பல்லவ துவாரபாலகர்களுக்கு என்ன கொம்பா முளைத்துள்ளது?

நண்பர்களே , இன்று நான் என்னை மிகவும் கவர்ந்த மனிதரை பற்றி எழுதுகிறேன். எனது அறிவுப்பசியைத் (சிற்பங்களை சார்ந்த!!) துவக்கி வைத்த அற்புத மனிதர், இணையத்தின் பலம், அதன் முழு பயன், வரும் சந்ததியனருக்கு நாம் விட்டுச்செல்ல கூடிய பொக்கிஷங்கள் போன்றவற்றை எனக்கு உணர்த்திய மாமனிதர். திரு ஐன்ஸ்டீன் அவர்கள் தனது அற்புத கண்டுபிடுப்புகளை பற்றி இவ்வாறு கூறினாராம்..” தொலைவில் உள்ள ஒரு நல்ல பொருளை என்னால் காணமுடிவதற்குக் காரணம் நான் உயர்ந்தவர்களின் தோளில் இருந்து பார்ப்பதால்தான்”

அது போல ஒரு உயர்ந்தவரை பற்றிய பதிவே இது. நான் எழுதும் அந்த மனிதரை நான் நேரில் சந்தித்தது கிடையாது. நான் எனது வாழ்கையை எப்படி எழுதவேண்டும் என்பதை பற்றிய தெளிவைப் பெறுவதற்கு முன்னரே, அதாவது 1988 இல் அவர் மறைந்துவிட்டார்.

சிற்பக்கலை பற்றி எனக்கு ஆர்வம் வந்தவுடன், மல்லை கலைச்செல்வங்களை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், ஒரு தேடலாக பார்த்தேன் . அவற்றை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள பல ஊடகங்களை அலசினேன். சிங்கையில் இருந்தபடியால் நேரில் பார்க்க வாய்ப்புகள் குறைவு, எனவே புத்தங்களை படித்து பசியாறினேன். எனினும் சிற்பக்கலை பற்றி ஒரு சில புத்தகங்களே கிடைத்தன. அவற்றில் பலவும் என் அறிவுக்கு ( இன்றும் ) எட்டாத நிலையில் இருந்தன. அவற்றில் சில விலை அதிகமாக என்கைக்கு எட்டாதவகையில் என்னை வாட்டின. ஆர்வம் என்னை இணையத்திற்கு எடுத்து சென்றது. அல்லும் பகலும் தேடினேன் . இரண்டு தளங்கள் கிடைத்தன. திரு நாகசுவாமி அவர்களின் தளம் மற்றும் திரு

கிஃப்ட் சிரோமோனி அவர்களின் தளம் Dr.Gift Siromoney (30.7.1932 – 21.3.1988), M.A., M.Sc., Ph.D., F.S.S.

http://www.cmi.ac.in/gift/Archaeology.htm

திரு கிஃப்ட் அவர்களின் இடுகைகள் எனது பல கேள்விகளுக்கு எளிமையான முறையில் விடை தந்தன. மேலும் அருமையான வர்ணனை , இலவசமாக, புகைப்படங்கள், விளக்கும் சித்திரங்கள் என்று இருபது ஆண்டுகளுக்கு முன்னரே அவர் கையாண்ட முறை, என்னை மிகவும் கவர்ந்தன. இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் சாமானியர்கள் கூட ஒருமுறை படித்தால், நமது குல பொக்கிஷங்களான கலைப்பெட்டகங்ளை போற்றி அவற்றை ரசிக்க வைக்கும் வண்ணம் இருந்தன அவரின் இடுகைகள். வரும் சந்ததியினர் இவற்றை போற்றி பேணி காக்க அவர் செய்துள்ள பனி அபாரம். அவரது இந்த செய்கை, அவர் இந்த உலகை விட்டு சென்றபின்னரும் என்னை போல சிலரை ஊக்குவிப்பதை கண்டு பெருமை படுகிறேன். ஏகலைவன் போல அவரை மானசீக குருவாக கொண்டு, நானும் இணையத்தில் இவ்வாறு ஒரு சிற்பக்கிடங்கியை உருவாக்க வேண்டும், அவரை போல என் தளமும் எனக்குப் பின்னரும் பலருக்கு உதவ வேண்டும் என்ற ஆசையில் அவர் வழி பின்தொடர்கிறேன்.

அவர் இவ்வாறு விட்டுச்சென்ற ஒரு இழையை இன்று விரிவு செய்து இங்கு படைக்கிறேன். இதுவும் ஒரு பல்லவ புதிர். திரு கிஃப்ட் அவர்களது இடுகையை சற்று நேரம் எடுத்து படியுங்கள்.

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_dvarapalaka.htm

நண்பர்களின் உதவி கொண்டு அவரது இந்த பதிவை படங்கள் கொண்டு நான் விளக்குகிறேன்.


மிகவும் எளிய கருத்து இது. பல்லவ வாயிற் காப்போன் வடிவங்கள் உள்ளே இருக்கும் தெய்வங்களின் ஆயுதங்களே! என்பதே ஆகும்

இதை விளக்க, பல்லவ கால குடவரைகளின் வாயிற் காப்போன்களை பார்ப்போம். பொதுவாக பல்லவ கால சிவன் ஆலய வாயிற் காப்போங்களின் தலை அலங்காரங்கள் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் உண்டு. இவர்களுக்கு கொம்பு உண்டு ! பழங்கால பழகுடியின மக்களின் பழக்கமோ , அல்லது சமண வடிவங்களில் வரும் நாக சித்தரிப்பின் விளைவோ, இல்லை நந்தி வடிவமோ ..என்று பல விதமான கருத்துக்கள் உண்டு.

வல்லம் குடைவரையை ஆய்வு செய்து தனது விளக்கங்களை தந்துள்ளார் திரு கிஃப்ட் அவர்கள், ஆனால் இன்று வல்லம் குடவரை மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. நல்ல படம் எடுக்க முடியாத படி ” பாதுகாத்து வருகின்றனர். ” ( படங்களுக்கு நன்றி திரு சுவாமிநாதன் ஐயா மற்றும் திரு சந்துரு). ஆனால் நண்பர் திரு ஸ்ரீராம் அவர்களின் உதவி கொண்டு திருமயம் குடைவரை சிற்பங்கள் மற்றும் மண்டகப்பட்டு , சீயமங்கலம் குடைவ்ரைகளின் சிற்பங்கள் கொண்டு நாம் இன்று விரிவாக பார்க்கப்போகிறோம்.

சரி, முதலில் வல்லத்திலேயே ஆரம்பிப்போம். அற்புத சிற்பங்களை பாதுகாக்க அசிங்கமான இரும்புத்திரை .

அற்புத துவாரபாலகர்கள். பிற்கால கோயில்களில் தனித்தன்மையை இழந்து நிற்கும் சிற்பங்களை போல அல்லாமல், ஒவ்வொருவரும் தனக்கே உள்ள தனித்தன்மையுடன் உயிரோட்டத்துடன் இருக்கும் பல்லவ சிற்பங்கள். இரு பல்லவ சிற்பங்கள் ஒன்று போல இருக்காது, அதுவும் அவர்கள் சற்றே திரும்பி நிற்கும் பாணி அருமை.

வலது புறத்து சிலைக்கு இருக்கும் கொம்பை பார்த்தீர்கள ? இவை கொம்புகளா. கொம்பென்றால் தலையின் மேலே அல்லது சற்று நெற்றிப்பொட்டின் அருகில் அல்லவா இருக்க வேண்டும். இவை எங்கோ கழுத்தின் நடுவில் இருக்கும் படி உள்ளனவே, அதிலும் “கொம்பு” ஆரம்பிக்கும் பகுதியில் ஒரு தேவையற்ற வளைவு உள்ளதே.

சரி, இடதுபுறத்து சிற்பத்தை பார்ப்போம். இவருக்கு கொம்பில்லை, எனினும் கூர்ந்து பாருங்கள், நாடு நெற்றியில் ஒரு புடைப்பு தெரிகிறது . இது அவரது கிரீடத்தின் அலங்காரமா ? இல்லை இதற்க்கு வேறு ஏதாவது அர்த்தம் உண்டா ?

சரி, அடுத்து மண்டகப்பட்டு மகேந்திர குடைவரை செல்ல்வோம் .

வலது புறத்து துவாரபாலகன் அழகாக இருந்தாலும் கொம்பில்லை. வருத்தப்பட வேண்டும், இடது புறத்து ஆள் நமக்கு உதவுகிறார். நெற்றி புடைப்பு தான் இங்கேயும் .

அது என்ன இது, புது அலங்காரம். இன்னும் சிலவற்றை பாற்றுவிட்டு இந்த கேள்விக்கு விடை தேடுவோம்.

அடுத்து சீயமங்கலம் செல்வோம்.


வலது புறத்து சிற்பம் கொம்புடன் காட்சி அளிக்கிறது. இடது புறத்து வாயிற் காப்போன் கிரீடத்தில் தான் புடைப்பை காணவில்லை.


சரி, மீண்டும் கொம்பை சற்று அருகில் சென்று பார்ப்போம். இங்கேயும் கொம்பின் அடியில் உள்ள அரை வட்டம் குழப்பத்தை தருகிறது.

இப்போது புதிருக்கு விளக்கம் பெற, நண்பர் ஸ்ரீராம் அவர்களின் உதவி கொண்டு திருமயம் சிற்பங்களை பார்ப்போம். அற்புத வடிவங்கள், அதுவும் அந்த வலது புறத்து சிற்பத்தின் நிற்கும் பாணி, ஆஹா என்ன ஒரு கம்பீரம், அப்படியே உயிர் சிற்பம்.


இடது புறத்து சிற்பம் சற்று அடங்கி இருந்தாலும் அருமை.


அருகில் சென்று ஆராய்வோம் . அவர்களின் தலை அலங்காரம் மிக அருமை.

வலது புறத்து வாயிற் காப்போனின் தலை கொம்பு – இப்போது இந்த சிற்பத்தில் இன்னும் அலங்காரமாக இருக்கும் கொம்பு நமக்கு பல உண்மைகளை வெளி கொணர உதவுகிறது. உங்கள் மனக்கண்களில் வாயிற் காப்போனின் முகத்தை எடுத்துவிட்டு வெறும் கொம்புகளை மட்டும் பாருங்கள்

கிரீடத்தின் மேலே ஒரு வேல் போன்ற அமைப்பு தெரிகிறதா. இதையும் இரண்டு கொம்புகள் ( அவற்றின் அடியில் இருக்கும் அரை வட்டம் ) ஆனதையும் சேர்த்து பாருங்கள். ஒரு திருசூல வடிவம் தெரிகிறதா. .

ஆம் இவரே திரிசூலநாதர்

இதே வாதத்தின் படி, இடது புறம் இருப்பது வெறும் புடைப்பு இல்லை. அது மழு . கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள புகழ் பெற்ற சண்டேசர் வடிவத்தில் அவன் கரத்தில் உள்ள மழுவை பாருங்கள்.

இவரே மழுவுடையார்.

ஈசனின் மழுவும் சூலமும் மனித உரு கொண்டு அவன் சன்னதியை காக்கும் கோலங்களே இவை.

சகோதரி காதி அவர்கள் அனுப்பிய காவேரிபாக்கம் சிற்பம். தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கும் சிற்பம். இவரும் திரிசூலநாதர் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *