பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – மூன்றாம் பாகம்

சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சியைப் பற்றிய நமது தேடல் இன்றும் தொடர்கிறது. சென்ற இரு பதிவுகளில் நாம், தர்மராஜா ரதம் ( அதனை அதன் சரியான பெயர் சொல்லி அழைக்கவேண்டும் என்றால் ஆத்யந்தகாம பல்லவேஸ்வர க்ருஹம் என்று அழைக்க வேண்டும் ) சோமஸ்கந்தர் வடிவத்தை மல்லை கடற்கரை ராஜசிம்மேஸ்வர சோமஸ்கந்தர் வடிவத்துடன் ஒப்பிட்டோம். ராமானுஜ மண்டபத்தில் உள்ள அழிந்த சோமஸ்கந்தர் வடிவத்தின் அமைப்பையும் பார்த்தோம்.

வாசகர்களுக்கு நாம் இட்ட கேள்விகளை இன்னும் ஒருமுறை காண்போம்.

1. இதுவரையிலும் நாம் பார்த்த இரு வடிவங்களில் எதை முதலில் வந்த வடிவம் என்று சொல்லமுடியுமா. அதில் உள்ள வேலைப்பாட்டின் வளர்ச்சியை வைத்து , நாம் அந்த முடிவுக்கு வர முடியுமா?

2. இரு வடிவங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்ன.என்று பட்டியல் இட முடியுமா ?

3. மேற்கண்டவற்றை வைத்து ராமானுஜ மண்டபத்தில் அழிந்த சோமஸ்கந்தர் வடிவம் எந்த பாணியில் உள்ளது என்று நாம் உறுதியாக சொல்ல முடியுமா ?

வாசகர்கள் மீண்டும் முதல் இரு பாகங்களை ஒரு முறை வாசித்த பின்னர் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் கூற முயலலாம். அதுவரை நாம் அடுத்த இடத்திற்கு செல்வோம். இன்னும் ஒன்றல்ல மூன்று அற்புத சோமஸ்கந்தர் வடிவங்கள், புலிக் குகை என்று இன்று அழைக்கப்படும் சிற்பக் கொத்தில் உள்ள அதிரணசண்ட மண்டபம். முன்னரே காணாமல் போன இரு சிவலிங்கங்கள் பற்றிய பதிவில் நாம் இந்த மண்டபத்தை பார்த்தோம்.

இன்று இன்னும் அருகில் சென்று, முதலில் நடுவில் உள்ள கருவறையைப் பார்ப்போம்.


சோமஸ்கந்தர் சிற்பம் தெரிகிறதா. ரொம்ப முயற்சிக்க வேண்டாம், இன்னும் அருகில் எடுத்து செல்கிறோம்.

சோமஸ்கந்தர் வடிவத்தை ஒற்றி வரைந்த ஓவியம் உங்கள் பணியை சுலபமாக்க .

இப்போது சற்று பின்னல் சென்று, வெளியில் இருக்கும் மற்ற இரு சோமஸ்கந்தர் வடிவங்களையும் பார்ப்போம்.

இரு சோமஸ்கந்தர் சிற்பங்கள்.

அவற்றின் ஒற்றி எடுத்த ஓவியங்கள்.

வாசகர்களுக்கு மீண்டும் ஆனால் சற்றே சுலபமான கேள்விகள்.

1. இந்த சோமஸ்கந்தர் எந்த பாணியில் உள்ளனர் ?

2. மூன்று சோமஸ்கந்தர் வடிவங்களும் ஒரு பாணியா?

நம் தேடல் தொடரும்

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – இரண்டாம் பாகம்

சென்ற பதிவில், சோமஸ்கந்தர் வடிவத்தின் மிக தொன்மையான உருவத்தையும் தற்காலச் சிலையையும் பார்த்தோம்.

தர்மராஜா ரதத்தில் உள்ள சோமஸ்கந்தர் வடிவத்தை மிகவும் தொன்மைவாய்ந்தது என்று சொல்கிறார்களே அது எப்படி! அதனை மீண்டும் ஒரு முறை பார்த்துஆராய்வோம். படங்களும், வினாக்களும் என்னுடையது, விடையை நீங்கள்தான் கொடுக்கவேண்டும்.

இதை பல்லவ மன்னன் ராஜசிம்ஹன் காலத்து சோமஸ்கந்தர் வடிவத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் ஏதும் பிடிபடுகிறதா என்று பார்ப்போம். நாம் கொடுத்து வைத்தவர்கள், சிற்பக் கலைக்கு மெருகேற்றியஅவனது காலத்து சோமஸ்கந்தர் வடிவங்கள் பல இடங்களில் உள்ளன. மல்லை கடற்கரை கோயிலில் அற்புதமான வடிவம் ஒன்று உள்ளது. (மல்லை கடற்கரை கோயில் உண்மையில் மூன்று ஆலயங்கள் கொண்டது. முதலில் இருந்த சயன பெருமாள் கோயில், அதனை ஒட்டி ராஜ சிம்ஹன் எடுப்பித்த ராஜசிம்மேஷ்வரம் மற்றும் ஷத்ரியசிம்மேஷ்வரம் என்ற இரு சிவ ஆலயங்கள், நாம் இன்று பார்க்கும் சோமஸ்கந்தர் வடிவம் ராஜசிம்மேஷ்வர ஆலயத்தில் உள்ளது. ஷத்ரியசிம்மேஷ்வரம் சோமஸ்கந்தர் வடிவத்தை அடுத்து வரும் பதிவுகளில் அலசுவோம்).

இரண்டு சிற்பங்களுக்கும் உள்ள வேற்றுமையை எளிதில் கண்டறிய ஒற்றி எடுத்த கோட்டோவியங்கள் உதவும். ஆறு வித்தியாசம் கண்டுபிடிப்பது போல், இரண்டு சோமஸ்கந்தர் வடிவங்களுக்கும் உள்ள வேற்றுமைகளை நீங்களே ஒரு பட்டியல் இடுங்கள் பார்ப்போம்.

மல்லையின் புதிர்களில் இன்னும் ஒரு புதிர். மல்லை ராமானுஜ மண்டபம், அங்கிருக்கும் குடைவரைகளிலேயே மிகவும் முழுமை பெற்ற குடைவரை. எனினும் வன் செயல்களால் இங்கு உள்ள அனைத்து சிற்பங்களும் அழிக்கப்பட்டுள்ளன. .இரு வாயிற் காப்போன்கள் முதல் உள்ளே இருக்கும் மூன்று புடைப்பு சிற்பங்களும் உளி கொண்டு முழுவதுமாக செதுக்கி எடுக்கப்பட்டுள்ளன. ( யாரால், எதற்கு ?)

ஆனால், எந்தக் கயவனும் தடயம் விடாமல் செல்ல மாட்டானே. கருவறையில் உள்ள பின் சுவரில் அழிக்கபட்ட சிற்பத்தின் தடயங்கள் இன்னும் தெரிகின்றன – ஆம் அதுவும் ஒரு சோமஸ்கந்தர் வடிவமே.

நன்றாக உற்றுப் பாருங்கள், சரி இதையும் ஒற்றி எடுத்து பார்ப்போம். சோமஸ்கந்தர் எந்த வகை? தர்மராஜா ரதம் பாணியா அல்லது ராஜசிம்மேஷ்வர பாணியா? நீங்களே கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

உங்கள் பணியை எளிதாக்க , தர்மராஜ ரதத்தில் உள்ள சோமஸ்கந்தர் வடிவத்தை இரண்டாய் பிரித்து உமை ஒரு பாகமாகவும் ஈசனை மற்றொரு பாகமுமாகத் தருகிறேன்.

இன்னும் உதவி தேவையா. படங்களை நான்றாக தலையை சாய்த்து பாருங்கள் !!

படங்களுக்கு நன்றி:

Varalaaru.com. மற்றும் திரு அசோக்

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – முதல் பாகம்

நண்பர்களே, எங்கள் இடுகைகளை தொடர்ந்து படித்து பின்னூட்டம் இடுவதற்கு எங்கள் நன்றி. ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்பிகிறோம், இந்த பதிவுகள் ஆய்வுக்க் கட்டுரைகள் அல்ல, எங்கள் சிற்பத் தேடலில் எதிர்கொள்ளும் புதிர்களையும் அதற்கான ( எங்கள் அறிவுக்கு எட்டும் ) விடைகளையும் எளிய முறையில் உங்களுடன் பகிர்கின்றோம். நாங்கள் சொல்வது தான் சரி என்பதற்காக அல்ல, நீங்களும் எங்களை போல தேட ஆர்வம் கொள்ளவே. பிழைகள் ஏதேனும் இருந்தால் வெளிப்படையாக எங்களுக்கு எழுதுங்கள்.

என்னடா, பலமான அஸ்திவாரம் இந்த பதிவுக்கு என்று அஞ்சவேண்டாம். பதிவு அப்படி.

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த தொடரின் முதற் பதிவு இது. இதை நாங்கள் திரு கிப்ட் அவர்களது ஆராய்ச்சியின் அடிப்படையில் படைக்கிறோம். அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

இந்த தொடரின் நோக்கம் கேள்விகள் எழுப்புவது, அவற்றிற்கு எளிய தர்க்கரீதி முறையில் விடை தேடுவது. இன்னும் பயமுறுத்தாமல் தொடரின் முதல் பதிவுக்கு செல்வோம். பல்லவ சோமஸ்கந்தர்

இந்த தொடரின் வாதம் – பரிணாம வளர்ச்சி. அதாவது ஒரு சிற்பம் எப்படி காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி கொண்டு மாறுகிறது என்பதை விளக்கும் முறை. அது சரி, சோமஸ்கந்தர் சிற்பம் இன்றைக்கு எப்படி உள்ளது? இதோ அவற்றின் தற்காலத்து முழுமை பெற்ற சிலை வடிவம்


சிற்பத்தின் அழகை ரசிக்க அவற்றின் ஒற்றிஎடுத்த கொட்டோவியம்

சரி, இது இன்றைய நிலை. இந்த வடிவத்தின் ஆதி, மிகவும் தொன்மை வாய்ந்த, இன்றைக்கும் இருக்கும் வடிவம் உள்ளதா. ஆம், இருக்கிறது. மல்லை தர்மராஜா ரதம், மேல் தலத்தில் இருக்கும் புடைப்பு சிற்பம்


முதல் பதிவு என்பதால், ஆராய்ச்சிக்கு ஒன்றும் இல்லை. சிலை மற்றும் சிற்பத்தின் அழகை முதலில் ரசிப்போம். பின்னர் பல இடங்களுக்கு சென்று வரும் பதிவுகளில் எப்படி இந்த வடிவம் மாறுகிறது என்பதை பார்ப்போம்.

படங்களுக்கு நன்றி:

www.Varalaaru.com மற்றும் www.exoticindiaart.com

திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்

நண்பர் திரு சக்திஸ் அவர்களுடன் தற்செயலாக சிங்கை அருங்காட்சியகம் சென்ற போது பார்த்த ஒரு அற்புத சோழ சிலையை இன்று உங்களுடன் பகிர்கின்றேன். கருங்கல்லில் சிலை செதுக்குவது என்பது கலைஞனின் கலைக்கு ஒரு சவால், அதுவும் கடினாமான கல்லில் அரங்கனின் கருணை முகத்தை வடிக்கவேண்டும் என்றால், இரும்பு உளி கொண்டு செதில் செதிலாக கல்லை செதுக்கி அவனது அழகு கன்னங்களை வெளிக்கொணர வேண்டும், அலங்காரப்ரியனின் அங்கங்களை அணிகலன்களால் மெருகூட்ட வேண்டும். சிறு பிழைக்கும் இடம் இல்லாத இந்த திறனே அவனது படைப்புகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் அழியாப் புகழுடன் இருக்கச் செய்கிறது.

இந்த சிலை, சற்று சிதைந்துள்ளது – எவரோ வேண்டும் என்றே சிதைத்துள்ளனர். மூக்கறுப்பு . சாதாரணமாக இதற்குப் பிறகு இவை ஆலயங்களில் வழிபாட்டிற்கு வைக்கப்பட மாட்டா. மனிதனின் தேடலில் இறைவனைக் காண பல பாதைகள், பலமுறை இந்த வெவ்வேறு பாதைகள் சந்திக்கும் பொது சிதறும் மனித உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு. பாவம் இந்த மோதலில் மனிதனே மடியும் பொது சிலை என்ன செய்யும்.

எனினும் சிதைந்த இந்த வடிவிலும் நாம் பார்க்க நிறைய்ய இருக்கிறது. லியோநார்டோ டாவின்சி சொன்னாராம் – மூன்று விதமான மனிதர் உள்ளனர். சிலர் காண்போர். மற்றவர் இதை பார் என்று சொன்னால் காண்போர். சிலர் காணாதோர்!

இந்த சிற்பத்தில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது ? முழுவதுமாக உள்ளே செல்லாமல் ( அதற்கு சிதையாது இருக்கும் ஒரு சிலையை எடுத்து பிறகு பார்ப்போம் )

முதலில் இடையில் அவரது இடுப்பில் உள்ள சிங்க முக பட்டை

சரி சரி, முக்கியமான இடத்திற்கு வருவோம். முன்னரே வெண்கல சிலைகளில் பார்த்த ஸ்ரீவத்சம். இதோ இங்கே முக்கோண வடிவில்

மிகவும் கடினமான பனி. அதுவும் இப்படி மார்பில் இருந்து வெளியே புடைத்து நிற்கும்படி செதுக்குவது மிக கடினம்.

இதை இன்னும் ஆராய வேண்டும். உலோக சிலையில் உள்ள சித்தரிப்பு மற்றும் கற்சிலை – வெவ்வேறு காலங்களில் எப்படி ஸ்ரீவத்சம் வடிக்கப்பட்டுள்ளது என்பதை இன்னும் ஆழமாக பார்க்கவேண்டும்

உயிர் சிலை என்றால் என்ன ?

பல்லவ சிற்பியின் உன்னதக் கலை ஏன் நம் மக்களை முழுவதுமாக சென்றடையவில்லை? கண்முன்னே இருக்கும் அற்புத வடிவங்களை நம் கண்கள் ஏன் உணர மறுக்கின்றன ?
உதாரணத்திற்கு அர்ஜுன ரதம் சிற்பங்கள் – இரண்டு அற்புத வடிவங்களை இன்று பார்ப்போம். ( எந்த புண்ணியவான் பஞ்ச ரதங்களுக்கு பஞ்ச பாண்டவர் பெயரை சூட்டினானோ ? எதற்கு வைத்தானோ ?)

அர்தனாரி வடிவத்தை பற்றி பார்க்கும் போது, சிற்பி எப்படி விடையை வைத்து சிற்ப வடிவத்தை அழகு சேர்த்தான் என்று பார்த்தோம். அந்த யோசனை திடீரென அவனுக்கு உதித்ததா, அல்லது வேறு எதாவது யுக்தி அவனுக்கு உதவி செய்ததா? அதைத்தான் இன்று நாம் பார்க்க போகிறோம். எப்படி விடை வாகனான ஈசனின் உருவத்தை அர்தனாரி உருவத்துடன் இணைத்தான் என்பதை பாருங்கள்.

அர்ஜுன ரதம். விடை வாகன்.

பல்லவனுக்கே உரிய அழகு சிற்பம், அதிகமான அணிகலன்கள் இல்லை,
எளிமையான எனினும் அழகிய அங்க அமைப்பு.

என்னடா இவன், சும்மா சாதரணமான சிற்பத்தை போட்டுவிட்டு இப்படி வர்ணிக்கிறானே என்று நீங்கள் மனதுள் நினைப்பது கேட்கிறது. சிலை அப்படி ஒன்றும் அபாரமாக இல்லையே? அதுவும் உடலமைப்பு சற்று சரியாக இல்லாதது போல தெரிகிறதே? சிற்பி ஏதாவது தவறு செய்துவிட்டானா ? இல்லை, கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இதோ விளக்குகிறேன்

முதலில், இது ஒரே கல்லில் குடையப்பட்ட ரதம், புடைப்பு சிற்பம், பல்லவனின் அற்புத சிற்ப திறனை பிரதிபலிக்கும் சிற்பம்.


இந்த கோணத்தில் பாருங்கள் – இப்போது புரிகிறதா ?

சிற்பக்கொத்தில், கிடைத்த சட்டத்திற்குள் ஈசனையும் அவனது விடை வாகனத்தையும் நேர் வடிவில் செதுக்க இடம் இல்லை. அதனால் கல்லின் ஆழத்தை உபயோகம் செய்து, ஈசனை ஒரு பக்கமாக திருப்பி வடித்துள்ளான் சிற்பி.

இந்த கோணம் சிற்பத்தை ரசிக்க சரியான கோணம் அல்ல ( படத்திற்கு நன்றி அசோக், நீங்கள் எப்போதுமே புதிய கோணங்களில் படம் எடுப்பது இங்கே உதவுகிறது ) , எனினும் சிற்பத்தின் ஆழத்தை உங்களுக்கு கட்டவே இதை இங்கே இடுகிறேன். கருங்கல்லில் இதனை கற்பனை செய்து எப்படி தான் செதுக்கினானோ!! நினைத்துப் பார்க்கவே தலை சுத்துகிறது.

இப்போது புரிகிறதா – விடைவாகனும் அர்தனாரி உருவங்களும் எப்படி ஒன்றாக ஆயின என்று.

சிற்பியின் இத்திறமையை ரசிக்க அர்ஜுன ரதத்தில் இருந்தே இன்னும் ஒரு எடுத்துக்காட்டு .

இது கல் என்றே நம்மை மறக்கடிக்கும் சிற்பம் இது


அந்த கோணத்தில் இருந்து அல்ல , இந்த கோணத்தில் பாருங்கள்.


அரசி கூப்பிட, அவள் குரலுக்கு தலை திருப்பும் அற்புத வடிவம்

ஒரு நிமிடம் கண்ணை மூடி கற்பனை செய்யுங்கள். பெண் குரலில் ” பிராண நாதா !” ஆண் . முகத்தை திருப்பியவாறு ” பிரிய சகியே ” – அல்லது இப்படி கற்பனை செய்வோமா ” ஏன்னா , செத்த இங்க பாருங்கோ !”

உயிர் சிற்பம் என்றால் என்ன? இதுவே அது. அதை நாம் ஆத்மார்த்தமாக உணர வேண்டும்

ஆணுக்குப் பெண் வளைந்து கொடுக்க வேண்டுமா?

ஆணுக்குப் பெண் வளைந்து கொடுக்க வேண்டுமா அல்லது பெண்ணுக்கு ஆண் வளைய வேண்டுமா ?

பதறாதீர்கள், சிற்பத்தை பற்றித் தான் பேசுகிறோம்.

முந்தைய பதிவில் அர்தனாரி வடிவம் எப்படி படிப் படியாக சிற்பியின் கையில் மெருகு பெற்றது என்பதை பார்த்தோம். அதில் கற்சிற்பங்களில் எப்படி பெண்ணின் நளினத்தை வளைவுகளிலும் அதை ஈடு கட்ட அப்பனை விடையின் மீது சாய்த்து வடிக்க நேர்ந்தது என்பதையும் பார்த்தோம். முடிவில் வெண்கல சிலைகளில் இந்த வடிவத்தை பிறகு பார்ப்போம் என்று நிறுத்தினோம். அங்கிருந்து இன்று தொடர்வோம்.

கல்கி நந்தினியை பற்றி பொன்னியின் செல்வனில் சொல்வார்..” தன் காலால் இட்ட பணியை ஆண்கள் தலையால் செய்து முடிக்க வைப்பாள்” என்று. இவை அந்த உத்தரவை கூட செய்ய வேண்டாம் – பார்த்தாலே அவற்றின் மதிவதன அழகில் சொக்கி கொத்தடிமைகளாய் ஆக்கும் நம்மை, பார்க்கப் பார்க்க சிந்தையை மயக்கி நமக்குப் பித்து பிடிக்க வைக்கும். ஆம், வெறும் வெண்கல சிலைகளை அல்ல, சோழர் சிலைகளையே பார்ப்போம். அதுவும் வெறும் சோழர் சிலையல்ல , ஒரு அற்புதச் சிலை. (தற்போது இருக்கும் இடம் கிளீவ்லாந்து அருங்காட்சியகம் ,அவர்களது படங்களுக்கு நன்றி )

அருகில் சென்றுதான் பார்ப்போமே. சிலையை அல்ல, அதை ஒத்தி எடுத்த ஓவியத்தை.

சிலர் பார்த்தவுடனேயே, அது என்ன அப்பனுக்கு இரண்டு கை, அம்மைக்கு ஒரே கை, இது ஆண் ஆதிக்கம் என்பர். ஐயா, இது அப்படி அல்ல. ஆணும் பெண்ணும் சரி சமானம் என்பதை நமக்கு உணர்த்தவே இந்த அற்புதக் கோலம். பின்னர் எதற்கு ஈசனுக்கு இரண்டு கைகள். பொறுமை. ஓவியத்தை மீண்டும் பார்ப்போம். ( இன்னும் கொஞ்சம் பின்னால் நகர்ந்து )

கற்சிலைகளில் பார்த்தது போலவே, இங்கும் உமையின் இடையை கடல் அலையென வளைத்து, உடலை திரிபங்கத்தில் வார்த்துள்ளான் சிற்பி. மீண்டும் ஒருமுறை கல்லையும் உலோகத்தையும் பார்ப்போம்.

உமையின் கை, அப்பப்பா – அழகே வடிவமாக மலர்ந்த தாமரையின் மெல்லிய காம்பை பிடித்திருப்பது போல அபிநயம் பிடிக்கும் விரல்களின் நளினம். அந்தப்பக்கம் அப்பன் மழுவை பிடித்திருக்கும் காட்சி அருமை. எதற்கு இன்னும் ஒரு கை.

சரி, விவாதத்திற்கு கையையும் விடையையும் அகற்றி விடுவோம்.

சிலை ஒரு பக்கம் வளைந்து கொண்டு – எப்படிச் சொல்வது. பயணிகள் நிறைந்த பேருந்தில் நாம் எட்டி நடத்துனரிடம் பயணச் சீட்டு வாங்குவது போலல்லவா உள்ளது!

இதை சரி செய்யவே விடையையும் அதன் தலைமேல் சாய்ந்த இரண்டாவது கையையும் கொண்டு வருகிறான் சிற்பி.

அது சரி , கேள்விக்கு விடை என்ன? கணவன் இழுத்த இழுப்புக்கு மனைவி வரவேண்டுமா? அல்லது மனைவி போடும் பாரத்தை கணவன் சுமக்க வேண்டுமா ? நமக்கு ஏன் இந்த வம்பு. சிற்பத்தை விளக்குவதோடு நிறுத்திக்கொள்வோம்.

அர்விந்த் ஒரு நல்ல கேள்வியை கேட்டார். சிவனின் கால் ஏன் மடங்கும்படி உள்ளது என்று.

பொதுவாக ஆணை வடிக்கும் பொது கட்டு மஸ்தான அளவில், நல்ல உயரமாக காட்டும் பழக்கம் உண்டே , அதனால் ஒருவேளை ஆண் பெண் இணைக்கும் பொது ஆணின் கால் பெண்ணின் காலை விட பெரியதாக காட்டுவதற்காகவா ? அல்லது இடையை வளைத்தனால் காலை மடிக்க வேண்டயுள்ளதா ?

நீங்கள் என்ன நினைகிறீர்கள்? இதை வெறும் ஆண் , பெண் வெண்கலச் சிலைகளை வைத்து மீண்டும் ஒரு பதிவில் ஆராய்வோம்.

அட, இதை ஒரு அற்புத வடிவம் என்றேனே – அது என்ன? முழுப் படத்தையும் பார்க்கவும்

ஆண்பாதி பெண்பாதி விடையோடு சூலத்தினுள் எப்படித்தான் வெங்கலத்தில் இப்படி மதிமயக்கும் அழகில் வார்த்தானோ!!!

சிற்பிக்கு “விடை”யே விடை

நண்பர் திரு தேவ் அவர்களுடன் சென்ற மடலைப் பற்றி தற்செயலாக நடந்த உரையாடலில் வந்த கேள்விகளை ஆராயும்போது கிடைத்த விடைகளை விரிவுபடுத்தி ஒரு பதிவாக இங்கு இடுகிறேன். சிற்பங்கள் வெகுவாக சிதைந்து இருப்பதால் அவற்றை கொட்டோவியங்களாகவும் உங்கள் பார்வைக்கு இடுகிறேன். ( வரைந்தவை அல்ல – ஒற்றி எடுத்தவை – திரேசிங்)

முதலில் ஒன்றை தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். இந்த பதிவின் குறிக்கோள் அர்த்தனாரி வடிவத்தின் இரு பாகங்களின் வேற்றுமைகளை எடுத்துக்காட்டுவதல்ல, அந்த வடிவம் எப்படி படிப்படியாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது என்பதை விளக்க ஒரு முயற்சி. அதுவும் ஒரு சிற்பி இந்த வடிவத்தை செதுக்கும் போது எதிர்க்கொண்ட சவால்கள் என்னவாக இருந்திருக்கும், அதனை அவன் எப்படி சமாளித்தான் என்பதை காட்டவே இந்த பதிவு.

ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள அங்க அமைப்புகளின் வித்தியாசங்கள் பல. அவற்றை இங்கு பட்டியலிடாமல், சிற்பி எவ்வாறு இவற்றை ஒரு உருவத்துள் கொண்டு வர முயற்சிக்கிறான் என்று பார்ப்போம். ஆண் பெண் இருவரையும் ஒன்றாக இணைக்க வேண்டும், ஒரே உருவமாகத் தெரிய வேண்டும், எனினும் இரு பாகங்களும் ஆண் எது பெண் எது என்றும் தெளிவாகத் தெரிய வேண்டும். அழகாகவும் இருக்க வேண்டும். இந்தக் கேள்விகளையும் அவன் கண்டுபிடித்த விடையையும் நான்கு சிற்பங்களின் மூலம் பார்ப்போம். ( சிற்பங்கள் ஒவ்வொன்றும் மிக அருமை – அவற்றிற்கென தனி இடுகை வேண்டும், எனினும் தலைப்புக்கு என்ன தேவையோ அதை மட்டும் இன்று பார்ப்போம்)

முதல் சிற்பத்தை பார்ப்போம் – முற்கால பல்லவர் வடிவம் ( முதல் வடிவம் அல்ல, எனினும் நமது பதிவின் கால அட்டவணையில் மூத்தது). மல்லை தர்மராஜ ரதம் அர்த்தனாரி சிற்பம்.

எளிதில் சிற்பத்தை ரசிக்க ஒற்றி எடுத்த கோட்டோவியம்.

முற்கால பல்லவர் சிற்பம் என்பதற்கு சான்றுகள், மிகவும் குறைந்த அளவு ஆபரணங்கள் மற்றும் எளிமையான வடிவம். எனினும் பல்லவ சிற்பத்திற்கே உடைய உயிரோட்டம் இதில் இல்லை, அதே மல்லையில் உள்ள மற்ற சிற்பங்களில் உள்ள தன்மை இதில் ஏன் இல்லை. ஒருவேளை இந்த வடிவத்தை முதல் முதலில் சிற்பி வடித்ததால் இப்படியோ என்று தோன்றுகிறது. பல முறை சோதனை செய்து பார்த்து வடிக்க இது களிமண் பொம்மை இல்லையே. கருங்கல் அதுவும் நிலத்தில் இருந்த சிறு குன்றை குடைந்து வடித்த வடிவத்தின் வெளிச் சுவரில் வரும் புடைப்புச் சிற்பம். எனினும் பல்லவர் சிற்பம் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம், பலரிடத்தில் அவர்கள் சிற்பக்கலை சோழர்களின் கலையை விட மேலானது என்று நான் வாதாடியதும் உண்டு. எனினும் இந்த சிற்பம் என்னை கவரவில்லை – ரோட்டில் லாரி ஏறி கிடக்கும் தேரை போல ஒரு வெறுமை – கண்டிப்பாக இது அவனது முதல் முயற்சி என்றுதான் தோன்றுகிறது. இரண்டு பாகங்களுக்கும் வேற்றுமைகள் ஒன்றும் பெரிதாக இல்லை, வெளிப்படையாக ஒன்றே ஒன்றுதான் தெரிகின்றது – மார்பகங்கள். கால்கள் இரண்டும் வித்தியாசம் பெரிதாக எதுவும் இன்றி ஒரே போல் இருப்பது வருத்தமே.
சரி, சிற்பி இதற்கு என்ன செய்தான். அதே சிற்பி என்று சொல்லவில்லை, சிற்பக் கலை பயில்வோர் இந்தச் சிலைவடிவதை எவ்வாறு அழகூட்டுவது என்று ரூம் போட்டு யோசித்தால் ….என்ன நடந்திருக்கும்.

அடுத்த உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். வாசகர் கவனிக்க. சிற்பங்களை அட்டவணை போட்டு காலம் என்னவென்று நாங்கள் ஆராயவில்லை. பொதுவாக எப்படி இந்த உருவம் காலப்போக்கில் வளர்ச்சி பெறுகிறது என்று பார்ப்பதற்கே இந்த உதாரணங்கள்

மீண்டும் ஒற்றி எடுத்த ஓவியம்.

இங்கே சிற்பி, ஆண் பெண் வேற்றுமையை இன்னும் பிரதானமாக எடுத்துக்காட்ட வேண்டும் என்பதை உணர்ந்துள்ளான். பெண்ணின் இடுப்பை அழகாக வளைத்து திருபங்கத்திற்கு எடுத்துச்செல்ல எத்தனித்துள்ளான். ஆனால் ஒரு பக்கம் இழுத்தால் மறு பக்கம் விளைவு – அதை சரி செய்ய ஆணின் காலை சற்று மடித்து – சவாலே சமாளி !! கைகளில் சிறு வேற்றுமைகளை காணலாம். பெண்ணின் கையை நளினமாகவும், ஆணின் கையை கம்பீரமாகவும் ( இடுப்பில் வைத்து ), ஆடைகளிலும் சற்று வேறுபாட்டை காட்டுகிறான் – அம்மைக்கு புடவை, ஐயனுக்கு அரை டிரௌசர் !!

இன்னும் வளர்ச்சி – பிற்கால சோழர் சிற்பம் சென்று, பூர்த்தி பெற்ற அம்மை அப்பன் – உமை ஒரு பாகன் சிற்பத்தை பார்ப்போம். .

மீண்டும் ஓவியம்.


பெண் பாகம் முழுமையாக திருபங்கத்தில் வந்துவிட்டது, அதனை சரிகட்ட ஆணின் கால் முழுமையாக மடித்து விட்டான் சிற்பி. எனினும் ஆணின் மேல் பாகம், வெகுவாக ஒரு பக்கம் சாய்ந்துள்ளது – பார்ப்பதற்கு சிற்பம் அழகாக இருந்தாலும், ஒருபக்கம் இழுத்துக்கொண்டு இருப்பது போல இருக்குமே. என்ன செய்வது என்று யோசிக்கிறான் சிற்பி. எதன் மேலாவது சாய்வது போல காட்டினால் என்ன? கடினமான வினா! விடை என்ன ?? ஆஹா “விடை”யே விடை. ஒய்யாரமாக சாய்ந்து நிற்க அவரது கையை வாகனமான விடை மீது இறங்க விட்டு சிற்பத்தை முடித்துவிட்டான். அழகிய ஆபரணங்கள் மற்றும் அணிகளை வடித்தான். அற்புத அர்த்தனாரி வடிவம், விடை வாகன் வந்துவிட்டான். அர்த்தனாரி என்றால் இனி இந்த வடிவமே என்று எங்கும் திகழும் வண்ணம் பரவியது அவன் திறன்.

அப்படியா. இந்த விடை அங்கு வருவதற்கு இது ஒரு காரணமோ. சரி இதை சோதிக்க எளிபண்டா குடவரை செல்வோம்.

அற்புத அர்த்தனாரி வடிவம், கொள்ளை அழகு, ஆண் பெண் இருவரும் பிணைந்து நிற்கும் வடிவம். ஆஹா, அதோ இங்கேயும் நமது விடை தன் தலையை ஐயனுக்கு தந்துள்ளதே

அணிகலன், ஆபரணம் வேறுபட்டாலும் வடிவம் ஒன்றே!!

சரி, இதற்க்கு வேறு சான்று உண்டா. எப்படி சோதிப்பது. பொதுவாக அர்த்தனாரி உருவங்கள் சிவன் வலது புறம், உமை இடது புறம் என இருப்பது வழக்கம். எனினும் இதற்கும் ஒரு சிற்பம் விதி விலக்கு ( ஏன் – ஆராய வேண்டும்) – இங்கு இடம் மாறி இருக்கும் அம்மை அப்பன் பாதிகள். பாருங்கள்.

சரி, இடம் மாறி உள்ளார்கள், அதற்கும் நமது இடுகைக்கும் உள்ள தொடர்பு என்ன ? பின்னால் இருக்கும் உருவத்தை பாருங்கள் …

விடையும் இடம் மாறி, இடது புறம் நோக்கி இருப்பது – ஆண் பாதிக்கு முட்டுக்கொடுக்கவே என்பதை ஊர்ஜிதை செய்கிறது.

இது ஒரு கருத்தே. இதை இன்னும் ஆராய வேண்டும். இந்த வடிவம் கல்லில் செய்தது, பின்னர் உலோகத்திலும் வடித்தனர். கல்லில் வடித்த போது வளைத்து செதுக்கும் போது கல்லின் எடை போன்றவையை நினைவில் கொள்ள வேண்டும். அப்படி என்றால் உலோகத்தில் வார்க்கும் போது என்ன ஆகும். அதை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

படங்களுக்கு நன்றி : அமெரிக்கன் இன்ஸ்டிடுட் ஒப் ஆசியான் ஸ்டடீஸ்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment