விஜயவாடா மொஹல்ராஜபுரத்து அதிசயங்கள்

திரு திவாகர் அவர்களுக்கு இந்த அற்புத குடவரை பற்றிய பதிவை நம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றி. இந்த குடவரை பற்றி இன்னும் படிக்க வேண்டும், நல்ல புகைபடங்களும் தேவை. விஜயவாடா வாசகர்கள் இருந்தால் எடுத்து அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறேன். இப்போது திரு திவாகர்.

விஜயவாடாவையும் கனகதுர்கையயும் யாராலும் பிரித்துப் பார்த்துக் கனவு கூட காணமுடியாது . தற்சமயம் இந்திரகிலாத்திரி மலைக்கோயில் மேலே அழகாக வீற்றிருக்கும் கனகதுர்காவின் திரு உருவச் சிலையைப் பற்றி நாம் இங்குப் பேசப் போவதில்லை. ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்பு கல்லினால் செதுக்கப்பட்ட துர்காவின் அழகுச் சிலையைப் பற்றித்தான் இந்தப் பதிவு. வேறு சில சிற்ப ஆராய்ச்சியாளர்கள் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாகக் கூட இருக்கலாம் என்று சொல்லப்பட்ட சிற்பம் இது.

விஜயவாடாவின் மத்தியப்பகுதியில் மொகல்ராஜபுரத்தில் பத்தடி உயரம் உள்ள இரண்டு குன்றுகள் இப்போதும் அப்படியே விட்டுவைக்கப்பட்டுள்ளன. ( மொத்தம் ஐந்து ) ஆர்க்கியாலஜி சொஸைட்டியின் மேற்பார்வையில் உள்ள இந்த குன்றுகளில்தான் இந்த சிலை ஆச்சரியங்கள் உள்ளன.

ஒரு குன்றின் அடிவாரத்திலேயே பாறையைக் குடைந்து சிறிய அறையை உருவாக்கி (கோயிலாக்கி) உள்ளே உள்ள பாறையில் துர்க்கையின் வடிவத்தை பின்னால் சிம்ம உருவத்தோடு செதுக்கி உள்ளார்கள். அது துர்க்கைதானா என்று பார்க்கும் எல்லோருக்குமே ஒரு திகைப்பு வரும் அளவுக்கு சிதைந்து போன முறையில்தான் இந்த சிற்பம் தற்சமயம் உள்ளது. பின்னால் சிம்மம் இருப்பதால் மட்டுமே துர்க்கை என்று கொள்ளவேண்டும்.

(கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்)

துர்க்கை காலை சற்று அகல வைத்து அசுரனை அழிக்கும் நிலையில் கற்பனை செய்து படைக்கப்பட்டுள்ள சிற்பம் இது. பக்கத்திலேயே ஒரு கருநீலப் பலகையில் அரசாங்கப் பெயர்ப் பலகை இவள் கனகதுர்காதான் என்றும் 6-7ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட சிற்பம் என்று அங்கீகாரம் அளித்துள்ளது. துர்க்கை அல்லது கொற்றவை என்றுதான் எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆனால் கனக எனும் வாசகத்தை முன்னால் வைத்து கனகதுர்கா என்றால் அனைவரும் வருவார்கள் என்று எதிர்பார்த்தோர்களோ என்னவோ(பலகைப் படம்)

சிற்பத்தின் மிகவும் சிதைந்த நிலைமையினால் அதன் வரை படம் இதோ

4638

இவள் துர்க்கையின் சிற்பம் என்று அரசாங்கம் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டால், தென்னிந்தியாவிலேயே முதன் முதலாக பெண் தெய்வ வடிவ சிற்பமாக இந்த சிற்பத்தை ஏற்றுக் கொள்ளலாம். டாக்டர் கலைக்கோவன் தனது ‘மகேந்திரக் குடைவரை நூலில் செங்கல்பட்டு வல்லம் குடைவரையில் உள்ள கொம்மை செதுக்கிய கொற்றவை சிற்பம்தான் தென்னகத்தில் முந்தையதாக இருக்கவேண்டும், என்கிறார். அந்த வரிசையில் விஜயவாடா சிற்பமும் சேர்க்கலாம்.

இவைதவிர, மற்றொரு குடவரையில் முகப்பில் இன்னும் பல அற்புதங்கள். தூண்களின் அமைப்பை சற்று பாருங்கள். அவற்றுக்கு மேலே மொன்று கூடுகள். அவற்றில் இருக்கும் முகங்கள்
மும்மூர்த்தி சிலைகள் என்றும் , அதற்கும் மேலே நடராஜரின் நடனக் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளன. இது நடராஜர் வடிவமா அல்லது மகிஷாசுரமர்தினி வடிவமா ? . ஐஹோல் பதாமி நடராஜர் வடிவங்களில் முயலகன் ஆடல் ஈசனின் அடியில் இருக்கிறானா என்று பார்க்க வேண்டும். விரைவில் இங்கு இடுகிறேன். இதன் காலமும் ஏறத்தாழ அதே 6 அல்லது ஏழாம் நூற்றாண்டு சிற்பம் என்றே சொல்கின்றனர் (படங்கள் பார்க்க)

கூடுகளின் அமைப்பை சற்று மகேந்திர தளவானூர் குடவரையுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

இங்கு சென்னையைப் போல அல்லாமல் சிற்பத்தில் விருப்பம் உள்ளோர் யாருமே வருவதில்லை. இந்த கலை பெட்டகங்கள் சிதைந்து கிடப்பதை பார்க்கும் பொது, பழமையின் செல்வத்தை இவர்கள் எப்போதுதான் புரிந்துகொள்வார்களோ என்ற ஆதங்கம் தான் மிஞ்சுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *