நண்பர்களே!
இன்று மிகவும் சந்தோஷமான நாள். எனது முதல் கண்டுபிடிப்பு இன்று வெளி வருகிறது. இது தற்செயலாக கண்ணில் பட்ட ஒரு புகைப்படத்தில் இருந்த வந்ததே என்றாலும், இரண்டு வருடங்களாக இதனை நான் எப்படி வெளியிடுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். ஏதாவது கருத்தரங்கில் பெரிய பெரிய ஆய்வாளர்களுக்கு முன் இதனை வெளியிடவேண்டும் என்ற ஆசை இருந்தது. பிறகு தான் புரிந்தது, இவை எல்லாம் எவ்வளவு கடினம் என்று, அது மட்டும் இல்லாமல் அவ்வாறு சமர்ப்பித்த ஆவணங்கள் எத்தனை சான்றோர்களையும், சாமானியர்களையும் ஆன்றோர்களையும் சென்று அடைகின்றன! அதனால், இன்று நண்பர்கள் துணையுடன், இணையத்தில் எங்கள் தளம் தரும் தைரியத்தில், முதல் முதலில் எனது கண்டுபிடிப்பை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
பல்லவர்கள் கலை உலகுக்கு செய்த சேவை மிக அரியது. அதனை பற்றி எழுத வேண்டும் என்பதால் மகேந்திர குடைவரைகள் பற்றிய தொடரை துவங்கினேன். அவற்றில் நாம் பல அரியதகவல்களை தெரிந்து கொண்டோம் . இந்தத் தொடரில் மேலும் பல விஷயங்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.
பல்லவர்கள் சிற்பக் கலை வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டில் மிகவும் போற்றப்பட வேண்டியவை அவர்கள் தந்த சோமாஸ்கந்த வடிவம், சிவ கங்காதர வடிவம் மற்றும் மகிஷாசுரமர்தினி வடிவங்கள். அவற்றில் பல்லவ சோமாஸ்கந்த வடிவம் மிகவும் அற்புதமான வடிவம், பிற்கால பல்லவர் ஆலயங்களில் கருவறையில் பின் சுவரில் இந்த அற்புத வடிவத்தை நாம் பார்க்கலாம்.
இந்தப் பதிவு அப்படிப்பட்ட மூன்று சோமாஸ்கந்த வடிவங்களை பற்றியும் அவற்றால் எழும் புதிருக்கு விடையும் பற்றியது. பொதுவாக கருவறை பின்சுவரில் மட்டுமே இருக்கும் இந்த வடிவம் சாளுவன்குப்பம் அதிரணசண்ட மண்டபத்தில் வெளியிலும் இரண்டு இடங்களில் உள்ளன. இந்தக் குடைவ்ரையே புதிர்கள் நிறைந்த ஒன்று.
பல அறிஞர்கள் வெகுவாக விவாதித்த விஷயம். பார்ப்பதற்கு குடைவரையின் பாணி முற்கால பல்லவர் குடைவரை போல ( தூண்களின் அமைப்பு ) இருந்தாலும் , அங்குள்ள கல்வெட்டில் (அற்புதாமான கல்வெட்டு) ராஜஸிம்ஹ பல்லவன் தான் எடுப்பித்த அதிரணசண்ட பல்லவேஸ்வர க்ருஹம் என்று தனது பட்டப்பெயர் அதிரணசண்ட (அதி – மிகை , ரண – போர்களம், சண்ட – வல்லவன் ) என்று கூறுகிறது.
மல்லை பற்றி திரு நாகசுவாமி அவர்களின் அற்புதமான பதிவைப் படியுங்கள். ஒரு தவம் போல அவர்கள் பணிகள் நம்மை நெகிழவைக்கும்.
http://tamilartsacademy.com/books/mamallai/new-light.xml
வாசகர்கள் இந்த அதிரணசண்ட மண்டபத்தின் அமைப்பையும் மகேந்திரர் கால குடவரைகளின் அமைப்பையும் ஒப்பு நோக்கினால் இன்னும் பல கேள்விகள் வெளி வரும்.
அதற்கு முன்னர், இந்த சோமஸ்கந்தர் என்றால் என்ன? உமையுடனும் கந்தனுடனும் இருக்கும் ஈசன் என்றே பொருள்சரி! முருகன் மட்டும் ஏன், விநாயகர் எங்கே? அதற்கு முந்தைய பதிவான மல்லையில் எங்கும் விநாயகர் இல்லை வாசியுங்கள்.
பல்லவ மன்னன் மகேந்திரன் தான் முதல் முதலில் உலோகம், சுதை, செங்கல், மரம் போன்றவற்றை உபயோகிக்காமல் கல்லில் கட்டிய ஆலயம் என்று கூறியதை மண்டகப்பட்டு கல்வெட்டில் பார்த்தோம். அப்போது அவர்கள் இறைவனின் வடிவத்தை சுதை மற்றும் மரத்தில் செய்து வழிபட்டார்கள். இன்றும் பல்லவ கால உத்திரமேரூர் வரதர் ஆலயத்தில் சுதை வடிவங்களை பார்க்கலாம். ஆலயத்தை கல்லில் கட்டிய அவர்கள், மரத்தாலும் சுதையாலும் ஆன விக்கிரகங்கள் மிக விரைவில் அழிந்து விடுவதை கண்டோ, அல்லது அங்குள்ள சிற்பியின் கைவண்ணம் காலத்தால் வளர்ந்ததாலோ, அவற்றையும் கல்லிலே செதுக்க ஆரம்பித்தனர் எனவே பிற்கால பல்லவர் கருவறை சுவரின் பின்பக்கம் சுவரிலேயே சோமாஸ்கந்த வடிவம் செதுக்கப்பட்டது. இவ்வாறு வந்ததே சோமாஸ்கந்த வடிவம். வலது புறத்தில் ஈசன், இடது புறத்தில் உமை, உமையின் மடியில் அல்லது நடுவில் குழந்தை முருகன். இந்த வடிவமும் காலப்போக்கில் எவ்வாறு வளர்ச்சி பெற்றது என்பதை பற்றி படிக்க திரு கிபிட் சிரோமொனே அவர்களின் பதிவு
http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm
சோழர்கள் இந்த வடிவத்தை வெண்கல சிலைகளாக வடித்து, இந்த வடிவத்தின் பெருமையை இன்னும் பெரிதாக்கினார்.
சரி, மீண்டும் அதிரணசண்ட பல்லவேஸ்வரக்ருஹம் வருவோம், பலருக்கு இன்று நாம் பார்க்கும் மல்லை முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணுள் புதைந்து இருந்தது என்பது தெரியாது. (ஆம், புகழ் பெற்ற பஞ்ச பாண்டவ ரதம் கூடத்தான்!) அந்தக் காலத்தில் ( 18 C) இருந்த நிலையை அரிய இந்த புகைப் படத்தை பாருங்கள் ( நன்றி பிரிட்டிஷ் லைப்ரரி )
இன்று இப்படி காட்சி அளிக்கும் மண்டபமே அது.
சரி, சற்று அருகில் சென்று பார்ப்போம்.
கருவறைக்கு இருபுறமும் இரண்டு சோமஸ்கந்தர் வடிவங்கள் உள்ளதை பாருங்கள். பொதுவாக கருவறையில் உள்ளே மட்டுமே இருக்கும் இவை ஏன் இங்கு வெளியில் வந்துள்ளன.
கருவறையினுள் சற்று சென்று பார்ப்போம். சிவ லிங்கத்தின் பின்புறம் அழகிய சோமஸ்கந்தர் வடிவம் உள்ளது.
பின்னர் எதற்காக சிற்பி வெளியிலும் இரண்டு சோமாஸ்கந்த வடிவங்களை செதுக்கினான்
இங்கே தான் எனது கண்டுபிடிப்பு வருகிறது. மண்ணில் புதைந்த மண்டபத்தை வெளிக் கொணர்ந்தவுடன் எடுத்த புகைப் படம் ( மீண்டும் நன்றி பிரிட்டிஷ் லைப்ரரி ) என் கண்ணில் பட்டது.
சற்று உன்னிப்பாக கவனியுங்கள். வெளியிலும் இரண்டு சிவ லிங்கங்கள் இருப்பதை பார்க்கிறோம்.
அதனால் தான் சிற்பி அவற்றுக்கு பின்னர் சோமஸ்கந்தர் வடிவங்கள் செதுக்கி உள்ளான். இதுவே எனது கண்டுபிடிப்பு
இந்த லிங்கங்கள் இப்போது எங்கே போயின ? இவை மற்றும் இன்றி இன்னும் இரண்டு சிற்பங்கள் புகை படத்தில் உள்ளன. தலையில்லாத அமர்ந்த கோலத்தில் ஒரு வடிவமும், நிற்கும் கோலத்தில் அழகிய இன்னொரு வடிவமும் காணலாம். சென்ற முறை அங்கு சென்ற பொது இந்த சிதைவுகள் ஒரு ஓரத்தில் இருப்பதை படம் எடுத்தேன்!!
கால ஓட்டம் ஒரு கலைஞனையும் அவன் திறமையயும் அழிக்க நினைத்தாலும், அந்தக் கலைஞனின் சிற்பக் கலையை மட்டும் காலத்தால் அழிக்க முடிவதில்லை என்பதையும் உணர்ந்தேன். அது பதினெட்டாம் நூற்றாண்டின் நிலை. பின்னர் விளைந்த சிதைவுக்கு யார் பொறுப்பு?