சம்பா ( வியட்நாம்) சிற்பங்கள் – பாகம் 2 – இராவணன்


ஹோ சி மின்ஹ் அருங்காட்சியகத்தில் சம்பா சிற்பங்களிடம் மனதைப் பறிகொடுத்த
நாள் முதலே மிசோன் கோயில்களுக்கும் தனாங் சம்பா சிற்பங்கள் அருகாட்சியகத்துக்கும் போக வேண்டும் என்ற ஆவல் மனதை ஆட்கொண்டு விட்டது. அதிர்ஷ்டவசமாக சென்ற வாரம் அந்த நெடுநாள் ஆசையும் நிறைவேறியது. மறக்க முடியாத இரண்டு நாட்கள்…

உதயகாலையில் ஆதவனின் கிரணங்களில் மிசோன் காண முடிவு செய்து விடியற் காலை நாலரை மணிக்கே அலாரம் வைத்து புறப்பட்டேன். தங்கியது தானங் அருகே ஹோய் ஆன் என்ற அழகிய இடத்தில – அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரம் பயணம் – கோடை காலம் என்பதால் அதற்குள் நல்ல வெய்யிலே வந்து விட்டது. எனினும் ஆள் நடமாட்டமே இல்லை – அழகிய புல் தரை கொண்ட சைட் – மலை அடிவாரத்திலேயே காரை நிறுத்த வேண்டும். கொஞ்சம் மலை ஏறி இறங்கினால் ……

இந்த செங்கல் கோயில்களை பற்றிய பதிவிற்கு இன்னும் கொஞ்ச காலம் நீங்கள் காக்க வேண்டும். இன்னும் நிறைய வேலை பாக்கி உள்ளது – படிக்க பல விஷயங்கள் உள்ளன. எனினும் என் கண்ணிற்கு மிகவும் பிடாத சிற்பம் ஒன்றை இன்றைக்கு உங்களுக்கு படைக்கிறேன்.

அங்குள்ள கோயில்களில் உள்ளேயே ஒரு தற்காலிக அருங்காட்சி போல வைத்துள்ளனர் – வெளியில் பெரிதவலில் ஒரு அருங்காட்சிகம் உருவாகிக்கொண்டிருக்கிறது. எனினும் இன்றைக்கு நாம் காணும் சிற்பம் தரையில் ஒரு பெயர் பலகை கூட இல்லாமல் இருக்கிறது. எத்தனை பேருக்கு இந்த அருமை தெரியுமோ?

ஆம் இது ஒரு அற்புத புடைப்புச் சிற்பம். ராவண அனுக்ரஹ மூர்த்தி. பத்தாம் நூற்றாண்டு என நான் கணிக்கிறேன். இதனைப் பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஒரே ஒரு குறிப்பு கிடைத்தது. ஆனால் அருமையான குறிப்பு.

Champa and the Archaeology of Mỹ Sơn (Vietnam) என்ற நூலில் இந்த வடிவம் கண்டெடுக்கப்பட்ட பொது எடுத்த படம்.

நூலில் உள்ள ஆங்கில குறிப்பு : Tympanum depicting Ravana shaking Mt. Kailash. Recovered at My Son. Present location unknown ( photograph Musee Guimet Archive, undated)

நண்பர் ஓவியர் திரு முரளிதரன் உதவியுடன் இதனை மேலும் ரசிக்க ஒரு முயற்சி. இன்றைய நிலையில் சிற்பமாக வடிவமைக்கப்பட்ட இறைவனின் உடல் பாதிக்கு மேல் சிதைந்து விட்டது.

இந்த வடிவத்தில் பிள்ளையார் வருவது கவனிக்க வேண்டிய ஒன்று. அருமையான நந்தி. கம்போடியா சிற்பம் முன்னர் நாம் பார்த்த போதும் அங்கேயும் பிள்ளையார் இருந்தார்.

இந்த சம்பா சிற்பத்தில் ஒரு விமானம் முழுமையாக இருப்பது வினோதமான ஒரு அம்சம். அதற்கு அடியில் ஒரு பெரிய யானை உள்ளது. மேலே காட்டு மிருகங்கள் உள்ளன ( ஒன்று குகையில் இருப்பது போலவும் உள்ளது )

இராவணனின் வலிமையை மிகவும் அருமையாக விவரிக்கப்பட்டுள்ளது. ஏதோ பறவை ஒன்று இறக்கையை விரிப்பது போல விரியும் கைகள் உள்ளன. காலை மாற்றி மாற்றி கயிலையை தூக்க முயற்சிக்கும் காட்சியை காட்ட அவனுக்கு மூன்று கால்கள் போல வடித்தாலும் – அவை இரு விதமாக அவன் திரும்பத் திரும்ப முயற்சிப்பதாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சியே !

முகம் உள்புறம் திரும்பி இருக்கும் வண்ணம் வடிப்பது மிகவும் கடினம். இதை நாம் எல்லோரா காட்சியுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.

ஆனால் சம்பா சிற்பியின் முழு திறமையை காண இராவணின் பத்து தலைகளை காட்ட அவன் உபயோகித்த பாணி தான் இந்த சிற்பத்தின் உன்னதம்.

இவ்வாறு அதுவும் புடைப்புச் சிற்பத்தில் வடிப்பது மிகவும் கடினம் – பத்து தலை சிற்பத்தில் கட்டுவது மிகும் கடினம். அதனை புகழ் பெற்ற மல்லை ராஜசிம்ஹா பல்லவனின் சிற்பிகளே ஓலக்கநெஸ்வர ஆலயத்தில் சரியாக செய்யவில்லை என்று தான் நான் சொல்வேன்.

சம்பா சிற்பிக்கு தலை வணங்குகிறேன். இந்த பதிவை முடிக்கும் தருணத்தில் நண்பர் முரளி ஓவியத்தையும் முடித்து விட்டார் ….கலை என்றும் அழிவதில்லை….


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சம்பா ( வியட்நாம்) சிற்பங்கள் – பாகம் 1

சம்பா அல்லது சாம் என்றால் நம்முள் பலருக்கு தெரியாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. இந்நாளைய வியட்நாமில் ஏழாம் நூற்றாண்டில் ஒரு அற்புத நாகரீகம் தழைத்தது. இவர்கள் வியத்நாமின் நடுப்பகுதியில் தற்போது தனாங் என்று விளங்கும் நகரின் அருகில் ஆரம்பித்து முதலில் பெரும்பாலும் சைவ சமயத்தை பின்பற்றினர். இந்திரபுரம் , அமராவதி , பாண்டுரங்க , விஜய என்ற நகரங்கள் அங்கே இருந்தன.

சாம் ஹிந்து கலைச்சின்னங்கள் மிகவும் அரியவகை கலை பொக்கிஷங்கள். பெரும்பாலும் வியட்நாமின் வெளியில் இவற்றை பார்க்க இயலாது. அங்கே கூட பெரும்பாலான சிற்பங்கள் மற்றும் ஆலயங்கள் அங்கே நடந்த போர்களில் மிகவும் சிதைந்து விட்டன. தற்போது தனாங் மற்றும் சைகோன் அருங்காட்சியங்கங்களில் உள்ள சிற்பங்கள் மற்றும் தனாங் அருகே உள்ள சில செங்கல் கட்டுமான கோயில்களே எஞ்சியவை. அங்கே பல லிங்க ரூபங்கள், முகலிங்கங்கள், கருடன், சயன பெருமாள் உருவங்கள் மற்றும் விநாயகர் உருவங்கள் உள்ளன.

இன்று நாம் பார்க்கவிருக்கும் சிற்பம் தொன்மையான சாம் விநாயகர் உருவம் – 8th C CE.

சாம் கலை அட்டவணை இவ்வாறாக பிரிக்கப்படுகிறது. ( அவை கண்டெடுக்கப்பட்ட இடங்களின் பெயர்களை ஒட்டி )

மை சொன் E1 (7th – 8th நூற்றாண்டு CE)
டாங் டுஒங் (9th – 10th நூற்றாண்டு CE)
மை சொன் A1 (10th நூற்றாண்டு CE)
க்ஹுஒங் மை (10th நூற்றாண்டு CE முதல் பாகம் )
டிரா கியு ( 10th நூற்றாண்டு CE இரண்டாம் பாகம் )
சான் லோ ( 10th நூற்றாண்டு இறுதி முதல் 11th நூற்றாண்டு CE நடு பாதி )
தாப் மாம் (11th முதல் 14th நூற்றாண்டு CE)

நாம் பார்க்கும் விநாயகர் சிலை ஒருவகை மணற் கற்பாறையில் ( sandstone) செதுக்கப்பட்டுள்ளது. மிகவும் தொன்மையான இந்த வடிவத்திலும் விநாயகர் வழிபாட்டின் கோட்பாடுகள் கடைபிடிப்பது வியக்க வைக்கிறது. மிகவும் சிதைந்த நிலையில் இருக்கும் இந்த சிலையில் ஒரே ஒரு கை மட்டுமே எஞ்சி இருந்தாலும் அது பிடிதிருக்க்ம் வஸ்து நம்மை திகைக்க வைக்கிறது.

அப்படி என்ன அவர் கையில் ? ஆமாம், ஒரு உரித்த சோழ கதிர் ஒன்றை கையில் பிடித்துள்ளார். அதன் வெளித் தோல் உரித்து இருக்கும் படி காட்சி இருப்பது மிக அருமை.

தொழில் ஒரு நாகம் பூணூலாக – நாக யக்நோபவீதமாக இருக்கிறது.

கையில் அணிகலன்கள் மற்றும் தலையில் கிரீடம் தெரிகிறது. அவரது கால் விரல்கள் மற்றும் இடுப்பில் வெட்டி மிக அழகு. கண்களை தனியாக பொருத்துவார்கள் போல உள்ளது. ஒருவேளை விலை உயர்ந்த மாணிக்க கற்களை வைப்பார்களோ?

நண்பர் ஓவியர் திரு ஸ்ரீநிவாஸ் க்ரோமா அகாடமி , உதவியுடன் இந்த சிலையின் முழு வடிவத்தையும் காண ஒரு முயற்சி.


இந்த சாம் சிற்பம் அதே சம காலத்து தெனிந்திய விநாயகர் சிலைகளில் இருந்து மிகவும் வேறுபடுகிறது.

இதை பற்றி இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். ஆர்வம் இருப்பவர்களுக்கு ஒரு தகவல். தென்னாட்டில் மிக தொன்மையான விநாயகர் வடிவங்களில் இந்த வீராபுரம் (குர்நூல் – ஆந்திரா ) களிமண் சிலையும் ஒன்று.
( நன்றி – Ganesh: studies of an Asian god By Robert L. Brown) – காலம் சுமார் 2nd C BCE !!

அடுத்து நாம் பார்க்க இருப்பது ஒரு அற்புத சிற்பம்

படங்கள் : திரு வசந்தா பெர்னாண்டோ
Vietnam History Museum Address:
Nguyen Binh Khiem Street, District 1, Ho Chi Minh City.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment