மச்ச அவதாரம் திருமாலின் முதல் அவதாரம். மச்சம் என்பது சமசுகிருத மொழியில் மீன் எனப்பொருள் தரும். படைக்கும் பிரம்மன் தனது ஒரு நாள் காலக் கணக்கு( 4320 million years) முடிந்தவுடன் ,தான் படைத்த அனைத்தையும் விட்டு விட்டு உறங்குவார். அப்போது அவர் படைத்த அனைத்தும் அழியும் – வேதங்கள் தவிர. அவை பிரம்மனின் உடலினுள் வசிக்கும். பின் அடுத்த நாள் அனைத்தையும் திரும்பப் படைக்க துவங்குவார் பிரம்மன். அவ்வாறு ஒரு முறை பிரம்மன் தூங்கும்முன் கொட்டாவி விடும்போது் வேதங்கள் வெளியேறி விட்டன. அப்போது அவ்வழி சென்ற அசுரன் ஹயக்ரிவன் – அவற்றை களவாடிவிட்டான். இதை கண்டுகொண்ட விஷ்ணு அசுரனிடமிருந்து அவற்றை மீட்க எடுத்த அவதாரம் இது.
மனு என்ற அரசன் ஒரு சிறு குளத்தில் பூசை செய்யும் போது ஒரு சிறு மீனாக அவன் கையினுள் வந்து அபயம் கேட்டார். அவனும் அன்புடன் எடுத்து தனது கமண்டலத்தில் உள்ள நீரில் அந்த மீனை இட்டான். சிறு நேரம் கழித்து மீன் மள மள என்று வளர்ந்து கமண்டலத்தை விட பெரிதாக ஆவதைக் கண்டு பயந்து, அதை எடுத்து ஒரு ஆற்றில் விட்டான் மனு. அங்கும் அது வளர, பின் கடல் – அதன் பின் மகா சமுத்திரம் என்று படிப் படியே எடுத்து சென்றான். கடைசியில் வந்தது யார் என்று புரிந்து வணங்கினான். மச்ச வடிவத்தில் இருந்த திருமாலும், அவனுக்கு ஆசி புரிந்தார் – ஒரு வாரத்தில் புவி அழிந்து பிரளயம் வர இருப்பதாகவும், அதில் இருந்து பிழைக்க ஒரு பெரிய கப்பலை கட்டி – அதில் உயர்ந்த உயிர் இனங்களை உடன் எடுத்து காத்திருக்குமாறு கூறியது மீன்.
ஒரு வாரத்திற்குள் மனுவும் அவ்வாறே செய்ய, அதற்குள் பெருமாள் ஹயக்ரிவ அசுரனை சமுத்திரத்தின் அடியில் கண்டு பிடித்து, முட்டி அழித்து ,வேதங்களை மீண்டும் பிரம்மனிடம் ஒப்படைத்தார். பிறகு கூறியவாறே பிரளயம் வர, வாசுகி என்ற பெரிய பாம்பை கயிறாக கொண்டு, தனது நெற்றியில் வளர்ந்த பெரிய கொம்பில் கட்டி, பிரளயத்தில் இருந்து அந்த மரக்கலத்தை காப்பாற்றி – மீண்டும் புவியில் உயிரினங்கள் வாழ வழிவகை செய்தார்.
இந்த அவதாரத்தில் திருமால் நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவரூபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகக் கொண்டவராகவும் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது – பொதுவாக நாம் இந்த அவதாரத்தை குறிக்கும் சிற்பங்கள் இவ்வாறே மேல் பாகம் மனித உடலுடன் கீழ் பாகம் மீனின் உருவுடனும் (மீன் பாடி***) காண்கிறோம். ( இதோ ஸ்ரீரங்கம் கோவில் தூணில் )

ஆனால் இங்கே (ஹோய்சாலர் (போசளர்) காலம் பேலூர் ஹலேபிட் ஹோய்சாலேஷ்வர கோயில் சிற்பம் ) அழகிய மீனின் தலையும் மனித உடலுடன் சிலை உள்ளது – கயல் விழி என்று கேள்விபட்டுள்ளோம் – அது விழியே கயல் போல இருக்கும் என்ற கற்பனை – இங்கே கயலுக்கு விழி….
![]()
![]()
திரு சந்திரா அவர்கள் மற்றும் நண்பர்கள் இந்த சிற்பத்தை வராகம் என்று கருத, இதோ அங்கே இருக்கும் வராக அவதார சிற்பங்களையும் இணைக்கிறேன்.


( ***மீன் பாடி என்பது சென்னையில் அனைவருக்கும் தெரிந்த வாகனம் – மரீனா கடற்கரை சாலையில் சாலையை விட ஒரு ஜாண் மேலே பறக்கும் விமானம் அது – ஓட்டுனர் உரிமம் தேவை இல்லை, வண்டிக்கு எந்த வித எண்ணும் தேவை இல்லை )