இன்றைக்கு மீண்டும் திருப்பரங்குன்றம் பயணிக்கிறோம். தன்மையால் இயற்கையில் எதிரிகள் – இயற்கையான இறை . இருந்தும் இங்கோ ??? நல்ல வேளை கோயில் அதிகாரிகள் தங்கள் அறிவுக் கூர்மையை ( மொக்கையை ) இங்கே காட்டவில்லை. வெறுமனே சிவன், திருவிளையாடல் புராணம் என்று விட்டு விட்டனர். ( முந்தைய சிற்பத்தில் சிவனை வராஹி என்று போட்டது போல அல்லாமல் ). விலைமதிப்பில்லா தூணில் துளையிட்டு இரும்பு தடுப்பையும், கயிறு கொண்டு கட்டியும் – இப்படி அவல நிலையில் நமது கலைச் செல்வங்கள் படும் பாடு – என்று மீளுமோ இவற்றின் அவல நிலை. .
மிகவும் அரிய சிற்பம். இது போல வேறு எங்கும் இதுவரை இந்த காட்சியை சிற்பத்தில் பார்த்தது இல்லை. சிவனின் அழகியதோர் திருவிளையாடலை விளக்கும் சிற்பம். வேம்பத்தூர் நம்பி பாடிய திருவாலவாய் உடையார் திருவிளையாடற் புராணத்தில் வரும் காட்சி.
முதலில் இது சிவன் என்று எப்படி தெரிந்துக் கொள்வது. மிகவும் சுலபம் – கையில் உள்ள அறிகுறிகளை பாருங்கள்.
மான், மழு – இதை எப்படி பார்க்காமல் போக முடியும் ( கோவில் அதிகாரி யாக இருந்தால் ஒழிய – இதோ பாருங்கள் சிவன் பன்றிக்கு பால் கொடுக்கும் காட்சியை வராஹி என்று போட்டுள்ளனர்).
சரி, அப்படி என்ன இந்த சிற்பத்தில் தனித் தன்மை. இன்னொரு கையில் என்னென்ன இருக்கின்றன என்பதை உற்றுப் பாருங்கள்.
புலி போல உள்ளதே. சிவன் அதை ஒரு குழ்ந்தை போல மடியில் வைத்திருக்கும் வண்ணம் அருமை.
சரி, இது அந்தி கையில் என்ன ? ஆஹா !!
ஆம் – ஒரு மான் குட்டி. அதுவும் புலியின் முலையில் பால் குடிக்கும் மான் குட்டி.
வேம்பத்தூர் நம்பி பாடிய திருவாலவாய் உடையார் திருவிளையாடற் புராணத்தில், புலிமுலை புல்வாய்க்கு அருளின திருவிளையாடல் (53) என்ற பகுதியில் மேலே கூறிய கதை இடம் பெறுகின்றது. குட்டி ஈன்ற மான், நீர் வேட்கை மிகுதியால் நீர்நிலை ஒன்றிற்கு வந்தது. அங்கே மறைந்திருந்த வேடன் ஒருவன் அந்த மானைக் கொன்று வீழ்த்தினான். மான் இறக்கும்போது தன் பச்சிளங்குட்டியை நினைத்தவாறே உயிர் நீத்தது. அதன் மீது இரக்கம் கொண்ட ஆலவாயுடையார், தாயை இழந்த மான்குட்டிக்குப் பாலூட்ட, பக்கத்தில் இருந்த புலி ஒன்றினை ஏவினார்.
எட்டாம் திருமுறை
புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி
நாம் இது வரை சிவனின் பல கோலங்களை பார்த்துள்ளோம். பொதுவாக அழிக்கும் கடவுள் என்று நாம் பார்க்கும் ஈசன், இங்கே இரு தூண்களிலும் – தாய்மை உள்ளம் பொருந்திய அன்பின் ஸ்வரூபமாக காட்சி தருவது அருமை. ஒரு புறம் தானே தாயாக மாறி பன்றிக்குட்டிகளுக்கு பால் ஊட்டுவது, இன்னொரு புறம் இரை என்று பார்க்கும் மிருகத்தின் தன்மையை மாற்றி இறையுள்ளத்தோடு அன்புத் தாயாக மாற்றும் காட்சி.