,
Flickr.com நண்பர்கள் திரு பிரபாகரன் ( ஆதி ஆர்ட்ஸ் என்ற பெயரில் அவரது அற்புத புகை படங்கள் ) மற்றும் ரவேஜஸ் என்ற பெயரில் திரு சந்திர சூடன் கோபாலகிருஷ்ணன், நான் உங்கள் அருமையான படங்களை இந்த தளத்தில் இடலாமா என்று கேட்டவுடன், மிகவும் பெருந்தன்மையுடன் - தாராளமாக இடுங்கள் என்று கூறி ஊக்குவித்தனர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
மல்லை கடற் கரை கோவில் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே - எனினும் அங்கு இருப்பது மூன்று கோவில்கள் என்று பலருக்கு தெரியாது. சென்னை வாசிகள் அனைவருக்கும் தெரிந்த காட்சி - தொலைவில் இருந்தே இந்த உன்னத கலை கோவிலின் சிகரங்கள் நம்மை ஈர்க்கும். ஆயிரம் ஆண்டுகள் காற்று, மழை, கடலின் சீற்றம் அனைத்தையும் வென்று பல்லவர் கலை போற்றும் ஒரு அற்புத சின்னம். பொதுவாக எந்த ஓவியம், கட்டடம் போன்ற படைப்புகள் / காட்சிகளில் இருபுறமும் ஒரு சமநிலை வேண்டும் என்று வல்லுனர்கள் கற்றுக்கொடுப்பார்கள் - எனினும் இங்கே ஒரு கோபுரம் குட்டையாகவும் மற்றொன்று நெட்டையாகவும் இருந்தும், நம் கண்ணில் அதை அழகாக தெரிய வைத்த சிற்ப திறன் அற்புதம் .
அது என்ன மூன்று ஆலயங்கள் ? முதலில் இருந்த பெருமாள் சிலையை ஒட்டி இரு சிவன் கோவில்கள் பல்லவ காலத்தில் உரு பெற்றன - ராஜ சிம்ஹ பல்லவன், ஒரு அபூர்வமான அரசன் ( அவன் நிறுவிய சாளுவன்குப்பம் புலி குகை நாம் முன்பே பார்த்தோம் - அங்கு இருக்கும் பாயும் சிங்க தூண்களுடன் கடற்கரை கோவில் சிற்பங்களை ஒப்பிடுங்கள் - அவனது மற்றொரு படைப்பான காஞ்சி கைலாசநாதர் கோவில் சிங்கங்கள் ஒரு பார்வையிலேயே அத்யந்தகாமன் என்ற அவன் முத்திரையை பதிக்கும் - வரும் மடல்களில் இவற்றை காண்போம் )
ஒரு புறம் இருப்பது (நாலு அடுக்கு கோபுரம் ) க்ஷத்ரிய சிம்மேஷ்வரா ஆலயம் - மறு புறம் இருப்பது ( மூன்று அடுக்கு) ராஜசிம்மேஷ்வர ஆலயம்.
இவ்விரு சிவ ஆலயங்களின் நடுவில் பெருமாள் - சோழர் கால கல்வெட்டுகளில் பள்ளி கண்டருலிய தேவர் என்று வழங்கியது.
திருமங்கையாழ்வார் மல்லைக்கு வந்து தலசயன பெருமாளைத் தரிசித்துப் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கிறார்
“புலன்கொள் நிதிக்குவை யொடு
புழைக்கை மா களிற்றினமும்
நலங்கொள் நவமணிக் குவையும்
சுமந்தெங்கும் நான் றொசிந்து
கலங்கள் இயங்கும் மல்லைக்
கடல் மல்லைத் தலசயனம்
வலங்கொள் மனத்தா ரவரை
வலங்கொள் என் மட நெஞ்சே!”
இங்கே வரும் தல சயனம் - இதை வரும் மடல்களில் பார்போம்.


English
தமிழ்
அண்மைய மறுமொழிகள்