“அவர் நம்மவர் “- கொலையாளியை கூட மன்னிக்கும் பண்பு

வாசகர்களே இன்று மீண்டும் ஒரு பெரியபுராண சிற்பம் – தாராசுரத்தில் இருந்து. நாம் இந்த சிற்பத்தின் அருகில் உள்ள சிற்பத்தை முன்னரே பார்த்தோம் – இளையான்குடி மாறர் புராணம். இன்று அதை போல இன்னும் ஒரு அற்புத நாயன்மார் கதை.

மடிந்தாலும் நேருக்கு நேர் நின்று மார்பில் வேலை வாங்கி வீர மரணம் அடைவதை பெருமையாக கொண்ட தமிழ் குடியில், வந்திருப்பது துரோகி , தனது எதிரி, தன்னை ஏமாற்றி கொல்ல வந்த கொலையாளி என்று தெரிந்தும் , அவனை மன்னித்து அவனுக்கு எந்த துயரும் இழைக்காமல் விட்டு விட்ட ஒரு அரசனின் கதை. அப்படி அவன் ஏன் செய்தான். மேலே படியுங்கள்.

முதலில் சிற்பம். தொலைவில் இருந்து. இடது புறம் கீழே பாருங்கள்.

நாம் பார்ப்பது மெய்பொருள் நாயனார் கதை சொல்லும் சிற்பம். பெரிய புராண வரிகளை கொண்டே இந்த கதை விளக்குகிறேன்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=12050&padhi=72&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

சேதிநன் னாட்டு நீடு
திருக்கோவ லூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின்
வழிவரு மலாடர் கோமான்
வேதநன் னெறியின் வாய்மை
விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க் கன்பர்
கருத்தறிந் தேவல் செய்வார்.

நன்மை மிகுந்த சேதி நாட்டின்கண் உள்ள மேன்மை பொருந்திய திருக்கோவலூரின்கண் வாழ்ந்தருளி, உமையம்மை யாரை ஒரு கூற்றில் வைத்தருளும் சிவபெருமானிடத்துப் பத்திமை செய்தொழுகும் மலையமான் நாட்டிற்குரிய அரசர், நன்மை மிகுந்த மறைவழியில் உலகம் விளங்குதற்கு ஏதுவான பெருமை மிக்க நற் குணங்களைத் தாங்கி, பெருவிருப்போடு சிவபெருமானின் அடியவர் கட்கு அவர்தம் திருவுள்ளக் குறிப்புணர்ந்து பணிவிடை செய்து வருவார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=5&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

இன்னவா றொழுகு நாளில்
இகல்திறம் புரிந்ததோர் மன்னன்
அன்னவர் தம்மை வெல்லும்
ஆசையால் அமர்மேற் கொண்டு
பொன்னணி யோடை யானை
பொருபரி காலாள் மற்றும்
பன்முறை இழந்து தோற்றுப்
பரிபவப் பட்டுப் போனான்.

இவ்வாறாக இவ்வடியவர் தம் கடமைகளைச் செய்து வரும் நாளில், அவரொடு பகைத்து நின்ற ஓர் அரசன், அவரைத் தான் போரில் வெல்லக் கருதும் ஆசை மிகுதியால், போர் செய்தலை மேற்கொண்டு, பொன்னால் செய்த நெற்றிப் பட்டத்தை உடைய யானைகளையும், போர் செய்தற்குரிய குதிரைகளையும், காலாட் படைகளையும், பலகாலும் இழந்து தோற்றுவிட, அதனால் மானம் இழந்து போனான்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=6&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

இப்படி இழந்த மாற்றான்
இகலினால் வெல்ல மாட்டான்
மெய்ப்பொருள் வேந்தன் சீலம்
அறிந்துவெண் ணீறு சாத்தும்
அப்பெரு வேடங் கொண்டே
அற்றத்தில் வெல்வா னாகச்
செப்பரு நிலைமை எண்ணித்
திருக்கோவ லூரிற் சேர்வான்.

இவ்வாறு பலகாலும் தோல்வியடைந்த அப் பகைவன், தன்வலியினால் வெல்ல இயலாதனவாகி, மெய்ப்பொருள் நாயனாருக்கு அடியவர்மீது இருக்கும் பத்திமையை உணர்ந்து, வெண் ணீறு அணிதலாகிய அடியவர்களின் பெருமையான திரு வேடத்தை வஞ்சனையாக மேற்கொண்டு, அவ்வஞ்சனையைப் பிறர் அறியாத வாறு, காலமறிந்து வெல்லும் கருத்துடையனாக வாயினாற் சொலற்கரிய தீமையைச் செய்யக் கருதித் திருக்கோவலூரை அடைவானாயினன்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

மெய்யெலாம் நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினிற் படைக ரந்த
புத்தகக் கவளி யேந்தி
மைபொதி விளக்கே யென்ன
மனத்தினுட் கறுப்பு வைத்துப்
பொய்தவ வேடங் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்.

தன் உடல் முழுமையும் திருநீற்றை அணிந்து கொண்டு, சடைகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி, தன் கையிடத்து, உடைவாளை உள்ளே மறைத்த புத்தகச் சுவடிகளைத் தாங்கிக் கொண்டு, கருமையான நிறத்தைத் தன்னுள் வைத்திருக்கும் ஒளி விளக்குப் போலத் தன் மனத்தில் சினத்தை வைத்துக் கொண்டு பொய் யாகிய ஒரு தவவேடத்தைக் கொண்டு சென்றான். அவன் முத்த நாதன் எனும் பெயரினன்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=9&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

கடையுடைக் காவ லாளர்
கைதொழுதேற நின்றே
உடையவர் தாமே வந்தார்
உள்ளெழுந் தருளும் என்னத்
தடைபல புக்க பின்பு
தனித்தடை நின்ற தத்தன்
இடைதெரிந் தருள வேண்டும்
துயில்கொளும் இறைவ னென்றான்.

அரண்மனை வாயில்கள் தொறும் காவல் செய்து கொண்டிருப்பவர்கள் கைகுவித்து வணங்கி விலகிநின்று நம்மை ஆட்கொள்ளும் சிவபெருமானின் அடியார் ஒருவர், தாமே வலிய எழுந்தருளினார் என்று கூறி, உள்ளே எழுந்தருள வேண்டும் என வேண்டிக் கொள்ள, இவ்வாறாய வாயில்கள் பலவற்றையும் கடந்து சென்ற பின்பு இறுதியாக உள்ள தனிவாயிலில் காவல்புரிந்து நிற்கும் தத்தன் என்பான், `உட்செல்லுதற்குரிய அமையம் தெரிந்து எழுந்தருள வேண்டும்; இதுபொழுது அரசர் துயில் கொள்கின்றார்` என்று கூறினான்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=14&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

திருமக ளென்ன நின்ற
தேவியார் தம்மை நோக்கிப்
புரிவுடன் விரைய அந்தப்
புரத்திடைப் போக ஏவித்
தருதவ வேடத் தானைத்
தவிசின்மேல் இருத்தித் தாமும்
இருநிலத் திருந்து போற்றி
இனியருள் செய்யும் என்றார்.

திருமகளைப் போல அங்கு நிற்கும் தம் மனைவியாரைப் பார்த்து, அருளுரை கேட்கும் பெருவிருப்பால், அவரை விரைவாக அந்தப்புரத்திற்குப் போகுமாறு பணித்து, இயல் பாகவன்றி வலிய எடுத்துக்கொண்ட தவவேடமுடைய முத்தநாதனை ஓர் இருக்கையின்மீது இருக்கச் செய்து, தாம் வெறுநிலத்திலிருந்து வழி பட்டவாறு, இனி அருள் செய்ய வேண்டு மென்று விண்ணப்பித்துக் கொண்டார்.

இப்போது சுட்டிக்காட்டி உள்ள வரிகளை சற்று கவனமாக படியுங்கள். ஏனெனில் சிற்பி சிற்பம் செதுக்கும் பொது எப்படி இவற்றை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறான் என்பதை நாம் ரசிக்க வேண்டுமே!

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=15&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

கைத்தலத் திருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்தவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப்
பொருளெனத் தொழுது வென்றார்.

அவன், தன் கையில் வைத்திருந்த வஞ்சனை யாகக் கொண்ட புத்தகப் பையைத் தன் மடியின் மேல் வைத்து, உள் ளிருந்த அப்புத்தகத்தைத் திறப்பவனைப்போல, விரும்பி அந்நாய னார் வணங்கும் சமயத்தில், அதனுள் மறைத்து வைத்திருந்த உடை வாளை எடுத்துத்தான் முன் கருதியவாறே செய்ய, அவ்வடியவர் தாமும், மெய்ம்மையான பொருளாகக் கொண்ட தவவேடத்தையே மெய்ப்பொருளாகக் கருதி வணங்கி வென்றார்.

சரி, இப்போது சிற்பத்தை மீண்டும் பார்ப்போம். அருகில் சென்று

கதை மிக சுவாரசீயமாக போகிறது. முதல் பாகம் சிற்பத்தில்

போலி சிவனடியார் இடது கையில் புத்தகப் பை,வலது கையில் கத்தி, அவர் ஆசனத்தின் மேலே அமர்திருப்பது, அரசன் தரையில் அமர்திருப்பது – எப்படி சின்ன சின்ன விஷயங்களை கூர்ந்து கவனித்து சிற்பி இந்த சிறய சிற்பத்தில் கதையை அழகாக சொல்கிறான் பாருங்கள்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=16&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

மறைத்தவன் புகுந்த போதே
மனம்அங்கு வைத்த தத்தன்
இறைப்பொழு தின்கட் கூடி
வாளினால் எறிய லுற்றான்
நிறைத்தசெங் குருதி சோர
வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் தத்தா
நமரெனத் தடுத்து வீழ்ந்தார்.

உள்ளத்தில் கொண்டிருந்த வஞ்சனையை மறைத்துத் தவவேடம் பூண்ட அம்முத்த நாதன் உள்ளே சென்ற பொழுதே, தன் மனத்தை அவனுடன் போக நிறுத்திய தத்தன் என்பான், ஒரு நொடிப் பொழுதில் சென்று, வாட்படையால் அவனை எறியத் தொடங்கினான். தம் திருமேனியில் இரத்தம் சோர நிலத்தில் வீழ்கின்ற அந்நாயனார், `தத்தனே! அவர் நம்மவர்` என்றுகூறித் தம் நீண்ட கையினால் தடுத்து வீழ்ந்தார்.

என்ன அற்புதாமான தருணம். தனது அரசனை காக்க பாய்ந்து வரும் மெயகப்பாலன் தத்தன் – சிற்பத்தில் பாருங்கள், அவனது ஆடை பறக்க, வாழை உயர்த்தி அடுத்த கணம் போலி சாமியாரின் தலை துண்டாகும் என்பதை உணர்த்தும் வண்ணம் – ஆனால் அரசனின் கரம் தடுக்கிறது

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=17&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

வேதனை யெய்தி வீழ்ந்த
வேந்தரால் விலக்கப் பட்ட
தாதனாந் தத்தன் தானும்
தலையினால் வணங்கித் தாங்கி
யாதுநான் செய்கே னென்ன
எம்பிரா னடியார் போக
மீதிடை விலக்கா வண்ணம்
கொண்டுபோய் விடுநீ யென்றார்.

இக்கொடுஞ்செயலால் வருத்தப்பட்டு நிலத்தில் வீழ்ந்த மெய்ப்பொருள் நாயனாரால் `தத்தா நமர்` என்றுகூறித் தடுக்கப் பெற்ற அவரை, (வேந்தரை) அடியவனாகிய தத்தன் என்பவனும் தலையால் வணங்கி, அவர்தம் தலையைத் தம் கையால் தாங்கிய வண்ணம் `அடியேன் செய்யும் பணி யாது?` என்று வினவ, `எம் தலை வனாய சிவபெருமானின் அடியவராகிய இவர் (முத்தநாதன்) செல்லும் பொழுது இடையில் எவரும் மேற்சென்று விலக்காதவாறு இவரைக் கொண்டுபோய் விடுவாயாக என்று கட்டளையிட்டார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=20&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

மற்றவன் கொண்டு போன
வஞ்சனை வேடத் தான்மேல்
செற்றவர் தம்மை நீக்கித் தீ
திலா நெறியில் விட்ட
சொற்றிறங் கேட்க வேண்டிச்
சோர்கின்ற ஆவி தாங்கும்
கொற்றவன் முன்பு சென்றான்
கோமகன் குறிப்பில் நின்றான்.

தத்தன் தான் அழைத்துக் கொண்டு சென்ற வஞ்சனையான வேடத்தையுடைய முத்தநாதனை, சினந்து எதிர்த்த வர்களை விலக்கி, குற்றம் நேராதவாறு விட்ட நற்சொல்லின் வகைமை யைக் கேட்க விரும்பி, உடலை விட்டு நீங்குதற்குரிய உயிரைத் தாங்கிக் கொண்டிருக்கும் மெய்ப்பொருள் நாயனார் முன்பு, அவர்தம் குறிப்பில் நிற்கும் தத்தன் போய் நின்றான்.

ஆஹா, என்ன ஒரு வர்ணனை. அந்த மன்னனுக்குத் தான் என்ன பக்தி.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=23&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

தொண்டனார்க் கிமையப் பாவை
துணைவனார் அவர்முன் தம்மைக்
கண்டவா றெதிரே நின்று
காட்சிதந் தருளி மிக்க
அண்டவா னவர்கட் கெட்டா
அருட்கழல் நீழல் சேரக்
கொண்டவா றிடைய றாமல்
கும்பிடுங் கொள்கை ஈந்தார்.

அம்மெய்ப்பொருள் நாயனாருக்கு உமையம்மை யாரின் கணவராகிய சிவபெருமான், அவர்தம்மை மனத்தகத்து எண்ணியிருந்த வடிவே வடிவாக, அவர் முன்னிலையில் வெளிப் பட்டருளி, அவரை மேலான விண்ணுலகின்கண் வாழும் தேவர் களுக்கும் எட்டாத அருள் வடிவான தம் திருவடி நிழலில் கலந்து இன்புறுமாறு அருள் செய்து, அவர் தம்மை இடைவிடாது வணங்கி வாழும் பேற்றினையும் வழங்கியருளினார்.

சிற்பியும் இதையே கடை காட்சியாக நமக்கு படைக்கிறான்

என் நெஞ்சை நெகிழ வைத்த கதை, அதை விளக்கும் அற்புத சிற்பம். அவற்றை உங்களுடன் பகிர்வதில் மிகவும் சந்தோஷமாக உள்ளது.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

எங்கே என் கோமணம், கோவணக் கள்வர்

என்னடா ? இப்படி ஒரு தலைப்பா என்று சிரிக்க வேண்டாம். இதுவும் ஒரு பெரியபுராண கதை தான். தாராசுரம் சிற்பம். அமர்நீதி நாயனார் புராணம்.

முதலில் சிற்பம் இருக்கும் இடத்தை பாருங்கள்.

அடுத்து கதை : ( நன்றி விக்கி)

வணிகத்தால் பெரும் பொருள் தேடிச் செல்வந்தராய் விளங்கிய இவர் சிவனடியார்க்குப் பணிசெய்வதையே தனது நாளாந்த தொண்டாகக் கொண்டிருந்தார். சிவனடியார்க்கு திருவமுது (உணவு), ஆடை, கீழ்கோவணம் அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார். சிவனடியார்களுக்குத் திருவமுது கொடுப்பதற்காகத் திருநல்லூரில் மடம் கட்டினார். திருவிழாக்காலங்களில் தம் சுற்றத்தவரோடு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது, உடை, கோவணம் என்பன அளித்து மகிழ்ந்தார்.

அன்பர் பணி செய்யும் அமர்நீதியாருக்குச் சிவபெருமான் அருள் புரியத் திருவுளங்கொண்டார். அவர் ஒரு நாள் அந்தணர் குலத்து பிரம்மச்சாரியாக கோலங்கொண்டார். கையில் இருகோவணம் முடிந்த ஒரு தண்டுடன் கோவண ஆடையுடன் திருநல்லூரில் உள்ள அமர்நீதியார் மடத்தை அடைந்தார்.

அவரைக் கண்டு அமர்நீதியார் மிக முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரித்தார். அமர்நீதியார் அவரை உணவுண்ண அழைத்தார். பிரம்மச்சாரியார் அவ்வேண்டுகோளிற்கிசைந்து காவிரியில் நீராடச் சென்றார். செல்லும் பொழுது மழை வரினும் வரும் எனக்கூறித் தமது தண்டில் கட்டி இருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறினார்.

அது எப்படி பட்ட கோமணம் , பாட்டை படியுங்கள்

பன்னிரண்டாம் திருமுறை

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=14&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவா றுமக்கே
ஈங்கு நான்சொல்ல வேண்டுவ தில்லைநீ ரிதனை
வாங்கி நான்வரு மளவும்உம் மிடத்திக ழாதே
ஆங்கு வைத்துநீர் தாரும்என் றவர்கையிற் கொடுத்தார்.

மேற்கூறிய குணநலம் சான்ற கோவணத்தின் பெருமையை உள்ளவாறு உமக்கு இங்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை. நீர் இதை வாங்கி நான் நீராடி வரும் வரையில் உம்மிடத்தில் பாதுகாப்பாக வைத்துப் பின் திருப்பித் தருவீராக என்று சொல்லி, அதனை அந்நாயனார் கையில் கொடுத்தார்.

அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் சேமித்து வைத்தார். எப்படி பட்ட இடம்

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=16&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

தந்த கோவணம் வாங்கிய தனிப்பெருந் தொண்டர்
முந்தை அந்தணர் மொழிகொண்டு முன்புதாம் கொடுக்கும்
கந்தை கீளுடை கோவண மன்றியோர் காப்புச்
சிந்தை செய்துவே றிடத்தொரு சேமத்தின் வைத்தார்.

மறையவராக வந்தவர் தந்த கோவணத்தை வாங்கிய ஒப்பற்ற பெருந்தொண்டர், முதன்மை பொருந்திய அந்தணராகிய அவர்தம் மொழியினை ஏற்றவராய், இதற்கு முன் தாம் அடியவர்களுக்குக் கொடுப்பதற்கென வைத்திருக்கும் கந்தை, கீள், உடை, கோவணம் எனும் இவற்றை வைத்திருக்கும் இடத்திலன்றிப் பாதுகாப்பான இடத்தை எண்ணி, அவ்விடத்தில் அதனைக்காவல் பொருந்திய தொரு தனியிடத்தில் வைத்தார்.

சிவனடியார் கோவணத்தை மறையும்படி செய்து மழையில் நனைந்தவராய் வந்தார். வைத்த கோவணத்தை கொண்டு வருமாறு கூறினார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=19&limitPerPage=1&sortBy=&sortOrder=தேசக்

தொண்டர் அன்பெனுந் தூயநீ ராடுதல் வேண்டி
மண்டு தண்புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்
தண்டின் மேலதும் ஈரம்நான் தந்தகோ வணத்தைக்
கொண்டு வாரும்என் றுரைத்தனர் கோவணக் கள்வர்.


தொண்டர்தம் அன்பு எனும் தூய நீரினில் ஆட விரும்பி, அவரை நோக்கிச் செறிவும் குளிர்ச்சியும் மிக்க நீரில் ஆடி வந்ததால், ஈரமுடைய கோவணத்தை மாற்றுதற்குத் தண்டின் மேல் உள்ளதும் ஈரமாகிய கோவணம் ஆதலின், நான் தந்த கோவணத்தைக் கொண்டு வருவீராக என்றுரைத்தார் கோவணக் கள்வர்.

சிற்பி இதை கவனித்து செதுக்கி உள்ளதை பாருங்கள்.

கோவணம் கொண்டுவரச் சென்ற தொண்டர் வைத்த இடத்தில் காணாது திகைத்தார். பிற இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் பிறிதொரு கோவணத்தை எடுத்துக்கொண்டு பிரமச்சாரியிடம் வந்தார். அடிகளே!, தாங்கள் தந்த கோவணத்தை வைத்த இடத்தில் காணவில்லை. அது மறைந்ததோ பெரும் மாயமாக உள்ளது. இது வேறு ஒரு நல்ல கோவணம்; இது ஆடையிற் கிழிக்கப்பட்டதல்ல. கோவணமாகவே நெய்யப்பட்டது. நனைந்த கோவணத்தை களைந்து (அகற்றி) இதனை அணிந்து அடியேனது குற்றத்தைப் பொறுத்து அருளுங்கள் என வேண்டினார்.

இதனைக் கேட்ட சிவனடியார் சீறிச் சினந்தார். அமர்நீதியாரே!, நாம் உம்மிடம் தந்த கோவணத்திற்கு ஒத்தது தண்டில் உள்ள இந்தக் கோவணம். இந்தக் கோவணத்திற்கு எடையான கோவணத்தைக் கொடுப்பீராக என்று கூறினார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=31&limitPerPage=1&sortBy=&sortOrder=தேசக்

உடுத்த கோவண மொழியநாம் உங்கையில் தரநீர்
கெடுத்த தாகமுன் சொல்லும்அக் கிழித்தகோ வணநேர்
அடுத்த கோவண மிதுவென்று தண்டினில் அவிழா
எடுத்து மற்றிதன் எடையிடுங் கோவண மென்றார்.

நாம் உடுத்தியிருக்கும் கோவணம் தவிர, உம்கையில் நாம் தர, நீர் அதனைப் போக்கியதாக முன் கூறிய அக் கிழிந்த கோவணத்திற்கு ஒப்பாகும் கோவணம் இதுவாகும்` என்று கூறி, தண்டில் கட்டியிருந்த கோவணத்தினை அவிழ்த்து எடுத்து, `இக் கோவணத்திற்கு ஒத்த எடையுடைய கோவணத்தை இடுவீராக` என்று தனது கோவணத்தை தராசில் இட்டார். ( இதையும் சிற்பி செதுக்கி உள்ளான் )

அதனை ஏற்றுக்கொண்ட அமர்நீதியார்,அதற்கு ஈடாகத் தம்மில் உள்ள நெய்த கோவணத்தை மற்றொரு தட்டில் வைத்தபோழுது அது நிறை போதாமையால் மேலெழுந்தது. அது கண்ட அமர்நீதியார், தாம் அடியார்களுக்குக் கொடுத்தற் பொருட்டு வைத்திருந்த கோவணங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இட்டார். அப்பொழுதும் அன்பரது தட்டு மேற்பட அடியாரது கோவணத்தட்டு நிறையால் கீழே தாழ்ந்தது. அந்நிலையில் அமர்நீதியார், தம்மிடம் உள்ள பொன், வெள்ளி, நவமணித் திரள் முதலிய அரும்பொருள்களையும் இட்டார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=39&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

தவநி றைந்தநான் மறைப்பொருள் நூல்களாற் சமைந்த
சிவன்வி ரும்பிய கோவண மிடுஞ்செழுந் தட்டுக்
கவனி மேலமர் நீதியார் தனமெலா மன்றிப்
புவனம் யாவையும் நேர்நிலா என்பது புகழோ.

தவத்தால் நிரம்பிய நான்மறைப் பொருளாக உள்ள நூல்களால் அமைந்ததும், சிவபெருமான் விரும்புதற்குரியதா யுள்ளது மான கோவணம், இட்டமேலான தட்டுக்கு, இவ்வுலகில் வாழும் அமர் நீதீயார் செல்வங்கள் மட்டுமேயன்றி, அனைத்துலகங் களும் கூட ஒப்ப நிற்கமாட்டா என்று சொல்வதும் அதற்கொரு புகழாமோ? ஆகாது என்பதாம்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=40&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

நிலைமை மற்றது நோக்கிய நிகரிலார் நேர்நின்
றுலைவில் பல்தனம் ஒன்றொழி யாமைஉய்த் தொழிந்தேன்
தலைவ யானுமென் மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையி லேறிடப் பெறுவதுன் னருளெனத் தொழுதார்.

இந்நிலைமையை நோக்கிய ஒப்பற்றவராகிய நாயனார், மறையவர் முன் நேர்நின்று, கெடுதல் இல்லாத பல்வகைச் செல்வங்களையும் ஒன்று கூட விடாமல் தட்டில் வைத்துள்ளேன்; என்னுயிர்த் தலைவ! யானும் என், மனைவியும், சிறுவனும் ஒப்பாதற் குரிய பொருளாமேல், துலையில் ஏறப் பெறுதற்கு உன் அருள் முன்னிற்பதாகுக எனத் தொழுதனர்.

அடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். படத்தை பாருங்கள், அம்மை அப்பன் நந்தியின் மேலே .

அமர்நீதியாரும் மனைவியாரும் மைந்தரும் சிவலோகவாழ்வினைப் பெற்று இன்புற்றார்கள்.

ஒரு கோவணத்தை வைத்துக்கொண்டு கூத்தபிரான் விளையாடிய திருவிளையாடல் பார்த்தீர்களா . அற்புத கதை மற்றும் சிற்பம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

திருமுடியினையே விளக்காக மாட்டி எரித்த கணம்புல்லர்

நண்பர்களே , சென்ற பதிவில் வெறும் தண்ணீர் கொண்டு விளக்கு எரிந்ததை பார்த்தோம். அப்போது இவ்வாறு எழுதினேன் ” விளக்கு எரிய வேறு ஒரு வஸ்துவை உபயோகித்த இன்னொரு நாயனார் கதையும் உண்டு.” அவர் கதையை இன்று பார்க்க போகிறோம். இன்னொரு தாராசுரம் பெரியபுராணம் சிற்பம் : கணம்புல்ல நாயனார்

வடவெள்ளாற்றுத் தென்கரையிலே அமைந்த இருக்கு வேளூரிலே அவ்வூர்க் குடிமக்களின் தலைவராய்த் திகழ்ந்தவர் கணம்புல்லர். அவர் சிவபக்தியும் பெருஞ்செல்வமும் உடையவராய் விளங்கினார். “மெய்ப்பொருளாவது திருவடியே” எனும் கொள்கையினரான இவர் செல்வப் பயன் திருவிளக்கெரித்தலே என்று எண்ணி திருவிளக்குப் பணிசெய்து வாயாரப் பாடி வழிபட்டு வந்தார். நெடுநாட்களாக இப்பணி செய்துவந்த நாயனார்க்குத் திருவருளாலே வறுமை வந்தெய்தியது. அதனால் ஊரைவிட்டு நீங்கித் தில்லையை அடைந்து தம் வீடு முதலியவற்றை விற்று விளக்கேற்றி வந்தார். அவரிடமிருந்த பொருள் யாவும் ஒழிந்து போகும் நிலை நேர்ந்தது. அவர் பிறரிடம் இரத்தற்கு நாணினார். தமது உடல் முயற்சியினால் அரிந்து கொண்டு வந்த கணம்புல்லினை விலைப்படுத்தி அப்பொருளினால் நெய் பெற்று விளக்கெரித்து வந்தார். அதனால் அவருக்கு கணம்புல்லர் என்று பெயராயிற்று.
சிற்பத்தின் முதல் பகுதியை பார்ப்போம்


ஒருநாள் அவர் கொண்டு வந்த புல் எவ்விடத்தும் விலை போகாதாயிற்று. விளக்கேற்றும் பணி முட்டாதிருத்தற் பொருட்டு அப்புல்லையே மாட்டி விளக்கெரித்தார். அப்போது , சிற்பத்தை மீண்டும் பாருங்கள்.

விளங்க வில்லையா – இன்னும் அருகில் சென்று சிற்பத்தின் அடுத்த பக்துதியை பார்ப்போம்


இப்போது பாடலை பாருங்கள்

பன்னிரண்டாம் திருமுறை

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1248&padhi=72&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

முன்புதிரு விளக்கெரிக்கும்
முறையாமங் குறையாமல்
மென்புல்லும் விளக்கெரிக்கப்
போதாமை மெய்யான
அன்புபுரி வார்அடுத்த
விளக்குத்தந் திருமுடியை
என்புருக மடுத்தெரித்தார்
இருவினையின் தொடக்கெரித்தார்.

இறைவரின் திருமுன்பு விளக்கு எரிக்கும் முறைப் படி தாம் கருதிய யாமங்களில் குறையாமல் விளக்கை எரிப்பதற்கு அப்புல் போதாமையால், மெய்ம்மை அன்பினால் திருத்தொண்டு செய்பவரான அந்நாயனார், அடுத்த விளக்காகத் தம் திருமுடியி னையே எலும்பும் கரைந்து உருகுமாறு தீயை மூட்டி எரித்தார். அதனால் இருவினைகளான தொடக்கை எரிப்பவர் ஆனார்.

பக்தி ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்ய தூண்டுகிறது பாருங்கள்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

நமிநந்தியடிகள் நாயனார் புராணம் – தாராசுரம்

நண்பர்களே, இன்று நாம் மீண்டும் தாராசுரம் பயணிக்கிறோம். மீண்டும் ஒரு பெரியபுராணம் சிற்பம். இறை பக்தி , அதன் அற்புத தன்மைகளை விளக்கும் கதை. நமிநந்தி அடிகள் புராணம். முதலில் தொலைவில் இருந்து பாருங்கள்

பதினோறாம் திருமுறை
திருத்தொண்டர் திருவந்தாதி

வேத மறிக்கரத் தாரூர் அரற்கு விளக்குநெய்யைத் தீது செறிஅமண் கையர்அட் டாவிடத் தெண்புனலால் ஏத முறுக அருகரென் றன்று விளக்கெரித்தான் நாதன் எழில்ஏமப் பேறூர் அதிபன் நமிநந்தியே.

அழகிய ஏமப்பேறூர்த் தலைவராகிய நமிநந்தி அடிகளே, மறைவடிவாய மானை ஏந்திய கையினராகிய ஆருர்ப் பெருமானுக்கு, விளக்கு எரிக்க நெய் தாராது அமணர் மறுக்க, தெளிந்த நீராலேயே விளக்கு எரித்து, அமணர் துயருறச் செய்த பெரியவர் ஆவார்.

பேரூரில் பிறந்த நமிநந்தி அடிகளுக்கு திருவாரூர் தியாகராஜர் மீது மிகுந்த பற்று, பக்தி. ஒருமுறை ஆலயத்திற்கு சென்ற அவர், பல மணி நேரம் அங்கேயே கழித்தார். கதிரவன் மறையும் தருவாயில் விளக்குகளை ஏற்ற எண்ணெய் தேடி, அருகில் இருந்த வீட்டை பார்த்து, அங்கு இருந்தவர்களிடம் உதவி – விளக்கு ஏற்ற எண்ணெய் கேட்டார். வேற்று மதத்தை சான்ற அவர்கள் எண்ணெய் கொடுக்கு மறுத்தது மட்டும் அல்லாமல் , உங்கள் ஈசன் தான் கையிலேயே தீயை வைத்து ஆடுபவன் தானே , அவனுக்கு எதற்கு எண்ணெய், வெறும் தண்ணீரே போதுமே என்றனர்.

இதை கேட்டு மிகவும் மனம் உடைந்து மீண்டும் கோயில் மண்டபத்தில் வந்து அமர்ந்த அவருக்கு ஒரு அசரீரி குரல் கொடுத்து. தாமரை குளத்து தண்ணீர் கொண்டு வந்து விளக்கை ஏற்று என்று. …

அவரும் அவ்வாறே செய்ய – அதிசயம், விளக்குகள் அனைத்தும் மிக பிரகாசமாக எரிந்தன. விளக்கு எரிய எரிபொருள் தேவை இல்லை, அது எரிந்தது அவரது பக்தி மற்றும் இறை நம்பிக்கையினாலே …

சரி , சிற்பத்தை பார்ப்போம்.

இரு பாகங்களாக பிரித்து பார்க்கவேண்டும்.

முதல் பாகம், தடாகத்தில் இருந்து தன்னேர் எடுக்கும் காட்சி ( தடாகத்தில் பூக்கள், மீன்கள் மற்றும் ஒரு கொக்கு வேறு ) , அடுத்து ஆலயத்தின் விளக்குகளுக்கு மிகுந்த பக்தியுடன் நீரை ஊற்றி எரிய வைக்கும் காட்சி, மிகவும் அற்புதம்

அது சரி, விளக்கு எரிய வேறு ஒரு வஸ்துவை உபயோகித்த இன்னொரு நாயனார் கதையும் உண்டு. அடுத்த இடுகையில் அதையும் பார்ப்போம்.

படங்கள் நன்றி : பொன்னியின் செல்வன் குழும நண்பர்கள் : சதீஷ் மற்றும் சாத்மீகா


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தேவிக்கு யமனின் பரிசு

வணக்கம் நண்பர்களே, இன்று நாம் மீண்டும் எனக்கு மிகவும் பிடித்தமான மல்லைக்கு பயணிக்கிறோம். இன்னும் ஒரு அற்புத படைப்பு இந்தச் சிற்பம். நாம் முன்னரே பார்த்தது தான் , ஆனால் வேறு ஒரு கண்ணோட்டத்தில். ( இந்தக்கால கட்டுடல் அந்தக்காலத்தில் )

ஆம்!. மகிஷாசுரமர்தினி சிற்பம் தான். இந்த சிற்பத்தை முழுவதுமாக ரசிக்க மூன்று நான்கு பதிவுகள் தேவை. எனவே இதோ முதல் பதிவு. தேவியை பார்ப்போமா…

‘சித்திரம் பேசுதடி. சிந்தை மயங்குதடி’ என்பது போல பேசாமலேயே நம்மை மயக்கும் சிற்பம் இது. தனது கை இல்லை கல் வண்ணத்தால் நம்மை கிறங்க வைக்கிறான் சிற்பி. அவற்றை பார்க்கும் முன்னர் முதலில் கதையை பார்ப்போம்.

வழக்கம் போல ஒரு அசுரன். மகிஷன். வரம் கேட்டு கடுந்தவம் புரிந்து பிரம்மனை வரவழைத்து அழியா வரம் கேட்கிறான். பிறப்பு என்றால் இறப்பும் நியதி. அதனால் சாகாவரம் தர இயலாது என்று நான்முகன் மறுக்க, தனது வரத்தை சற்று மாற்றிக் கொள்கிறான் மகிஷன். தனது வலிமையின் மீது இருந்த ஆணவத்தால், தன்னை எந்த ஆணாலும் எதிர்க்க முடியாது என்று இருக்க, மிகவும் புத்திசாலித்தனம் என்று நினைத்து தான் மடித்தால் ஒரு பெண்ணின் கையாலேயே மடிய வேண்டும் என்று வரம் கேட்கிறான். நான்முகனும் அவ்வாறே கொடுத்து விட, தவத்தின் பலத்தாலும் தனது அசுர குணத்தாலும் உலகை வென்று அடுத்து தேவலோகத்தின் மேல் படை எடுக்கிறான் மகிஷன். அவனது செயலை முறியடிக்க அனைத்து தெய்வங்களும் ஒன்று கூடி ஒரு தேவியை உருவாக்கி அவளுக்கு தங்கள் சக்திகளை கொடுக்கிறார்கள். எவ்வாறு… ( நன்றி கீதா அம்மா ) தேவி மகாத்தியத்தில் இருந்து வரிகளை எடுத்து அதற்க்கு தமிழில் விளக்கங்களும் தந்தார்.

ஷூலம்ஷூலாத் விநிஷ்க்ருஷ்ய ததெள தஸ்யை பிநாகத்ருக்

பிநாகபாணியான ஈசன் தனது சூலத்திலிருந்து ஒரு சூலத்தைத் தோற்றுவித்து அவளுக்குக் கொடுத்தார்.

சக்ரஞ் ச தத்தவான் க்ருஷ்ண: ஸமுத்பாத்ய ஸ்வசக்ரத:
கரிய திருமால் தன் சக்கரத்தினின்று ஒரு சக்கரத்தை உண்டாக்கி அளித்தார்.

சங்கஞ் ச வருண: சக்திம் ததெள தஸ்யை ஹுதாஸன:

வருணன் சங்கத்தையும், அக்கினி சக்தி ஆயுதத்தையும் கொடுத்தனர்.

மாருதோ தத்தவாம்ச்சாபம் பாணபூர்ணே ததேஷுதீ

வாயு பகவான் வில்லையும் அம்பையும் பாணங்கள் நிறைந்த அம்பறாத்தூணியையும் அளித்தார்.

வஜ்ர-மிந்த்ர: ஸமுத்பாத்ய குலிசா-தமராதிப:

இந்திரன் தனது குலிசத்தில் இருந்து தோற்றுவிக்கப் பட்ட வஜ்ராயுதத்தையும் யானையாகிய ஐராவதத்தில் இருந்து தோற்றுவிக்கப் பட்ட மணியையும் கொடுத்தான்.

குலிசம் இங்கே இடி என்ற பொருளில் வரும் என எடுத்துக் கொள்ளலாம்

ததெள தஸ்யை ஸஹஸ்ராக்ஷோ கண்டா-மைராவதாத் கஜாத்

காலதண்டாத்-யமோ தண்டம் பாசஞ் சாம்புபதிர்ததெள

யமன் காலதண்டத்தில் இருந்து தண்டத்தையும், வருணன் பாசத்தையும் அளித்தனர்.

ப்ரஜாபதிச் சாக்ஷமாலாம் ததெள் ப்ரஹ்மா கமண்டலும்

பிரஜாபதியாகிய பிரம்மா அக்ஷமாலையையும் கமண்டலுவையும் கொடுத்தார்.

ஸமஸ்த-ரோம-கூபேஷு நிஜரச்மீன் திவாகர:

அவளுடைய மயிர்க்கால்களில் பிரகாசிக்கும்படியான கிரணங்களைச் சூரியன் அளித்தான்.
காலச்ச தத்தவான் கட்கம் தஸ்யாச் சர்ம ச நிர்மலம்!

காலன் கத்தியையும் நிர்மலமான கேடயத்தையும் அளித்தான்.

சரி, சிற்பத்திற்கு வருவோம். போருக்கு செல்லும் தேவியின் அழகோ அழகு. எட்டு கைகளுடன், சிங்கத்தின் மீது அமர்ந்து, ஒரு கம்பீரத்துடன் பார்க்கும் அந்த முகம்

நாணை வில்லில் ஏற்றி நிற்கும் பாணி, வில்லை பிடித்திருக்கும் கரத்தை பாருங்கள். கட்டை விரல் வில்லின் மீது படர, மற்ற விரல்கள் பலத்துடன் பற்றி இருக்கும் காட்சி, வில்லை வளைத்து இழுத்து கயிற்றை பிடித்திருக்கும் கரமோ இன்னும் அற்புதம். அதற்க்கு ஏற்றார்போல உடலை சற்று விறைப்பாக செதுக்கி இருப்பது .. உயிரோட்டம்

அடுத்து நம் கண்ணுக்கு சட்டென படுவது – தண்டம். யமனின் கால தண்டம். இது தண்டமோ அல்லது (G)கதையோ என்ற கேள்வி வராமல் இருக்க, சற்று படத்தை உற்று பார்ப்போம்.


கைப்பிடி கதை போல இருந்தாலும், உருண்டையாகவே இருக்கிறது. மேலும் தண்டத்தின் மேல் பாகம் நன்கு உருண்டு உள்ளதை நாம் தெளிவாக பார்க்க முடிகிறது. தண்டம் சிங்கத்தின் பிடரி பக்கம் முடிவதாலும், அதை அடுத்து சிங்கத்தின் பிடரி ரோமங்களின் வேலைப்பாடு இருப்பதால், சிதைந்த கூரிய கத்தி அல்ல என்று நாம் தெளிவாகவே சொல்லலாம்.

மேலும் மற்ற கரங்களில் உள்ள ஆயுதங்கள் என்ன என்னவென்பதை படங்களை கொண்டு பட்டியலுடன் ஒப்பிட்டு கூறுங்கள் பார்க்கலாம்.

ஆமாம், ஈசனிடம் பெற்ற சூலம் எங்கே?. ஒருவேளை வில்லையும் நாணையும் பிடிக்க இரு கரங்கள் தேவைப்பட்டதால் சிற்பி சூலத்தை விட்டு விட்டாரோ?

சிற்பத்தின் அழகை ரசிக்க இன்னும் ஒரு படம். படைப்பு சிற்பம், அதிலும் இப்படிப்பட்ட சிற்பத்தை வடித்த சிற்பி, தேவியை சிங்கத்தின் மீது சவாரி செய்வது போல காட்ட வேண்டும். இங்கே பாருங்கள், வலது கால் எப்படி முழுமையாக வெளியில் நீட்டி செதுக்கி உள்ளான் என்று.

இப்போது நீங்கள் மனதில் இந்த சிற்பத்தை ஒரு தனி படைப்பாக பார்க்காமல், ஒரு குடைவரையின் ஒரு பக்க சுவர் ( மறு பக்கம் இருப்பது நாம் முன்னர் பார்த்த சேஷ சயன பெருமாள் ),

ஒரு மலையினுள் குடைந்த அதிசயம் இது. புரிகிறதா.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

விஜயவாடா மொஹல்ராஜபுரத்து அதிசயங்கள் – பாகம் 2

மோகல்ராஜபுரம் பற்றிய முதல் பதிவில் திரு திவாகர் அவர்களின் ஒரு சில படங்களே கிடைத்தன். அவற்றில் எழுந்த கேள்விகளை தீர்க்க இணையத்தில் பல நாட்கள் தேடியும் ஒன்றும் கிடைக்க வில்லை. பிறகு கூகிள் மொழிபெயர்ப்பு கொண்டு தெலுங்கில் தேடினேன். கிட்டியது

http://pratibimbamu.blogspot.com/

தளத்தின் உரிமையாளருக்கு உடனே மடல் அனுப்பினேன், திரு நாராயணசுவாமி அவர்களும் படங்களை வெளியிட அன்புடன் ஒத்துக்கொண்டார்.

படங்களை பாருங்கள். இன்னும் பல கேள்விகளே வருகின்றன

வாயிற் காப்போனை பாருங்கள் ( எனக்கு மிகவும் பிடித்தவர்கள் – எவ்வளவு சிதைந்தாலும் ) வலது புறம் இருப்பவனின் தலையில் அது என்ன கொம்பு போல ( அதற்கென தனி பதிவு தயார் செய்ய வேண்டும் )

கூடுகளை இன்னொரு முறை பாருங்கள்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment