சோழர் கால ஓவியங்கள் புத்தகம் -காத்திருந்தது வீண்போகவில்லை

ஏப்ரல் 9, 1931.

“காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் பிரெஞ்ச் ஆர்வலர் பேராசிரியர் ஜோவூ டுப்ரீயல் (Prof. Jouveau Dubreuil) பல்லவ கால ஓவியங்களைக் கண்டுபிடித்த ஆர்வம் அடங்கும் முன்னர், எனது பாக்கியம், இதுவரை யாரும் கண்டுபிடிக்காத சோழர்களின் ஓவியங்களை தஞ்சை பெரிய கோயிலில் நான் கண்டுபிடித்தேன்.

சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர், நான் எனது நண்பர் திரு T.V. உமாமகேஷ்வரம் பிள்ளையுடன் பெரிய கோயிலை தரிசிக்க சென்றேன். அப்போது சிறு எண்ணை விளக்கின் மங்கிய வெளிச்சத்தில், கருவறையை சுற்றி உள்ள வெளி பிரஹாரத்தின் சுவரில் சில ஓவியங்களின் சுவடுகள் தெரிந்தன.

ஆனால் நேற்று தான் ஒரு சிறு பெட்ரோமாக்ஸ் விளக்கின் பிரகாச ஒளியில் அந்த ஓவியங்களை மீண்டும் சென்று பார்த்தேன். அதன் வெளிச்சத்தில் தெரிந்த ஓவியங்களைப் பார்த்தவுடன் மனம் சற்று தளர்ந்தது – சோழர் காலத்து அற்புத ஓவியங்களின் ஒரே சான்றை கண்டுபிடிக்க எண்ணிய எனக்கு, தெரிந்தவை அவை அல்ல. ஓவியங்கள் சோழர் காலத்தை விட பல நூற்றாண்டுகள் பிந்தைய பாணியில் இருந்ததைக் கண்டு மனம் தளர்ந்தேன்.

இருந்தும், மேற்கு சுவரை அருகில் சென்று பார்வையிட்டேன், அப்போது மேல் பூச்சு உதிர்ந்த நிலையில் இருந்தது. தொட்டவுடன் பொடிப்பொடியாக விழுந்தது. ஆனால் அதன் பின்னால் இருந்த சோழர் கால அற்புத ஓவியத்தை வெளிக்காட்டியது. நெஞ்சம் படபடக்க முதல் முதலில் சோழர்களின் அற்புத ஓவியக்கலையின் ஒரே இருப்பிடத்தை கண்டுபிடித்த பெருமிதம் அடைந்தேன்.

S.K. கோவிந்தசுவாமி – தி ஹிந்து , ஏப்ரல் 11, 1931

ஹிந்து

சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன் துவங்கிய இந்த பயணம் – இன்று தான் அதன் நிறைவை அடைந்துள்ளது, நிறைவு என்று சொல்வதை விட புதிய துவக்கம் என்றே சொல்லத் தோன்றுகிறது. இந்த ஓவியங்களை இதுவரை கண்ணால் கண்டவர் சிலரே. சாமானியர்கள் இதுவரை ஆஹா ஓஹோ என்று புகழாரம் சூட்டும் வல்லுனர்களின் புகழாரத்தையும், எங்கோ இங்கும் அங்கும் மங்கிய ஒளியில் சிறு அளவில் நாளேடுகளில் வரும் படங்களை மட்டுமே பார்த்து மனதை தேற்றிக்கொண்ட காலம் மாறி, அனைவரும் கண்டு ரசிக்கும் வண்ணம் வந்துள்ளது – சோழர் கால ஓவியங்கள் நூல். தமிழ் நாடு அரசு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், முனைவர் ம. இராசேந்திரன் , ஓவிய ஒளிப்படக் கலைஞர் திரு ந. தியாகராசன், ஓவியர் திரு சந்துரு , திரு ராஜவேலு மற்றும் பலரின் அயராத உழைப்பினால் இந்தப் பொக்கிஷம் இன்று நம் கண்களின் முன்னே ஜொலிக்கிறது.

இந்த ஓவியங்களை பற்றிய நூல் பற்றி பல முறை நாளேடுகளில் படித்து ஆர்வத்துடன் பல காலம் காத்து நின்ற எனக்கு, நண்பர் திரு பத்ரி ( கிழக்கு பதிப்பகம்) முக நூலில் சிறு நூல் அறிமுகம் இட்டவுடன் ஆர்வம் தலைக்கு எட்டிவிட்டது. கூடவே பயம், அரசு வெளியீடு, உலகத்தரம் இருக்குமா, ஓவியங்களை சரியான முறையில் படம் எடுத்து இருப்பார்களா? தாள் நன்றாக இருக்குமா (ரூபாய் 500 தான் விலை!) – என்றெல்லாம் எண்ணம் சென்றது. இருந்தாலும் இரு நண்பர்களிடம் சொல்லி வைத்தேன். நண்பர் திரு. ராமன் அவர்கள் அனுப்பி வைத்தார். மூன்று வாரங்களுக்கு முன்னர் கையில் கிடைத்தது. பொதுவாக இந்த அளவு நூல் ஓரிரு நாட்களில் முடித்துவிடுவேன். எனினும் இந்த நூலில் ஒரு பக்கம் பார்க்க வாரங்கள் பல தேவைப்பட்டன. ஆஹா, என்ன அற்புதமான வடிவமைப்பு , அருமையான புகைப்படங்கள், அச்சிட்ட தாள் நல்ல உலகத்தரம், கூடவே பழம் வழுக்கி தேனில் விழுந்தவாறு ஒவ்வொரு புகைப்படத்துடன் அதன் கோட்டோவியம். ஓவியர் திரு மணியம் செல்வன் அவர்களை சென்ற வாரம் சந்திக்க நேர்ந்தது. அவரும் பார்த்து விட்டு பாராட்டினார். தனது தந்தை ஓவியர் திரு மணியம் அவர்கள் இதே சோழர் ஓவியங்களை வரைந்தார் என்றும், அவற்றையும் காட்டினார்.

அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். இது ஒரு சாம்பிள். புகழ் பெற்ற தக்ஷிணாமூர்த்தி ஓவியம்.

(சிறிய அளவு கோப்பைகளை மட்டுமே இட்டுள்ளேன். நூலில் இன்னும் அருமையாக உள்ளது!)

அடுத்து, கோட்டோவியம்.

இந்த ஓவியங்களில் இன்னும் ஆராய ஆயிரம் விஷயங்கள் உள்ளன. கண்டிப்பாக பலர் இந்த நூலின் உதவியுடன் அந்த ஆராய்ச்சிகளை செய்து முனைவர் பட்டம் பெறுவார்கள். உதாரணத்திற்கு இந்த ஓவியத்தின் இடது பக்கம் சற்று கவனியுங்கள்.

படத்தில் காட்டியுள்ளேன். அஷ்ட புஜ (எட்டு கைகள்) பைரவர் உருவம் தெரிகிறதா?

நூலின் உதவி இப்போது பாருங்கள்.

பார்த்தவுடன் பைரவர் உருவம் எங்கோ பார்த்த நினைவு. உடனே தேடி பார்த்தேன். முதலில் கிடைத்தது பெரிய கோயில் முன் வாயிலில் இருக்கும் க்ஷேத்ர பாலர் சிலை.

உருவ ஒற்றுமை இருந்தாலும், திரிசூலம் மாறி இருப்பதால் இந்த சிலை இல்லை.

அடுத்து தஞ்சை கலைக்கூடம் செப்புத் திருமேனி (படங்கள் திரு ராமன் மற்றும் என் தம்பி திரு பிரசன்னா கணேசன்)

அறிவுப்பு பலகை படி 11th C CE, திருவெண்காடு

இந்த சிலை பற்றி மேலும் படிக்க Bronzes of South India – P.R. Srinivasan (F.E. 1963, L.R. 1994 – Price Rs. 386), இந்த விவரங்கள் கிடைத்தன

வேலைப்பாட்டின் அடிப்படையில் இந்த பைரவர் சிலை நாம் முன்னர் பார்த்த ரிஷபவாகன சிலையின் காலத்தை ஒட்டி உள்ளது,

ரிஷபவாகன சிலை

ஆனால் இந்த சிலையில் பல புதிய பாணிகள் உள்ளன. இதுவரை நாம் இவற்றை சந்தித்தது இல்லை.

எட்டு கரங்களுடன் பைரவர், நேராக (வளைவுகள் இல்லாமல்) – அதாவது சாம பங்க முறையில் நிற்கிறார்.
மேலும் சிகை அலங்காரம் தலைக்கு மேலே ஒரு அலங்கார வடிவில் உள்ளது. ஒரு பக்கம் அரவமும், பிறை சந்திரனும், மறு பக்கம் மலரும் உள்ளன.

இரு காதுகளிலும் பத்ர குண்டலங்கள் உள்ளன. இந்த வடிவத்தின் ரௌத்திர குணம் தெரிய, புருவங்கள் இரண்டும் நெரிந்தவாறும், பிதுங்கிய கண்களும், கோரைப் பல்லுடனும் இருக்கிறார் பைரவர். எனினும் அந்தக் காலத்து ஸ்தபதிகள் கோர / ரௌத்திர வடிவங்களையும் அழகுடன் வடித்தனர். எனவே புருவம், கண்கள் , கோரைப் பல் எல்லாம் இருந்தும் சிலை பயங்கரமாகத் தோற்றம் அளிக்காமல் சற்று அமைதியாகவே அழகாக உள்ளது.

கழுத்தில் இருக்கும் மாலை, அதில் தொங்கும் அணிகலன், அனைத்தும் நாம் முன்னர் பார்த்த ரிஷப வாகன சிவன் சிற்பத்தை ஒட்டி உள்ளது. பின்னிய இரு இழைகளாக இருக்கிறது யக்ஞோபவீதம். ஒரு பெரிய மாலை – அதில் சிறு சிறு மண்டை ஓடுகள் – முண்ட மாலை.

கைகள் விசிறி போல விரிந்து இரு பக்கமும் உள்ளன. மிகவும் அழகாக சிலையுடன் இணையும் இவை அருமை. மேல் கையில் இருக்கும் நாக வளையல் இந்த சிலையின் தனித்தன்மை. இங்கே தான் நம் பெரிய கோயில் ஓவியத்தில் வரும் பைரவர் சிலையுடன் சிறு வித்தியாசம் தெரிகிறது.

மேல் வலது கை, மேல் இடது கை மற்றும் கீழ் இடது கை தவிர (அவை முறையே உடுக்கை, மணி மற்றும் ஓடு ஏந்தி உள்ளன) மற்றவை கடக முத்திரையில் உள்ளன.

இடுப்பில் இரு அரவங்கள் உள்ளன. மிகவும் அழகாக அவற்றை அணிகலன் போல உபயோகித்துள்ள சிற்பியின் திறமை அபாரம்.

இங்கே தான் நமக்கு துப்பு கிடைக்கிறது. ஓவியத்தில் ஒரே ஒரு பாம்பு தான் உள்ளது. அப்போது இந்த சிலை அந்த ஓவியத்தில் உள்ள சிலை அல்ல!!

நீண்ட பதிவை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இந்த நூலின் அருமை புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். கண்டிப்பாக வாங்கிப் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். இதை இவ்வவளவு அழகாக வெளியிட்டு சரித்திரத்தில் இடம் பிடித்துள்ள அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *