ஆறு கோடிக்கு விற்கப்பட்ட காஞ்சிபுரம் கைலாசநாதர் கௌரி !பாகம் 2

இந்த சிலையின் வரலாறை 1944 வரை தேடி கிடைத்த தகவல்களை கொண்டு படைத்த முந்தைய பதிவை பார்த்திருப்பீர்கள். “பெரிய, முக்கியமான பார்வதி செப்புச் சிலை, தென்னிந்திய சோழர் காலம், பதினோராம் நூற்றாண்டு”. இப்படித்தான் அந்த பிரபலாமான ஏல நிறுவனம் ஏலம் விடும் சிலைக்கு தலைப்பு கொடுக்கிறது. விலை பட்டியல் இந்த சிலைக்கு ஐந்து கோடி முதல் ஏழு கோடி என்று விலை நிர்ணயம் செய்து ஏலத்தில் ஆறு கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.


அதே போல் இந்த சிலை பற்றி தேடியபோது 1944 ஆண்டு வெளிவந்த இந்த குறிப்பை பார்த்தோம்

Gauri
A Southern Bronze
By K. B. IYER
We had seen the reference in the 1944 article Gauri, A Southern Bronze, By K. B. IYER – where he specifically mentions “One of such pieces is Gauri from the Kailasanath temple, Conjeeveram, now in the collection of Ramgopal, the well-known dancer.”

இன்று இன்னும் தேடி 1915 ஆம் ஆண்டு வெளிவந்த நூலில் இருக்கும் தகவல்களை கொண்டு இந்த சிலை காஞ்சி கைலாசநாதர் கோயில் சிலைதான் என்பதை நிரூபணம் செய்கிறோம். இந்த நூல் திரு O.C. Ganguly’s எழுதிய South Indian Bronzes. அவர் அந்நாளில் மிகவும் பிரபலமானவர் – நம் நாட்டு கலைச்செல்வங்களை பற்றி பல நூல்களை எழுதியும் தொகுத்தும் உள்ளார்.

அவர் இந்த சிலையை பற்றி அந்த நூலில் கொடுக்கும் தகவல்கள் இவ்வாறு



இதில் இருந்து நமக்கு தெளிவாக தெரிவது – 1915 வரை இந்த சிலை காஞ்சி கைலாசநாதர் கோயிலில் தான் இருந்துள்ளது. இடையில் 1915 – 1944 எப்படியோ புகழ் பெற்ற நடன கலைஞர் ராம் கோபால் இடத்தில சென்று விட்டது.

இந்த பதிவை கொண்டு சிலையை மீட்டு வர முடியாது என்றாலும் – எதோ ஊரு பேரு தெரியாத அனாதையை போல ஏலம் விடாமல் – காஞ்சி கைலாசநாதர் கோயில் கௌரி என்ற பெருமையுடன் விலை போவாளே !


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

மறைக்கப்படும் வரலாறு – ஆறு கோடிக்கு விற்கப்படும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கௌரி !

பெரிய, முக்கியமான பார்வதி செப்புச் சிலை, தென்னிந்திய சோழர் காலம், பதினோராம் நூற்றாண்டு

இப்படித்தான் அந்த பிரபலாமான ஏல நிறுவனம் ஏலம் விடும் சிலைக்கு தலைப்பு கொடுக்கிறது. விலை பட்டியல் இந்த சிலைக்கு ஐந்து கோடி முதல் ஏழு கோடி என்று விலை நிர்ணயம் செய்து ஏலத்தில் ஆறு கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

விற்பதற்கு ஏதுவாக ஒரு காணொளியும் உள்ளது.

பொதுவாக இது போன்ற பெரிய அளவில் இருக்கும் சோழர் சிலைகளின் காலம் பதினோராம் நூற்றாண்டு – அதாவது செம்பியன் மாதேவி காலத்திற்கு பின் ராஜராஜர் மற்றும் ராஜேந்திர சோழர் காலம்.

இந்த சிலை எப்படி ஏலத்திற்கு வந்தது என்று சரியான விரிவான தகவல்கள் இல்லை.

Provenance
Collection of Ariane Dandois, London, acquired in Geneva, 16 March 1977

Literature

C. Vogel, “Global Treasure Trove,” New York Times Magazine, 1 March 1987, pp. 62-66

இந்த குறிப்பைத் தேடி பார்த்தால் இந்த சிலை பற்றி ஒன்றுமே இல்லை.

இதன் படி இந்த சிலையை முன்னர் வைத்திருந்த பெண்மணி ஒரு பெரிய அமெரிக்க லக்ஷாதிபதியின் ” ” என்று தெரிகிறது.

அப்படி இருக்க இந்த சிலை பற்றி தேடியபோது 1944 ஆண்டு வெளிவந்த இந்த குறிப்பு கிடைத்தது.

Gauri
A Southern Bronze
By K. B. IYER

One of such pieces is Gauri from the Kailasanath temple, Conjeeveram, now in the collection of Ramgopal, the well-known dancer.

Both tradition and stylistic features distinguish it as an early Chola work of probably the 10th century

Gauri is the Gracious Mother of the Universe, the Better-half of Siva, half-female half-male (Ardha-nariswara). In love and in devotion unexcelled even among the gods, She is the supreme arche-type of conjugal felicity. When love’s darts bruise young maidens’ hearts, their secret prayers are turned to her. It is she who protects them from every shoal and storm on the unchartered sea of married life. Just as Siva as Nata-raja symbolises the cosmic law of rhythm, Parvati in her aspect as Gauri symbolises the universal and eternal female instinct of yearning devotion, aspiration and concern for the male. Isn’t this figure instinct with that poignant feeling which makes the contemplation of beauty a haunting delight?

மேலோட்டமாகவே இரு சிலைகளும் ஒன்று போல இருக்கின்றன. இன்னும் கூர்ந்து பார்ப்போம்.




குறிப்பில் இருக்கும் அளவுகள் ஒத்து போகவில்லை என்றாலும்…

1944 குறிப்பு கொடுக்கும் அளவு ”Exclusive of the pedestal which is 9 inches, the figure is 26 inches in height” ஆனால் ஏல கடையில் இவ்வாறு உள்ளது ”33 1/8 in. (84.2 cm.) high ” – ஆனால் சிலையை ஒப்பிட்டு பார்க்கும் பொது இரண்டும் ஒன்றே என்று தெளிவாக தெரிகிறது.

இங்கே நாம் மனதில் கொள்ள வேண்டியது – காஞ்சி கைலாசநாதர் கோவிலுக்கு உடையார் ராஜ ராஜ சோழர் வந்து “பெரிய திருக்கற்றளியாகிய” என்று பிரமிக்கும் குறிப்பு கல்வெட்டுகளில் இருக்கிறது, மேலும் அவர் இதனை கொண்டே தானும் ஒரு பெரிய கற்றளியை நிறுவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டார் என்று பலரும் கருதுகின்றனர். ஒரு வேளை இந்தத் திருமேனி உடையவர் கொடுத்த கொடையோ? கல்வெட்டு அறிஞர்கள் தேடிப் பார்த்தால் குறிப்பு கிடைக்கலாம் !!

இப்போது தெளிவாக இருப்பவை – இது காஞ்சி கைலாசநாதர் கோயில் சிலை – எப்படியோ புகழ் பெற்ற நடன கலைஞர் ராம் கோபால் இடத்தில 1944 வரை இருந்தது.

இவர் 2003 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் UKவில் காலம் ஆனார்.

இந்த சிலை எப்படி இந்தியாவில் இருந்து சென்றது – எப்போது சென்றது. 1977 ஆம் ஆண்டு இதனை ஜெனீவாவில் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது ? இந்த 1944 குறிப்பு .இணையத்தில் சிறு தேடலில் கிடைக்கிறது. பொதுவாக இவ்வளவு விலைக்கு விற்கப்படும் பொருட்கள் பற்றி தீவிர விசாரணை எடுக்கவேண்டும். அப்படி எடுத்தால் இந்த குறிப்பு கண்டிப்பாக கிடைத்திருக்கும். அதை மறைத்து விட்டு எதற்காக ” A large and important bronze figure of Parvati” என்று சொல்லி விற்கவேண்டும்?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

யார் இந்த இரு பொடி கணங்கள் ?

என்னை போன்றவர்களுக்கு இணையம் ஒரு வரப்பிரசாதம் ! ஒரு பெரியவர் நாற்காலி ஆராய்ச்சியாளர் என்று பட்டம் கூட சூட்டினார் ! அப்படி ஒரு ஆராய்ச்சி தான் இது.

புகழ் பெற்ற ராஜ சிம்ஹ பல்லவரது கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க எடுத்த முயற்சியின் பொது பல கடினமான இடங்களை சந்தித்தோம்.

குறிப்பாக மிகவும் சிதைந்த அடி பாகத்தில் இருந்த இரு உருவங்களை அடையாளம் கண்டுகொள்ள பல படங்களை ஆராய்ந்தோம்.

முடிந்தவரை இவை அந்நாளில் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து அதன்படி படங்களை வடித்தோம். எனினும் இந்த இரு குள்ள கணங்கள் அங்கே இருப்பதே ஒரு ஆச்சரியமாக இருந்தது.

அந்த பெண் வடிவ குள்ள கணம் – உமையவளின் தோழியா ? இலக்கணத்தில் இவர்களை பற்றி ஏதாவது குறிப்பு உள்ளதா? இப்படி எல்லாம் அப்போது தோணவே இல்லை.

பல காலம் கழிந்து நண்பர் அரவிந்த் அவர்கள் தான் லால்குடி சென்ற பொது எடுத்த படங்களை சுட்டியை அனுப்பி வைத்தார்.

அங்கே உள்ள கதை சொல்லும் புடிப்புச் சிற்ப்பங்களை ஆராய்வதே எங்கள் நோக்கம் என்றாலும் அதில் இன்னொரு வடிவம் கவனத்தை ஈர்த்தது.
எதையோ நினைவூட்டியது.

இங்கேயும் அரியணையில் அம்மையப்பன் வடிவம் என்றாலும் முருகன் இல்லை. வலது புறம் அடியவர் ஒருவரும் – மேலே இருபுறமும் இரு முகங்கள் தெரிகின்றன. அவற்றில் நான்முகன், பெருமாள் வடிவங்கள் உள்ளனவா என்பது சரியாகத் தெரியவில்லை. நம் கவனத்தை ஈர்த்தப் பகுதி அரியணைக்கு அடியில் இருக்கும் இரு கணங்கள் தான்….

இந்த சிலையின் காலத்தை சரியாக கணிப்பது கடினம் என்றாலும் சுவாரசியம் என்னவெனில் பல்லவ ஓவியன் தீட்டிய அதே பாணியில் அந்த இரு குள்ள கணங்களும் இங்கே இருப்பது தான்!! இவர்கள் யாராக இருக்கக்கூடும் ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

லிங்கோத்பவர் தோற்றமும், அதன் வடிவமைப்பின் வளர்ச்சியும்…

எந்த ஒரு சிற்பத்தைப் பார்க்கும் பொழுதும் நமக்கு மனதில் எழும் முதல் வினா, ’இது எந்தக் காலத்தைச் சார்ந்ததாக இருக்கும்?’. அது கற்சிலைகளாக இருந்தால் நன்று, ஏனெனில் பெரும்பான்மையான் சிற்பங்கள் அது ஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே அதே இடத்திலேயே இருப்பதால் கல்வெட்டுக்களை வைத்தோ அல்லது வரலாற்றைத் தேடியோ நம்மால் அதன் பூர்வீகத்தை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இது உலோகச் சிற்பங்களுக்கு சாத்தியமில்லை. காரணாம் ஏனைய உலோகச் சிற்பங்கள் அதன் இடங்களில் இருந்து பெயர்க்கப்பட்டு உலகின் வெவ்வேறு மூலைகளில், காட்சியகங்களில் வைக்கப் பட்டுள்ளன. அது மட்டுமின்றி, அதே இடத்தில் இருக்கும் சிற்பங்களைப் பற்றி அறிய நம் வழிபாட்டு முறை கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. ஆகவே, நாம் இங்கு கல்லில் வடிக்கப்பட்ட லிங்கோத்பவரின் கலைப் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பார்ப்போம்.

ஒவ்வொரு சிவாலயத்திலும் உள் பிரகாரச் சுற்றில் கருவறைக்கு பின்புறம், மூலவருக்குச் சரியாக பின்னால் எதிர்ப்புறம் நோக்கியச் சிற்பம் லிங்கோத்பவராகத்தான் இருக்கும். பெரும்பான்மையான ஆலயங்கள் கிழக்குப் பார்த்த நிலையில், கருவறையின் மேற்குப் பகுதியில் வீற்றிருப்பார் நம் கட்டுரையின் நாயகர். பல்லவர் காலம் தொட்டு, முற்கால மற்றும் பிற்காலச் சோழர்களின் கலையையும் எடுத்துக் காட்டும் விதமாக ஆறு சிற்பங்களை எடுத்துக் கொள்வோம்.

இது காஞ்சி கைலாசநாதர் ஆலயத்திலிருந்து – ராஜசிம்ம பல்லவன் (700-728CE)

இந்தச் சிற்பம் பிற்காலப் பல்லவர் கலையைச் சார்ந்தது, அதாவது குடைவரைகளிலிருந்து மாறுபட்டு தனிக்கோயில்களாக கட்டத் தொடங்கிய பின்பு உருவானது. உற்று நோக்கினால், பல்லவர்களுக்கே உரித்தான மிகவும் கனமான யக்னோபவிதம் மற்றும் ஆபரண அலங்காரங்கள் தெரியும். கட்டு மஸ்தான உருவமாக அல்லாமல சிவன் ஒரு சாதாரண இளைஞன் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளார். அக்னி லிங்கத்தைப் பிளந்து காட்சியளிப்பது போல் அல்லாமல், தனியாக ஒரு சாய்ந்த சதுரவடிவத்திற்குள்ளே வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திரிசூலம், பிறைச் சந்திரன், பக்கவாட்டில் உள்ள பிரம்மாவையும், விஷ்ணுவையும் போல் நீண்ட மேல் பாகத்து உடல், வட்ட வடிவ முகம், தடித்த மூக்கு, அலங்காரத் தோரணங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

என்ன அழகு! அது சரி இந்தச் சிற்பம் அந்த ஆலயத்தில் எங்குள்ளது என்று சொல்லுங்கள் பார்ப்போம்!

திருமயம் சத்யகிரி சிவ குகையிலிருந்து…

ஏறக்குறைய முன் கண்ட சிற்பத்தின் காலக்கட்டமே இதுவும், ஆனால் இதனை வடிவமைத்தவர் பல்லவர்கள் என்றும், பாண்டியர்கள் என்றும், முத்தரையர்கள் என்றும் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

அற்புதமான சிற்பம். அக்னி பிழம்புகள் தூணின் பக்கவாட்டில் இருந்து கிளம்பி, இயற்கையாய் மேல் நோக்கி வளர்வதைப் போல் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகள் மட்டும் கொண்டு சாம பங்கத்தில் நிற்கும் சிவன், இடக்கையை இடுப்பின் மீது வைத்து கதி ஹஸ்த முத்திரையையும், வலது கையில் வரத ஹஸ்த முத்திரையையும் காட்டி வரமளிக்கும் தோற்றத்தில் உள்ளார். நீள்வட்டத்தில் சிவபெருமானை அழாய் வெளிப்படுத்துகிறது அந்தத் தூண்.

தூணின் தடிமனை பயன்படுத்தி, வலது கையை மடித்து வைத்து அழகுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறான் சிற்பி. தடித்த நாசிகளும், உதடுகளும், அழகிய வதனமும் அமைதியைக் காட்டுகிறது. சில்பசாஸ்திரங்கள் சொல்வதைப் போல், முகத்தின் உயரத்திற்கும் மேல் வளர்ந்த சடாமுடியின் கட்டமைப்பு சிறப்பு. ஆபரண அணிகலன்கள் குறைவு, அதே சமயம் தொப்புளுக்கு மேலே உள்ள் மிகவும் தடித்த உதர பந்தனம் குறிப்பிடத்தக்கது. அழகாய் வடிக்கப்பட்ட கீழாடையிலும் கற்கள் பதிக்கப்பட்ட அல்லது சிங்க முத்திரை இடுப்புக் கச்சையும் காணப்படாதது குறிப்பிடத்தக்கது.

வலது கையின் மேல் ஒற்றை நூலாலான மிகவும் தடித்த யக்னோபவிதம், சுவாரசியம் கூட்டுகிறது. பல்லவருக்கு உரித்தான வடிவமைப்பு அல்லவா! இயற்கையான ஒரு சாதுவைப் போன்றதொரு உருவமைப்பு, கட்டுமஸ்தாக இல்லைதான் ஆனாலும் வலிமையான் தோள்கள். குறைந்த ஆபரணங்களும், இந்த வடிவமைப்பும் சிற்ப சாஸ்திர நூல்களின் குறிப்புகள் படி ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக காட்டுகிறது. அங்கே கிடைக்கும் சிதைந்த கிரந்த கல்வெட்டுகளும் உறுதிப் படுத்தும் ஆனாலும் ப்ரம்மனையும், விஷ்ணுவையும் ஏன் அன்னமாகவும், பன்றியாகவும் கூட அந்த சிற்பி இங்கு காட்டவில்லை?!

சோழம் மீண்டும் துளிர்த்ததும், ஆலயங்கள் கட்டுவது மிகுந்தது. அதனால் சிற்பிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு அந்தக் கலையை வளர்த்தனர். ஆகவே, இனிவரும் உருவங்களைப் படித்தல் சற்று கடினமான வேலைதான். பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த புஞ்சை நல்துணை ஈஸ்வரம் மற்றும் புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் சிற்பங்களைக் காண்போம்.

புள்ளமங்கை – முதலாம் பராந்தகச் சோழன் ( 907 – 955 CE)

சிவனின் முகம் சிதைந்துள்ளது. மாபெரும் லிங்கோத்பவர், விஸ்ணுவும், ப்ரம்மாவும் இரண்டு பக்கமும். இதைத் தவிர வேறு சிற்பங்கள் இங்கு தனித்துவம் பெறவில்லை. இரண்டு நூற்றாண்டுகளின் வளர்ச்சி, தேவைக்கு அதிமானவை நீக்கப்பட்டு லிங்கோத்பவர் மட்டும் தனித்துவம் பெறுகிறார். அதோடு ப்ரம்மா மேலே பறந்து செல்வது போலும், விஸ்ணு பூமியை வராகமாகி துளைத்துச் செல்வது போன்ற காட்சி தத்ரூபம். இந்தத் தூண் மொத்தமும் இன்னும் சிற்பத்தால் ஆக்கிரமிக்கப்படவில்லை, தூணில் இருந்து அக்னி வெளிப்படுவது போன்ற காட்சிதான் இன்னமும் தெரிகிறது.


சிவனைத் தவிர மற்ற இரு உருவங்களிம் அளவில் சிறியதாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய ஆனால் தெளிவான முத்திரைகளாக மானும், மழுவும் கொண்ட கைகள் தூணிற்குள்ளே மற்றும் இடையளவு யக்னோபவிதம் கொண்ட மெலிதான ஒல்லி உருவம், அழகிய நீள்வட்ட முகம். பல்லவர் கால நேர்கோட்டிலிருந்து சற்றே வளைந்த வடிவத்திற்குள் இருந்து கால்கள் தெரியும் அளவிற்கு வடிக்கப் பட்ட உருவம். என்ன கலையின் வளர்ச்சி தெரிகிறதா?

புஞ்சை – 955 CE

கல்வெட்டுகளில் புஞ்சைப் பற்றிய குறிப்புகள் இரண்டாம் ஆதித்தர் காலத்தைக் ( 965-969 CE) குறித்தாலும் சிற்பங்களின் வடிவமைப்பு முதலாம் பராந்தகர் காலத்தையே காட்டுகிறது.

ஆஹா! லிங்கோத்பவருக்கென்றே சிறந்த தோரணம், லிங்கத்திற்கு தொப்பி போன்ற உருவமைப்பு மலர் வளையத்துடன், அன்னமாக ப்ரம்மனும், வராகமாக விஸ்ணுவும் கொள்ளையழகு. இங்கு தனியாக சிற்பங்கள் ப்ரம்மனுக்கும், விஸ்ணுவுக்கும் இங்கு இல்லை. மற்றும், அக்னி சுவாலைகள் தூணின் பக்கவாட்டிலிருந்தே இன்னமும் கிளம்புகின்றன.

பல்லவர் காலம், பல்லவர் காலத்திற்கும் சோழர்களுக்கும் இடைப்பட்ட மற்றும் முந்திய சோழர் காலம், இந்த காலகட்டத்தில் லிங்கோத்பவரின் கலை வளர்ச்சி இரண்டு நூற்றாண்டுகளில் அபரிமிதம்! நன்கு தெளிவான, வலிமையான மார்பு, வட்ட வடிவ முகம், சிம்ம முகம் பதாகை, லிங்கத்தின் திறப்பு குறிப்பிடத்தக்கவை.

தஞ்சாவூர் ப்ரஹதீஸ்வரர் – ஸ்ரீ ராஜ ராஜ சோழர் ( 985 -1014 CE)

மற்றுமொரு நூற்றாண்டில் ஏராளமான மாற்றங்கள், முழுமையான லிங்கம், அளவில் மிகவும் குறைந்த ப்ரம்மாவும், விஸ்ணுவும், துல்லியமான முக வடிவமைப்பு, நன்கு விரிந்த மார்புகள், மெலிந்த இடை, அக்னி தூண் முதலியன குறிப்பிடத்தக்கவை.

திருபுவனம் – மூன்றாம் குலோத்துங்க சோழன்( 1178 -1218CE)

மேலும் ஒரு நூற்றாண்டு, சிற்பக்கலை அதன் சிகரத்தில்! விதிகள் வளர்ந்து, தன்னிஷ்டம் போல் வடிக்கும் அலங்காரங்கள் குறைக்கப்பட்டு, முழு லிங்கமும் சிவ பெருமானால் ஆக்கிரமிக்கப் பட்டு, அளவில் குறைந்த, மேலே பார்த்ததை விட சற்று பெரியதான ப்ரம்மாவும், விஸ்ணுவும் கொண்டு, சிவனைச் சுற்றிய நீள்வட்ட வெளிப்பாடு துல்லியமாக விதிகளுக்குட்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கடைசி சோழ மன்னன் குலோத்துங்கன் காலச் சிற்பம்.

படங்கள்: நண்பர்கள் அசோக், சௌரப், அர்விந்த், சதீஷ் , சாஸ்வத் மற்றும் ஸ்ரீராம்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

நூதனமுறையில் பாற்கடல் கடையும் காட்சி – காஞ்சி கைலாசநாதர் ஆலயம்.

ஆயிரம் ஆலயங்களை கொண்ட ஊர் என்ற பெயர் கொண்ட ஊர் எது தெரியுமா. காஞ்சி தான். அது வெறும் பகட்டு அல்ல – காஞ்சியில் எந்த தெருவில், எந்த இடத்தில நின்று பார்த்தாலும் குறைந்தது மூன்று ஆலயங்களாவது தெரியும். இப்படி குவியும் எண்ணிக்கையில் தனியாக நிற்கும் ஆலயம் ராஜ சிம்ம பல்லவனது காஞ்சி கைலாசநாதர் – காலத்தால் மிகவும் பழமையான கட்டுமானக் கோயில் என்ற முறையில் மட்டும் அல்ல, சிற்பக்கலை பல்லவ சிற்பிகளின் கைத்திறத்தின் மகிமையில் அடைந்த உன்னத நிலையின் பிரதிபலிப்பு இந்த கலைக் கூடம். அந்த தனித் தன்மையை ஆலயத்தினுள் இருக்கும் ஒவ்வொரு சிற்பத்திலும் நாம் காணலாம். நாம் இன்று பார்க்கும் பாற்கடல் காட்சியும் அதை போலவே வேறு எங்கும் காண இயலாத ஒரு காட்சி.

பொதுவாகவே பாற்கடல் கடையும் காட்சியை விளக்கும் சிற்பங்களை இந்தியாவில் பார்ப்பது அரிது. கம்போடியா அங்கோர் வாட்டில் மிக அருமையான ஒரு சிற்பம் இருக்கிறது. அதே போல அதனை ஒட்டிய காலத்தில் அருகில் சில இடங்களில் இந்த காட்சி உள்ளது. பொதுவாககம்போடியா வடிவங்களில் பெருமாளை முழு உருவமாகவும் அவதார ரூபமான கூர்ம வடிவமாகவும் இரு வடிவங்களாக இருக்கின்றன. ( பாங்காக் விமான நிலைய நவீன சிற்பம் கூட இது போல தான் உள்ளது ) மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை கயிறாக்கி பாற்கடலை தேவர்களும் அசுரகளும் இரு புறம் நின்று கடையும் காட்சி அற்புதம்.

எனினும் இந்த காஞ்சி கைலாசநாதர் வடிவம் மிகவும் விசித்திரமாக உள்ளது. இங்கே கூர்ம வடிவம் சித்தரிக்கப்படவில்லை.

நடுவில் இருக்கும் எட்டு கைகளை கொண்ட பெருமாள் உருவம் – ஒரு கையில் சங்கு மற்றொரு கையில் சக்கரம் என்று கம்பீரமாக உள்ளது.

எனினும் பெருமாள் சிற்பத்தின் நடு இடத்தை வகிக்காமல் ஒரு பக்கமாகவே இருப்பதால் , அவர் சாய்ந்து அல்லது சாயாமல் பிடித்து நிற்கும் இடத்தை நாம் ஆராய வேண்டும்.

அவர் நிற்கும் பாணியும் முக்கியம். சாதித்து விட்டு நிற்கும் ஒரு வெற்றி பரவசம் தெரிகிறது.

அடியில் நாக அரசன் – மந்தார மலையை மத்தாக கொண்டு கடைய உதவிய கயிறாக வாசுகி.

அப்படி என்றால் பெருமாள் தூக்கிப் பிடிக்கும் தூண் போன்ற வஸ்து தான் மந்தார மலையாக இருக்க வேண்டும். மத்து போன்றே இருக்கிறதே !

மந்தார மலையில் ஒரு பறக்கும் உருவம் கையில் எதையோ ஏந்தி வருகிறது.

அருகில் சென்று பார்ப்போம்.

ஆஹா, அமிர்த கலசத்தை ஏந்தி வரும் தன்வந்தரி. காரியம் முடிந்து விட்டது. இதனுடன் பல அற்புத வஸ்துகள் வெளியில் வந்தன என்று நாம் அறிகிறோம். கௌஸ்துபம் என்ற கல் பெருமாளின் நெஞ்சை அலங்கரிக்கும் நகையாக மாறியது, காமதேனு, கல்பவிருக்ஷம்,ஐராவதம் என்ற வெள்ளை யானை, சில குறிப்புகள் படி பெருமாளின் சங்கு, சக்கரம் மற்றும் உச்சைஷ்ராவாஸ் என்ற ஏழு தலை வெள்​ளைப் புரவியும் வந்ததாம்.
கைலாசநாதர் சிற்பங்கள் இப்போதே அழகு, அவை வடித்தபோது மேலே அழகாக பூசப்பட்டு வண்ணம் தீட்டி இருக்கக் கூடும். இன்றோ அவை மிகவும் சிதைந்து இருக்கின்றன – நம்மால் பல குறிப்புகளை பார்க்க இயலவில்லை. எனினும் ஒரு பக்கத்தில் ஒரு புரவி உள்ளது. இந்த புரவியின் வெள்ளை நிறத்துக்கும் அதன் வாலுக்கும் இன்னொரு கதை உண்டு. அதை வேறொரு தினம் பார்ப்போம்.

இப்போது புரிகிறது – வேலை முடிந்து விட்டது. அதனால் தான் பெருமாள் தன் சுய ரூபத்தில் அழகாக நின்று அனைவரின் புகழாரத்தை வாங்கிக் கொண்டு சிரிக்கிறார் போல.

படங்களுக்கு நன்றி : திரு அசோக் கிருஷ்ணசுவாமி


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ரிஷபாந்திகா , வீணாதாரா, அர்தனாரி சிவன் – திரு லாக்வூட் அவர்களது பல்லவ கலை நூலில் இருந்து

நமது பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு இந்த தளத்தில் திரு கிஃப்ட் சிரோமனி அவர்களது
தாக்கம் பற்றி தெரிந்திருக்கும்

பல்லவ துவாரபாலகர்களுக்கு என்ன கொம்பா முளைத்துள்ளது?

அந்த பதிவில் நான் இவ்வாறு எழுதி இருந்தேன்

” நண்பர்களே , இன்று நான் என்னை மிகவும் கவர்ந்த மனிதரை பற்றி எழுதுகிறேன். எனது அறிவுப்பசியைத் (சிற்பங்களை சார்ந்த!!) துவக்கி வைத்த அற்புத மனிதர், இணையத்தின் பலம், அதன் முழு பயன், வரும் சந்ததியனருக்கு நாம் விட்டுச்செல்ல கூடிய பொக்கிஷங்கள் போன்றவற்றை எனக்கு உணர்த்திய மாமனிதர். திரு ஐன்ஸ்டீன் அவர்கள் தனது அற்புத கண்டுபிடுப்புகளை பற்றி இவ்வாறு கூறினாராம்..” தொலைவில் உள்ள ஒரு நல்ல பொருளை என்னால் காணமுடிவதற்குக் காரணம் நான் உயர்ந்தவர்களின் தோளில் இருந்து பார்ப்பதால்தான்”

அது போல ஒரு உயர்ந்தவரை பற்றிய பதிவே இது. நான் எழுதும் அந்த மனிதரை நான் நேரில் சந்தித்தது கிடையாது. நான் எனது வாழ்கையை எப்படி எழுதவேண்டும் என்பதை பற்றிய தெளிவைப் பெறுவதற்கு முன்னரே, அதாவது 1988 இல் அவர் மறைந்துவிட்டார்.

எனது பாக்கியம் சென்ற மாதம் சென்னை சென்றபோது அவரது மனைவியார் திருமதி ராணி சிரோமனி அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் தனது கணவரின் நெருங்கிய நண்பரான திரு மைக்கல் லாக்வூட் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அவரும் மிகுந்த ஆர்வத்துடன் துவங்கினார் ” எனக்கு மாமல்லபுரத்தின் ஜாலங்களை அறிமுகப் படுத்தியவர் திரு கிஃப்ட் சிரோமனி ” என்று..

அவர் தனது ஆராய்ச்சிக் குறிப்புகள், நூல்கள் அனைத்தையும் அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ள அனுமதி தந்துள்ளார். இதற்காக நாம் திரு லாக்வூட் அவர்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளோம். இதோ அவர் தன இளமை பருவத்தில் வல்லம் குடைவரை அருகில். 1969 ஆம் ஆண்டு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் (அப்போது அவருக்கு வயது முப்பத்தி ஆறு ) – நான் இன்னும் பிறக்க கூட இல்லை !

அவரை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள படியுங்கள்

Dr. Lockwood

அறிமுகம் கிடைத்தவுடன் மிகுந்த ஆர்வத்துடன் பல பல்லவர் சம்மந்தமுள்ள பதிவுகளை அவருக்கு அனுப்பினேன். அவரும் பொறுமையாக படித்து தன் கருத்துகளைத் தந்தார். அப்படி ஒரு பதிவில் நாங்கள் சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி என்ற தொடருக்காக திருக்கழுக்குன்றம் சென்றபோது அங்குள்ள ஒரு சிற்பம் பற்றி எடுத்துரைத்தார்.

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – நான்காம் பாகம்

பல காலம் முன்னர் நடந்த விவாதம் பற்றி தெரியாமல், வெளிச்சுற்றில் இருக்கும் இந்த சிற்பத்தை ரிஷபவாஹன சிவன் என்று நான் குறிப்பிட்டு இருந்தேன். இதனை பற்றி விளக்கம் தரும் வகையில் தனது பல்லவ கலை என்னும் நூலில் உள்ள குறிப்புகளை திரு லாக் வூட் எனக்கு அனுப்பி வைத்தார். கருவறையின் உள்ள சுவற்றிலும் இதே சிற்பம் இருப்பதாகவும், வெளியில் இருப்பதை விட இன்னும் நல்ல நிலைமையில் இருப்பதால் நன்றாக ஆராய முடியும் என்றும் கூறினார்

அவரது குறிப்பைப் படிக்குபோது மல்லை கடற்கரை கோயிலில் உள்ள ஒரு சிறு ஆலயத்தில் உள்ளே இருக்கும் சிற்பமும் இதே வடிவம் என்ற அவரது கருத்து தெளிவானது.

நண்பர் அசோக் அவர்களது படங்கள் கொண்டு நாம் இன்னும் நன்றாகப் பார்க்க முடிகிறது

இதைப் பார்த்தவுடன் இது சிவன், வெறும் ரிஷப வாஹன சிவன் மட்டும் இல்லை வீணாதாரா என்று சொன்னால் – அப்படியே ஒப்புக்கொண்டு இருப்பேன். ஆனால் திரு லாக்வூட் அவர்கள் இது ஒரு அர்த்தநாரி வடிவம் என்று கூறுகிறார். பல்லவ அரசன் ராஜசிம்ஹ பல்லவன் தனக்கென்று ஒரு சில சிறப்பு சிற்பங்களை வைத்துள்ளான். அவற்றை நாம் மல்லை ஓலக்கனேஸ்வர கோயில், கடற்கரை கோயில் மற்றும் காஞ்சி கைலாயநாதர் ஆலயம் என்று எங்கோ ஓரிடத்தில் திரும்ப திரும்ப பார்க்க இயலும்.

ஓலக்கனேஸ்வர ஆலயத்தில் இந்த சிற்பம் இல்லை. கடற்கரைக் கோயிலுக்கு செல்லும் முன்னர் கஞ்சி கைலாயநாதர் கோயில் சென்று தேடுவோம். அங்கே ஒரு வீணாதாரா சிற்பமும் ஒரு வீணாதாரா அர்த்தனாரி வடிவங்களும் உள்ளன.

படங்களுக்கு நன்றி திரு சௌராப் மற்றும் கிருஷ்ணமுர்த்தி மாமா

நாம் முன்னரே அர்த்தனாரி வடிவத்தை பற்றிய பதிவில் எப்படி இரு பாகங்களும் வேறு படுகின்றன என்று பார்தோம்.

சிற்பிக்கு “விடை”யே விடை

இப்போது கைலாயநாதர் சிற்ப்பத்தை அருகில் சென்று பார்ப்போம்.

அர்த்தனாரி என்று தெளிவாகிய பின்னர் வீணையை பார்ப்போம்.

சுமார் எட்டாம் நூற்றாண்டில் வீணை எப்படி இருந்தது என்று நாம் அறியமுடிகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று மேலே இருக்கும் பாகம் குடம் போல இல்லாமல் , திருப்பி பொருத்தப்பட்ட குவளை போல உள்ளது. இதனை மார்புடன் அணைத்து வாத்தியத்தை வாசிக்கும் பொது கலைஞன் இசையுடன் எப்படி இணைத்து வாசித்து இருப்பான் என்று யூகிக்க முடிகிறது. இந்த விதமான வாத்தியம் பல இடங்களில் நாம் பார்க்கிறோம். புதுகோட்டை பைரவர் ( நன்றி காத்தி ), பாதாமி அர்த்தனாரி ( நன்றி பிகாசா ) , நேபாளத்து சரஸ்வதி ( நன்றி காலதர்ஷன )

தற்போதைய வீணை இப்படி இருக்கிறது. மேலே இருக்கும் குடம் போன்ற பகுதிக்கு சரோக்கை என்று பெயர், ஆனால் அதற்க்கு இப்போது வேலை உண்டா என்று தெரிய வில்லை.

ஆனால் அந்நாளைய வீணையை போல இந்த திருப்பி பொருத்தப்பட்ட குவளை போன்ற வீணைகள் இன்றும் இருக்கின்றனவா ? அதை மீட்டும் பொது இசையுடன் கலக்கும் உணர்ச்சிகள் …

சரி, மீண்டும் நமது சிற்ப புதிருக்கு வருவோம். இந்த சிற்பம் ஒரு வீணாதாரா அர்த்தனாரி ரிஷபவாகன சிவன் என்று சொல்கிறார் திரு லாக்வூட். அதற்கு சான்றாக இந்த இரு படங்களையும் தருகிறார்.

படம் A கைலாயநாதர் ஆலயத்தின் வெளிச்சுற்றில் அந்நாளில் இருந்தது. பார்ப்பதற்கு மல்லை மற்றும் திருக்கழுக்குன்றம் சிற்பம் போலவே உள்ளது.

படம் B வீணாதாரா அர்ததனாரி ஆனால் இங்கு ரிஷப வாஹனம் இல்லை அதற்கு பதில் அரியணையில் அமர்ந்திருக்கும் வண்ணம் உள்ளது. இந்த சிற்பம் நான்கு புறமும் சிற்பம் கொண்ட பாறையின் ஒரு பக்கத்தில் உள்ளது. இந்த சிற்பம் மல்லை கடற்கரை கோயிலின் வெளிச்சுற்றில் அந்நாளில் இருந்தது.

மேலும் அவர் கூறுகையில் முன்னர் பார்த்த கைலாயநாதர் வீணாதாரா அர்த்தனாரி வடிவமும் அரியணை மீது அமர்ந்த வண்ணம் உள்ளது. இது மேற்கு புறம் வெளிச்சுவரில் உள்ளது

முடிவாக இந்த புதிரின் விடை மூன்று இடங்களில் உள்ளது. ஒன்று திருக்கழுகுன்றம் கருவறை சிற்பம் – கைத்தேர்ந்த ஓவியர் யாரையாவது வைத்து நேரில் பார்த்து வரையவைத்துப் பார்க்கலாம். மற்ற இரண்டு சிற்பங்களும் தற்போது எங்கே உள்ளன.. தேடிப்பார்க்க வேண்டும்.. படங்கள் எடுத்த ஆண்டு 1969.

பல்லவ கலைகள் நூல் 1997 ஆம் ஆண்டு மறுபதிவின் பொது திரு லாக்வூட் எழுதிய குறிப்பு

இரு சிற்பங்களும் தற்போது தொல்லியல் துறை மல்லை அருங்காட்சியகத்தில் உள்ளன !!

தற்போது இந்த இரு சிற்பங்களும் எங்கு உள்ளன என்று ஆர்வலர் தேடி படம் பிடித்து தர வேண்டுகிறோம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத சித்திரங்கள்தான் ..ஆனால் !

இன்று நாம் பார்க்கவிருக்கும் வடிவங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாதவை போல முதலில் தோன்றும். அதற்கு முன்னர் நண்பர் திரு சதீஷ் அவர்கள் போட்டிருந்த ஓவியம் ஒன்றுடன் காஞ்சிப் பயணத்தை துவங்குவோம்.


சதீஷ் அவர்களின் தளம் !

சிலர் இயற்கையாகவே நேரில் இருப்பதை விட புகைப்படங்களில் பல மடங்கு அழகாக காட்சி அளிப்பர். அவர்களை ஆங்கிலத்தில் போடோசனிக் என்று அழைப்பார்கள். அதைப்போல ராஜசிம்ஹ பல்லவரின் மல்லை கடற்க்கரை கோயில், பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயம், மற்றும் காஞ்சி கைலாயநாதர் ஆலயம் – புகைப்படங்கள் எடுப்பதற்கென்றே கட்டி விட்டார் போலும். – அரைகுறை ஆர்வலருக்கே புகைப்படம் எடுத்து தள்ளும் வெறியைத்தரும் இவை – கைதேர்ந்த வல்லுனர்கள் பிடியில் சிக்கினால். இதோ நண்பர் ஆதி ஆர்ட்ஸ் கைவரிசை – இல்லை – கேமரா வரிசையை பாருங்கள்.



என்ன ஒரு அழகு – ஆயிரத்தி முந்நூறு ஆண்டுகளாக இன்னமும் நின்று சிறக்கும் பொக்கிஷம்.

அடுத்து இந்த வரிசையைப் பாருங்கள். .

அஜந்தா புத்தர் , மலை தவம் மற்றும் கைலாசநாதர் சோமாஸ்கந்தர் வடிவம் – மூன்றிக்கும் என்ன சம்பந்தம் ?

முன்னர் நாம் பார்த்த காஞ்சி சோமாஸ்கந்தர் ஓவியம் நினைவில் உள்ளதல்லவா ?

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் மூன்று

முதலில் இந்த ஓவியம் எங்கே உள்ளது என்று பார்ப்போ

படத்தில் அம்புக்குறி போட்டிருப்பது போல நேரே சென்று இடது பக்கம் திரும்பிப் பாருங்கள். நான்கு இடங்களில் மட்டும் சிதைந்த ஓவியங்கள் தெரியும். மற்ற இடத்தில சுமார் தான் !!


ஆனால் இந்த ஒரு இடம் மிகவும் முக்கியம். உள்ளே தலையை நுழைத்து வலது பக்கம் உற்று பாருங்கள்.


முதலில் வெறும் கருப்பு சாயம் போல தோன்றும் – சிறுது நேரம் கண்கள் வெளிச்சம் இல்லாமைக்கு பழகியதும் உள்ளே இன்றும் ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லவ கால ஓவியம் தெரியும்

இன்னும் அருகில் சென்று பார்ப்போம். இரு அழகிய கின்னரர்கள். அந்த பெண்மணி புல்லாங்குழல் வாசிக்கும் அழகு அற்புதம். பறவை போல கால்களும் , சிறகுகளும் இருப்பதை கவனியுங்கள்.

இப்போது மல்லை தவச் சிற்பம்.


இங்கேயும் அந்த தம்பதியினர் இருப்பதை பாருங்கள். அதே பறவை போல கால்களும் , சிறகுகளும் இருக்கின்றன. தெரிகின்றதா ?

சரி, இரண்டுமே பல்லவ காலத்தவை தான். ஆனால் இதே போல ஒன்று அஜந்தா ஓவியத்தில் உள்ளது, அதுவும் நீங்கள் பல முறை பார்த்த, ஏன் இந்த பதிவின் ஆரம்பத்தில் பார்த்த புத்தர் உருவத்திலும் உள்ளது என்றால் நம்புவீர்களா ?

சரி, இப்போது பாருங்கள்

(படங்களுக்கு நன்றி – An Album of Eighty-five Reproductions in Colour, Editor: A.Ghosh; Published by Archaeological Survey of India)


இப்போது தெரிகிறார்களா ?


உண்மையான கலைக்கு ஏது வேலி , வரம்பு ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிதலமடைந்தும் கம்பீரமாக நிற்கும் விமானம் – புள்ளலூர்

நேரம் போனது தெரியவே இல்லை. உடன் வந்திருந்த அப்பா அம்மா மற்றும் அண்ணன் காட்டிய சைகைகளும் மனதில் ஏறவில்லை. அப்படி ஒரு மயக்கம் – காஞ்சி கைலாயநாதர் கோயிலில் அப்படியே லயித்து விட்டேன். மதியம் ஆகிவிட்டது – அப்போது திடீரென கைபேசி அலறியது.

“விஜய், காஞ்சியில் இருந்து அரக்கோணம் செல்லும் பாதையில் திருமால்புரம் ரயில் நிலையம் அருகில் இருக்கிறேன். சீக்கிரம் வாரும் ” என்றார் நண்பர் திரு சங்கரநாராயணன். அங்கே ஒரு முற்கால சோழர் கோயிலை தேடி செல்வதாக முந்தைய நாள் திட்டம் போட்டிருந்தோம். சங்கரை பார்த்துவிட்டு அவர் பின்னால் தொடர்ந்த சில வினாடிகளில் போகும் பாதையில் பாதை மட்டும் இல்லை, அப்படி ஒன்று இருந்ததற்கான தடயம் கூட இல்லை என்று புரிந்தது. பெற்றோரையும் , அண்ணனையும் வண்டியுடன் சென்னைக்கு திருப்பி அனுப்பி வைத்து விட்டு சங்கருடன் அவரது வாகனத்தில் பயணம் தொடர்ந்தது. அப்போது எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல் சென்ற எனக்கு பல அதிர்ச்சிகள். திருமால்புரம் இன்ப அதிர்ச்சி ( அதை அடுத்த பதிவில் பார்ப்போம்). ஆனால் அன்று மாலை நாங்கள் கண்ட காட்சி…

சரி, அப்படி எங்கே போனோம், எதை பார்த்தோம்.வரலாற்றில் பல முக்கிய போர்களை பார்த்த மண் – அது சரி, புள்ளலூர் என்றவுடன் பானிபட் போல நமக்கு சட்டென்று சரித்திர பாடம் நினைவுக்கு வருவது கடினம், எனினும் கல்கியின் சிவகாமியின் சபதம் படித்தவர்களுக்கு ? உடனே சிவகாமியும், குண்டோதரனும், புலிகேசியும் , கண்ணபிரானும், ஆயன சிற்பியும் நினைவுக்கு வருவார்கள்.

சிவகாமியின் சபதம்/காஞ்சி முற்றுகை/புள்ளலூர்ச் சண்டை

அதற்குப் பின்னரும் திப்புவின் காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து அவனது மகத்தான வெற்றிகளில் ஒன்றாக இந்த போர் கருதப்படுகிறது. அதை பற்றி திரு முத்தையா அவர்களின் ஆங்கிலப் பதிவு

The story of Two Obelisks.

சரி, இடம் தெரிந்துவிட்டது,. அங்கே ..

எனது படம் சுய விளம்பரத்துக்காக இல்லை, காரணமாகத்தான் உள்ளது. நான் எங்கே நிற்கிறேன். அடுத்த சில படங்களை பார்த்தல் உங்களுக்கே புரியும்

இன்னும் சற்று தொலைவில் சென்று பார்ப்போம்.

புள்ளலூர் அருகே சோழர் காலத்து கோயிலை தேடிச் சென்ற எங்களுக்கு, சங்கரின் பார்வையில் தொலைவில் , மரக்கிளைகளுக்குள்ளும் புதர்களுக்குள்ளும் இந்த விமானம் தென்பட்டது. அங்கே ஊர்க்காரரை கேட்டதற்கு, அதுவா – அது எங்க ” மொட்டை கோபுரம் ” என்றார்

அருகில் சென்றவுடன் தன அதன் முழு பிரம்மாண்டம் விஷவரூபம் எடுத்தது.

விமானத்தின் அடியில் இருந்து பல செங்கல்கள் உருவப் பட்டாலும் ..

முதிர்ந்த போர் வீரரை போல, வீரத்தழும்புகள் பல உடலில் ஏந்தி இருந்தாலும், தலை சற்றும் சாயாமல் நேசி நிமிர்த்தி விண்ணோக்கி சென்ற விமானத்தின் கம்பீரம் மனதை கொள்ளையிட்டது . ஆறு தளங்கள் உடைய அற்புத செங்கல் விமானம்

விமானத்தின் மேல் தளங்களில் சில சுதை சிற்ப்பங்கள் தெரிந்தன. பல்லவர் காலத்து கட்டுமானம் போல உள்ளது.


தன்னைச் சுற்றி சிதைவுகள், குப்பை, முள்செடி , ஆயிரம் ஆண்டுகள் புறக்ணிக்கபட்டதன் விளைவினால் மேலே பல மரக்கிளைகள், எனினும் அதன் அகத்தின் அழகு குன்றவில்லை. இன்றைய அறிவியல் வளர்ச்சி, நவீன கருவிகள், புதிய கட்டுமான பொருட்களின் கண்டுப்பிடிப்பு என்று அவ்வளவும் இருந்தும் – இந்த தனி விமானம் தனது பெருமையை நமக்கு உணர்த்தியது. ஒரு சோகம் கலந்த பெருமிதம், விமானத்தின் உள்ளே சென்றவுடன் ஒரு தெளிவு…

நம் முன்னோர்களின் அறிவு முதிர்ச்சி மற்றும் அறிவியல் தேர்ச்சி கண்முன்னே கண்டதும் ஒரு பெருமிதம் – விமானத்தின் உட்புறம் சென்று மேலே பார்த்தவுடன் ஒரு மெய் சிலிர்ப்பு. அப்படி ஒரு அற்புதம், இத்தனை நூற்றாண்டுகள் ஆகியும், கேட்பாரற்று குப்பையில் கிடந்தாலும், தங்கள் பணியை இன்றும் செவ்வனே செய்து, தாங்கள் காப்பாற்றிய மூலவர் சிலை இல்லை என்றாலும் எங்கும் எதிலும் கலந்திருக்கும் அந்த தெய்வீக உணர்ச்சியை உனர்த்தும் இந்த கற்களின் பணியை கண்டு கண்கள் கலங்கின. ஒரு இணையற்ற
கலை பாரம்பரியத்தை ஈர்ந்த மண்ணில் நானும் பிறந்துள்ளேன் என்ற பெருமிதம். இவை நமது குலதனங்கள் , போற்றி கொண்டாடப்பட வேண்டிய இவை இப்படி இருப்பதை கண்டு மனம் வெந்தது. ஆர்வலர்கள் சிலர் கூடினால் எதுவும் முடியும். இன்பத்திலும் துன்பம்!!!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் மூன்று

கடந்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாய் இன்றும் நமது வாசகர்கள், முன் வரிசையில் அமர்ந்து, இந்த அற்புத ஓவியப் பயணத்தை நம்முடன் தொடர்கிறார்கள். இதுவரை பயணம் அருமையாக சென்றுக் கொண்டிருக்கிறது. காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் ராஜசிம்மன் காலத்து அரிய சோமஸ்கந்தர் ஓவியத்தின் சிதைந்த பகுதிகள் கொண்டு முழு ஓவியத்தையும் தீட்டும் நமது முயற்சி இன்றும் தொடர்கிறது.

இந்த ஓவியத்தின் நடு நாயகனான ஈசன் மீது முதலில் நாம் கவனம் செலுத்துவோம்.

அடுத்து உமை

உமையின் வடிவத்தை ஓவியத்தில் உற்றுப் பார்க்கும் பொது, அம்மை மஞ்சள் நிற மேலாடை அணிந்திருப்பது போல தெரிந்தது. மஞ்சள் பூசி உள்ளாரோ அல்லது மஞ்சள் நிற கச்சை அணித்து இருக்கிறாரோ ?

ஓவியத்திற்கு இப்போது வண்ணம் தீட்டுகிறோம். முதலில் மெல்லிய வண்ணம். உடல் வண்ணங்கள்.

மகேசன் வண்ணம் பெறுகிறார், நீலகண்டர் ஆயிற்றே !

உமை இன்னும் வண்ணம் ஏற்றி அழகு பெறுகிறார்.

அம்மை அப்பன் எப்படி ஒன்றாக அழகுபட காட்சி அளிக்க ஆரம்பிக்கின்றனர்.

கேயுரம் எனப்படும் மேல் கை பட்டை, மற்ற ஆபரணங்கள் என்று இன்னும் ஜொலிக்க ஆரம்பிக்கயார் மகேசன் .

ஆசனம், கணம் , தோழி என்று அனைவரும் வண்ணம் பூசப்படுகின்றனர்.

முடியும் தருவாயில், மீண்டும் ஒரு முறை நாம் எதையாவது விட்டு விட்டோமோ என்று ஓவியத்துடன் ஒத்துப் பார்க்கிறோம்.

அடடே, நான்முகனின் அஞ்சலி ஹஸ்தம் சரி செய்ய மறந்துவிட்டோமே.

ஈசனின் கை முத்திரைகள் சில சரியாக தெரியவில்லை, அதைப் பற்றி படிக்க, நாம் சோமஸ்கந்தர் பற்றி தொடரை ஆரம்பிக்க காரணமான திரு கிப்ட் சிரோமனி அவர்களது 1971 ஆம் ஆண்டு குறிப்பை மீண்டும் சென்று படித்தேன்

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

சோமஸ்கந்தர் வடிவம் பற்றி அவர் சொல்லும்போது ராஜசிம்மன் காலத்திற்கு முந்தைய சோமஸ்கந்தர் கல் சிற்பம் பற்றி இவ்வாறு விவரிக்கிறார். ” சிவனின் நான்கு கைகளில், மேல் வலது கையில் ஒரு பாம்பை பிடித்து இருக்கிறார் ”

ராஜசிம்மன் காலத்து சோமஸ்கந்தர் வடிவத்தில் அவர் குறிப்பாக இந்த பாம்பை பற்றி ஒன்றும் கூறவில்லை. எனினும் பாம்பு கண்ணில் தென்படுகிறதா என்று தேடிப் பார்த்தோம்.

மேல் வலது கையில் ஒன்றும் தெரியவில்லை , ஆனால் கீழ் வலது கையின் அருகில்

படம் எடுத்து ஆடும் பாம்பு தெரிகிறதா ?

அத்துடன் நமது இந்த பயணம் முடிவுக்கு வருகிறது, மீண்டும் ஒரு முறை நாம் ரசிக்கும் வண்ணம் சலிக்காமல் வரைந்த ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களையும், சரியான தருணத்தில் நல்ல படங்களை தந்து உதவிய இளம் நண்பர் திரு ஜகதீஷ் அவர்களையும் வாழ்த்தி , முடிவு பெற்ற ஓவியத்தை படைக்கிறேன்.

இந்த ஓவியப் பயணம் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் உற்சாக வரவேற்புடன் இன்னும் பல பணிகளை இது போலவே எடுத்து நிறைவேற்ற முயற்சிக்கிறோம்.இது ஒரு முயற்சி தான், பிழைகள், தவறுகள் ஏதேனும் இருந்தால் முதலில் மன்னிக்கவும் , பிறகு கண்டிப்பாக எடுத்துக் கூறவும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் இரண்டு

முதல் பாகத்தை படித்து பலரும் அனுப்பிய நல்ல மறுமொழிகள் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. யாருமே சென்று காணாத இந்த பல்லவர் கால சுவர் ஓவியங்கள் இன்று புத்துயிர் பெற்று நம்முடன் பேசுவது போன்ற உணர்ச்சி பெறுகிறோம். இந்த பயணத்தில் நானும் ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களும் பல புதிய விஷயங்களை தெரிந்துக்கொண்டோம். அதை அப்படியே உங்களுடன் பகிர்கின்றோம்.

நண்பர் திரு ஜகதீஷ், அவருக்கு மீண்டும் ஒரு நன்றி. அவர் தந்த படங்கள் எங்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருந்தது எனபது இந்த பதிவை படித்து முடித்தவுடன் புரியும். தக்க சமயத்தில் உதவினார் இந்த பதினோராவது வகுப்ப மாணவன்.

சென்ற பதிவில், படத்தில் யார் யார் இருக்கின்றனர், எங்கெங்கே என்று குறித்து விவரித்தோம் நாங்கள், இன்னும் அருகில் சென்று ஒவ்வொரு சிறு குறிப்புகளையும் பார்த்தோம். பூத கணம், எங்குமே முழுமையாக தெரியவில்லை. கொஞ்சம் கற்பனைத் திறனை கலந்து வரைந்து முடித்து விட்டார் ஓவியர்.

அருகில் இருக்கும் தோழி அப்படி அல்ல. நல்ல படம் இருந்தது, மேலே உமையின் ஆடையில் இருக்கும் வேலைப்பாடு கூட கிடைத்தது.


அடுத்து இருவருக்கும் நடுவில் ஏதாவது இருக்குமோ.அனைத்து ஓவியங்களிலும் இந்த பகுதியில் சிதைந்து விட்டது ( மொத்தம் நான்கு சுவர் ஓவியங்களை வைத்து நாம் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம் ) . சோமஸ்கந்தர் பற்றிய நமது தொடரை வாசிக்கும் நண்பர்கள், பொதுவாக சோமஸ்கந்தர் வடிவங்களில் தரையில் ஒரு கூஜா இருப்பதை கவனித்து இருப்பார்கள். இதோ இந்த மலை கடற்கரை கோயில் வடிவம் போல

அதனால் அதை நமது ஓவியத்திலும் போட்டுவிட்டோம்.

அடுத்து பிரம்மா. ஒரே ஒரு ஓவியத்தில் மட்டும், அவரது உருவம் தெரிகிறது. ( இரு கைகளையும் கூப்பி அஞ்சலி முத்திரையில் அவரை காட்டவேண்டும். மூன்றாம் பாகத்தில் திருத்தி விடுவோம் )

எப்படி அவரது மற்ற முகங்களை காட்டுவது என்று யோசிக்க, புள்ளமங்கை பிரம்மா நினைவுக்கு வந்தார்.
.

அவரை முன்மாதிரியாக வாய்த்த இந்த பிரம்மன் படத்தை வரைந்தாயிற்று.

விஷ்ணு உருவத்திற்கு இந்த நிலை இல்லை. ஒரு ஓவியத்தில் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் எங்கள் பணி எளிதாயிற்று.

அடுத்து குழந்தை முருகன்.

முருகன் – அழகன். அதுவும் குழந்தை முருகன் என்றால் !! சரியாக வரவேண்டுமே.

அருகில் சென்று படங்களை பார்க்கும் பொது தான் நாங்கள் முதலில் நினைத்ததைப் போல ஆசனத்தின் கால்களில் சிங்க வடிவங்கள் இல்லை என்பது தெரிந்தது.

அடுத்து உமை.


ஈசன், இந்த வடிவத்தின் நடு நாயகன் – மிகவும் நேர்த்தியாக வரவேண்டும் என்பதால், இன்னும் கவனமாக படங்களை ஆராய்ந்தோம். குறிப்பாக அவர் கை முத்திரைகள். ( ஒரு குறிப்பு மிகவும் உதவியாக இருந்தது – அது என்ன வென்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்) . இடது மேல் கரம் இங்கே பாருங்கள்.

ஈசனின் மகுடம். நிறைய வேலைப்பாடுடன் இருந்ததால் மிகவும் கடினமாக இருந்தது.

குறிப்பாக மகுடத்தில் உள்ள ஒரு அணிகலன். இதுவரை நாங்கள் பார்க்காததாக இருந்தது. எனினும் அந்த வடிவம் நாம் முன்னரே எங்கோ பார்த்த வடிவம். அப்போது திரு நாகசாமி அவரது செப்புத்திருமேனி (Masterpieces of South Indian Bronzes)நூலில் ஒரு குறிப்பு கிடைத்தது. பல்லவர் கால செப்ப்புத்திருமேனி ஒன்றில் இரு மகர ஒப்பனை கொண்டு இந்த அணிகலன் உள்ளது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

ஆம், அதே நம் ஓவியத்திலும்.


இப்போது ஒரு அளவிற்கு நமது ஓவியம் வந்து விட்டது. இன்னும் சிறு சிறு அமைப்புகளை சரி செய்து வண்ணம் பூசினால் முடிந்து விடும்.

அதற்கு, அடுத்த இறுதிப் பதிவு விரைவில் பார்ப்போம்.