பக்தியை எப்படி வர்ணிப்பது – சிலையில் ?

ஆடவல்லானின் ஆடல் கோலத்தை பலரும் பாடியுள்ளனர், விழா எடுத்துக் கொண்டாடியுள்ளனர். தத்துவபூர்வமான விளக்கங்கள் பல வெளிவந்துள்ளன. அவைகளின் சிறப்பை நாம் எளிதில் உணர்ந்து அனுபவிக்க, அந்த அற்புத நடனத்தை இன்றும் நாம் கொண்டாட, அவரை கல்லில் செதுக்கியும் உலோகத்தில் வார்த்தும் சிறப்பித்த சிற்பிகளும் ஒரு முக்கியக் காரணம்.

அவர்களின் அற்புத கலையின் சிறப்பைப் போற்றி பெருமைப்படவே இந்த பதிவு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள், அந்த அழகை உலோகத்திலும் உயிர் பெற செய்யும் தன்மையை நாம் புரிந்துக்கொள்ள இன்றைய பதிவு.

நண்பர் அர்விந்த் அவர்களின் படங்கள் இல்லையென்றால் கண்டிப்பாக இப்படி ஒரு பதிவை எழுத முடியாது. அலங்கரிக்கப்பட்ட ஆடல் வல்லானின் அழகுக் கோலம், அருங்காட்சியக சூழலில் அல்ல, ஆலயத்தில்! சுழன்று ஆடுவதைப்போல் காணப்படும் இந்த தோற்றத்தை எதிரில் நின்று பார்க்கும் நமக்கு ஏற்படும் அனுபவங்கள் அதிசயம்தான்! அந்த அழகு வதனத்தின் தேஜஸ் மற்றும் அந்த முத்திரைக் காட்டும் கையை பார்க்கும் பொழுது அலைபாயும் நம் மனதிற்குள் ஒரு அதீத அமைதி உருவாகிறது.

ஜோதி ஸ்வரூபமாய் அவன் ஜொலி ஜொலிக்க, அருகில் சிவகாமி அம்மை தன் மணாளன் ஆடும் அழகை கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறாள்.

அம்மையின் முகத்தில் புன்சிரிப்பு, வெறும் சிரிப்பல்ல பெண்மைக்கே உரியான ஒரு பெருமித சிரிப்பு! நிற்கும் கோலத்தில் என்ன ஒரு நளினம்!

இருவரோடு முடியவில்லை, இன்னும் ஒருவர் இருக்கிறார்!

இது நம் காரைக்கால் அம்மை.

நாம் முன்னரே பலமுறை அவர்களை கல்லில் பார்த்துள்ளோம். ஆனால் செப்பு சிலைகளில் இதுவரை ஒன்றிரண்டு அருகாட்சியகங்களில் தான் பார்த்ததுண்டு.


படங்கள்: இணையத்தில் இருந்து.

இந்த சிலைகள் அம்மையாரின்வாழ்கையை விளக்குகின்றன , ஆனால் ஏதோ ஒரு குறை, அது அம்மையாரின் பக்தி! அதை எப்படி சிலையில் காட்டமுடியும்?

பக்தி என்பது ஒரு சாதாரண உணர்வோ உணர்ச்சியோ அல்லவே! அது ஒரு நிலை! பிறப்பு, வாழ்வு, இறப்பு என்ற சுழற்சியை விட்டு ஜீவன் வெளியே வந்து, உடல் என்னும் கூடு, ஆவி என்ற ஒரு அடையாளம் என்று இரண்டையும் தாண்டி , இறைவன் என்ற பரம்பொருளிடம் ஐக்கியம் ஆகும் நிலை. இதை சிலையில் எப்படி காட்டுவது? இந்த நிலையை எழுத்தில் வர்ணிக்கவே கடினமாக இருக்கிறது. அம்மையின் பாடலையே விளக்கமாக இடுகிறேன்

இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
அடியின்கீழ் இருக்க என்றார்.

– என்றும் கெடுதலில்லாத இன்ப அன்பினை வேண்டிப் பின்னும் வேண்டுவாராய், `இனிப் பிறவாதிருக்கும் வரம் வேண்டும், மீண்டும் பிறவி உளதாயின் உன்னை என்றும் மறவாது இருக்கும் வரம் வேண்டும், இவற்றோடு இன்னும் ஒன்று வேண்டும், அது, அறவா! நீ ஆடும்போது, நான் மகிழ்ந்துபாடி உன் அடியின்கீழ் இருக்கவும் வேண்டும்` என்று வேண்டினார்.

இப்போது மீண்டும் அம்மையை பாருங்கள்.

புடவை சுற்றப்பட்டாலும், வெளியில் தெரியும் தாளம் போடும் கைகள் மற்றும் முகத்தை வைத்தே அந்த கலைஞனின் அற்புத திறனை நாம் உணர முடிகிறது. அம்மையின் கைகள் தாளம் போடும் போதே, சற்றே வளைந்து அவன் ஆட்டத்தில் லயித்து இருப்பது தெரிகிறது. தான் வேண்டிய வரத்தை அளித்த மகேசனின் மீதான அவரது அன்பு, அதனுடன் மேலே பார்க்கும் வண்ணம் கழுத்து நேராக நீண்டு, நாசிகள் சற்றே விரிந்து, அந்த முகத்தில் தெரிவது பக்தியா?

இல்லை இல்லை பக்திப் பரவசம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *