எல்லோரா கார்த்திகேயனின் ஆடுதலை சேவகர்கள்

எல்லோரா குடைவரைகள் சிற்பக்கலை ஆர்வலர்களுக்கு ஒரு புதையல். அது ஒரு குடைவரை என்பதனால் மட்டும் அல்ல அதில் உள்ள சிற்பங்களின் அழகு மற்றும் கலை நுணுக்கங்களும் தான். இன்று எல்லோரா குடைவரை 21 இல் இருந்து ஒரு அற்புத வடிவத்தை பார்க்கப்போகிறோம்.

அழகிய கார்த்திகேயனின் வடிவம் தான் அது.

படங்களுக்கு நன்றி:

http://www.elloracaves.org/search.php?cmd=search&words=&mode=normal&cave_name=21

அருமையான சிற்பம். சாமபங்கத்தில் கார்த்திகேயன், வலது கையை இடுப்பில் வைத்து ( இதற்கு கட்யவலம்பிதம் என்று பெயர் ) நிற்கும் கோலம்.

செதுக்கப்பட்டபோது நான்கு கைகளுடன் இருந்து சிலை, இப்போது காலத்தின் கோலத்தால் மிகவும் சிதைந்துள்ளது. வலது மேல் கரம் சுத்தமாக காணமுடியவில்லை. இடது மேல் கை, அவர் வாஹனமான மயிலை தடிவியவாறு உள்ளது. கீழே இருக்கும் இடது கையில் ஏதோ பாத்திரம் போல உள்ளது. பூணூல் அணிந்து, கழுத்தில் அணிகலன் பல, அழகிய கிரீடம் என்று ஜொலிக்கிறான் குமரன்.

மயிலும் காலத்தின் பசிக்கு தனது தலையை பறிகொடுத்துவிட்டது, ஆனால் அது மயில்தான் என்பது இறக்கை மூலம் தெளிவாக காட்டுகிறது. கால்கள் தான் கொஞ்சம் தடிமனாக உள்ளன ( முருகனை தூக்கி தூக்கி பலம் ஏறிவிட்டதோ?)

மேலே இரு புறமும் கந்தர்வர்கள். இடது பக்கம் ஆண் பெண் இருவருமே குமரனின் அழகை வியந்து வலது கையை விஸ்மயத்தில் வைத்துள்ளனர். வலது புறம், ஆண் கரம் கூப்பி அஞ்சலியில் உள்ளார். பெண்ணோ, கொஞ்சம் துணுக்காக அமர்திருக்கிறாள்.

இப்போது ஆடு தலைகளுக்கு வருவோம். இருவரும் யார்

குமாரனின் இடது புறத்தில் இருக்கும் ஆடுதலை கொண்ட உருவும், சற்றே நளினமாக தெரிகிறது. அதன் வலது கையில் மலரை கொண்ட முகர்ந்துக் கொண்டு இருக்கிறது. இடது கை இடுப்பில் ஒய்யாரமாக – அந்த தலை சற்றே சாய்ந்திருக்கும் பாணி, அனைத்தும் இது ஒரு பெண் என்று எனக்கு உணர்த்துகிறது – உங்களுக்கு ?

வலது புறம் இருப்பது ஆண். ஆனால் அவர் கைகள் வைத்திருக்கும் முறை புது விதமாக உள்ளது. வலது கை வணக்கம் சொல்ல இருந்தாலும், இடது கை மடக்கி உள்ளது. ( புரூஸ் லீ ‘குங் ஃபூ’ பாணியில் வணக்கம் சொல்வது போல உள்ளது)

இவர்கள் யார். குமரனின் கதைகளில் வரும் ஆடு தலை கொண்ட பெண் – அஜமுகி, சூரபத்மனின் தங்கை, கஸ்யப முனிவர்-மாயா வின் பெண்.

முழு கதையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.

http://indianmythologytales.blogspot.com/2009/04/tales-of-muruga-part-1.html

சரி, அந்த மற்றொருவர் யார்?. ஆடு தலை கொண்ட ஆண், தக்ஷன் மட்டும் தானே. அப்படியானால் இது தக்ஷனா ? அவனுக்கும் குமரனுக்கும் என்ன சம்மந்தம்?

இரண்டு வாரம் விடுமுறையில் நாளை முதல் செல்கிறேன். தில்லை, தஞ்சை, சீராப்பள்ளி, மதுரை, கோவை என்று பெரிய பயணம் முடிக்க ஆசை – பல அற்புத சிற்பங்களை உங்களுக்கு பரிசாகக் கொண்ட வர திட்டமிட்டுள்ளேன். அதுவரை , வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தோடுடைய செவியன்

சிற்பக்கலையின் அழகு அதன் தோற்றத்திலும் அதனுள் இருக்கும் நுணுக்கங்களினாலுமே மேலும் மெருகு பெரும். திடீரென பார்ப்போருக்கு அதன் தோற்றம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் , எனினும் அது முழுமையான ரசனை அன்று.

மகரிஷி அரவிந்தர் அவர்கள் கலையழகைப் பற்றியும் ரசனையைப் பற்றியும் வெகு அழகாக சொல்லி இருக்கிறார்.

அழகான பண்பாட்டுச் சின்னமாக காணப்படும் கலையழகு என்பது சாதாரணமானதன்று. ஏதோ சுற்றுலா பயணிகள் ஓஹோ என்று போற்றுவதற்காகவோ அல்லது கலையறிவில்லாதோர் தூற்றுவதற்காகவோ படைக்கப்பட்டதன்று. இந்த படைப்பின் கலை ஆழத்தைப் புரிந்து கொள்ள முயலவேண்டும் தனிமையில் அந்தக் கலையழகின் ரகசியத்தை நாம் உணாந்து ரசிக்கவேண்டும். அந்த அழகுடன் நம் மனதை ஒன்றிவிட்டு பார்க்கவேண்டும். மனது ஒன்றிய நிலையில், மனம் தியானத்தின் உச்சத்தில் அந்த அழகின் ரகசியம் புலப்படும்போதுதான் மனிதனின் இயற்கை நிலையும், உலகாயுதமாக மாறிவிட்ட இன்றைய வாழ்க்கை சூழலும் புரியும்

இதில் பிரச்னை என்னவென்றால் காளிதாசனை போன்று ஒரே நாளில் இந்த திறமை வந்துவிடாது. முறையே பயிலவேண்டும். நல்ல ஆசான் தேவை. இன்றோ அப்படிப்பட்ட ஆசான்கள் மிகவும் குறைவு. அப்படி இருக்கையில் அடுத்த படியாக நல்ல நூல்கள் நமக்கு கை கொடுக்கலாம். எனினும் சிற்ப ஆராய்ச்சி வல்லுனர்கள் நம்மை போன்று முதல் முறை சிற்பம் பற்றி படிப்போரை குறி வைத்து நூல்கள் எழுதுவதில்லை. பல புத்தகங்கள், குறைந்த பட்சம் கொஞ்சம் சிற்பக்கலை தெரிந்தவருக்கே சிறிது கடினமாகத்தான் உள்ளன குறிப்பாக அதில் வரும் சிற்பக்கலையை ஒட்டிய சொற்கள் அத்தனை எளியவை அல்ல. நாம் இருக்கும் சாதாரண நிலையில் இந்த புத்தகங்களை எடுத்து படிக்கும் அளவிற்கு எப்படி செல்வது?

இதற்கு ஒரு சில நூல்கள் உள்ளன. ஆங்கிலத்தில் திரு கோபிநாத் ராவ் எழுதிய எலிமென்ட்ஸ் ஆஃப் ஹிந்து ஐகானோகிராபி, என்ற அருமையான புத்தகம் உதவுகிறது. பலதரப்பட்ட சிற்பங்களை விவரித்து உடன் ( நமக்கு மிகவும் உதவியாக ) கோட்டோவியங்களை கொண்டு விளக்குகிறார். உதாரணத்திற்கு காதணிகளை எடுத்துக்கொள்வோம். ‘மகர’ குண்டலம் ‘பத்ர’ குண்டலம் போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே தலை சுற்றுகிறது. எந்த சிற்பக்கலை பற்றிய புத்தகத்தை எடுத்தாலும் முதலில் வருவது இந்த குண்டலங்கள் தான். இவை என்ன?

தில்லி அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த அற்புத நடராஜர் வடிவத்தை பார்ப்போம்.

கூத்தபிரானின் ஆனந்த தாண்டவம் பற்றி தொடர்ந்து எழுதினால் இந்த இழை முடியாது. அதனால் அவனது தோடுகளை மற்றும் பார்ப்போம். தோடுடைய செவியன் ஆயிற்றே அவன்.

இரு காதுகளிலும் வெவ்வேறு அணிகளின் அணிந்திருப்பதை நீங்கள் இப்போது பார்க்கலாம்.

அவனது இடது காதில் வட்டமாக இருப்பது பத்ர குண்டலம். பனை ஓலை குண்டலம் – அந்த காலத்தில் அவ்வளவு தான் – ஒரு பனை மரத்து ஓலை ( இலை) இருந்தால் போதும் ( தங்கம் விலை என்னவோ ?)

வலது காதில் இருப்பது கொஞ்சம் கடினமான வடிவுடைய குண்டலம். மகர குண்டலம். நாம் முன்னரே இந்த மகரத்தை பார்த்தோம், எனினும் இன்று ஜாவா தீவில் ஒரு அற்புத மகர வடிவம் மீண்டும் பாருங்கள்..


( மகரம் – யானையின் தும்பிக்கை, சிங்கத்தின் கால்கள், மேலும் பன்றி, மீன், குரங்கு என்று பல மிருகங்களை உட்கொண்ட ஒரு புராண மிருகம். அழகிய வேலைப்பாடுடைய வால் இதற்கு)

இதை அவன் ஏன் தனது காதில் அணிந்தான் ( அதை பற்றி மேலும் தேட வேண்டும் – அப்படி பார்த்தல் இன்னும் வினோதமான காதணிகளும் உண்டு. அவற்றை பின்னர் பார்ப்போம் ) இப்போது மகர குண்டலம் இதோ .

அப்பாடா – இரு சின்ன காதணிக்கே இப்படிக் கண்ணை கட்டுதே


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

வாயிற்காப்போனை சூரையாடிய சோழன்.

அரசர்கள் போர் புரிவது என்பதே சர்ச்சைக்குரிய விஷயம். அதிலும் ஒரு நாட்டை வென்று அங்கிருந்து பல பொக்கிஷங்களை சூறையாடி வருவது என்பது இன்னும் பிரச்சினைக்குரியது. எனினும் நம் வரலாற்றில் இதை பல முறை பார்த்திருக்கிறோம். வாதாபி வெற்றியின் போது நரஸிம்ஹ பல்லவரின் படைத் தளபதி பரஞ்சோதி கொண்டு வந்த வாதாபி கணபதி, ஸ்ரீவிஜயத்தை வென்று ராஜேந்திர சோழன் கொண்டு வந்த விஜய தோரணம், இதே வரிசையில் இன்று நாம் பார்க்கும் போர் பரிசு (தாரசுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு) தற்சமயம் தஞ்சை கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சாளுக்ய வாயிற் காப்போன். (படங்களுக்கு நன்றி சதீஷ் மற்றும் ஸ்ரீராம் )

அருமையான வேலைப்பாடு கொண்ட சிற்பம். எனினும் இதை ஏன் சோழன் வெற்றிப் பரிசாக கொண்டு வர வேண்டும். அதை எப்படி எப்பொழுது அதன் பீடத்திலேயே செதுக்கியும் வைத்தான்!

இராஜேந்திர சோழனின் மைந்தன் இராஜாதிராஜன் மேலைச் சாளுக்கியர் தலைநகரான கல்யாணியை வென்றான். அப்பொழுது அங்கிருந்து ஒரு சாளுக்கிய துவாரபாலகர் சிலையை கொண்டுவந்தான். அதன் அடியில் “உடையார் விஜயராஜேந்திர சோழர் கல்யாணபுரம் எரித்துக் கொண்டு வந்த துவாரபாலகர்” என்று எழுதியுள்ளது.

சரி, அருமையான சாளுக்ய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பத்தை முதலில் பார்ப்போம்.

வெறும் கதை பேசிக்கொண்டு நிற்காமல், சுவாரசியமான தகவல்களுக்கு வருவோம். சிற்பத்தின் அடிப்பாகத்தில் செதுக்கப்பட்டிருக்கும் சில உருவங்களை கவனிக்கவும்!

மேலே இருப்பது உடும்பு, வாயிற் காப்போனின் காலுக்கு அடியில் இருப்பது என்ன சுண்டெலியா? அதை அடுத்து ( இடது புறத்தில்) வால் மாதிரி இருக்கிறதே – அது என்ன? வலப் பக்கம் இருக்கும் மிருகம் என்ன வகை?

கீழுள்ள படங்களை ஊன்றிக் கவனிக்கவும்.

இந்த படங்களுக்கு நன்றி
http://picasaweb.google.com/gildubs/IndeDuSud2008#

ஆஹா! ஒரு சுண்டெலியை பிடித்து விளையாடும் பூனை. அதற்கு எதிரில்??


அடடே…! இங்கே பாம்பு ஒன்று எலியை விழுங்குவதைப் போலல்லவா வடிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்ததும் நமக்கு வேறு ஒரு வாயிற்காப்போன் சிலை நினைவுக்கு வருகிறதல்லவா?
தஞ்சை பெரிய கோயில் வாயிற்காப்போன்

ஆம், அது தஞ்சை பெரிய கோயில் வாயிற்காப்போன்தான், நீங்களே பாருங்கள்.

இன்னும் அருகில் சென்று பார்த்தால்!

இராஜராஜசோழன், அப்பர் பெருமானின் பாட்டிற்கிணங்க பெரிய கோயில் விமானத்தை தக்ஷின மேரு என்று கைலாயத்தை ஒப்பிடும் நோக்கத்துடன் பிரம்மாண்டமான சிங்கம், அதை ஒட்டி யானையையே விழுங்கும் பாம்பு, முதலை அல்லது இராட்சத பல்லி ஆகியவற்றை அற்புதமாக வடித்து வைத்தான்.

இந்த வடிவத்தோடு சாளுக்ய சிற்பத்தை பொருத்திப் பார்த்தால் சாளுக்கியன் ஏதோ நையாண்டிக்காக அந்தச் சிலையை வடித்தது போலல்லவா உள்ளது! மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடல்லவா! ஒரு வேளை இதனால் தான் சோழன் இந்த வாயிற்காப்போனை சூரையாடி வந்தானோ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment