எங்கே என் கோமணம், கோவணக் கள்வர்

என்னடா ? இப்படி ஒரு தலைப்பா என்று சிரிக்க வேண்டாம். இதுவும் ஒரு பெரியபுராண கதை தான். தாராசுரம் சிற்பம். அமர்நீதி நாயனார் புராணம்.

முதலில் சிற்பம் இருக்கும் இடத்தை பாருங்கள்.

அடுத்து கதை : ( நன்றி விக்கி)

வணிகத்தால் பெரும் பொருள் தேடிச் செல்வந்தராய் விளங்கிய இவர் சிவனடியார்க்குப் பணிசெய்வதையே தனது நாளாந்த தொண்டாகக் கொண்டிருந்தார். சிவனடியார்க்கு திருவமுது (உணவு), ஆடை, கீழ்கோவணம் அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார். சிவனடியார்களுக்குத் திருவமுது கொடுப்பதற்காகத் திருநல்லூரில் மடம் கட்டினார். திருவிழாக்காலங்களில் தம் சுற்றத்தவரோடு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது, உடை, கோவணம் என்பன அளித்து மகிழ்ந்தார்.

அன்பர் பணி செய்யும் அமர்நீதியாருக்குச் சிவபெருமான் அருள் புரியத் திருவுளங்கொண்டார். அவர் ஒரு நாள் அந்தணர் குலத்து பிரம்மச்சாரியாக கோலங்கொண்டார். கையில் இருகோவணம் முடிந்த ஒரு தண்டுடன் கோவண ஆடையுடன் திருநல்லூரில் உள்ள அமர்நீதியார் மடத்தை அடைந்தார்.

அவரைக் கண்டு அமர்நீதியார் மிக முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரித்தார். அமர்நீதியார் அவரை உணவுண்ண அழைத்தார். பிரம்மச்சாரியார் அவ்வேண்டுகோளிற்கிசைந்து காவிரியில் நீராடச் சென்றார். செல்லும் பொழுது மழை வரினும் வரும் எனக்கூறித் தமது தண்டில் கட்டி இருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறினார்.

அது எப்படி பட்ட கோமணம் , பாட்டை படியுங்கள்

பன்னிரண்டாம் திருமுறை

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=14&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவா றுமக்கே
ஈங்கு நான்சொல்ல வேண்டுவ தில்லைநீ ரிதனை
வாங்கி நான்வரு மளவும்உம் மிடத்திக ழாதே
ஆங்கு வைத்துநீர் தாரும்என் றவர்கையிற் கொடுத்தார்.

மேற்கூறிய குணநலம் சான்ற கோவணத்தின் பெருமையை உள்ளவாறு உமக்கு இங்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை. நீர் இதை வாங்கி நான் நீராடி வரும் வரையில் உம்மிடத்தில் பாதுகாப்பாக வைத்துப் பின் திருப்பித் தருவீராக என்று சொல்லி, அதனை அந்நாயனார் கையில் கொடுத்தார்.

அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் சேமித்து வைத்தார். எப்படி பட்ட இடம்

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=16&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

தந்த கோவணம் வாங்கிய தனிப்பெருந் தொண்டர்
முந்தை அந்தணர் மொழிகொண்டு முன்புதாம் கொடுக்கும்
கந்தை கீளுடை கோவண மன்றியோர் காப்புச்
சிந்தை செய்துவே றிடத்தொரு சேமத்தின் வைத்தார்.

மறையவராக வந்தவர் தந்த கோவணத்தை வாங்கிய ஒப்பற்ற பெருந்தொண்டர், முதன்மை பொருந்திய அந்தணராகிய அவர்தம் மொழியினை ஏற்றவராய், இதற்கு முன் தாம் அடியவர்களுக்குக் கொடுப்பதற்கென வைத்திருக்கும் கந்தை, கீள், உடை, கோவணம் எனும் இவற்றை வைத்திருக்கும் இடத்திலன்றிப் பாதுகாப்பான இடத்தை எண்ணி, அவ்விடத்தில் அதனைக்காவல் பொருந்திய தொரு தனியிடத்தில் வைத்தார்.

சிவனடியார் கோவணத்தை மறையும்படி செய்து மழையில் நனைந்தவராய் வந்தார். வைத்த கோவணத்தை கொண்டு வருமாறு கூறினார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=19&limitPerPage=1&sortBy=&sortOrder=தேசக்

தொண்டர் அன்பெனுந் தூயநீ ராடுதல் வேண்டி
மண்டு தண்புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்
தண்டின் மேலதும் ஈரம்நான் தந்தகோ வணத்தைக்
கொண்டு வாரும்என் றுரைத்தனர் கோவணக் கள்வர்.


தொண்டர்தம் அன்பு எனும் தூய நீரினில் ஆட விரும்பி, அவரை நோக்கிச் செறிவும் குளிர்ச்சியும் மிக்க நீரில் ஆடி வந்ததால், ஈரமுடைய கோவணத்தை மாற்றுதற்குத் தண்டின் மேல் உள்ளதும் ஈரமாகிய கோவணம் ஆதலின், நான் தந்த கோவணத்தைக் கொண்டு வருவீராக என்றுரைத்தார் கோவணக் கள்வர்.

சிற்பி இதை கவனித்து செதுக்கி உள்ளதை பாருங்கள்.

கோவணம் கொண்டுவரச் சென்ற தொண்டர் வைத்த இடத்தில் காணாது திகைத்தார். பிற இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் பிறிதொரு கோவணத்தை எடுத்துக்கொண்டு பிரமச்சாரியிடம் வந்தார். அடிகளே!, தாங்கள் தந்த கோவணத்தை வைத்த இடத்தில் காணவில்லை. அது மறைந்ததோ பெரும் மாயமாக உள்ளது. இது வேறு ஒரு நல்ல கோவணம்; இது ஆடையிற் கிழிக்கப்பட்டதல்ல. கோவணமாகவே நெய்யப்பட்டது. நனைந்த கோவணத்தை களைந்து (அகற்றி) இதனை அணிந்து அடியேனது குற்றத்தைப் பொறுத்து அருளுங்கள் என வேண்டினார்.

இதனைக் கேட்ட சிவனடியார் சீறிச் சினந்தார். அமர்நீதியாரே!, நாம் உம்மிடம் தந்த கோவணத்திற்கு ஒத்தது தண்டில் உள்ள இந்தக் கோவணம். இந்தக் கோவணத்திற்கு எடையான கோவணத்தைக் கொடுப்பீராக என்று கூறினார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=31&limitPerPage=1&sortBy=&sortOrder=தேசக்

உடுத்த கோவண மொழியநாம் உங்கையில் தரநீர்
கெடுத்த தாகமுன் சொல்லும்அக் கிழித்தகோ வணநேர்
அடுத்த கோவண மிதுவென்று தண்டினில் அவிழா
எடுத்து மற்றிதன் எடையிடுங் கோவண மென்றார்.

நாம் உடுத்தியிருக்கும் கோவணம் தவிர, உம்கையில் நாம் தர, நீர் அதனைப் போக்கியதாக முன் கூறிய அக் கிழிந்த கோவணத்திற்கு ஒப்பாகும் கோவணம் இதுவாகும்` என்று கூறி, தண்டில் கட்டியிருந்த கோவணத்தினை அவிழ்த்து எடுத்து, `இக் கோவணத்திற்கு ஒத்த எடையுடைய கோவணத்தை இடுவீராக` என்று தனது கோவணத்தை தராசில் இட்டார். ( இதையும் சிற்பி செதுக்கி உள்ளான் )

அதனை ஏற்றுக்கொண்ட அமர்நீதியார்,அதற்கு ஈடாகத் தம்மில் உள்ள நெய்த கோவணத்தை மற்றொரு தட்டில் வைத்தபோழுது அது நிறை போதாமையால் மேலெழுந்தது. அது கண்ட அமர்நீதியார், தாம் அடியார்களுக்குக் கொடுத்தற் பொருட்டு வைத்திருந்த கோவணங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இட்டார். அப்பொழுதும் அன்பரது தட்டு மேற்பட அடியாரது கோவணத்தட்டு நிறையால் கீழே தாழ்ந்தது. அந்நிலையில் அமர்நீதியார், தம்மிடம் உள்ள பொன், வெள்ளி, நவமணித் திரள் முதலிய அரும்பொருள்களையும் இட்டார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=39&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

தவநி றைந்தநான் மறைப்பொருள் நூல்களாற் சமைந்த
சிவன்வி ரும்பிய கோவண மிடுஞ்செழுந் தட்டுக்
கவனி மேலமர் நீதியார் தனமெலா மன்றிப்
புவனம் யாவையும் நேர்நிலா என்பது புகழோ.

தவத்தால் நிரம்பிய நான்மறைப் பொருளாக உள்ள நூல்களால் அமைந்ததும், சிவபெருமான் விரும்புதற்குரியதா யுள்ளது மான கோவணம், இட்டமேலான தட்டுக்கு, இவ்வுலகில் வாழும் அமர் நீதீயார் செல்வங்கள் மட்டுமேயன்றி, அனைத்துலகங் களும் கூட ஒப்ப நிற்கமாட்டா என்று சொல்வதும் அதற்கொரு புகழாமோ? ஆகாது என்பதாம்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=40&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

நிலைமை மற்றது நோக்கிய நிகரிலார் நேர்நின்
றுலைவில் பல்தனம் ஒன்றொழி யாமைஉய்த் தொழிந்தேன்
தலைவ யானுமென் மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையி லேறிடப் பெறுவதுன் னருளெனத் தொழுதார்.

இந்நிலைமையை நோக்கிய ஒப்பற்றவராகிய நாயனார், மறையவர் முன் நேர்நின்று, கெடுதல் இல்லாத பல்வகைச் செல்வங்களையும் ஒன்று கூட விடாமல் தட்டில் வைத்துள்ளேன்; என்னுயிர்த் தலைவ! யானும் என், மனைவியும், சிறுவனும் ஒப்பாதற் குரிய பொருளாமேல், துலையில் ஏறப் பெறுதற்கு உன் அருள் முன்னிற்பதாகுக எனத் தொழுதனர்.

அடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். படத்தை பாருங்கள், அம்மை அப்பன் நந்தியின் மேலே .

அமர்நீதியாரும் மனைவியாரும் மைந்தரும் சிவலோகவாழ்வினைப் பெற்று இன்புற்றார்கள்.

ஒரு கோவணத்தை வைத்துக்கொண்டு கூத்தபிரான் விளையாடிய திருவிளையாடல் பார்த்தீர்களா . அற்புத கதை மற்றும் சிற்பம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

திருமுடியினையே விளக்காக மாட்டி எரித்த கணம்புல்லர்

நண்பர்களே , சென்ற பதிவில் வெறும் தண்ணீர் கொண்டு விளக்கு எரிந்ததை பார்த்தோம். அப்போது இவ்வாறு எழுதினேன் ” விளக்கு எரிய வேறு ஒரு வஸ்துவை உபயோகித்த இன்னொரு நாயனார் கதையும் உண்டு.” அவர் கதையை இன்று பார்க்க போகிறோம். இன்னொரு தாராசுரம் பெரியபுராணம் சிற்பம் : கணம்புல்ல நாயனார்

வடவெள்ளாற்றுத் தென்கரையிலே அமைந்த இருக்கு வேளூரிலே அவ்வூர்க் குடிமக்களின் தலைவராய்த் திகழ்ந்தவர் கணம்புல்லர். அவர் சிவபக்தியும் பெருஞ்செல்வமும் உடையவராய் விளங்கினார். “மெய்ப்பொருளாவது திருவடியே” எனும் கொள்கையினரான இவர் செல்வப் பயன் திருவிளக்கெரித்தலே என்று எண்ணி திருவிளக்குப் பணிசெய்து வாயாரப் பாடி வழிபட்டு வந்தார். நெடுநாட்களாக இப்பணி செய்துவந்த நாயனார்க்குத் திருவருளாலே வறுமை வந்தெய்தியது. அதனால் ஊரைவிட்டு நீங்கித் தில்லையை அடைந்து தம் வீடு முதலியவற்றை விற்று விளக்கேற்றி வந்தார். அவரிடமிருந்த பொருள் யாவும் ஒழிந்து போகும் நிலை நேர்ந்தது. அவர் பிறரிடம் இரத்தற்கு நாணினார். தமது உடல் முயற்சியினால் அரிந்து கொண்டு வந்த கணம்புல்லினை விலைப்படுத்தி அப்பொருளினால் நெய் பெற்று விளக்கெரித்து வந்தார். அதனால் அவருக்கு கணம்புல்லர் என்று பெயராயிற்று.
சிற்பத்தின் முதல் பகுதியை பார்ப்போம்


ஒருநாள் அவர் கொண்டு வந்த புல் எவ்விடத்தும் விலை போகாதாயிற்று. விளக்கேற்றும் பணி முட்டாதிருத்தற் பொருட்டு அப்புல்லையே மாட்டி விளக்கெரித்தார். அப்போது , சிற்பத்தை மீண்டும் பாருங்கள்.

விளங்க வில்லையா – இன்னும் அருகில் சென்று சிற்பத்தின் அடுத்த பக்துதியை பார்ப்போம்


இப்போது பாடலை பாருங்கள்

பன்னிரண்டாம் திருமுறை

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1248&padhi=72&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

முன்புதிரு விளக்கெரிக்கும்
முறையாமங் குறையாமல்
மென்புல்லும் விளக்கெரிக்கப்
போதாமை மெய்யான
அன்புபுரி வார்அடுத்த
விளக்குத்தந் திருமுடியை
என்புருக மடுத்தெரித்தார்
இருவினையின் தொடக்கெரித்தார்.

இறைவரின் திருமுன்பு விளக்கு எரிக்கும் முறைப் படி தாம் கருதிய யாமங்களில் குறையாமல் விளக்கை எரிப்பதற்கு அப்புல் போதாமையால், மெய்ம்மை அன்பினால் திருத்தொண்டு செய்பவரான அந்நாயனார், அடுத்த விளக்காகத் தம் திருமுடியி னையே எலும்பும் கரைந்து உருகுமாறு தீயை மூட்டி எரித்தார். அதனால் இருவினைகளான தொடக்கை எரிப்பவர் ஆனார்.

பக்தி ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்ய தூண்டுகிறது பாருங்கள்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

இராவணனை வென்ற ஜடாயு

என்னடா? தப்பு தப்பா தலைப்பு போட்டுள்ளேன் என்று பலர் கூறுவது கேட்கிறது. முழுவதையும் படியுங்கள் அப்போது தான் புரியும். அதுவும் இதை நான் சொல்ல வில்லை – தேவாரப் பாடல் துணை உண்டு.
www.shaivam.org

திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்)

இரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

திறங்கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.

பொருளுரை:
(இறைவன் பால்) அடிமைத்திறம் மிக்க அடியவர்கள் மேல் தீவினையாகிய
நோய் வராத வண்ணம், அறத்தை அடிப்படையாகக் கொண்ட

சிவதருமத்தை உரைத்த பிரான் அமரும் இடமாவது,
போர்வெறி கொண்டு தன்னுடைய வலிமையையே நினைந்து (அறம் கருதாது)
வந்த இராவணனை வென்ற சடாயுவின் இடமான
திருப்புள்ளிருக்கு வேளூராகும்.

ஜடாயு இராவணனுடன் போரிட்டு மடிந்தான் என்று தானே படித்தோம். இது என்ன புதுக் கதை ? சரி சிற்பத்தை பார்ப்போம். ஜடாயு இராவணனு்டன் போரிடும் சிற்பம் மிகவும் சிலவே உள்ளன. பெரும்பாலும் ரவி வர்மா ஓவியமே கிடைக்கும்

எனினும் தேடி பிடித்தோம். ஒன்று நண்பர் முரளி அவர்கள் உபயம் – எல்லோரா கைலாசநாதர் கோயில் சிற்பம். மற்றொன்று இந்தோனேசியா பரம்பணன் ( அதை பின்னர் பார்ப்போம்) – இராவணன் வெறி கொண்டு ஜடாயுவை ஒரு பெரிய வாளால் தாக்கும் சிற்பம்.

அந்த வாள் தான் மிகவும் முக்கியம்.

சரி , யார் இந்த ஜடாயு?. முன்னர் கருடனின் கதையில் பார்த்தோமே – கருடனின் அண்ணன் அருணன் – சூரியனின் தேரோட்டி, அவனுடைய மைந்தன். அருணனுக்கு இரண்டு மகன்கள் – முதல் மகன் சம்பாதி , அடுத்து ஜடாயு. இருவரும் பறவைகள்.

கருடனின் அண்ணன்

ஒருமுறை இருவருக்கும் போட்டி – யார் உயரப் பறப்பது என்று. ஜடாயு ஆர்வத்தில் சூரியனின் மிக அருகில் செல்ல, அவனைத் தடுத்து சம்பாதி தன் சிறகுகளை விரித்து தன் தமையனை காத்தான். அப்போது அவனது சிறகுகள் கருகின . கிரேக்க ஐகாருஸ் கதை போல உள்ளதா? இது நான் கூறுவது அல்ல – கம்பன் கூறுவது ( முடிவில் ராம நாமம் ஜெபித்து சம்பாதிக்கு சிறகுகள் மீண்டும் முளைக்கின்றன )

சம்பாதி தன் முன்னை வரலாறு உரைத்தல்

‘தாய் எனத் தகைய நண்பீர்! சம்பாதி, சடாயு, என்பேம்;
சேயொளிச் சிறைய வேகக் கழுகினுக்கு அரசு செய்வேம்;
பாய் திரைப் பரவை ஞாலம் படர் இருள் பருகும் பண்பின்
ஆய் கதிர்க் கடவுள் தேர் ஊர் அருணனுக்கு அமைந்த மைந்தர்; 53

‘”ஆய் உயர் உம்பர் நாடு காண்டும்” என்று அறிவு தள்ள,
மீ உயர் விசும்பினூடு மேக்கு உறச் செல்லும் வேலை,
காய் கதிர்க் கடவுள் தேரைக் கண்ணுற்றேம்; கண்ணுறாமுன்,
தீயையும் தீக்கும் தெய்வச் செங் கதிர்ச் செல்வன் சீறி, 54

‘முந்திய எம்பி மேனி முருங்கு அழல் முடுகும் வேலை,
“எந்தை! நீ காத்தி” என்றான்; யான் இரு சிறையும் ஏந்தி
வந்தனென் மறைத்தலோடும், மற்று அவன் மறையப் போனான்;
வெந்து மெய், இறகு தீந்து, விழுந்தனென், விளிகிலாதேன். 55

‘மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல்,
கண்ணிடை நோக்கி, உற்ற கருணையான், “சனகன் காதல்
பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமன் பேரை
எண்ணிடை உற்ற காலத்து, இறகு பெற்று எழுதி”‘ என்றான்.

சரி சரி, மீண்டும் சிற்பத்தின் கதைக்கு வருவோம்.

http://www.dhool.com/phpBB2/viewtopic.php?p=631

124. மாச் சிச்சிரல் பாய்ந்தென மார்பினும் தோள்கள் மேலும்
ஓச்சி சிறகால் புடைத்தான் உலையா விழுந்து
மூச்சித்த இராவணனும் முடி சாய்ந்து இருந்தான்
போச்சு இத்தனை போலும் நின் ஆற்றல் எனப் புகன்றான்.

பெரிய மீன் கொத்திப் பறவை குறி தப்பாமல் மீனைப் பற்ற பாய்ந்தாற் போலச் சடாயு இராவணன் மேலே பாய்ந்தான். அவனது மார்பிலும் தோள்களிலும் சிறகுகளால் ஓங்கி அடித்தான். அதனால் வலிமை இழந்து கீழே விழுந்து மூர்ச்சையான இராவணன் தலை சாய்த்துக் கிடந்தான். அதைக் கண்ட சடாயு, ” உனது வலிமை, போய் விட்டது! உனது வலிமை இவ்வளவு தானா?” என்று இழிவாக கூறினான்.

125. அவ் வேலையினை முனிந்தான் முனிந்து ஆற்றலன் அவ்
வெல் வேல் அரக்கன் விடல் ஆம் படைவேறு காணான்
இவ் வேலையினை இவன் இன் உயில் உண்பென் என்னா
செவ்வே பிழையா நெடு வாள் உறை தீர்த்து எறிந்தான்.

வல்லவனான இராவணன் அப்போது மிகுந்த கோபம் கொண்டான். அவ்வாறு கோபித்த – கொடிய வேலை இயல்பாக ஏந்தி இருக்கும் அந்த இராவணன், அந்த நேரத்தில் சடாயுவின் மேல் செலுத்தத்தக்க ஆயுதம் வேறு இல்லாததைக் கண்டான். அதனால் ” இப்பொழுதே இவனது இனிய உயிரை அழிப்பேன் ” என்று முடிவு செய்து குறி தவறாமல் தாக்கும் ‘சந்திரகாசம்’ என்னும் பெயருடைய தனது நீண்ட வாளை, உறையில் இருந்து எடுத்து, சடாயுவின் மீது மிகச் சரியாக எறிந்தான்.

அது என்ன சந்திரகாசம். இராவணன் பலமுறை பலரிடம் தோற்று பொன்னன். நாம் வாலியிடம் அவன் தோற்றதைக் கூட முன்னர் பார்த்தோம்.

வாலியிடம் இராவணன் தோற்றான்

அதே போல அவன் கார்த்தவீரியார்ஜுனன் என்பவனிடமும் தோற்றான் ( சிற்பம் இன்னும் எதுவும் கிடைக்க வில்லை ). மேலும் ஈசனிடம் அவன் தோற்ற காட்சியை நாம் பல இடங்களில் பார்த்தோம். அவ்வாறு அவன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது ,பிறகு தனது கை நரம்புகள் மற்றும் தலை கொண்டு செய்த வீணையை மீட்டி சிவபெருமானின் ஆசி பெற்ற பின்னர் அவர் அளித்த பரிசே இந்த வாள். மேலும் படியுங்கள்
இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது

இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது 2

இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது 3

இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது 4

126. இராவணன் வாளால் சடாயு வீழ்தல்

வலியின் தலை தோற்றிலன் மாற்ற அருந்தெய்வ வாளால்
நலியும் தலை என்றது அன்றியும் வாழ்க்கை நாளும்
மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்னின் வேந்தன்
குலிசம் எரியச் சிறை அற்றது ஓர் குன்றின் வீழ்ந்தான்.

இராவணனது வலிமைக்கு முன்னே அதுவர சடாயு தோற்றான் அல்லன். ஆனாலும் எவறாலும் தடுக்க முடியாத சிவபெருமான் அளித்த- தெய்வத்தன்மை பொருந்திய அந்த வாளால் சடாயு வீழ்த்தப்படும் நேரம் வந்து விட்டது என்று ஆகிவிட்டது. அதுவன்றியும் அவனுடைய வாழ்நாளும் குறைவு பட்டு முடியும் கட்டத்தை அடைந்துவிட்டது. ( இந்திரனின் வஜ்ராயுதம் போல் பலம் பொருந்திய, அதை விடவும் பலம் பொருந்திய வாளால் ஜடாயுவின் சிறகுகள் வெட்டி வீழ்த்தப் பட்டன, ராவணனால். இந்திரனின் வஜ்ராயுதம் மலைகளைப் பிளக்கும் வல்லமை கொண்டது என்பதைக் குறிக்கும் விதமாய் மலை விழுந்ததைப் போல எனச் சொல்லி இருக்கின்றது. சந்திரஹாசம் என்னும் இந்த வாள் அத்தகையதொரு வலிமையுடனேயே ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தியது.)

இப்போது ஒப்புக்கொள்கிறீர்களா – இராவணனை வென்றவன் ஜடாயு என்பதை..

படம் – திரு முரளி , குறிப்புகள் / விளக்கங்கள் உதவி திரு சுப்ரமணியம் அவர்கள், திரு திவாகர் அவர்கள் மற்றும் கீதா அம்மா


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஒரே முகம் – இரு பாவங்கள்

கஜசம்ஹாரமூர்த்தி அல்லது யானை உரிபோர்த்திய மூர்த்தி வடிவம் தஞ்சை அருங்காட்சியக சிற்பம். இது தாராசுரத்திலிருந்து எடுத்து வந்தது.

நாம் முன்னரே புள்ளமங்கை பதிவில் இதே வடிவத்தை பார்த்தோம். இதே போல தில்லையிலும் உள்ளது

ஆனால் இது ஒரு அற்புத சிற்பம். இந்த சிற்பம் இரு ஜாம்பவான்களால் இவ்வாறு கூறப்பட்டது – ஒருவர் திரு குடவாயில் பாலசுப்ரமணியம், மற்றொருவர் சிற்பி திரு உமாபதி அவர்கள் ( உமாபதி அவர்கள் இதனை செப்பு தகடு கொண்டு வடித்த வடிவம் இதோ )


சரி – இந்த வடிவத்தில் அப்படி என்ன புதுமை என்று திரு குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயாவை கேட்டேன். இதே வடிவங்கள் மற்ற இடங்களிலும் உள்ளன … ( இதே சிற்பம் தில்லையிலும் உள்ளது ) அவர் அளித்த அருமையான விளக்கத்தை உங்களுடன் பகிர்கிறேன்

இந்த சிலையின் / வடிவத்தின் அருமை, அதை சிற்பி கையாண்ட முறை.

இதை விளக்க என்னிடத்தில் அப்போது சரியான படம் இல்லை – அதனால் பெங்களூரை சேர்ந்த தோழி திருமதி லக்ஷ்மி ஷரத் அவர்கள் சென்ற வாரம் தஞ்சை சென்ற பொது இந்த சிற்பத்தை படம் எடுத்து வர சொன்னேன். ( அமெரிக்கா தோழி காதி இரண்டு படங்கள் தந்து உதவினார்! )

இதோ படங்கள். இப்போது முதலில் காட்சியை பாருங்கள், என்ன காட்சி?

தாருகாவனத்தில் ரிஷிகள் ஏவிய யானையைக் கொன்று அதன் தோலை அணிந்தவன்.

இதோ தேவாரம் குறிப்பு.

சம்பந்தர் தேவாரம் – திருமுறை 1.10.8

ஒளிறூபுலி அதள்ஆடையன் உமைஅஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட அடர்த்தான்இடம் அண்ணாமலை அதுவே.

ஒளி செய்யும் புலித் தோலை ஆடையாகக் கொண்டவனும், உமையம்மை அஞ்சுமாறு பிளிறும் குரலை உடைய மதம் பொருந்திய யானையின் தலையைப் பிடித்து அதன் தோலை உரித்து எளிதாக விளையாடிய விகிர்தனும், இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி இரத்த வெள்ளத்தில் அடர்த்தவனும் ஆகிய சிவபெருமானது இடம் திருவண்ணாமலை.

முதலில் அவன் ஆடும் அழகு, வலது காலை பாருங்கள்,யானையின் தலையில் மேல் ஊன்றி, நாம் முன்நின்று பார்க்கும் பொது அவன் நம்மை நோக்கிஇராமல் – பின்புறம் தெரிய உடலை எவ்வாறு முறுக்கி ஆடுகிறான்.

இரு புறமும் நான்கு கரங்கள், மேல் வலது கரத்தை பாருங்கள், யானை தொலை கிழித்து வெளி வரும் விரல்கள், சரி கிழே இடது கரம், நம்மை அங்கே இருக்கும் இருவரை பார்க்க சொல்கிறது ,யார் அவர்கள் ?

ஆஹா, ருத்ரன் வெகு கொடூரமாக ஆடும் ஆட்டத்தை குழந்தை முருகன் பார்க்காமல் இருக்க அம்மை அவனை தன் இடுப்பில் இட்டு தன் உடல் கொண்டு மறைக்கிறாள்,அதை காணும் ஈசனோ புண் முறுவல் புரிகிறான்.


3.86.1:
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=3&Song_idField=3086&padhi=126+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள் வெருவமுன்
வெறியுறு மதகரி யதள்பட வுரிசெய்த விறலினர்
நறியுறு மிதழியின் மலரொடு நதிமதி நகுதலை
செறியுறு சடைமுடி யடிகடம் வளநகர் சேறையே

சிவபெருமான், தளிர் போன்ற நிறமும், அரும்பு போன்ற முலையுமுடைய உமாதேவி அஞ்சுமாறு, மதம் பிடித்த யானையின் தோலை உரித்த வலிமையுடையவர். நறுமணம் கமழும் இதழ்களை உடைய கொன்றைப் பூவோடு, கங்கை நதியையும், பிறைச்சந்திரனையும், மண்டையோட்டையும் நெருங்கிய சடை முடியில் அணிந்துள்ள அவ்வடிகள் வீற்றிருந் தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
—————–
4.51.10:
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=4051&padhi=051&startLimit=10&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

பழகநா னடிமை செய்வேன் பசுபதீ பாவ நாசா
மழகளி யானையின் றோன் மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே யரக்கன் றிண்டோ ளருவரை நெரிய வூன்றும்
குழகனே கோல மார்பா கோடிகா வுடைய கோவே

கோடிகா உடையகோவே ! ஆன்மாக்களின் தலைவனே ! பாவங்களைப்போக்குபவனே ! இளைய மதமயக்க முடைய யானையின் தோலைப் பார்வதி அஞ்சுமாறு போர்த்த அழகனே ! அரக்கனாகிய இராவணனுடைய வலிய தோள்கள் கயிலை மலையின் கீழ் அகப்பட்டு நெரியுமாறு கால்விரலை அழுத்திய அழகனே ! நின் தொண்டிற் பழகுமாறு நான் அடித்தொண்டு செய்வேன்.
——————–

( நன்றி .. எனக்கு உதவியவர்கள் : திரு வி.சுப்பிரமணியம் அவர்கள் மற்றும்
திவாகர் ஐயா )

இதை எப்படி சிற்பத்தில் காட்டுவது, படத்தை பாருங்கள்,முகத்தில் வலது புறம், ,கோவத்தில் வில்லென மேல் விரியும் புருவம், அதே முகத்தின் இடது பக்கம்,உமையை பார்க்கும் பக்கம்,ஆஹா புருவம் அழகாக வளைந்து உள்ளது , புன்முறுவல்.


33733386
இரு பாவங்களை ஒரே முகத்தில் கொண்டு வருகிறது இந்த சிற்பம் ( இதை போல புன்முறுவல் ஓவியம் உலக புகழ் பெற்றுள்ளது… …ஆனால் அதை விட கடினாமான கல்லில் உள்ள இந்த சிற்பம் தஞ்சையில் ஒரு ஓரத்தில் கிடக்கிறது…)

.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

புல்லரிக்கும் புள்ளமங்கை அர்த்தநாரீஸ்வர கோலம் – திரு சதிஷ் அருண்

இன்றைக்கு நமது குழுவில் ஒரு புதிய நபர் வருகை / சேர்கை – ஒரு கலை ஆர்வலர் – இன்று தன் ரசனையை நம்முடன் முதன்முறையாக பகிர்கிறார். திரு சதிஷ் குமார் அருணாசலம் அவர்கள், தற்போது அமெரிக்காவில் கணிபொறி நிபுணராக பணிபுரயும் இவர் தான் புள்ளமங்கை சென்ற அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார். இனி திரு சதீஷ் அவர்கள்

இதுவரை விஜய் அவர்களின் படைப்புகளை படித்தவர்களுக்கு, புள்ளமங்கை கோயில் நன்கு பரிச்சயமாகி இருக்கும். புள்ளமங்கை ஒரு கலைப்பெட்டகம். 1000 ஆண்டுகளுக்கு முன் சிற்பிகள் உளியை கொண்டு செதுக்கிய அற்புத ஓவியங்கள். நம் கை விரல்களை அகட்டினால், கட்டை விரல் நுனியிலிருந்து சுண்டு விரல் நுனி வரை உள்ள அளவில் பல அற்புத சிற்பங்களை தன்னகத்தே கொண்டுள்ள புள்ளமங்கை கோயில் பார்க்கப் பார்க்க திகட்டாதது.

புள்ளமங்கையை நினைவுக்கு கொண்டுவர – கீழே உள்ளவரை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்.

இங்குள்ள கை அளவு சிற்பங்கள் சிறப்பு மிக்கவை என்றாலும், இந்த தரவில் விமானத்தின் மீதுள்ள ஒரு அழகோவியத்தைப் பார்ப்போம்.

தாயே மூகாம்பிகே என்ற படத்தில் இளையராஜா அவர்கள் பாடிய ஜனனி ஜனனி பாடல், எனக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. அதில் வரும் வரிகள் –

“சதுர்வேதங்களும், பஞ்ச பூதங்களும், ஷண்மார்க்கங்களும், சப்த தீர்த்தங்களும், கொண்ட நாயகனின், குளிர் தேகத்திலே, நின்ற நாயகியே, இட பாகத்திலே.”

திருஞானசம்பந்தர், திருச்சிராப்பள்ளியில் அருளிய பதிகத்தில்,

“நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே” (தேவரம் 1.98.1)

(நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை, மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடுபேறாகிய செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளி யுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும். – நன்றி – www.thevaaram.org)

என்றும்,

அப்பர், திருகோடிகாவில் ஈசனை,

“பூணர வாரத் தானே புலியுரி யரையி னானே
காணில்வெண் கோவ ணம்முங் கையிலோர் கபால மேந்தி
ஊணுமோர் பிச்சை யானே யுமையொரு பாகத் தானே
கோணல்வெண் பிறையி னானே கோடிகா வுடைய கோவே” (4.51.5)

(கோடிகா உடைய தலைவன், வளைந்த பாம்பை மாலையாகப் பூண்டு புலித்தோலை இடையில் உடுத்து வெண்கோவணம் தரித்து, கையில் மண்டையோட்டை ஏந்தி, தாருகாவனத்துப் பெண்களைத் திருத்த உணவு கேட்டு பிச்சாண்டியாய் – பிச்சாண்டிவந்தவனை பார்வதிபாகனாய் குறுகிய வெள்ளிய பிறையைச் சூடியவனாய் உள்ளான். நன்றி – www.thevaaram.org )

என்றும் பாடுகிறார்கள். இப்படி பலரும் பாடிய ஈசனின், ஒரு அழகிய கோலத்தைத்தான் இப்பொழுது நாம் பார்க்கப் போகிறோம்.

என்ன கோலம் என்று ஊகித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆம், அர்த்தநாரீஸ்வரன் என்றும், அம்மையப்பன் என்றும், உமை ஒரு பாகன் என்றும், பல பெயர்களில் அழைக்கப்படும் கோலம்தான் அது.

ஒரு பாதி ஆண், மறு பாதி பெண் என்று தன் உடம்பில் சரி பாதியை உமைக்கு கொடுத்த ஈசனின் கோலம்தான் உமை ஒரு பாகன். இதன் புராணத்தை அறிய, இந்த சுட்டியை பாருங்கள்

இப்பொழுது, சிற்பத்தைப் பார்ப்போம்.


இடது பக்கம் பார்த்தால், பெண்மையின் மிளிர்வு.

வலது புறம் பார்தால், ஆண்மையின் கம்பீரம். ஒரே முகத்தில், இப்படி பெண்மையையும், ஆண்மையையும் ஒரு சேர கொணர்ந்த அந்த சிற்பியை என்னவென்று பாராட்டுவது?

டாக்டர் கலைக்கோவன் அவர்கள், ‘சோழ சிற்பிகள், உடல் கூறுகளை
(anatomy) நன்கு அறிந்தவர்கள்’ என கூறக்கேட்டிருக்கிறேன். இந்த சிற்பமும் அதற்கு சான்று.

அம்மையின் சிற்றிடையும், ஒய்யாரமாய் நிற்கும் பாங்கும், அப்பனின் திண்தோள்களும், கம்பீரமாய் ரிஷபத்தில் மீது சாய்ந்திருக்கும் கோலமும் ஒருங்கே நம் கண் முன் கொண்டு வந்த சிற்பி மறைந்த பின்னும், அவன் விட்டு சென்ற கலைப்பொக்கிஷம் இன்றும் நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

இந்த கலைப்பெட்டகத்தை வரலாறு (www.varalaaru.com) குழுமத்துடன் பார்க்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. விமானத்தின் மீது ஏறி அர்த்தநாரீஸ்வரனை பார்க்க, அங்கு இருந்த ஒரு கோயில் பெரியவர் ஏணி தந்து உதவினார். அவரே, நாங்கள் சிற்பங்களை ஆவலாய் பார்ப்ப்தை கவனித்துவிட்டு, விமானத்தின் மீதுள்ள சிற்பத்தை பார்க்க ஏணி கொண்டு வந்து கொடுத்தார். இருட்டும் வரை பார்த்து மகிழ்ந்துவிட்டு, இரயிலுக்கு நேரமாகிவிட்டதால் புறப்படும் பொழுது, அவருக்கு மனமார நன்றி கூறிவிட்டு அவரிடம் அவர் பெயரைக் கேட்டோம். அவர் பெயர் ஏற்படுத்திய புல்லரிப்பு, இரவு இரயில் புறப்பட்ட பின்பும் குறைய வில்லை. ஏனெனில் அவ்ர் தன் பெயர் ‘அம்மையப்பன்’ என்று கூறினார்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

காமனை எரிக்கும் ஈசன் – தஞ்சை பெரிய கோயில்

இன்று மீண்டும் சில அற்புதமான தஞ்சை பெரியகோவில் சிற்பங்களை காண்போம் – காமதேவனை எரித்த கயிலை சிவன் ( திரு சதீஷ் அவர்கள் படம் எடுக்க மட்டும் அல்ல நல்ல தமிழ் ஆற்றல் உடையவர் என்று இன்றுதான் அறிந்தேன் – இதோ அவரது படங்கள் மற்றும் வர்ணனை )

முதலில் காமதேவனை பற்றிய சில குறிப்புகள் – மன்மதன், உருவிலாளன், கருப்புவில்லி, கரும்பன், நாரன், புட்பரசன், மகரக்கொடியோன், மதனன், மாரன், மான்மகன், வசந்தன், வேனிலான் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் காமதேவன் தேவர்கள் யாவரிலும் அழகு மிகுந்தவன். காதல் தெய்வமான, மகரக்கொடியுடைய மன்மதனின் ஆயுதங்கள் என்னவோ ரீங்காரமிடும் வண்டுகளை நாண்களாக உடைய கரும்பாலாகிய வில்லும், ஐந்து மலரினாலாகிய அம்புகளும்தான், இவன் தன் ஆயுதங்கள் மெலிதாயினும் அதன் வலிமையோ வெல்வதற்கரிது. தன் மனைவி ரதியோடு வாகனமாகிய கிளியில் அமர்ந்து, தென்றலாகிய தேரில் வலம் வரும்பொழுது, தென்படுவோர் யாவரும் தென்றலால் மனம் இளக, ரதி தேவி இச்சையை உண்டாக்க, காம பாணத்தை செலுத்துவார் காமதேவன், இதில் வீழ்ந்தோர் தப்பித்ததில்லை.

(சில மாதங்களுக்கு முன் அகத்தியர் குழுமத்தில் திரு. K. Shrikanth அவர்கள் எழுதிய காமபாணத்தை பற்றிய கட்டுரையில் இருந்து சில தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.) பஞ்சபாணம் எனப்படும் மன்மதனின் பாணம், தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை மற்றும் குவளை (நீலோத்பலம்) மலர்களால் ஆனவை. இந்த ஐந்து மலர்கணைகளையும் உடம்பின் வெவ்வேறு பாகங்களில் செலுத்த உண்டாகும் விளைவுகளும் ஐந்துவகை. மார்பைத் தாக்கும் தாமரை உன்மத்தம் எனும் போதையைத் தர, மெல்லிய உதடுகளை தாக்கும் அசோகம் தன் துணையை நினைத்து ஏங்கி புலம்பச் செய்ய, முல்லையோ கண்களைத் தாக்கி உறக்கத்தை கெடுக்க, மாம்பூவோ தலையை தடவி காதல் பித்து கொள்ளச் செய்ய, முடிவில் நீலோத்பலம் எனும் குவளை மலர்க்கணை விரகதாபத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்று உணர்விழக்கச் செய்யும்.

(காண்க: http://manoranjitam.wordpress.com/2008/01/21/legend-of-kaama/)

காமனின் அறிமுகம் போதும், இனி நம் கதைக்கு வருவோம்.

இந்த கதையும் சிற்பங்களும் நாம் முன்னே கண்ட தக்ஷன் தலையக் கொய்த ஈசன் கதையின் தொடர்ச்சியாகவே வருகிறது. தன் மணாளனான மகேசனுக்கு யாகத்தின் பொழுது சேரவேண்டிய அவிர்பாகத்தை தராமலும் தன்னை மகள் என்றும் பாராமல் தட்சனால் தானும் தன் மணாளனும் அவமானப்பட்டதை தாங்க முடியாமல் தாட்சாயணி யாகாக்கினியில் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறாள். இதனால் மனமுடைந்த ஈசன் சக்தியில்லையேல் சிவமில்லை என நினைத்து யோகத்தில் ஆழ்ந்து விடுகிறார்.

அழிக்கும் கடவுளாகிய பரமசிவன் தவத்தில் ஆழ்ந்துவிட்டதால் தீயசக்திகளின் கொட்டத்தை கேட்கவா வேண்டும். இந்த சமயத்தில் தாரகாசூரன் எனும் அசுரன் பற்பல ஆண்டுகளாக பிரம்மனை நோக்கி கடுந்தவம் செய்தான். அவனது தவத்தின் உறுதியை கண்ட பிரம்மன் வேறுவழியின்றி அவன் முன் தோன்ற, வழக்கம்போல் சாகாவரம் கோரினான் அசுரன். பிரம்மன் மறுக்கவே சிவனின் ஆழ்ந்த தவத்தையும் சக்தியின் மறைவையும் அறிந்திருந்த அசுரன் புத்திசாலித்தனமாக (அல்லது அவ்வாறு நினைத்துக் கொண்டு) சிவனின் குமாரனைத் தவிர வேறு யாராலும் தனக்கு எந்தவித துன்பமும் நேரக்கூடாது எனக்கோரி வரத்தைப் பெறுகிறான்.

வரம்பெற்ற அசுரனின் நடவடிக்கைகள் வரம்பு மீறுகிறது, அனைத்து உலகங்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் கொடுமைப் படுத்தி துன்பத்தில் ஆழ்த்திவிட்டான். தேவர்கள் யாவரையும் ஒருவர் பின் ஒருவராக வெற்றி கொண்டு அவர்களிடம் உள்ள பெறுதற்கரிய பொக்கிஷங்களை பிடுங்கிக் கொண்டு அவர்களை சிறைப்படுத்தினான். அமிர்தமதனத்தின் பொழுது கிடைத்த ஐராவதம், உச்சைசிரவம் முதலியவற்றை இந்திரனிடம் இருந்தும், கேட்டதெயெல்லாம் கொடுக்கும் காமதேனு பசுவை ஜமதாக்கினி முனிவரிடம் இருந்தும், குபேரனின் அரிய ஆயிரம் குதிரைகளையும் பிடுங்கிக் கொண்டதோடல்லாமல், வாயுவையும் தன் விருப்பத்திற்கு ஆட்டி வைத்தான். சூரிய வெப்பத்தை அடக்கி குளிர்ந்த சந்திரனையே எப்பொழுதும் பிரகாசிக்கச் செய்தான். இவன் கொடுமைகளை தாங்க இயலாமல் தேவர்கள் அனைவரும் தங்கள் உல்லாச அரண்மனைகளை துறந்து கானகங்களில் ஒளிந்து திரிந்து வாழ்ந்துவந்தார்கள்.

அசுரனுக்கு பயந்து மறைந்து வாழ்ந்த தேவர்கள் ஒன்றுகூடி அசுரனை அழிக்க ஆலோசித்தனர், அந்த நேரத்தில் அனைவரும் ஒட்டுமொத்தமாக அசுரனுக்கு வரமளித்த பிரம்மனை நிந்தித்தனர். தேவர்களின் துன்பத்தை கண்ட பிரம்மன், தான் அளித்த வரத்தில் உள்ள சூட்சுமத்தை தேவர்களுக்கு எடுத்துரைத்தார். ஆழ்ந்த தவத்தில் இருக்கும் ஈசனின் தவத்தை கலைப்பது எவ்வாறு என்று தேவர்கள் ஆலோசனையில் இறங்கினர்.

இதற்கிடையே பிள்ளைபேறு வேண்டிய இமவானின் தவத்திற்கிணங்கி, உமையாள் “பார்வதி” என்ற பெயருடன் இமவான், மனோரமா தம்பதிகளின் மகளாக பிறந்து வளர்ந்து வருகிறாள். ஈடிணையில்லாத அழகியாக வளர்ந்த பார்வதி பருவமடைந்தவுடன் தன் உண்மை நிலை அறிந்து மகேசனிடம் மனதை செலுத்தி தவம் மேற்கொள்கிறாள்.

இதனை உணர்ந்த இந்திரன் முதலானோர் மன்மதனை அழைத்து தங்கள் கோரிக்கையை வைத்து இறைஞ்ச காமதேவன் பயத்துடனும், தயக்கத்துடனும் ஏற்றுக்கொள்கிறான். இதனை தொடர்ந்து சகல ஆயத்தங்களுடன் கயிலையை நோக்கி பயனிக்கிறான். கவலையினாலும் சினத்தாலும் மோனத்தில் இருந்த பவளமேனியானின் வண்ணம் நெருப்புக் கனலாகத் தெரியவும், கயிலையில் சகலமும் ஒடுங்கி நிசப்தமாயிருப்பதைக் கண்டும் செய்வதறியாது பல காலம் திகைத்து நின்றான்.

இப்படி செய்வதறியாது நின்ற காமனின் கண்களில் தன் உள்ளம் கவர்ந்த நாயகனின் ஆராதனைக்காக மலர்கள் பறிக்க வந்த பார்வதி தேவி கண்ணில் பட, இதுதான் தக்க சமயமென நினைத்து தன் மலர்கணையை நாணேற்றிவிட அதுவும் குறி தவறாமல் மகேசனின் மார்பை ஸ்பரிசித்தது. கோபாக்கினி ஒளிர திடுக்கிட்டு தவம் கலைந்த கையிலைநாதனின் கண்களில் மலர்கள் பறித்துக் கொண்டிருந்த கனிவான, அழகு மிளிரும் பார்வதி தேவியின் முகம் தெரிய அவரது மனம் கனிந்தது. அடுத்த கணமே தவம் களைய காரணமான மன்மதன் அவர் கண்களில் தெரிய கோபத்தில் நெற்றிக்கண் திறந்து காமதேவன் சாம்பலானான்.

இதனைக் கண்ட ரதி தேவி அழுது புரண்டு இறைவனை வேண்ட பரமனும் மனம் இளகி காமதேவனுக்கு அருவுருவ (சூட்சும) உடலளித்து அவன் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரிவான், உண்மை காதலின், அன்பின் உருவமாய் இருப்பான் என்று அருள் செய்தார்.

இதன்பிறகு முருகன் (கந்தன்) பிறந்து கொடிய அசுரர்களை அழித்து தேவர்களை காத்த கதையை நாமறிவோம். (காளிதாசனின் குமார சம்பவத்தில் இந்தக் கதை மிகவும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது)

சற்றே நீளமான பதிவாயினும் சுவாரசியமானதல்லவா, இனி சிற்பங்களை காண்போம்.

முதலாவதாக முழு சிற்பத் தொகுதிகளையும் பார்க்கலாம், மேற்பாக முதல் வரிசையில் சிவயோகிகள் இருக்க, கீழே கடைசி வரிசையில் பயபக்தியுடன் சிவகணங்கள் இருக்க, மொத்த கதையும் மூன்று காட்சிகளில் விளக்கப்பட்டுள்ளது.

முதல் காட்சி, ஆழ்ந்த தவத்தில் இருக்கும் சிவன், மிகச் சிறிய சிற்பமாயினும் சிவனின் கண்கள் மூடியுள்ளதை மிக நுணுக்கமாக வடித்துள்ள சிற்பியின் கலைத்திறனை கட்டாயம் பாராட்ட வேண்டும். வசீகர காமவேந்தன் மலர்க்கணையை சிவனை நோக்கி குறிவைக்கிறான். (காமதேவனின் இதழ்களில் புன்சிரிப்பு தெரிகிறதா? சற்றே கூர்ந்து கவனியுங்கள்!)

இரண்டாவது காட்சியில் முதலில் வருவது, வீழும் காமன், அழுது புலம்பும் ரதி. அடுத்த சிற்பம் சற்றே சிதைந்திருந்தாலும் வீழும் காமனை அழகாய் காட்டுகிறது. தலையில் அடித்துக் கொண்டு அழும் ரதியையும் பாருங்கள். (தென்னிந்தியாவின் துக்க வீடுகளில் இது போன்ற காட்சிகளை காணலாம்)

முடிவாக, இரண்டாவது காட்சியின் வலப்புறம் காண்பது பயபக்தியுடன் மீண்டெழுந்த மன்மதனும் மகிழ்ச்சியில் திளைக்கும் ரதியும் சிவனிடம் ஆசிபெறுகிறார்கள், பூதகணங்களும் சூழ்ந்திருக்கின்றன.

இதை காணும்பொழுது கம்போடியாவிலுள்ள பண்டியா ஸ்ரெய் காம்ப்ளக்ஸில் உள்ள இதே போன்ற சிற்பங்களை நினைவுபடுத்துகிறது. இந்த சிற்பங்களை பிறகு தனிப் பதிவில் பார்க்கலாம்.

பன்னிரு திருமுறை குறிப்பு – இதோ ( நன்றி திரு வி. சுப்பிரமணியன் ஐயா அவர்கள் )

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=41030&padhi=103&startLimit=3&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC


தூமென் மலர்க்கணை கோத்துத்தீ வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடனாகைக் காரோணநின்
நாமம் பரவி நமச்சிவாய வென்னும் மஞ்செழுத்தும்
சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே

தூய மெல்லிய பூக்களாகிய அம்புகளைக் கோத்துக் காமாக்கினியை வளர்க்க முற்பட்ட மன்மதன் சாம்பலாகுமாறு கோபித்த கடல்நாகைக் காரோணனே ! எங்கள் சங்கரனே ! உன் திருப் பெயரை முன்நின்று துதித்து நமசிவாய என்ற திருவைந்தெழுத்தையும் அடியேன் உயிர்போகும் பொழுது சொல்லும் பேற்றினை நல்கு வாயாக.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1228&padhi=72&startLimit=476&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அடியாராம் இமையவர்தங் கூட்டம் உய்ய
அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே செங்கண்
நெடியானும் நான்முகனுங் காணாக் கோல
நீலவிட அரவணிந்த நிமலாவெந்து
பொடியான காமன்உயிர் இரதி வேண்டப்
புரிந்தளித்த புண்ணியனே பொங்கர் வாசக்
கடியாரும் மலர்ச்சோலை மருங்கு சூழும்
கவின்மருகற் பெருமானே காவாய் என்றும்.

`அடியவர்களாகிய தேவர்களின் கூட்டம் முழுதும் உய்யும் பொருட்டாய் அலைபொருந்திய பாற்கடலினி டத்துத் தோன்றிய நஞ்சையுண்டருளிய அமுதமே! சிவந்த கண் களையுடைய நீண்ட திருமாலும் நான்கு முகங்களையுடைய நான்முக னும் காணாத கோலம் உடைய நீலநிறமுடைய நச்சுப் பாம்புகளை அணியாய் அணிந்த விமலனே! வெந்து சாம்பலாகிவிட்ட காமனின் உயிரை அவன் மனைவியான இரதியின் வேண்டுதலுக்கு இணங்க மீண்டும் அளித்த புண்ணியனே! மலர்களின் மணம் மிக்க சோலைகள் எங்கும் சூழவுள்ள அழகுடைய திருமருகலில் வீற்றிருக்கும் இறை வனே! காப்பாயாக!’ என்று கூறியவள் பின்னும்,


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

எமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான், சாம்பசிவ பக்தன் என்றால் தொடமாட்டான்

இன்று மீண்டும் திரு சதீஷ் அவர்களின் உதவியால், தஞ்சை பெரிய கோவிலிலுள்ள, எனக்கு மிகவும் பிடித்த சிற்பத்தின் அற்புத புகைப்படம் கிடைத்துள்ளது.

காரணம்? சிறு வயதில் என்னை உறங்க வைக்க என் தந்தையார் எனக்கு இந்த கதையை பாட்டாக படிப்பார். இன்றும் நினைவில் உள்ளது. என் மகனும் இந்த பாட்டைகேட்டால் தூங்கிவிடுவான்

எமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான்
சாம்ப சிவா பக்தன் என்றால் தொடமாட்டான்
சிவ சிவ சிவ என்ற நாமம் சொல்லடா
மானுடனே உனக்கிதில் பாரம் என்னடா

மார்க்கண்டேயனின் கதை நாம் அனைவரும் அறிந்ததே. ம்ருகண்டு முனிவரும் அவரது துணைவி மருடவதி பிள்ளைப் பேறு வேண்டி கடுந்தவம் புரிந்தனர். தவத்தின் பயனாக அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், ,” அறிவிலர்களாய் நூறு பிள்ளைகள், இல்லையேல் அறிவு ஜீவியாய் பதினாறே ஆண்டுகளே ஆயுள் உள்ள மகன், இதில் ஒன்றை தேர்ந்து எடு்ப்பீர்களாக,” என்றார். எதிர்பார்த்தபடியே அறிவில் சிறந்த பிள்ளையை அவர்கள் வேண்ட அவ்வாறே ஒரு மகனை அவர்கள் பெறுகின்றனர். மார்கண்டேயன் என்று பெயர் சூட்டி, அன்பும், அறமும் திகழ வளர்கிறது குழந்தை.

பாலகன் பதினாறு வயதை நெருங்க நெருங்க, பெற்ற மனங்கள் பதறுகின்றன. பெற்றோரின் கவலை முகங்கள் கண்டு துளைத்துத் துளைத்துச் சிறுவன் வினவ,அவர்களும் தங்கள் தவப்பயனாக அவன் பிறந்தாலும், அதிலுள்ள நிபந்தனையான 16 வயதில் மரணமெனும் செய்தியையும் கூறி அழுகின்றனர். காலனின் ஈசனே தனக்கு நித்திய பூஜா மூர்த்தியாய் இருக்கையில், மரணம் தன்னை நெருங்காது எனும் தீர்க்க முடிவோடு, மார்க்கண்டேயன் தினந்தோறும் சிவ லிங்க பூஜையில் ஈடுபடுகிறான். அவ்வாறே, குறிப்பிட்ட நாள் வருகையில், எமன் தனது பாசக் கயிற்றை வீச தக்க தருணத்தை எதிர் நோகியுள்ளான்.

மார்க்கண்டேயனோ, எமனுக்கு அஞ்சி ஓடி, சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்தவாறு உயிர் பிச்சைக்கான பூசையிலுள்ளான்! காலம், காலன் இரண்டும் நிற்காதல்லவா? பொறுமை இழந்த எமன் தன் பாசக்கயிற்றை மார்க்கண்டேயனை நோக்கி வீசுகையில், சிவலிங்கத்திலும் சேர்ந்தே விழுகிறது. தன் பக்தன் தன்னை ஆலிங்கனம் செய்து பூசை செய்வதைக் கூட மதியாமல், தன் பணியை செய்த (!) எமனின் செயலால் கோபம் கொண்ட சிவன், லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு, காலால் காலனை எட்டி உதைக்கிறார். ஆனால், காலன் தனது பணியைச் செய்வதையே சிவனாரே தடுத்த மாதிரி ஆகிவிடுமல்லவா? எனவே, மார்க்கண்டேயனின் ஆயுள் ‘என்றும் பதினாறு’ என்ற அரிய வரம் தந்து அருள்கிறார்.

இதுவே கதை – இப்போது சிற்பம். மூன்று காட்சிகள் – மேல் இருந்து கீழ்.
முதல் காட்சி:

காலன் மார்கண்டேயனை துரத்தி வர, அவன் சிவ லிங்கத்தை கட்டிக்கொண்டு இருப்பது போல அற்புதமான சிற்பம்.

அடுத்து, ஈசன் காலனை உதைத்து கீழே விழும் எமன். ( ஒரு வருடம் முன்னர் நண்பர் ஸ்ரீவத்சன் எடுத்த படத்தையும், இப்போது சதீஷ் எடுத்த படத்துடன் ஒப்பிட்டிப் பாருங்கள் – ஈசன் கையில் இருக்கும் சூலம் – இப்போது முழுவதுமாக சிதைந்து விட்டது !!!)

கடைசி காட்சி – சாகா வரம் பெற்ற மார்கண்டேயன் தன் இரு கை கூப்பி ஈசனை வணங்குகிறான்

இதோ அப்பர் இந்த கதையை அற்புதமாக பாடியிருக்கும் தேவாரம்:

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=4107&padhi=113+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே

தன்னை மயக்கிய யமபயமாகிய துன்பம் தீருமாறு அக்காலத்தில் அர்ச்சித்த பிரமசாரியான மார்க்கண்டேயனுக்காகக் கரிய உடம்பு, வளைந்த ஒளி பொருந்திய பற்கள் தீயைப் போன்ற சிவந்த மயிர்முடி, மடித்த நா இவற்றை உடைய கொடிய கூற்றுவன் உடல் நடுங்குமாறு அவனை உதைத்து அவ்விடத்திலே அவனை உருளச்செய்த சிவந்த திருவடிகளை உடையவன் திருக்கடவூரில் உகந்தருளி உறைகின்ற உத்தமனாகிய சிவபெருமான் ஆவான்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

புலிக்காலர்

இன்றைக்கு நாம் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஒரு அற்புத தூண் சிற்பம் பார்க்கிறோம். யார் இவர்?

http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=127

கோயில் என்பது எல்லா ஆலயத்திற்கும் பொதுப்பெயர்.

அதுவே சிறப்புப் பெயராகக் குறிப்பிட்ட ஒரு தலத்தைக் குறிக்கு மானால் அது அதனுடைய மிக்க உயர்வைக்குறிக்கும்.

அங்ஙனம் உயர்வுபற்றிய காரணத்தால் இத்தலம் கோயில் என்னும் பெயர் பெற்றது.

இத்தலத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள்:

– பெரும்பற்றப் புலியூர் – பெரும்பற்றினால் புலிப்பாதன் பூசித்த ஊராதலால் இப்பெயர் பெற்றது – ஆம் இதுவே தில்லை / சிதம்பரம்

பெரிய புராணத்தில் :

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1200&padhi=72&startLimit=41&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

பொருவ ருந்தவத் தான்புலிக் காலனாம்
அருமு னியெந்தை அர்ச்சித்து முள்ளது
பெருமை சேர்பெரும் பற்றப் புலியூரென்று
ஒருமை யாளர்வைப் பாம்பதி ஓங்குமால்.

ஒப்பற்ற தவத்தையுடைய புலிக்காலர் (வியாக்கிர பாதர்) எனும் என் தந்தையாரால் வழிபடப் பெற்றதும், பெருமை மிகுந்த பெரும்பற்றப் புலியூர் என்று அழைத்தற்குரியதும், பெருமை கள் பலவும் வந்தடைதற்குரியதுமான தில்லைப்பதி, ஒருநெறிய மனம் வைத்து உணர்வோர்க்குச் சேமவைப்பாக இருப்பதாம்.
வியாக்கிரம் – புலி; பாதர் – காலினையுடையவர். இவர் மத்தியந்தன முனிவரின் மகனார் ஆவர். சிவவழிபாட்டைத் தவறாது செய்த இவருக்குச் சிவபெருமான் நேரில் தோன்ற, அவரிடம் சிவ வழிபாட்டிற்குப் பழுதற்ற மலர் எடுக்க நகங்களில் கண்களும், மலர் பறித்தற்கென மரங்களில் ஏறுங்கால் வழுக்காமல் இருப்பதற்கெனப் புலிக்காலும் கையும் பெற்றவர். இவர் திருமகனார் உபமன்னியு முனிவராவார். பெரும்பற்றப் புலியூர் – பெரும்பற்றை உடைய புலி யூர். அஃதாவது எல்லாப் பற்றும் அற்றாரது உள்ளத்துப் பற்றுடையதாய்ப் பற்றப்படுவது. ஒருமையாளர் – ஒருநெறிய மனம் வைத்தவர்.

தேவாரத்தில் :

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idField=6001&padhi=001

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
.. அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
.. திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
.. கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
.. பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

எவ்வளவு தகுதி உடையவரும் தம் முயற்சியால் அணுகுதற்கு அரியவன், அந்தணர்களின் உள்ளத்தில் உள்ளவன். மாற்றுதற்கு அரிய வேதத்தின் உட்பொருளாகியவன், நுண்ணியன், யாரும் தம் முயற்சியால் உணரப்படாத மெய்ப்பொருள் ஆகியவன். தேனும் பாலும் போன்று இனியவன். நிலைபெற்ற ஒளிவடிவினன், தேவர்களுக்குத் தலைவன், திருமாலையும் பிரமனை யும், தீயையும், காற்றையும், ஒலிக்கின்ற கடலையும்மேம்பட்ட மலைகளையும் உடனாய் இருந்து செயற்படுப்பவன் ஆகிய மேம்பட்டவன். புலிக்கால் முனிவனுக்கு உறைவிடமாகிய தில்லையை உகந்து எழுந்தருளும் அப்பெருமானுடைய மெய்ப் புகழைப்பற்றி உரையாடாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களாம்.

ஆம், இவர் தான் புலிக்கால் முனி. பார்த்து மகிழுங்கள் .

2137214421512155
214121492153


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

முதல் வரிசையில் இருந்து ஈசனின் ஆடல் அழகு பார்க்கும் எலும்பு அம்மை

சென்ற மடல்களில் காரைக்கால் பேய் அம்மையின் கதை படித்தோம். அங்கே நிறைய சிற்பங்களை இடவில்லை, ஏனெனில் அவர்களின் கதையின் உன்னதம் சரிவர நாம் உணர வேண்டும் என்பதற்க்காக. இப்போது அதற்கு ஈடு செய்ய, ஆலங்காட்டில் ஆடும் அழகன் ஆடல்வல்லானின் அற்புத ஆட்டத்தை முதல் வரிசையில் அமர்ந்து காணும் அம்மை – கங்கை கொண்ட சோழபுறத்து அற்புத சிற்பி வடித்த சிலை.

( Sfiy’ இல் வந்த இந்த அருமையான இடுகை )

http://sify.com/news_info/tamil/rasanai/aug05/fullstory.php?id=13909600

தூக்கிய திருவடியொடு ஆடும் அழகனின் திருவடிவினைச் உலோக சிலையாய் வடிப்பது ஒரு அறிய கலை, ஆனால் அதை கல்லில் வடிப்பது – ஒரு உன்னத கலை. சோழநாட்டுச் சிற்பிகளோ கல்லைப் பிளந்து எழிலுரு ஆடவல்லான் திருமேனிகளைப் பல திருக்கோயில்களில் வடித்துச் சென்றுள்ளனர். அத்தகு சிற்பப் படைப்புக்கள் வரிசையில் தலையாயதாக விளங்குவது கங்கை கொண்ட சோழீச்சரம் திருக்கோயிலின் தேவகோட்டமொன்றில் இடம் பெற்றுள்ள ஆடும் அழகனின் திருவடிவாகும்.

பொதுவாகத் திருக்கோயிற் சிற்பப் படைப்புக்களைக் கண்டு அதன் பேரழகை நுகரப் புகுமுன், அங்குக் காணப்பெறும் சிற்பத்தின் வரலாறு, புராணப் பின்புலம், செய்நேர்த்தி, உணர்வுகளைக் காட்டிடும் முகபாவம் ஆகியவற்றை அறிந்து, பின்பே அவற்றைக் கூர்ந்து காண முற்படுவோமாயின் அச்சிற்பம் நம்மோடும் பேசும் சுகானுபவத்தைப் பெறலாம்.

காளியோடாடிய கயிலைநாதன்தாருகன் எனும் அசுரன் பிரமனைக் குறித்துக் கடுமையாகத் தவம் இயற்றி தனக்குப் பெண்ணால் மட்டுமே மரணம் ஏற்பட வேண்டும் என்று வரத்தையும், பேராற்றல்களையும் பெற்றான். அவன் சென்ற இடங்களிலெல்லாம் வெற்றி கண்டான். ஆணவமலம் மிக்குற்று தேவர்களையும், தெய்வங்களையும் தாக்க எத்தனித்தான் . எத்துணை உபாயங்கள் செய்தும் அவனிடமிருந்து தப்பியலாத தேவர்கள் பரமேஸ்வரனைப் பிரார்த்தித்து வேண்டினர். பரமனோ தன் கழுத்திலிருந்த ஆலகால விஷத்திலிருந்து தேவியின் அம்சத்தை கரியதும் உக்கிரம் நிறைந்ததுமான உருவமாக, காலகண்டியாகப் படைத்துத் தாருகனை வதம் செய்ய ஆணையிட்டார்.

காலகண்டியாகிய காளிதேவி தாருகனுடன் உக்கிரமாகப் போரிட்டு அவனை அழித்தாள். காளியின் கோபம் தணியாததால் அவளைச் சாந்தப்படுத்த விழைந்த பரமன் அவள் உக்கிரத்தை எட்டு சேத்திர பாலகர்களாக (அட்ட பைரவர்) மாற்றியருளியதோடு, அவள் முன்பு நடன மாடத் தொடங்கினார். ஈசன் ஆட அவர் முன்பு வெங்கோபமுற்ற காளிதேவியும் ஆவேசமாக ஆடத் தொடங்கினாள். அண்ணலின் ஊர்த்துவ மாதாண்டவம் கண்டு ஆட இயலாதவளாய் அமைதியுற்றாள். இச்சிவதாண்டவ வரலாற்றை சிவமகாபுராணம் இனிதே உரைக்கின்றது. திருவாலங்காட்டில் (திருவள்ளூர் மாவட்டம்) இத்திருநடனம் நடைபெற்றதாக ஆலங்காட்டுத் தலபுராணம் விவரிக்கின்றது.
193719391942194519471950

மூவர் தமிழில்…

ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே எனத் திருவாலங்காட்டில் பாடிய திருநாவுக்கரசு பெருமானார்,

ஆடினார் பெருங்கூத்து காளிகாண, என்று திருப்பாசூர் பதிகத்திலும்,

கத்து காளி கதம் தணிவித்தவர், என்ற திருக்கடவூர் மயானத்துப் பதிகத்திலும் குறிப்பிட்டு காளியோடாடிய கருணாமூர்த்தியின் பெருமை பேசுகின்றார்.

மாத்தன் தான் மறையார் முறையால் மறை
ஓத்தன் தாருகன் தன் உயிர் உண்ட பெண்
போத்தன் தான் அவள் பொங்கு சினம் தனி
கூத்தன்தான்-குரங்காடு துறையானே
பைதல் பிணக் குழைக் காளி வெங்கோபம்
பங்கப் படுப்பான்
செய்தற்கு அரிய திருநடம் செய்தனசீர்
மறையோன் உய்தல் பொருட்டு வெங்கூற்றை உதைத்தன:
உம்பர்க்கு எல்லாம் எய்தற்கு
அரியன-இன்னம்பரான்தன் இணை
அடியே பூத்து ஆடிக் கழியாதே நீர், பூமியீர்
தீத்து ஆடி திறம் சிந்தையுள் வைம்மினோ
வேர்த்து ஆடும் காளிதன் விசை தீர்க்க-
என்று கூத்து ஆடி உறையும் குடமூக்கிலே

இவ்வாறு அப்பரடிகள் குரங்காடுதுறை, இன்னம்பர், திருகுடமூக்கு ஆகிய திருக்கோயில்களில் காளி தன் வெங்கோபத்தினைப் பங்கப்படுத்திய கூத்தனின் புகழைத் தேவாரத் தமிழால் புகழ்கின்றார்.

திருஞானசம்பந்தப் பெருமானாரோ

ஐயாறுடைய அடிகளைப் பாடிப் பரவுங்கால்,
வென்றிமிகு தாருகனது ஆர் உயிர் மடங்க கன்றி
வரு கோபமிகு காளிகதம் ஓவ
நின்று நடம் ஆடி இடம்-நீடு மலர் மேலால்
மன்றல் மலியும் பொழில் கொள் வண் திருஐயாரே

என்றும், தன் பிறந்த பதியான சீகாழி ஈசனைப் போற்றுங்கால்,

சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்
தோடு ஏயாமே மாலோகத் துயர்
களைபவனது இடம்கைக்கப் போய் ஊக்கத்தே
கனன்றுமிண்டு தண்டலைக்காடே ஓடா ஊரே சேர் கழுமல வளநகரே

என்றும் காளியோடாடிய திறம் பேசுகின்றார். திருநாவலூரரான சுந்தரரோ,

கொதியினால் வரு காளிதன் கோபம்
குறைய ஆடிய கூத்துடையானே

என்று ஆவடுதுறையில் இன்றமிழ்ப் பதிகம் பாடி திருவாலங்காட்டுத் திருநடனத்தின் சிறப்பு பேசுகின்றார்.

திருஆலங்காட்டுத் திருநடனம்

தாருகன் உயிர் போக்கிய காளிதேவியின் கோபத்தைப் போக்க ஆலமரங்கள் அடர்ந்த திருவாலங்காட்டில் அண்ணல் மீண்டும் ஓர் ஆனந்த நடம் புரிந்தார். வாணன் குட முழவிசைக்க, காரைக்கால் பேயார் கைத்தாளம் இசைக்க, பூசகணங்கள் மத்தளம் முழங்க அண்ணலின் ஆடல் தொடங்கிற்று. ஆடல் காண கணபதிப் பிள்ளை எலிமீதமர்ந்து ஊர்ந்துவர, கந்தனோ மயில்மீது அமர்ந்து பறந்து வந்தான். சூரிய சந்திரர் காண காளிதேவியும் எண்கரம் நீட்டி கோபமொடு ஆடத் தொடங்கினாள். மூன்று கால் பிருங்கியும் ஓர்புறம் ஆட, சடையமர்ந்த கங்காதேவியும் சுழன்று ஆட, இடபத்தோடு நின்ற சிவகாமியோ, எழிலுறு இக்காட்சி கண்டு மெய்மறந்தாள்.

ஆலங்காட்டில் உமையம்மையும், காரைக்காலம்மையும் கண்டு களித்த அந்த ஆனந்தத் தாண்டவக் காட்சியை உலகம் உள்ளளவும் மனித குலம் கண்டு இன்புற வேண்டும் என்று நினைத்தான் கங்கை கொண்ட இராஜேந்திர சோழன் (கி.பி. 1012-1044). தான் எடுத்த கங்கை கொண்ட சோழீச்சரம் எனும் சிவாலயத்தின் கருவறையின் தென்மேற்குப் பகுதியில் ஆலங்காட்டு ஆடற்காட்சியை நிரந்தரமாகப் பதித்தான். கல்லிலே இங்கு அக்காட்சி உயிர்ப் பொலிவோடு திகழ்கின்றது.

தேவகோஷ்டமொன்றின் மேற்பகுதியில் திருவாலங்காட்டு ஆலமரமொன்றில் இலைகளோடு கூடிய கிளைகள் தெரிகின்றன. ஆடல்வல்லான் சூடும் அக்ஷமாலையொன்றும், அவன் பூசும் வெண்பொடி சுமந்த பொக்கணமும் (விபூதிப்பை) ஆலமரத்துக் கிளையில் தொங்குகின்றன. தலையில் கொக்கிறகு, கபாலம், உன்மத்தம் ஆகியவற்றையும், விரிசடையில் நீரலையாய் சுழன்று ஆடும் கங்கையையும் சூடியவராய், ஒரு காதில் மகரகுண்டலமும், மறுகாதில் பத்ரகுண்டலமும் தரித்தவராய் வலதுகாலை முயலகன் மீது இறுத்தி இடது காலை இடுப்பளவு உயர்த்தி, மேலிருகரங்களில் டமருகமும், எரியகலும் ஏந்தி, வலது முன் கரத்தால் அபயம் காட்டி இடது முன்கரத்தை உயர்த்திய காலுக்கு இணையாக நீட்டி ஆனந்தத் தாண்டவம் ஆடுபவராய் அண்ணல் காட்சி தருகின்றார். தெய்வீகப் பொலிவும், கொவ்வைச் செவ்வாயில் குமின் சிரிப்பும் காணப்பெறும் இச்சிற்பத்தின் முக அழகுக்கு ஈடாக வேறு ஒரு படைப்பினைக் காட்டுதல் கடினமே.ஈசனுக்கு வலதுபுறம் பிருங்கிமுனிவர் ஆட, இடப்புறம் எட்டுகரங்களோடு கதம் கொண்ட காளிதேவி ஆடுகின்றாள். தூக்கிய திருக்கரங்களும், கால்களின் அசைவும் அவள் ஆடுகின்ற ஆடலின் வேகத்தைக் காட்டுகின்றன. கோபக்கனலை அவளது பிதுங்கிய விழிகளும் ஆவேசம் காட்டும் முகமும் வெளிப்படுத்துகின்றன. வேர்த்து ஆடும் காளியிவள் என்பது நன்கு விளங்கும்.
19321921
இந்த தேவகோஷ்டத்தின் இருமருங்கும் எழிலார்ந்த சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. மலரேந்திய சூரியனும் சந்திரனும் ஒரு கரத்தை தலைக்கு மேல் உயர்த்தி ஈசனைப் போற்றுகின்ற நிலையில் விண்ணில் பவனி வருகின்றனர். சூரியனுக்குச் சற்று கீழாக எலிமீதமர்ந்த கணபதியாரும், மயில்மீதமர்ந்த கந்தனும் ஆலங்காடு நோக்கி விரைந்து செல்கின்றனர். இக்காட்சிக்குக் கீழாக நந்தியெம்பெருமான் குடமுழவினை இசைத்தவாறு அமர்ந்துள்ளார்.

கோஷ்டத்தின் கீழ்புறம் பூதகணங்கள் மத்தளங்களையும் இன்னபிற இசைக்கருவிகளையும் இசைத்தவாறு ஆடி மகிழ்கின்றன. அப்பூதகணங்களோடு விரிந்த சடை, வற்றிய கொங்கைகள், எலும்பு உரு ஆகியவற்றோடு இலைத்தாளம் இரண்டினை கையிலேந்தி இசைத்தவாறு காரைக் காலம்மையார் அண்ணலின் அடிக்கீழ் அமர்ந்தவாறு ஆடல் காண்கின்றார்.ஆடும் அழகனுக்கு இடதுபுறம் விண்ணகத்தில் சந்திரன் உலவ, கீழே அண்ணல் உலாப்போகும் எருது நிற்கின்றது. அதன் முதுகில் இடக்கரத்தை ஊன்றியவாறு வலக்கரத்தில் மலரொன்றை ஏந்திய நிலையில் உமாதேவி நிற்கிறார். தேவியின் திருமுகமோ அழகனின் ஆடலில் ஒன்றி மெய்மறந்த நிலையைக் காட்டுகின்றது. ஆனால் இடபமோ வாய்பிளந்த நிலையில் ஆடலின் வேகங்கண்டு மிரண்டு காணப்பெறுகின்றது.

சிற்பங்களை இன்னும் தெளிவாக பார்க்க

19921994199619982000200220042006

இக்காட்சியைக் காணும் போது,

சரிகுழல் இலங்கிய தையல் காணும்
பெரியவன் காளிதன் பெரிய கூத்தை
அரியவன் ஆடலோன் அங்கை ஏந்தும்
எரியவன்-இராமனதீச்சரமே

என்ற திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடலுக்கென வடிக்கப்பெற்ற சிற்பக் காட்சியே இதுவென்பது நன்கு விளங்கும். ஈசனார் முகத்திலோ ஆனந்தப் புன்னகை. காளியின் முகத்திலோ கடும் சினம். காளையில் முகத்திலோ மிரட்சி. அன்னையின் முகத்திலோ அமைதி. இத்தனை உணர்வுகளையும் ஒருங்கே இக்காட்சியில் படைத்துக் காட்டிய சோழனின் சிற்பி நம் அனைவரையும் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்தவாறே திருவாலங்காட்டிற்கு அழைத்துச் சென்று அற்புதத் திருக்கூத்தைக் காட்டுகின்றான். காண்போம் வாரீர்.

(பி.கு.) கலைநயமும், வரலாற்றுச் சிறப்பும் ஒருங்கே பெற்ற இந்த ஆடவல்லான் திருமேனியின் தூக்கிய இடது காலினைக் கலையறிவற்றோர் பின்னாளில் சிதைத்து அழித்துவிட்டனர். இருப்பினும் உடையார்பாளையம் ஜமீன்தார் நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்த திருப்பணியின் போது உடைந்த காலுக்கு முட்டுக்கொடுத்து ஓரளவு சீர் செய்துள்ளனர்.

காரைக்கால் அம்மையின் அருமையான பாடல்கள் இதோ :

பதினொன்றாம் திருமுறை : பாடல் எண் : 1

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11002&padhi=040&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=தேசக்

கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே.

பாடல் எண் : 22

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11002&padhi=040&startLimit=22&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

சூடும் மதியம் சடைமேல்
உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில்
ஆர்த்த அடிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய்
எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி
யாடப் பாவம் நாசமே.

பாடல் எண் : 19

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11002&padhi=040&startLimit=19&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

வேய்கள் ஓங்கி வெண்முத்
துதிர வெடிகொள் சுடலையுள்
ஒயும் உருவில் உலறு
கூந்தல் அலறு பகுவாய
பேய்கள் கூடிப் பிணங்கள்
மாந்தி அணங்கும் பெருங்காட்டில்
மாயன் ஆட மலையான்
மகளும் மருண்டு நோக்குமே.

அடுத்த முறை கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் பொது கண்டிப்பாக இந்த அருமையான சிற்பத்தை கண்டு ரசியுங்கள்.

209320902096


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஈசனுக்கு உடும்பு கறி படைத்த பக்தன்

கண்ணப்பர் செருப்பு அணிந்ததை சென்ற மடல்களில் பார்த்தோம். இப்போது அவர் ஈசனுக்கு உடும்பு கறி படைத்ததை பார்ப்போம். மீண்டும் தஞ்சை பெரிய கோவில் சிற்பம், ராஜ ராஜ சோழ தேவருக்கு மிகவும் பிடித்த கதைகள் – ஈசனிடம் அளவில்லாத பற்று கொண்டு அவனிடம் சரண் புகுந்த நாயன்மார் கதைகள். அதில் அவர் மிகவும் ரசித்த ஒன்று , கண்ணப்பர் கதை. இதோ கருங்கல்லில் .
1880188718901884
சிறு சிற்பம் என்றாலும் அந்த சிற்பத்தில் கண்ணப்பரின் முகத்தில் தெரியும் பணிவு, பக்தி – அதிலும் அவர் ஆசையுடன் உடும்பை படைக்கும் காட்சி ( வேடுவன் அல்லவா, அப்போதும் தனது வில் அம்பை விடவில்லை, அருகில் அவரது வேட்டை நாய் )- எதிரில் மரத்தடியில் சிவ லிங்கம்.

தேவார குறிப்பு, இதற்கும் உண்டு.
பதினொன்றாம் திருமுறை

சிந்தக்கடும்பகல் வேட்டையிற் காதலித் தடித்த
உடம்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத்
தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும்

தடிந்த உடும்பு – கொல்லப்பட்ட உடும்பு, அது பாகமாக்கப்படவில்லை. இறைவற்கு நகை தோற்றுவிக்க அன்பினால் கொண்டு வரப்பட்டது.

இங்கே மேலும் கதையை உணர்த்தும் சிற்பங்கள் உண்டு. அவற்றை பற்றி வரலாறு.காம் நண்பர் கோகுல் அவர்களின் அருமையான இடுகை (கடை காட்சியில் சிவ கோச்சாரியார் மரத்தின் பின் ஒளிந்துக்கொண்டு பார்ப்பதை சித்தரித்த வண்ணம் அருமை )
கோகுல் அவர்களின் அருமையான இடுகை

படங்களுக்கு நன்றி www.varalaaru.com


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment