டும், அதுவும் வட்டியுடன். 🙂

படங்களை உபயோகிக்க அனுமதி தந்த திரு. அசோக் அவர்களுக்கும் செல்வி. நீரஜா ஸ்ரீனிவாசன் (நடனமாடுபவர்) அவர்களுக்கும் மிக்க நன்றி.

மேலும் நமக்கு ஒரு விருந்து படைக்கிறார் அசோக்

மேலே உள்ள அனைத்து கருத்துகளும் எழுதியவரின் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டதே ஆகும். சிற்ப சாஸ்திரத்தின் படியோ அல்லது விஞ்ஞான ரீதியான பொருளின்படியோ பொருந்தியோ பொருந்தாமலோ போகும் வாய்ப்பு உள்ளது. இந்த பதிவில் காணப்படும் தவறுகளுக்கு மன்னிக்கும்படி எழுதியவர் வேண்டுகோள் வைக்கிறார். மேலும், இவை தனது சொந்த கருத்துக்களே என்றும் அறியாமையால் தவறுகள் ஏற்பட்டிருக்கும் என்றும் தெளிவுபடுத்துகிறார். எனது எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க வாய்ப்பு வழங்கிய திரு. விஜய் அவர்களுக்கு நன்றிகள் பலப்பல. மேலும் நமது அரிய பாரம்பரியத்தை முன்னிறுத்த அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். இந்த முயற்சி பெரும் புரட்சியாக மாற வாழ்த்துகள்! வணக்கம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment