சிற்பக்கலையின் சிகரம் மல்லை எனும் மாமல்லபுரம் – என்பதனாலே பலரும் அதை மட்டுமே பல்லவர் கலையின் எடுத்துக்காட்டு என நினைக்கிறார்கள். மல்லையை தாண்டியும் பல்லவர் கலை தொண்டை நாட்டில் பரவி உள்ளது என்பதை எடுத்துக்காட்ட இன்று நாம் சிங்காவரம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் குடைவரைக்கு செல்கிறோம்.( செஞ்சியில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது )- குடைவரையின் காலம் ஏழாம் நூற்றாண்டு என கருதப்படுகிறது. அதை ஊர்ஜிதம் செய்ய கல்வெட்டுகள் இல்லை – எனினும் அங்கே உள்ள சிற்பத்தைக் கொண்டு அதன் காலத்தை ஒரு குத்து மதிப்பாக நிர்ணயம் செய்ய இயலுமா என்று பார்ப்போம்.
இந்த குடைவரை பற்றி இன்னும் விவரமாக படிக்க நண்பர்திரு சௌராப் அவர்களின் பதிவை கண்டிப்பாக படிக்கவும்.
ஒரு சிறு குன்றின் மேலே இந்த குடைவரை உள்ளது. குன்றின் அடிவாரத்தில் ஒரு உயர்ந்த மண்டபம் உள்ளது. அங்கிருந்து படியில் ஏறி பிற்காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோயிலுக்கு செல்ல வேண்டும். கருவறைக்கு சென்ற பின்னர் தான் – அங்கே உள்ள அர்த்த மண்டபம், தூண்கள் அனைத்தும் மலையின் முகத்தில் குடைந்து வடிவமைக்கப்பட்டு இருப்பது தெரியும். நம்மவர்கள் அந்த அருமையான பல்லவ வாயிற் காவலர்களை என்ன கோரம் செய்துள்ளனர் என்று பாருங்கள்..மேலே சுண்ணாம்பு பூசி வண்ணம் அடித்து சிதைத்து விட்டனர்.
நல்ல வேளையாக மூலவர் சயன பெருமாள் தப்பித்து விட்டார். இருபத்தி நான்கு அடி பெருமாள் – தாய் பாறையில் குடைந்த சிலை!!

இன்று வெகு சில பக்தர்கள் மட்டுமே அங்கு சென்றாலும், அவர்கள் கூட அங்கே அருகில் இருக்கும் இன்னும் ஒரு பொக்கிஷத்தை பார்ப்பதில்லை. பின்னணில் கட்டிய தாயார் மண்டபத்தில் உள்ள ஒரு சிறு ஜன்னல் வழியாக மட்டுமே அந்த அற்புத சிற்பத்தை பார்க்க முடியும். பல்லவர் கால கொற்றவை சிற்பம்.

திரிபங்கத்தில் கொற்றவை – சிங்காவரம்.
அருமையான சிற்பம். இங்கே நாம் கவனிக்க வேண்டியது கொற்றவையின் அங்கம் எப்படி திரிபங்கத்தில் இருப்பது. அப்படி நிற்கும் பொது ஒரு காலை மடக்க வேண்டும் – அதனால் அதன் அடியில் எருதான மகிஷனின் வெட்டுண்ட தலையை கொண்டுவரும் யுக்தி அருமை. இப்படி ஒரு காலை உயர்த்தி இருப்பதற்கு ஊர்த்வஜர் என்று பெயர். அதே போல வளையும் அந்த இடுப்பின் மேலே இடது கை வருவது – எல்லாமே சிற்பத்தின் அழகை கூட்டும் யுக்திகள். சக்கரம் பிடித்துள்ள பாணி – பிரயோக சக்கரம் இதன் காலத்தை பல்லவர் காலம் என்று நமக்கு உணர்த்துகிறது. இருபுறமும் பக்தர்கள் உள்ளனர். நல்ல வேளையாக வலது புறம் இருப்பவர் தன கையை மட்டுமே வெட்டும் வண்ணம் உள்ளது ( நவ கண்டம் ) – தலையை வெட்டுவது போல இல்லை. இடது புறம் இருப்பவர் கையில் பூவை ஏந்தி இருப்பது போல உள்ளது.
இங்கே பல்லவர் கால கல்வெட்டுகள் இல்லை. இருந்தாலும் சிற்பங்களை கொண்டு இதன் காலத்தை குத்து மதிப்பாக நிர்ணயம் செய்ய முடியும். இதற்கு நமக்கு ஏற்கனவே அறிமுகம் ஆன மல்லை கொற்றவை வடிவங்களை சிங்காவரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
திரௌபதி ரத துர்க்கை – சாம பங்கத்தில் நிற்பது கண்டிப்பாக சிங்காவரத்தை விட காலத்தால் முன்னதாக இருக்கவேண்டும். அதே போல வராஹ மண்டபம் சிறப்பும் அதை விட முன்னது. இடது கை எப்படி இடுப்பை தாண்டி தொடை அருகில் ( கடி ஹஸ்தம்!) இருக்கிறது பாருங்கள்.

இந்த இரு வடிவங்களை பார்த்த பிறகு நாம் ஆதி வராஹா சிற்ப்பத்தை பார்ப்போம். திரிபங்கம் நன்றாகவே தெரிகிறது. மேலும் சிற்ப வடிவத்திற்கு கூடுதல் அழகு சேர்க்க கால்கள் சற்றே நீண்டு வடிவமைக்கட்டுள்ளன. இதனால் இந்த வடிவம் சிங்காவரத்தை விட சற்று பிந்தைய காலம் என்று குறிக்க முடிகிறது.
அப்படி பார்த்தால் இந்த சிற்பங்களை திரௌபதி ரதம் / வராஹ மண்டபம் / சிங்காவரம் / ஆதி வராஹ மண்டபம் என்று வரிசைப் படுத்த முடியும்.
கண்டிப்பாக பலரும் சிங்காவரம் சென்று இந்த அற்புத சிற்பங்களை கண்டு ரசிக்க வேண்டும்.
படங்கள் : நன்றி திரு அசோக் கிருஷ்ணசுவாமி , திரு அர்விந்த் வெங்கடராமன் மற்றும் திரு . சௌரப் சக்சேனா