நண்பர்கள் செய்த சிறந்த புலனாய்வு மூலம் இன்று நமக்கு இவை தெரிய வந்துள்ளன. அவர்கள் எடுத்துக்கொடுத்த படங்களை கொண்டு இந்த ஆய்வு. இதை படித்து முடித்தவுடன் இன்னும் பல கேள்விகள் எழுகின்றன. அப்படி எழவேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.
மீண்டும் காவல் துறை வெளியிட்ட படங்களைப் பார்ப்போம். இரண்டு நடராஜர் வடிவங்கள் காணாமல் போன பட்டியலில் உள்ளன. ஒன்று சுத்தமல்லி மற்றொன்று ஸ்ரிபுரந்தன்.
இதோ சுத்தமல்லி

இது ஸ்ரிபுரந்தன்
இரண்டு நடராஜர் வடிவங்களும் கிட்ட தட்ட ஒரே போல இருந்தாலும் – ஆடல் அரசனை சுற்றி இருக்கும் பிரபாவளியை பார்த்தாலே இரண்டு வடிவங்களுக்கும் உள்ள வேற்றுமை தெரிகிறது.
இப்போது கடந்த சில மாதங்களாக சர்ச்சையில் சிக்கி உள்ள ஆஸ்திரேலியா நடராஜர் இவற்றில் ஒன்றை போலவே – ஒத்து இருப்பதாக தகவல் வந்துள்ளன.
மீண்டும் பிரபாவளி மூலம் இதனை ஸ்ரிபுரந்தன் வடிவத்துடன் தான் ஒத்து பார்க்க வேண்டும் என்பது தெரிகிறது.
அதே போல நண்பர்கள் வெளியிட்ட பதிவில், எதோ ஒரு இந்திய அறையில் இதே போன்ற ஒரு சிலையை படம் பிடித்து சிலை திருடர்கள் 2006 ஆம் ஆண்டு அடுத்து கபூருக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
அதே போல ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட் இந்த படத்தை தனது பட்டியலில் இந்த சிலையை விற்கும் பொது இட்டுள்ளது.

நாம் பல முறை கூறிய ஒன்று, நடராஜர் வடிவம் பற்றிய சர்ச்சை கிளம்பியவுடன் – தமிழகத்தில் நூற்றுக்கணக்கான நடராஜர் சிலைகள் உள்ளன என்றும் அவை பார்ப்பதற்கு ஒன்று போலவே இருக்கும். அதனால் குழம்ப வேண்டாம் என்று ஒரு வாதம் எழுந்துள்ளது. உண்மை தான், எனினும் மேலோட்ட பார்வைக்கு மட்டுமே அந்த வாதம் சரி. ஒரு முறை அனைத்துப் படங்களையும் பொறுமையாக பார்த்தால் சாமானியருக்கும் விளங்கும் – ஏன் என்றால் இவை லாஸ்ட் ’வாக்ஸ்’ முறை கொண்டு செய்யப்பட்டவை – ஒவ்வொன்றும் தனக்கே உரிய ஒரு தனித்தன்மையுடன் இருக்கும்.
இந்த சிலையின் தனித்தன்மை என்ன தெரியுமா. தூக்கிய திருவடி அருகில் உள்ள தீப் பிழம்பை பாருங்கள் – அடியில் இருந்து மூன்றாம் பிழம்பு. உடைந்து இருப்பது தெரிகிறதா ? எல்லா படங்களையும் பாருங்கள்.
ஆடல் வல்லானின் கை இதனை நமக்கு சுட்டிக்காட்டுவது போலவே இருக்கிறது.
இதனை உறுதிப் படுத்த சில நிமிடங்கள் போதும் – நல்ல படம் இருந்தால் !!!
ஆனால் ஒன்று நிச்சயம் இது சுத்தமல்லி சிலை இல்லை. ஸ்ரிபுரந்தன் சிலை – இந்த சிலையிலும் அடித்தள பீடத்தை அகற்றி உள்ளனர்.
அப்படி இருக்க – சுத்தமல்லி நடராஜர் எங்கே?
அதைத் தேட இணையத்தில் இது கிடைத்தது – இன்னும் ஒரு நடராஜர் சிலை. ஆர்ட் ஆஃப் பாஸ்ட் பட்டியல் மார்ச் 2011.
மீண்டும் ப்ரபாவளி கொண்டு இது சுத்தமல்லி சிலை இல்லை என்று அறியலாம். அப்போது இது எந்த ஆலயத்தில் இருந்து திருடப்பட்டது? சுத்தமல்லி ஸ்ரிபுரந்தன் போல இன்னும் சில பல கோயில்களில் இந்த கூட்டம் தம் கைவரிசையை காட்டியுள்ளார்களா? திருடு போய்விட்டது என்று கூட தெரியாமல் நாம் குருடர்களாக உள்ளோமா ? இந்த கேள்விகளுக்கு யார் பதில் தேடுவார்கள்?