எங்கள் சோகக் கதையை கேளுங்கள் – குப்பையில் எறியப்பட்ட பேரூர் கோயில் தூண்கள்

மீண்டும் ஒரு பயனுள்ள டிசம்பர் இந்திய பயணம். நண்பர்கள் பலரின் உதவியுடன் இன்னும் பல பதிவுகள் இட மூலங்கள் கிடைத்தன. வழக்கம் போல சில கசப்பான காட்சிகள். எனினும் இதுவரை இல்லா வண்ணம் ஒரு திடுக்கிடும் காட்சி. பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தூண்கள் படும் அவமானம். முன்னர் ஒரு பதிவில் ஹனுமான் முதலை வயிற்றில் இருந்து வரும் சிற்பம் பற்றி எழுதினேன்.

Hanuman escapes from a crocodile -perur

அப்போதே அந்த பழைய புகைப்படத்தில் உள்ள தூண் இருக்கும் இடம் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. இம்முறை சென்று பார்த்தபோது புரிந்தது. அதில் இருப்பது இப்போது சிதைந்த நிலையில் ஆலயத்தினுள் இருக்கும் சிறு நந்தவனத்தில் இருந்த தூண்.

உடையாத தூண் ஆலய கோபுரம் அருகில் உள்ள கடையின் கதவில் மறைந்து உள்ளது.

இந்தப் படங்கள் சென்ற டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டவை ( 2009) . அப்போது அந்த சிறு நந்தவனத்தில் இன்னும் பல சிதைந்த தூண்கள் இருந்தன.


இம்முறை கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது என்றதும் ( சற்று பயத்தோடுதான் ) அங்கே சென்றோம். அங்கே இருக்கும் தூண்களை பார்க்காமல் திரும்ப முடியுமா ?

வாகனத்தை நிறுத்தி விட்டு, அருகில் உள்ள சிற்பக் கூடத்தில் உள்ள சிற்பிகளுக்கு வணக்கம் சொல்லி விட்டு திரும்பியது தான் தெரியும் – எதிரில் அப்படி ஒரு கோரக் காட்சி



குப்பையும் சாக்கடையும் நிரம்பி வழிய வெளியே எறியப்பட்டுள தூண்கள். அருகில் சென்று பார்த்தேன் – பயத்துடன் தேடினேன். கண்கள் பார்ப்பதை மனது ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றது – அதே ஹனுமான் தூண்.

தங்க நகையும் வைர ஆபரணங்களுமே பொக்கிஷம் என்று இருக்கும் இந்நாளில், அவற்றையே பாதுகாக்க முடியாமல் இருக்கும் நிர்வாகம், இந்த சொற்ப கல்லில் என்ன இருக்கிறது என்று குப்பையில் எரிந்து விட்டது போலும். சோகம் பொல்லாதது.. யாரிடம் போய் முறையிடுவது..


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கதை சொல்லும் தூண்கள் – பேரூர்

தூண் சிற்பங்கள் என்றாலே ஒரு தனி அழகு தான் – அதுவும் கதை சொல்லும் தூண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பல புராண கதைகள் இன்று நாம் மறந்தே பொய் விட்டோம். அதனால் பல சிற்பங்களை அவற்றின் கதையை அறிந்து ரசிக்க முடிவதில்லை. இதுபோல மறந்த கதையை சொல்லும் பேரூர் தூண் சிற்பத்தை இன்று நாம் பார்க்கிறோம்.

கடைகள் மறைத்து நிற்கும் இந்த தூணைத் தேடி செல்ல வேண்டும். இல்லையேல் அகப்படாது. நமக்கென்று உதவ பிரிட்டிஷ் பட களஞ்சியம் உள்ளது.

கண்டுபிடிக்க இயலவில்லையா. இதோ

கனக சபை படிகளை கொண்டு தூண் எங்கே உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். இன்றோ கடைகளுக்கு நடுவில் கயிறு கட்டி…

எனினும் இந்த உடைந்த தூண் கண்ணில் பட்டது.

ஏன் என்று தெரிகிறதா.

ஓவியர் பத்மவாசன் அவர்களுடன் பேசும்போது, தான் அந்த தூணை கூட வரைந்து வைத்துள்ளேன் என்றார். இதோ அவரது ஓவியம்.

சரி, இது என்ன கதை? முழு கதையை ஸ்ரீரங்கம் சேஷ ராயார் மண்டப தூணில் பார்த்தோம். படிக்க இங்கே சொடுக்கவும்.

முதலை வாயில் சென்றது மீளுமா ?

இந்த தூண் எப்படி உடைந்தது. இப்போது நாம் பார்ப்பது மாற்று தூணோ ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பேரூர் கனகசபையின் மனம் கவரும் சிற்பங்களுக்கு இது ஒரு காணிக்கை. பாகம் 1

பேரூரின் கலைச் சுரங்கத்தை என்று கண்ணுற்றேனே அன்று முதல் இந்தக் கலையழகை நம் கலாஇரசிகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து இரசித்து சுவைக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளத்தில் பொங்கிக் கொண்டே இருந்தது. ஒருநாள் இரண்டு நாட்கள் அல்ல! பத்து வருடங்கள்! ஆனால் இத்தனைக் காலம் பொறுத்ததிலும் நன்மை இருக்கத்தான் செய்கிறது. இந்தப் பதிவினை படித்து முடிக்கும் பொழுது அதை நீங்களும் உணர்ந்து கொள்வீர்கள்.

இன்று நாம் பார்க்கப் போவது அழகுப் பெட்டகமான ஊர்த்துவதாண்டவ மூர்த்தியின் அற்புத அழகைத்தான். இதோ, சிறைக்குள் இருக்கும் இந்த உயிர்ச் சிலையைப் பாருங்கள்.

முதலில், இது ஒரு தூண் சிற்பம்! ஒரே கல்லால் ஆன தூண் சிற்பம். பேரூரின் இந்தக் கனகசபையில் மிகவும் அற்புதமான வேலைப்பாடமைந்த எட்டு தூண்கள் இங்கே வடிவமைக்கப் பட்டுள்ளன. இவை கி.பி 1625 முதல் கி.பி. 1659 வருடங்களில் இராஜா சிவத்திரு அழகாதிரி நாயக்கர் அவர்களால் அமைக்கப் பெற்றது.


இரும்புக் கூட்டுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளதாலோ என்னவோ, சிற்பக்கலையின் உச்சமாகத் தோன்றும் இந்தக் கலையின் அழகு பெரும்பாலானோர் கவனத்திற்கு வருவதேயில்லை! இதைப் படித்த பின்னாவது சில நல்ல உள்ளங்கள் இந்தச் சிறைக்கு பதில் நல்ல கண்கவரும் கண்ணாடிக் கூண்டை அமைப்பார்கள் என நம்புவோம்.



சோழர்களின் காலத்திற்குப் பின்னும், 13 – 14 ஆம் நூற்றாண்டு பாண்டியர்களின் காலத்திற்குப் பிறகும் சிற்பக் கலையின் வளர்ச்சி சற்றே குன்றியது போல்தான் இருந்தது. ஆனால் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கனகச்சபை சிற்பம், சிற்பக் கலை இன்னும் மறைந்து விட வில்லை மாறாக அந்தக் கலையில் தேர்ச்சி அடைந்து அழகில் இமயத்தையும் விஞ்சியதை துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.

கம்பிகளுக்குள் இல்லாமல், கம்பீரமாக நிற்கும் பிரிட்டிஷ் காப்பகத்தின் பழைய புகைப்படம் இதோ…

ஓவியர் சிற்பி அவர்கள் ஓவியமும் இதோ ( நன்றி varalaaru.com )

நம்முடைய கலை மீதான கட்டுக்கடங்காத ஆர்வத்தை அறிந்து, புகைப்படம் எடுக்க அனுமதி கொடுத்ததோடு அல்லாமல் இந்த அழகுச் சிலையின் அழகை கண்ணார பருகுவதற்காக கதவையும் திறந்து காட்டிய அந்த ஆலயத்தின் EO அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு, இந்தக் கலை விருந்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். இதோ, மனதைக் கொள்ளையடிக்கும் அந்த அழகுச் சிலையின் உருவம்.

இது ஒரு தனித்துவம் வாய்ந்த சிற்பம், கற்சிலையாகப் பார்த்தாலும், சிவனின் நடனமாகப் பார்த்தாலும் சாமனியர்களால் எளிதில் புரிந்துகொள்வது கடினம்தான். சிவனை நாடி அவனை அறிந்தால்தான் இந்த நடனத்தையும் புரிந்துகொண்டு இரசிக்கமுடியுமாம்! ப்ரம்மா, விஷ்ணு, கந்தன், நாரதர், பரதன் (நாட்டிய சாஸ்திரத்தை எழுதியவர்) இவர்களால்தான் நடனத்தை அறிந்து கொண்டு இரசித்து ஆனந்திக்க முடியுமாம்!

சாலுவன் குப்பத்தில் இருக்கும் கல்வெட்டு ஒன்று சிவநடனத்தின் தனிச் சிறப்பை கூறுவதோடு, நாட்டியத்தின், சங்கீதத்தின் கூறுகளை விளக்கி, சிவநடனத்தை கண்டுகளிக்க விளக்குகிறது: யதி ந விததா பரதோ யதி ந ஹரிர் நரதோ ந வ ஸ்கந்தா பொத்தம் க இவ ஸமர்த்தாஸ் ஸங்கிதம் கலகலஸ்ய (Epigraph. Ind. 10, p. 12).
நூல்: NATARAJA – THE LORD OF DANCE – Dr. Sivaramamurti

சிவநடனத்தைக் கண்டுகளிக்கும் இந்தக் கடவுளர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டும் அல்ல. ஒவ்வொருவரும் தங்களின் இரசனைக்கு தக்கவாறும், நடனத்தை ஊக்குவிப்பதைப் போலவும், பல்வேறு இசைக் கருவிகளை உபயோகித்து நாயகனின் நாட்டியத்திற்கு மேலும் வலுசேர்க்கின்றனர். இதோ அதைப்பற்றி சில வரிகள், நடனத்தை நாயகன் துவக்கிய கணமே விஷ்ணு மர்தளம் என்னும் வாத்தியத்தை இசைத்து தன் தெய்வீக இசைய பரவவிட, துடிப்பாய் எழும் அந்த ஒலி வண்ணமயில்களைத் தோகைவிரித்தாடச் செய்யும் கரு மேகங்களின் இடியாய் எழுகிறது. தாமரைக் கையோன் பிரம்மாவோ வெங்கலத் தாளத்தை நாட்டியத்திற்கும் விஷ்ணுவின் தாளத்திற்கும் ஏற்றார் போல் தட்டி இசைத்து காமனை வென்ற சிவனின் நர்த்தனத்தை இடைவிடாது நடத்துகிறார்.

இங்கிருக்கும் பிரம்மாவிற்கு அப்படி என்ன சிறப்பு, தெரிகிறதா?


ஐந்து சிரங்களைக் கொண்ட பிரம்மா, சிவனுக்குரிய சின்னங்களான மானையும், மழுவையும் கொண்டுள்ளார்!!

இசைக்கலைஞர் எவ்வாறு கணநேரம் தன் பாடலை நிறுத்தி, தாளத்திற்கும், ஸ்ருதிக்கும் ஏற்றவாறு எப்படி திரும்பத்தொடர்கிறாரோ, அதே போல் இங்கு நம் ஆடலழகனும் கணநேரம் தன் நடனத்தை நிறுத்தி தன் மத்தளத்தை இசைத்து இசையை தன் வழிக்கு நேர்த்திசெய்து மீண்டும் தொடர்கிறார்.

காரைக்கால் அம்மையார் இங்கே மற்றுமொரு தனித்துவம்! இது தனிச் சிற்பம் அல்ல அதே தூணில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பமே!

என்னவொரு அற்புதமான வடிவமைப்பு! வற்றிய முலைகள், சுருங்கி மடிப்புகளைக் காட்டும் கழுத்து தசைகள், வயதான தோற்றத்தை அற்புதமாக எடுத்துக் காட்டும் இந்தச் சிலை இளம் வயதிலேயே, வயதான பேய் உருவம் கேட்டுப் பெற்ற காரைக்காலம்மையார்! (முந்தைய பதிவுகள் பார்க்கவும்)

முயலகன் மட்டும் தப்பி விடுவாரா என்ன? இதோ தன் கையில் பாம்பை பிடித்தவாறு காணப்படும் கொழு கொழு முயலகன்.

சற்றே நீளமான பதிவுதான், என்னசெய்வது இதை பாகங்களாகப் பிரித்து பதிவது தவறென்று தோன்றுவதால் வார்த்தைகளைச் சுருக்கி, வண்ணப் படங்களை பேச வைக்கிறேன்.

அழகான பிரிந்த தாடை, அழகிய வரிகளைக் கொண்ட நாசிகளை உடைய அழகிய இளமைத் ததும்பும் வதனம் கொண்ட சிவன்.

உயர்த்திய கால்கள், எவ்வளவு அழகாக கனக் கச்சிதமாக வடிக்கப் பட்டிருக்கும் மூட்டு, கைகள், கைவிரல், நகம், விரல் மூட்டுகளின் மேல் உள்ள வரிகள், நகச்சதை, என்னவொரு தத்ரூபமான படைப்பு!!



மற்றுமொரு அழகிய வடிவமைப்பு, மேல்பாகமும் அடிப்பாகமும் காட்டும் கால் பாதம், விரல்கள், பாதத்தின் மேல் தெரியும் காலணியின் வார்ப்பட்டை, வளைந்து திரும்பி அழகிய முத்திரையைக் காட்டும் கை, கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல், இதை விடத் துல்லியமாக யாரால் வடிக்க இயலும்!






எண்ணற்ற வடிவங்களைத் தாங்கி இருக்கும், கைகள் வரிசையாய் விரிகின்றன…

தனித்துவம் பெற்ற எண்ணற்ற சின்னங்கள் எப்படித்தான் வடித்தனரோ! இவைகள் அனைத்திற்கும் பெயர்களும், முக்கியத்துவமும் கூடத் தெரியவில்லை, தேடிக் கண்டுபிடிப்போம்.

சிறப்பிற்கும் மேல் சிறப்பான ஒன்று!


பொதுவாக நாம் சிற்பத்தின் அளவைக்காட்ட ஏதேனும் தெரிந்த பொருளை உபயோகிப்பது வழக்கம், முக்கியமாக அளவில் மிகவும் சிறிய சிற்பங்களின் அளவை எடுத்துக்காட்ட, அதே போல் பெரிய கோவில் துவார பாலகர் சிற்பத்தின் அளவைக் காட்ட சிற்பி உபயோகித்திருக்கும் யானைக் கூட நினைவுக்கு வரலாம் உங்களுக்கு. ஆனால், இங்கு தற்செயலாகவோ, அல்லது சிற்பத்தின் பெருமையைக் கூட்டுவதற்காகவே, இயற்கையாக கிடைத்த இந்த அரிய தடயம், மனதை கொள்ளை கொண்டுவிட்டது! நீங்களேப் பாருங்கள்.

சிற்பியின் திறமையும், சிலையின் தத்ரூபமும் தான் இந்தக் கொசுவை ஏமாற்றி விட்டதோ! பாவம் படைத்தவனின் குருதியையே ருசிப் பார்க்க துளையிட முயற்சி செய்கிறது போலும்!!

இந்தப் பதிவும் இதில் உள்ள சிற்பங்களும் தங்கள் மனதை நிச்சயம் கொள்ளை கொண்டிருக்கும், அவ்வாறு இருந்தால் இந்தக் கொள்ளை அழகை பேரூர் செல்லும் யாவரும் கண்டு மகிழ வேண்டும் என்று நினைத்தால், இந்தப் பதிவை நண்பர்களோடும், நல்ல உள்ளம் கொண்ட அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள், அப்படியாவது சில நல்ல உள்ளங்கள் சேர்ந்து இரும்புச் சிறையில் இருக்கும் இந்த அழகுச் சிலைக்கு கண்ணாடிக் கூண்டு கிடைக்க வழி பிறக்கட்டும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஒரு ஊசியைத் தேடி – சிற்பத்தின் நுணுக்கம் – பேரூர்

பேரூரில் பல அற்புத பிரம்மாண்ட சிற்பங்கள் இருந்தாலும், சென்ற பதிவில் பார்த்தது போல், சில சிறிய அளவிலான சிற்பங்களும் உள்ளன. முதல் பார்வையில் பெரிதாக ஒன்றும் இல்லை என்று கருதத் தோன்றும் சிற்பம்தான், ஆனால் திரு. பத்மவாசன் போன்றவர்கள் நமக்கு எடுத்துச் சொன்னால் தான் புரியும் அதன் அருமை!

பலரும் இந்த வழிச் சென்றும் ஒரு விநாடிக் கூட இந்த சிற்பங்களை பார்க்காமல் போகின்றனரே என்று சொல்லும் எங்களுடைய கண்களுக்குமே எடு படாத சிற்பம். நல்லதொரு பாடமாக எங்களுக்கு இது அமைய வேண்டும் என்பதனாலோ என்னவோ, விட்ட படங்களை மீண்டும் எடுக்க பட்ட பாடு!!! இனி எந்த சிற்பத்தையும் குறைவாக எடை போடக் கூடாது என்ற பாடம் மண்டையில் ஆணி அடித்தாற்போல உறைத்து விட்டது.

திரு. பத்மவாசன் அவர்கள் தான் வரைந்த ஓவியத்தை கொண்டு சிற்பத்தின் உன்னதங்களை விளக்கினார்.

முதலில் எளிதாக தெரியும் அடையாளங்களை பார்ப்போம்.

ஒரு யோகியின் தவம். ஒரு காலை மடித்துப் புரிகிறார் கடுந்தவம். ஒரு சில தடயங்களை வைத்து அது யார் என்பதை நாம் எளிதாக அறியலாம்.


தோள்களில் ஒரு வில், பின்னால் ஒரு காட்டுப் பன்றி, ஆம் இது அர்ஜுனன்தான், ஈசனின் பாசுபத அஸ்திரம் பெற அவன் கடுந்தவம் புரிந்த காட்சி.

புடைப்புச் சிற்பத்தின் மிகவும் குறுகிய அமைப்பினுள் சிற்பி வில்லை வடித்துள்ள விதம் மிகவும் அருமை. பக்க வாட்டில் நின்று பார்த்தால் தெளிவாகத் தெரியும்.

ஆனால் இதையும் விட நுணுக்கமாக, சிற்பத்தில் ஒரு உன்னத அமைப்பு உள்ளது. அர்ஜுனனின் கடுந்தவத்தை குழப்பமின்றி விளக்க சிற்பி செய்த யுக்தி. அது என்ன?கீழுள்ள படத்தைப் பாருங்கள்.

படத்தில் ஏதாவது வித்தியாசமாக தெரிகிறதா? பொதுவாக சிற்பி காட்சிகளை சிற்பத்தின் சட்டத்திற்குள் சமமாக சித்தரிப்பான். ஆனால் இங்கு ஒரு காலின் பாதம் மட்டும் சற்று சட்டத்தை விட்டு வெளியே வருமாறு உள்ளது!. ஏன்? விரல்களையும், நகங்களையும் கனக்கச்சிதமாக வடித்துள்ளானே அதன் அழகைக் காட்டவா? சற்றே கூர்ந்து கவனித்துப் பாருங்கள்.

காலின் கட்டைவிரலுக்கு அடியில் ஏதேனும் தெரிகிறதா? இன்னும் பிடிபடவில்லையா! இதோ திரு. பத்மவாசன் தெளிவாகத் தருகிறார் பாருங்கள்…

ஆஹா! அர்ஜுனன் ஊசி முனையில்தவம் செய்யும் காட்சி!

நம் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த அழகை சரியான கோணத்தில் ரசிக்க படங்களை எடுத்து அனுப்பி உதவிய திரு ப்ரவீனுக்கு மிக்க நன்றி. விளக்க இப்படி அழகான படங்கள் இருக்க வார்த்தைகள் எதற்கு?!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பேரூர் தொடர் – ஒரு தவத்துடன் துவக்கம்

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் – பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் சென்ற பொது அங்கு இருக்கும் சிற்பங்களை கண்டு நான் அசந்து போனேன்! கண்முன்னே இருப்பது என்ன என்று திணறி நின்றேன். சிற்பக் கலையில் ஆர்வம் பெருக, எனது தேடல் பேரூர் சிற்பங்களின் மேல் இருந்த மதிப்பை பன்மடங்கு பெருக்கியது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவற்றை படம் பிடிக்க செய்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. அவற்றை படம் எடுக்க அனுமதி இல்லை. நாளேட்டில் வந்த சிறு சிறு படங்களையே பதிவு செய்ய முடிந்தது. எனினும், ஒவ்வொரு தோல்வியும், மீண்டும் அடுத்த முறை அங்கு சென்று அதிகாரிகளிடம் முறையிடும் வேகத்தை கூட்டியது. இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன.

2008 ஆம் ஆண்டு, சிங்கையில் அன்னலக்ஷ்மி நிறுவனம் ஒரு விழா எடுத்தது. வேண்ட வெறுப்பாக மனைவி மகனுடன் ஒரு சனிக்கிழமை அங்கு சென்றேன். எங்கே எப்படி வெளியே நழுவலாம் என்று எத்தனிக்கும் போது, ஒரு கோடியில் – தொலைவில் – மிகவும் அழகான விநாயகர் ஓவியங்கள் தென்பட்டன. இது போல

http://www.hindu.com/mp/2007/06/09/images/2007060951460301.jpg

என்னையும் அறியாமல் அருகே சென்றேன். அருமையான ஓவியங்கள், மிக நுண்ணிய வேலைபாடு, படங்களின் அடியில் ஒரு கையெழுத்து – பத்மவாசன். ஆஹா , என் அதிர்ஷ்டம் என்று நினைக்கையில், அருகில் ஒரு சிறு அறிவிப்பு பலகை தென்பட்டது. அதில் ஓவியர் அங்கு இருப்பதாகவும், உடனே நம் முகங்களை வரைந்து தருவார் என்றும் அறிவித்தது. சுற்றி பார்த்தேன், அடுத்த கடையில் ஓவியர் எங்கே என்று கேட்க, அதோ என்று கையை காட்டினார். மிகவும் எளிமையான குர்தா அணிந்து சாந்தமாக சிரித்த முகத்துடன் – திரு. பத்மவாசன் அங்கே நின்று நிகழ்ச்சிகளை ரசித்துக் கொண்டிருந்தார்.

அருகில் சென்று, என்னை நானே அறிமுகம் செய்துக்கொண்டேன். பொன்னியின் செல்வன், கல்கி, ஓவியர் சிகரம் சில்பி என்று நடை களைகட்டியது. சில்பியின் சிஷ்யன் என்ற முறையில் அவரைப் பற்றிய பல அரிய தகவல்களை கூறினார். நடராஜர் சிலை உருவத்தை வரையும் போது, காகிதம் குறைவாக இருக்க, இன்னொரு காகிதத்தை எடுத்து ஒட்டி தொடர்ந்தார் எனவும். இன்னொரு காகிதத்தில் அதே நடேசனின் பின் வடிவத்தை வரைந்தாராம் சில்பி. இரு காகிதங்களும் இதனால் ஒரே அளவில் இல்லாமல் போயின. பல வருடங்களுக்கு பின், திரு. பத்மவாசன் அவர்கள் ஒரு புத்தகத்திற்காக அவரது கணினியில் ஒரே அளவாக பெரிது படுத்தி, இரு ஓவியங்களையும் ஒன்றின் மேல் மற்றொன்றை வைத்து பார்த்தால் கணக்கட்சிதமாக பொருந்தின என்று அவர் அந்த அற்புத ஓவியரின் சிறப்பை விளக்கினார்.

பிரியும் போது தனது முகவரியையும் தொலைப்பேசி என்னையும் ஒரு சிறு காகிதத்தில் பென்சிலில் எழுதிக் கொடுத்தார். ( இன்றும் வைத்துள்ளேன் !!)

டிசம்பர் 2009. மீண்டும் பேரூர் நோக்கிப் படை எடுத்தோம். எப்படியாவது படம் எடுக்க அனுமதி பெற வேண்டும் என்ற வெறியோடு – தெரிந்த நண்பர்கள் பலரிடம் உதவி கேட்டேன். நண்பர்கள் பலர் முயன்றும், ஒன்றும் நடக்கவில்லை. எல்லோரும் ஆலயத்தின் அறநிலைத்துறை அதிகாரி மனது வைத்தால் தான் ஒரே வழி என்று சொன்னார்கள். எவ்வளவோ பண்ணிட்டோம், இதையும் பண்ணிவிடுவோம் என்று அவரது அலுவலகம் முன் சென்று நின்றோம். ஒரு ஒரு மணி நேரம் காத்திருந்த பின் உள்ளே அழைத்துச் சென்றார்கள். சிறு வயது அதிகாரி, எதிர்பார்த்ததை விட டிப் டாப்பாக உடை அணிந்து மலர்ந்த முகத்துடன் வரவேற்றார். சின்ன அலுவலகம், எனினும் நான்கு கணினிகள் சுற்றிலும், கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. முதலில் மறுத்தார், ஆலய பாம்ப்லெட் கொடுத்தார், அதில் இருக்கும் படங்களை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். எனினும் நான் ஏற்கவில்லை, எனது மடிக் கணினியை திறந்து, செய்து வரும் பணிகளையும், பட சேகரங்களையும் விளக்கினேன். ஒரு மணி நேரம் போனது, கல்லும் கரையும், என்பது போல அதிகாரியும் எங்கள் பணியின் பொருளை உணர்ந்து அனுமதி தந்தார். கட கட என்று வேளையில் இறங்கினோம். அப்போது மின்சாரம் போனது…எனினும் அடுத்த நாளும் சென்று படம் எடுத்து முடித்தோம். எல்லாவற்றையும் எடுத்து விட்டோம் என்ற மிதப்போடும் வெகு நாள் இலக்கு நிறைவேறிய மன நிறைவுடன் திரும்பினோம்.

அடுத்த வாரம், சென்னையில், திரு. பத்மவாசன் அவர்களை அவர் இல்லத்தில் சந்தித்தேன். படங்களை எல்லாம் நிதானமாக பார்த்தார். கண்களில் சிறு பிள்ளை கடையில் கமர்கட் பாட்டிலை பார்ப்பது போல, அனைத்தையும் வரைந்து விட வேண்டும் என்று நினைத்தார் போல.பேரூர் படங்களை பார்த்தவுடன் – விடு விடு என எழுந்து உள்ளே சென்றார் – சிறிது நேரத்தில் பல ஓவியங்களை கொண்டு வந்தார். தான் பேரூர் சென்ற போது வரைந்த ஓவியங்கள் என்றும் படம் எடுத்து போடுங்கள் என்றும் சொன்னார். கரும்பு கடிக்க கூலியா. முதலில் கண்ணில் பட்டது மூலவர் – வண்ணம் தீட்டிய ஓவியம்.

அசந்து போனேன். இப்படி அந்த தாமர வண்ணம் அதன் பொலிவு – எப்படித்தான் கொண்டு வந்தாரோ?

அடுத்து சில தூண் சிற்பங்களின் ஓவியங்களை படம் பிடிக்கும் பொது, இது ஒரு சிறப்பான சிற்பம் என்றார். இதை நான் பேரூரில் பார்த்த பொழுது ஒன்னும் பெரிதாக இல்லை என்று படம் கூட எடுக்க வில்லையே என்றவுடன், அதன் சிறப்பை விளக்கினர். தலையில் குட்டிக்கொண்டு திரும்ப படம் எடுக்க வேண்டுமே என்று திண்டாடிய பொழுத, நண்பர் பிரவீன் அவர்கள் உதவினார். நேற்று இதற்காகவே பேரூர் சென்று அதிகாரியை பார்த்து, தொலைபேசியில் அழைத்து சிலை இருக்கும் இடம் கேட்டு, படம் எடுத்து அனுப்பினார்.



அப்படி இந்த தூண் சிற்பத்தில் என்ன விசேஷம். ஏதோ முனிவர் தவம் செய்வது போலத் தானே உள்ளது

தொடரும். ….


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment