உன் கரம் பிடிக்கிறேன்

உலோகத்தில் உணர்வுகளை தத்ரூபமாக கொண்டு வருவது கடினம் , அதை எடுத்துச் செய்ய திறமை வேண்டும். அந்த சவாலை ஏற்க சோழநாட்டுக் கலைஞனை விட யாரால் முடியும். அதுவும் ஒரு திருமணம் – சாதாரண திருமணம் அல்ல – அம்மை அப்பனின் திருமணம். ஆமாம், நாம் ஏற்கனவே பார்த்த தாடகை கதையின் அடுத்த காட்சி தான். சுந்தரேஸ்வரரை கண்டதும் அதுவரை இருந்த மூன்றாம் முலை மறைந்து , போர்வீராங்கனையாக இருந்த மதுரை அரசி மீனாட்சியாக மாறி , மணக்கோலம் தரித்து நிற்கும் காட்சி.

இப்படி ஒரு திருமண காட்சியை கற்பனை செய்யுங்கள். மீனாட்சியின் தமையனாக பெருமாளும் உடன் லக்ஷ்மியும் , தாரை வாற்று தரும் காட்சி.

இவற்றை மனதில் கொண்டு இந்த சிலையை பாருங்கள் – தஞ்சை ராஜ ராஜன் அருங்காட்சியகம்.

மணமகனாக சுந்தரேஸ்வரர் – மாப்பிள்ளை மெருகு , முகத்தில் ஒரு புன்சிரிப்பு, கம்பீரத் தோற்றம். தன் அன்புக்குரியவளை கரம் பிடிக்கும் பெருமிதம்.

மீனாட்சியோ – நளினமே உருவாக நிற்க, தலை சற்றே நாணத்தில் சாய, தன் கரத்தை மணாளன் பிடிக்கும் சுகத்தில் சிவக்கும் கன்னத்தை நோக்கி விரையும் கை.

கரம் பிடித்தல் (பாணிக்கிரஹணம்) என்பதன் அனைத்து பொருள்களையும் உணர்ச்சிகளால் உணர்த்தும் சிலை.

ஒவ்வொரு அசைவிலும் பல அர்த்தங்களையும் , உணர்வுகளையும் பிரதிபலிக்கும் இந்த சிலை அந்த சோழ சிற்பியின் அனுபவத்தையும் ரசனையையும் காட்டுகிறது. .


சரியான முறையில் அருங்காட்சியகத்தில் வைத்தால் இன்னும் அனுபவித்து பார்க்கலாம். படம் எடுக்கலாம். அது வரை இப்படி தான் பார்க்க வேண்டும்

ஆனால், நண்பர் பிரசாத் இருக்கும் வரை நமக்கு குறை ஏது. இதோ அவர் வரைந்த ஓவியம் உள்ளதே. (பிரசாத் இது சும்மா எப்போவோ வரைந்தது என்கிறார் !!!)

சிலைகளை வரைவது மிகவும் கடினம். அதுவும் இது மாதிரி சிலைகளை வரைவது இன்னமும் கடினம். ஏனெனில் , இவை வெறும் ஒரு உருவமோ வடிவமோ அல்ல – தெய்வத்தன்மை ததும்பும் ஒரு மாபெரும் கலை பாரம்பரியத்தின் வெளிப்பாடு. வெகு சிலருக்கு இப்படி அந்த தெய்வாம்சம் குறையாமல் வரையும் இந்த பாக்கியம் கிடைக்கும்.

கலையின் உன்னத சிகரங்களை தந்த இந்த மண்ணில் பிறந்ததற்கு மீண்டும் நான் பெருமைப் படுகிறேன்.

படங்கள் : நண்பர் சதீஷ் மற்றும் இணையத்தில் இருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *