புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் – ஒரு சிற்ப விருந்து

நண்பர்களே, இன்றைக்கு நமக்கு ஒரு சிற்ப விருந்து. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வந்த இரு நண்பர்கள் – இல்லை இல்லை அவர்களை அங்கு சென்று படம் எடுத்து வாருங்கள் என்று தூண்டி இப்போது அதன் பலனை உங்களுடன் சேர்ந்து நானும் அனுபவிக்கிறேன். புள்ளமங்கை ஒரு கலைப் புதையல். ஆனால் புதையல் என்றாலே புதையுண்டு பல காலம் நினைவில் இருந்து விலகி பின்னர் கண்டுபிடிக்கப்படுவது போல, இன்னும் புதையுண்டு கிடக்கும் பொக்கிஷம் புள்ளமங்கை. அதன் அருமைகளை இந்த தொடரின் மூலம் வெளியிடுகிறோம்.

பொதுவாக இடுகைகளில் படங்களை தொலைவில் இருந்து இட்டு மெதுவாக அருகில் செல்வோம். ஆனால் இந்த பதிவுக்கு அதை சற்றி தலைகீழாக மாற்றி, முதலிலேயே அருகில் செல்வோம். படித்து முடித்தவுடன் ஏன் என்று உங்களுக்கு புரியும்.

இன்று நாம் பார்கவிருப்பது நான்கு சிற்பங்கள். கந்தன் பிறப்பை கல்லில் காட்சியை வடிக்கும் சிற்பங்கள், மற்றும் சில யாளிகள்.

எனக்கு பிடித்தமான யாளிகளுடன் துவங்குகிறேன்.

அற்புத வடிவங்கள், இவ்வளவு திறமை கொண்டு இவற்றை வடித்தான் சிற்பி என்றால், இவை வெறும் அலங்கார மதிப்புக்காகவா என்ற ஐயம் வருகிறது?

இன்னொரு யாளி ( கொம்புடன் இருப்பதால் இதனை ஆங்கிலத்தில் வ்யாலா என்கிறார்கள் )


என்னடா, முருகனின் பிறப்பு என்று சொல்லி மீண்டும் யாளிகளை வலம் வருகிறானே என்று எண்ண வேண்டாம். போகப் போக உங்களுக்கே புரியும் . சரி இதோ சிற்பங்கள்.


முதல் வடிவம். உமையும் ஈசனும் ஆடும் அற்புத நடனத்தைக் கண்டு ஸ்தம்பித்து நிற்கும் காமன் மற்றும் ரதி. இருவர் ஆட்டத்தில் தான் என்ன ஒரு உயிரோட்டம். ஆடல் வல்லானின் ஆட்டத்தின் ஆண்மை கலந்த தோரணை, உமையின் வடிவத்தில் பெண்ணிற்கே உரிய நளினம்.

அடுத்த வடிவம், உமையை தன்பால் ஈர்க்கும் ஈசன்.

வெட்கப்படும் பாவையாய் உமை, கடைக்கண் பார்வையால் தலைவனை பார்க்கும் வண்ணம் – ஆஹா, ஈசன் அமர்ந்திருக்கும் அழகைப் பாருங்கள்.

அடுத்து, இன்னும் நெருங்கி விட்டனர். தனது ஆசைக்குரிய பார்வதியை அன்புடன் சிவன் அணைக்கும் காட்சி.

இந்த சிற்பம் வடித்த சிற்பிக்கு உள்ள அறிவுக்கூர்மையை பாருங்கள். முதல் பார்வையில் ஈசனுக்கு இரண்டு வலது கரங்கள் இருப்பது போல வடித்தாலும் – ஒரு கை பின்னால் அமர்ந்திருக்கும் நந்தியின் மேல் , இன்னொரு கரம் உமையை அன்புடன் அணைப்பது போல இருந்தாலும், சிற்பத்தை இன்னும் ஒரு முறை பாருங்கள்.

கல்லில் ஈசனின் கை உயிர் பெற்று, நகர்ந்து உமையைப் பற்றுவது போல காட்டவே சிற்பி அப்படி வடித்தான் போல !!

அது சரி, அந்த முதல் ஸ்பரிசத்திற்கு உமையின் பதில். அப்பப்பா, நாணம் என்றால் இது தானோ !!!

அதனுடன் நிறுத்தவில்லை சிற்பி, நந்தியை கொஞ்சம் பாருங்கள்.

மேலே இருபுறமும் கணங்கள், கிழே பணிப்பெண் என்று பின்னுகிறான் சிற்பி.

நான்காவது சிற்பம். முருகன் பிறப்பு.

புரியவில்லையா. ஈசனின் மடியில் ஒரு குழந்தை, அப்பாவை செல்லமாக கை நீட்டி ஆசையாய் கன்னத்தை தொடுகிறது. கார்த்திகை பெண்கள் ஆறு, ஐவர் கையில் மற்ற ஐந்து குழந்தைகள்.

சிற்பங்கள் மற்றும் படங்கள் தரம் குறித்து சிலர் அதற்குள் கூறும் மறுமொழிகள் கேட்கிறது ( நல்லவை கெட்டவை இரண்டும் !!)

ஒரு நிமிடம் பொறுங்கள். காரணத்தை படங்கள் மூலமே சொல்கிறேன்.

இன்னும் முடியவில்லை

இன்னும் தொலைவில் இருந்து, இப்போது புரிகிறதா ? இந்த சிறிய சிற்ப புதையல்களை நாம் முதல் பார்வையில் விட்டு விடக் கூடும்.

நான் ” சிறு ” என்று பதிவில் சொன்னேனா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *