ஒக்கூர் ந​டேசன் – முதன் முதலாக ​வெண்கலச் சிற்பத்தில் ஈசனின் ஆனந்த தாண்டவம்

வெண்கலச் சிற்பங்க​ளில் ஆர்வம் ​செலுத்த துவங்கிவிட்​டோமானால், அது என்றும் தணியாத தாகமாக​வே இருக்கும். அதிலும் ஒருமு​றை ​சோழர் கால ​வெண்கலச் சிற்பத்​தை பார்த்து விட்டா​லே, கண்க​ளை அவற்றினின்று அகற்றுவது மிகக் கடினம். ஆனால், இந்த ஆர்வத்துக்கு தீனியிடுவதும் அத்த​னை எளிதல்ல. ஏ​னெனில்,அ​நேகமாக ​வெண்கலச் சிற்பங்கள் ​கோவில்களில் உற்சவ மூர்த்தியின் வீதியுலா ​​போன்ற சமயங்களில் தான் ​வெளி​யே ​கொண்டு வரப்படும். அப்​பொழுதும் முழு​மையான ஆ​டை அணிகலன்கள், மலர் அலங்காரங்கள் என ​செய்யப்பட்டு சிற்பத்தின் அழ​கைக் காணவியலாத நி​லையி​லே தான் இருக்கும். விழாக்கள் இல்லாத பிற நாட்களி​லோ பாதுகாப்பிற்காக கூண்டுகளி​லே ​வைக்கப்படுகின்றன. ஆக​வே, ​வெண்கலச் சிற்பங்களின் அழ​கைக் காண​வோ, அதன் ​தோற்றங்கள் குறித்து ஆராய​வோ, அருங்காட்சியகத்திற்கு ​செல்வ​தே மிகச் சிறந்த வழியாகும். அவ்வாறு நூற்றுக்கணக்கான ​வெண்கலச் சிற்பங்க​ளை பாதுகாக்கும் ​​பேறு ​பெற்றது ​சென்​னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகமாகும். இருப்பினும், வருத்தத்திற்குரிய விஷயம் என்ன​வென்றால், இந்த சிற்பங்கள் அ​னைத்தும் கண்ணாடி கூண்டுகளில் உள்ளன, ​மேலும் ​போதிய ​வெளிச்சமும் இருப்பதில்​லை. இ​தையும் விட ​வருந்தத்தக்க விஷயம், இந்த ​வெண்கலச் சிற்பங்க​ளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது. ​இவற்​றை எவ்வாறு ரசிப்பது – எ​தைப் பார்க்க ​வேண்டும், எப்படி பார்க்க ​வேண்டும் ​போன்ற ​தெளிவு இல்லா​மை​யே. அப்படி என்ன இவற்றை பற்றி படிக்க பார்க்க தனி வழி …மேலே படியுங்கள்.

இன்று, திரு பி. ஆர். ஸ்ரீனிவாசன் அவர்களின் மிக அற்புதமான புத்தகம் – பிரான்ஸஸ் ஆப் சவுத் இந்தியா (Bronzes of South India) – மூலமாக புகழ்​பெற்ற ஒக்கூர் ந​டேசனின் ​வெண்கலச் சிற்பத்தி​னை பற்றி காண உள்​ளோம். ​ஈசனின் ஆனந்த தாண்டவத்​தை ​வெண்கலச் சிற்பத்தில் ​​வார்க்க ஸ்தபதியால் ​மேற்​கொள்ளப்பட்ட முதல் முயற்சியாக ​ஒக்கூர் ந​டேசனின் சிற்பம் அறிந்து கொள்ளப்படுகிறது. ​மேலும் இந்த வடிவ​மே பிற்கால ​சோழர் காலத்தின் நடராஜ சி​லைகளுக்கும் முன்​னோடியாக விளங்கியிருக்கிறது.

இந்த ​வெண்கல சிற்பம் ​செதுக்கப்பட்ட காலம் நிபுணர்களின் கணிப்பின்படி கி.பி. 9-ல் இருந்து கி.பி. 10-க்குள் இருக்கக்கூடும். ​இதன் காலகட்டம் ஒவ்​வொருவராலும் ஒவ்​வொருவிதமாக கூறப்பட்டாலும், இது​வே முதன் முதலில் ஈசனின் ஆனந்த தாண்டவத்​தைக் குறிக்கும் நடன சிற்பமாக ஏற்றுக்​கொள்ளப்பட்டுள்ளது. சரி, இப்​போது இந்த அற்புத சிற்பம் எந்​தெந்த சிறப்பியல்புகளினால் ‘முதன் முதல் ஆனந்த தாண்டவ சிற்பம்’ என்று ​பெயர்​பெற்றது என்று பார்ப்​போம்.

இந்த சிற்பத்தில் தனித்துவம் ​பெற்ற இரு விஷயங்கள் – முதலாவது நடனமாடும் ஈசனின் உருவத்​தை சுற்றி அழகுற விளங்கும் பிர​பை. இரண்டாவது அழகிய தாம​ரை பீடம்.

ஒவ்​வொன்றாக நாம் காண்பதற்கு முன்பு, ஆனந்த ரசத்​தை எத்து​ணை அழகாக நமது சிற்பி எடுத்துக் காண்பித்துள்ளார் பாருங்கள் – 1000 ஆண்டுகாலத்திற்கு பின்பும், கண் முன் காட்சியளிக்கும் தெய்வீக புன்ன​கை.

மற்று ​மொரு சுவாரசியமான விஷயம் சிற்பத்தில் காணப்படும் ​நெற்றிக்கண் மற்றும் ​​வெவ்​வேறாக உள்ள காதணிகள். இடது காதில் ​பெரிய பத்ரகுண்டலம் உள்ளது, ஆனால் வலது காதி​லோ து​ளை ​பெரிதாகவும், அணிகலனாக ஒரு சிறிய வ​ளையம் (க்ளிப்) ​போன்று உள்ளது. (​மே​லே ​சொல்லப்பட்டுள்ள புத்தகத்தில் வலது காதில் உள்ள சிறிய வ​ளையம் பற்றி கூறப்படவில்​லை)

ஈசனின் சி​கையலங்காரம் நாம் பல்லவ ​சோமாஸ்கந்தரில் பார்த்தது ​போன்​றே உள்ளது, ​மேலும் ஊமத்​தை மலரும் மற்றும் பி​றைச் சந்திரனும் உள்ளன. உருண்​டையாக முன்புறம் ​தோன்றுவது மண்​டை ஓடாக இருக்கலாம். அதற்கு ​மே​லே உள்ள​வை இறகுகளாலாகிய ஆபரணம் (மயிலிறகுகளாக இருக்கு​மோ?)

கழுத்தில் அணியும் ஆபரணங்கள் இரண்டும் சாதாரணமாக​வே உள்ளன. இருப்பினும் இரண்டாவது கழுத்தணியில் நடுவில் உள்ள பதக்கம் கவனத்​தைக் ஈர்க்கிறது. ​பெரிய கழுத்தணி, ருத்திராட்ச ​கொட்​​டைகளால் ஆனது, ​மேலும் அபூர்வமாக விலங்கின் (புலி) பல் பதக்கமாக உள்ளது.

விரிந்திருக்கும் முடிக்கற்​றைப் பற்றி விரிவாக பிறகு ( பின்னல் இல்லை இல்லை பின்னால் ) பார்ப்​போம், இருப்பினும் ​வெண்கலச் சிற்பங்களில் நடனமாடும் சிவ​​பெருமானின் முடிக்கற்​றை விரிந்திருப்பது இது​வே முதன்மு​றையாகும். அ​வை ஆபரணங்கள் ஏதுமின்றி சாதாரணமாக​வே உள்ளன. ​மேலும் கங்​கையின் எவ்வித உருவமும் காணப்படவில்​லை. ​வெண்கலச் சி​லைக்கு பலம் ​சேர்க்கும் விதமாக விரிந்திருக்கும் முடிக்கற்​றைகள் பிர​பையில் ​சேர்க்கப்பட்டுள்ளது சிற்பியின் அபார புத்திக்கூர்​மை​யை ​வெளிப்படுத்துகின்றது.

ஈசனின் நான்கு கரங்களும் முட்டிகளில் பிரியாமல் ​தோள்பட்​டையி​லே​யே பிரிகின்றன (பல்லவர் கால ​வெண்கலச் சிற்பங்களின் இயல்பாக இது ​சொல்லப்படுகிறது. என​வே இது பிற்காலத்​தை ​சேர்ந்தது, அதாவது ​சோழர்காலத்தின் ஆரம்ப காலங்களில்). தூக்கிய திருவடிகள் பிற்கால சிற்பங்க​ளைப் ​போன்று மிக உயரத்திற்கு இன்னும் வரவில்​லை..

காலில் உள்ள ​கொலுசுகள் மிக அழகாக சிறு மணிகள் ​கோர்க்கப்பட்டு உள்ளன. இ​றைவனின் ஆனந்த தாண்டவத்தின்​போது அ​வை எழுப்பும் ரீங்காரம் காதில் இனிய சங்கீதமாய் கேட்குமோ ?

இரட் ​டையாக உள்ள பூணூல் (யக்​ஞோபவீதம்) மற்றும் தடிமனான உத்தரீயம் (இடுப்பில் கட்டும் ஆ​டை) ஆகியவற்றுடன் ஆ​டை மிக எளி​​மையாக உள்ளது. உத்தரீயம் வயிற்றில் முடி​போட்டு கட்டப்பட்டுள்ளது. ஆ​டையில் உள்ள சித்திரம் இன்றும் கண்களுக்குத் ​தெரிகிறது.

​ மே​லே உள்ள கரங்கள் மிக அற்புதமாக ​செதுக்கப்பட்டுள்ளன. ஒன்றில் உடுக்​கையும் மற்​றொன்றில் அக்னியுள்ள சிறிய சட்டியும் உள்ளன – நளினமாக அந்த சட்டி​யை விரல்களின் நுனியில் ஏந்தியுள்ள​தை எத்த​னை தத்ரூபமாக ​செதுக்கியிருக்கிறார் அந்த சிற்பி பாருங்கள்.

​கையில் சுற்றப்பட்டுள்ள பாம்புடன் அபயஹஸ்தமளிக்கிறது கீ​​ழேயுள்ள வலது கரம்,

இந்த அரு​மையான ​வெண்கலச் சிற்பத்தின் அழகுக்கு அழகு ​சேர்ப்பது கீ​ழேயுள்ள கரங்களும் ​மெல்லிய து​டைகளும். ​மேலும் பாதங்களுக்கு அடியில் உள்ள முயலகன் ஒரு ​பெரிய நாகத்துடன் வி​ளையாடுவது ​போன்ற பாவ​னை ​கொள்​ளை அழகு.

இ​வைய​னைத்​தையும் விட இந்த சிற்பத்தின் உண்​மையான அழகு நாம் அதன் பின்புறம் ​சென்று பார்க்கும்​போது தான் ​தெரிகிறது.

முடிக்கற் ​றைகள் எவ்வாறு பிரிந்து விரிந்திருக்கிறது என்பது மிக அற்புதமாக ​செதுக்கப்பட்டுள்ளது. கழுத்தணி​யை கட்டுவதற்கு உள்ள ​கொக்கி​யையும் நீங்கள் காணலாம்

இந்த ​வெண்கலச் சிற்பம் பழ​மையானது என்பதற்கு மற்று​மொரு குறிப்பு – த​லைக்கு பின்புறம் சிரச்சக்கர​மோ, முடிக்கற்​றைக​ளை தாங்கும் விதமாக வ​ளைய​மோ இல்லாதது தான்.

​மேலும் ​கெளபீனம் கட்டப்பட்டிருக்கும் விதத்​தைப் பாருங்கள், இருப்பினும் ஒரு சிற்றா​டையும் அணிந்திருக்கிறார்.

பிர ​பையில் நாம் கவனிக்க ​வேண்டிய விஷயம் – தீப்பிழம்புகள் மிகவும் இயற்​கையாக உள்ளன. பிர​​பை​யை சுற்றி இ​​வை இருந்தாலும், அக்னி ஜ்வா​லைகள் இயற்​கையாக உள்ள​தைப் ​போல் ​​மேல் ​நோக்கி​யே உள்ளன,

ஆஹா! எத்த​னை அற்புதமான உன்னத ப​டைப்பு!!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தெய்வக் குழந்தைக்கு தெய்வம் தரச்சொன்ன பரிசு

சென்ற வருடம் தற்செயலாக மேலைக்கடம்பூர் பற்றிய ஒரு அற்புத பதிவை இணையத்தில் பார்த்தேன். திரு ராஜா தீட்சிதர் அவர்களின் பல பதிவுகளை முன்னரே படித்திருந்தாலும், இந்தப் பதிவில் அவர் விளக்கங்கள் கொடுத்த முறை – கோயிற் கலை பற்றி மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் கொடுத்திருந்தார். உடனே அவரிடத்தில் தொடர்பு கொண்டு அந்த பதிவை இங்கே மொழி பெயர்த்து போடலாமா? அல்லது மேலும் பயனுள்ள பல பதிவுகளை நம்முடன் பகிரமுடியுமா என்று கேட்டு அவரும் சரி என்று சொன்ன​போது – துரதிருஷ்டவசமாக விதி விளையாடி அவர் நம்மை விட்டு போய்விட்டார்.

எனினும் இன்று நமக்கு ஒரு பாக்கியம் – அவரது பிரதான சிஷ்யை – மிஸ். லீய்ஸ்​பெத் பங்கஜ ​பென்னிங்க்
அவர்கள் நம்முடன் அவரது அனுபவங்களை தொடர் பதிவுகளாக பகிர ஒத்துக்கொண்டு, முதல் பதிவை தருகிறார்.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என்னை ஈர்த்த இரு விஷயங்கள் – அழகு மற்றும் மர்மம். அதுவும் நான் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து எங்கோ உலகின் இன்னொரு இடத்தில் என்னும்​போது ஆர்வம் இரட்டிப்பாகக் கூடும். அது போன்ற காலத்தின் ஒரு கோலமே என்னை இந்தியா கொண்டு சேர்த்தது. அது ஒரு பெரிய கதை !

அப்படியே தொடர்ந்த எனது பயணம் ஒருநாள் என்னையும், நண்பர் திரு. ராஜா தீட்சிதர் அவர்களது புதல்வர்கள் திரு. கந்தன், திரு. ஜெயகுமார் மற்றும் திரு. ஷங்கர் அவர்களையும், ஒரு புராதன ஆலயத்தின் குளத்தங்கரையில் கொண்டு சேர்த்தது . மிகவும் அமைதியான சிறு கிராமம், வீதிகளில் சில குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அருகே சிலர் தங்கள் வே​லைகளில் மூழ்கி இருந்தனர். ஆலயத்தில் உழவாரப்பணி நடந்துக்கொண்டிருந்தது. மிகவும் கவனமாக, அதன் பாரம்பரிய அழகு சற்றும் குறையாமல் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கல்லும் கதை சொல்லும். அதவும் பண்டைய தமிழ் கோயில் என்றால் அதன் கற்கள் ஒரு பெரும் கதையை பிரதிபலிக்கும். கோயில் உருவான கதை, அதன் கட்டுமான முறை, எத்தனை தளங்கள் கொண்டது, அதன் கருவறை இருக்கும் அமைப்பு, எந்தக் காலத்தில் கட்டப்பட்டது , யார் கட்டியது , தற்போது இருப்பது முதலில் இருந்த கோயிலா இல்லை இடையில் அது விஸ்தரிக்கப்பட்டதா, செங்கல் கட்டுமானமா கற்கோயிலாக மாறியதா, இது போன்ற ஆய்வுகள் ஒருபக்கம் இருக்க, அங்கே இருக்கும் சிலைகளும் கதை சொல்லுகின்றன. கோஷ்டத்தில் இருக்கும் மூர்த்திகளை கொண்டு ஆய்வுகள் செய்ய இயலுமா, சிற்பங்களின் அணிகலன், அமைப்பு கொண்டு கால நிர்ணயம், அங்கே இருக்கும் கல்வெட்டுகளில் வரும் எழுத்துகளை கொண்டு ஆய்வுகள், அவை சொல்லும் வரலாறு, அந்த நாளைய ஆட்சிமுறை, இவை போதாதென்று அந்தக் கோயிலின் ஸ்தல வரலாறு, என்ன தெய்வ லீலை நடந்ததை குறிக்க எழுந்த கோயில் அது, பாடல் பெற்ற ஸ்தலமா, பரிகார ஸ்தலமா. இவை அனைத்தையும் ஒன்று சேர பார்க்கும்​ பொழுது முதலில் மூச்சு முட்டினாலும், அவை அனைத்தும் ஒன்று கூடி ஆலயம் என்று புனித அமைப்பின் முழு ஸ்வரூபத்தையும் நமக்கு தெரிய வைக்கின்றன.

இந்தப் பதிவை துவங்கும்​போது சிறு பதிவு என்று தான் நினைத்தேன். ஆனால் அதை எழுத ஆரம்பித்தவுடன் மேலும் மேலும் கிளைக்கதைகள் என்று விரிந்துக் கொண்டே போனது. எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்ல முயற்சி செய்வதற்கு பதில், ஒரு தொடர் பதிவாக இயற்றலாம் என்று எண்ணி முதல் பாதியாக இதை எழுதுகிறேன் – திருவட்டதுரை சிவன் கோயில் பற்றிய தொடரே அது.

இந்த அருமையான கோயிலின் இறைவன் ஆரட்டதுரை நாதர். பலருக்கும் தெரியாத இந்த கோயிலில் பல அருமையான சோழர் காலத்து சிற்பங்கள் உள்ளன.

பெண்ணடத்திற்கு மிக அருகில் – திட்டக்குடி சாலையில் வெள்ளாற்றங்கரையில் இருக்கும் இந்த ஆலயம், அதன் அமைப்பு மற்றும் சிற்பங்களை கொண்டு ராஜராஜனுக்கு முந்தைய காலத்து சோழ திருப்பணி என்று கருதலாம். ஆதிசேஷனும், சப்த ரிஷிகளும் இங்கு சிவனை வழிபட்டதாக ஸ்தல புராணம் சொல்கிறது.

இந்த ஆலயத்தை ஒட்டி இன்னும் ஒரு கதை இருக்கிறது. அது திருஞானசம்பந்தர் இங்கு வந்த​போது சிவனே ஊர் மக்களின் கனவில் வந்து சோர்ந்து வரும் அவருக்கு ஒரு பல்லக்கும், குடையும் கொடுக்கும் படி கூறிய கதை. சம்பந்தரும் இந்தக் கோயிலின் இறைவனை பற்றி பல பதிகங்கள் பாடியுள்ளார்.

இந்தக் கதை மூன்று முறை இந்த கோயில் சிற்பங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது, முதல் முறை செப்பனிடப்பட்டுள்ள கோபுரத்தில்.

இரண்டாம் தளத்தில் வலது புறத்தில் சுதை உருவம். பல்லக்கின் வெளியில் சம்பந்தர், மேலே குடை, மேலே தளத்துடன் வரவேற்கப்படும் காட்சி.

அதே போல விமானத்தின் இரண்டாம் தளத்திலும் இதே காட்சி உள்ளது.

இன்னும் ஒரு இடத்தில தலைக்கு மேலே மகர தோரணங்களின் நடுவில் மிகச் சிறிய அளவில் புடைப்புச் சிற்பம் உள்ளது.

இதுவே ஆதி முதல் வடிவம் என்று நாம் கருதலாம். பல்லக்கை திடகாத்திரமான இருவர் தூக்கிக் கொண்டு சம்பந்தரையும் அவர் தந்தையாரையும் அணுகி வருகிறார்கள். பல்லக்கின் அடியில் தெரியும் ஒரு சிறிய உருவம் மேலே இருக்கும் குடையை தூக்கிப் பிடித்திருக்கும் பாணி இன்றும் நம் கோயில் உற்சவங்களில் கு​டைகளை தூக்கிப் பிடிப்போரின் பாணியில் இருக்கிறது. குழந்தைக்கு பல்லக்கை பார்த்தவுடன் ஆனந்தம், தந்தையாருக்​கோ பெருமிதம். இந்தக் காட்சிக்கு மேலே ஆனந்த தாண்டவத்தில் ஈசன், அருகில் சிவகாமி அம்மை, அனைவருக்கும் அருள்பாலித்து நிற்கின்றனர். இந்த சிறிய அளவு சிற்பத்திலும், முகத்தில் மட்டும் அல்லாமல் அவர்களது ஒவ்வொரு அசைவிலும் அமைப்பிலும் உணர்ச்சிகளை சிற்பி வெளிப்படுத்துகிறான். ஆயிரம் ஆண்டுகள் ஆன பின்னரும் பரிசை பெரும் அவர்களின் உபகாரஸ்மிருதி – அதிலும் ஒரு சிறு குழந்தையின் கள்ளம் கபடமற்ற அந்த ஆனந்த உணர்ச்சி , அதே தந்தையின் முதிர்ந்த கோட்பாடு… ஆஹா அருமை. பல்லக்கின் அமைப்பும் வடிவமும் நாம் இதுவரை பார்த்தவை போன்று இல்லாமல் சமமான இருக்கை போலவே உள்ளது.

மற்ற இரு இடங்களிலும் உள்ள பல்லக்கு தற்கால அமைப்பை ஒட்டி உள்ளது. அதிலும் சம்பந்தர் அதன் மேல் ஏறி அமர்ந்திருக்கும் வண்ணம் உள்ளது. குடை பல்லக்கின் மேலே முடுக்கி விட்டது போல உள்ளது. கூடு போல இருக்கும் இந்த பல்லக்கின் அமைப்பை பார்க்கும் பொது – மேலே கு​டைக்கு வேலையே இல்லையே என்று தோன்றுகிறது. மற்ற இரு சுதை வடிவங்களும் பிற்காலத்தில் செய்தவையாக இருக்க வேண்டும். ஆனால் எதற்காக முன்னர் இருந்த வடிவத்தை மாற்றி செய்தார்கள் என்று தெரியவில்லை.

எனக்கு ஒரே ஒரு குறைதான். விமானத்தையும் கோபுரத்தையும் செப்பனிடும்​போது பாரம்பரிய சுதை​யை உபயோகிக்காமல் சிமெண்ட் கொண்டு செய்கிறார்கள். சரியாக பராமரித்தால் சுதை பல நூற்றாண்டுகள் நிற்கும்…


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஆயிரம் பொன் – ஒரு பொற்கிழி

சரியான பாட்டுக்கு மன்னர் ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கிறார் !

எவ்வளவு பொன் ?

ஆயிரம் பொன் ?

ஒண்ணா ரெண்டா ! ஆயிரம் பொன் ! சொக்கா !!

தமிழர் எவருக்குமே தருமியாக நாகேஷ் அவர்களின் இந்த வசனத்தை மறக்க வாய்ப்பேயில்லை. ஆனால் இன்று நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா ? ஒரு மன்னன் ஒரு புலவருக்கு ஆயிரம் பொன் அளிக்கும் நிகழ்ச்சி மெய்யாக நடந்திருக்குமா. அந்த நாளைய தங்கத்தின் விலையை மனதில் வைத்திருந்தாலும் ஒரு புலவருக்கு ஆயிரம் பொன் என்பது இந்தக் காலத்து சினிமா ஸ்டார்களுக்கும் கிரிக்கட் வீரர்களுக்கும் கிடைக்கும் சம்பளத்தை காட்டிலும் மிகப் பெரிதாக இருந்திருக்கும். ஆயிரம் ஆண்டுக்கு முன் நமது நாட்டின் செழுமை , வளங்கள் அனைத்தையும் மனதில் கொண்டாலும் இது கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றுகிறது.

தமிழர் வரலாற்றில் பொன்னேட்டில் பதிக்க வேண்டிய திரு ராஜ ராஜ சோழர் காலத்தில் தான் முதன் முதலில் தங்க நாணயங்கள் அச்சிடப்பட்டன. அதுவரையிலும் ரோமானிய தங்க காசுகள் தான் புழக்கத்தில் இருந்தன. அப்படி இருக்கையில் அந்த அற்புத ஆட்சியில் ஒரு புலவருக்கு ஆயிரம் பொன் வழங்கும் செல்வம் இருந்ததா ?

நம்மில் பலருக்கும் இந்த ஐயம் வந்திருக்கும். அதனால் நாணயஇயல் நிபுணர் திரு ராமன் அவர்களை சந்திக்கும் போது அவரிடத்தில் கேட்டு தெளிவு பெற்றேன். ஆனால் முதல் கேள்வி அந்த தங்க காசு பார்க்க கிடைக்குமா ? எந்த காசு ? ராஜ ராஜா சோழர் காலத்து தங்க காசு?

அதை எடுத்து வர சென்ற பொது மேஜையில் சிறு கிழி ஒன்று இருப்பதை பார்த்தேன். சிறிய அளவு என்றாலும் அழகிய வடிவம், கச்சிதமான மூடி என்று மிகவும் அழகாக இருந்தது.

அது தான் பொற்கிழி என்றார் திரு ராமன்.

ஆஹா. அந்நாளில் இதில் தான் காசுகளை போட்டு தருவார்களோ ? மிகவும் சிறியதாக உள்ளதே. இதில் எத்தனை காசுகளை போடமுடியும் என்ற கேள்விகள் எழுந்தன.

காசை எடுத்து கையில் தந்தார்.

தங்கக் காசு, சோழர் கால தங்கக் காசு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அச்சிட்ட காசு. உடலில் மயிர் கூச்சலிட உள்ளங்கையில் பக்தியுடன் வாங்கியது தான் தெரியும் – எவ்வளவு சிறியது , கையில் எடையே தெரியவில்லை – அவ்வளவு மெல்லிய தகடு போல இருந்தது.

கண்ணையும் மனதையும் பிரித்த அந்த பொற்காசு , ஐயத்தையும் தீர்த்தது, இப்படி இருப்பின் ஆயிரம் பொன் என்ன, பத்தாயிரம் பொன் கூட தாராளமாக பரிசளிக்கலாம் !!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தஞ்சை பெரியகோயிலில் ஏன் புத்தர் வடிவங்கள் உள்ளன?

பெரிய கோயில் போன்று உலகப்புகழ் பெற்று திகழும் ஆலயத்தை ஒட்டி இருக்கும் கதைகளும் பல. நாம் முன்னரே விமானத்தின் நிழல் பற்றி பார்த்தோம். இன்று அதே போன்று இன்னொரு பரவலாக கேட்கப்படும் கேள்வி…தஞ்சை பெரியகோயிலில் ஏன் புத்தர் வடிவங்கள் உள்ளன? ஆம் வடிவங்கள்தாம் – ஒன்றல்ல – இரு இடங்களில் புடைப்புச் சிற்பம் மற்றும் புகழ் பெற்ற சோழர் கால ஓவியங்களில் புத்தர் வடிவம் உள்ளது.

( படங்களுக்கு நன்றி : திரு சதீஷ் , திரு அரவிந்த் மற்றும் நண்பர் ஓவியர் திரு தியாகராஜன் – பெரிய கோயில் ஓவியங்கள் நூல் )

திரிபுராந்தகர் பற்றிய குறிப்புகளை முதலில் பாருங்கள். ( நன்றி திவர்கர் சார்)

தாராசுரன் எனும் அசுரனின் புதல்வர்களான தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி எனும் மூவரும் மிகச் சிறந்த சிவபக்தர்களாக இருந்தனர். இவர்களுக்கு இந்த சிவபக்தியால் கிடைத்த தவ வலிமையைக் கொண்டு படைப்புக் கடவுளான பிரும்மனை நோக்கி நெடுங்காலம் கடுந்தவத்தைச் செய்தார்கள். அந்தத் தவத்தின் பலனாக திரிபுரம் எனச் சொல்லப்படும் மூன்று நகரங்களைப் பெற்றனர். மூன்றும் பறக்கும் தன்மை உடையது. அவைகள் கொண்டே பல காலம், இந்த அசுரர்கள் தங்கள் எதிரிகள் அனைவரையும் வென்று தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தீராத தொல்லையைத் தந்து கடும் இன்னல் விளைவித்தனர்.

அவர்களின் தொல்லை தாங்காது, அனைவரும் சிவனிடம் முறையிட்டார், சிவ பெருமான் தக்க நேரத்தில் அவர் குறை தீர்ப்பதாய் சொல்லி விட்டார். இந்த திரிபுர அசுரர்கள் எப்போதும் சிவபக்தியை தக்க வைத்துக் கொண்டிருந்ததும், அந்த பக்தியினால் ஈசன் அசுரர்களை அழிக்காமல் விடுவதாக ஒரு எண்ணம் தேவர்கள் மத்தியில் எழுந்தது.

இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த அசுரர்களை அழிக்கவேண்டுமென்றால் ஈசன் ஒருவனால்தான் முடியும் என்பதைத் தவிர, இந்த பறக்கும் நகரங்களான முப்புரங்களும் அழிய ஒரு குறிப்பிட்ட நாள் வேண்டும், அதாவது இந்த நகரங்கள் பூசத் திருநாளன்று ஒரு நேர்க்கோட்டில் வான் வழியே கூடும். அந்தத் திருநாள் வரும்போது மட்டுமே அழிபடக்கூடிய ஒரு சிறப்பான வரத்தைப் பெற்றிருந்தனர் இந்த அசுரர்கள். ஆகையினால் இந்த முறை வரும் அந்த பூசத் திருநாளை நிச்சயம் நழுவவிடக்கூடாது என்பதை மனதில் கொண்டு விஷ்ணுவிடம் அவர்கள் வழி கேட்டனர். காக்கும் கடவுளான மகாவிஷ்ணு தேவர்களைக் காக்கும் விதமாக முன்வந்தார்.

ஞானகுருவின் வடிவான புத்ததேவன் உருக்கொண்டு அசுரர்களிடம் குருவாக தோன்றினார். சிவபக்தியில் சிறந்த அசுரர்களை தெய்வநோக்கம் என்பது வல்லவர்களுக்குத் தேவையான ஒன்றல்ல என்பதையும் அசுரர்கள் எல்லா வல்லமையும் ஏற்கனவே பெற்ற போது தெய்வத்தின் துணையை அவர்கள் நாடுவது நல்லதல்ல என்பதையும் போதித்தார். புத்த போதனையை திரிபுர அசுரர்கள் மேற்கொண்டனர். சிவசிந்தனையும் அவர்கள் மனதை விட்டு அகன்றது.

இதுதான் சமயம் என தேவர்கள் மறுபடியும் ஈசனின் கருணை வேண்டி சிவனிடம் சென்றபோது, சிவன் சம்மதித்தார். தேவர்கள் அனைவரையும் தனக்குத் துணை வருமாறு அழைத்தார். அசுரர்களின் பறக்கும் நகரங்களை அழித்திட ரதம் ஒன்றை வடிவமைத்தனர். வரம் கொடுத்த பிரும்மன் சாரதியாக, மேருமலையே வில்லாக, மாலவன் அம்பாக, சூரிய சந்திரர்கள் ரதத்தின் இரு சக்கரமாக, ஈசன் அந்தத் தேரில் பறக்கும் நகரங்களை நோக்கி போர் செய்யப் பயணித்தார்.

எதையும் யாவற்றையும் ஆக்கி, காத்து, அழித்து மறுபடியும் உருவாக்குபவர் எனும் பெயர் கொண்ட ஈசனுக்கே இந்த அசுரர்களை அழிக்க இத்தனை உதவிகள் தேவையா எனக் கேள்வி உருவாகக்கூடும். உருவானது கூட தேவர்களின் மத்தியிலே.. அவர்களுக்கு இதனால் ஆணவம் கூட வந்தது. எத்தனைதான் ஈசனே ஆனாலும் தம் உதவியில்லாமல் ஈசனால் கூட சில காரியங்கள் நடக்காது என்பதாக உணரத் தலைப்பட்டனர்.

ஈசன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு முக்கிய காரணம் உண்டு என்பதையும் மறந்தனர். எந்தவொரு முக்கிய செயலும் கூடிச் செய்தால்தான் அதன் முக்கியத்துவத்தை நாம் உணரமுடியும் என்பதற்காகவே ஈசன் தம்முடன் தேவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார் என்பதையும் மறந்தனர்.

திரிபுரத்தை அழிக்கும் வேளை வந்த அந்தச் சமயத்தில் தேவர்கள் ஆணவத்தை உணர்ந்த ஈசன் இவர்களுக்கும் ஒரு சிறிய பாடம் எடுக்கவேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ.. பூசத் திருநாளன்று முப்புரங்களும் ஒன்று சேர்ந்த பொழுதில் ஒரு சிறு மென்னகை செய்தார், அந்த மென்னகையே அந்த திரிபுரங்களை தீ பற்றி எரிக்கத் தொடங்கியது.

”பிரமற்கும் பிரான்மற்றை மாற்கும்பிரான்
நொடிக்கும்மள விற்புரம் மூன்றெரியச்
சிலைதொட்டவ னேஉனை நான்மறவேன்”

என்பார் சுந்தரர். கண்ணிமை நொடிக்குமளவில் புரம் மூன்றையும் எரித்தவனாகப் பாடுவார்,

ஈசனுக்கு உதவியாக வந்த தேவர்கள் திகைத்தனர். ஈசனின் திருவிளையாடலை உணர்ந்த தேவர்கள் தம் தவறுக்கு வருந்தினர். ஈசனின் தாளை நினைந்து பணிந்தனர். அனைவரும் கூடிச் செயல் புரிதலின் அருட்தன்மையும் உணர்ந்தனர். ஈசன் அவர்களுக்கு அருள் புரிந்தார். அவர்களின் உதவியையும் ஏற்று மாலவனான தன் அம்பை அசுரர்களை நோக்கி ஏவி விட, திரிபுரம் மூன்றும் மொத்தமும் எரிந்து அசுரர்களும் அழிந்தனர். திரிபுர அசுரர்களை அழித்து மூவுலகமும் காத்து அருள்செய்த ஈசனை ‘திரிபுராந்தகர்’ என்று தேவர்களும் முனிவர்களும் வழிபடத் தொடங்கினர்.

சரி, இப்போது சிற்ப்பங்களை பார்ப்போம். முதல் புடைப்புச் சிற்பம்.

இன்னும் அருகில்

மேல் வரிசையில் மூவரை நான்றாக அடையாளம் காண முடிகிறது – மகிஷாசுரமர்த்தினி சிங்க வாஹனத்தில் , எலி வாஹனத்தில் கணபதி, மயில் வாஹனத்தில் முருகன்.

நடு வரிசையில் திரிபுர சண்டை காட்சி போல தெரிகிறது. கடைசி வரிசை முடிவடையாத நிலையில் உள்ளது

8866
8869

பக்கத்துக்கு வரிசைக்கு வருவோம். மேலே புத்தர் – அருகில் அவர் சொல்வதை பணிவுடன் கேட்டு நிற்கும் திரிபுர அசுரர்கள்

அடுத்த வரிசையில் – சண்டையில் தோற்று விழும் அசுரர்கள் போல உள்ளது. அருகில் நிற்பவர்கள் கை பாவங்களை பார்தால் மகேசனிடம் சரணடைய சொல்வது போல உள்ளது.

அடுத்த வரிசையில் தலை மீது சிவலிங்கத்தை வைத்து வழிபடும் காட்சி.

அடுத்த சிற்பத்தில் இதே காட்சி சற்று வேறு விதமாக உள்ளது.

முன்னர் பார்த்தவாறே புத்தர் , அருகில் அசுரர்கள்

இங்கே பாருங்கள் தனது ரதத்தில் கம்பீரமாகும் நிற்கும் மகேசன், பிரம்மன் சாரதியாக…

முடிவாக புகழ் பெற்ற சோழ ஓவியங்கள் – அதில் வரும் திரிபுர தகனம் காட்சி. நாம் முன்னரே பார்த்தது தான்.

இங்கே மேலே புத்தர், தேரின் மீது மகேசன், தேரோட்டியாக நான்முகன், அருகில் மகிஷாசுரமர்த்தினி சிங்க வாஹனத்தில் , எலி வாஹனத்தில் கணபதி, மயில் வாஹனத்தில் முருகன்.

நாம் கவனிக்க வேண்டியது பல்லவர் காலத்திலேயே புத்தரை பெருமாளின் அவதாரமாக சித்தரிக்கும் முயற்சி எழுந்துள்ளது. ஆனால் அந்த புத்தர் தான் சாக்கியமுனியா என்பது ஒரு பெரும் கேள்வி. ஆனாலும் இங்கே நாம் பார்த்தமட்டில் புத்த வடிவங்கள் அளவிலும் சரி, அமைப்பிலும் சரி ஒரு மதிப்புக்குரிய பாவத்தில் தான் உள்ளன.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment