பனைமலை பல்லவகால ஓவியம் உயிர் பெறுகின்றது. பாகம் 2

அனைவரும் சென்ற பதிவை பார்த்து பரவசமடைந்து அடுத்த பதிவுக்காக ஆவலாக எதிர்பார்த்து காத்து நிற்பது தெரிகிறது. ஆனால் அதற்கு முன்னர் நண்பர்திரு ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி. பதிவைப் படித்தவுடன் தன்னிடத்தில் இருந்த குறிப்பு ஒன்றில் இந்த அற்புத ஓவியத்தை கண்டுபிடித்தவரின் வர்ணனை இருப்பதை சுட்டிக்காட்டி நகல் எடுத்து எனக்கு அனுப்பி உள்ளார். ‘Art I Adore’ என்ற ஸ்ரீ அமல் கோஸ் அவர்களது நூலில் – ‘A book on art based on interviews with K. Ramamurty’ என்ற குறிப்பை படித்தவுடன் மெய் சிலிர்த்தது. நீங்களும் படியுங்கள்.

ஆரம்பமே படு சுவாரசீயம் – ஒரு ரசீது. இந்தியா சுதந்திரம் அடைந்து நான்கு ஆண்டுகள் பிறகு ஒரு தேதியில் – ஒரு அருமையான சுவரோவியத்தை முதல் முதலில் நகல் எடுத்து வேலை இல்லாத ஓவியனின் ரசீது.

” This is to certify that his Museum purchased from Shri K. Ramamurti, artist, a copy of the mural painting of the Pallava period from the temple at Panamalai. Mr. Ramamurti was the very first artist to copy this interesting mural.- Superintendent, Government Museum, Madras ”

ஆஹா. மேலும் தொடர்ந்தது அவரது வர்ணனை.

திரு ராமமூர்த்தி அவர்கள் ஒருநாள் ‘தி ஹிந்து ‘ நாளேட்டில், புதுச்சேரி ஆசிரமத்தில் தங்கி இருந்த அயல்நாட்டவர் ஒருவர் தான் பனைமலை மலையில் ஒரு கோயில் சுவரில் கண்ட சில கோடுகள் சிதைந்த பிரெச்கோ ஓவியமாக இருக்கக் கூடும், என்ற தகவலை படித்தார்.

உடனே ஆர்வம் அடைந்த அவர், தான் இதை வெளிக் கொணர்ந்தால் சரித்திரத்தில் இடம் பிடிக்கும் அபார கண்டுபிடிப்பாக இருக்கும் என்று எண்ணி உடனே புறப்பட தயார் ஆனார். எனினும் பயணத்துக்கு போதுமான பணம் அவரிடத்தில் இல்லை. தன மனைவியின் நகைகளை அடமானம் வைத்து பணம் திரட்டி அடுத்த நாள் காலை பனைமலைக்கு புறப்பட்டார்.

அங்கு சென்றதும் முதலில் ஒன்றுமே கிடைக்கவில்லை. சுற்றி சுற்றித் தேடியும் ஓவியச் சுவடுகள் எங்குமே தென்படவில்லை. ஆலய பூசாரிகளுக்கும் அப்படி ஒரு ஓவியம் அங்கு இருப்பதாக தெரியவில்லை. எனினும் ராமமூர்த்தி அவர்கள் மனம் தளராது தேடினார். இரவு அங்கேயே படுத்து காலையில் எழுந்து அடியடியாக தேடினார்.

பதினைந்து நாட்கள் தேடிய பின்னர், ஒரு செவிரில் சில எச்சங்கள் தெரிந்தன. அவற்றை உற்றுப் பார்க்கும் பொது ஒரு முகம் காட்சி தந்தது. சுதை பூச்சால் மறைந்து இருந்த கோடுகளை வெளிக்கொணர கவனமாக அவற்றை விலக்கினார். உள்ளே பனைமலை பார்வதி (உமையம்மை).

தனது குருநாதர் தேவிபிரசாத் அவர்கள் கற்றுக் கொடுத்த பாணியில், அப்படியே நகல் எடுத்தார். என்றும் காலத்தை வென்று அது நிற்க வேண்டும் என்று அதனை சென்னை அருகாட்சியகத்துக்க்கு கொடுத்தார்.

இந்த நூலிற்காக அவரைப் பேட்டி கண்டு அந்த கண்டுபிடிப்பு பற்றி வேறு ஏதாவது நினைவுக்கு வருகிறதா என்று கேட்ட பொது.

” அன்று நான் அந்த பனைமலை ஓவியத்தை கண்ட பொது அடைந்த, அந்த கணத்தில், நான் அடைந்த மகிழ்ச்சியை தவிர வேறு ஒன்றுமே நினைவில் இல்லை” என்றாராம்.

இன்று அவர் எடுத்த நகல் இன்னும் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

மேலே செல்வதற்கு முன்னர், அந்த பல்லவ ஓவியனின் அபார கலை திறமையை நீங்கள் ஒரு ஓவியனின் கண்ணோட்டத்தில் ரசிக்க சில படங்கள். முகத்தின் வட்ட வடிவை கட்ட அவன் அந்த பச்சை நிறத்தை உபயோகிப்பதும் , நெற்றியிலிருந்து வளரும் மூக்கின் வடிவத்தை உணர்த்த வர்ணத்தை நீக்கி – அப்பப்பா அபாரம.

ஓவியத்தை வரைந்த ஓவியரை, ஆயிரம் ஆண்டுகள் பிறகு அதனை மீண்டும் வெளி கொண்டு வந்த நகல் எடுத்த ஓவியருக்கும் ஒரு பெரிய நன்றி கூறி, நமது தொடர்பணியை ஓவியர் திருமதி சுபாசினி அவர்களுடன் ஒப்படைக்கிறோம்.

அவர் கூறுகிறார்.

”பனைமலை உமையம்மையை வரைவது மிகவும் அருமையான அனுபவம். நமக்கு கிடைத்த மிச்சங்களை வைத்து அழிந்து போன பாகங்களைக் கற்பனை செய்து வரைவது மகிழ்ச்சிகரமாக இருந்தது. அதுவும் திரு விஜய் அவர்களின் உதவியுடன் இதற்கான மிக நேர்த்தியான புகைப் படங்கள் கிடைந்தன. அனைத்தையும் ஒன்று சேர்த்து உங்களுக்கு முழு ஓவியமாகப் படைக்கிறேன்.

அப்படி முழுதாக வரைந்த பின்னர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதை எடுத்துரைக்கவும் வார்த்தைகள் வரவில்லை.

அதில் மிகவும் பிடித்தது முதல் முதலில் வரைந்த கோடுகள். இந்த முறை அக்ரிலிக் வண்ணங்களை கொண்டு முயற்சி செய்தேன். படிப்படியாக வண்ணங்களைத் தீட்டி ஓவியத்தை வெளிக்கொண்டு வருவது பரிசுப் பொருளை பிரிப்பது போன்ற ஆர்வம் மற்றும் அனுபவம்.

ஒவ்வொரு கோடும் ஒரு புது அனுபவம், ஒரு கண்டுபிடிப்பு – சில கற்பனை. அவை அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து வந்த வடிவத்தை பல்லவ சுவரோவியம் போலவே முடிக்கவேண்டும் என்பது பெரும் சவாலாக இருந்தது.


ஓவியத்தை தீட்டும்போது படிப்படியாக படம் எடுத்து ரசித்தோம். நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

இதோ நிறைவு பெற்ற ஓவியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *