வலைப்பூக்களில் பதிவுகளை எழுதும் பலரும் ( சினிமா , அரசியல் உட்பட ) பல மணிநேரம் செலவிட்டு தங்கள் கருத்துகளை தங்கள் வாசகர்கள் விரும்பும் ( விரும்புவார்கள் என்ற நம்பிக்கை !!!) வண்ணம் படைத்து விட்டு பின்னூட்டத்திற்கு காத்துக் கிடக்கும் காலம் இது.. வலைப்பூ எழுதுவதே நீ இந்திரன் சந்திரன் , ஆஹா ஓஹோ என்று வரும் ( வெறும் ) பின்னூட்டங்களை எதிர்பார்த்து மட்டுமே இல்லை என்றாலும், கண்டிப்பாக இன்னும் பல நல்ல படைப்புகளை ஆர்வத்துடன் அவர்கள் எழுத அவை தூண்டும். ஆனால் நம்மை போல சிற்பம், கலை, அழிந்த ஓவியம் என்று எழுதும் நமக்கு பெரும்பாலும் தீவிர ரசிகர்கள் சிலரும் நாமே முதுகில் தட்டிக்கொண்டு ஓடுவது தான் கதி. ஆனால் ஒரு பதிவுக்கு நல்ல விளைவு நேர்கையில் வரும் மன நிறைவு ஒரு நெகிழ்வு தான். அப்படி ஒரு காரியம் நடைபெற்றுள்ளது. அதுவும் நமது அழியக்கூடாத குலதனங்கள் சீரழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது என்று மனம் சோர்வு அடையும் பொது , அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் நம் குரலுக்கு செவி சாய்த்து நடத்திய காரியம் தான் அது.
முதல் நன்றி இந்த பதிவை படித்து விட்டு வாயிற்காப்போனை சூரையாடிய சோழன்., அங்கே சென்றபோது அங்கு நடந்த தப்பை உடனே படம் பிடித்து அனுப்பி வைத்த நண்பருக்கு . என்ன கொடுமை இது ?, அடுத்த நன்றி பதிவை படித்துவிட்டு அதை தனக்குத் தெரிந்த சம்பந்தப்பட்ட அதிகாரியின் பார்வைக்கு அனுப்பிய நண்பருக்கு. நமது முக்கியமான நன்றி – ஒரு வலைபூ குறிப்பை அலட்சியாமாக கருதாமல் விரைந்து செயல் பட்டு குறை தீர்த்த அந்த அதிகாரிக்கு நன்றி! நன்றி!
இதோ புத்துயிர் பெற்று நிற்கும் வாயிற் காப்போன், மற்றும் கீழே உள்ள கல்வெட்டு.
முடிவாக நன்றி – செயல் வீரர் பணி செவ்வனே முடிந்துள்ளது என்று படம் பிடித்து அனுப்பி உதவிய நண்பருக்கு.