நண்பர் ஒருவர் பல சிவ பிட்சாண்டவன் சிற்பங்கள் இருக்க, ஒரு சில சிற்பங்களையே ஏன் இடுகிறீர்கள் என்று கேட்டார் . மிகவும் நல்ல கேள்வி. திரு திவாகர் அவர்களின் தமிழும் அதனுள் இருந்த பல கருத்துகளும் சரி வர சென்றடையவே – அவர்களது மடலில் இட்ட சிற்பங்களை பற்றி மேலும் எழுதவில்லை.
இதோ அதன் தொடர்ச்சி. கதையை கேட்டீர்கள் அல்லவா, இப்போது அந்த மகா சிற்பி சிவனை மட்டும் செதுக்கவில்லை, அந்த கதையையே செதுக்கி உள்ள அருமையை பாருங்கள்.
காஞ்சி கைலாசநாத கோவில். ராஜ சிம்ஹன் நிறுவிய அற்புத கோயில், தஞ்சை பெரியகோவிலை நிறுவிய ராஜ ராஜனே பெரிய கற்றளி என்று வியந்த கோயில். அங்கே இந்த அற்புத சிவ பிட்சாண்டவனின் வடிவம் – ராஜ சிம்ஹனின் பாயும் சிங்கங்களின் நடுவில் கம்பீரமாக நிற்கும் காட்சி. சிற்பத்தில் ஈசன் தன் இடது கை விரலை நீட்டி நம்மை மேல பார்க்க சொல்வது போல உள்ளது. மேலே என்ன இருக்கிறது. ஆஹா, ஆடல் வல்லானின் அற்புத ஆட்டம். ( இதே வடிவம் நாம் மல்லை ஓலக்கநெஸ்வர கோயிலிலும் பார்த்தோம் !!)
சரி சிற்பத்திற்கு மீண்டும் வருவோம். கட்டழகு வாலிபன் அல்லவா – உணர்த்த என்ன ஒரு கட்டுடல், முகத்தில் விஷம சிரிப்பு , ஒரு காலை அழகாய் மடித்து, கால்களில் இருக்கும் பாத ரக்ஷைகள் – அதிலும் ஒரு பாதம் சற்றே தூக்கியவாறு, பரந்த விரிந்த தோள்கள் , வலது கையை என்ன ஒரு யதார்த்தமாக தண்டத்தின் மீது இட்டிருக்கும் பாங்கு , அதில் ஒட்டிக்கொண்டு இருக்கும் திரு ஓடு.. அருமையான சித்தரிப்பு. அதனுடன் நிறுத்தவில்லை நம் சிற்பி.
அழகு வாலிபனை கண்டு சொக்கி அவன் காலில் விழும் இரு ரிஷி பத்தினிமார்கள், அவர்களுக்கு மேலே இதை கண்டு சினம் கொண்டு ஈசனை தாக்க கை தூக்கும் ரிஷி. ஒரு கதா பத்திரத்தை மட்டும் சித்தரிக்க வில்லை இந்த சிற்பம், , ஒரு கதையையே சித்தரிக்கிறது.
சரி, திருமுறையில் இந்த காட்சி வருகிறதா ? நான்காம் திருமுறை
கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும் நாகவீச் சரவ னாரே.
திருநாகேச்சுரத்துப் பெருமான் கொக்கரை, தாளம், வீணை எனும் இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்தும் இளைய ராய், சங்கு மணியை இடையில் அணிபவராய், ஐந்து தலைகளை உடைய பாம்பினை ஆட்டுபவராய், திருவக்கரைத் திருத்தலத்தில் உகந்தருளியிருப்பவராய், பெண்களை மயக்கும் திகம்பரவடிவினராய் உள்ளார்.
186518721868
சரி, இப்போது மோகினி வடிவம் – காஞ்சி தேவராஜசுவாமி கோவில் தூண் சிற்பம். அங்கும் சிற்பி தன் கலை நுணுக்கத்தை காட்டி உள்ளான்.உற்றுப் பாருங்கள் – மோகினியின் மோகனப் புன்னகையில் மயங்கி ,அவள் ஊற்றிக் கொடுக்கும் பானத்தை இரு கரம் கூப்பி அருந்தும் ரிஷிகளின் வேடிக்கையான காட்சியையும் காட்டிய சிற்பியின் கற்பனை , கலைத் திறன் அபாரம்.
சரி, திருமுறையில் இந்த காட்சி வருகிறதா ?இரண்டாம் திருமுறை
விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை
திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்.
புறம்பயம் அமர்ந்த பெருமானே! எல்லாமாக விரிந்து நின்றாய்: நுண்ணியனாகக் குவிந்துள்ளாய்: ஊழிக் காலத்தில் விழுங்கிய உயிர்களை வினைப்போகத்திற்காக மீண்டும் உடலோடு உலவவிட்டாய்: உன் நிலையை விடுத்துப் பல்வகை வடிவங்கள் எடுத்துத் திரிந்தாய்.
குருந்தொசித்த திருமால் மோகினியாக வர அவ ரோடு கூடிப் பிரிந்தும் புணர்ந்தும் விளையாடினாய்: பிணம்புகும் சுடு காட்டை விரும்பிமகிழ்ந்தாய்.