பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் இரண்டு

முதல் பாகத்தை படித்து பலரும் அனுப்பிய நல்ல மறுமொழிகள் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. யாருமே சென்று காணாத இந்த பல்லவர் கால சுவர் ஓவியங்கள் இன்று புத்துயிர் பெற்று நம்முடன் பேசுவது போன்ற உணர்ச்சி பெறுகிறோம். இந்த பயணத்தில் நானும் ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களும் பல புதிய விஷயங்களை தெரிந்துக்கொண்டோம். அதை அப்படியே உங்களுடன் பகிர்கின்றோம்.

நண்பர் திரு ஜகதீஷ், அவருக்கு மீண்டும் ஒரு நன்றி. அவர் தந்த படங்கள் எங்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருந்தது எனபது இந்த பதிவை படித்து முடித்தவுடன் புரியும். தக்க சமயத்தில் உதவினார் இந்த பதினோராவது வகுப்ப மாணவன்.

சென்ற பதிவில், படத்தில் யார் யார் இருக்கின்றனர், எங்கெங்கே என்று குறித்து விவரித்தோம் நாங்கள், இன்னும் அருகில் சென்று ஒவ்வொரு சிறு குறிப்புகளையும் பார்த்தோம். பூத கணம், எங்குமே முழுமையாக தெரியவில்லை. கொஞ்சம் கற்பனைத் திறனை கலந்து வரைந்து முடித்து விட்டார் ஓவியர்.

அருகில் இருக்கும் தோழி அப்படி அல்ல. நல்ல படம் இருந்தது, மேலே உமையின் ஆடையில் இருக்கும் வேலைப்பாடு கூட கிடைத்தது.


அடுத்து இருவருக்கும் நடுவில் ஏதாவது இருக்குமோ.அனைத்து ஓவியங்களிலும் இந்த பகுதியில் சிதைந்து விட்டது ( மொத்தம் நான்கு சுவர் ஓவியங்களை வைத்து நாம் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம் ) . சோமஸ்கந்தர் பற்றிய நமது தொடரை வாசிக்கும் நண்பர்கள், பொதுவாக சோமஸ்கந்தர் வடிவங்களில் தரையில் ஒரு கூஜா இருப்பதை கவனித்து இருப்பார்கள். இதோ இந்த மலை கடற்கரை கோயில் வடிவம் போல

அதனால் அதை நமது ஓவியத்திலும் போட்டுவிட்டோம்.

அடுத்து பிரம்மா. ஒரே ஒரு ஓவியத்தில் மட்டும், அவரது உருவம் தெரிகிறது. ( இரு கைகளையும் கூப்பி அஞ்சலி முத்திரையில் அவரை காட்டவேண்டும். மூன்றாம் பாகத்தில் திருத்தி விடுவோம் )

எப்படி அவரது மற்ற முகங்களை காட்டுவது என்று யோசிக்க, புள்ளமங்கை பிரம்மா நினைவுக்கு வந்தார்.
.

அவரை முன்மாதிரியாக வாய்த்த இந்த பிரம்மன் படத்தை வரைந்தாயிற்று.

விஷ்ணு உருவத்திற்கு இந்த நிலை இல்லை. ஒரு ஓவியத்தில் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் எங்கள் பணி எளிதாயிற்று.

அடுத்து குழந்தை முருகன்.

முருகன் – அழகன். அதுவும் குழந்தை முருகன் என்றால் !! சரியாக வரவேண்டுமே.

அருகில் சென்று படங்களை பார்க்கும் பொது தான் நாங்கள் முதலில் நினைத்ததைப் போல ஆசனத்தின் கால்களில் சிங்க வடிவங்கள் இல்லை என்பது தெரிந்தது.

அடுத்து உமை.


ஈசன், இந்த வடிவத்தின் நடு நாயகன் – மிகவும் நேர்த்தியாக வரவேண்டும் என்பதால், இன்னும் கவனமாக படங்களை ஆராய்ந்தோம். குறிப்பாக அவர் கை முத்திரைகள். ( ஒரு குறிப்பு மிகவும் உதவியாக இருந்தது – அது என்ன வென்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்) . இடது மேல் கரம் இங்கே பாருங்கள்.

ஈசனின் மகுடம். நிறைய வேலைப்பாடுடன் இருந்ததால் மிகவும் கடினமாக இருந்தது.

குறிப்பாக மகுடத்தில் உள்ள ஒரு அணிகலன். இதுவரை நாங்கள் பார்க்காததாக இருந்தது. எனினும் அந்த வடிவம் நாம் முன்னரே எங்கோ பார்த்த வடிவம். அப்போது திரு நாகசாமி அவரது செப்புத்திருமேனி (Masterpieces of South Indian Bronzes)நூலில் ஒரு குறிப்பு கிடைத்தது. பல்லவர் கால செப்ப்புத்திருமேனி ஒன்றில் இரு மகர ஒப்பனை கொண்டு இந்த அணிகலன் உள்ளது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

ஆம், அதே நம் ஓவியத்திலும்.


இப்போது ஒரு அளவிற்கு நமது ஓவியம் வந்து விட்டது. இன்னும் சிறு சிறு அமைப்புகளை சரி செய்து வண்ணம் பூசினால் முடிந்து விடும்.

அதற்கு, அடுத்த இறுதிப் பதிவு விரைவில் பார்ப்போம்.

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் ஒன்று

தமிழ் நாட்டு ஓவியக்கலையின் மிக தொன்மையான பல்லவ ஓவியங்கள் இன்றும் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் இங்கும் அங்குமாய் சிதைந்த நிலையில் பார்க்க முடிகிறது. பார்த்த சில நொடிக்களிலேயே நம்மை சொக்க வைக்கும் அழகைக் கொண்ட இந்த ஓவியங்களைப் பார்க்கும் பொது ஒருபக்கம் பரவசமும் மறு பக்கம் பெரும் துக்கமும் வரும். பரவசம், ஆயிரத்திமுன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே தனது கலையில் இப்படி ஒரு உன்னத நிலையை நம் மண்ணின் கலைஞன் எட்டிவிட்டான் என்பதும், அவனது கலை காலத்தை வென்று இன்று வரை நின்றுள்ளது என்பதும். துக்கம், இங்கும் அங்குமாய் தெரிந்த சில கோடுகள், சில வண்ணங்கள், என்று நாம் இன்று காணும் இந்த ஓவியங்கள், அடுத்த தலைமுறை பார்க்க , பரவசம் அடைய இந்த அரிய பொக்கிஷங்களை , நம் குல தனங்களை, நிலைக்க வைக்க முடியுமா என்ற கேள்வி.

நம்மால் முடிந்தது – இன்றைய நிலையை அப்படியே படம் பிடித்து இணையம் மூலம் கருவூலம் அமைத்து பாதுகாக்கமுடியும். எனினும், எங்கோ மூலையில் ஒரு சின்ன ஆசை. இவை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி வண்ணங்களின் பிரதிபலிப்பாய் ஜொலித்திருக்கும் என மனக்கண்ணில் அப்படியே அவற்றை கற்பனை செய்து ரசிப்பது உண்டு, எனினும் அப்படி மனக்கண்ணில் கண்ட காட்சியை அனைவருடன் எப்படி பகிர்வது. பல்லவ சிற்பியுடன் போட்டி போட நமக்கு தேர்ச்சி இல்லை, தற்போது உள்ள கணினி தொழில்நுட்பம் கொண்டு படங்களை ஒற்றி எடுத்தும், ஒரு ஓவியம் கூட முழுவதுமாக இன்று நிலைக்க வில்லை. இது சாமானியன் செய்யும் வேலை இல்லை என்று புரிந்தது. இந்த கலை ரத்தத்திலேயே ஊறி போன ஒருவரால் மட்டுமே இவற்றுக்கு உயிர் கொடுக்க முடியும் என்று தெளிவாக தெரிந்து. ஓவியர் நண்பர்கள் யாரை சந்தித்தாலும் கோரிக்கை மனு கொடுத்து வைப்பேன்.

இப்படி இருக்கையில், தற்செயலாக நண்பர் ஒருவரின் ஓவியக் கண்காட்சி ஒன்றிற்கு சென்ற பொது, ஓவியர் மணியம் அவர்களின் வழித்தோன்றல் இருவரை சந்திக்க நேர்ந்தது. ஆம் அவர்தான், அமரர் கல்கியின் கதை காலத்திற்கு மெருக் ஏற்றி அற்புத ஓவியங்களை படைத்தவர். அவரது கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டு வந்தவர். திரு மணியம் அவர்களின் ஓவியங்கள் சில , அவரது மகன் திரு மணியம் செல்வன் அவர்களும் சிறந்த ஓவியர், அவரது ஓவியங்கள் சில ,ஆனால் நான் சந்தித்தது அவரது புதல்விகளை . புலிக்கு பிறந்தது பூனை யாகுமா. இருவருமே சிறந்த ஓவியர்கள். அப்படியே நின்றுக் கொண்டே பேசினோம், கல்கி , பார்த்திபன் கனவு , பொன்னியின் செல்வன் என்று போன உரையாடல் முடிவில் கோரிக்கை மனுவை நீட்டினேன். திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்கள் அவரது ஓவியங்கள் ,முயற்சி செய்து பார்ப்போம் என்று கூறினார்.

பணி மிகவும் கடினம், ஓவியங்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தன. நான்கு இடங்களில் உள்ள இதே வடிவம், ஒரு இடத்தில கூட முழுவதுமாக இல்லை. போதாத குறைக்கு என்னிடத்தில் நல்ல படங்களும் இல்லை. நண்பர்கள் இடத்தில கேட்டுப் பார்த்தேன், யாரிடத்திலும் எங்களுக்கு தேவைப்படும் அளவிற்கு பெரிய படங்கள் இல்லை.


இருப்பதை வைத்து, முதலில் வேலையை துவங்கினோம். நன்றாக வருமோ என்ற ஐயம் எழும் முன்னரே, உடனே வந்தது சுபாஷினி அவர்களின் முதல் பிரதி

சரியான இடத்தில தான் பணியை ஒப்படைத்துள்ளோம் என்று சொன்னது மனம். வாழை அடி வாழையாய் வந்த கலை, அவர்களது கையில் விளையாடியது . எனினும் மிக நேர்த்தியாக வரையவேண்டும் என்றால் நல்ல படம் சீக்கிரம் தேவை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொடிருந்த பொது, ஒரு இனிய அதிர்ச்சி. மே மாதம் தற்செயலாக தளத்தின் மூலம் உரையாடிய பத்தாம் வகுப்பு மாணவன் ஜகதீஷ், ஒரு மடல் அனுப்பினான். எனது காஞ்சி பயண புகை படங்கள் என்றது தலைப்பு. கூடவே,”ஹலோ அண்ணா , என்னை நினைவுள்ளதா, நான் ராஜகேசரி ( புனைப்பெயர் ) , சமீபத்தில் காஞ்சிபுரம் சென்றிருந்தேன் , அங்கு எடுத்த படங்கள் இதோ ”

உள்ளே, நான் தேடிக்கொண்டிருந்த படங்கள். உடனே தொடர்பு கொண்டு, முழு அளவில் படத்தை அனுப்பு என்று சொன்னவுடன் உதவினான் நம் தோழன், இந்த சின்ன வயதில் -வேலூர் பள்ளியில் இப்போது பதினொன்றாம் வகுப்பு படிக்கும் நம் ஹீரோ இதோ.

பல்லவ கலை, ராஜசிம்ம பல்லவனால் வளர்க்கப்பட்ட கலை, இன்று இந்த மாணவன் உதவியுடன் அடுத்த தலைமுறைக்கு செல்கிறது.

பிரம்மா

உமை

விஷ்ணு

நல்ல படங்கள் ஏன் தேவை பட்டன என்பதற்கு, கிழே இருக்கும் பூத கணம், மற்றும் பணிப்பெண் உருவங்களை கண்டு கொள்ள பெரிதும் உதவின.

ஆசனத்தின் கால்கள் சிங்க முகங்கள் போல சித்தரிக்க நினைத்தோம். ( மலை மகிஷாசுரமர்தினி மண்டபம் போல )

அடுத்து இன்னும் பல விவரங்களை எடுத்து ஓவியத்தை பூர்த்தி செய்ய ஆரம்பித்தோம்.

நன்றாக வருகிறது . இன்னும் பார்க்க ஆவலா ? பொறுமை, அடுத்த பதிவில் தொடரும் இந்த ஓவியம்.

கிராதன் அர்ஜுநர்கள் – இன்றைய காமிக்ஸ் அன்றைய சிற்பம் ஒரு கலக்கல்

கலைச் செல்வங்களை ரசிக்கும் தன்மையை எப்படி நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்பது. அவர்களை எப்படி இந்த பொக்கிஷங்களை பாதுகாக்க வைப்பது. அவர்களது ரசனையை எப்படி தூண்டுவது. இவை போன்ற கேள்விகள் எங்கள் மனதில் தினமும் எழும். இன்றைய தலைமுறை சதா சர்வகாலமும் இணையம், அதில் உள்ள இணைய விளையாட்டு, காமிக்ஸ் என்றே செல்கிறது என்று பார்க்காமல், அவற்றையும் ஒரு வளரும் துறையாக பார்த்து , அவற்றை கொண்டும் இள நெஞ்சங்களிடம் நம் கருத்துக்களை எடுத்துச் செல்லலாம் என்பதே எங்கள் கருத்து. அதன் அடிப்படையில் இன்று காஞ்சி கைலாசநாதர் சிற்பம் ஒன்றையும் ( எனக்கு மிகவும் பிடித்த சிற்பம் ) அதை ஒட்டிய கதையை இன்றைய இணைய ஓவிய காமிக்ஸ் போலவும் சேர்த்து பார்ப்போம்.

கதை ஒன்றும் பெரியது அல்ல. மகாபாரதத்தில் வன பர்வத்தில் , அர்ஜுனன் தனியே சிவ பெருமானிடத்தில் இருந்து பாசுபத அஸ்திரத்தை பெற தவம் செய்ய இமயம் செல்கிறான். கடுந்தவம் புரியும் அவனை சோதிக்க
ஈசனே கிராதன் ( வேடன் ) உருவிலும், உமை ஒரு வேடர் குல பெண்ணாகவும் வனத்தினுள் வருகின்றனர். அப்போது முகசுரன் என்றஅசுரன் காட்டுப்பன்றி உருவம் தரித்து அர்ஜுனனை நோக்கி விரைந்து வருகிறான். வில்லுக்கு ஒரு விஜயன் ஆயிற்றே, உடனே காண்டீபத்தை எடுத்து பன்றியின் தலைக்கு நாணைத் தொடுக்கிறான் பார்த்தன். அதே வேளையில் இன்னொரு புறத்தில் இருந்து பன்றியின் பின்புறம் ஒரு அம்பு பாய்கிறது. அங்கே வில்லேந்தி நிற்கிறான் கிராதன். அர்ஜுனன் சினம் கொண்டு, பின்னால் இருந்து நாணை எய்வது வீரனுக்கு அழகா என்று கேட்க, அவனோ இது வேட்டை.. யுத்தம் அல்ல !!, காட்டு மிருகங்களுக்கு போர் நீதி செல்லாது என்கிறான் ( வாலி வதம் ? ) அப்படியே பன்றி யாருடையது என்று வாக்குவாதம் நடக்கிறது.

வாக்குவாதம் முற்ற கைக்கலப்பும் ஆரம்பம். காண்டிபதை கொண்டு அக்னி கொடுத்த தீராத பாணங்களை தரும் கூடையில் இருந்து அம்புகளை மழையென பொழிய வைத்தான் குந்தி புத்திரன். எனினும் அந்த வேடனோ சிறிதும் சிரமம் இல்லாமல் அனைத்தையும் தடுத்து விட்டான். உடனே காண்டீபத்தை ஈட்டி போல வேடன் மேல் பாய்ச்சுகிறான் அர்ஜுனன். அதை அப்படியே பிடித்து இழுத்துப் பறித்து விடிகிறான் அந்த வேடன். அர்ஜுனனுக்கு இன்னும் கோபம், உடனே மல்யுத்தம் செய்ய அவன் மேல் பாய்கிறான். ஆனாலும் வேடனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. அர்ஜுனுக்கு மூச்சு வாங்கி தலை சுற்றுகிறது, வேடனோ ஒரு வியர்வை துளி கூட சிந்தாமல் நகைத்துக் கொண்டே போர்புரிகிறான். இதனை கண்ட அர்ஜுனன், சண்டையை நிறுத்தி விட்டு, ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து , வேடனை வீழ்த்த மகேசனின் ஆசி கூறி, மலர்களை சமர்ப்பிக்கிறான். என்ன ஆச்சரியம், லிங்கத்திற்கு அவன் இடும் மலர்கள் வேடனை அலங்கரிக்கின்றன. உண்மை புரிந்த அர்ஜுனன் மகேசனிடம் சரண் புகுந்தான். இன்னொரு வழக்கில் சண்டை இடும்போது அர்ஜுனன் ஈசனின் காலை பிடித்தானாம், தன மலர் பதம் பிடிக்கும் பக்தரை தடுத்துத்ஆட்கொள்ளும் ஈசன், அப்போது போரை நிறுத்தி அவனை அணைத்தார் என்றும் வருகிறது. எனினும் நாம் இன்று பார்ப்பது இருவரும் சண்டை போட்டனர்.

நன்றி திரு அபிலாஷ் நாராயணன் , அவர்களுக்கு, நம்முடன் அவரது கணினி ஓவியத்தை பகிர்ந்துக்கொண்டமைக்கு.

அவரது மற்ற படைப்புகளை காண

திரு அபிலாஷ் நாராயணன்

சரி, இப்போது நாம் காஞ்சி கைலாசநாதர் ஆலயம் செல்கிறோம். வெகு நாட்களுக்கு முன்னரே இந்த சிற்பத்தை ஒட்டிய பதிவை இங்கு போட்டிருக்க வேண்டும் – எனக்கு அவ்வளவு பிடிக்கும் இந்த சிற்பம். அதில் உள்ள உயி்ரோட்டம், காட்சி அமைப்பு எல்லாமே அபாரம். இது இரு கதாநாயகர்கள் நடிக்கும் படத்தின் விளம்பரம் போல இருக்கும் இந்த சிற்பத்தை திரு அபிலாஷ் அவர்களின் ஓவியத்துடன் மோத விடுவோம்.

படங்களுக்கு நன்றி: திரு அர்விந்த் மற்றும் திரு சுவாமிநாதன்

சிற்பத்தை நன்றாக பாருங்கள். இரு வீரர்கள், ஒருவரை ஒருவர் எதிர் நோக்கி சண்டை இட தயாராக நிற்கும் காட்சி. இருவர் கையிலும் வில், மற்றொரு கையில் அம்பு, அல்லது அம்பை எடுக்கு செல்லும் கை. முதுகில் அம்புகள் வைக்கும் கூடை ( இருபுறமும் இவை இருப்பது நேர்த்தி ) , ஒருவர் இடுப்பில் மற்றும் உடைவாள். இது கிராடார்ஜுன கதை தான் என்பதை சந்தேகம் இன்றி நிறுவ இருவரின் பின்னால் நேர்த்தியாக ஒரு காட்டுப் பன்றியை செதுக்கி உள்ளான் சிற்பி.

இப்போது ஒரு கடினமான கேள்வி, இதில் ஈசன் யார், அர்ஜுனன் யார். சற்று அருகில் சென்று பார்ப்போம்.

குறிப்பாக அவர்கள் அணிந்திருக்கும் உடை , ஆபரணம் மற்றும் தலை அலங்காரங்களை பாருங்கள்.

இருவருக்கும் உள்ள வேற்றுமை என்ன – பட்டியல் இடுவோம்.

சிற்பத்தின் இடது புறம் ( நீங்கள் பார்க்கும்போது வலது புறம்) – இருக்கும் வீரன் ஒரு நீண்ட கிரீடத்தையும், மார்பில் பூணூலையும் அணிகிறான். மற்ற வீரனோ தலையை கொண்டாய் போல கட்டிக்கொண்டு, மார்பில் சன்னவீர என்னும் குறுக்கு பட்டைகளை அணிகிரான். அவன் மட்டுமே உடைவாளை வைத்துள்ளான்.

நமக்கு தெரிந்த மட்டிலும் அர்ஜுனன் ஒரு துறவி போல தவம் செய்து ( கடைசியில் காற்றை மட்டுமே சுவாசித்து பல மாதங்கள் கடுந்தவம் புரிந்தான் என்று நினைக்கிறோம். மகாபாரத்திலும் அவன் காண்டீபம் என்னும் வில்லுடன் ஒரு அற்புத தங்க கைப்பிடி கொண்ட உடைவாளை கொண்டிருந்தான் என்ற குறிப்புகள் உள்ளன.

சரி, அது அப்படி நிற்க , நாம் கிராட உருவத்தை பற்றி படிப்போம்.கிராதன் ஒரு வேடன், அதுவும் ஈசனை பொதுவாக ஜடா மகுடத்துடனே நாம் காண்கிறோம். மேலும் திரு நாகசுவாமி அவர்களின் குறிப்புகளில் , சோழ வடிவத்தில் கிராட உருவம் ஒரு வேடன், அதுவும் உருண்டை தொப்பையுடனும், மார்பில் சன்னவீர கொண்டும், தலையை கொண்டாய் போட்டுக் கொண்டு இருக்க காண்கிறோம் என்கிறார்.

Kirata or Tripurantaka


However in many Chola sculptures and also Bronzes (Melapperumpallam image) Kirata will be shown like a hunter with round bellied body , beard and cannavira. His hair would be tied as a bun-like knot and not the jata-makuta one sees in the Tripurari form.

இவை அனைத்தும் கொண்டு பார்க்கையில் கிரீடம் அணிந்திருப்பது அர்ஜுனன் என்றும் மற்றவர் ஈசன் என்றும் நான் நினைக்கிறேன், உங்கள் எண்ணம் என்ன.

என்ன, கலக்கல் பிடித்தா ?

பல்லவர் கற்சிற்பம் vs சோழர் செப்புத்திருமேனி

நண்பர்களிடையே பலமுறை இந்த கேள்வி எழும். கலை ஆர்வலன் ( நானே சொல்லிக்க வேண்டியது தான் – ரசிகன் பட்டம் தானே !!) என்ற முறையில் தமிழ்க் கலை என்றால் பல்லவர் கலை பெரிதா இல்லை சோழர் கலை பெரியதா என்பதே ( நமக்கு சேரர் கலை வெகு சிலவே கிடைக்கின்றன – அதாவது அந்தக் காலத்து , பாண்டியர் குடைவரைகள் இன்னும் நிறைய நான் பார்க்க வேண்டி உள்ளது எனினும் பார்த்த சிலவற்றை வைத்து ( வேட்டுவன் கோயில் தவிர ) அதற்குப் பின்னர் வந்த கட்டுமானக் கோயில்களில் உள்ள கலை வேலைப்பாடு என்னை பெரிதாக ஈர்த்ததில்லை. எனவே இன்றைய விவாதம் பல்லவர் vs சோழர். அதுவும் பல்லவர் கற்சிற்பம் vs சோழர் செப்புத்திருமேனிகள். இதற்காக அவர்களது கலையின் மிகவும் மேலான உதாரணங்களை கொண்டே பார்ப்போம். பல்லவர் சிற்பக்கலை அதன் சிகரத்தை தொடும் இடம் கடல் மல்லை தர்மராஜ ரதம் மேல் தல புடைப்புச் சிற்பங்கள். சோழர் செப்புத் திருமேனி என்றால் அது உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் அதுவும் அவர்களது கடைசி பத்து ஆண்டுகளில் வார்க்கப்பட்ட சிலைகளே.

தர்மராஜ ரதம் மேல் தளம் ஒரு அதிசயம். ஒரே பாறையில் மேலிருந்து கீழே குடைந்து, அதில் இப்படி ஒரு அற்புத கலை நயத்தோடு , சிறிதளவும் பிழை என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் , ஆகமங்கள் முறையே தங்கள் சட்டங்களை விதிக்கும் முன்னரே, தங்கள் செழிப்பான சிந்தனையை மட்டுமே மூல தனமாக வைத்து இப்படி அற்புத சிற்பங்களை செதுக்கிய இவர்களை என்னவென்று புகழ்வது. கடினமான கருங்கல்லில் உயிர் ஓட்டம் ததும்பும் இந்த சிற்பங்களை அழகு பட வடித்த இவர்கள் மனிதர்களா என்றே சந்தேகம் வரும்.

அந்த மேல் தடத்தில் இருக்கும் புடைப்புச் சிற்பங்க்ளில் ஒரு அற்புத வடிவத்தை இன்று நாம் நண்பர் அசோக் உதவியோடு பார்க்கிறோம். அவருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை – மேல் தடம் செல்வதே கடினம் – பலரிடம் அனுமதி பெற வேண்டும். நெரிசலான பாதை, சுவருக்கும் சிற்பத்திற்கும் இடைவெளி மிகவும் குறைவு , இதனால் புகை படம் எடுப்பது மிகவும் கடினம், அதுவும் ஒரே படத்தில் முழு உருவை பிடிப்பது அதைவிட கடினம். நவீன தொழில் நுட்பங்கள் பலவற்றை ஒன்று சேர்த்து அவரால் இதை செய்ய முடிந்தது. படம் பிடிக்க நாம் படும் பாட்டை பார்க்கும்போது, இதே இடத்தில தனது கற்பனை உருவை கல்லில் கொண்டு வந்த சிற்பியின் வேலைக்கு மீண்டும் தலை வணங்க வேண்டும்.பல்லவ ரிஷபாந்தகர்

இந்த சிற்பத்தின் தனித்தன்மை அதன் தலை / சிகை அலங்காரம். தலை பாட்டை மற்றும் சடை முடியை சுற்றிக் கட்டிய கொண்டை, இதுவரை நாம் வேறு எங்கும் பார்க்காதது. இதன் பிறகும் பல்லவர் படைப்புகளில் , ஏன் மல்லையிலே கூட நாம் இந்த மாதிரி மற்றொன்றை பார்க்க முடியாது – அர்ஜுன ரத சிற்பத்தை பாருங்கள்
(
அர்ஜுன ரதம் ).

இந்த சிற்பத்தில் ஒரு தனி நளினம், சிற்பம் முழுவதிலும் ஒரு உயிரோட்டம் , வளைந்து செல்லும் அருவியின் நெளிவு சுளிவு , ரத்தம் சதை கொண்டு தோல் போர்த்திய கை கால் என சொல்லிக்கொண்டே போகலாம்.

த்ரிபங்கத்தில் ஒய்யாரமாக நிற்கும் சிவன், லாவகமாக வலது கையை நந்தியின் மேல் வைத்து, தலையை ஒரு புறம் சாய்த்து , இடுப்பை மறுபக்கம் மடக்கி, ஒரு காலை இன்னொரு கால் மீது போட்டு நிற்கும் காட்சி …அப்பப்பா பிரமாதம்.

இந்த சிலைக்கு எதிர்த்து நின்று ஈடு கொடுக்க வேண்டும் என்றால், கொஞ்சம் கடினம் தான். அதனால் சோழர் செப்புத்திருமேனிகளில் மிகவும் சிறந்த ஒன்றை போட்டிக்குள் கொண்டு வருவோம். அதிஷ்ட வசமாக கோவையில் செம்மொழி மாநாடு அரங்கில் வழி தவறி, அங்கே அடுத்த நாள் திறப்பு விழாவுக்கு வேலைகள் கடந்துக் கொண்டிரந்த அருங்காட்சியக மையத்தினுள் தற்செயலாக சென்றதால் இந்த அற்புத சிலையை அருகில் நின்று தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது,. கூடவே இன்னும் ஒரு பெரும் பாக்கியம் ( படங்களை கூர்ந்து பார்த்தல் அது என்ன என்று விளங்கும் ) . இந்த சிலை, தஞ்சை கலை அரங்கத்தில் இருக்கும் ,மாநாட்டிருக்கு என்று பிரத்தேயகமாக கொண்டு வரப்பட்டது. செப்புத்திருமேனிகள் வடிப்பது சுலபம் இல்லை, நாம் முன்னரே பார்த்தவாறு, அச்சை உடைத்து சிலையை வெளிகொணர்வதால் ஒவ்வொரு முறையும் அச்சு புதிதாக செய்யப்பட வேண்டும். அதுவும் அச் சிலையை வார்த்த பின்னர், அதாவது அனைத்து சிறு குறிப்புகளும் முதலில் செய்யும் மெழுகு சிலையிலே செய்து விட்டு, மெழுகில் வடித்த பிரதிமத்தின் மேல் மண் பூசி சுட்டு ஆற்றிய பின், அதனுள் உலோகத்தை ஊற்றி சிலை வார்த்த பிறகு, அதன் மேல் உளி படாமல் ( செப்பனிடாமல் அதாவது மேலும் செதுக்காமல் ) எடுக்கும் கைத்திறன் படைத்த மகா கலைஞர்கள் இருந்த காலம் அது, இப்படி அவர்கள் புகழ் படும் கைத்திறன், கலை நயம் பல்லவர் காலம் முதலே தென்னகத்தில் இருந்தாலும், உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் அவர்களது காலத்தில் , குறிப்பாக 1000 முதல் 1014 வரை வார்க்கப்பட்ட சிலைகள் மிகவும் பிரசித்தி. அந்த காலத்தை சார்ந்த கல்யாணசுந்தரர் ( நாம் முன்னரே பார்த்த உன் கரம் பிடிக்கிறேன்), இன்று நாம் போட்டியில் வைக்கும் ரிஷபாந்தக முர்த்தி, பிக்ஷாடனர் மற்றும் வீனாதாரர் ( விரைவில் அவற்றையும் பார்ப்போம் ) மிகவும் அழகு.

செப்புத் திருமேனிகளின் காலத்தை நிர்ணயம் செய்வது சற்று கடினம் தான், எனினும் இன்று நாம் காணும் சிலை ஒரு அபூர்வ சிலை. தன பிறப்புச் சான்றிதழை கல்வெட்டாக கொண்ட சிலை. மண்ணில் புதையுண்டு 1950ஆம் ஆண்டு திருவெண்காட்டில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிலை பற்றிய கல்வெட்டுக் குறிப்பு – அதன் இருப்பிடமான ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வர (திருவெண்காடு என்பதின் வடமொழிப்பெயர்) ஆலயத்தின் சுவரில் , உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழ தேவரின் 26th இருபத்தி ஆறாம் ஆட்சி ஆண்டில் ( 1011 CE) , கோலக்கவன் என்ற ஒருவர் ( ( AR 456 of 1918 – குறிப்பு இண்டம் பெரும் நூல் South Indian Shrines – Illustrated By P. V. Jagadisa Ayyar ) பொன்னும், நகைகளும் அங்கே எடுப்பித்த சிவ ரிஷபாந்தகர் சிலைக்கு அளித்ததாக உள்ளது ( இதற்கு அடுத்த ஆண்டு கல்வெட்டுக் குறிப்பு இந்த சிவனுக்கு அம்மை சிலை செய்து வாய்த்த குறிப்பை தருகிறது )

முதல் பார்வையிலேயே பல்லவர் சிலைக்கும் சோழர் சிற்பத்திற்கும் உள்ள ஒற்றுமை தெரிகிறது. இந்த இயங்கும் படத்தை சொடுக்கி பாருங்கள்.

இரு வடிவங்களையும் சற்று ஒப்பு நோக்குங்கள். நந்தி சிற்பம் என்ன ஆனதென்று தெரியவில்லை. சோழ கலைஞன் கூடுதலான இரு கைகளை நீக்கி விட்டு, இது சிலை என்பதனால் சற்றே கைகளை சற்று இறக்கி, அதற்க்கேற்ப த்ரிபங்க வளைவை ஏற்படுத்தி, தலையையும் சற்றே நேர் படுத்தி எழில் மிக்க ஒரு படைப்பை உருவாக்கி உள்ளான்.

இது சரியான போட்டி அல்ல, ஏனெனில் சோழ சிற்பி அச்சுக்கு மண்ணை பிசைவதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே, பல்லவ சிற்பி கருங்கல்லில், அதுவும் ஒரே கல் ரதத்தின் மேல் தலத்தில், தனது சிந்தனையை மட்டுமே கொண்டு பிழை என்றே சொல்லுக்கே இடம் இல்லாத இடத்தில மகத்தான சிற்பத்தை செதுக்கி உள்ளான். ஆனால் சோழ சிற்பியும் லேசுப் பட்டவன் அல்ல, புடைப்புச் சிற்பம் ஒன்றை மனதில் கொண்டு, அதை அப்படியே முப்பரிமாண சிலையாக வடிப்பது எளிதான காரியம் அல்ல.


சரி, இந்த பல்லவர் சிற்பத்தை பார்த்து விட்டுதான் சோழர் சிற்பி வேலை செய்தான என்பதற்கு என்னஆதாரம் என்ற கேள்வி கண்டிப்பாக எழும். இதற்கு விடை இரு சிற்பங்களிலும் உள்ள உருவ ஒற்றுமை, இதற்கு முன்னர் வந்த சோழ கல் மற்றும் உலோக சிற்பங்களில் இந்த பாணியில் சிலை / சிற்பம் இல்லை. இன்னும் ஒரு முக்கிய குறிப்பும் உள்ளது. மீண்டும் ஒரு கல்வெட்டை நாடுவோம். மல்லை சுற்று வட்டாரத்தில் சோழ கல்வெட்டுகள் உள்ளன. குறிப்பாக உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் கல்வெட்டும் உள்ளது. கடற்கரை கோயிலில் ..மாமல்லபுரம் கடற்கரை கோயில் கல்வெட்டு AR40

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_1/mamallapuram.html

உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழ தேவர் ஆட்சி யாண்டு 25th இருபத்தி ஐந்தாம் ஆண்டு ( 1010 CE) கல்வெட்டு அது., அதாவது திருவெண்காடு சிலை வைப்பதற்கு சரியாக ஒரு ஆண்டிற்கு முன்னர் .


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment