அருங்காட்சியகம், அதிலும் இந்திய பிரிவு என்றவுடன் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும், உடனே கண்ணில் படுவது சோழர் கால வெண்கல / செப்பு சிலைகள். எப்படி தான் இவை நம்நாட்டை விட்டு சென்றனவோ ! எனினும் ஒவ்வொரு பெரிய காட்சியகத்திலும் ஒரு நடராஜர், ஒரு விஷ்ணு, சோமஸ்கந்தர், சம்பந்தர் என்று பல சிலைகளை நாம் பார்க்கலாம். அது சொக்க வைக்கும் சோழர் சிலைக்கு இந்த பணம் படைத்த உலகம் கொடுக்கும் சன்மானம்.
சரி, இன்று கண்ணன் அவதரித்த நாள், ஒரு சிறப்பு சிலையோடு வருகிறேன். ஒரு அரிய சிலை – கிளீவ்லாந்து அருங்காட்சியகம் .
அறிவிப்பு பலகையின் படி, இந்த சிற்பம் பிற்கால சோழர் காலத்து சிலை ( (12 C) – எதனால் அப்படி. சிலையில் அணிகலன்கள் குறைவாக இருப்பதால் இவ்வாறு சொல்லுகிறார்கள். எனினும் முற்கால சோழ சிலைகளில் அணிகலன்கள் சற்று குறைவாக இருந்தாலும் நுண்ணிய வேலைபடுடன் கூடிய அணிகலன் இருக்கும். பொதுவாக அதே காலத்து சைவ நாயன்மார்கள் சிலைகளே அப்படி நிறைய நகைகள் இல்லாமல் இருக்கும். அவர்களின் சித்தரிப்பு அப்படி. அப்படி இந்த சிலையில் அரியது என்ன. யசோதை கண்ணனுக்கு தனது பாலை ஊட்டும் காட்சி – வளர்ப்பு அன்னை, தனது தத்துப் பிள்ளைக்கு தன மார்பை அளிக்கும் தாய்மை போற்றும் சிற்பம், அதுவும் ராணியின் மகன் ஒரு மாடு மேய்ப்பவளிடம் – ஓ, அதனால் தானோ நிறைய ஆபரணங்கள் இல்லை ?
அற்புத அரிய சிற்பம் தான், ஆனால் இந்த காட்சியை பெரியாழ்வார் பாட்டாய் படிக்கிறார் பாருங்கள்.
இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன்
திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி
ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு
இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே
இதற்கு மேலும் இந்த சிலைக்கு ஒரு வர்ணனை தேவையோ ?
இருந்தும் சிலையை பார்க்கும் பொது சில கேள்விகள் எழுகின்றன. பொதுவாக சோழர் கால வெண்கல, செப்பு சிலைகள் ஒரு மேடையுடன், அதில் கொம்புகளை பொருத்தி தோலின் மீது இட்டு ஊர்வலமாக கொண்டுவர நேர்த்தியாக வசதிகளுடன் வரும். இந்த சிலையை பார்த்தல் அப்படி தெரியவில்லை. யாராவது மன்னன் தனது சொந்த அரண்மனைக்கோ மண்டபத்திற்கோ பிரத்தியேகமாக செய்த சிலையோ ? ஆனால் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்து சோழர்கள் வீர சைவர்கள் என்றே இந்நாளில் சொல்கிறார்களே?
படங்களுக்கு நன்றி
http://www.metmuseum.org/toah/ho/07/sss/ho_1982.220.8.htm
http://www.harekrsna.com/gallery/parents1-gallery.htm
சென்னையில் எங்கள் பொன்னியின் செல்வன் விழவிற்கு வாருங்கள் ( ஆகஸ்ட் 15th)
http://festival2009.ponniyinselvan.in/