தந்தையும் மகனும் சிற்பிகளாக இருப்பது பெரும் பிரச்சனையாக இருந்திருக்கும் போல – திருமலைப்புரம்

அந்த காலத்தில் தந்தையும் மகனும் சிற்பிகளாய் இருப்பது பலருக்கு கண்ணுறுத்தலாக இருந்திருக்கும் போல ! தந்தை செய்த சிற்பத்தில் மகன் குறை கண்டுபிடிப்பதும் அதனால் தந்தை தன கையை தானே வெட்டி எறிவது போல பல ( கட்டுக்) கதைகள் எதோ ஒரு ஒற்றில் கேட்டால் பரவாயில்லை – ஊருக்கு ஊர் இதே கதையை அந்த ஊரில் உடந்தை சிற்ப்பத்துடன் ( உள்ளே தேரை இருந்தது தான் அந்த குறையாம் !) இந்த கதையை சொல்லி சொல்லி பரப்பி விடுகிறார்கள். ஆனால் நல்ல வேலையாக இந்த முறை புதிதாக ஒரு கதையை கேட்டோம் !

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் வழி கேட்டுக்கொண்டு – அதற்க்கு ஊர்காரர்களுக்கு வழி தெரியவேண்டுமே ! தட்டி தடவி, திருமலாபுரம் என்று இன்று அழைக்கப்படும் திருமலைப்புரம் ( திருநெல்வேலி – கல்லிடைக்குறிச்சி அருகில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது) சென்றடையும் போதே பொழுது சாய்ந்துக் கொண்டு இருந்தது.

பெரிய குன்றில் ஒரு புறம் உள்ள பாறை முகத்தில் வெட்டிய குடவரை பளிச்சென்று தெரிகிறது. அதன் முன்னே அந்த சிற்பி / மன்னன் நின்று பார்க்கும் பொது தங்கள் மனக்கண்ணில் அவர்கள் கைவண்ணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் நிலைத்து நிற்கும் என்று எண்ணி இருப்பார்களா ?

சின்ன குடவரை தான். இரு தூண்கள் – இரு அரை தூண்கள் ( வட திசை நோக்கி ஒரு முடிவுற்ற குடவரை உள்ள்ளது – தெற்கு நோக்கி ஒன்று முடிவு பெறாத நிலையிலும் உள்ளது. அந்த முடிவு பெறாத குடைவரையை வைத்து தான் இந்த கதை வளர்கிறது – அதை பின்னர் பார்ப்போம் )

முதல்லில் வடக்கு குடைவரையை இன்னும் அருகில் சென்று பார்ப்போம். தூண்களில் அழகிய வேலைப்பாடுகள் உள்ளன.

அருமையான குடவரையில் நடு நாயகமாக தாய்ப்பாறையில்f செதுக்கிய நந்தி இருந்திருக்க வேண்டும். பாவம், அதன் கால்கள் மட்டுமே நமக்கு எஞ்சி உள்ளன. எவ்வளவு கடினமான வேலைப்படாக அது இருந்திருக்கவேண்டும் ! அடுத்த குடைவரையை பார்க்கும் பொது இது பற்றி நமக்கு மேலும் புரியும்.

இந்த குடைவரையின் காலம் சுமார் ஏழாம் நூற்றாண்டின் பின்பகுதிக்கு கணக்கிடப் படுகிறது. இது பாண்டியர் பாணியில் உள்ளது. கருவறையில் உள்ள சிவலிங்கம் தாய்பாரையில் செதுக்கப்பட்டிருப்பது, விநாயகர் சிற்பம் இருப்பது மற்றும் உள்ளே இருக்கும் மற்ற சிற்ப்பங்களின் பாணியை கொண்டும் இவற்றை நாம் அறியலாம்.

இரு வாயிற் காவலர்களில் இடது புறம் இருப்பவர் முறுக்கிய மீசையுடன் கம்பீரமாக தோற்றம் அளிக்கிறார்.




உட்சுவர்களில் நான்முகன் , பெருமாள் மற்றும் சிவபெருமானின் அருமையான ஆடல் சிற்பம் உள்ளது.


ஆடல் சிற்பம் என்றால் புகழ் பெற்ற நடராஜர் வடிவம் அல்ல – ஆனால் சதுர கோணத்தில், கையில் நடன நூலை பிடித்து அவர் ஆடும் அழகு மிக அருமை. அவருக்கு இருபுறமும் பூத கணங்கள் உள்ளது – வலது புறம் உள்ள கணம் சிதைந்து விட்டது – இடது புறம் இருப்பவர் சங்கீதம் சார்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் முக்கியமானவர். இந்த ஆடல் காட்சி மற்றும் பூதகணத்தை, அடுத்த பகுதியில் பார்ப்போம்.

இங்கே குறிப்பிட வேண்டியது இந்த சிற்பங்களின் அளவு – மேல் பாகம், முகம் – அணிகலன் எல்லாம் அழகாக இருந்தாலும் – இடுப்பு மற்றும் கால்கள் சற்றே அளவில் குறைவாக இருப்பது சற்று அழகு குறைவாக காட்சி அளிக்கின்றன.

சுவர்களில் ஒரு சில இடங்களில் ஓவியங்கள் இருந்த தடயங்கள் தெரிகின்றன. இந்த குடைவரைகள் முழுவதும் அந்த நாளில் ஓவியங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்திருக்கும் !! இன்னும் ஒரு புதமை இங்கே மும்மூர்த்திகளின் வடிவங்களின் நடுவில் இடத்தை பிரிக்க தூண்களை போலவே கல்லில் செதுக்கி இருப்பது.


பொழுது சாயும் நேரம் ஆகா, விடு விடு என்று அடுத்த குடைவரையை காண சென்றோம். அதற்குள் பெரிய கூட்டம் சேர்ந்துவிட்டது. எதோ பாரதிராஜா போல நாங்களும் படம் எடுக்கு வந்திருக்கிறோம் என்று நினைத்தார்களோ என்னமோ ! அந்த குடவரையில் பார்ப்பதுக்கு ஒன்றுமே இல்லை. அதை பூட்டி வைத்துள்ளனர் – சாவி இங்கே இல்லை, என்றெல்லாம் சொன்னார்கள்.



வெளியில் உள்ள அரைகுறை சிற்பத்தை ( விநாயகரா??) பார்க்கும் பொது அவர்கள் சொல்வதில் தப்பு இல்லை என்று தான் தோன்றியது. நாங்கள் அந்த பூட்டிய கதவின் கம்பிகளுக்குள் தலையை திருப்பி திருப்பி உள்ளே பார்க்க முயற்சி செய்த எங்களை பார்த்து அவர்களுக்கு கருணை பிறக்கு – தொல்லியல் துறை தொலைபேசி என்னை தந்தார்கள். உடனே போன் செய்து வழக்கம் போல ” எனக்கு ஆசி இல் @#@#@#@#@# சாரை தெரியும் ” என்று ஒரு இரு பிரமுகர்களின் பெயரை சொல்லியவுடன் அவர் ” இதோ வருகிறேன் என்றார் !”

அப்படி அவர் வருவதற்கு காற்று நிற்கும் பொது தான் அந்த ஆடு மேய்ப்பவர்கள் அந்த ” கதையை” சொன்னார்கள். முதல் குடைவரையை செதுக்கிய சிறப்பிக்கு மிகவும் சுட்டியான மகன் ஒருவன் இருந்தானாம். அவன் தன தந்தைக்கு தினமும் வீட்டிலிருந்து ” காபி ” எடுத்து வருவானாம். அவனுக்கு தந்தையின் கலையை கற்க பெரும் ஆசை. அதன்படி அவன் அப்பாவுக்கு காபி வைத்துவிட்டு அவர் செதுக்குவதை பார்த்து மனதில் பதிந்து – மலையின் அடுத்த பக்கம் சென்று அதே போல செதுக்க துவங்கினானாம். தந்தைக்கு இது தெரியாமல் இருக்க தந்தை சுத்தியால் உலையை அடிக்கும் அதே தருணத்தில் தானும் அடிப்பானாம். அப்படியே பல காலம் செல்ல – ஒரு நாள் தந்தை திடீரேனே செதுக்குவதை நிறுத்த – மகனின் உளியின் ஓசை அவருக்கு கேட்டு விட்டது. என்ன கடக்கிறது என்று பாக்க சத்தம் வந்த இடத்தை நோக்கி அவர் செல்ல – அங்கே தனது வேலையை யாரோ காப்பி அடிப்பதை கண்டு கோபம் கொண்டார். கோபம் கண்ணை மறைக்க கல்லின் மேலே குடிந்து வேலை செய்வது தன மகன் என்று தெரியாமல் சுத்தியல் கொண்டு அடித்து கொன்றுவிட்டாராம் !!

அப்போது சாவி வந்துவிட்டது, உள்ளே சென்று நிறை பெறாத அந்த குடவரையில் ” ஒன்றுமே இல்லாத ” சுவர்களில் அந்த காலத்தில் எப்படி இந்த கல்லை குடைந்தார்கள் என்று அறிய உதவுகிறது. குறிப்பாக அந்த தாய்பாரை நந்தி …இங்கே அதற்க்கு நடுவில் எப்படி கல்லை விட்டு சுற்றி குடைந்து வருவது தெரிகிறது.

குடவரையில் எப்படி கல்லை குடைந்து இன்னும் ஆழம் செல்கிறார்கள் என்றும் அறியலாம். ஒன்று நாம் கவனிக்க வேண்டும் – இங்கே கல்லில் உள்ள உளி பட்ட மார்க்குகள் மல்லை குடைவரைகளில் நாம் முன்னர் நாம் கண்ட மார்க்குகளை விட சற்று வேறுபட்டு காட்சி அளிக்கின்றன.

படங்கள்: அர்விந்த் வெங்கட்ராமன்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தந்தையும் மகனும் சிற்பிகளாக இருப்பது பெரும் பிரச்சனையாக இருந்திருக்கும் போல – திருமலைப்புரம்

அந்த காலத்தில் தந்தையும் மகனும் சிற்பிகளாய் இருப்பது பலருக்கு கண்ணுறுத்தலாக இருந்திருக்கும் போல ! தந்தை செய்த சிற்பத்தில் மகன் குறை கண்டுபிடிப்பதும் அதனால் தந்தை தன கையை தானே வெட்டி எறிவது போல பல ( கட்டுக்) கதைகள் எதோ ஒரு ஒற்றில் கேட்டால் பரவாயில்லை – ஊருக்கு ஊர் இதே கதையை அந்த ஊரில் உடந்தை சிற்ப்பத்துடன் ( உள்ளே தேரை இருந்தது தான் அந்த குறையாம் !) இந்த கதையை சொல்லி சொல்லி பரப்பி விடுகிறார்கள். ஆனால் நல்ல வேலையாக இந்த முறை புதிதாக ஒரு கதையை கேட்டோம் !

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் வழி கேட்டுக்கொண்டு – அதற்க்கு ஊர்காரர்களுக்கு வழி தெரியவேண்டுமே ! தட்டி தடவி, திருமலாபுரம் என்று இன்று அழைக்கப்படும் திருமலைப்புரம் ( திருநெல்வேலி – கல்லிடைக்குறிச்சி அருகில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது) சென்றடையும் போதே பொழுது சாய்ந்துக் கொண்டு இருந்தது.

பெரிய குன்றில் ஒரு புறம் உள்ள பாறை முகத்தில் வெட்டிய குடவரை பளிச்சென்று தெரிகிறது. அதன் முன்னே அந்த சிற்பி / மன்னன் நின்று பார்க்கும் பொது தங்கள் மனக்கண்ணில் அவர்கள் கைவண்ணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் நிலைத்து நிற்கும் என்று எண்ணி இருப்பார்களா ?

சின்ன குடவரை தான். இரு தூண்கள் – இரு அரை தூண்கள் ( வட திசை நோக்கி ஒரு முடிவுற்ற குடவரை உள்ள்ளது – தெற்கு நோக்கி ஒன்று முடிவு பெறாத நிலையிலும் உள்ளது. அந்த முடிவு பெறாத குடைவரையை வைத்து தான் இந்த கதை வளர்கிறது – அதை பின்னர் பார்ப்போம் )

முதல்லில் வடக்கு குடைவரையை இன்னும் அருகில் சென்று பார்ப்போம். தூண்களில் அழகிய வேலைப்பாடுகள் உள்ளன.

அருமையான குடவரையில் நடு நாயகமாக தாய்ப்பாறையில்f செதுக்கிய நந்தி இருந்திருக்க வேண்டும். பாவம், அதன் கால்கள் மட்டுமே நமக்கு எஞ்சி உள்ளன. எவ்வளவு கடினமான வேலைப்படாக அது இருந்திருக்கவேண்டும் ! அடுத்த குடைவரையை பார்க்கும் பொது இது பற்றி நமக்கு மேலும் புரியும்.

இந்த குடைவரையின் காலம் சுமார் ஏழாம் நூற்றாண்டின் பின்பகுதிக்கு கணக்கிடப் படுகிறது. இது பாண்டியர் பாணியில் உள்ளது. கருவறையில் உள்ள சிவலிங்கம் தாய்பாரையில் செதுக்கப்பட்டிருப்பது, விநாயகர் சிற்பம் இருப்பது மற்றும் உள்ளே இருக்கும் மற்ற சிற்ப்பங்களின் பாணியை கொண்டும் இவற்றை நாம் அறியலாம்.

இரு வாயிற் காவலர்களில் இடது புறம் இருப்பவர் முறுக்கிய மீசையுடன் கம்பீரமாக தோற்றம் அளிக்கிறார்.




உட்சுவர்களில் நான்முகன் , பெருமாள் மற்றும் சிவபெருமானின் அருமையான ஆடல் சிற்பம் உள்ளது.


ஆடல் சிற்பம் என்றால் புகழ் பெற்ற நடராஜர் வடிவம் அல்ல – ஆனால் சதுர கோணத்தில், கையில் நடன நூலை பிடித்து அவர் ஆடும் அழகு மிக அருமை. அவருக்கு இருபுறமும் பூத கணங்கள் உள்ளது – வலது புறம் உள்ள கணம் சிதைந்து விட்டது – இடது புறம் இருப்பவர் சங்கீதம் சார்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் முக்கியமானவர். இந்த ஆடல் காட்சி மற்றும் பூதகணத்தை, அடுத்த பகுதியில் பார்ப்போம்.

இங்கே குறிப்பிட வேண்டியது இந்த சிற்பங்களின் அளவு – மேல் பாகம், முகம் – அணிகலன் எல்லாம் அழகாக இருந்தாலும் – இடுப்பு மற்றும் கால்கள் சற்றே அளவில் குறைவாக இருப்பது சற்று அழகு குறைவாக காட்சி அளிக்கின்றன.

சுவர்களில் ஒரு சில இடங்களில் ஓவியங்கள் இருந்த தடயங்கள் தெரிகின்றன. இந்த குடைவரைகள் முழுவதும் அந்த நாளில் ஓவியங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்திருக்கும் !! இன்னும் ஒரு புதமை இங்கே மும்மூர்த்திகளின் வடிவங்களின் நடுவில் இடத்தை பிரிக்க தூண்களை போலவே கல்லில் செதுக்கி இருப்பது.


பொழுது சாயும் நேரம் ஆகா, விடு விடு என்று அடுத்த குடைவரையை காண சென்றோம். அதற்குள் பெரிய கூட்டம் சேர்ந்துவிட்டது. எதோ பாரதிராஜா போல நாங்களும் படம் எடுக்கு வந்திருக்கிறோம் என்று நினைத்தார்களோ என்னமோ ! அந்த குடவரையில் பார்ப்பதுக்கு ஒன்றுமே இல்லை. அதை பூட்டி வைத்துள்ளனர் – சாவி இங்கே இல்லை, என்றெல்லாம் சொன்னார்கள்.



வெளியில் உள்ள அரைகுறை சிற்பத்தை ( விநாயகரா??) பார்க்கும் பொது அவர்கள் சொல்வதில் தப்பு இல்லை என்று தான் தோன்றியது. நாங்கள் அந்த பூட்டிய கதவின் கம்பிகளுக்குள் தலையை திருப்பி திருப்பி உள்ளே பார்க்க முயற்சி செய்த எங்களை பார்த்து அவர்களுக்கு கருணை பிறக்கு – தொல்லியல் துறை தொலைபேசி என்னை தந்தார்கள். உடனே போன் செய்து வழக்கம் போல ” எனக்கு ஆசி இல் @#@#@#@#@# சாரை தெரியும் ” என்று ஒரு இரு பிரமுகர்களின் பெயரை சொல்லியவுடன் அவர் ” இதோ வருகிறேன் என்றார் !”

அப்படி அவர் வருவதற்கு காற்று நிற்கும் பொது தான் அந்த ஆடு மேய்ப்பவர்கள் அந்த ” கதையை” சொன்னார்கள். முதல் குடைவரையை செதுக்கிய சிறப்பிக்கு மிகவும் சுட்டியான மகன் ஒருவன் இருந்தானாம். அவன் தன தந்தைக்கு தினமும் வீட்டிலிருந்து ” காபி ” எடுத்து வருவானாம். அவனுக்கு தந்தையின் கலையை கற்க பெரும் ஆசை. அதன்படி அவன் அப்பாவுக்கு காபி வைத்துவிட்டு அவர் செதுக்குவதை பார்த்து மனதில் பதிந்து – மலையின் அடுத்த பக்கம் சென்று அதே போல செதுக்க துவங்கினானாம். தந்தைக்கு இது தெரியாமல் இருக்க தந்தை சுத்தியால் உலையை அடிக்கும் அதே தருணத்தில் தானும் அடிப்பானாம். அப்படியே பல காலம் செல்ல – ஒரு நாள் தந்தை திடீரேனே செதுக்குவதை நிறுத்த – மகனின் உளியின் ஓசை அவருக்கு கேட்டு விட்டது. என்ன கடக்கிறது என்று பாக்க சத்தம் வந்த இடத்தை நோக்கி அவர் செல்ல – அங்கே தனது வேலையை யாரோ காப்பி அடிப்பதை கண்டு கோபம் கொண்டார். கோபம் கண்ணை மறைக்க கல்லின் மேலே குடிந்து வேலை செய்வது தன மகன் என்று தெரியாமல் சுத்தியல் கொண்டு அடித்து கொன்றுவிட்டாராம் !!

அப்போது சாவி வந்துவிட்டது, உள்ளே சென்று நிறை பெறாத அந்த குடவரையில் ” ஒன்றுமே இல்லாத ” சுவர்களில் அந்த காலத்தில் எப்படி இந்த கல்லை குடைந்தார்கள் என்று அறிய உதவுகிறது. குறிப்பாக அந்த தாய்பாரை நந்தி …இங்கே அதற்க்கு நடுவில் எப்படி கல்லை விட்டு சுற்றி குடைந்து வருவது தெரிகிறது.

குடவரையில் எப்படி கல்லை குடைந்து இன்னும் ஆழம் செல்கிறார்கள் என்றும் அறியலாம். ஒன்று நாம் கவனிக்க வேண்டும் – இங்கே கல்லில் உள்ள உளி பட்ட மார்க்குகள் மல்லை குடைவரைகளில் நாம் முன்னர் நாம் கண்ட மார்க்குகளை விட சற்று வேறுபட்டு காட்சி அளிக்கின்றன.

படங்கள்: அர்விந்த் வெங்கட்ராமன்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவர் கால கொற்றவை வடிவங்கள் – ஒரு பார்வை !

சிற்பக்கலையின் சிகரம் மல்லை எனும் மாமல்லபுரம் – என்பதனாலே பலரும் அதை மட்டுமே பல்லவர் கலையின் எடுத்துக்காட்டு என நினைக்கிறார்கள். மல்லையை தாண்டியும் பல்லவர் கலை தொண்டை நாட்டில் பரவி உள்ளது என்பதை எடுத்துக்காட்ட இன்று நாம் சிங்காவரம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் குடைவரைக்கு செல்கிறோம்.( செஞ்சியில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது )- குடைவரையின் காலம் ஏழாம் நூற்றாண்டு என கருதப்படுகிறது. அதை ஊர்ஜிதம் செய்ய கல்வெட்டுகள் இல்லை – எனினும் அங்கே உள்ள சிற்பத்தைக் கொண்டு அதன் காலத்தை ஒரு குத்து மதிப்பாக நிர்ணயம் செய்ய இயலுமா என்று பார்ப்போம்.

இந்த குடைவரை பற்றி இன்னும் விவரமாக படிக்க நண்பர்திரு சௌராப் அவர்களின் பதிவை கண்டிப்பாக படிக்கவும்.

ஒரு சிறு குன்றின் மேலே இந்த குடைவரை உள்ளது. குன்றின் அடிவாரத்தில் ஒரு உயர்ந்த மண்டபம் உள்ளது. அங்கிருந்து படியில் ஏறி பிற்காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோயிலுக்கு செல்ல வேண்டும். கருவறைக்கு சென்ற பின்னர் தான் – அங்கே உள்ள அர்த்த மண்டபம், தூண்கள் அனைத்தும் மலையின் முகத்தில் குடைந்து வடிவமைக்கப்பட்டு இருப்பது தெரியும். நம்மவர்கள் அந்த அருமையான பல்லவ வாயிற் காவலர்களை என்ன கோரம் செய்துள்ளனர் என்று பாருங்கள்..மேலே சுண்ணாம்பு பூசி வண்ணம் அடித்து சிதைத்து விட்டனர்.

நல்ல வேளையாக மூலவர் சயன பெருமாள் தப்பித்து விட்டார். இருபத்தி நான்கு அடி பெருமாள் – தாய் பாறையில் குடைந்த சிலை!!

இன்று வெகு சில பக்தர்கள் மட்டுமே அங்கு சென்றாலும், அவர்கள் கூட அங்கே அருகில் இருக்கும் இன்னும் ஒரு பொக்கிஷத்தை பார்ப்பதில்லை. பின்னணில் கட்டிய தாயார் மண்டபத்தில் உள்ள ஒரு சிறு ஜன்னல் வழியாக மட்டுமே அந்த அற்புத சிற்பத்தை பார்க்க முடியும். பல்லவர் கால கொற்றவை சிற்பம்.

திரிபங்கத்தில் கொற்றவை – சிங்காவரம்.

அருமையான சிற்பம். இங்கே நாம் கவனிக்க வேண்டியது கொற்றவையின் அங்கம் எப்படி திரிபங்கத்தில் இருப்பது. அப்படி நிற்கும் பொது ஒரு காலை மடக்க வேண்டும் – அதனால் அதன் அடியில் எருதான மகிஷனின் வெட்டுண்ட தலையை கொண்டுவரும் யுக்தி அருமை. இப்படி ஒரு காலை உயர்த்தி இருப்பதற்கு ஊர்த்வஜர் என்று பெயர். அதே போல வளையும் அந்த இடுப்பின் மேலே இடது கை வருவது – எல்லாமே சிற்பத்தின் அழகை கூட்டும் யுக்திகள். சக்கரம் பிடித்துள்ள பாணி – பிரயோக சக்கரம் இதன் காலத்தை பல்லவர் காலம் என்று நமக்கு உணர்த்துகிறது. இருபுறமும் பக்தர்கள் உள்ளனர். நல்ல வேளையாக வலது புறம் இருப்பவர் தன கையை மட்டுமே வெட்டும் வண்ணம் உள்ளது ( நவ கண்டம் ) – தலையை வெட்டுவது போல இல்லை. இடது புறம் இருப்பவர் கையில் பூவை ஏந்தி இருப்பது போல உள்ளது.

இங்கே பல்லவர் கால கல்வெட்டுகள் இல்லை. இருந்தாலும் சிற்பங்களை கொண்டு இதன் காலத்தை குத்து மதிப்பாக நிர்ணயம் செய்ய முடியும். இதற்கு நமக்கு ஏற்கனவே அறிமுகம் ஆன மல்லை கொற்றவை வடிவங்களை சிங்காவரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

திரௌபதி ரத துர்க்கை – சாம பங்கத்தில் நிற்பது கண்டிப்பாக சிங்காவரத்தை விட காலத்தால் முன்னதாக இருக்கவேண்டும். அதே போல வராஹ மண்டபம் சிறப்பும் அதை விட முன்னது. இடது கை எப்படி இடுப்பை தாண்டி தொடை அருகில் ( கடி ஹஸ்தம்!) இருக்கிறது பாருங்கள்.

இந்த இரு வடிவங்களை பார்த்த பிறகு நாம் ஆதி வராஹா சிற்ப்பத்தை பார்ப்போம். திரிபங்கம் நன்றாகவே தெரிகிறது. மேலும் சிற்ப வடிவத்திற்கு கூடுதல் அழகு சேர்க்க கால்கள் சற்றே நீண்டு வடிவமைக்கட்டுள்ளன. இதனால் இந்த வடிவம் சிங்காவரத்தை விட சற்று பிந்தைய காலம் என்று குறிக்க முடிகிறது.

அப்படி பார்த்தால் இந்த சிற்பங்களை திரௌபதி ரதம் / வராஹ மண்டபம் / சிங்காவரம் / ஆதி வராஹ மண்டபம் என்று வரிசைப் படுத்த முடியும்.

கண்டிப்பாக பலரும் சிங்காவரம் சென்று இந்த அற்புத சிற்பங்களை கண்டு ரசிக்க வேண்டும்.

படங்கள் : நன்றி திரு அசோக் கிருஷ்ணசுவாமி , திரு அர்விந்த் வெங்கடராமன் மற்றும் திரு . சௌரப் சக்சேனா


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஒரு குடைவரை – அதில் சிதைந்த ஓவியமும் உடையார் ராஜ ராஜ சோழர் பிறந்த நட்சத்திரமும் – திரு நந்திக்கரை

நண்பர் திரு. ஷங்கர் பல மாதங்களுக்கு முன் தான் குடைவரையில் பார்த்த ஒரு ஓவியத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவர் பெரிய அளவு படத்தை நேர்த்தியாக எடுத்து அனுப்பி வைத்திருந்தாலும் என்ன காரணத்தினாலோ அதை எடுத்துப் பார்க்க நேரம் அமையவே இல்லை. ஆனால் அதற்கு இப்படி ஒரு வேளை வரும் என்று நான் சற்றும் எதிர்ப்பாக்கவில்லை.

நண்பர் திரு. ராமன் அவர்கள் பழைய புத்தகக் கடை ஒன்றில் பழைய புகைப்படங்கள் இருப்பதாகவும், அவற்றைப் பார்த்தால் எனக்கு உதவும் போல தெரிகிறது என்றும் கூறினார். அது மட்டும் அல்லாமல் அதில் ஒன்றிரண்டை வருடி (ஸ்கான்) செய்தும் அனுப்பிவைத்தார். அதிலே ஒன்று அழகிய செப்புத் திருமேனி, மற்றொன்று புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் ஓவியப் படம், இரண்டுமே சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டவை!! இவற்றைப் பார்த்தவுடன் நிச்சயம் நமக்கு தேவை என்று அவரிடம் தெரிவித்தேன்.

சென்னை சென்ற சமயம் நானும், நண்பர் அரவிந்தும் அவற்றை ஒவ்வொன்றாக பார்த்து வந்த பொழுது, சில படங்களின் பின்புறத்தில் திரு நந்திக்கரை என்று பென்சிலால் எழுதிய எழுத்துக்கள் கண்ணில் பட்டன.

உடனே ஷங்கரை தொடர்பு கொண்டு சமீபத்தில் அவர் சென்ற பொழுது அவர் எடுத்து வந்த அத்தனைப் படங்களையும் கேட்டேன். அவரும் உடனே அனுப்பிவைத்தார். ( திரு நந்திக்கரை – கன்னியாக்குமரி மாவட்டம் – திருவட்டாரில் இருந்த சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவு – நாகர்கோயிலில் இருந்து நாற்பது கிலோமீட்டர் )

குடைவரையில் தற்போதைய உட்புறத் தோற்றம். (முதல் முறை அவர் படம் அனுப்பிய பொழுது பார்க்க முடியாததன் காரணம் இனி உங்களுக்கு புரியும்)

குடைவரையின் காலம் 8th CE ( அபிஷேக நீர் வெளியேறும் அமைப்பைக் கொண்டு இதன் காலம் நிர்ணயிக்கப்படுகிறது )

கைவசம் இருந்தும் நான் முதல் முறை காணத்தவறிய சுவர் ஓவியம்

பழைய புத்தகக் கடையில் கிடைத்தப் படங்களை பார்த்தவுடன் திறந்தன என் விழிகள்

அழகான விநாயகர் ஓவியம், மேலே ஒரு அருமையான கணம் ( பார்த்தால் காஞ்சி கைலாசநாதர் ஓவியங்களின் பாணியிலேயே உள்ளது ) இருந்தும் சுமார் அரை நூற்றாண்டு காலத்தில் நாம் இழந்திருப்பது …

மற்றுமொரு ஓவியம் இருந்தது, அதற்கான பொருத்தத்தையும் தேட கிடைத்தது…

இப்பொழுது படங்களை பாருங்கள்..

என்ன அழகான அருமையான ஓவியங்கள். இந்த பொக்கிஷங்களை முறையாக பாதுகாக்காமல் இப்படி அழிய விட்டு விட்டோமே!

மேலும் இரண்டு ஓவியங்கள் படங்களில் உள்ளன. அனால் தற்போது குடைவரையில் காணக் கிடைக்கவில்லை.

இங்கே சித்தரிக்கப்பட்டுள்ள காட்சி என்னவென்று தெரியவில்லை.

இந்த குடைவரையில் மேலும் ஒரு சரித்திர நிகழ்வின் முக்கிய தடயமும் உள்ளது.

உடையார் ஸ்ரீ இராஜ ராஜ சோழர் பிறந்தது ஐப்பசி சதயமா அல்லது சித்திரை சதயமா என்ற விவாதம் சில காலமாக உலவிக் கொண்டிருக்கிறது.

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள், தங்கள் திருவாரூர் நூலில் திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டைக் கொண்டு இதனை தெளிவு படுத்தி உள்ளார். அது திரு இராஜேந்திர சோழரின் கல்வெட்டு, அதில்

” நாம் பிறந்த ஆடி திருவாதிரையும்
நம் அய்யன் பிறந்தருளிய ஐப்பசி சதயமும் .. ”

10034
10031

என்று வருகிறது.

இந்த திரு நந்திக்கரை குடவரையில் உள்ள திரு ராஜ ராஜரின் கல்வெட்டு


185. On the east wall of the rock-cut iva shrine. Belongs to
the eighteenth year of Rajaraja I and records grant to the temple
for the celebration of a festival in Aippasi, Satabhisha, the birth-
day of the king. See Trav. Arch. Ser. t Vol. I, pp. 291-2.”

தான் பிறந்தது ஐப்பசி தான் என்று தெளிவு பட எடுத்துக் கூறுகிறது.

இந்த ஓவியத்தின் புகைப்படங்களுக்கு உரியவர் யார்? அவை எப்படி பழைய புத்தகக் கடைக்கு சென்றன என்பது தெரியவில்லை. யாரேனும் அறிந்திருந்தால் நிச்சயம் தொடர்பு கொள்ளவும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பதவியில் இருப்பவர் பழைய ஆட்சியின் ஆணையை ஆளும் விதம்

தற்போதைய அரசியல் சூழலில் ஆட்சி மாறியதுமே முந்தைய ஆட்சியின் பொது அமலாக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தடு ( தடம்) மாறும் ஏளனத்தை தினம் தினம் நாம் பார்க்கின்றோம். ஆனால் அந்தக் காலத்து மன்னர் ஆட்சியில் இது எப்படி இருந்தது என்ற கேள்வி எழுகிறது ..இன்றோ மக்கள் ஆட்சி. மக்கள் பிரதி நிதி நடைமுறை பற்றிய திட்டங்களே இவை என்ற கருதும் பொது அன்றைய மன்னர் ஆட்சியில் மன்னன் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று இருந்திருக்க வேண்டும். அவர் கூறினால் எதிர் மறை விவாதம் கிடையாது. எனினும் அவர்கள் எப்படி நடந்துக்கொண்டனர் என்பதை தெரிந்துக்கொள்ள மீண்டும் திருகழுகுன்றம் செல்ல வேண்டும். பலரும் சென்ற இடம் என்றாலும் அங்கு பலருக்கு தெரியாத ஒரு அற்புதம் இருக்கிறது. நாம் முன்னரே பார்த்த மலை மேல் உள்ள ஆலயத்துக்கு செல்லும் வழியில் உள்ள பல்லவர் காலத்து குடவரைக் கோயில்.

பாதி வழி ஏறியபின் மூச்சிரைக்க மேலே போகலாமா வேண்டாமா என்று சற்று நம்மை ஆசுவாசப் படுத்த நிற்கும் இடம் – மேலே செங்குத்தான அடுத்த வரிசை புதிய வழியில் படிக்கட்டு கண்ணை கட்ட, மலையை சுற்றி பழைய பாதை ஒன்றும் இருக்கிறது. அதில் சென்று திரும்பியதும் இடது புறம் மலையில் குடையப்பட்ட அற்புத ஒரு கல் மண்டபம் தெரிகிறது.

தொல்லியல் துறை பாதுகாப்பில் இருக்கிறது என்றாலும் எப்போதுமே பூட்டப்பட்டே இருக்கிறது – இது நல்லதா கெட்டதா என்று சொல்ல முடியவில்லை.

குடைவரை தூண்கள் மற்றும் சில அம்சங்களை வைத்து இது மகேந்திர பல்லவரின் காலத்திற்கு அடுத்து என்று கருதப்படுகிறது. ( 630 CE பின்னர் ) . குடைவரை அமைப்பு இதோ.


உள்ளே கருவறையில் அருமையான லிங்கம் உள்ளது. ( பின் சுவரில் சோமாஸ்கந்தர் வடிவம் இல்லை )

அடுத்து இருபுறமும் கருவறை காவலர்கள் ( புடைப்புச் சிற்பம் )
.

தூண்கள் நாம் இதுவரை கண்ட மகேந்திர குடைவரைகளை விட சற்றே மெலிந்து காட்சி அளிக்கின்றன. மேலும் கருவறைக்கு இருபுறமும் நான்முகன் மற்றும் பெருமாளின் சிற்ப்பங்கள் வருகின்றன.


முக மண்டபத்தில் இரு பக்கமும் தேவர்கள் இருவர் உள்ளனர். இவர்கள் யார் என்று அடையாளம் காண முடியவில்லை.

சரி இப்போது கல்வெட்டுக்கு வருவோம் ( Epigraphica Indica Vol 3 )
363 பக்கம்

ஸ்வஸ்திஸ்ரீ கோவி ராஜகேஸரிபரம்மர்க்கு யாண்டு இருபத்தி ஏழாவது
களத்தூர் கோட்டத்துட்டன் கூற்று திருக்கழுக்குன்றத்து ஸ்ரீமூலஸ்தானத்துப் பெருமான் அடிகளுக்கு இறையிலியாக ஸ்கந்தசிஷ்யன் குடுத்தமையப்படியே பாதாவிகொண்ட நரசிங்கப்பொட்டரையரும் அப்பரிசே ரக்‌ஷித்தமையில் ஆண்டுரையான் குணவான் மகன் புட்டன் (புத்தன்) விண்ணப்பித்தினால் பூர்வராஜாக்கள் வைத்தபடியே வைத்தேன் இராஜகேசரிபரம்மன் இத்தர்மம் ரக்‌ஷித்தான் அடி என் முடி மேலினே

அதாவது ” போற்றி! வளம் பெருகட்டும்!! அரசர் ராஜகேசரிவர்மரின் 27ஆம் ஆண்டுக் காலம், ஸ்கந்தசிஷ்யன் இந்த நிலங்களை கொடையாகவும், களத்தூர் கோட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் உள்ள மூலத்தானவருக்கு பாத காணிக்கையாக அளிக்கப்பட்டதால் புனிதமான இந்த நிலத்துக்கு வரிப்பணம் செலுத்த தேவையின்றியும் ஏற்கனவே பூர்வ ராஜாக்களாலும், வாதாபியை வென்ற நரசிங்க பொட்டரையர் உறுதி செய்ததாலும், ராஜகேசரி வர்மனாகிய நானும் ஆந்துரையைச் சேர்ந்த குணவான் மகனாகிய புத்தன் வேண்டுகோளுக்கிணங்க உறுதி செய்கிறேன்.இந்தக் கொடையை பாதுகாக்கும் ஒவ்வொருவர் பாதமும் என் சிரத்திலும் பதியட்டும்.

ஸ்கந்தசிஷ்யன் கொடுத்த கொடையை , நரசிம்ம பல்லவர் உறுதி செய்ய ( 630 CE) , இருநூற்றி அறுபத்தி எழு ஆண்டுகள் பின்னர் வந்த சோழ அரசன் 897 CE யில் என்ன ஒரு பெருந்தன்மையுடன் முன்னர்வர்களை மதிப்புடன் வாதாபி கொண்டான் என்ற அடைமொழியை கூட விடாமல் கல்வெட்டாக செதுக்கி உறுதி செய்கிறான் !!! அதுவும் இத்தர்மத்தை பாதுகாப்போர் கால் பாதங்களை தன் தலையினில் பதித்துக் கொள்வதாக கல்வெட்டில் எழுதியுள்ள பணிவும்.. ஆகா.. ! அரசர் போற்றி! ஆண்டான் போற்றி!!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கல்லில் ஒரு நாடகம் அரங்கேறுகிறது – பிரதீப் சக்ரவர்த்தி

நண்பர்களே இன்று நண்பர் திரு பிரதீப் சக்ரவர்த்தி அவர்கள் நம்முடன் ஒரு அருமையான பதிவை பகிர்கிறார். சரித்திரம், முக்கியமாக கல்வெட்டுகளில் மிகுந்த ஆர்வம் செலுத்தும் இவரது கோயில் வாகனங்களை பற்றிய நூல் அறிமுகம் முன்னர் பார்த்தோம்.

அதை அடுத்து அவர் தஞ்சாவூர் பற்றிய ஒரு அற்புத நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார் Thanjavur A Cultural History. வரும் நாட்களில் இவரிடத்தில் இருந்து இன்னும் பலவற்றை எதிர்பார்க்கலாம். நமக்காக அவர் ஒரு விசேஷ பதிவை தருகிறார். இதோ

திருமயம் புகழ் பெற்ற யாத்திரை தலம் – மதுரை அருகில் இருக்கும் இந்தத் தலத்தை பற்றி நான் ஹிந்து பேப்பரில் விரிவாக முன்னர் எழுதி இருந்தேன். பலமுறை அந்தப் பக்கம் பயணிக்கும் போது சென்று வருவேன்.

விஜய் சிற்பங்கள் பற்றி இடும் பதிவுகளை வாசித்து விட்டு, நானும் ஒரு சிற்பி கல்லில் எப்படி பல காட்சிகளை கொண்ட நாடகத்தை இயற்றுகிறான் என்பதை, அவரைப்போலவே, இந்தப் பதிவில் விளக்க முயற்சிக்கிறேன். நாம் மூலவரை பார்ப்போம். பிரம்மாண்ட சிற்பம் பத்தடிக்கும் மேலே இருக்கும் – தாய் பாறையில் குடைந்து வடிக்கப்பட்ட இதன் காலம் சுமார் 7ஆம் நூற்றாண்டு என்றும் பெரும்பிடுகு முத்தரையர் என்ற முத்தரையர் தலைவருடைய அன்னை பெருந்தேவி என்பவர் உபயம் என்றும் தெரியவருகிறது. மேலும் வெளியில் கட்டுமானக்கோயிலின் காலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம்.

பெருமாள் ஆதிசேஷனின் மீது பள்ளிகொண்டிருக்கும் காட்சி. நாபியில் இருந்து பிரம்மா தோன்றுகிறார்.

நண்பர் அசோக் அவர்களின் அற்புத உதவியுடன் ( தூண்களை மாயமாக மறைத்துவிட்டார் – copyright image)

குப்தர் காலத்து சிற்பி போல இங்கேயும் சேஷனின் உடலை சாதாரணமாக சுருட்டி இருப்பது போல காட்சி அமைத்துள்ளார்கள் – மற்ற இடங்களில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கடுக்காக இருக்கும் ஆதிசேஷனின் உடலை போல அல்லாமல் காட்சி ஆரம்பித்து விட்டது.

அசுரர் மீது தனது விஷத்தை துப்பும் காட்சி – விஷம் அக்னி பிழம்புகளாய் சீறிச் செல்கிறது.

அவ்வளவு பலத்துடன் விஷத்தை கக்கிய பாம்பின் தலை மிகவும் தத்ரூபமாக கொத்திவிட்டு பின்னால் அசைவதை போல சிற்பி வடித்துள்ளது மிகவும் அருமை.

காட்சி நகரும் திசையை நமக்கு உணர்த்தும் வகையில் மேலே நித்யசூரிகள் பறந்து வருகின்றனர். எம்பெருமானின் திருமுகத்திற்கு மேலே சிற்பி – இயற்கையாகவே அமைந்த கல்லின் வளைவை தனது சிற்பத்தின் ஒரு அம்சமாக உபயோகித்து, மேலே பறந்து வருபவர்களுக்கும் கீழே நடக்கும் காட்சிகளுக்கும் ஒரு இடைவெளி நிறுவ முயற்சிக்கிறானோ? பறந்து வருவோரை குறிக்க அவர்களது கால்களின் அமைப்பை, அப்படி வடிக்கும் போதும் கவனமாக, கடவுளின் முகத்திற்கு முன் கால்கள் இல்லாத படி வடித்திருப்பது அருமை.

ஒரு பக்கம் கருடனும் சித்திரகுப்தனும் உள்ளனர். சிலர் இது குடைவரையை நிறுவிய அரசனின் சிலையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

அந்தப் பக்கம் பார்க்கும் போது இயற்கையாக வரும் கல்லின் வளைவை கொண்டு இரு அசுரர்களும் கொஞ்சம் தொலைவில் இருக்கின்றனர் என்று நமக்கு உணர்த்துகிறான் போல.

ஒரு பக்கம் சாயும் வண்ணம் அசுரர்களை செதுக்கி அவர்கள் சீக்கிரமே மாண்டு அழியப்போகிறார்கள் என்பதையும் உணர்த்துகிறான் அந்த சிற்பி.

இதே கதை பல்லவ சிற்பி வடித்த முறையும் முழு கதையையும் படிக்க

பிரம்மாவின் அருகில் மான் தலையுடன் இருப்பது யார்?

நன்றி படங்கள்: Flickr : lomaDI, Prof Swaminathan and http://senkottaisriram.blogspot.com/2008/04/thirumayam-near-pudukkoottai-tamil-nadu.html


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஒரு தனித்தன்மை வாய்ந்த நந்தி – மலையடிப்பட்டி சிவன் குடைவரை

புதுக்கோட்டை மாவட்டம், இயற்கை கொஞ்சம் எழில் என சொல்லிக்கொள்ள பச்சை ஆடை போர்த்திய வயல்கள் என்றெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை. எங்கும் ஒரே செந்நிறம், அதில் ஒரு பாதை. அதுவும் செந்நிறம் தான். மலையடிப்பட்டி நோக்கி காலை பத்து மணியளவில் சென்றுக்கொண்டிருந்தோம். திடீரென பாதை முடிந்தது. அருகில் சில வீடுகள். ஒரு புளிய மரம் – மரத்தடியில் ஒரு சிறு வால் பையன்கள் கூட்டம் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தது. அருகில் வயதாலும் நோயாலும் வளைந்து தனது கைத்தடியின் உதவியுடன் ஒரு பெரியவர். சற்று தொலைவில் ஒரு சிறு குன்று, அருகில் ஒரு தடாகம். ஆஹா, இவ்வளவு தொலைவு வெறும் செம்மண்ணையே பார்த்துக்கொண்டு வந்த நமக்கு இப்படி ஒரு ரம்மியமான இடமா ? மகேந்திரர் குடைவரைகள் இருக்கும் இடங்கள் போலவே உள்ளதே என்று மனதில் ஒரு எதிர்பார்ப்பு. ஆம், இங்கே இரண்டு குடைவரைகள் உள்ளன. ஈஸ்வரன் சிவனுக்கு ஒன்று பெருமாளுக்கு ஒன்று. அந்தப் பெரியவர் தான் இந்த இரு குடைவரைகளுக்கும் காவல். மாதத்தில் ஒரு நாள் மட்டுமே கூட்டம் வருமாம். மற்றபடி ஈ காக்கா இல்லை. நம்மை போல யாராவது தெரியாமல் வந்தால்தான் உண்டு. ஆனால் சலிக்காமல் திறந்து காட்டினார். அவரிடம் ‘நாங்கள் நிதானமாய் பார்ப்போம் . ஒரு இரண்டு மூன்று மணி எடுக்கும் !!. என்று சொல்லிவிட்டு ‘போய் சாப்பிட்டு விட்டு வாங்க’ என்று சொல்லிக் கொஞ்சம் பணம் தந்தோம்.அப்போது அவர் பழைய கால் சட்டை இருந்தால் கொடுங்கள் என்றார். ( பதிவை பார்த்துவிட்டு அங்கு செல்லும் நண்பர்கள் ஓரிரு பழைய சட்டைகள் எடுத்துசென்று கொடுங்கள்.புண்ணியமாகப் போகும்!!)

இந்த பதிவில் காலத்தால் முந்தைய – தந்தி வர்ம பல்லவ காலத்து சிவனின் முத்தரையர் குடைவரையை பார்ப்போம் ( அப்படிதான் இருக்க வேண்டும், ஏன் என்றால் அந்த காலத்தில் இந்த பகுதியை ஆண்ட அரசர்கள் முத்தரையர்கள்).

முதலில் உள்ளே இருக்கும் சிற்பாம்சம் – நந்தி.

அப்படி என்ன இந்த நந்தியின் சிறப்பு? நல்ல சிலை தான், எனினும் பல இடங்களில் இதுபோல கலையம்சம் பொருந்திய நந்திகளை நாம் பார்க்கிறோமே. இதன் சிறப்பு அதை செதுக்கிய சிற்பி அதனை ஆயிரம் ஆண்டுகள் அதே இடத்தில இருக்கும் படி செதுக்கியதுதான். என்ன, புரியவில்லையா.

மேலே படியுங்கள்.

முதலில் படத்தை கொஞ்சம் கணினியில் திருத்தி குடைவரை முகப்பு பின்னாளைய கட்டுமானங்களை விளக்கி பார்ப்போம்.

அடுத்து, இன்னும் அருகில் செல்வோம். வெறும் மண்டபம் தான் முதலில் காட்சி தருகிறது.

ஆனால் ,உள்ளே சென்று வலது புறம் திரும்பினால் சற்று நேரம் உள்ளே உள்ள இருளுக்கு நம் கண்கள் பழகும் வரை ஒன்றுமே தெரியவில்லை. இன்னும் சிறிது நேரம் கழிந்தவுடன் , ஆஹா என்ன அபாரம்.

ஈசனுக்கு எடுப்பித்த இந்த குடைவரையில் பார்க்க நிறைய உள்ளது. இடது புறம் கருவறை காவலர்கள் காவல் காக்க, அருமையான கருவறை, எதிரில் நமது நந்தி, ஒரு பக்கம் வீரபத்ரர் , விநாயகர் மறுபக்கம் இருக்க அழகிய சப்த மாத்ரிகா வடிவங்கள், இன்னொரு பக்கம் துர்க்கை, பெருமாள் என்று ….வரும் பதிவுகளில் பார்ப்போம்.

படத்தின் வலது புறத்தில் நமது நந்தி தெரிகிறதா? மீண்டும் கணினி கொண்டு தூண்களை விளக்கிவிடுவோம்.


இப்போது புரிகிறதா. நந்தி, நந்திமேடை – அனைத்தும் ஒரே கல் – அதுவும் தாய்பாறையில் செதுக்கியது. அந்த நாளில் இருந்த திறமை, ஒரு மலைப்பாறையை இப்படி குடைய, அதுவும் துளி கூட தவறுக்கே இடம் இல்லாத இடத்தில இப்படி ஒரு கடினமான சிலையை செதுக்க முயற்சிக்கும் தைரியம், அவன் திறமையில் அவனுக்கு இருக்கும் நம்பிக்கை – நம்மை பிரமிக்க வைக்கிறது.

இப்போது புரிகிறதா – இந்த நந்திக்கு ஏன் தனிச்சிறப்பு என்று


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

திருச்சி – கீழ்க் குடைவரை – “ஏன் சார், வேஸ்ட் பண்றீங்க. அங்கே பார்க்க ஒன்றும் இல்லை!!”.

ஐயப்பன் சீசன். கூட்டம் களை கட்டியது. நோ என்ட்ரி.. புதிர்களை தாண்டி மலைகோட்டை அடைவதற்குள் சூரியன் தனது அரைநாள் வேலையை முடித்து விட்டு மேலே நகர்ந்துக்கொண்டிருந்தான். முதல் படியிலேயே சண்டை – தேவஸ்தான அதிகாரியுடன் – கேமரா டிக்கெட் வாங்கியே ஆகவேண்டும் என்று அவர் ஒரே பிடியாய் நிற்க, நாங்கள் ஆசி குடைவரைகளை பார்க்க மட்டும் தான் போகிறோம் – அதற்க்கு சீட்டு தேவை இல்லை என்று வாதாடி தோற்றோம் ( எந்த ஆசி தளத்திற்குள் சென்று படம் எடுக்க கட்டணம் தர தேவை இல்லை. முக்காலி கொண்டு எடுக்க வேண்டும் என்றால் தான் பிரச்சினை ). வேண்டா வெறுப்பாக கட்டணத்தைக் கட்டி சீட்டை பெற்றுக்கொண்டு முதல் தளத்தை கடந்து இடது புறம் திரும்பினோம். உடனே அருகில் இருந்த உங்கள் நண்பன் – அவர்தான் நம்ப ஆட்டோ காரர் – ஒரு விதமாக பார்த்தார். அந்தப் பக்கம் உட்டு அடிக்க வந்தோம் என்று முதலில் நினைத்தாரோ என்னமோ. பின்னர், இது தப்பான வழி. அப்படி போ என்றார். சுற்றி பார்த்தோம் – அறிவு ஜீவிகள் – பேர் பலகையில் முழு பக்கம் வரைந்து வைத்துள்ளனர். அதுவும் பல்லவர் குடைவரை செல்லும் வழி என்று ( பெரும்பாலான அறிஞர்கள் இந்தக் குடைவரை பாண்டியர் குடைவரை என்று கருதுகின்றனர் ). எனினும் அவர் விட வில்லை. எங்கே சார் போகணும் என்றார். குடைவரைக்கு என்று சொன்னோம். ”ஏன் சார், வேஸ்ட் பண்றீங்க. அங்கே பார்க்க ஒன்றும் இல்லை. மேலே போங்க!” என்றார்.

அதை பார்க்கத்தான் வந்தோம் என்றவுடன்,எதோ புழு பூச்சியை சாப்பிட்டது போல ஒரு எக்ஸ்பிரஷன் காட்டி மீண்டும் பீடியை ஊத ஆரம்பித்தார். ஒரு நூறு அடி நடந்ததும் எங்களுக்கே ஒரு கலக்கம். இது சரியான வழியா என்று. நல்ல வேளை, வீடுகளின் நடுவில் ஒரு சின்ன குறுக்கு பாதை மலையை நோக்கி சென்றதை கண்டு அதனுள் விரைந்தோம். பத்து அடி சென்றவுடன்….எதிரே பிரம்மாண்டம்.

அப்படியே பெரிய மலையின் அடியில் எப்படித்தான் இடம் பார்த்து இப்படி குடைந்தார்களோ. பாறையும் அதன் அடியி உள்ள குடைவரையும் கண்ணைப் பறித்தன. அங்கே அலை மோதிய கூட்டம், ஆனால் இங்கே ஈ காக்கா இல்லை. சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்தனர் ( சிற்பத்தின் கால்கள் தான் ஸ்டம்ப்_. ஆசி நபர்கள் இருவர் இருந்தனர்

மலையை ஆழமாக்க குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை. வெளித் தூண்களே எப்படி உள்பக்கமாக இருக்கின்றன பாருங்கள்.

தூணைப் பார்த்தவுடனேயே சந்தேகங்கள் – இது பல்லவ தூண் மாதிரி இல்லையே. அருகே ஆசி பலகை – இது மாமல்லர் காலம் என்று அடித்துச் சொன்னது 640 to 670 AD.

நீள்சதுர வடிவில் இருக்கும் குடைவரையின் இரு பக்கங்களில் இரு அர்த்த மண்டபங்கள் வெட்டப்பட்டுள்ளன. உள்ளே கர்ப்பக்கிருஹம் – ஒன்று சிவனுக்கு,மற்றொன்று பெருமாளுக்கு. இரண்டு கருவறைகளுக்கும் கருவறை காவலர்கள், மற்றும் அர்த்த மண்டபத்துக்கும் இரு வாயிற் காவலர்கள் – என்று மொத்தம் எட்டு வாயிற் காப்போன் சிலைகள் உள்ளன !! ( ஒவ்வொன்றாக அடுத்த பதிவில் பார்ப்போம்)

பின் சுவரில் சிற்பி தனது முழு திறனையும் காட்டி – விநாயகர் ( மாமல்லர் காலத்தில் விநாயகர் சிற்பமா?) , நான்முகன், முருகன், சூரியன் மற்றும் துர்க்கை சிற்பங்கள் உள்ளன.

ஒவ்வொன்றாக வரும் பதிவுகளில் அவற்றை பார்ப்போம். ஆசி ஓவியர் சிற்பங்களை வரைந்துக்கொண்டிருந்தார். ( கரும்பு கடிக்க கூலி வேணுமா – நமக்கு )

ஏனோ அந்த ஆட்டோ காரர் சொன்ன “ஏன் சார், அங்கே வேஸ்ட் பண்றீங்க. அங்கே பார்க்க ஒன்றும் இல்லை ” என்ற வார்த்தைகள் இப்போதும் வலித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் அறியாமை தமிழகத்தில் இப்படியும் இருக்கலாகுமோ…


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

திருச்சிராப்பள்ளி – மலைக்கோட்டை குடைவரை – லலிதாங்குர பல்லவேஸ்வர கிருஹம்

மலைக்கோட்டை – இரண்டு குடைவரைகளில் முதல் குடைவரை

தொலைவில் இருந்தே பிரமிக்கவைக்கும் மலைக்கோட்டை , திருச்சிராப்பள்ளியின் நடுவில் கம்பீரமாக விஸ்வரூபம் எடுக்கும் மலை – இப்படி மொட்டை பாறைகள் கொண்ட மலைகளில் ஏதோ ஒரு வசீகரம் உள்ளது. சரி, அன்னபூர்ணா அவர்களின் புண்ணியம், இன்று வெகு நாட்களாய் போட விட்டுப் போன பதிவு , அவர் தூண்டுதலினால் வெளிவருகிறது. பல மாதங்களுக்கு முன்னரே பதிவாகி இருக்க வேண்டும், நானும் அரவிந்தும் சென்ற டிசம்பர் மாதத்தில் சென்ற போது கூட முயற்சி செய்தோம், என்னவோ எங்கள் பாக்கியம் – யாராவது ஒருவர் நடுவில் வந்து படம் எடுக்காமல் செய்துவிட்டார்கள் – இந்த படிகளைப் பார்த்தவுடன் மக்களுக்கு ஒரு தொய்வு – உடனே அமர்ந்துவிடுகின்றனர் – நல்ல செங்குத்தான மலையை பாதி வழி ஏறிய களைப்பு. எங்கள் கோபம் அவர்கள் மீது அல்ல, சில ஜோடிகள் – நாங்கள் ரசனையுடன் படம் எடுக்கிறோம் என்று தெரிந்தும், இல்லை, அவர்களது மயக்க நிலையில் தன்னிலை மறந்து லயித்து இருந்தனரோ என்னவோ – அடை மழையில் நனையும் எருமைகள் போல நகர மறுத்தனர். எவ்வளவோ முயற்சி செய்து கடைசியில் சில கோணங்களை அரை மனதுடன் விட்டு விட்டு கிளம்பிவிட்டோம். ( காதல் ஜோடிகள் மீது கோபம் இல்லை – எனினும் புராதான சின்னம், ஒரு ஆலயம், சுற்றிலும் இருப்போர் என்று அனைத்தையும் கடந்து அவர்கள் இருந்த சல்லாப கோலம் சற்று நெருடலாக இருந்தது – வேறு இடம் கிடைக்கவில்லையா என்று கேட்டுவிடலாம் என்று வாய் வரை வந்துவிட்டது)

பிறகு நண்பர், ஸ்ரீராம் உதவியுடன் ஏனைய படங்களையும் எடுக்க முடிந்தது. என்ன செய்வது, இந்த மேல் குடைவரைக்குக் கீழே இருக்கும் குடைவரை நிலைமை தேவலாம். அங்கே எவரும் செல்வதே இல்லை. இப்படி கண்ணில் பட்டு மரியாதை கெட்டு இருப்பதை விட அப்படி கண்ணிலும் நினைவிலும் இல்லாமல் இருப்பதே நல்லது. ( கீழ் குடைவரையை அடுத்த பதிவில் பார்ப்போம் )

இந்த பல்லவர் கால மல்டிப்ளெக்ஸ் , மகேந்திர பல்லவரின் உன்னத படைப்பு – லலிதாங்குர பல்லவேஸ்வர கிருஹம், பல்லவனின் குடைவரைகளில் மிகவும் தென் திசையில் உள்ள குடைவரை – உச்சி பிள்ளையார் கோயில் வளாகத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த ஆலயம் இது. பல வகைகளில் உன்னதமான படைப்பு. லலிதாங்குரன் என்பது மகேந்திரரின் ஒரு பெயர் – அழகும் வசீகரமும் சொட்டும் பெயர். இங்கே தான் அவர் தான் வேறு மதத்தை விட்டு சைவ – லிங்க வழிபாட்டு வகைக்கு திரும்பினேன் என்று தானே சொல்லும் கல்வெட்டு உள்ளது. இன்றைய காதல் புறாக்களுக்கு தெரியுமோ இல்லையோ, அவர் வெட்டி உள்ள வரிகளில் உள்ள அர்த்தம் – அதையும் அடுத்த பதிவில் பார்ப்போம். குடைவரைக்குள் செல்வோம்.

பல்லவர்கள் நமக்கென விட்டுசென்ற சிற்பங்களில் அவர்கள் அழகு சேர்த்த சோமாஸ்கந்தர் வடிவத்தை நாம் தொடர்ந்து பதிவுகளில் பார்த்து வருகிறோம், இன்னும் ஒன்று சிவ கங்காதர வடிவம். இந்த குடைவரையில் நாம் பார்க்கும் இந்த வடிவம் மிகவும் அழகானது மட்டும் அல்லாமல் மிகவும் தொன்மை வாய்ந்ததாகவும் இருக்கலாம்.

பல்லவன் இவ்வளவு தூரம் வந்து, அதுவும் சோழர் தேசத்திற்குள் வந்து, இந்த மலையில் தங்கி , குடைந்து (இங்கும் மற்ற மகேந்திரர் குடைவரைகள் போல் அருகில் சமணர் படுக்கை உள்ளது !!) – இந்த பதிவிற்கு திரு நாகசுவாமி அவர்கள் மற்றும் திரு சுவாமிநாதன் அவர்களின் இடுகைகளை கொண்டு விளக்க முயற்சிக்கிறேன். திரு சு்வாமிந்தன் அவர்கள் குடைவரை பற்றி சொல்லும் பொது ” இந்த மலை தாயுமானவர் கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில் , மற்ற ஆலயங்கள் , கடைகள் அனைத்தும் இல்லாத பொது எப்படி இருந்திருக்கும், அப்போது மகேந்திரர் இந்த இடத்தை சுமார் இருநூறு அடி உயரத்தில் தேர்ந்தெடுத்து , தனது சிற்பிகளை கொண்டு எப்படி செதுக்கினார் என்று யோசிக்கவேண்டும். இந்த குடைவரையிலும் பல புதிர்கள் உள்ளன “ என்கிறார்.

குடைவரை முகப்பு – நான்கு தூண்கள் மற்றும் இரு பக்கங்களிலும் இரு அரை தூண்கள் உள்ளன. மற்ற்படி பெரிய அலங்காரங்கள் மிகுதியாக முகப்பில் இல்லை. தூண்கள் மகேந்திர காலத்து பாணி என்பதை அவற்றின் தடிமனான தோற்றம், சதுரம் , கட்டு , சதுரம் – சரி, தூண்களை பற்றி இன்னும் விரிவாக படிக்கும் பக்குவம் நமக்கு வந்துவிட்டது – மேலே படியுங்கள்.

1. சதுரம் அல்லது நான்முகத்தூண் அல்லது பிரம்மகாந்தத்தூண்
2. கட்டு அல்லது எண்பட்டைத்தூண் அல்லது விஷ்ணுகாந்தத்தூண்
3. கட்டு அல்லது பதினாறு பட்டைத்தூண் அல்லது இந்திரகாந்தத்தூண்
4. வட்டம் அல்லது ருத்ரகாந்தத்தூண்

ஒரு தூண் மேற்சொன்ன ஏதோ ஒரே ஒரு வடிவத்தில்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒரே தூணில் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் கூட வரலாம். மேலே உள்ள தூண்கள் கீழே சதுரமாகவும், நடுவில் எண்பட்டையாகவும், மேலே மீண்டும் சதுரமாகவும் அமைந்திருப்பதால் அதை, சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பிலமைந்த முழுத்தூண் என முழுமையாக வரையறுக்கலாம். அப்படியானால் அந்த அரைத்தூண்கள்? அவை நான்முக அரைத்தூண்கள். இந்தத் தூண்களின் நீட்சிதான் பாதபந்தத் தாங்குதளத்தின் கண்டப் பகுதியில் காணப்படும் பாதங்களாகும்.

தூண்களுக்கு தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை போன்ற பல உறுப்புகள் இருக்கின்றன
( நன்றி வரலாறு. காம்)

தூண்களின் நாலு பக்கங்களிலும் தாமரை பதக்கங்கள் உள்ளன.

மகேந்திரர் பட்டப் பெயர்கள் பல்லவ க்ரந்தத்திலும் சில இடங்களில் தமிழிலும் தூண்களில் செதுக்கப்ப்டுள்ளது.

வெளி தூண்களை கடந்து உள்ளே படியேறி மண்டபத்திற்குள் செல்வோம். மண்டபத்தின் பின்னால் முன்னாள் இருப்பது போலவே நான்கு தூண்கள் உள்ளன. இடது புறம் கம்பீர கங்காதர வடிவம், வலது புறம் இருபுறமும் அழகிய வாயிற் காவலர்கள் கொண்ட தற்போது காலியாக உள்ள கருவறை மண்டபம் .

இந்த அற்புத கங்காதர வடிவத்தை அடுத்த பதிவில் மெதுவாக பார்ப்போம். எனக்கு மிகவும் பிடித்தமான சிற்பம், அழகினால் மட்டும் அல்ல – அதை நான் அறிந்த அன்று தான் நான் எனது சரித்திர / சிற்ப பயணத்தில் இரண்டு முக்கிய – அருமையான மனிதர்களை சந்தித்தேன் – திரு சுந்தர் பரத்வாஜ் மற்றும் திரு திவாகர் – திவாகர் அவர்களின் நூல் வெளியீடு – விசித்திர சித்தன் – சரித்திர புதினம் – மகேந்திரரின் ஆரம்ப கால கதை, நூலின் முகப்பில் அதே கங்காதர வடிவம்.

முதில் இரண்டு வாயிற் காவலர்களையும் பார்ப்போம். இருவரும் மிகவும் அழகு.

ஒரு பக்கமாக திரும்பி நிற்கும் பல்லவருக்கு உரித்தான பாணி, இரண்டு கரங்கள், ஒரு கால் சற்றே மடித்து, ஒரு கை ஒய்யாரமாக கதை அல்லது உருள் தடியை அலட்சியாமாக கொண்டு – நாம் முன்னர் மண்டகப்பட்டு குடவரையில் பார்த்ததைவிட சற்று மெலிந்து காட்சி அளிக்கின்றனர். மிகவும் தேய்ந்து போன சிற்பம் என்றாலும் அணி ஆபரணம் என்று – ஒரு தனி அழகுதான்.

கருவறை கதவு பூட்டப்பட்டு இருந்தது சற்று வேடிக்கை தான். இன்றைய நிலை அப்படி. புரியவில்லையா – அது வேறு கருவறை – உள்ளே ஒன்றும் இல்லை , பிற்கால பல்லவர் வேளைகளில் தான் சோமாஸ்கந்தர் வருகிறது, கருவறையில் பாண்டியர் குடைவரைகளில் தான் லிங்கம் ஒரே கல்லில் செதுக்கப் படும் – பல்லவர் காலத்தில் வேறு கல் லிங்கம் தான். அப்படி இருக்க எதற்கு கதவு – பூட்டு – எல்லாம் நமது குடி மகன்களில் தொல்லையை தாங்காமல் தான். என்ன ஒரு வெட்கக் கேடு !!

சரி , குடைவரையில் புதிர் இருக்கிறது என்று சொன்னேனே – புதிர் இல்லை, புதிர்கள் உள்ளன – முதல் புதிர் இதோ. அப்படி லிங்கத்தை கருவறையில் பொருத்த துவாரம் ஒன்று இருக்கும். இங்கே தரையின் நடுவில் அதே போல ஒரு துவாரம் உள்ளது – ஆனால் அதை அடுத்து வலது புறத்தில் இன்னும் ஒரு துவாரம் உள்ளது.

மூடி இருந்தால் நமக்கு உள்ளே என்ன இருக்கும் என்பதை பார்க்காமல் போவோம் – என்று நண்பர்கள் வலைக் கதவை நெம்பி பெயர்த்து எடுத்து உள்ளனர். குடி மகன் ஆயிற்றே – துவாரத்தை பார்த்தவுடம் குப்பை தொட்டி என்றி எண்ணி பாட்டிலை எரிந்து விட்டு சென்றுள்ளனர். இரு துவாரங்கள் படத்தின் கீழ் பாதியில் தெரியும்.

அடுத்த பதிவில் மற்ற அற்புதங்களை பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – நான்காம் பாகம்

திருகழுகுன்றம் அல்லது திருக்கழுக்குன்றம், சென்னைவாசிகளுக்கு சுவையான பழைய நினைவுகளை கண்டிப்பாக தரும். ஏனெனில் பள்ளிச் சுற்றுலா என்றாலே அங்குதான் கூட்டிச் செல்வார்கள். அவர்களை சொல்லிக் குற்றம் இல்லை – அந்த நாளில் கையில் இருந்தது மல்லை , மாதவரம் பால் பண்ணை, வேடந்தாங்கல் , கிண்டி பூங்கா. எல்லாம் ஒரே நாளில் சென்று வந்துவிடலாம் , கட்டணம் இல்லை, வார நாட்களில் ஈ காக்கா வராது -பிள்ளைகள் கூட்டத்தில் தொலைந்து போகாது.. கொஞ்சம் பெரிய வகுப்பு என்றால் செஞ்சிக் கோட்டை -எனினும் திருகழுகுன்றம் தனி இடம் பெறும், காரணம், சில வருடங்கள் வரை இங்கே வந்து காலை உணவு அருந்திவிட்டு சென்ற கழுகுகள் !! பக்ஷி தீர்த்தம் .

ஓட்டை பள்ளிப் பேருந்தில் காய்கறி கூடை போல அனைவரையும் அடைத்து, தலத்தில் இறக்கி விடுவார்கள். நல்ல பையன் என்றால் நண்பனுடன் கை கோர்த்து செல்லலாம். சேஷ்டை செய்பவன் என்றால் ஒரு பெண்ணோடு ( அப்போது அது ஒரு பெரும் தண்டனை ) – ஆனால் பாதகர்கள் – எப்படி தான் விவரம் தெரியும் முன்னரே இதை மாத்தி, தனி தனியாய் அமர்திவிட்டர்கள். சரி, அதை விடுவோம் – ஜோடி மாடுகளை போல படிகளை சிரித்துக்கொண்டே ஏறுவோம். அப்போது படிகள் இத்தனை செங்குத்தாக இருந்தாக நினைவில்லை – எல்லாம் சிறிது செழிப்பு / பருமன் செய்யும் வேலையோ??

இதனாலோ என்னவோ , பள்ளி முடிந்தவுடன் எவருமே அந்தப்பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை. மூவர் – அப்பர், சம்பந்தர் , சுந்தரர் பாடிய தலம் . மல்லையில் இருந்து பதினான்கு கிலோமீட்டர் தான். ஆனால் யாரும் போவதில்லை. கழுகுகள் வருகை வேறு நின்று விட்டது ( விமோசனம் பெற்று விட்டனர் போல – இன்னும் ஒரு யுகம் ஆகும் மீண்டும் அவை வர !)

இதனால் அர்விந்த், வா அங்கே போகலாம், என்றதும் சட்டென பணிகளை முடித்துக்கொண்டு காரை திருவான்மியூர் கோயில் குளத்தருகே நிறுத்துவிட்டு விட்டு அவருடன் கிழக்கு கடற் கரை சாலையில் விரைந்தோம். இரண்டு இடங்களில் வழி கேட்டோம் – அப்புறம் மலை கண்ணில் பட்டு தானே வழி காட்டியது.

எங்கள் அதிஷ்டமோ துரதிஷ்டமோ , வழக்கம் போல, தளத்தை பற்றி சரியாக படித்துவிட்டு செல்லவில்லை. பலரை போல் வந்த பல்லவ குடவரை கோயிலை ( ஒருகல் மண்டபம் ) தேடாமல், நேரே மலை மீது உள்ள ஆலயத்திற்கு விரைந்தோம். இந்த மலை மேல் என்பது ஒரு முக்கியமான வாக்கியம். மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதனை அடுத்த பதிவில் குடைவரையை பற்றி பேசும்போது மீண்டும் பார்ப்போம்.

திரு K. R. ஸ்ரீனிவாசன் அவர்களது பல்லவ குடைவரைகள் இந்த பதிவை எழுத மிகவும் உதவியது. ( சென்று வந்த பின்னர் படித்தேன் !! பின் புத்தி )

விடா முயற்சி – சரி சரி விட்டு விட்டு ( பத்து படிக்கு ஒருமுறை மூச்சு வாங்கி ) மேலே ஏறி பார்த்தல் – இந்தனை சிறிய கோயில். அதுவும் கட்டுமான கோயில் – சிற்பங்களும் அவ்வளவு இல்லை. ஏதோ விசேஷம் வேறு – ஒரு சின்ன கிராமமே மூலவர் முன்னர் இருந்தது. அஷ்டகோணமாக வளைந்து – வேதகிரீஸ்வரரை தரிசித்துவிட்டு வெளியே பிரகாரம் வந்தோம் , அங்கே ஒரு புதையல் … சுவர்களில் நடுவில் துவாரம். அதனுள் பல்லவ புடைப்பு சிற்பம். சோமஸ்கந்தர்

பல்லவ சிற்பம் என்றாலே ஒரு தனி பாணி – மிகவும் இயல்பான தோற்றம் , அதிலும் ஒரு கம்பீரம், சிற்பியின் கலைத்திறன் ஆகமங்கள் என்ற கட்டுப்பாடுகளுக்குள் அடைக்கும் முன்னர் பிறந்த படைப்பு.

உடனே படம் எடுத்து விட்டு – உமை வடிவம் எப்படி செதுக்கப்பட்டுள்ளது என்று எட்டி பார்த்தோம். ராஜசிம்ஹ்ன் பாணியிலா , அல்லது அவனுக்கு முன்னர் உள்ள பாணியிலா ?

அப்போது , தமிழ் நாட்டு வரலாற்றில் அழியா இடம் பிடிக்க வேண்டும் என , தமிழக கோயில்களை காக்க வந்த காவலன் என்று தானே பட்டம் சூடிக்கொண்டு திரியும் மடையன் ஒருவன் வந்தான். எங்களை தமிழ் கலாசாரம் தெரியாத மூடர்கள் என்று வேசி படங்கள் எடுக்கும் முட்டாள்கள் என்று கூட்டத்தை கூட்டினான். வேறு வேலையே இல்லாமால் திரியும் கூட்டம், எங்கே வம்பு என்று அலையும் கூட்டம், உடனே சபை கூடியது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம் – நாங்கள் விஷயம் தெரிந்தவர்கள், மூலவரை படம் எடுக்க மாட்டோம், இவை வழிபாட்டில் இருக்கும் சிற்பங்கள் அல்ல. கலை வளர்க்கவே எங்கள் முயற்சி என்று முறையிட்டோம். எனினும் அந்த மூடன், அவனுடன் கூடிய பஞ்சாயத்து – செவிடர்கள் கூட்டமாக மாறியது. புகை படம் எடுக்க கட்டண சீட்டு பெற்றுள்ளோம், படம் எடுக்காதே என்று அறிவிப்பு பலகை எங்கும் இல்லை என்று வாதாடினோம். இடையில் சென்று அடுத்து இருந்த ரிஷப வாஹனத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த சிவனை படம் பிடித்தேன். பல்லவ சிற்பம் – அபாரம்.

கூட்டம் களை கட்டியது. ஆங்காங்கே சரித்திர காவலர்கள் அவதாரம் எடுத்தாற்போல கூச்சல் போட்டனர். மிகவும் வருத்ததுடன் எஞ்சி இருந்த ஒரு சிற்பத்தை படம் எடுக்காமல் திரும்பினோம்.
( நண்பர்கள் உதவியுடன் விரைவில் அந்த படத்தை பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது )

நல்ல காலம். சோமஸ்கந்தர் படம் அருமையாக வந்துள்ளது.

உள்ளே இரு புறம் பிரம்மா , மற்றும் விஷ்ணு

சிவன் மற்றும் உமை. உமை அமர்ந்திருக்கும் பாணி – நீங்களே முடிவு செய்யுங்கள்.

குழந்தை குமரன் – தனது கிரீடத்துடன்.

கண்டிப்பாக ராஜசிம்ஹ்ன் காலத்து சோமஸ்கந்தர் தான். இந்த சிற்பத்தில் ஒரு தனித்தன்மை – சிம்ஹாசனம் அடியில் பாருங்கள். மற்ற ராஜசிம்ஹ்ன் காலத்து சோமஸ்கந்தர் வடிவங்களில் வருவது போல பன்னீர் சொம்பு போல இல்லாமல் இங்கே ஒரு வாய் அகல பாத்திரம் போல உள்ளது.

ஆலயம் பற்றி மேலும் விவரம். மூவர் பாடல்கள்.

http://www.shaivam.org/tamil/thirumurai/thiru01_103.htm
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru06_092.htm
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru07_081.htm

அவர்கள் பாடியது மேலே உள்ள ஆலயமா – கிழே உள்ள குடவறையா. அவர்கள் காலம் மகேந்திர பல்லவரின் காலம் என்றாலும் அவர்கள் அவனது குடைவரைகள் பற்றி ஒரு பாடல் கூட பாடவில்லை. மேலும் அப்பர் பாடலில்

மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்
காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

என்று பாடுகிறார். அதனால் மேலே உள்ள ஆலயத்தையே அவர் பாடினார் என்று நாம் அறியலாம். அப்போது லாஜிக் கொஞ்சம் இடிக்கிறதே. மகேந்திரர் காலத்து மூவர் பாடிய கோயிலில் அவனுக்கு மூன்று தலைமுறைக்கு அடுத்து வந்த ராஜசிம்ஹ்ன் பாணியில் சிற்பங்களோ என்ற கேள்வி எழுகிறது ? இப்படி இருக்குமோ – அப்போது அது ஒரு செங்கல் / சுதை கொண்டு கட்டப்பட்ட ஆலயமாக இருந்திருக்கலாம், பின்னர் ராஜசிம்ஹ்ன் காலத்திலோ பின்னரோ மூன்று பெரும் பாறைகளை நிறுத்தி இப்போது உள்ள கோயிலின் கருவறை நிறுவப் பட்டிருக்கலாம் – இதுவே அதனுள் இருக்கும் பிற்காலத்து சோமாஸ்கந்தர் வடிவத்தின் விளக்கம் என்றும் திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் தன் நூலில் குறிப்பிடுகிறார்

அடுத்து வரும் பதிவுகளில் குடவரை கோயிலையும் அதில் உள்ளே கல்வெட்டை கொண்டு இதே கருத்தை எப்படி ஊர்ஜிதம் செய்வது என்பதையும் விரைவில் பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment