பேரூர் தொடர் – ஒரு தவத்துடன் துவக்கம்

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் – பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் சென்ற பொது அங்கு இருக்கும் சிற்பங்களை கண்டு நான் அசந்து போனேன்! கண்முன்னே இருப்பது என்ன என்று திணறி நின்றேன். சிற்பக் கலையில் ஆர்வம் பெருக, எனது தேடல் பேரூர் சிற்பங்களின் மேல் இருந்த மதிப்பை பன்மடங்கு பெருக்கியது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவற்றை படம் பிடிக்க செய்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. அவற்றை படம் எடுக்க அனுமதி இல்லை. நாளேட்டில் வந்த சிறு சிறு படங்களையே பதிவு செய்ய முடிந்தது. எனினும், ஒவ்வொரு தோல்வியும், மீண்டும் அடுத்த முறை அங்கு சென்று அதிகாரிகளிடம் முறையிடும் வேகத்தை கூட்டியது. இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன.

2008 ஆம் ஆண்டு, சிங்கையில் அன்னலக்ஷ்மி நிறுவனம் ஒரு விழா எடுத்தது. வேண்ட வெறுப்பாக மனைவி மகனுடன் ஒரு சனிக்கிழமை அங்கு சென்றேன். எங்கே எப்படி வெளியே நழுவலாம் என்று எத்தனிக்கும் போது, ஒரு கோடியில் – தொலைவில் – மிகவும் அழகான விநாயகர் ஓவியங்கள் தென்பட்டன. இது போல

http://www.hindu.com/mp/2007/06/09/images/2007060951460301.jpg

என்னையும் அறியாமல் அருகே சென்றேன். அருமையான ஓவியங்கள், மிக நுண்ணிய வேலைபாடு, படங்களின் அடியில் ஒரு கையெழுத்து – பத்மவாசன். ஆஹா , என் அதிர்ஷ்டம் என்று நினைக்கையில், அருகில் ஒரு சிறு அறிவிப்பு பலகை தென்பட்டது. அதில் ஓவியர் அங்கு இருப்பதாகவும், உடனே நம் முகங்களை வரைந்து தருவார் என்றும் அறிவித்தது. சுற்றி பார்த்தேன், அடுத்த கடையில் ஓவியர் எங்கே என்று கேட்க, அதோ என்று கையை காட்டினார். மிகவும் எளிமையான குர்தா அணிந்து சாந்தமாக சிரித்த முகத்துடன் – திரு. பத்மவாசன் அங்கே நின்று நிகழ்ச்சிகளை ரசித்துக் கொண்டிருந்தார்.

அருகில் சென்று, என்னை நானே அறிமுகம் செய்துக்கொண்டேன். பொன்னியின் செல்வன், கல்கி, ஓவியர் சிகரம் சில்பி என்று நடை களைகட்டியது. சில்பியின் சிஷ்யன் என்ற முறையில் அவரைப் பற்றிய பல அரிய தகவல்களை கூறினார். நடராஜர் சிலை உருவத்தை வரையும் போது, காகிதம் குறைவாக இருக்க, இன்னொரு காகிதத்தை எடுத்து ஒட்டி தொடர்ந்தார் எனவும். இன்னொரு காகிதத்தில் அதே நடேசனின் பின் வடிவத்தை வரைந்தாராம் சில்பி. இரு காகிதங்களும் இதனால் ஒரே அளவில் இல்லாமல் போயின. பல வருடங்களுக்கு பின், திரு. பத்மவாசன் அவர்கள் ஒரு புத்தகத்திற்காக அவரது கணினியில் ஒரே அளவாக பெரிது படுத்தி, இரு ஓவியங்களையும் ஒன்றின் மேல் மற்றொன்றை வைத்து பார்த்தால் கணக்கட்சிதமாக பொருந்தின என்று அவர் அந்த அற்புத ஓவியரின் சிறப்பை விளக்கினார்.

பிரியும் போது தனது முகவரியையும் தொலைப்பேசி என்னையும் ஒரு சிறு காகிதத்தில் பென்சிலில் எழுதிக் கொடுத்தார். ( இன்றும் வைத்துள்ளேன் !!)

டிசம்பர் 2009. மீண்டும் பேரூர் நோக்கிப் படை எடுத்தோம். எப்படியாவது படம் எடுக்க அனுமதி பெற வேண்டும் என்ற வெறியோடு – தெரிந்த நண்பர்கள் பலரிடம் உதவி கேட்டேன். நண்பர்கள் பலர் முயன்றும், ஒன்றும் நடக்கவில்லை. எல்லோரும் ஆலயத்தின் அறநிலைத்துறை அதிகாரி மனது வைத்தால் தான் ஒரே வழி என்று சொன்னார்கள். எவ்வளவோ பண்ணிட்டோம், இதையும் பண்ணிவிடுவோம் என்று அவரது அலுவலகம் முன் சென்று நின்றோம். ஒரு ஒரு மணி நேரம் காத்திருந்த பின் உள்ளே அழைத்துச் சென்றார்கள். சிறு வயது அதிகாரி, எதிர்பார்த்ததை விட டிப் டாப்பாக உடை அணிந்து மலர்ந்த முகத்துடன் வரவேற்றார். சின்ன அலுவலகம், எனினும் நான்கு கணினிகள் சுற்றிலும், கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. முதலில் மறுத்தார், ஆலய பாம்ப்லெட் கொடுத்தார், அதில் இருக்கும் படங்களை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். எனினும் நான் ஏற்கவில்லை, எனது மடிக் கணினியை திறந்து, செய்து வரும் பணிகளையும், பட சேகரங்களையும் விளக்கினேன். ஒரு மணி நேரம் போனது, கல்லும் கரையும், என்பது போல அதிகாரியும் எங்கள் பணியின் பொருளை உணர்ந்து அனுமதி தந்தார். கட கட என்று வேளையில் இறங்கினோம். அப்போது மின்சாரம் போனது…எனினும் அடுத்த நாளும் சென்று படம் எடுத்து முடித்தோம். எல்லாவற்றையும் எடுத்து விட்டோம் என்ற மிதப்போடும் வெகு நாள் இலக்கு நிறைவேறிய மன நிறைவுடன் திரும்பினோம்.

அடுத்த வாரம், சென்னையில், திரு. பத்மவாசன் அவர்களை அவர் இல்லத்தில் சந்தித்தேன். படங்களை எல்லாம் நிதானமாக பார்த்தார். கண்களில் சிறு பிள்ளை கடையில் கமர்கட் பாட்டிலை பார்ப்பது போல, அனைத்தையும் வரைந்து விட வேண்டும் என்று நினைத்தார் போல.பேரூர் படங்களை பார்த்தவுடன் – விடு விடு என எழுந்து உள்ளே சென்றார் – சிறிது நேரத்தில் பல ஓவியங்களை கொண்டு வந்தார். தான் பேரூர் சென்ற போது வரைந்த ஓவியங்கள் என்றும் படம் எடுத்து போடுங்கள் என்றும் சொன்னார். கரும்பு கடிக்க கூலியா. முதலில் கண்ணில் பட்டது மூலவர் – வண்ணம் தீட்டிய ஓவியம்.

அசந்து போனேன். இப்படி அந்த தாமர வண்ணம் அதன் பொலிவு – எப்படித்தான் கொண்டு வந்தாரோ?

அடுத்து சில தூண் சிற்பங்களின் ஓவியங்களை படம் பிடிக்கும் பொது, இது ஒரு சிறப்பான சிற்பம் என்றார். இதை நான் பேரூரில் பார்த்த பொழுது ஒன்னும் பெரிதாக இல்லை என்று படம் கூட எடுக்க வில்லையே என்றவுடன், அதன் சிறப்பை விளக்கினர். தலையில் குட்டிக்கொண்டு திரும்ப படம் எடுக்க வேண்டுமே என்று திண்டாடிய பொழுத, நண்பர் பிரவீன் அவர்கள் உதவினார். நேற்று இதற்காகவே பேரூர் சென்று அதிகாரியை பார்த்து, தொலைபேசியில் அழைத்து சிலை இருக்கும் இடம் கேட்டு, படம் எடுத்து அனுப்பினார்.



அப்படி இந்த தூண் சிற்பத்தில் என்ன விசேஷம். ஏதோ முனிவர் தவம் செய்வது போலத் தானே உள்ளது

தொடரும். ….


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

திருவலஞ்சுழி – ஓவியர் சில்பி விட்டுச்சென்ற ஓவியத்தின் துணையுடன் ஒரு தேடல்

அழியா திறன் அழகுக்கு உண்டா? காலம் மாட மாளிகைகளையும், உலக அழகிகளையும் விட்டு வைப்பதில்லை. எனினும் ஒரு சிலர் மட்டும் காலத்தையும் வென்று அழியாப் புகழ் பெறுகின்றனர். சிற்பம், ஓவியம் ஆகியவற்றிலும் இது போல சில உண்டு. இப்படி அழியாப் புகழ் பெறக்கூடிய ஓவியத்தை படைக்கும் திறன் படைத்த ஓவியர் ஒருவர் தனது முழு கவனத்தையும் தமிழக கோயில் சிற்பங்களை வரைவதில் செலுத்தினால் – அதுவும் அவர் ஓவியர் சில்பி போன்ற திறமை படைத்தவர் என்றால் – அது நமக்கு ஒரு வரப் பிரசாதம்

ஓவியர் சில்பி அவர்களின் படைப்புகளில் ஒரு உயிரோட்டம் இருக்கும். அவர் ஓவியம் வரைய தேர்ந்தெடுக்கும் கோணங்கள் மிகவும் கடினமான கோணங்களாக இருக்கும். ஆனால் அவர் அவற்றை பார்த்து அசராமல் ஒவ்வொரு சிறு அம்சத்தையும் கூட விடாமல் வரையும் அபார திறன் படைத்தவர். அவரது இந்த திறமைக்கு இன்று ஒரு அத்தாட்சி. ஒரு அற்புத கோட்டோவியம் – வரலாற்றில் மிகவும் முக்கியமான பல இரகசியங்களை இன்றும் தன்னுள் வைத்திருக்கும் கோயில் திருவலஞ்சுழி. நண்பர் / வழிகாட்டி என்று பல கோணங்களில் என்னை தூக்கி நிறுத்தும் தூண் – திரு சுந்தர் பரத்வாஜ் அவர்கள் ஒரு நிறை குடம் – ஆலயங்கள் பராமரிப்பு, சரித்திர ஆய்வு என்று பல காரியங்களை ஓசை இல்லாமல் செய்து கொண்டிருக்கும் பெரியவர், இந்தப் பதிவு அவருக்கு சமர்ப்பணம். இது அவருக்கு மிகவும் பிடித்த கோயில்.

இதோ சில்பி அவர்களின் ஓவியம். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் தீட்டியது. அப்போது கோயில் மிகவும் சிதைந்த நிலையில் இருந்துள்ளது. சிற்பங்கள் அனைத்தும் வெட்ட வெளியில் இருப்பதை இந்த ஓவியத்தின் மூலம் நாம் காணலாம்.

இங்கிருந்த சிற்பங்களில் பல தற்போது தஞ்சையில் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ளன. ( விநாயகர் தவிர – அவர் மட்டும் எப்படியோ தப்பித்து அங்கேயே தங்கிவிட்டார் )

ஆலயம் தற்போது செப்பனிடப்பட்டு தனது சிற்பங்களை பெற தயாராக உள்ளது. திரு சுந்தர் பரத்வாஜ் கொடுத்துதவிய புகைப்படங்களோடு நம்மிடம் உள்ள புகைப்படங்களையும் கொண்டு, ஓவியத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து அடையாளம் கண்டு பிடிக்க முடிகிறதா என்று பார்ப்போம். வாசகர்கள் உதவினால் இதை ஒரு வேண்டுகோளாக அதிகாரிகளிடம் எடுத்துச்சென்று இந்த கலைப் பொக்கிஷங்களை அவற்றிற்கு உரிய இடங்களில் சேர்க்க நாம் முயற்சி செய்யலாம். முக்கியமாக இந்தப் பதிவு அமரர் ஓவியர் சில்பி அவர்களின் கலைக்கு சமர்ப்பணம்.


இந்தப் பதிவில் என்னைப் போலவே நீங்களும் சிற்பங்களை ஒப்பிட்டு நோக்கும் முயற்சியில் இன்பம் அடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு வளைவு, உடைந்த பாகம் என்று தேடும் போது அந்த அற்புத ஓவியரின் திறன் பிரமிக்க வைக்கிறது. இந்த சிற்பங்களை விவரிக்க இன்னும் ஒரு பதிவு தேவை, எனினும் உங்களுக்கு ஒரு போட்டி – சிற்பங்கள் எவை எவை என்று அடையாளம் கண்டு சொல்லுங்கள் பார்ப்போம். இந்த வரிசையில்.

இதுவரை நாம் கண்டுபிடித்த சிற்பங்கள்

ஏன், ஓவியத்தில் இருக்கும் அணைத்து சிற்பங்களையுமே அடையாளம் கண்டு பிடிக்க முயற்சி செய்யலாமே.

1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பாதி பீமனை நீ சாப்பிடலாம் ..

இன்று நாம் மூன்று சிற்பங்கள் பார்க்கப் போகிறோம். இரண்டு தாராசுரத்தில் இருந்து நண்பர் திரு அர்விந்த் வெங்கடராமன் அவர்கள் உபயம் ( தேடித்தந்த குவைத் சதீஷுக்கு நன்றி ) , மற்றும் ஒன்று கிருஷ்ணபுரம் நெல்லை – நண்பர் ஓவியர் திரு A. P ஸ்ரீதர் அவர்கள் கொடுத்து உதவிய அமரர் ஓவியர் சிற்பி அவர்களின் படைப்பும் – எல்லாம் ஒரே கதையை ஒட்டி

அப்படி என்ன கதை – மகாபாரத கதை, ஆனால் ஒரு கிளை கதை ( பல பேர் பல மாதிரி இந்த கதையை கூறுகின்றனர் – அதனால் சிற்பத்தை விளக்க எவ்வளவு தேவையோ அதை மட்டும் இங்கே இடுகிறேன் )

ஒரு சமயம் யுதிஷ்டிரருக்குப் புருஷமிருகத்தின் உதவி தேவைப்பட்டது. ஒரு முக்கியமான யாகத்தை முடிக்க ( அதனிடத்தில் பால் வேண்டுமாம் – அது எப்படி , சரி அதை விடுங்க)

பாதி மனுஷராகவும், பாதி மிருகமாகவும் காட்சி அளிக்கும் இவரிடமிருந்து உதவி (பாலைப்) பெற்று வரவேண்டும். சிறந்த சிவபக்தர் இந்த புருஷாமிருகம்.

மாயக் கண்ணனின் அறிவுரையின் பெயரில் யுதிஷ்டிரர் பீமனை இந்த வேலையை செய்ய நியமனம் செய்கிறார்.
பீமனும் செல்கின்றான். கண்ணன் அவனிடத்தில் 12 கற்கள் ( சில குறிப்புகளில் ருத்ராக்ஷம் அல்லது சிவலிங்கங்களைக் )கொடுக்கின்றார். பீமன் திகைக்கின்றான். இவை எதுக்கு எனக் கேட்க, உனக்குக் காட்டில் என்னுடைய உதவி கிடைக்காது. இவற்றின் உதவியோடு நீ உன் வேலையை முடித்துக் கொண்டு வரவேண்டும். எப்போது உதவி தேவைப் படுகின்றதோ அப்போது ஒரு கல்லை கீழே போடு எனச் சொல்லி அனுப்புகின்றார். பீமனும் காட்டிற்குச் செல்லுகின்றான். காட்டின் உள்ளே புருஷாமிருகம் இருக்கும் இடத்திற்கு சென்று விடுகின்றான்.

அங்கே ஒரு வாக்கு வாதம் அல்லது ஒரு போட்டி நடைபெறுகிறது . சரி, தன் எல்லையை விட்டு ( காட்டின் எல்லை ) பீமன் வெளி வந்தால் அவனுக்கு வெற்றி, நடுவில் பிடிபட்டால் அவன் புருஷாமிருகத்துக்கு இறை.

பீமன் முழு பலத்தை கொண்டு ஓடியும் அவனால் வெகு தூரம் செல்ல முடியவில்லை – அதற்குள் மிருகம் அருகில் வந்துவிட்டது. உடனே கண்ணன் கொடுத்த கல்லை கீழே போடுகிறான். அது ஒரு சிவலிங்கமாக மாறுகிறது ( சிவன் கோயிலாக மாறியது என்று சிலர் )

புருஷாமிருகமும் ஆச்சரியம் அடைந்து அந்தக் கோயிலில் ஈசனை வழிபடச் சென்றுவிட்டார். பீமன் விடாமல் ஓடுகிறான் – பூஜையை முடித்துவிட்டு புருஷாமிருகம் பீமனைத் துரத்துகின்றார்.

இதோ சிற்பம் – தாராசுரம் புடைப்பு சிற்பம். பீமனை துரத்தும் புருஷாமிருகம்

சில மைல் தூரம் போனதும் மீண்டும் பீமன் வெகு அருகில் புருஷாமிருகம் வந்துவிட்டது , மீண்டும் இன்னொரு சிவலிங்கம். இப்படியே 12 கற்கள் (சிவலிங்கங்களையும்) பீமன் போட்டுவிட்டுக் காட்டை விட்டு வெளியேவந்து விடும் வேளையில், ஒரு கால் நாட்டிலும் ஒரு கால் கட்டிலும் இருக்கும் போது – புருஷாமிருகம் வந்து பிடித்துக் கொள்ள, பீமன் வாதாடுகின்றான். தான் புருஷாமிருகத்தின் ஆட்சிப் பகுதியில் இல்லை என்றும் தன்னை விட்டுவிட வேண்டும் என்றும் சொல்லுகின்றான்.

வாக்குவாதம் பலக்க, யுதிஷ்டிரர் வந்துவிடுகின்றார். அவரோட தீர்ப்பு, பீமனின் உடலின் ஒரு பாதி புருஷாமிருகத்துக்குச் சொந்தம், மற்றொரு பாதி தான் இந்தப் பகுதிக்குச் சொந்தம் எனத் தீர்ப்புக் கொடுக்க, தம்பி என்றும் பார்க்காமல் இவ்வாறு நியாயமான தீர்ப்புக் கொடுத்த தருமரின் நீதியில் மெய்ம்மறந்து போன புருஷாமிருகம் பீமனை விட்டு விடுகின்றார்.

இதோ இதுவம் தாராசுரம் சிற்பத்தில் – ஒரு புறம் வாதி ப்ரிதிவாதி இருவரும்,மறுபுறம் வழக்கை கேட்கும் தர்மர் ( அவரை அடுத்து பணிப்பெண் ?)

இந்த கதையை தூண் சிற்பத்தில் க்ரிஷ்ணபுரத்தில் பாருங்கள். இருவரும் சிறு கதை கொண்டு ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ள தயார் ஆகும் காட்சி

இதே தூணை வரைந்த அற்புத ஓவியர் அமரர் சிற்பி அவர்களின் ஓவியம் இதோ.

+++++++++++
கண்டிப்பாக திரு ராஜா தீட்சிதர் அவர்களது தளத்தை சென்று பாருங்கள். அவர் நம்மை விட்டு சென்று விட்டார் என்பதை நம்பமுடியவில்லை http://www.sphinxofindia.rajadeekshithar.com/


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஒரு ஓவியம் பிறக்கிறது

இன்று ஒரு ஓவியம் பிறக்கும் கதையை பார்க்கிறோம். ஒரு ஓவியன் – அவனும் பிறக்கிறான் , உண்மையான கலைக்கு அழிவு என்பதே இல்லை. ஒரு கலைஞனின் தாகம் அவனுள் என்றைக்கும் ஒரு ஏக்கத்தை உருவாக்கும். அந்த வலி அவனை ஒரு தேடலில் ஈடு பட வைக்கும் – இந்த தேடல் மொழி, கலாசாரம் , கால வட்டம் என்று அனைத்து தடைகளையும் உடைத்து எரியும்.

இதை போல ஒரு ஓவியத்தை இன்று நாம் பார்க்க போகிறோம். சிற்ப கலை – அதன் தூண்டலால் உருவான ஒரு சிற்பம் – அதன் தாக்கத்தால் உண்டான ஓவியம். அந்த ஓவியத்தின் தாக்கத்தால் உருவாகும் ஓவியன்.

ஸ்ரீ வைகுந்தம் தூண் சிற்பம். அப்பப்பா – அந்த வீரபத்ரர் சிலையில் தான் என்ன ஒரு உயிர்ரோட்டம் – சிலையே உயிர் பெற்று எழுந்து ஆடுவது போல உள்ளது. ஓவியர் சில்பி அவர்கள் இதை போல ஒரு தூணை பார்த்தல் – கேட்க வேண்டுமா – கரும்பு கடிக்க கூலி வேண்டுமா . அவரும் அந்த சிற்பத்தில் உள்ள பிரம்மாண்டம் , வீரம், அனைத்தையும் உள்ளே இழுத்து – ஒரு அற்புத ஓவியத்தை படைத்தார் ( நன்றி திரு பசுபதி மற்றும் வரலாறு .காம் நண்பர்கள் ) அமரர் சில்பி அவர்களின் தனி சிறப்பே ஒரு சிற்ப்பத்தை சிற்பம் போலவே வரைவது, கல்லிலே கலைவண்ணம் – அதை தன் கை வண்ணத்தால் வெளி கொணர்ந்த அற்புத கலைஞர் அவர்.


சரி , இப்போது கதை வரலாற்று காலத்தை விட்டு , சென்ற வாரத்திற்கு நகர்கிறது. நண்பர் திரு பிரசாத் அவரது விடுமுறை நாட்களில் ஓவியம் தீட்ட நல்ல படம் கேட்டார். நானும் பல படங்களை கொடுத்து, அதில் மேலே குறிப்பிட்ட ஸ்ரீ வைகுந்தம் சிற்பம் மற்றும் சில்பி அவர்களின் ஓவியத்தை இணைத்தேன். பார்த்தவுடன் , இதை நான் வரைய முயற்சிக்கிறேன் என்றார். சற்று தயக்கத்துடன் இத்தனை கடினமான ஓவியம் ஆயிற்றே – என்று நிறைய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தேன்.

இரண்டு நாட்கள் கடந்தன – பிரசாத் எப்படி உள்ளது முதல் கோடுகள் என்று ஒரு படத்தை அனுப்பினார். கண்டவுடன் காதல் கொண்டேன். அமரர் சில்பி அவர்களின் கலை அழியவில்லை – அடுத்த தலைமுறையில் அவரது கலையை இட்டு செல்ல ஒரு அற்புத ஓவியன் பிறந்துவிட்டான் என்று எண்ணி பூரிப்பு அடைந்தேன்



( சிற்ப புகைபடத்தில் வாள் உடைந்து உள்ளது – அமரர் சில்பி அவர்கள் வரைந்த போதே அதில் விரிசல் விழுந்துள்ளதை அவர் கவனித்து அதையும் அவர் வரைந்துள்ளதை பாருங்கள் )

அருமை பிரசாத் – வீரபத்ரர் அற்புதம். சிற்பத்தில் மற்றும் சில்பி ஓவியத்தில் உள்ள அற்புத திறனை அப்படியே கொண்டு வந்துள்ளீர் – வாழ்க வளமுடன், இது போல இன்னும் பல படைப்புகளை உருவாக்க எங்கள் வாழ்த்துக்கள்.
308930993085

திரு பிரசாத் அவர்களின் மற்ற ஓவியங்களை பார்க்க
பிரசாத் ஓவியக்கூடம்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கல்லை மட்டும் கண்டால் – தசாவதாரம் மிதி வண்டி நிலையம்

நாம் முன்பு ஸ்ரீரங்கம் நாயக்கர் கால சேஷறைய மண்டபம் அற்புத தூண்களை பார்த்தோம். சில்பி அவர்களை கவர்ந்து உயிர் ஓவியம் தீட்டச் செய்த பெருமை ..அங்கே மேலும் சில அற்புத வடிவங்கள் இருப்பதால் நண்பர் திரு அசோக் அவர்களை அங்கு செல்ல தூண்டினேன். அவரும் அவ்வாறே அங்கு சென்று பல அற்புத தூண்களை படம் பிடித்து வந்தார். அவற்றை பார்க்கும் முன்னர், அங்கே சிதைந்த சில தூண்களின் படங்கள் நெஞ்சை உருக்கின.



கம்பீரமாக தனது வீரத்தை பிரதிபலிக்கும் குதிரை – இப்போது முடமாக உள்ளது.குதிரை வீரனின் ஈட்டியோ பாதியில் உடைந்து விட்டது – கல்லில் ஈட்டியை இதனை அழகாகச் செதுக்கிய சிற்பி அதன் இந்த நிலையை கண்டான் என்றால் !! அதன் அடியில் ஒய்யாராமாக நிற்கும் அழகு சுந்தரியின் இடது கை துண்டிக்கப்பட்டுள்ளது. வலது புறம் சிற்பங்கள் அனைத்தும் காணவில்லை.

இவை எப்போது இப்படி சிதைந்தன என்று ஒரு உள்மனதில் உறுத்தல் இருந்தது. சரி இணையத்தில் சற்று தேடியதில் 1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கால புகை படம் கிடைத்தது. அப்போதும் இந்த தூண்கள் சிதைந்தமையால் கொஞ்சம் மன நிம்மதி கிடைத்தது. மற்ற கோயில்களை போல இவை சமீபத்தில் நமது மேற்ப்பார்வை இல்லாமையால் நடந்த சிதைவுகள் அல்ல என்று சற்று மனதை தேற்றியவுடன் அடுத்த காட்சிகள் என்னை பதற வைத்தன.

அக்கால மன்னர்கள் கலைகள் வளர கொடை கொடுத்து கலை பெட்டகங்களாக எழுப்பித்த இந்த அருமையான சேஷறைய மண்டபத்தின் இப்போதைய பணி – இரு சக்கர மிதிவண்டிகள் நிறுத்தும் இடம் !! விறகு சேமிக்கும் கிடங்கு!!. தசாவதாரம் மிதி வண்டி நிலையம் ..



நுணுக்கமான வேலைபாடுகளை உடைய அருமையான தூண்கள் இவற்றால் இடி பட்டு தினம்தோறும் சிதைகின்றன. இங்கே ஒரு சிற்பத்திற்கு முகம் இல்லை, அங்கே ஒரு கை இல்லை. மிதி வண்டிக்கு முட்டு கொடுக்க இந்த கலை பெட்டகங்கள் தானா கிடைத்தது ? தமிழனின் அற்புத கலை இப்படி மெல்ல சித்திரவதை பட்டா சாக வேண்டும்.

இங்கே உள்ள மற்ற பல தூண்களும் சற்று சிதைந்த நிலையிலே உள்ளன. இந்த அற்புத கலை தூண்கள் மற்றும் அவற்றில் செதுக்க பட்டிருக்கும் சிற்பங்களின் அருமை ஒரு முறை பார்த்தாலே புரியுமே, அந்த கலை சொட்டும் சிற்பங்களின் அழகு அருகில் செல்வோரை சுண்டி இழுக்குமே , அந்த கல்லில் காவியம் நம்மை தொலைவில் இருந்தே நெகிழ்விக்குமே – அப்படி இருந்தும் இவர்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை – இவர்கள் இருகண்ணிருந்தும் குருடர்கள்.

வைணவ பாரம்பரியத்தில் கோயில் என்றாலே அது ஸ்ரீரங்க விண்ணகரம் தான், அப்படி இருந்தும் அங்கே இப்படி ஒரு அவல நிலையில் இருக்கும் அற்புத கலை தூண்களை பாதுகாக்க முடியவில்லையே . சரி இவற்றை செப்பனிட முடியுமா ? உடைந்த பாகங்கள் கிடைத்தால் முடியும். பல்லவர் காலத்திலேயே கை உடைந்த ஜல சயன பெருமாள் ( மல்லை கடற் கறை கோயில் ) சிற்பத்தை அற்புதமாக கை கொடுத்த ( செதுக்கிய ) சிற்பியின் திறனை ஆசார்ய தண்டின் அவர்களின் அவனிசுந்தரிகதா என்னும் நூலில் குறிப்பு உள்ளது!

இந்த இடுகையை பார்க்கும் நல்ல நெஞ்சங்கள் இக்கோவிலுக்கான கொடையை பாரதி சொன்னது போல் , “நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், அதுவுமற்றவர், வாய் சொல் அருளீர்,


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சில்பியே சிகரம்

நாம் முன்பு ஸ்ரீரங்கம் சேஷராயர் மண்டப தூண்களை பார்த்தோம். இதை நம் இளம் ஓவியர்கள் எவ்வாறு அருமையாக வரைந்தனர் என்றும் பார்தோம். அவ்வாறு வரைந்த நண்பர் திரு பிரசாத் அவர்களுடன் பேசும் பொது, அமர ஓவியர் திரு சில்பி அவர்களின் புகை படம் இல்லை என்று வருந்தினார். அப்போது வரலாறு.காம் திரு கோகுல் அவர்கள் இட்ட இழை நினைவுக்கு வந்தது. எனினும் பிரசாத்துக்கு தமிழ் படிக்க கடினம் என்பதால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தருகிறேன் என்றேன். அப்போது அதே பக்கத்தில் ஓவியர் சில்பியும் இதே தூண் சிற்பத்தை வரைந்த படம் கிடைத்தது அனைத்தையும் இணைத்து இங்கே இடுகிறேன்.


Temple : Srirangam Sri Ranganathaswami Temple – Trichy, Tamilnadu, India
Location : Sesharayar Mandapa
Features : The mandapa is finely sculpted with various figures. Silpi captures the essence of this complicated and delicate sculpture
Collection sent by : Prof.S.Swaminathan
Original series : Thennatuch Chelvangal
Magazine courtesy : Ananda Vikatan


சில்பியே சிகரம்

சே. கோகுல்

(நன்றி – தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997)

கருவிலேயே திருவுடையவர்களாகப் பிறப்பவர்களின் புகழ் காலத்தால் மறையாதது. ஆழமான உழைப்பின் பலன்களை எந்தக் கறையானும் அரித்துவிட முடியாது. நோக்கத்தில் உயர்வையே நாடிச் செல்லும் எண்ணத்தின் நுட்பம் மாபெரும் நோன்பாகவே மலர்ந்திருக்கும். வளையாத முதுகு, கண்ணாடி கேட்காத கண்கள், தீர்க்கமான பார்வை. அதிலும் தெளிவில் முதிர்ந்ததோர் மோன நிலை. தூரிகையைத் தாங்கிய விரல்கள் தொட்ட கோடுகளெல்லாம் உயிர் பேசும். அதிகம் சிரிக்கத் தெரியாவிட்டாலும் அரைப் புன்னகையில் உதடுகள் பிரியாத ஒரு அழகு மலர்ச்சி. அகன்ற நெற்றியில் அடுக்காக மூன்று திருநீற்றுக் கோடுகள். நெற்றியின் நடுவில் அகன்ற குங்குமப் பொட்டு.

ஒரு ஓவிய மாமேதையின் பெருமைக்குரிய திருவடிவம்தான் இது. எல்லோருக்கும் உரியவராகிவிட்ட “சில்பி”தான் அவர்கள்.

அவரது கைவண்ணத்தால் கவரப்படாத தென்னாட்டுத் திருக்கோயில்களிலுள்ள மூர்த்திகளே கிடையாது என்று சொல்லலாம். எல்லோரது இல்லங்களையும் கோயில்களாக்கிய பெருமை அந்தத் திருக்கரங்களுக்கே உண்டு.

இந்த நன்முத்தைப் பெற்றெடுத்த பெரும்பேறு நாமக்கல்லுக்கு 1919ம் ஆண்டில் உரியதானது. சிறுவனின் பெயர் சீனிவாசன். இளவயது முதலே இதர பாடங்களைவிட ஓவியத்துறையிலேயே உள்ளத்தை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டவன் சீனிவாசன். தேசியப் பெருங்கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையவர்கள் மிகச்சிறந்த ஓவியரும் கூட. சீனிவாசனுடைய திறமைகளை நன்கு கவனித்த கவிஞரவர்கள் சென்ன எழும்பூரிலுள்ள ஓவியக் கலைக்கல்லூரியில் சேர்த்து, அவனது செயலாக்கத் திறனை முழுமையாக்கிக்கொள்ளும்படி அறிவுரை கூறினார்.

ஆறாண்டுகள் நீண்ட பயிற்சியில் அவரது ஆர்வத்தையும் தகுதியையும் கல்லூரி முதல்வர் திரு.டி.பி.ராய் செளத்திரி அவர்கள் மதிப்பிட்டு சீனிவாசனுடைய தேர்ச்சியை இருமடங்காக்கி இரண்டாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு உயர்த்தினார். பேனாவும் மையும் கொண்டு எழுதும் சித்திரக் கோடுகள் அவருக்கு எளிதில் கைவந்தன. எல்லோரும் வியக்கும் வண்ணம் அமைந்திருந்த அந்தச் சித்திரங்கள் திரு.செளத்ரி அவர்களால் பெரிதும் புகழப்பட்டது. மேல்நாட்டு ஓவியர்கள் பலரையும் மிஞ்சக்கூடிய வகையில் சீனிவாசனின் ஓவியங்கள் அமைந்திருந்ததாக அவர் புகழ்ந்தார்.

சீனிவாசன் மாணவனாக இருந்தபோது ஓவியர் “மாலி” அவர்களின் கேலிச்சித்திரங்களால் மிகவும் கவரப்பட்டார். அதே போன்று பின்னாளில் சீனிவாசனின் ஓவியங்கள் மாலியையும் மிகவும் கவர்ந்தன. இந்தப் பிணைப்பே சீனிவாசன் இருபத்தியிரண்டு ஆண்டுகள் ஆனந்த விகடனில் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

இயல்பாகவே சீனிவாசனுக்கு மனித முகங்களைத் தீட்டுவதினும் கட்டிடங்களை ஓவியங்களாக்குவதிலேயே அதிக ஆர்வமிருந்தது. அதனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய மாலி சீனிவாசனுக்கு “சில்பி” என்னும் பெயர் சூட்டி, தெய்வ வடிவங்களையும் திருக்கோயில்களையும் மட்டுமே தீட்டும் பணிக்கு ஆயத்தம் செய்தார்.

கல்லிலே சிற்பி செதுக்கியுள்ள சிற்பங்களுக்கு மூன்று பரிமாணங்கள் மட்டுமின்றி இழைந்த ஒருவகை உயிர்ப்பும் உண்டு. புகைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ள சிற்பங்களில் பரிமாணங்கள் நிழலாக நிலைத்திருக்கும். ஆனால் உயிர்ப்பு உள்ளூர உணரமுடியாமல்தான் இருக்கும். அந்தக் குறையைக் களைந்து முழுமையான நிறைவுள்ள சிற்பங்களை – குறிப்பாக தெய்வ சித்திரங்களை – சில்பி அவர்களால் மட்டுமே வரைய முடிந்தது.

பக்தி, தூய்மை, பரவசம் ஆகிய மூவிழைப் பின்னலே உணர்வாக அவர் வரைந்த படங்களில் தெய்வம் தானே நிலைத்து நின்றது. அமைதியான சூழ்நிலையில் பக்தர்கள் தரிசனம் முடிந்து ஏகாந்தமான வேளையில் கர்ப்பகிருகத்தில் இருக்கும் தூண்டா விளக்கின் மயங்கிய ஒளியில் சில்பி அவர்களால் அவ்வளவு தெளிவாக அந்த அருள் முகத்தை எப்படி வரைய முடிகிறது என்கிற அதிசயத்திற்கு சில்பி கொடுக்கும் விளக்கம் “வண்ணத்தின் கலவைகளை சரியான அளவில் அமைத்துக்கொள்வதுதான் என் செயல். காட்சி கொடுக்கும் அந்த தெய்வந்தான் என் விரல்களோடு இணைந்து தன்னை எழுதி வைத்துக் கொள்கிறது. படைப்பின் முழுமைக்கும் காரணம் அந்தப் பரம்பொருள்தான். நான் வெறும் கருவி !”

கர்ப்பகிருஹத்திலுள்ள மூல மூர்த்தியை வரையுமுன்பு அதன் ஆபரணங்களைத் தனியே ஒரு தாளில் முதலில் வரைபட நகல் எடுத்து, அந்தந்தக் கற்களின் வண்ணங்களையும் குறித்துக்கொண்டு, மூர்த்தியைப் பூர்த்தி செய்யும்போது அந்தந்த ஆபரணங்களை வரைந்து தானே அதனைப் பூட்டியதைப்போல் பரவசமடைவார். இந்தப் பரவசத்தை தெய்வம் சில்பிக்கு அளித்ததால்தான் அந்த சான்னித்தியத்தை சித்திரங்களில் நம்மால் நன்கு உணர முடிகிறது. தனது படங்களை வரைந்து முடித்தவுடன் மறைந்துவிட்ட காஞ்சி முனிவர் பரமாச்சாரியாரிடம் எடுத்துச் சென்று அவரது பூரண ஆசியுடன் வீட்டுக்குக் கொண்டுவந்து விசேஷ பூஜைகள் செய்வார்.

ஆனந்த விகடனிலிருந்து விலகிய பின்பு பவன்ஸ் ஜர்னலில் பணிபுரிந்தார். மேலும் கலைமகள், தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, அமுதசுரபி ஆகிய பல தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் அவர் நிறையக் கோயில் சிற்பங்களை வரைந்துள்ளார்.

சில்பி அவர்களின் குடும்பம் சிறியது. அவர் பணிகளில், அவர் அனுஷ்டித்த ஆசாரக் கிரமங்களுக்குக் குறையாமல் அவருக்கு உதவி புரிந்தவர் மனைவி திருமதி பத்மா அவர்கள். ஒல்லியான வடிவம், குறையாத புன்னகையை சீதனமாகக் கொண்ட குளிர் முகம், விருந்தோம்பலில் தனக்குத்தானே நிகராக விளங்கிய அன்னபூரணி. சிறிய வயதிலேயே உடல் நலிவுற்று 1968ல் இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டார். அவர்களது ஒரே மகன் மாலி என்கிற மகாலிங்கம். ஒரே பெண் சாரதா.

இவ்வளவு பெரிய மேதை தன் கலையை பின்தொடரத் தக்கதொரு சீடனை நீண்ட நாட்கள் தேடிக்கொள்ளவில்லை. 1981ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 14ம் நாள் – பொங்கலன்று ஒரு அதிசயம் நடந்தது. பதினைந்து வயதுச் சிறுவன் ஒருவன். பால்மணம் கமழும் பளிங்கு முகம். தன் தந்தையுடன் சில்பியைக் காண வருகிறான். கிரிதரன் என்னும் அந்தச் சிறுவனின் படங்களைப் பார்த்த சில்பி கிறங்கிப் போகிறார். அவன் வயதில் தான்கூட அத்தனை நுட்பமாகப் படம் வரைந்ததில்லையென்று கூறி அவனை வாயார வாழ்த்துகிறார்.

தனது கலைப்ப(¡)ணிக்குத் தகுதியுள்ளதொரு இளஞ்செல்வன் வாரிசாகக் கிடைத்ததையெண்ணி மிகவும் பூரித்துப் போனார் சில்பி. தனது மனைவியின் பெயரான பத்மாவையும் தன்னுடைய இயற்பெயரின் ஈற்றுப்பகுதியான வாசனையும் இணைத்து கிரிதரனுக்குப் பத்மவாசன் என்னும் பெயரைச் சூட்டினார். “எங்களின் இருவரது ஆசியும் உன் பெயராகவே என்றும் நிலைத்து, பத்மத்தில் வாசம் செய்யும் பிரம்மனாகவே – முதற் படைப்பாளியாகவே உன் புகழ் நின்று நிலைக்கட்டும்” என வாழ்த்தினார். அந்தச் சிறுவன்தான் இன்று பிரபல ஓவியரான திரு.பத்மவாசன். கல்கியின் சரித்திர நாவல்களுக்குப் புதிய சித்திரம் தீட்டித் தமிழக சித்திரக்காரர்களின் வரிசையில் அழியாத இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள திரு பத்மவாசனின் படங்களில் கமழும் இறைத்தன்மைக்கு சில்பியே மூலகாரணம்.

தனது வாழ்க்கைப்பணிகள் முடிந்த பின்பு – அதாவது கோயில்களிலுள்ள தெய்வ மூர்த்தங்களைப் படம் எழுதி முடித்த பின்பு – அர்த்தமில்லாத வாழ்க்கை அவலங்களில் உழன்றுகொண்டிருக்கக்கூடாது – இறைவனின் திருவடிகளை விரைவில் அடைந்துவிடவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பார் சில்பி. குடும்ப வாழ்க்கையிலும் தனது குழந்தைகளிடமும் பற்று வைத்திருந்தாலும் மனதளவில் ஒரு துறவியைப்போலத்தான் வாழ்க்கை நடத்திவந்தார் அவர்.

வாழும் நாட்களில் அவரை நன்கு பெருமைப்படுத்தத் தவறிய தமிழ்ச் சமுதாயம் அவர் வரலாறாகிவிட்ட இன்றைய நிலையிலும் அவரது பெருமைகளையும் அருமைகளையும் வரும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூறி அவர்கள் திறமைகளை சீரமைக்க ஏன் முன்வரமாட்டேன் என்கிறது என்பதுதான் இன்னமும் பெரும்புதிராக உள்ளது. காலம் மாறட்டும். கண்கள் திறக்கட்டும். கடமை விளங்கட்டும். கருதியதை முடிக்கட்டும்.

சிகரங்கள் அசையாமல் அமைதியைக் காத்துக்கொண்டு உயரத்தின் எல்லையை ஒட்டிப்பிடித்துக்கொண்டு நிற்கின்றன. ஆனால் உணர்வால் உயர்ந்த சிகரம், உண்மையால் உயர்ந்த சிகரம், உறுதியால் உயர்ந்த சிகரம், உத்தமப் பண்புகளால் உயர்ந்த சிகரம், ஒழுக்கத்தால் உயர்ந்த சிகரம், உழைப்பால் உயர்ந்த சிகரம் – ஒப்பற்ற கலைச் செல்வரான சில்பி சீனிவாசன்தான்.

Sources:
http://www.varalaaru.com/default.asp?articleid=443
http://www.varalaaru.com/default.asp?articleid=561

அது சரி, இந்த அருமையான சிற்பங்களை உடைய சேஷ ராயர் மண்டபத்தின் தற்போதையா
நிலவரம் …அடுத்து பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment