சோழர்கள் பற்றி பல தகவல்கள் புதைந்து இருந்த கோவில் – எசாலம்-முதல் பாகம்

நண்பர் சாஸ்வத் போன்ற கட்டிளம் கா​ளைகள் நமது வரலாற்றுசின்னங்களின் மேல் காட்டும் அக்கறை மனதிற்கு பெரிதும் ஆறுதல் அளிக்கிறது. இன்று நம்மை அவர் தன்னுடன் எசாலம் கூட்டிச் செல்கிறார் – அப்படி அங்கே என்ன ஸ்பெஷல் ? மேலே படியுங்கள்

மார்கழி மாதத்தின் ஒரு காலைப்பொழுதில் சோழர் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஓரிடத்தைக் காண ஒரு சிறிய குழுவாக பல சரித்திரங்களைக் கண்ட முக்கிய சாலை வழியே நாங்கள் சென்றோம்.

அன்று காலை நாங்கள் சந்திக்கும்போது திரு. அரவிந்த் அவர்கள் நாங்கள் காணவிருந்த நான்கு கோவில்களைப் பற்றி விவரித்தார். சென்னையிலிருந்து ஒரே நாள் பயணத்தில், ஒன்றுக்கொன்று வெறும் 5 கி.மீ. தொலைவிற்குள் அந்த நான்கு கோவில்களும் அமைந்திருக்கின்றன. நாங்கள் செல்லவிருந்த இடங்களின் பட்டியலில் “எசாலம்” என்கிற பெயரைக் கண்டதும் எனக்குள் பெரும் பரபரப்பு. அது ஒரு முழுமையான கற்றளி (விமானத்தையும் சேர்த்து – இது சற்று அரிதாகும்), மேலும் மிகுந்த அழகுடைய வீணாதார தக்ஷிணாமூர்த்தியும் அங்குள்ளது என்பதைத் தவிர வேறென்ன எதிர்நோக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. கோவிலைப் பற்றி சொல்வதற்கு முன்பு எசாலத்தைக் காண நான் ஏன் இத்தனை பரபரப்புடன் இருந்தேன் என்று சொல்லிவிடுகிறேன்.

ஒருஆட்சியாளர் நிறுவிய கோவிலைப் பற்றி அக்கோவில் கூறும் விவரங்கள் மிகவும் குறைவேயெனக் கூறலாம். கங்கைகொண்ட சோழபுரத்தில் அதனை கட்டிய முதலாம் ராஜேந்திரசோழரைப் பற்றி குறிப்புகள் ஏதும் இல்லை. தன் தந்தையைப் போல் அல்லாது “கங்கை வரை கைப்பற்றிய சோழன்” என்பதே ஒரு புதிராக உள்ளது. ஏனெனில், இக்கோவிலில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் முதலாவதே அவரது இரண்டாவது மகன் வீரராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தியதுதான். அவர் யார்? அவரது குறிக்கோள் என்ன? அவரது தூண்டுதல் யார்? – இவையனைத்தும் மிகவும் கடினமான கேள்விகளே!

இக்கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய உதவும் இடங்களில் ஒன்று தான் ஈசாலம். பலஅற்புதமான அழகிய வெண்கலச் சிலைகளுடன் ஒரு தானசாஸனச்செப்பேடு கண்டெடுக்கப்பட்டது இங்குதான்.


இந்தச் செப்பேட்டினை மொழிபெயர்த்த டாக்டர். நாகசுவாமி அவர்கள், “ஆகஸ்டு 11, 1987ல் தமிழ்நாட்டின் தென்னாற்காடு மாவட்டத்தில் விழுப்புரத்தின் அருகே உள்ள ஈசாலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அங்குள்ள ராமநாதேஸ்வர திருக்கோவிலின் புனரமைப்புப் பணிகளை நடத்தும்போது, அக்கோவிலின் உள்ளே பல வெண்கலச் சிலைகள், கோவில் பாத்திரங்கள் மற்றும் செப்பேடு ஒன்றையும் கண்டெடுத்தனர்” என்று கூறுகிறார். இந்தச் செப்பேட்டில் உள்ள விவரங்கள் முக்கியமானவை, சுவாரசியமானவை. அதன் முழுமையான விவரங்களை மேலேயுள்ள சுட்டியில் காண்க. மேலே செல்வதற்கு முன் சில முக்கிய செய்திகளை இங்கேஅறிந்து கொள்வோம். இந்த சாஸனம் ராமநாதேஸ்வரர் எனும் பெயர் கொண்ட சிவபெருமானுக்கு காணிக்கையாக புதிய தேவதானம் உருவாக்கப்பட்டதின் விவரங்களைக் கூறுகிறது. இந்தக் குறிப்பின் மூலம் நாம் இவ்விடத்தைப்பற்றி அறியும் முக்கியத் தகவல் என்னவென்றால் இது ஒரு சாதாரண கோவில் அன்று. இக்கோவில் ராஜேந்திர சோழரால் கட்டப்பட்டு அவரது குருவும், தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் முதன்மை குருக்களும் (இவர் கங்கைகொண்டசோழபுரத்தின் முதன்மை குருக்களாகவும் இருந்திருக்கக்கூடும்) ஆகிய சர்வசிவ பண்டிதருக்கு அளிக்கப்பட்டது. சோழர்களில் மிகுந்த பலம் பொருந்திய மன்னனால் கட்டப்பட்டு தனது ஆசானுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட இக்கோயில் அரசாங்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆக நாட்டிலுள்ள சிறந்த கைவினைஞர்கள் இங்கு வேலை செய்ய அழைக்கப்பட்டிருக்கக்கூடும் என்பது இக்கோவிலைக் கண்டால் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

கோவிலின் முகப்பிலிருந்து பார்க்கும்போது நமக்கு பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. ஒரு சிறிய கோபுரம், இக்கால வடிவமைப்பில் கண்ணைப் பறிக்கும் நிறங்களில் நம்மை வரவேற்கிறது.

உள்ளே சென்றபின் தான் அழகிய சோழர் கோவிலைக் காண்கிறோம்.

நம் கண்களில் முதலில் தென்படுவது பெரிய உருண்டையான விமானமும் ( அபுதாபிக்கு வந்துவிட்டோமோ ?), அனைத்துப் பக்கங்களிலும் அழகிய வேலைப்பாடமைந்த பலிபீடமும்தான்.


சட்டங்களில்அழகிய வேலைப்பாடுகளும், ஆடும் மங்கையரும் கொண்ட கருங்கல் ஜாலி கோவிலின் முகப்பில் அமைந்துள்ளது.


மேலும் உள்ளே செல்லும் வழி இடதுபுறத்திலுள்ளது.

கோவிலின் சுவர்கள் முழுதும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

கோவிலைச் சுற்றி கோஷ்ட தேவதைகள் அமைந்துள்ளனர் – முறையே விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை




அடுத்த பகுதியில் தொடரும் …

எசாலம் செப்பேடு படங்களுக்கு நன்றி – திரு ராமன் அவர்கள்.
தமிழாக்க உதவி – திருமதி பர்வதவர்தினி


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பழமையான சிவ லிங்க வடிவங்கள் – குடிமல்லம்

டிசம்பர் மாதம் 2009 ஆம் ஆண்டு நானும் அரவிந்தும் ஒரு சுவாரசியமான பயணம் மேற்கொண்டோம். கார் போன போக்கில் சென்ற எங்களுக்கு பல சிதிலமடைந்த கோயில்கள் சோர்வூட்டின. அப்படி பல பக்தி ஷேத்ராடனங்களின் வரைபடத்தில் கூட இல்லாத கோவில்களில் ஒன்று புதுக்கோட்டை மூவர் கோயில் அருகில் இருக்கும் முசுகுந்தன் கோயில். செழுமையான பச்சை வயல்களுக்கு நடுவில் அமைந்த ஒரு அமைதியான கிராம சூழலில், அரை அடி ஆழ சேற்றில் முட்டி வரை இறங்கி கடினப்பட்டு சிற்பங்கள் எதுவுமே இல்லாத ஒரு தூண் மண்டபத்தை அடைந்தோம். இதற்கா இவ்வளவு சிரமப்பட்டோம் என்று நினைத்துக்கொண்டே உள்ளே சென்றோம். அந்த தூண்களின் வகைபடுத்தல், யாரோ சிக்கலான ஒரு புதிரை சேர்க்க முயற்சி செய்தது போல வெவ்வேறு கால, இடம் , பாணி என்று பல வித்தியாசமான தூண்களை ஒன்று சேர்த்து அமைத்திருப்பது புரிந்தது.

உள்ளே கருவறையானது இருட்டாகவும் ஈரமாகவும், எலிகள் நிறைந்தும் இருந்தது. அத்துடன் புகைப்பட கருவியின் ப்ளாஷ் தேவையான ஒளியை தர இயலவில்லை. இது போன்ற வசதியற்ற சூழலிலும், வெற்று வயிறிலும் என்னடா இப்படி புகைப்படம் எடுக்க கூட முடியவில்லையே என்று இப்படி அப்படி காமெராவை காட்டி கிளிக் செய்தபோது – அர்த்தமண்டபத்தின் ஒரு பகுதியை ஒளியேற்றியது. பார்ப்பதற்கு கனமான தூண் போன்ற ஒன்று ஒரு மணல் மூட்டையின் மீது இருப்பதாக புகைப்பட கருவியில் தெரிந்தது. மீண்டும் அருகில் சென்று இருட்டில் காமெராவை காட்டி படம் எடுத்தால் அங்கே..

அங்கு வீற்றிருப்பது. பிரம்மாண்டமான ஒரு சிவலிங்கம்.

மேன்மை ஸ்தபதி ஸ்ரீ உமாபதி ஆச்சார்யாவை அப்போது தான் சந்தித்து எனது அறியாமையால் ஒரு கேள்வி கேட்டு இருந்தேன் “அவரை பொறுத்த வரை சிற்ப வேலையில் எந்த உருவம் மிகவும் கடினமானது என்று”. உடனடியாக சற்றும் எதிர்பாராத பதில் வந்தது = “சிவலிங்கம்”. அவர் அப்போது தான் சிவலிங்க படிமவியலில் (Iconography) இரண்டு நாட்கள் அமர்வு நடத்தியதாக தெரிவித்தார். அவர் எங்களை கிண்டல் செய்கிறாரோ என்று சந்தேகம் வந்தது. சாதாரணமான ஒரு சிவலிங்கம் செய்வதில் என்ன சிரமம் இருக்க போகிறது! இந்த “சாதரணமான” உருவத்தின் மீது ஒரு பதிவை எழுதுவதற்கான துணிவை திரட்டி முடிவெடுக்க எனக்கு நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளது.

முதலில் ஹிந்து படிமவியலில் சர்ச்சைக்குரிய பாடம் இது என்பதால் நான் சிறிது துணிந்தும் கவனமாகவும் எழுத வேண்டியதாக இருக்கிறது. இந்தியா மட்டும் அல்லாது தென்மேற்கு ஆசிய நாடுகளில் – அதாவது மத்திய வியெட்னாம், கம்போடியா போன்ற நாடுகளிலும் பிரசித்தி பெற்று விளங்கும் இந்த உருவத்தில் அப்படி என்ன சிறப்பு? அதுவும் 6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளிலேயே இவை அங்கு பரவ காரணம் என்ன ! என்ன நம்ப முடியவில்லையா?

நான்கு அடி உயரத்தில் கம்பீரமாக நின்று அருங்காட்சியகத்தை அலங்கரிக்கும் அந்த கற்தூண்? அருகில் சென்று நோக்கினால் தெரிகிறது – இது தூண் இல்லை சிவலிங்கம் என்றும், இந்த இடம் இந்திய அருங்காட்சியகம் இல்லை – ஹோ சீ மின்ஹ் , வியெட்னாம் அருங்காட்சியகத்தில் உள்ள 6ஆம் நூற்றாண்டு “பு நான்” காலத்தியது.

இது சிவலிங்கம் போன்று வியெட்னாமில் இருக்கும் ஒரு உருவம் அல்ல. ஆகம சாஸ்திரத்தின்படியும் படிமவியல் சட்டப்படியும், துல்லியமாக செதுக்கப்பட்ட சிவலிங்கமே. இங்கு நாம் பார்க்கும் லிங்கம் நம் ஊரில் கோவில்களில் உள்ள லிங்கம் போலவே ஆவுடை எனும் பீடத்துடன் தான் இருக்கிறது. மேலும், லிங்கத்தில் மூன்று பாகங்கள் இருக்கிறது. சதுரமாக இருக்கும் அடிப்பாகம் ப்ரஹ்ம பாகதயும், நடுவில் இருக்கும் எண்கோணமான பகுதி விஷ்ணு பாகத்தையும், உருளையாக இருக்கும் மேல் பகுதி ருத்ர பாகத்தையும் குறிக்கிறது. கீழே வட்டமாகவும் மேலே முட்டை வடிவத்திலும், நடுவில் துளையுடனும் இருக்கும் ஆவுடையுடன் சேர்க்கும் பொது ப்ரஹ்ம பாகம் ஆவுடையின் கீழேயும், விஷ்ணு பாகம் ஆவுடையின் உள்ளேயும், ருத்ர பாகம் ஆவுடையின் மேலே பார்க்க கூடிய வகையிலும் இருக்கும். இதன் அளவு, விகிதம் மற்றும் ப்ரஹ்ம சூத்திரத்தின் வரிகள் எழுதபட்டிருக்கும் நுணுக்கங்களைஆய்வு செய்ய சுவாரசியமாக இருக்கும் போதிலும், இந்த லிங்கத்தின் ப்ரஹ்ம பாகத்தின் மேலே ஒரு முகம் செதுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற லிங்கங்கள் முகலிங்கம் என்பார்கள். பொதுவாக வட இந்தியாவில் இதை போல வடிவங்களை நாம் பார்க்க இயலும் ( ஆனால் அங்கே முகம் இன்னும் பெரிதாக இருக்கும் ), வட ஆந்திராவில் பஞ்ச ஆராம லிங்கங்கள் இப்படிப்பட்டவைதான் (சாமல்கோட், திராட்சாராமம், பீமாவரம், அமராவதி போன்ற தலங்கள்)

இன்னும் நாம் தலைப்புக்கே வரவில்லையே ! உலகிலேயே மிக பழமையான லிங்கங்களில் ஒன்று பிரசித்தி பெற்ற திருப்பதி அருகில் உள்ள காளஹஸ்தியிலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குடிமல்லம் என்ற இடத்தில உள்ளது. சுமார் 2nd C BCE இருந்து 1st C BCE காலத்தை சேர்ந்த வசீகரமான இந்த லிங்கம் சரியாக 5 அடி உயரம் கொண்டது. வெறும் லிங்கம் மட்டும் இல்லை, அதில் நம்மை வியக்க வைக்கும் சிற்பங்களும் உண்டு.

கூர்ந்து கவனிப்போருக்கு இது ஒரு மிக பழமையான தூங்கானை ( கஜ ப்ரிஷ்டம்) வடிவ கருவறை என்பதை புரியும். (இருப்பினும் கோவிலை காட்டிலும் லிங்கம் பழமையானது)

1973-74 இல் வெளியான ASI Review வின் புகைப்படம் ஒன்றை உங்களுக்கு வைக்கிறேன். அதில் தெரியும் லிங்கத்தின் கீழ் பகுதி அப்போது நயமற்ற ஒரு ஆவுடையாரால் மறைக்கப்பட்டு இருப்பது தெரியும். இதுவே அந்த உருவம் பரசுராமர் என்ற ஸ்தல புராணம் உருவாக காரணமாக இருந்து இருக்காலம். .

அந்த புராணங்களை முழுவதுமாக தூக்கி போட முடியாத வகையாக அந்த உருவம் வலது கரத்தில் (செம்மறி ??)ஆடு ஒன்றை அதன் பின்னன்கால்களிலும், சிறிய வாய் கொண்ட சொம்பு ஒன்றை இடது கையிலும் பிடித்து இருப்பதாய் இருக்கிறது. ஒரு கோடரி இடது தோளிலும் தொங்குகிறது.

ஆயினும் அறிஞர்களின் ஒருமனதாக கருத்து – இது ஒரு விகாரமான ராட்சசன் மீது நிற்கும் சிவன் என்பதே (கோடரியும் – பரசு அவர் ஆயுதமும் தானே ). அந்த ராட்சசன் மண்டியிட்டவாறும் தனது எடையை கால் முட்டி மீது கைகளை பதித்து தாங்கி நிற்கிறான். இவன் முகம் நாம் நடராஜர் இடத்தில் பார்க்கும் அந்த அழகிய முயலகன் போன்று காணப்படவில்லை – வௌவால் போன்ற காதுகளும், கன்னங்களில் ஆழமான கோடுகளுடன் பற்களை காட்டி கோராமாக இருக்கிறான். ஆனால் அவன் சிகை அலங்காரமும் அணிகலன்களும் அருமையாக செதுக்கப்பட்டு இருக்கிறது.

இந்து படிமவியல் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு முதன்மை நூலாய் இருக்கும் திரு கோபிநாத் ராவ் அவர்களின் Elements of Hindu Iconography நூலிலிருந்து இந்த அறிய உருவத்தையும், அணிகலன்களை பற்றியும் வடிவமைப்பை பற்றியும் ஆராய சில படங்களை உபயோக படுத்துகிறேன்.

இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த பழமையான லிங்கமானது நிச்சயமாக ஒரு ஆண் குறி வடிவம் தான்.

அந்த தண்டு ஏன் ஏழு பட்டைகளை கொண்டுள்ளது என்பதும் நாம் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய ஒன்றே.

பின்னங்கால்களை கொண்டு ஒரு (செம்மறி??) ஆட்டினை பிடித்து இருக்கும் இந்த தனிப்பட்ட விதம், இதை வேட்டை ஆடப்பட்ட மிருகமாகவும், பிற்காலங்களில் இருக்கும் மான் இல்லை என முடிவு செய்ய வைக்கிறது. மேலும் ஆர்வமூட்டுவது இடுப்பில் ஆடை (மிருக தோல் இல்லை !) இருக்கும்போதிலும், ஆண் குறியை நன்றாக பார்க்க முடிகிறது. அந்த ஆடை மெல்லியதானதாக இருக்கக்கூடும் என்பது பொதுவான கருத்து. இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று ஆண் குறி ஊர்த்துவ முகமாக இல்லை. (இதற்கு உங்களில் சிலர் கூகுளார் உதவியை நாட போகிறீர்கள் தானே !)

இந்த வடிவம் பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. பொதுவாக தென்னிந்தியாவில் கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்து வடிவங்கள் கிடைப்பதில்லை. இதற்குப் பொதுவாக சொல்லப்படும் காரணம் கல் ஈம சடங்குளுடன் சார்ந்து இருப்பதால் அதுவரை கல் கொண்டு சாமி சிலைகள் செய்வது இல்லை என்பதே. மரம் அல்லது சுதையால் தான் செய்தார்கள் – அப்படி செய்த வடிவங்கள் சில காலம் மட்டுமே இருக்கும். அப்படி இருக்க இந்த வடிவம் இந்த கால வரைக்கு சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னரே எப்படி செதுக்கப்பட்டது? மேலும் செதுக்கிய வடிவத்தின் அழகு, முறை கொண்டு பார்க்கும் பொது ஒரு மேலான கலை தெரிகிறது. இது ஒன்றும் ஏனோ தானோ என்று யாரோ சும்மா ஒரு கல்லை எடுத்து விளையாட்டிற்கு செதுக்கிய சிலை அல்ல – கைத் தேர்ந்த சிற்பி ஏதோ சில பல விதிகளை கொண்டு செதுக்கிய சிலை.

மேலும் முதன் முதலில் யார் சிவனின் முகத்தை பார்த்தாலும் மனதில் எழும் கேள்வி – இது நம்ம ஊரு சிலை போல இல்லையே என்பது தான். அப்படி இருந்தால் இது எங்கிருந்து வந்தது?

இன்னும் பல கேள்விகள் உங்கள் மனதில் எழும் என்பது உறுதி – கண்டிப்பாக பின்னூட்டமாக போடுங்கள்…

படங்கள் நன்றி : திரு. வசந்தா பெர்னாண்டோ , திரு காமன் பலம் மற்றும் ASI Review 1973 -74 and Elements of Hindu Iconography


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment