சென்ற பதிவில் ஸ்ரிபுரந்தன் நடராஜ வடிவத்தை ஆராய்ந்து அதற்கும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் வடிவத்துக்கும் இடையே ஒற்றுமைகளை பட்டியலிட்டோம். அதில் பல கேள்விகள் எழுந்தன. அவற்றில் ஒன்று சுத்தமல்லி நடராஜர் சிலை பற்றி. இதோ காவல் துறை பட்டியலில் இருக்கும் அந்த சிலை பற்றியே இன்றைய பதிவு.
சுத்தமல்லி நடராஜர் – பழைய படம் – ஆலயத்தில் இருந்தபோது. .

இந்த சிலை மிகவும் முக்கியமான சிலை – இந்த சிலை கொடுத்த துப்பை வைத்துத் தான் இந்த சிலை திருட்டு கும்பல் பிடிபட்டனர். இதனை பற்றிய இந்து பதிவு இதோ.
நமது காவல் துறை திருடு போன சிலைகளின் படங்கள் கொண்ட பட்டியலை 2009 ஆம் ஆண்டு தனது இணைய தலத்தில் வெளியிட்டது. ( அதாவது திருடு போன நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் !). எனினும் வருத்தம் என்ன வென்றால் கூகுளார் உதவியுடன் ஒரு சிறு இனைய தேடலில் ஆர்ட் ஆஃப் பாஸ்ட் 2010 காடலாக் கிடைக்கிறது. அதில் ….
அதில் ஆறாவதாக வரும் சிலை..
என்ன அருமையான சிலை – அதுவும் படங்கள் பிரமாதம் !!
காவல் துறை சிலை திருட்டை பதிவு செய்து வழுக்கு பதிவு செய்து, படங்களை இணையத்தில் பதிவேற்றி – ஒரு ஆண்டுக்கு பின்னர் …இப்படி அதே சிலையை தங்கள் பட்டியலில் படங்கள் போட்டு பகிரங்கமாக விற்க முயற்சி??!
எப்படி இது அதே சிலை என்று சொல்ல முடியும் என்று கேட்கிறீர்களா ? மீண்டும் அதே தான் – ஒவ்வொரு சிலைக்கும் – லாஸ்ட் வாக்ஸ் ப்ரோஸஸ் தரும் தனித்தன்மை.
சென்ற பதிவில் ஸ்ரிபுரந்தன் சிலையை போலவே இங்கும் ஆடும் அரசனை சுற்றி இருக்கும் பிரபாவளியை கொண்டு இரு படங்களை ஒற்றுப் பார்த்தாலே போதும். இங்கே பிரபாவளி இன்னும் அழகு – இரட்டை வளையங்கள் கொண்டு உள்ளது – அவற்றை இணைக்கும் பாணி இரு வளையங்களுக்கும் இடையே துவாரங்களை ஏற்படுத்துகிறது. அவையே நமக்கு இன்று உதவுகின்றன.
அதே போல ப்ரபாவளியின் நடு பாகத்தில் ஒரு சிறு டிசைன் / சொட்டை போல இருக்கிறது.

மகேசன் ஆட விரிசடை வளைவுகளை பல அழகிய அணிகள் கொண்டு சிற்பி அலங்கரித்து இருப்பது அருமை. நம்மிடத்தே மட்டும் நல்ல படம் இருந்தால் !! இருந்தும் ஒப்பிட்டு பாருங்கள் – ஒற்றுமை தெரிகிறதா?

அதே போல ஆடல் அரசன் சுயன்று ஆட மேல் துண்டு விலகுகிறது , மேலும் சுயற்சியில் அது அதன்மீதே முறுக்கியவாறு அமைத்துள்ள அழகு அபாரம்.

இவற்றை கொண்டு இரண்டும் ஒரே சிலை என்று உறுதி பட சொல்லிவிடலாம்.

இன்னும் ஒரு அதாரம் உள்ளது. அதுதான் திருமேனியின் அடி பீடத்தில் இருக்கும் தமிழ் எழுத்துக்கள். பழந்தமிழில் சுதவல்லி ( மல்லி என்று இல்லை – வள்ளி என்று இருக்கிறது ). எனினும் பழைய படத்தில் இந்த எழுத்துக்கள் இல்லாதாதால் இதனை ஆதாரமாக கருத இயலாது. எனினும் இது நமக்கு வேறு ஒரு விதத்தில் உதவுகிறது. ஸ்ரிபுரந்தன் சிலைகள் 2006 இல் விற்று போயின…எனினும் சுத்தமல்லி சிலைகள் 2011 – 2012 வரை விற்க வில்லை – அப்போது வாங்க வந்தார் பலர் இதனை பார்த்திருக்க வேண்டும் – இந்த எழுத்துக்கள் இருப்பதால் நமக்கு எதற்கு வம்பு என்று விட்டு விட்டனரா?
இது தான் காரணம் என்பதற்கு அடுத்த பதிவில் காரணங்களை தருகிறேன். இந்த பதிவிலயே அடுத்த பதிவின் ஆரம்பம் இருக்கிறது…பட்டியலில் .” This is an extremely rare and important matched pair of the Shiva Nataraja and his consort, Uma Parameshvari. The divine couple have not only survived together as an original set, but also remain in complete states, with their flaming prabhas and lotus pedestals.” என்று உள்ளது.
எங்கு இருந்த உமா பரமேஸ்வரி இது …தேடல் தொடரும்.