சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சியைப் பற்றிய நமது தேடல் இன்றும் தொடர்கிறது. சென்ற இரு பதிவுகளில் நாம், தர்மராஜா ரதம் ( அதனை அதன் சரியான பெயர் சொல்லி அழைக்கவேண்டும் என்றால் ஆத்யந்தகாம பல்லவேஸ்வர க்ருஹம் என்று அழைக்க வேண்டும் ) சோமஸ்கந்தர் வடிவத்தை மல்லை கடற்கரை ராஜசிம்மேஸ்வர சோமஸ்கந்தர் வடிவத்துடன் ஒப்பிட்டோம். ராமானுஜ மண்டபத்தில் உள்ள அழிந்த சோமஸ்கந்தர் வடிவத்தின் அமைப்பையும் பார்த்தோம்.
வாசகர்களுக்கு நாம் இட்ட கேள்விகளை இன்னும் ஒருமுறை காண்போம்.
1. இதுவரையிலும் நாம் பார்த்த இரு வடிவங்களில் எதை முதலில் வந்த வடிவம் என்று சொல்லமுடியுமா. அதில் உள்ள வேலைப்பாட்டின் வளர்ச்சியை வைத்து , நாம் அந்த முடிவுக்கு வர முடியுமா?
2. இரு வடிவங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்ன.என்று பட்டியல் இட முடியுமா ?
3. மேற்கண்டவற்றை வைத்து ராமானுஜ மண்டபத்தில் அழிந்த சோமஸ்கந்தர் வடிவம் எந்த பாணியில் உள்ளது என்று நாம் உறுதியாக சொல்ல முடியுமா ?
வாசகர்கள் மீண்டும் முதல் இரு பாகங்களை ஒரு முறை வாசித்த பின்னர் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் கூற முயலலாம். அதுவரை நாம் அடுத்த இடத்திற்கு செல்வோம். இன்னும் ஒன்றல்ல மூன்று அற்புத சோமஸ்கந்தர் வடிவங்கள், புலிக் குகை என்று இன்று அழைக்கப்படும் சிற்பக் கொத்தில் உள்ள அதிரணசண்ட மண்டபம். முன்னரே காணாமல் போன இரு சிவலிங்கங்கள் பற்றிய பதிவில் நாம் இந்த மண்டபத்தை பார்த்தோம்.
இன்று இன்னும் அருகில் சென்று, முதலில் நடுவில் உள்ள கருவறையைப் பார்ப்போம்.
சோமஸ்கந்தர் சிற்பம் தெரிகிறதா. ரொம்ப முயற்சிக்க வேண்டாம், இன்னும் அருகில் எடுத்து செல்கிறோம்.
சோமஸ்கந்தர் வடிவத்தை ஒற்றி வரைந்த ஓவியம் உங்கள் பணியை சுலபமாக்க .

இப்போது சற்று பின்னல் சென்று, வெளியில் இருக்கும் மற்ற இரு சோமஸ்கந்தர் வடிவங்களையும் பார்ப்போம்.
இரு சோமஸ்கந்தர் சிற்பங்கள்.
அவற்றின் ஒற்றி எடுத்த ஓவியங்கள்.
வாசகர்களுக்கு மீண்டும் ஆனால் சற்றே சுலபமான கேள்விகள்.
1. இந்த சோமஸ்கந்தர் எந்த பாணியில் உள்ளனர் ?
2. மூன்று சோமஸ்கந்தர் வடிவங்களும் ஒரு பாணியா?
நம் தேடல் தொடரும்