சோழ மன்னர்களின் வெங்கலச் சிற்பங்கள் – ஆய்வுத் தகவல்களின் தொகுப்பு

கை உடைய மொழி பெயர்த்த சதீஷுக்கு முதல் நன்றி

தஞ்சை பெரிய கோவிலின் 1000-மாவது ஆண்டை முன்னிட்டு அன்றாட செய்திகளில் தஞ்சை சமீபகாலமாக தொடர்ந்து இடம் பெறுவது நாம் யாவரும் அறிந்ததே. அதே நேரத்தில் சரபாய் அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒரு வெங்கலச் சிலையையும் தஞ்சைக்கே மீட்டு வரவேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன என்பதையும் அறிவோம். இந்த சந்தர்ப்பத்தில் ஏற்கனவே செய்யப் பட்டுள்ள ஆய்வுகளை படிக்க முயல்கையில் பல்வேறு செய்திகள் நமது ஆர்வத்தை தூண்டி, வெங்கலச் சிலைகளைப் பற்றிய பல்வேறு தகவல்களை நமக்கு அளிக்கின்றன.

கிடைத்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன: சற்றே நீளமான பதிவுதான் ஆனால் நிச்சயம் சுவையாக இருக்கும் என்று கூறிக்கொண்டு தொடர்கிறேன்.

( புகைப்படத்திற்கு நன்றி: திரு. குடவோயில் பாலசுப்ரமணியம் அவர்களின் நூலான இராஜராஜேச்சுவரத்தின் பின் அட்டைப்படம்)
இது ராஜராஜசோழரா என்று அறிந்து கொள்ள வேண்டுமா? 1014-ஆம் ஆண்டு தஞ்சை ஆலயத்தின் மேற்குப் பகுதிக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_2/no_36_to_40_on_1st_niche_west_enclosure_1st_2nd_inscription.html

எண். 38. மேற்குப் பகுதியில் உள்ள முதல் மாடத்தின் மூன்றாவது கல்வெட்டு:
ஏழு உருவங்களைப் பற்றி விளக்கும் இந்தக் கல்வெட்டு இராஜராஜத் தேவரின் 29ஆம் ஆண்டுக்கு முன்னர் இராஜராஜேச்சுவர் ஆலயத்தின் நிர்வாகியால் வெட்டப்பட்டது, இவரைப் பற்றிய தகவல்களும், அவரால் கொடுக்கப்பட்ட ஆபரணங்களின் எண்ணிக்கை (பத்தி 23 – 50) மற்றும் இரண்டு நகரத்தை சார்ந்த மக்களின் நன்கொடைகளைப் பற்றிய தகவல்களும் (பத்தி 51 & 59) கல்வெட்டு எண் 26-ல் காணக்கிடைக்கின்றன. இதில் குறிப்பிடப் பட்டிருக்கும் உருவங்கள்: நம்பி ஆரூரனார் (பத்தி 2, 23, 55, 59), நங்கைப் பரவையார் (5, 25, 57, 66), திருநாவுக்கரையர் (8, 29, 53), திருஞானசம்பந்தடிகள் (11, 36, 51), பெரிய பெருமாள்(14, 44), அவரது துணைவியார் ஓலோகமாதேவி (17, 47), சந்திரசேகரர்[7] (20). இதில் பெரிய பெருமாள் மற்றும் அவரது துணைவியார் ஓலோகமாதேவி உருவங்கள் இராஜராஜ சோழ மன்னரும் அவரது துணைவியாரும் ஆலயத்தைக் கட்ட அருள் செய்த சிவபெருமானான சந்திரசேகரரை வணங்குவதைப் போல் இருக்கின்றது என்பது கருத்து.
மொழிபெயர்ப்பு:
1. ஸ்வஸ்திஸ்ரீ! இராஜராஜத்தேவரின் ஆண்டு 29 – ல் பொய்கை நாட்டுத் தலைவனும் ஆலய நிர்வாகியுமான ஆதித்தன் சூரியன் தென்னவன் மூவேந்தவேளனால் ஸ்ரீஇராஜராஜேச்சுவரர் ஆலயத்தில் பின்வரும் தாமிர சிற்பங்கள் பிரதிட்டை செய்யப்பட்டன. சிலைகளின் அளவுகள் ஆலயத்தின் முழத்திலும், ஆபரணங்கள் தக்ஷின மேரு விடங்கன் அளவையிலும், தங்கம் ஆடவல்லான் அளவையிலும் அளந்து ஆலயத்திற்கு அளிக்கப்பட்டன என்பது கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது: –
…………………
14. இரண்டு திருக்கரங்கள் கொண்ட பெரியபெருமாளின் செப்புத் திருமேனி ஒன்று, உச்சி முதல் பாதம் வரை ஒரு முழம் நான்கரை விரல் அளவு உயரம் கொண்டது.
15. ஐந்து விரல் இரண்டு தோரை அளவு கொண்ட ஒரு தாமரைப் பீடம்.
16. ஒரு பீடம் (தாமரைப் பீடத்தோடு இணைந்தது), பதினோறு விரல் சதுரம் மற்றும் ஐந்து விரல் ஆறு தோரை உயரம் கொண்டது.
17. இரண்டு திருக்கரங்கள் கொண்ட ஓலோகமாதேவியாரின் செப்புத் திருமேனி ஒன்று, இருபத்திரண்டு விரல் இரண்டு தோரை உயரம் கொண்டது.
18. ஐந்து விரல் உயரம் கொண்ட தாமரைப் பீடம் ஒன்று (மேற்சொன்ன சிற்பத்திற்கு)
19. ஒரு பீடம் (தாமரைப் பீடத்தோடு இணைந்தது), பதினோறு விரல் சதுரம் மற்றும் ஐந்து விரல் ஆறு தோரை உயரம் கொண்டது.
20. நான்கு திருக்கரங்கள் கொண்ட பெரியபெருமாளின் தேவாரத் தேவரான சந்திரசேகரதேவரின் செப்புத் திருமேனி ஒன்று, உச்சி முதல் பாதம் வரை ஐந்து விரல் மற்றும் இரண்டு தோரை உயரம் கொண்டது.
21. செப்பு பீடம் ஒன்று இரண்டு விரல் நான்கு தோரை சதுரம் மற்றும் ஒரு விரல் உயரம் கொண்டது. இதோடு இணைந்த தாமரைப் பீடம் ஒன்று ஒன்றரை விரல் உயரம் கொண்டது.
22. இருபத்தியொரு விரல் சுற்றளவு கொண்ட சிலையின் செப்புத் தோரணக்கால் ஒன்று.>>>>>>>>

நம்முடைய கவனம் இப்பொழுது பதிந்திருப்பது மேற்குறிப்பிட்ட அளவுகளில்: அதுவும் ஒரு முழம், நான்கரை விரல் அளவில். ஒரு முழம் என்பது தோராயமாக 15 அங்குலம், நான்கரை விரல் என்பது அரை முழம், அப்படியெனில் மொத்த அளவு 22.5 அங்குலங்கள் அதாவது 57 செ.மீ. ஆனால், இந்த அளவைகள் இடத்திற்கு இடம், ஆலயத்திற்கு ஆலயம் வேறுபடும், ஒரே அளவு அல்ல! சில காலத்திற்கு முன் ஒரு ஸ்தபதியிடம் இருந்து தெரிந்து கொண்டது: அளவைகள் ஒரு இடத்தில் விளையும் நெல் மணிகளின் அளவை வைத்துக் கூட தேர்வு செய்யப்படுமாம்! அதோடு மட்டுமல்ல ஆட்சியாளர், அவரது பிறப்பு மற்றும் பல காரணிகள் முன்னிட்டும் கூட இந்த அளைவைகள் வேறுபடுமாம். அப்படி தேர்வு செய்யப்பட்ட அளவுகளைக் கொண்டே ஒரு இடத்தின் ஆலயங்கள், ஆலயத்தில் உள்ள தெய்வங்கள் மற்ற சிற்பங்கள் முடிவுசெய்யப்படும். இது மனிதனின் மரபணுவைப் போன்றது. ஆய்வாளர்கள் நிச்சயம் தஞ்சைப் பெரியக்கோவிலின் மூல அளவையை கண்டுபிடித்தால் இந்த முழச் சிக்கல் சுலபமாக தீர்ந்து விடும்!

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருந்து ரூ-386 க்கு வாங்கப்பட்ட ,Bronzes of South India – P.R. Srinivasan (F.E. 1963, L.R. 1994) என்ற நூலை வைத்துத்தான் நாம் வெங்கலச்சிலைகளைப் பற்றிய தேடலை மேலும் தொடரப்போகிறோம்.

படத்தில் தோன்றுவதை விடப் பெரியது இந்த நூல், கொடுக்கும் பணத்திற்கு மேல் கிடைக்கும் விருந்து.

சற்றே கருமையாகத் தோன்றும் பக்கங்கள் முழுதும் வெங்கலச் சிலைகளின் விளக்கங்கள், வெள்ளை நிறப் பக்கங்கள் முழுவதும் படத்தொகுப்பு. ஒவ்வொரு பக்கமும் சுவாரசியம் நிறைந்தது. சரி சரி நாம் தேடும் திருமேனி இருக்கிறதா இல்லையா என்று கேட்பது புரிகிறது! நாம் தேடும் சிற்பமும் இங்கிருக்கிறது. இதோ…

இந்தச் சிலை பற்றி கூறப்பட்டுள்ள விபரங்கள் (மொழிபெயர்ப்பு):

சோழ மன்னரின் உருவத்தைக் காட்டும் 74 செ.மீ. உயரம் கொண்ட இந்த வெங்கலச் சிலை பத்மாசனத்தின் மீது ஸமபங்க ஆஸநம் கொண்டு கூப்பிய கைகளுடன் உள்ளது – மகுடமும், சிங்கமுகம் கொண்ட இடுப்புக் கச்சையும் நல்ல வடிவமைப்பு கொண்டவையாக இருக்கின்றன. இவை மட்டுமின்றி தோளணிகள், கழுத்தணிகள் உட்பட ஏனைய ஆபரணங்கள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டுள்ளன. நேர்த்தியாகவும் துல்லியமான வடிவமைப்பையும் உடைய முகம் சதுரமாகத் தெரிகிறது. உருவத்திற்கு பொருத்தமான அடக்கத்தைக் காட்டும் அபிநயம். வழக்கமான வளையம் போன்ற கழுத்தணி காணப்படவில்லை ஆனால் பொருத்தமான இரண்டு கழுத்தணிகள். மென்மையான சன்னவீரம் (வெற்றி மாலை) அந்தக் காலக்கட்ட ஸ்தபதிகளின் பாணியில் உள்ளது.


உடலமைப்பு என்னவோ சற்று பொருத்தமாக இல்லை. மார்பகத்திற்கு பொருத்தமானதாக இல்லாவிட்டாலும் கைகள் வீரத்தைக் காட்டுவனவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நீட்டிக் கொண்டிருக்கும் மார்புக் காம்புகளும், கையணிகளும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. கையணிகளில் மணிகள் பொருத்தப்பட்டு தனித்துவமாகத் தெரிகின்றன. இது போன்ற வெங்கலச் சிலைகள் இந்தக் காலக்கட்டத்தில் காண்பது அரிது. அதுமட்டுமல்ல இந்த சிலையில் உள்ள வடிவமைப்பு தனித்துவம் வாய்ந்ததாகவும் இதற்கு பிற்காலச் சிற்பங்களில் கூட காணக் கிடைக்காததாகவும் தோன்றுகிறது. தோள்பட்டையின் மேல் இருக்கும் அணிகள் பக்கவாட்டில் மட்டும் இருப்பது மிகவும் சுவாரசியம். அதோடு மட்டுமல்லாமல் கைகளுக்கு இடையே மலர் போன்ற ஒன்றை வடிவமைத்திருப்பது மிகுந்த கலைத்திறனைக் காட்டுகிறது.

சிங்கமுகம் கொண்ட இடுப்புக் கச்சைகளின் வடிவமைப்பு மிகவும் அபாரம்! அதில் இருந்து தொங்கும் தோரணங்களும், குஞ்சங்களும் கலை நேர்த்தியை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. கீழாடையின் (கோவணம் போன்ற) (கரை)ஓரங்களின் வடிவமைப்பு குறிப்பிடத்தக்கது. இடுப்புக் கச்சையின் வடிவமைப்பு மிகவும் நவீனமாகத் தெரிகிறது. கால்களின் வடிவமைப்பு அவ்வளவு நேர்த்தியாக இல்லை, முட்டிகள் மட்டுமல்ல கால் தசைகளின் வரியமைப்புகளும் இயற்கையாக இல்லை. பாதசாரங்கள் (கொலுசு) இல்லாமல் இடக்காலில் மட்டும் காணப்படும் கழல் (சிலம்பு போன்ற ஒன்று) முக்கியமாக குறித்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. இது போன்ற கழல்கள் கொண்ட சிற்பங்கள் சிதம்பர ஆலயத்தில் மேற்குப்புற மற்றும் கிழக்கு கோபுரத்திலும் காணப்படுகிறது. வேறு வகையான கழல்கள் சுந்தரபெருமாள் கோவில் சிற்பங்களிலும், கங்கைகொண்ட சோழபுரச் சிற்பங்களிலும் காணப்படுகிறது. ஆனால் பிந்தைய காலச் சிற்பங்களில் இது போன்ற கழல்கள் பொதுவான ஒன்றாகிவிட்டது. அதுமட்டுமின்றி பிற்காலச் சிற்பங்களில் இரண்டு கால்களிலும் கழல்கள் காணப்படுகின்றன, ஒரு காலக் கட்டத்தில் இவையில்லாத சிற்பங்களைக் காண்பது அரிதாகிவிட்டது.

தாமரைப்பீடம் எளிமையானதாகவும், நுண்ணிய வேலைப்பாடமைந்த தாகவும் இருக்கிறது. இதழ்கள் மிகப் பெரியதாகவும், அதனுடைய வரிகள் மங்கலானதாகவும், இதழ் நுனிகள் தெளிவின்றியும் தெரிகிறது. மொத்தமாகப் பார்த்தால் மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு நேர்த்தியாக வடிவமைத்த சிற்பமிது. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் இந்தச் சிற்பம் பனிரெண்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது, நிச்சயமாக பதிமூன்றாம் நூற்றாண்டும் அல்ல (JISOA Vol VI P22) 12 -13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்தும் அல்ல (The Art of India and Pakisthan,p 74).

ஒவ்வொரு ஆய்வாளரும் வடிவமைப்பைக் கொண்டு கணக்கிடும் காலம் வேறு வேறாக இருந்தாலும், சிலை தனியே, பீடம் தனியே, தாமரைப் பீடம் தனியே சொல்லும் அளவுகள் மாறாது. தற்சமயம் கேள்விக்குறியாக இருப்பது கல்வெட்டில் குறிப்பிடப் பட்டிருக்கும் முழ, விரல் அளவைகளை எவ்வாறு இன்றைய கால அளவுகளில் மாற்றூவது என்பதுதான்! இந்த நூலில் குறிப்பிட்டிருக்கும் 74 செ.மீ. அளவு சிலையின் அளவு மட்டுமா அல்லது பீடத்தையும் சேர்த்தா? யாராவது சரபாய் அருங்காட்சியத்திற்கு சென்று அளந்து சொன்னால்தான் உண்டு!.

பார்க்கப் போனால் மேற்சொன்னத் தகவல்களோடு இந்தப் பதிவினை முடித்திருக்க வேண்டும். ஆனால் அவன் திருவருள் என்னவோ, திருமதி. லிஸ்பெத் பங்கஜ பென்னிக் அவர்களோடு உரையாடிய போது கிடைத்த திருவிசலூரின் அதி அற்புதமான சிற்பம் மேலும் தொடரவைக்கிறது நம்மை. இவர்தான் காலஞ்சென்ற திரு. இராஜா தீக்ஷிதரின் பதிவுகளை நிர்வகிக்கிறார், அதிலிருந்து கிடைத்த செல்வம் இது.
1930 –ல் திரு. T.G. ஆராவமுதன் எழுதிய தென்னிந்திய சிற்பங்கள்
South Indian Portraits – தென்னிந்திய சிற்பங்கள் ) எனும் கட்டுரையில் இருந்து:

South Indian Portraits

மிகவும் சுவாரசியமான சிற்பம் ஒன்று அந்தக் கட்டுரையில் கிடைத்தது, அதுவும் அந்தக் காலக்கட்டத்தில் தஞ்சை பெரியக் கோவிலிலேயே இருந்த ஒன்று. பார்த்தவுடனேயே அறிந்துகொள்வீர்கள் இது முற்றிலும் புதிதான சிற்பம் என்று, அதோடு மட்டுமின்றி இதைப் பற்றி எந்த ஒருக் கட்டுரையிலோ அல்லது எந்த ஒரு அருங்காட்சியகத்திலோ பார்க்காத ஒன்று என்றும் அறிந்து கொள்வீர்கள். காலில் அணிந்திருக்கும் கழல்களை பார்க்கும் அளவுக்கு படம் தெளிவாக இல்லை ஆனால் இரண்டு கால்களிலும் கழல்கள் இருப்பதைப் போன்று தோன்றுகிறது. இந்தக் கட்டுரையைப் படிக்கும் இரசிகர்கள் யாரேனும் பார்த்திருந்தால் அல்லது பார்த்தால் நமக்கும் தெளிவு படுத்தலாம். (மேலும் ஒரு வெங்கலச் சிற்பம் தஞ்சை அருங்காட்சியகத்தில் உள்ளது, அதனை இதற்குப் பின் காண்போம்)

(மொழி பெயர்ப்பு)
தஞ்சைப் ப்ரகதீஷ்வரர் ஆலயத்தைக் கட்டிய மாமன்னன் முதலாம் இராஜராஜனின் கடைசிக் காலக் கட்டத்தில் (985-1013 கி.பி.) ஆலயத்தின் 37ஆவது நிர்வாகி இராஜராஜருக்கும் அவரது அரசியார் ஓலோகமாதேவியாருக்கும் பல்வேறு படையெடுப்புகளின் செல்வங்களை நிவந்தனமாக விடப்பட்ட ஆலயத்தினுள் சிலைகள் எடுப்பித்ததாக தெரிகிறது. இதைக் குறிக்கும் கல்வெட்டில் உள்ள செய்தியை தெளிவாகப் புரிந்துகொள்ள இயலவில்லை. கல்வெட்டில், இரண்டு திருமேனிகள் அதில் மன்னனின் சிலை ஒரு முழம் நான்கரை விரல்கள் முடி முதல் அடிவரை, அரசியின் சிலை இருபத்திரண்டு விரல்கள் இரண்டு தோரை உயரம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கையணிகள் மற்றும் காதணிகள் ஆகியவை சிற்பங்களின் ஆபரணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி தூங்காவிளக்கு கடவுளைப் போன்றே மன்னனின் சிலைக்கும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் ஆலயத்தில் இருக்கும் எந்த ஒரு சிலையும் அரசியின் சிலை போன்று இல்லை, அந்தச் சிலை எங்கோ மாயமாக மறைந்து விட்டதாகத் தோன்றுகிறது. . மன்னவனின் சிற்பம் போன்றதொன்று ஆலயத்தில் இருக்கிறது ஆனால் அது கல்வெட்டோடு ஒப்பிடும் பொழுது மிகுந்த சந்தேகத்தை எழுப்புகிறது. இந்தச் சிலையைப் பற்றி அறிந்த தகவல்கள் இதோ. ப்ரகதீஷ்வரர் ஆலயத்தில் உள்ள சிற்பத்தில் உள்ள பெயர் “இராஜராஜேந்திர சோழா, பெரிய கோவிலின் ராஜா” என்று பீடத்தில் பிற்கால எழுத்தினால் பொறிக்கப்பட்டுள்ளது. மன்னவன் கூப்பியக் கரங்களுடன் வணங்கும் கோலத்தில் இருக்கிறார். கலை வேலைப்பாடை பார்த்தால் திருமலையில் உள்ள கிருஷ்ண தேவராயரின் சிலையை விட தாழ்ந்ததாகத்தான் தெரிகிறது. உற்சவத்தின் பொழுது சிலைகளை எடுத்துச் செல்லும் பொழுது இந்த சிலைக்கு மரியாதைக் கொடுத்து எடுத்துச் செல்வதாகவும், இந்தச் சிலை உற்சவ மூர்த்திகளுடன் ஊர்வலம் செல்வதாகவும் தெரிகிறது. சிலையில் உள்ள பெயரைப் பார்த்தால் ஆலயத்தை நிர்மாணித்தவரும் அதன் நலத்தில் அக்கறைக் கொண்டவருமான முதலாம இராஜராஜரைக் குறிப்பதாகத்தான் இருக்கிறது. உற்சவத்தின் போது நடைபெறும் முறைகளைப் பார்த்தால் இந்தச் சிலை பிற்காலத்தில் மன்னவனின் நினைவாக உருவாக்கப் பட்டதாகத்தான் இருக்க வேண்டும். முதல் பார்வையிலேயே தெரிந்து விடும் இந்தச் சிலை இராஜராஜரால் ஆலயத்திற்கு கொடுக்கப்பட்ட மற்ற சிலைகளைக் காட்டிலும் தரத்தில் குறைவு என்று, அதிலும் இதன் வார்ப்பு முறை தெள்ளத் தெளிவாக இதன் மங்கிய தரத்தைக் காட்டுகிறது. வார்த்தைகளின்றிப் பேசும் மற்ற சிற்பங்களைக் காணும்பொழுது இது ஒரு உணர்ச்சியற்ற மரக்கட்டை போல் தோற்றமளிக்கிறது. மேலும் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள அளவுகள் நிச்சயமாய் இந்த இராஜராஜச் சிற்பத்துடன் பொருந்தவில்லை. பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாகத் தெரிகின்றன, எதுவாகினும் இது இராஜராஜன் காலத்தியது அல்ல. எல்லாவற்றிலும் இருந்து, இராஜராஜரின் விருப்பத்திற்கிணங்க ஆலயத்தின் நிர்வாகி இரண்டு சிலைகளை விழாக் காலங்களில் உற்சவ மூர்த்திகளோடு ஊர்வலம் எடுத்துச் செல்ல நிர்மாணித்திருப்பார் என்பது ஊகம். ஒருவேலை, அந்தச் சிலைகள் காணாமல் போய்விட்ட பின் இந்தச் சிலைகளை உருவாக்கியிருக்கலாம், அந்தக் காலக் கட்டத்தில் இந்தப் பகுதியினரிடையே இந்தக் கலையின் வளர்ச்சி தேய்ந்திருக்கலாம். ஒருவேளை அந்த உண்மைச் சிற்பங்கள் இருந்திருந்தால் அதனுடைய தனித்தன்மையான கலை நமக்குத் தெரிந்திருக்கக் கூடும், அதன் காலத்தினால் மட்டுமல்ல அந்தக் காலக்கட்டத்தைச் சார்ந்த வெங்கலச் சிற்பங்கள் தென்னிந்தியாவிலேயே மிகச் சிறந்த கலை நுட்பத்தில் உருவாக்கப் பட்டன என்பதாலும்!


இந்த வெங்கலச் சிற்பங்கள் இப்பொழுது எங்கே?

இந்தச் சிற்பத்தை தேடிக் கொண்டிருக்கும் பொழுது, சதீஷ்-ன் தஞ்சை அருங்காட்சியகத்தின் புகப்படத் தொகுப்பில் கிடைத்த வெங்கலச் சிற்பம் இது!

காலில் அணிந்திருக்கும் வீரக்கழலை வைத்து இது நிச்சயம் ஒரு மன்னராகத்தான் இருக்கக் கூடும் என்று அறிகின்றோம்.

உடலமைப்பில் நேர்த்தி இருந்தாலும் முக வடிவமைப்பு தேர்ச்சி பெறவில்லை. மணிமுடியின் வடிவமைப்பு இதனை பிற்காலச் சிற்பங்களோடு ஒப்பிடுகிறது. இந்தச் சிலைக்கான பெயர் பலகை அப்பொழுது வைக்கப்படவில்லை, இப்பொழுது இருக்கின்றதா என இதைப் படிக்கும் யாரேனும் பார்த்துக் கூறினால் நன்றுசரி, யார் இந்த ராஜரீக உருவம்?

இதுவரை இந்தப் பதிவை ஆழ்ந்து படித்தவரால் எளிதில் தெரிந்துகொள்ள முடியும் பார்த்தமாத்திரத்தில், இதுவரை பார்த்த சிலைகளின் பொதுவானதொரு அமைப்பு கூப்பிய கைகள் என்று! ஆனால் ஒரு வேறுபாடு, முதல் சிற்பத்தில் இரண்டு கைகளுக்கிடையே ஒரு மலர் இருந்தது. இது எதைக் குறிக்கின்றது? திரு. P.R ஸ்ரீனிவாசன் அவர்கள் நூலிலிருந்து வெங்கலச் சிற்பங்களுக்கான சில விளக்கங்களைப் பார்ப்போம்.

இதே பாணியில் 12-ஆம் நூற்றாண்டை சார்ந்த சண்டிகேஸ்வர சிற்பங்கள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு ஈடன் கல்லூரியில் (புத்தகத்தில் உள்ளது) உள்ள கீழுள்ள சிற்பத்தைப் பார்ப்போம்

மேலும் ஒரு தலைசிறந்த படைப்பான பொல்லுனுவாரா (இலங்கை) சண்டிகேஸ்வர சிற்பமும் இதே 12-ஆம் நூற்றாண்டை சார்ந்ததுதான்.

உருவமைப்பு, கூப்பிய கைகள் மற்றும் அதற்கிடையே மலர்கள் ஆகியவை பொதுவாக இருந்தாலும், காலில் கழல்கள் காணப்படவில்லை.

மேலும் ஒரு சுவாரசியமான சிற்பம், தென் ஆற்காடு மாவட்டம் கடலூர் கந்தரக்கோட்டையைச் சார்ந்த மன்னரின் உருவம், அதே நூலில் இருந்து.

இதன் காலம் 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. வளர்புரத்தின் ராமரை ஒத்த மணிமகுடம், கழுத்தணிகள் மற்றும் கையணிகள் இந்தக் காலக்கட்ட சிற்பங்களுக்கு பொருத்தமானதாக இருக்கிறது. இடுப்புக் கச்சை நெருக்கமான மடிப்புகளுடன், தெளிவான ஓரங்களுடனும் வடிக்கப்பட்டுள்ளன. உத்தரீயம் முன்புறம் அழகான முடிச்சுடனும், தொங்கணிகளுடனும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இதற்கு முன் பார்த்த சிற்பங்களில் இல்லாதவாறு அஞ்சலி செலுத்தும் கைகளுக்கிடையே உள்ள மணி மாலை மிகவும் கவனிக்கத்தக்கது. முழங்கைக்குப் பின் வளைந்த கைகளும், நல்ல மொத்தமான கழலும் இந்த சிற்பத்தின் பாணி தனித்தன்மை வாய்ந்தது என்பதைக் காட்டுகிறது. முதலாம் இராஜேந்திரர் காலத்தின் பெரும்பாலான சிற்பங்களில் இந்த கழல் பொதுவான ஒன்றாக இருந்தது. இந்த சிற்பத்தின் உருவமைப்பு, விஷ்ணுவின் உருவத்தை ஒத்ததாக இருக்கின்றது அதோடு அழாகான இயற்கையான கால்கள் போன்ற வடிவமைப்பு கலைத்திறனை எடுத்துக் காட்டுகிறது.

ஏற்கனவே பார்த்தது போல் இந்த பத்மாசனத்திலும் இதழ்கள் தெளிவாகத் தெரிகிறது ஆனால் அதன் நுனிகளில் முக்கியத்துவம் தெரியவில்லை. இரண்டு வளையங்கள் கொண்ட சதுரமான பத்ராசனத்தின் மீது இந்த தாமரைப் பீடம் அமைந்துள்ளது.

மேற்சொன்ன தகவல்களிலிருந்து இது ஒரு சிறந்த வெங்கலச் சிற்பம் என்று அறிந்து கொள்ளலாம். திரு. T.G. ஆராவமுதன் இது ஏதேனும் ஓர் சிற்றரசராக இருக்கலாம் என்று கருதுகிறார். ஆனால் ஆய்வாளர்கள், இது கண்டெடுக்க்ப்பட்ட இடத்தில் உள்ள ஆலயத்தைக் கட்டிய சோழ மன்னன் மதுராந்தகனின் உருவமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இருந்தாலும் அவர்களால் இது எந்த மன்னனின் உருவம் ஒன்று நிச்சயமாக கூறமுடியவில்லை. மதுராந்தகன் என்ற பெயர் சோழர்களில் முதலாம் பராந்தகர், சுந்தர சோழன், முதலாம் இராஜேந்திரர், வீரராஜேந்திரனின் மகன் மதுராந்தகன் என பலருக்கு இருந்திருக்கிறது. இதன் கலைத்தன்மையை வைத்துப் பார்த்தால், முதல் இரண்டு மன்னர்களுடையதாய் நிச்சயம் இருக்காது. முதலாம் இராஜராஜரைப் போலவே அவரது வழிவந்தோரும் உற்சவ மூர்த்திகளுடன் செல்லவும், ஆலயத்தில் அதைக் கட்டிய மன்னன் உருவம் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தச் சிலையை நிர்மாணித்திருக்கலாம். அதோடு இராஜராஜர் காலச் சிற்பத்தை விட இதில் கலை நுட்பத்தின் முன்னேற்றம் தெரிகிறது. ஆகவே இது முதலாம் இராஜேந்திரருக்காக அவரது வம்சத்தில் வந்தவர் யாரேனும் இதனை நிர்மாணித்திருக்கலாம். காலக் கணக்கின் படி, முதலாம் இராஜேந்திரரின் பாணியில் கலை வளர்ந்த காலம் 1075 (கி.பி.) வரை, தொண்டைமண்டலத்தை ஆண்டுவந்த வீரராஜேந்திரன் 1065 (கி.பி.) ஆண்டில் இதை ஆலயத்தைக் கட்டிய இராஜேந்திரரின் நினைவாக நிர்மாணித்திருக்கலாம். இதனது முடிவை தெரிந்து கொள்ளவேண்டும் எனில், இந்த சிற்பத்தையும், கிராமங்களிடம் திருப்புக் கொடுக்கப்பட்ட மற்ற சிற்பங்களையும் பற்றிய கள ஆய்வு மேற்கொண்டால்தான் முடியும்.

இந்த வெங்கலச் சிற்பத்தின் இருப்பிடமும் தெரியவில்லை!

நீளமான இந்தப் பதிவை உடைப்பதற்காண குரல் ஓங்கி ஒலிக்கிறது மனதினுள், நிறுத்துவதற்கு முன் மேலும் ஒரு அதிசுவாரசியமான சிற்பத்தை பார்த்துவிடுவோம். மேல் பார்த்த அதே நூலில் இருந்து மேலும் ஒரு சோழ மன்னன், மூன்றாம் குலோத்துங்கராக இருக்கலாம்

ஒரு அடி உயரம் கொண்ட இந்த வெங்கலச் சிலை மூன்றாம் குலோத்துங்கராக இருக்கலாம். முன்னர் இது காளகஸ்தி சிவாலயத்தில் இருந்தது, ஆனால் தற்சமயம் ஏதோ ஒரு தனியார் வசம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை! அதிர்ஷ்டவசமாக இதன் பீடத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டாய்வாளர் திரு. G. வெண்கோப ராவ் இது 13ஆம் நூற்றாண்டை சார்ந்த எழுத்துக்கள் என்று கண்டறிந்திருக்கிறார், இதனை திரு. T.G. ஆராவமுதனும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இரண்டு பாகங்களாக பொறிக்கப்பட்டுள்ள தகவலில், முதல் பாகத்தில் “குலோத்துங்க சோழ தேவர்” எனவும் இரண்டாவது பாகத்தில் “உடைய நம்பி” நிவந்தனமாக கொடுத்ததாகவும் உள்ளது. இதில் உள்ள எழுத்துக்களால் காலத்தைக் கண்டறியும் வேலை சுலபமாகிறது, அதோடு இதன் பாணியும் கலை நுட்பமும் காலத்தை கண்டறிய மிகவும் ஏதுவாக இருக்கும்.
முனைவர். சாஸ்திரி இந்த சிலையப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: ” ……இந்த உருவத்தில் பல ஆபரணங்கள் உள்ளன, அதோடு இதன் முகம் இளமையும், உற்சாகமும், புத்துணர்ச்சியையும் காட்டுவதாக உள்ளது. இது மிக முக்கியமானதொரு சிலை, சோழ வம்சத்தின் கலைக்கு ஆதாரமாய் விளங்கும் வெங்கலச் சிற்பம் ஒருவேளை இது மட்டுமாகத்தான் இருக்கும்”

ஆனால் காலத்தைப் பற்றி இவ்வாறு சொல்கிறார் “…..இந்த உருவம் மன்னன் அரியணையில் ஏறும் பொழுது உருவாக்கப் பட்டதாக இருக்கலாம்.”…..இதன் காலம் அனேகமாக 1180 ஆக இருக்கக் கூடும்,” ஒரு வேளை இது முந்தைய காலத்தைச் சார்ந்ததாக இருக்கக் கூடும் என்று எண்ணியவாறு அவர் இதை கூறியிருக்கலாம்!

அழகான இந்தச் சிலையின் அம்சங்கள்: முன்னால் சுருள் சுருளாகக் காணப்படும் முடி, திருஞானசம்பந்தரின் ஒத்த வடிவம், மொத்தமான கழுத்தணிகள், மணிகள் பதித்த தோளணிகள், அழகான ஆனால் அதிக நுண்ணிய வேலைப்பாடில்லாத கையணிகள், அழகான இடுப்புக் கச்சை மற்றும் சிறிய கீழாடை, மூன்று வளையங்களைக் கொண்ட கழல்கள்.

இதனுடைய பீடங்கள் அழகானதாகவும், தாமரைப் பீடம் வழக்கமான பாணியிலும் உள்ளது. மொத்தத்தில் இந்தச் சிலையின் வடிவம் அழகாய் மனதில் வடிக்கப்பட்டு, துல்லியமாய் வார்க்கப்பட்டதாய் உள்ளது. இதன் முகத்தில் உள்ள வசீகரம், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம், மந்திரப் புன்னகை யாவும் இதன் சிறப்பு. இதன் காலக்கட்டம் 13ஆம் நூற்றாண்டின் இடைக்காலமாக இருக்கக் கூடும்.

ஆய்வாளர்கள் நாம் படித்து தெரிந்து கொள்ள ஏராளமானவற்றை கொடுத்திருக்கின்றனர், ஏராளமான தகவல்கள் இருக்கின்றன ஆனால் இவையெல்லாம் புதிய கண்டுபிடிப்புகள் அல்ல. என்னைப் போலவே, இந்த நீண்ட பதிவு உங்களுக்கும் சுவாரசியமாகவும், பொருள் பொதிந்ததாகவும் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
தற்போது எங்கு உள்ளன என்ற குறிப்புகள் இல்லாத இந்த சிற்பங்களில் சிலவற்றையாவது நம்மால் மீண்டும் என்றாவது காணமுடியும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை தற்காலிகமாக முடித்துக் கொள்வோம்!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ராஜனுக்கு ராஜன் ராஜ ராஜன் தான் – இது அவரா ?

உலகில் பலவற்றை நாம் வென்றாலும் காலத்தை வெல்வதென்பது கடினம். அப்படி காலத்தை வென்று அழியாப் புகழ் பெறுவது என்பது அதனை விட கடினம். அப்படி காலத்தை தனது கை வண்ணத்தாலும் , செயல் வண்ணத்தாலும் , வென்று ஒவ்வொரு தமிழனையும் ஆயிரம் ஆண்டுகள் சென்றும் அவனது பெயரை கேட்டவுடன் ஒரு தனி மதிப்பை தானே பெரும் வல்லமை – நமது் ராஜ ராஜ சோழருக்கு உள்ள தனிச் சிறப்பு. ஒவ்வொரு முறை அவர் எடுப்பித்த பெரிய கற்றளியான தஞ்சை பெருவுடையார் ஆலயத்தை பார்க்கும் போதும், அமரர் கல்கியின் அற்புத வர்ணனையுடன் பொன்னியின் செல்வனை ஓவியர் மணியம் அவர்களின் ஓவியங்களுடன் அருண்மொழியை மனக்கண்ணில் சித்தரித்த ஆயிரம் ஆயிரம் ரசிகர்களின் தணியா தாகம் அவரது நிஜ உருவத்தை காட்டும் ஓவியம் அல்லது சிற்பம் பார்க்கவேண்டும் என்பதே. பல முறை இந்த ஆவலை தணிக்க வந்த விடைகள் – பெரிய கோயில் ஓவியம் , சாராபாய் அருங்காட்சியகத்தில் இப்போதும் உள்ள அழகான செப்புத் திருமேனி, ஆனாலும் என்ன, தெள்ளத் தெளிவாக இதுதான் உடையார் ராஜ ராஜ சோழர் என்று சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபிக்க முடியவில்லையே.. அப்படி இருக்கையில், ஒரு தேடலில் இந்த ஆய்வுக் கட்டுரை என் கண்ணில் பட்டது The Problem of Portraiture in South India, Circa 970-1000 A.D.,Author(s): Padma Kaimal

அதில் ஒரு சிறு குறிப்பு இருந்தது. திருவிசாலூர் ஆலயத்தில் உள்ள சிற்பம் மற்றும் அங்கே உள்ள கல்வெட்டு பற்றி . அதை பார்க்கும் முன்னர் ஒரு முறை ராஜ ராஜரின் மெய் கீர்த்தி தனை மீண்டும் ஒரு முறை கண்ணால் காண்போம்


ராஜ ராஜா சோழர் மற்றும் அவரது பட்ட மகிஷி லோகமாதேவி அவர்களின் சிற்பம் கல்வெட்டு குறிப்புடன் என்று இருந்தது

உடனே ஒருபுறம், அந்த சிற்பபத்தின் நல்ல படத்தை கண்டு பிடிக்க நண்பர்களை நாடினேன், மற்றொரு புறம் அந்த முழு கல்வெட்டின் பிரதியை தேடினேன் .

சிவயோகநாத ஆலயம் திருவிசாலூர் – கல்வெட்டு , அதற்கு மேலே உள்ள சிற்பத்தில் உள்ள இரு உருவங்கள் – உடையார் ராஜ ராஜர் மற்றும் அவர்தம் பட்டமஹிஷி லோகமாதேவி , அவர்கள் இந்த ஆலயத்தில் செய்த பூஜை மற்றும் கொடுத்த கொடை 458 காசு பொன்.”

கும்பகோணம் அருகில் இருக்கும் கோயில் இது, நண்பர் திரு லக்ஷ்மி நாராயணன் உடனே சென்று படம் பிடித்து தருகிறேன் என்று ஒரே வாரத்தில் படத்தை எடுத்துத் தந்தார். (நலிந்து கிடக்கும் பல கோயில்களின் படங்கள் அவரது தளத்தில் காணலாம், http://picasaweb.google.com/slnvasu)

படம், பொறுமையாக வருகிறது, அதற்கு முன்னர் சில வரிகள். திருவிசாலூர் ஆலயத்தின் காலம் முதலாம் ஆதித்யர் வரை செல்கிறது. கல்வெட்டில் கண்ட கொடை விஷயம் – ஹிரண்ய கர்ப்பம் ( பொன்னால் செய்த பசுவின் உள்புகுந்து வெளி வருவது – இனி பிறப்பே வேண்டாம் என்பதை வேண்டும் – பிறவா வரம் பெற செய்யும் யாகம் ) பற்றிய குறிப்புகள், ராஜ ராஜ சோழர், லோகமாதேவி அனைத்தும் இருந்தாலும் ( இந்த கல்வெட்டின் பிரதி திருவலஞ்சுழி ஆலயத்திலும் இருக்கிறது – குறிப்புக்கு நன்றி நண்பர் அர்விந்த் ). இது உடையாரின் கடைசி ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு. அதாவது 29 ஆம் ஆட்சி யாண்டு ( 1014).

முழு விவரம் இங்கே

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_23/aditya_2_karikala.html
No.42 (Page No 20)
(A. R. No. 42 of. 1907)

The inscription registers an agreement given by the mahasabha of vemgarrur alias Solamattanda-chaturvedimangalam a Brahmadeya in Manni-nadu, to the temple of Tiruvisalur-Mahadeva. A sum of 458 kasu was endowment to the temple and deposited with the assembly by queen Dantisaktivitankiyar alias lokamahadeviyar on the occasion of the performance of tulabhara by the king and of hiranyagarbha by herself in the temple. As interest on this amount they undertook to measure out annually 229 kalam of paddy at the rate of 1 tuni and 1 padakku on every kasu per year, and with this paddy the ur-variyam and kudumbu committees of the year were to meet the daily requirements of akkaradalai offering to the god, of which the details are given as follows:

Items required Equivalent in paddy

Rice – 2 nali … … One kurini and 2 nali

Tupparuppu(dol)—1 nali … …. 5 nali

Cow’s milk – 4 nali …. ….. ….. 1 padakku

Ghee –1 ulakku … …. ….. 1 kuruni

Sugar – 12 ½ palam … …. …. 1 kuruni and 2 nali

Plantain fruits –20 (?) …. …. ….. 6 nali

Arecanut … 10}

Betel leaves … 40} …. ….. …. 2 nali and 1 nali

Earthen pot …. …., …. 1 nali, 1 uri and 2 ¾ sevidu

Firewood …. …. ….. 1 nali
Remuneration to person preparing the offering … 1 nali

நாம் அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்த சிற்பம் இதோ.

அருகில் சென்று பார்ப்போம்.

இந்த ஆலயத்தில் நிறைய சிற்பங்கள் இல்லை. இதை தவிர இன்னும் இரண்டு புடைப்புச் சிற்பம் தான். மற்றவை எல்லாம் சிலைகள். அப்படி இருக்க, இவர்கள் சாமானியர் அல்ல, பொதுவாக பெரிய கொடை அளிக்கும் முக்கியமான சிலருக்கே இந்த வகை சிற்பங்கள் நிறுவப்படும்.

நிற்கும் ஆண், வயதில் சற்று முதிர்ந்து காணப்படுகிறார். (பொதுவாக மற்ற சோழ அரச சிற்பங்கள் அரசர்களை அமர்ந்த நிலையில் தான் காட்டுகின்றன ). அருகில் இருக்கும் அம்மையார், சற்று வயதில் சிறி்யவராக இருந்தாலும் யௌவன வயது யுவதி என்று சொல்ல முடியாது. ஆண் எந்த வித ஆபரணம் அணியவில்லை – தலையில் கிரீடம் இல்லை – அணிகலன் இல்லாத வெறும் சடை குடுமி, இரு காதுகள் நீண்டு இருந்தாலும் (முன்னர் கனத்த குண்டலங்கள் அணிந்தமையால் இருக்குமோ?) இப்போது வெறுமனே உள்ளன, இடுப்பில் வெட்டி போல ஒன்று, காலில் வீரக்கழல் இல்லை. அம்மையார் இதற்கு சற்று மாறாக கழுத்தில் ஹாரம், தலையில் சுட்டி என்று சில ஆபரணங்கள் அணிந்து , நல்ல சீலை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இருவருமே பக்திப் பரவசத்தில் கை கூப்பி நிற்கும் காட்சி அருமை.

இங்கே தான் நாம் சற்று யோசிக்க வேண்டும். அப்படி பெரிய கொடை கொடுக்கும் நபர், ஏன் இப்படி நகை ஒன்றுமே அணியாமல் இருக்க வேண்டும். கல்வெட்டின் படி 29 ஆம் ஆட்சி யாண்டு . உடையார் ராஜ ராஜா சோழர் சிவபாத சேகரன் என்று தன்னை அழைக்க தொடங்கி விட்டார். தீட்சை பெற்று சிவனடியார் ஆகவே மாறிவிட்டார் என்றும் ஒரு வாதம் உண்டு.

அவர்கள் பூஜிக்கும் சிவன்

சிவலிங்கம், அழகே பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. லிங்கத்தின் முன்னர் அபிஷேகம் செய்யும் சங்கு. அப்படி என்றால் இருவரும் தாங்களே அபிஷேகம் செய்து பூ அலங்காரம் செய்து வணங்கி நிற்கின்றனர் என்று கொள்ளலாம்.

இவற்றைக் கொண்டு பார்த்தால் இது மாமன்னர் ராஜ ராஜர் மற்றும் பட்டமகிஷி தந்தி சக்தி விடங்கி லோகமாதேவி என்று கருத முடிகிறது.

வாசகர்களுக்கு ஒரு குறிப்பு. பொன்னியின் செல்வனின் வந்தது போல – ராஜ ராஜரின் மைந்தன் ராஜேந்திரனின் அன்னை வனவன் மாதேவி ( வானதி ) வேறு – இந்த லோகமாதேவி வேறு. இதை கல்வெட்டுகளில் வானவன்மாதேவி திருவயிறு் உதித்த ராஜேந்திரன் என்று வருவதை கொண்டு அறியலாம்.

மேலும் ஆராய இந்த சிற்பத்தினை தீவிர ஆராய்ச்சியாளர்கள் கையில் விட்டு விடுகிறேன்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

மகாபலிபுரம், முற்றுப்பெறாத கவிதைகள் – திரு சு . சுவாமிநாதன் , படங்கள் – திரு அசோக் கிருஷ்ணசுவாமி

சுட சுட வருகிறது இந்த பதிவு . இதை விமர்சனம் என்று கண்டிப்பாக சொல்ல இயலாது. இது எனக்கு மல்லையின் அதிசயங்களை ரசனையுடன் கற்றுக்கொடுத்த ஒரு ஆசிரியரின் உழைப்பு , கருங்கல்லில் காவியங்கலாகிய இவற்றை பற்றிய விழிப்புணர்வு பலரை சென்று அடையவண்டும் என்று அயராது உழைக்கும் அவரது உயரிய எண்ணமே என்னையும் அந்த பாதையில் ஒரு சிறு காலடிகளை எடுத்து வைக்க தூண்டியது. அவர் மட்டும் அல்ல, நண்பர், புகை பட நிபுணர், கணினிக் கலை வித்தகர் அசோக் அவர்களது உழைப்பும் சேர்ந்து வெளிவரும் நூலின் அறிமுகம் இது.

ஒற்றைக் காலில் நின்று, கைகளை தலைக்கு மேல் தூக்கி கூப்பியவண்ணம் தவமிருக்கும் அந்த மனிதனின் நோக்கம் என்னவாக இருந்தாலும் சரி, கலைகளை ஆராயும் கலைஞனையும், வரலாற்று ஆராய்ச்சியாளனையும், உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து தேடல் மனம் கொண்டு ஒவ்வொரு இடமாக பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளையும் நிச்சயமாக கவர்ந்திழுத்திடுவான்.

தங்கள் உழைப்பு , இல்லை இல்லை தவத்தின் பயனே இந்த புத்தகம் என்பதை நமக்கு உணர்த்தவோ என்னவோ அந்த சிற்பத்தை அட்டைப் படமாகக் ஆசிரயர் தேர்ந்தெடுத்துள்ளார். . அட்டைப்படம் எப்படியோ அப்படியே அவர்கள் உருவாக்கிய இந்த நூல் மாமல்லபுரத்தின் கற்சிற்பங்களுக்கு உயிர் கொடுத்து நம் உணர்வோடு உறவாடவைக்கிறது. எவ்வளவோ படைப்புகள் மல்லையப் பற்றி வந்துவிட்டன, இன்னும் வந்து கொண்டேயிருக்கும், ஆனால் இந்த நூல் அங்கிருக்கும் அதிசயத்தை அப்படியே பிழிந்து சாறாக மனதில் ஏற்றுகிறது. இந்த நூலைப் பிரித்து பார்த்த உடனே நீங்கள் மல்லையின் அதிசயங்களுக்கிடையே பயணிக்க ஆரம்பித்து விடுவீர்கள். உங்களோடு முனைவர் திரு. சுவாமிநாதன் அவர்களின் ரத்தினச் சுருக்கமான விளக்கங்கள் திரு. அசோக் அவர்களின் புகைப்படங்களோடு மவுனமாய் அவற்றை விவரித்துக் கொண்டிருக்கும்.

நமது வரவேற்பரையில் இப்படியொரு நூல் இருக்க வேண்டும் என்பது நீண்ட நாளைய அவா! எத்தனையோ நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் இருந்தாலும் அவற்றை படித்து விட்டு மல்லை சென்று ஒவ்வொரு சிற்பங்களையும் இவற்றின் சிறப்பு இன்னது தானென்று அறிந்து அவற்றை இரசித்து விட்டு வருபவரின் எண்ணிக்கை மிகக் குறைவு. இந்தக் குறையைப் போக்க வந்ததே இந்த நூல். திரு நரசையா அவர்கள் சிறப்பான முன்னுரையில் இதுவரை மல்லை புதிர்களை ஆராய்ந்த பலரை நாம் மறக்காமல் நினைவு கோர வைக்கிறார். இது மல்லை செல்லும் ஒவ்வொருவருக்கும் நல்லத் துணையாக இருக்கும் அல்லது சென்று வந்த பின் மனதில் பார்த்து இரசித்த அதிசயங்களைப் பற்றி மேலும் அறிந்து கொண்டு அசை போட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்ல, பல்லவக் கலைச் சிற்பங்களில் மனதை பறி கொடுத்த எம் போன்ற இரசிகர்களுக்கு இந்த நூல் முழங்கையில் வடியும் மலைத்தேன்! மல்லைக் கற்களின் கலைச்செல்வங்களை இந்த நூலில் கண்டதும் நம் காதில் தானாகவே கேட்கும் அலை ஓசையும், உப்புக் காற்றின் ஈரமான ஸ்பரிசங்களும் தவிர்க்க முடியாதவை.

இந்த நூலைப் பார்த்ததும் ஏதோ வண்ண வாழ்த்து அட்டைகளின் அணிவகுப்பு என்று நினைத்து விடாதீர்கள்! மல்லையின் படைப்புகளை விளக்கும் இதை ஒரு ஆய்வு நூல் என்றும் கொள்ளலாம். ஆனால் மற்ற ஆய்வு நூல்களைப் போலன்றி கண்ணால் பார்க்கும் அனைத்தையும் மனதிற்கு எளிதில் புரிய வைக்கும் ஓர் வண்ணக் களஞ்சியம். ஒரு பக்கத்தில் விவரத்தை படித்துவிட்டு பரப்புடன் நூலின் பின்னால் இருக்கும் படங்களை தேடும் பனி இல்லை. முனைவர் மிகவும் சாமர்த்தியமாக பல்லவக் கலைகளை மிகவும் எளிமையாய் விளக்க, அசோக்கின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் பின்னிப் பிணைந்து கற்சிலையின் உருவத்தை உங்களின் மனதிற்கு உணர்வுகள் மூலம் எடுத்துச் செல்கிறது. ஒவ்வொரு புகைப்படமும் அதோடு இணைந்த சிறு விளக்கமும் உங்களது கவனத்தை ஈர்க்கத் தவறாது! பல்லவர்களின் பரந்த நிலப்பரப்பில் அவர்கள் படைத்த ஒவ்வொரு ஆரம்பகாலச் சிற்பங்களோடு, அவர்களின் திறம் தேர்ச்சியடைந்து வார்த்தெடுத்த மல்லையின் சிற்பங்களை உலகுக்கு காட்டும் முயற்சிக்கு உறுதுணையாய் இருந்த பதிப்பாளர்களுக்கு நன்றி உடையவர்களாகிறோம்.

ஒவ்வொரு பக்கத்தை படி(பார்)க்கும் பொழுதும் ஆசிரியரின் மகிழ்ச்சி ததும்பும் மனதையும், அந்த உணர்ச்சியால் விரிந்த விழிகளும் நம்மை மேலும் உற்சாகமூட்டும் இந்த நூல் நிச்சயம் நம் கண்களுக்கும் மனதிற்கும் நல்ல விருந்து. பாதிப் புத்தகத்தில் இருக்கும் பொழுதே மீண்டும் ஆரம்பத்தில் இருந்து படிக்கத் தூண்டும் ஆனால் அதற்குப் பின்னர்தான் அதிசயம் காத்திருக்கிறது என்பது எப்படி படிப்போருக்கு புரியும்! முதன் முறையாக மனதைக் கொள்ளை கொள்ளும் தர்மராச இரத்ததின் மேல் கட்டு சிற்பங்கள் முழுமையாக அசோக் அவர்களின் படைப்பாற்றலாலும், அவரது கருவிகளாலும், தொழில்நுட்பத்தின் உதவியுடனும் நம் கண்களுக்குள் புகுந்து மனதில் காதலை தோற்றுவிக்கின்றன. அதே போல் கோவர்த்தன கிரி சிற்பங்களும் பிற்காலத் தூண்கள் மறைந்து முழுமையாக மனதை இலயிக்க வைக்கின்றன. அது மட்டுமல்ல அதற்கு மேல் ஒரு படி சென்று ஆரம்பத்தில் சொன்ன தவத்தைக் காட்டும் சிற்பங்கள் இரண்டு பக்கங்களாக விரிந்து ஒவ்வொரு சிற்பத்தையும் சிறப்புரக் காட்டி அப்பப்பா சொல்லவே வார்த்தையில்லை! ஆனால் ஒன்று உறுதி இந்த நூலைப் பிரித்தால் உங்களால் படி(பார்)ப்பதை நிச்சயம் நிறுத்தமுடியாது அப்படியொரு பொருள் பொதிந்த பொக்கிஷம் இது.

அத்யந்தகாமனுக்கு ஒரு அற்புதமான அர்ப்பணிப்பு

விரைவில் கடைகளில் வந்து வெற்றி நடை போட எங்கள் அன்பு கலந்த வாழ்துக்கள்

மேலும் விவரம் பெற

ARKEY GRAPHICS
[email protected]
( இந்த நூல் ஆங்கிலத்தில் வந்துள்ளது. விரைவில் தமிழ் மற்றும் இதர மொழிகளிலும் வரவேண்டும் என்ற கோரிக்கை இங்கே வைக்கிறோம் )

இணையத்தில் உங்கள் பிரதியை வாங்க

இணையத்தில் வாங்க இங்கே சொடுக்கவும்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஈசனின் மாப்பிள்ளை ஊர்வலம்

ஒரே நாளில் மூன்று முறை அதிர்ஷ்டம் அடிப்பது கடினம். எனது மனைவியின் பிறந்த நாளன்று், தற்செயலாக நாங்கள் தஞ்சையில் இருந்தோம் – முதல் வேலையாக பெரிய கோயில் ( நானும் அரவிந்தும் விடியல் காலையிலேயே எழுந்து புள்ளமங்கை தனியே சென்று வந்து விட்டோம்). ஒரு போன் போட்டு குடவாயில் பாலு ஐயா இருக்கிறார்களா என்று பார்த்தோம். அவரோ, இதோ வருகிறேன் என்று அடுத்த நிமிடம் பெரிய கோயிலுக்கு வந்தது மட்டும் அல்லாமால், வாங்க.. நானே சுற்றிக் காட்டுகிறேன் என்று புறப்பட்டுவிட்டார். கரும்பு கடிக்க கூலி தேவையா. வாருங்கள் ஒரு கரும்பை, சாறு பிழிந்து உங்களுடன் பகிர்கின்றேன். சிறிய புடைப்புச் சிற்பம் தான், எனினும் சோழ சிற்பியின் கைவண்ணம் குடவாயில் பாலு அவர்கள் சொல்வண்ணம் இரண்டும் சேர்ந்தால். ..

நாம் முன்னரே பெரிய கோயிலில் உள்ள தக்ஷன் தலையை கொய்தது மற்றும் காமனை எரிக்கும் படலங்களின் சிற்பங்களை பார்த்து விட்டோம்

தக்ஷன் தலையை கொய்த ஈசன் –

காமனை எரிக்கும் ஈசன்

இன்று நாம் பார்க்கும் காட்சி, அவற்றை அடுத்து வருபவை. மகேசன் மீண்டும் குடும்பஸ்தானாக ஆக சம்மதிக்க வைத்துவிட்டனர். தாக்ஷாயினி மீண்டும் உமையாக, பர்வத ராஜன் ஹிமவானின் குமாரியாக பிறந்து வளர்ந்து வருகிறாள். ஈசனே தன் கணவனாக வருவதற்கு தவமும் செய்யத் தொடங்கிவிட்டாள்.கந்தபுராணத்தில் இந்த காட்சியின் ஒரு வர்ணனை உண்டு ( சிற்பம் காலத்தால் அந்த காவியத்திற்கு முற்ப்பட்டது ).

கதை மிகவும் சுவாரசியம். பர்வத ராஜன் ஈசன் தூது அனுப்பிய ஏழு முனிவர்களின் பேச்சை ஏற்று தனது மகளை மகேசனுக்கு கொடுக்க ஒப்புக் கொண்டு விட்டான். ஈசன் தனது திருமணத்திற்கு கிளம்பி வருகிறார். அப்போது ஹிமவானின் மனைவி, ராணி மேனை , ஒரு அம்மாவுக்கே உண்டான ஆர்வத்துடன் தன மருமகனைக் காண விரைந்து செல்கிறாள். தன அருமை மகள் கரம் பிடிப்பவன் என்ன வதன சௌந்தர்யம் பொருந்தியவனாக இருப்பன் என்று பார்க்க அவளுக்கு ஆவல்.

ஈசன் எப்படி வருகிறார் – அவர் தான் திருவிளையாடல் நாயகன் ஆயிற்றே. இன்றும் ஜானவாசம் எப்படி எல்லாம் நாம் கொண்டாடுகிறோம் . என்ன தோரணை, பள பளக்கும் பட்டாடை, உடலெங்கும் தொங்கும் தங்க ஆபரணங்கள் , சிகை அலங்காரம் என்ன நகை அலங்காரம் என்ன, குதிரை மேலே மாப்பிள்ளை வர, ஆட்டம் பாட்டம் என்று கூட வரும் கோஷ்டி அடிக்கும் லூட்டி வேறு.

இதை எல்லாம் எதிர்பார்த்து சென்ற மேனைக்கு அங்கே ஒரு பெரும் அதிர்ச்சி.

பூத கணங்கள் சூழ்ந்து , ரிஷப வாஹனத்தில், அண்ணல் யானை தோல் உடுத்தி, நாக ஆபரணம் பூண்டு, பரதேசி போல வரும் கோலம். அதுவும் நமக்காக திரும்பி படம் பிடிக்க போஸ் கொடுக்கிறார் பாருங்கள்.

வரவேற்க வந்த மேனைக்கும் அவள் தோழிகளுக்கும் தூக்கி வாரி போட்டது. உடனே சென்று தன கணவரிடம் முறையிட்டாள்.

ஏற்கனவே சிவன் மகா கோபக்காரன். பிரமன் தலையை. தட்சன் தலையைக் கொய்தவர். இப்படிப்பட்டவர் எப்படி வருகிறார் பாருங்கள்.. இவருக்கா நம் மகளைத் தருவது?என்னால் ஒப்புக் கொள்ளமுடியாது..

http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0239.html

மலரயன் புதல்வன் றன்னோர் மடந்தையை மணத்தின் நல்க
அலைபுனற் சடிலத் தண்ணல் அவன்றலை கொண்டான் என்பர்
நிலைமையங் கதனை யுன்னி நெஞ்சக மஞ்சு மெங்கள்
குலமகள் தனைய வற்குக் கொடுத்திட லெவனோ வென்றாள்.

அருகில் இருக்கும் பிரம்மன், விஷ்ணு, நாரதர் எடுத்துரைக்க – நடந்தது தக்ஷன் செய்த குற்றத்தின் வினைப்பயன். அதையும் மன்னித்து மகேசன் அவனை உயிர்ப்பித்து ( ஆட்டு தலையு்டன் ) விட்ட கதையை கூறி, உன் மகளுக்கு இவரே ஏற்ற கணவர் என்றும், ஏற்கனவே உள்ளதை கவர்ந்துவிட்டார் என்றும் கூறி சமாளித்து விட்டனர்.

முடிவில் திருமணம் சிறப்பாக நடை பெற்று அனைவரும் நலாமாக கிளை திரும்பினர். அடுத்து குமார சம்பவம் தான். …

குடவாயில் ஐயாவுக்கு மீண்டும் ஒரு பெரிய நன்றி எனினும் அவர் இந்த சிற்ப்பத்தை தனது நூலில் வேறு விதமாக விவரித்துள்ளார் . அதையும் விரைவில் பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

குகன் படலம் – தோலுடை நிமிர் கோலின் துழவிட

இந்த பதிவு சரியாக உருவாக ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டது. முதல் முதலில் சென்னையில் டிசம்பர் மாதத்தில் திரு சிவராமகிருஷ்ணன் அவர்களின் நிகழ்ச்சியில் இந்த புடைப்புச் சிற்பத்தை பார்த்தேன். குடந்தை நாகேஸ்வரன் கோயில் சிற்பம். அருமையாக விளக்கினார். பின்னர் மார்ச் மாதம் நானும் அரவிந்தும் படம் பிடிக்க குடந்தை சென்றபோது பலத்த மழை. எனினும் சிற்பத்துக்கு் தன்னை பற்றி கண்டிப்பாக பதிவு வர வேண்டும் எனும் ஆசை போலும். ஒரே மாதத்தில் ( சென்ற மாதம் ) முதலில் இரண்டு நண்பர்களிடம் இருந்து – திரு K.S. சங்கரநாராயணன் அவர்கள் மற்றும் திரு ஹரி கிருஷ்ணன் அவர்களிடம் இருந்தும் இதே சிற்பம் கிடைத்தது. பிறகு நண்பர் அர்விந்த் மற்றும் அசோக் இதற்கென்றே குடந்தை சென்று படம் எடுத்து தந்தனர். இவற்றை கொண்டு நாம் ஒரு மேலே செல்வோம்.

முன்னரே, புள்ளமங்கையில் இந்த சிற்பத்தை பார்த்தோம். எனினும் பாதி தான் எஞ்சி உள்ளது – சிமெண்ட் கொண்டு ஒரு சுவர் கட்டி சிதைத்து விட்டனர். ( தகவலுக்கு நன்றி சதீஷ் மற்றும் அர்விந்த்)

அருகில் சென்று சிற்பத்தை பார்க்கும் முன், முதலில் ராமாயண கதையை ஒருமுறைக்கு இரு முறை – வால்மீகி மற்றும் கம்பனின் வர்ணனைகளை பார்த்து விடுவோம். சிறு படலம் என்றாலும் மிக அழகிய தருணம். முதலில் குகன் என்றவுடனே நம் கண்ணில் வருவது எளிமையான படகோட்டி உருவம் தான். அவன் சாதாரண படகோட்டியா . மேலே படியுங்கள். வால்மீகி ராமாயணத்தில்

http://www.valmikiramayan.net/ayodhya/sarga52/ayodhya_52_frame.htm

sa tu raamasya vachanam nishamya pratigR^ihya cha |
sthapatistuurNamaahuya sachivaanidamabraviit || 2-52-5

ராமன் படகு கொண்டு வா என்றதும், குகன் தனது மந்திரிகளை கூப்பிட்டு இவ்வாறு கூறினான்


asya vaahanasamyuktaam karNagraahavatiim shubhaam |
suprataaraam dR^iDhaam tiirkhe shiigram naavamupaahara || 2-52-6

ஒரு அழகிய படகு, நல்லக் கட்டுமானத்துடன் விரைந்து செல்லும் படகு, நல்ல படகோட்டியுடன், இந்த கரைக்கு கொண்டுவாருங்கள் , இந்த நாயகனை அந்தப் பக்கம் எடுத்துச் செல்ல வேண்டும்

tam nishamya samaadesham guhaamaatyagaNo mahaan |
upohya ruchiraam naavam guhaaya pratyavedayat || 2-52-7

குகனின் கட்டளையைக் கேட்டவுடன், அவனது முதல் மந்திரி ஒரு அருமையான படகை கரைக்கு கொண்டு வந்தான்

tataH tam samanuj~naaya guham ikSvaaku nandanaH |
jagaama tuurNam avyagraH sabhaaryaH saha lakSmaNaH || 2-52-73

இவ்வாறு குகனுக்கு நல்ல அறிவுரை கூறிவிட்டு, அவனிடம் பிரியா விடை பெற்று, ராமன் தனது மனைவியுடனும், தம்பியுடனும் புறப்பட்டார்.

anuj~naaya sumantram ca sabalam caiva tam guham |
aasthaaya naavam raamaH tu codayaam aasa naavikaan || 2-52-80

குகனுக்கும் சுமந்திரனுக்கும் விடை கொடுத்துவிட்டு, ராமன் படகில் அமர்ந்து , படகோட்டியை புறப்படுமாறு உத்தரவிட்டான்

வால்மீகியில் அப்படி இருக்க, நாம் கம்பனின் வரிகளை பார்ப்போம்.

http://www.tamilkalanjiyam.com/literatures/kambar/ramayanam/gugappadalam.html

குகன் நாவாய் கொணர, மூவரும் கங்கையைக் கடத்தல்

‘விடு, நனி கடிது’ என்றான்; மெய் உயிர் அனையானும்,
முடுகினன், நெடு நாவாய்; முரி திரை நெடு நீர்வாய்;
கடிதினின், மட அன்னக் கதிஅது செல, நின்றார்
இடர் உற, மறையோரும் எரி உறு மெழுகு ஆனார். 34

பால் உடை மொழியாளும், பகலவன் அனையானும்,
சேலுடை நெடு நல் நீர் சிந்தினர், விளையாட;
தோலுடை நிமிர் கோலின் துழவிட, எழு நாவாய்,
காலுடை நெடு ஞெண்டின், சென்றது கடிது அம்மா!

இராமன் குகனிடம் சித்திரகூடம் செல்லும் வழி பற்றி வினவுதல்

குகனை அவன் இனத்தாருடன் இருக்க இராமன் பணித்தல்

‘துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; “இடை, மன்னும் பிரிவு உளது” என, உன்னேல்;
முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்;

இப்போது நாம் இரு படைப்புகளிலும் உள்ள வித்தியாசத்தை பார்க்கிறோம். கம்பனின் வர்ணனையில் குகன் ராமனோடு கங்கையை கடக்கிறான். பின்னரே ராமன் அவன் அன்பை கண்டு தன் தம்பியாக ஏற்கிறான்.

இரு வரிகளை நாம் மீண்டும் படிக்க வேண்டும் : தோலுடை நிமிர் கோலின் துழவிட, எழு நாவாய்,
காலுடை நெடு ஞெண்டின், சென்றது கடிது அம்மா!

நிமிர் கோலின். அடுத்து நண்டு போல படகு சென்றது என்கிறார். அப்போது நண்டு என்பதை போல, பல பேர் துடுப்பு போடுவது போல காட்சி தெரிகிறது. இதை நமது சிற்பி , காட்சிக்கு மிகவும் தேவையானவை மற்றும் வைத்துக் கொண்டான் போல. எப்படி ? அப்போது நிமிர் கோலின் உதவி கொண்டு படகில் இருப்பது குகன்.

முழு பலத்தையும் கொண்டு ஊன்று கோலை பின்னால் தள்ளி, படகினை முன்னால் நகர்த்தும் காட்சி – இன்றைக்கும் இந்த பாணி இருப்பது அருமை.

அடுத்து படகில் இருக்கும் மற்றவர் – ராமர், சீதை, லக்ஷ்மணன்
( புள்ளமங்கையில் சிமெண்ட் போட்டு இளவலை மறைத்து விட்டனர் )

இரு சிற்பங்களில் ஒரு சிறு வித்தியாசம் உள்ளது. குகன், ராமர் திரும்பி நிற்பது மட்டும் அல்ல. படகை செலுத்துபவன் தவிர மற்றவர் நின்ற கோலத்தில் முழு அளவை பாருங்கள்.

புள்ளமங்கையில் – படகு மேல் சரியாக நிற்பது போல உள்ளது.


ஆனால் நாகேஸ்வரன் கோயில் சிற்பத்தில் நீளம் அடி படுகிறது.


எது சரியான காட்சி அமைப்பு. படகு நீரில் செல்லும்போது, சற்று உள்ளே ஆழ்ந்து அமுங்கி செல்லும் அல்லவா. இந்த படத்தில் ( பழைய படம் ) அந்தமான் தீவில் ஒரு மீன்பிடி படகு

இதில் படகின் நடுவில் இருப்பவர் உயரம், எப்படி படகின் உள் வாங்குதல் தெரிகின்றது, படகை செலுத்துபவன் எப்படி விளிம்பின் மீது ஏறி நிற்கின்றான் என்பதை பாருங்கள்.

இன்னொரு முக்கியமான குறிப்பு என்ன கிடைக்கிறது என்றால், இது பத்தாம் நூற்றாண்டு சிற்பம் என்பதால் இந்தச் சிற்பம் கூட ஒருவகையில் கம்பனின் காலத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்கு உதவமுடியும் என்பதே…


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment