குகைக்குள் மறைந்திருக்கும் பல்லவர் சிற்பம்

சென்ற வருடம் டிசம்பர் மாதம் நண்பர் அர்விந்த் அவர்களுடன் ஐந்து நாட்கள் பாண்டிய நாட்டு பக்கம் பயணம் மேற்கொண்ட​போது பல இனிய அனுபவங்கள். டீ ஷர்ட், அரை டிரௌசர், கேமரா என்று எங்களைப் பார்த்தவுடனே அந்தக் கார் டிரைவருக்கு சந்தோஷம் தான். அதைவிட ஐந்து நாட்கள் புக்கிங் என்றவுடன் அவருக்கு ஒரே எதிர்ப்பார்ப்பு, நல்ல சவாரி என்று. “சார், நான் பன்னிரண்டு வருடங்கள் இங்கே தான் ஓட்டறேன். நீங்க எங்க போகணும் சொல்லுங்க” என்று முதல் நாள் விறுவிறுப்பாக கிளம்பியவர், ஐந்தாவது நாள் இரவு எங்களை நெல்லை ரயில்வே நிலையத்தில் டாட்டா கட்டி விடை அனுப்பும்​போது விட்ட பெருமூச்சு…அந்த ஐந்து நாட்கள் அவர் நாங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள இடங்களுக்கு வழி கேட்டு கேட்டு சலித்துவிட்டார் !! அதைவிட அவருக்கு பெரிய குறை – ஒரு சின்ன குகையை வளைத்து வளைத்து ஐந்து மணி நேரம் படம் எடுக்கும் நாங்கள் பெரிய ஆலயங்களில் வாசலில் விட்டுவிட்டு டீ சாப்பிட்டுவிட்டு வருவதற்குள்ளே வெளியில் வந்து விடுகிறோமே என்ற குழப்பம் தான்!! எங்களது ரசனை என்னவென்பது பாவம் அவருக்கு கடைசி வரை புரியவேயில்லை.

அந்த மாதிரி செய்தால் தானே இன்றைக்கு நாம் பார்க்கவிருக்கும் அற்புத வடிவங்களை உங்களுக்கு எடுத்துத் தர இயலும். பனைமலை – நாம் ஏற்கனவே அங்குள்ள அற்புத உமை பல்லவ ஓவியத்தை பார்த்து விட்டோம். அங்குள்ள சிதைந்த சிவபெருமானின் ஆடல் காட்சியை ஓவியமாக உயிர்ப்பிக்கும் முயற்சி இன்னும் நிறைபெறவில்லை. எனினும் அங்கேயே இன்னும் ஒரு பொக்கிஷம் உள்ளது.

மலை மேலே இருக்கும் கோவிலுக்கே யாரும் செல்வதில்லை. அப்படியிருக்க நாம் இன்று பார்க்கப் போகும் அதிசயம் – மலையடிவாரத்தில் உள்ளது. எங்களுக்கு இது தெரியாது. மலை ஏறிய களைப்பில் நிறைய தண்ணீர் குடித்துவிட்டோம் – அதனால் இறங்கியதும் இயற்கை வேலையை காட்டியது – மரம் வளர்க்க அருகில் சென்றபோது – ஒரு பக்கம் ஒரு ஆட்டுப் பாதை… அதில் ஒரு இயற்கை குகை. நண்பர் அசோக் அவர்கள் ஒரு புகைப்பட வித்துவான் என்றே சொல்ல வேண்டும். எப்படியோ உள்ளே புகுந்து எங்களுக்கு படங்களை அருமையாக எடுத்து விடுவார்.

மகிஷாசுரமர்தினி சிலை – தாய் பாறையில் ராஜசிம்ம பல்லவனின் சிற்பிகளின் கைவண்ணம்.

ராஜசிம்மனுக்கு சிம்மம் என்றால் ஒரு தனி ஈர்ப்பு. அந்த சிங்கத்தின் வலிமையை எப்படி செதுக்கி உள்ளனர்!

எட்டுக் கைகளுடன் அவளின் அழகு அருமை, ஒரு காலை மடித்து சிங்கத்தின் முதுகில் ஊன்றி, அந்த வில்லை கையில் பிடித்து நிற்கும் பாணியில் ஒரு யதார்த்தம் !! அருமை. அவள் அணிந்திருக்கும் உடை, ஆபரணங்கள் – பல்லவர் பாணியில் பிரயோக சக்கரம், கனமான வாள். கவனிக்க வேண்டிய ஒன்று வலது கையில் மூன்று தலை நாகம் ஒன்று உள்ளது. இதுவரை நாம் கண்ட பல்லவ துர்க்கை வடிவங்களில் இதை நாம் பார்த்தில்லை. அதே போல பல்லவர் சிற்பங்களில் வாளை இடுப்பில் வைக்காமல் முதுகில் வைப்பது வழக்கம் போல உள்ளதே? முதுகில் இருபக்கம் கூடு உள்ளது. ஒரு பக்கம் அம்புக்கூடு என கருதலாம். காஞ்சி கைலாசநாதர் ஆலயத்து கிராட அர்ஜுனம் சிற்பத்திலும் இதே போல இருப்பதை நாம் காணலாம்.

ராஜசிம்மன் நம்மை போல கலை ஆர்வலர்களுக்கு மட்டும் அல்லாமல் வரலாற்று ஆர்வலர்களுக்கும் மிகவும் நல்லவன் போல. பிற்காலத்தில் யார் இவற்றை எடுப்பித்தனர் என்ற சர்ச்சை வர வாய்ப்பே கொடுக்காமல் (காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் ஒன்றுக்கு அடியில் ஒன்றாய் நான்கு முறை தனது 244 பெயர்களை பிருடா பட்டப்பெயர்களை – செதுக்கிய அரசன் அல்லவோ!) இந்த சிறு சிற்பத்தையும் விட்டுவைக்கவில்லை – ஸ்ரீபர மற்றும் ரணஜெயா என்ற தனது பெயர்களை செதுக்கி விட்டு இது என்னுடையதே என்று சந்தேகத்துக்கு இடமே இல்லாமல் செதுக்கி விட்டான்.

வாசகர்களுக்கு ஒரு கேள்வி. மேலே பார்த்தப் படங்களில் ஒன்றை விட்டு விட்டோம். என்னவென்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்?

படங்களுக்கு நன்றி : திரு அசோக் கிருஷ்ணசுவாமி மற்றும் திரு சாஸ்வத்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பனைமலை பல்லவகால ஓவியம் உயிர் பெறுகின்றது. பாகம் 2

அனைவரும் சென்ற பதிவை பார்த்து பரவசமடைந்து அடுத்த பதிவுக்காக ஆவலாக எதிர்பார்த்து காத்து நிற்பது தெரிகிறது. ஆனால் அதற்கு முன்னர் நண்பர்திரு ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி. பதிவைப் படித்தவுடன் தன்னிடத்தில் இருந்த குறிப்பு ஒன்றில் இந்த அற்புத ஓவியத்தை கண்டுபிடித்தவரின் வர்ணனை இருப்பதை சுட்டிக்காட்டி நகல் எடுத்து எனக்கு அனுப்பி உள்ளார். ‘Art I Adore’ என்ற ஸ்ரீ அமல் கோஸ் அவர்களது நூலில் – ‘A book on art based on interviews with K. Ramamurty’ என்ற குறிப்பை படித்தவுடன் மெய் சிலிர்த்தது. நீங்களும் படியுங்கள்.

ஆரம்பமே படு சுவாரசீயம் – ஒரு ரசீது. இந்தியா சுதந்திரம் அடைந்து நான்கு ஆண்டுகள் பிறகு ஒரு தேதியில் – ஒரு அருமையான சுவரோவியத்தை முதல் முதலில் நகல் எடுத்து வேலை இல்லாத ஓவியனின் ரசீது.

” This is to certify that his Museum purchased from Shri K. Ramamurti, artist, a copy of the mural painting of the Pallava period from the temple at Panamalai. Mr. Ramamurti was the very first artist to copy this interesting mural.- Superintendent, Government Museum, Madras ”

ஆஹா. மேலும் தொடர்ந்தது அவரது வர்ணனை.

திரு ராமமூர்த்தி அவர்கள் ஒருநாள் ‘தி ஹிந்து ‘ நாளேட்டில், புதுச்சேரி ஆசிரமத்தில் தங்கி இருந்த அயல்நாட்டவர் ஒருவர் தான் பனைமலை மலையில் ஒரு கோயில் சுவரில் கண்ட சில கோடுகள் சிதைந்த பிரெச்கோ ஓவியமாக இருக்கக் கூடும், என்ற தகவலை படித்தார்.

உடனே ஆர்வம் அடைந்த அவர், தான் இதை வெளிக் கொணர்ந்தால் சரித்திரத்தில் இடம் பிடிக்கும் அபார கண்டுபிடிப்பாக இருக்கும் என்று எண்ணி உடனே புறப்பட தயார் ஆனார். எனினும் பயணத்துக்கு போதுமான பணம் அவரிடத்தில் இல்லை. தன மனைவியின் நகைகளை அடமானம் வைத்து பணம் திரட்டி அடுத்த நாள் காலை பனைமலைக்கு புறப்பட்டார்.

அங்கு சென்றதும் முதலில் ஒன்றுமே கிடைக்கவில்லை. சுற்றி சுற்றித் தேடியும் ஓவியச் சுவடுகள் எங்குமே தென்படவில்லை. ஆலய பூசாரிகளுக்கும் அப்படி ஒரு ஓவியம் அங்கு இருப்பதாக தெரியவில்லை. எனினும் ராமமூர்த்தி அவர்கள் மனம் தளராது தேடினார். இரவு அங்கேயே படுத்து காலையில் எழுந்து அடியடியாக தேடினார்.

பதினைந்து நாட்கள் தேடிய பின்னர், ஒரு செவிரில் சில எச்சங்கள் தெரிந்தன. அவற்றை உற்றுப் பார்க்கும் பொது ஒரு முகம் காட்சி தந்தது. சுதை பூச்சால் மறைந்து இருந்த கோடுகளை வெளிக்கொணர கவனமாக அவற்றை விலக்கினார். உள்ளே பனைமலை பார்வதி (உமையம்மை).

தனது குருநாதர் தேவிபிரசாத் அவர்கள் கற்றுக் கொடுத்த பாணியில், அப்படியே நகல் எடுத்தார். என்றும் காலத்தை வென்று அது நிற்க வேண்டும் என்று அதனை சென்னை அருகாட்சியகத்துக்க்கு கொடுத்தார்.

இந்த நூலிற்காக அவரைப் பேட்டி கண்டு அந்த கண்டுபிடிப்பு பற்றி வேறு ஏதாவது நினைவுக்கு வருகிறதா என்று கேட்ட பொது.

” அன்று நான் அந்த பனைமலை ஓவியத்தை கண்ட பொது அடைந்த, அந்த கணத்தில், நான் அடைந்த மகிழ்ச்சியை தவிர வேறு ஒன்றுமே நினைவில் இல்லை” என்றாராம்.

இன்று அவர் எடுத்த நகல் இன்னும் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

மேலே செல்வதற்கு முன்னர், அந்த பல்லவ ஓவியனின் அபார கலை திறமையை நீங்கள் ஒரு ஓவியனின் கண்ணோட்டத்தில் ரசிக்க சில படங்கள். முகத்தின் வட்ட வடிவை கட்ட அவன் அந்த பச்சை நிறத்தை உபயோகிப்பதும் , நெற்றியிலிருந்து வளரும் மூக்கின் வடிவத்தை உணர்த்த வர்ணத்தை நீக்கி – அப்பப்பா அபாரம.

ஓவியத்தை வரைந்த ஓவியரை, ஆயிரம் ஆண்டுகள் பிறகு அதனை மீண்டும் வெளி கொண்டு வந்த நகல் எடுத்த ஓவியருக்கும் ஒரு பெரிய நன்றி கூறி, நமது தொடர்பணியை ஓவியர் திருமதி சுபாசினி அவர்களுடன் ஒப்படைக்கிறோம்.

அவர் கூறுகிறார்.

”பனைமலை உமையம்மையை வரைவது மிகவும் அருமையான அனுபவம். நமக்கு கிடைத்த மிச்சங்களை வைத்து அழிந்து போன பாகங்களைக் கற்பனை செய்து வரைவது மகிழ்ச்சிகரமாக இருந்தது. அதுவும் திரு விஜய் அவர்களின் உதவியுடன் இதற்கான மிக நேர்த்தியான புகைப் படங்கள் கிடைந்தன. அனைத்தையும் ஒன்று சேர்த்து உங்களுக்கு முழு ஓவியமாகப் படைக்கிறேன்.

அப்படி முழுதாக வரைந்த பின்னர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதை எடுத்துரைக்கவும் வார்த்தைகள் வரவில்லை.

அதில் மிகவும் பிடித்தது முதல் முதலில் வரைந்த கோடுகள். இந்த முறை அக்ரிலிக் வண்ணங்களை கொண்டு முயற்சி செய்தேன். படிப்படியாக வண்ணங்களைத் தீட்டி ஓவியத்தை வெளிக்கொண்டு வருவது பரிசுப் பொருளை பிரிப்பது போன்ற ஆர்வம் மற்றும் அனுபவம்.

ஒவ்வொரு கோடும் ஒரு புது அனுபவம், ஒரு கண்டுபிடிப்பு – சில கற்பனை. அவை அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து வந்த வடிவத்தை பல்லவ சுவரோவியம் போலவே முடிக்கவேண்டும் என்பது பெரும் சவாலாக இருந்தது.


ஓவியத்தை தீட்டும்போது படிப்படியாக படம் எடுத்து ரசித்தோம். நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

இதோ நிறைவு பெற்ற ஓவியம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பனைமலை பல்லவகால ஓவியம் உயிர் பெறுகின்றது. பாகம் 1

சிதைந்த பல்லவர் கால ஓவியங்களை அவற்றின் புராதன வசீகரத்துடன் வெளிக்காட்டும் முயற்சியில் இன்று மீண்டும் ஒரு பயணம். காஞ்சி கைலாசநாதர் ஆலயத்து சோமாஸ்கந்தர் ஓவிய பதிவுகளுக்கு – – பதிவு 1, பதிவு 2,. பதிவு 3, தாங்கள் அனைவரும் கொடுத்த வரவேற்பும் உற்சாகமும் எங்களை அடுத்து மீண்டும் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியம் ( ஓவியர் திரு மணியம் மற்றும் திரு மணியம் செல்வன் அவர்களின் வழித்தோன்றல் என்றால் சும்மாவா?) அவர்களின் உதவியுடன் இன்னும் ஒரு கடினமான அதே சமயத்தில் ஆனந்தமான பணியை மேற்கொண்டு உங்கள் முன் வருகிறோம்.

பொன்னியின் செல்வன் குழும நண்பர்களுடன் பனைமலை சென்று இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. எனினும் இன்றுவரை அதை பற்றிய பதிவை நான் இடவில்லை. சிற்பங்களை அவைகளுள் இருக்கும் அற்புத வடிவத்தை கண்டிப்பாக சரியான முறையில் வெளிக்காட்டினால் தான் முறையாக இருக்கும் என காத்திருந்தேன். ஆனால் இன்றும் பசுமையான நினைவுகள். செஞ்சி அருகே ஒரு சிறிய மலைதான் பனை மலை.

ஆஹா, மேலே ஏறும் போதே ராஜ சிம்ஹாபல்லவரின் ஆலயம் – தாளகிரீசுவரர்’.

ராஜ சிம்மர் என்றாலே விமானங்களின் அழகுதான் முதலில் நம்மை ஈர்க்கும். காலத்தை வெல்லும் கொள்ளை அழகு


அனால் இந்த பொக்கிஷம் முத்துச் சிப்பியை போல உள்ளே ஒரு அரிய முத்தை உள்ளடக்கி வைத்துள்ளது.

ராஜ சிம்மர் தனது காலத்தில் தனது படைப்புகளான ஆலயங்கள் அனைத்தையும் தலைமுதல் கால் வரை
ஓவியங்களை கொண்டு அழகுக்கு அழகு சேர்த்தார். இதனை நாம் முன்னரே காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் பார்த்தோம். இங்கேயும் அதே போல ஒரு காலத்தில் இருந்திருக்க வேண்டும். நமது துரதிஷ்டம், இன்று எங்கோ இங்கும் அங்கும் ஒரு சில இடங்களில் மட்டும் எச்சங்களே மிஞ்சி உள்ளன. ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல – தூரிகையின் ஒரு சில கோடுகளிலேயே பல்லவ ஓவியனின் கைத்திறன் நம்மை சொக்க வைக்கின்றது

விமானத்தின் உட்புறமோ, கருவரையிலோ இன்று ஓவியங்கள் எவையும் பிழைக்க வில்லை. எனினும், விமானத்தை சுற்றி வரும் பொது, வலது புறம் தரையில் இருந்து சுமார் நான்கு அடி உயரத்தில் சிவலிங்கத்தை கொண்ட ஒரு சிறு சன்னதி உள்ளது. மேலே ஏறுவதற்கு கொஞ்சம் கஷ்டப் பட வேண்டும். ஆனால் அதைக் கண்டும், அஞ்சி ஏறவில்லை என்றால் போச்சு!….அதனுள் தான் புதையல் உள்ளது.

ஏறிவிட்டீர்களா ? முதல் பார்வையில் ஒன்றுமே இல்லையே என்று நினைக்க வேண்டாம். வலது புறம் சுவற்றை நன்றாக பாருங்கள். கண்டிப்பாக தெனிந்தியாவில் இவளை போன்ற அழகி வேறெங்கும் இல்லை.

இன்னும் நன்றாக அருகில் சென்று பாருங்கள்.

உமை அம்மை – பார்த்த கணத்தில் நம்மை சொக்கி அடிக்கும் மதி வதனம். மேலே வர்ணிக்க வார்த்தைகள் வராது.

காலத்தின் கோலத்தில் பல இடங்களில் உடைந்தும் அழிந்தும் போன நிலையிலும், அந்த ஓவியனின் தூரிகை தீட்டிய கோடுகள், வண்ணங்கள் – அவை ஒன்று சேர்ந்து உமையின் முகத்தில் வெளிக்கொணரும் உணர்வு அலை, நிற்கும் நளினம். .

மிகவும் சிதைந்த நிலையில் இருப்பதால், ஓவியத்தில் பல இடங்களில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை – மேலே வண்ண குடை தவிர , இன்னொரு பக்கம் இருப்பது ஒரு பல்லவக் குடைவரைக் கோயிலின் தூண் போல தெரிகிறது.

வலது புறம் உமை இருக்க, நடு சுவரில் மிகவும் மெல்லிய ஓவியச் சுவடுகள் தெரிகின்றன.

அருகில் சென்று ஆராயும்போது அவை சிவபெருமான் முப்புரம் எரித்த பின்னர், மகிழ்ச்சியில் ஆடிய ஆளிதன்றிட (Alidhanrita) நடனம் என்று தெரிந்துக் கொண்டோம். இதை அடுத்த பதிவில் மேலும் காண்போம். ஆனால் இந்த வடிவம் ராஜ சிம்ஹரின் பல சிற்பங்களில் நாம் பார்க்க முடியும், காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் இதே போல சிவன் அவர் ஆட உமை பார்க்கும் காட்சி இருக்கிறது – “திரிபுராந்தகி சமேத திரிபுராந்தகாய நமஹ”

உமை ( திரிபுராந்தகி) இங்கும் பனை மலை போல இருப்பது நமக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

இவை அனைத்தையும் மனதில் கொண்டு, இந்த ஓவியத்தை சுபாஷினி வரையத் துவங்கினார்.

வண்ணங்கள் மெதுவாக தோன்றின.

போன முறை ஜகதீஷ் படங்களை தந்து உதவியது போலவே, இம்முறை திரு பிரான்க் ரோந்டோட் என்பவர் உதவினார். வெகு நாள் வரை பனைமலை ஓவியத்தின் நல்ல புகைப்படம் இணையத்தில் இல்லை, அப்போது திரு பிரான்க் அவர்களின் தலத்தில் நல்ல படங்களை கண்டு, நமது முந்தைய பதிவையும் என்ன செய்ய இந்த படங்கள் தேவை என்றும் விளக்கினேன். அவரும் உடனே படங்களை நமக்கு தந்து உதவினார். இவை நமக்கு மிகவும் உதவின – ஏனெனில், இவை பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படங்கள் – அதற்கு பின்னர் சில இடங்களில் ஓவியம் சிதைவு அடைந்துள்ளது !!

மேலும் பொன்னியின் செல்வன் குழு நண்பர்கள் சௌராப் , சாஸ்வத் , ஸ்ரீராம் , ஸ்ரீ என்று பலரும் தங்கள் படங்களை கொடுத்து உதவினர்.

மெதுவாக ஓவியம் வளர்ந்தது…

தொடரும்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment