சேரன்மாதேவி ராமஸ்வாமி கோயில் .. ஒரு கம்பத்தில் உயிர்பிழைத்து நிற்கும் அவலம்

அளவுக்கு மீறினால் அமிர்தமும் கெடுதிதான்…ஒருவேளை நமது நாட்டின் கலை பொக்கிஷங்களின் அவல நிலைக்கும் இது தான் காரணமோ? வேறெப்படி தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நின்றும் இன்றோ நாளையோ என்று தத்தளிக்கும் சேரன்மாதேவி ராமஸ்வாமி கோயிலின் நிலையை சொல்வது? நிகரிலி சோழ விண்ணகர் – இணையற்ற விண்ணகர் என்ற பெயர்கொண்ட இந்த அற்புத ஆலயம் கூடிய விரைவில் இடிந்து விழுந்தது என்ற செய்தியை பதிப்பிக்க பல நாளேடுகள் போட்டி போடும், பலர் தங்கள் ஆதங்கத்தை ஊடகங்களில் வெளிப்படுத்துவார்கள், அரசாங்கம் ஒரு குழு அமைக்கும் ….ஒரு வாரத்திலோ ஒரு மாதத்திலோ வழக்கப்படி எல்லோரும் எல்லாம் மறந்து மீண்டும் வெற்றி நடிகனின் நூறாவது படம், நடிகையின் கிசு கிசு என்று ” இயல்பான ” வாழ்க்கைக்கு திரும்பிவிடுவோம். இழப்பு யாருக்கு ? வரும் சந்ததியினரின் சொத்து இது, சிதைய விட யார் நமக்கு உரிமையை கொடுத்தது ?

வெளியில் அனுமனின் சிலை, வாய்பொத்தி அண்ணலின் அணைப்பின் பூரிப்பில் நின்றது. எனினும் உள்ளே போனபோது வெறும் சிலை வடிவமாக பார்த்த எங்களுக்கு வெளியில் வரும்போது சிலை வேறு விதமாக பேசியது.

உள்ளே நுழைந்தவுடன் வெளி பிரஹாரம் ஒன்றும் விசேஷமாக இல்லை, பல ஆலயங்களில் பார்த்த காட்சி போல தான் இருந்தது.

உள்ளே செல்லச் செல்ல, கண் முன்னே தோன்றிய காட்சிகள் பிரமிக்க வைத்தன.


தினம் தினம் காணும் காட்சி அல்லவே – பத்தாம் நூற்றாண்டிற்கும் முந்தைய பாண்டிய விமானம் எந்த வித பின்னாளைய ” புதிப்பிப்பும் ” அல்லாமல் பார்ப்பது மிகவும் கடினம்.

நண்பர் பிரதீப் முன்னரே உதவியதால் எவைகளைப் பார்க்கவேண்டும் என்பதும், மற்றும் அங்கே ஊர் நபர்களின் உதவியும் எளிதில் கிடைத்தது.

அஷ்டாங்க விமானம் – ஒரு சிலவே தமிழ் நாட்டில் உள்ளன. பெருமாள் நின்ற கோலம், அமர்த்த கோலம், கிடந்த கோலம் என்று காட்சி அளிக்கும் மூன்று தள விமானம்.

நின்ற கோலம் மட்டுமே இன்று வழிபாட்டில் உள்ளது. அங்கே அற்புத செப்புத்திருமேனிகளை தரிசித்தோம்.

மேலே செல்கிறீர்களா என்று சற்று தயக்கத்தோடு கேள்வி வந்ததன் அர்த்தம், குறுகிய படி , மற்றும் சட சட வென படையெடுத்த வவ்வால்களின் கூட்டம் புரிய வைத்தது.

வீட்டு மாடியிலும் நவீன உணவகங்களிலும் உயரத்தே பார்த்த தோட்டம் நமக்கு இங்கே விமானத்தில் உள்ள தோட்டத்தை பார்த்து பகீர் என்றது

உள்ளே இன்னும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது

மேலே உள்ள முக்கிய தூண் உடைந்து அதன் பாரத்தை ஒரு மரத் தூண் தாங்கி நின்றது. அது உடைந்தால் என்ன நடக்குமோ ?

ஆனால் இதை அனைத்தையும் பொருட்படுத்தாமல் உள்ளே அமைதியாக தம்பதிகள் சமேத அமர்ந்திருந்த சுதையாலான சுவாமி- ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சிலைகளை கண்டு மிரண்டு தான் போனோம். ( சுதை – எளிதாக சரி செய்து விடலாம் – யாராவது உதவ முன்வர வேண்டுமே )

என்ன அருமையான வேலைப்பாடு, வண்ணம் மிக்க சுதை வடிவங்கள்.

இன்னும் ஒரு தளம் மேலே ஏறினோம். ஆஹா, இங்கு ஆனந்தமாக பள்ளிகொண்ட பெருமாள். தேவிகள் இருவர் முகத்தில் மட்டும் எதோ ஒரு கவலை தெரிந்தது ?

திரும்ப வெளியில் வரும்போது மறுபடியும் ஹனுமனை பார்க்கும்போது – ஏதாவது செய்யுங்கள் என்று தன அண்ணலுக்கு தெரியாமல் சொல்வது போல ஒரு எண்ணம். எதற்காக அப்படி …அவர் காதில் விழுந்தால் பதில் …” எனக்கு உலகமடா !!” என்றல்லவோ இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *