மல்லையில் பிள்ளையார் சிற்பங்கள் இல்லை , இங்கு தவிர …

அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நண்பர் ஒருவர் நூறு இடுகைகள் ஆகியும் பிள்ளையார் பற்றி இன்னும் ஒன்று கூட இல்லையே என்றார். சரி, இன்று பிள்ளையார் பற்றி பார்ப்போம். வெறும் சிற்பம் மட்டும் அல்ல – தமிழ் நாட்டில் குறிப்பாக பல்லவ காலத்தில் பிள்ளையார் வழி பாடு பற்றி ஒரு அலசல்.

இது மல்லையின் பல புதிர்களில் ஒன்று – ஐம்பதுக்கும் மேலான சோமாஸ்கந்தர் ( உமா ஸ்கந்தா சகிதர் ) சிற்பங்கள் மல்லையில் இருந்தும் ( சரி அதை பற்றியும் ஒரு தனி மடல் எழுத வேண்டும் ) – எங்கும் ஆனை முகனைக் காணவில்லையே?

ஒரு நிமிடம் – அதற்குள் உங்களில் பலர் கணேஷ ரதத்தை பற்றி மறுமொழி அளிக்க சென்றுவிடாதீர்கள். சற்று பொறுங்கள் – அந்த ரதம் செதுக்கப்பட்ட போது அது சிவ ஆலயம் – எப்படி அது மகனுக்கு வந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். ஒன்றொன்றாய் பார்ப்போம்.

பிள்ளையார் பட்டி குடவரை கோயில்களை விட்டு விட்டு ( அவை பற்றி பின்னர் பார்ப்போம் ) – தென்னகத்தில் முதல் முதல் பிள்ளையார் வழிபாடு பல்லவர் காலத்தில் துவங்குகிறது. அமரர் கல்கியின் சிவகாமியின் சபதத்தை படித்த அனைவருக்கும் இது நினைவிற்கு வரும். நரசிம்ம பல்லவன் பன்னிரண்டு ஆண்டுகள் படை திரட்டி தன் தந்தையை தோற்கடித்த புலிகேசியின் வாதாபி மீது படை எடுக்கிறான் – அதில் அவன் தளபதி பரஞ்சோதி அபாரமாக போர் புரிந்து ( 642 AD) புலிகேசியை வென்று வாதாபியை எரிக்கின்றனர். அப்போது வாதாபி நகரின் வாயிலில் இருந்த பிள்ளையார் சிலையை கண்டு பரஞ்சோதி அவரிடத்தில் வெற்றிக்கு வேண்டி – வெற்றி கண்ட பின் – அச்சிலைய எடுத்துக்கொண்டு தென்னகம் திரும்பி சிறுத்தொண்டராக மாறி – சிறுத்தொண்டர் என்ற நாயன்மார் ஆகிறார். அப்படி தென்னகம் வந்தவர் தான் வாதாபி பிள்ளையார் என்று ஒரு கருத்து உள்ளது.. .

ஆனால் இப்போது ஞானசம்பந்தர் பாடல் ஒன்றை பார்ப்போம்

சம்பந்தர் பாடல்

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

குறிப்புரை :
உமாதேவி பெண்யானையின் வடிவுகொள்ள, ஆண் யானையின் வடிவத்தைத் தாம்கொண்டு விநாயகப் பெருமான் அவதரிக்கத் திருவுள்ளம்பற்றிய இறைவன் வலிவலநகரான் என்கின்றது. பிடி – பெண்யானை. கரி – ஆண்யானை. வடிகொடு – வடிவத்தைக் கொண்டு. கடி கணபதி – தெய்வத்தன்மையுடைய விநாயகப் பெருமான். கொடைவடிவினர் – வள்ளற் பெருமக்கள்.

அப்பர் பாடல்

பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே
கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறும்
வலமேந் திரண்டு சுடரும் வான்கயி லாய மலையும்
நலமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை

பொழிப்புரை :
பலப்பலவிருப்பங்களை உடையவராய் அவற்றைச் செயற்படுத்தத்துடித்து விரையும் மக்களின் உள்ளத்தில் கலந்து பிறழச் செய்யும் கணபதியாகிய ஆண்யானையையும், இருளைப்போக்கும் வலிமை மிக்க சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு ஒளிகளையும், மேம்பட்ட கயிலை மலையையும், நன்மைகள் நிறைந்த கெடில நதித் தீர்த்தத்தையும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை.

அப்படி என்றால் அவர்கள் காலத்திலேயே ஆனைமுகனின் வழிபாடு மற்றும் அவன் உமை ஈசனின் மைந்தன் என்றவை நிலை பெற்று விட்டன என்பதை அறிகிறோம். அப்படி என்றால் ?

சரி, மீண்டும் கணேஷ ரதம் வருவோம். ஆம், அதில் இருப்பது பிள்ளையார் விக்ரகம் தான். ஆனால் ( திரு சுவாமிநாதன் ஐயா அவர்களின் உதவிக்கு நன்றி ) . செம்பெர்ஸ் என்று ஆங்கிலேயர் மல்லை பற்றி விட்டு சென்ற குறிப்பு 1788 AD.

முதலில் கணேஷ ரதத்தில் ஒரு சிவ லிங்கமே இருந்தது, அதை மெட்ராஸ் ஆளுனர் ஹோபெர்ட் பிரபு எடுத்து சென்று விட்டார். அப்போது அதற்காக இருபது பாகொட மானியம் கிராமவாசிகளுக்கு அளித்தார். அவருக்கு அடுத்து வந்த ஆளுனர் கிளைவ் பிரபு நந்தியை எடுத்து சென்றார்

சரி, அப்போது பிள்ளையார் எப்படி வந்தார். அதற்க்கு திரு லக்ஸ்மையா அவர்களது குறிப்பு 1803 AD.

லிங்கத்தை XXXXX எடுத்து சென்றதால் , மக்கள் அருகில் இருந்த பிள்ளையாரை இந்த கோயிலினுள் வைத்தனர்

சரி, இன்னும் சிலருக்கு சந்தேகம் இருந்தால் – கணேஷ ரதத்தில் உள்ள கல்வெட்டை படிப்போம்.

நிறைய வரிகளைக் கொண்ட இந்த சமஸ்க்ருத கல்வெட்டின் ஐந்தாவது வரி ” சாம்பு (ஈசன் )னின் கோயிலான இதை நிறுவியவன் அத்யந்தகாமன் என்ற பட்டம் உள்ள அரசன், அவன் தனது எதிர் நாடுகளின் அரசர்களை வெற்றி கண்டு ரணஜெயன் என்ற பெயர் எடுத்தவன் “ அதிலேயே அந்த ஆலயத்தின் பெயரும் உள்ளது : “அத்யந்தகாம பள்ளவேஷ்வர க்ரஹ்ம்” (“பல்லவ அரசன் அத்யந்தகாமனின் சிவ ஆலயம் “).

அப்படி என்றால் இது நம்மை எங்கு இட்டு செல்கிறது – மல்லையில் உள்ள அனைத்து குடவரை கோயில்கள், ரதங்கள் , தனி சிற்பங்கள் – எதிலும் விநாயகர் வடிவம் இல்லை.

சரி, மல்லையை நிறுவிய பல்லவ மன்னன் யார் என்றே பல அறிஞர்களிடத்தில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. எனினும் மல்லை கடற்கரை கோயில் ராஜசிம்ம பல்லவனுடையது. நாம் முன்னரே மல்லை கடற்கரை கோயில் பற்றி பார்த்தோம்

மல்லை கடற்கரை கோயில்

இப்போது உங்கள் கவனிப்புத் திறனுக்கு மீண்டும் ஒரு போட்டி – இந்த படங்களில் ஆனை முகனைத் தேடுங்கள்

கண்டு பிடித்தீர்களா – அவருடன் பல பூத கணங்களும் உள்ளனர் – அதாவது பிள்ளையார் என்று தனி இடம் அவருக்கு இல்லை – இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது ?

சிற்பம், வரலாறு என்ற துறைகளில் உங்கள் ஆர்வத்தைத் தூண்டுதலே இந்த தளத்தின் நோக்கம்- எனவே உங்கள் தேடலை துவக்கி – விடை அளிக்க நீங்கள் முயற்சி செய்யுங்கள்.

புதிய வருடம் துவங்கும் இந்த நல்ல தினத்தில் மல்லை கடற்கரைக் கோயில் விநாயகனின் சிற்பங்களுடன் உங்களை வாழ்த்தி விடை பெறுகிறோம். இந்த வருடம் உங்களுக்கு ஒரு நிறைவைத் தர அவனை வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *