ஒக்கூர் ந​டேசன் – முதன் முதலாக ​வெண்கலச் சிற்பத்தில் ஈசனின் ஆனந்த தாண்டவம்

வெண்கலச் சிற்பங்க​ளில் ஆர்வம் ​செலுத்த துவங்கிவிட்​டோமானால், அது என்றும் தணியாத தாகமாக​வே இருக்கும். அதிலும் ஒருமு​றை ​சோழர் கால ​வெண்கலச் சிற்பத்​தை பார்த்து விட்டா​லே, கண்க​ளை அவற்றினின்று அகற்றுவது மிகக் கடினம். ஆனால், இந்த ஆர்வத்துக்கு தீனியிடுவதும் அத்த​னை எளிதல்ல. ஏ​னெனில்,அ​நேகமாக ​வெண்கலச் சிற்பங்கள் ​கோவில்களில் உற்சவ மூர்த்தியின் வீதியுலா ​​போன்ற சமயங்களில் தான் ​வெளி​யே ​கொண்டு வரப்படும். அப்​பொழுதும் முழு​மையான ஆ​டை அணிகலன்கள், மலர் அலங்காரங்கள் என ​செய்யப்பட்டு சிற்பத்தின் அழ​கைக் காணவியலாத நி​லையி​லே தான் இருக்கும். விழாக்கள் இல்லாத பிற நாட்களி​லோ பாதுகாப்பிற்காக கூண்டுகளி​லே ​வைக்கப்படுகின்றன. ஆக​வே, ​வெண்கலச் சிற்பங்களின் அழ​கைக் காண​வோ, அதன் ​தோற்றங்கள் குறித்து ஆராய​வோ, அருங்காட்சியகத்திற்கு ​செல்வ​தே மிகச் சிறந்த வழியாகும். அவ்வாறு நூற்றுக்கணக்கான ​வெண்கலச் சிற்பங்க​ளை பாதுகாக்கும் ​​பேறு ​பெற்றது ​சென்​னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகமாகும். இருப்பினும், வருத்தத்திற்குரிய விஷயம் என்ன​வென்றால், இந்த சிற்பங்கள் அ​னைத்தும் கண்ணாடி கூண்டுகளில் உள்ளன, ​மேலும் ​போதிய ​வெளிச்சமும் இருப்பதில்​லை. இ​தையும் விட ​வருந்தத்தக்க விஷயம், இந்த ​வெண்கலச் சிற்பங்க​ளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது. ​இவற்​றை எவ்வாறு ரசிப்பது – எ​தைப் பார்க்க ​வேண்டும், எப்படி பார்க்க ​வேண்டும் ​போன்ற ​தெளிவு இல்லா​மை​யே. அப்படி என்ன இவற்றை பற்றி படிக்க பார்க்க தனி வழி …மேலே படியுங்கள்.

இன்று, திரு பி. ஆர். ஸ்ரீனிவாசன் அவர்களின் மிக அற்புதமான புத்தகம் – பிரான்ஸஸ் ஆப் சவுத் இந்தியா (Bronzes of South India) – மூலமாக புகழ்​பெற்ற ஒக்கூர் ந​டேசனின் ​வெண்கலச் சிற்பத்தி​னை பற்றி காண உள்​ளோம். ​ஈசனின் ஆனந்த தாண்டவத்​தை ​வெண்கலச் சிற்பத்தில் ​​வார்க்க ஸ்தபதியால் ​மேற்​கொள்ளப்பட்ட முதல் முயற்சியாக ​ஒக்கூர் ந​டேசனின் சிற்பம் அறிந்து கொள்ளப்படுகிறது. ​மேலும் இந்த வடிவ​மே பிற்கால ​சோழர் காலத்தின் நடராஜ சி​லைகளுக்கும் முன்​னோடியாக விளங்கியிருக்கிறது.

இந்த ​வெண்கல சிற்பம் ​செதுக்கப்பட்ட காலம் நிபுணர்களின் கணிப்பின்படி கி.பி. 9-ல் இருந்து கி.பி. 10-க்குள் இருக்கக்கூடும். ​இதன் காலகட்டம் ஒவ்​வொருவராலும் ஒவ்​வொருவிதமாக கூறப்பட்டாலும், இது​வே முதன் முதலில் ஈசனின் ஆனந்த தாண்டவத்​தைக் குறிக்கும் நடன சிற்பமாக ஏற்றுக்​கொள்ளப்பட்டுள்ளது. சரி, இப்​போது இந்த அற்புத சிற்பம் எந்​தெந்த சிறப்பியல்புகளினால் ‘முதன் முதல் ஆனந்த தாண்டவ சிற்பம்’ என்று ​பெயர்​பெற்றது என்று பார்ப்​போம்.

இந்த சிற்பத்தில் தனித்துவம் ​பெற்ற இரு விஷயங்கள் – முதலாவது நடனமாடும் ஈசனின் உருவத்​தை சுற்றி அழகுற விளங்கும் பிர​பை. இரண்டாவது அழகிய தாம​ரை பீடம்.

ஒவ்​வொன்றாக நாம் காண்பதற்கு முன்பு, ஆனந்த ரசத்​தை எத்து​ணை அழகாக நமது சிற்பி எடுத்துக் காண்பித்துள்ளார் பாருங்கள் – 1000 ஆண்டுகாலத்திற்கு பின்பும், கண் முன் காட்சியளிக்கும் தெய்வீக புன்ன​கை.

மற்று ​மொரு சுவாரசியமான விஷயம் சிற்பத்தில் காணப்படும் ​நெற்றிக்கண் மற்றும் ​​வெவ்​வேறாக உள்ள காதணிகள். இடது காதில் ​பெரிய பத்ரகுண்டலம் உள்ளது, ஆனால் வலது காதி​லோ து​ளை ​பெரிதாகவும், அணிகலனாக ஒரு சிறிய வ​ளையம் (க்ளிப்) ​போன்று உள்ளது. (​மே​லே ​சொல்லப்பட்டுள்ள புத்தகத்தில் வலது காதில் உள்ள சிறிய வ​ளையம் பற்றி கூறப்படவில்​லை)

ஈசனின் சி​கையலங்காரம் நாம் பல்லவ ​சோமாஸ்கந்தரில் பார்த்தது ​போன்​றே உள்ளது, ​மேலும் ஊமத்​தை மலரும் மற்றும் பி​றைச் சந்திரனும் உள்ளன. உருண்​டையாக முன்புறம் ​தோன்றுவது மண்​டை ஓடாக இருக்கலாம். அதற்கு ​மே​லே உள்ள​வை இறகுகளாலாகிய ஆபரணம் (மயிலிறகுகளாக இருக்கு​மோ?)

கழுத்தில் அணியும் ஆபரணங்கள் இரண்டும் சாதாரணமாக​வே உள்ளன. இருப்பினும் இரண்டாவது கழுத்தணியில் நடுவில் உள்ள பதக்கம் கவனத்​தைக் ஈர்க்கிறது. ​பெரிய கழுத்தணி, ருத்திராட்ச ​கொட்​​டைகளால் ஆனது, ​மேலும் அபூர்வமாக விலங்கின் (புலி) பல் பதக்கமாக உள்ளது.

விரிந்திருக்கும் முடிக்கற்​றைப் பற்றி விரிவாக பிறகு ( பின்னல் இல்லை இல்லை பின்னால் ) பார்ப்​போம், இருப்பினும் ​வெண்கலச் சிற்பங்களில் நடனமாடும் சிவ​​பெருமானின் முடிக்கற்​றை விரிந்திருப்பது இது​வே முதன்மு​றையாகும். அ​வை ஆபரணங்கள் ஏதுமின்றி சாதாரணமாக​வே உள்ளன. ​மேலும் கங்​கையின் எவ்வித உருவமும் காணப்படவில்​லை. ​வெண்கலச் சி​லைக்கு பலம் ​சேர்க்கும் விதமாக விரிந்திருக்கும் முடிக்கற்​றைகள் பிர​பையில் ​சேர்க்கப்பட்டுள்ளது சிற்பியின் அபார புத்திக்கூர்​மை​யை ​வெளிப்படுத்துகின்றது.

ஈசனின் நான்கு கரங்களும் முட்டிகளில் பிரியாமல் ​தோள்பட்​டையி​லே​யே பிரிகின்றன (பல்லவர் கால ​வெண்கலச் சிற்பங்களின் இயல்பாக இது ​சொல்லப்படுகிறது. என​வே இது பிற்காலத்​தை ​சேர்ந்தது, அதாவது ​சோழர்காலத்தின் ஆரம்ப காலங்களில்). தூக்கிய திருவடிகள் பிற்கால சிற்பங்க​ளைப் ​போன்று மிக உயரத்திற்கு இன்னும் வரவில்​லை..

காலில் உள்ள ​கொலுசுகள் மிக அழகாக சிறு மணிகள் ​கோர்க்கப்பட்டு உள்ளன. இ​றைவனின் ஆனந்த தாண்டவத்தின்​போது அ​வை எழுப்பும் ரீங்காரம் காதில் இனிய சங்கீதமாய் கேட்குமோ ?

இரட் ​டையாக உள்ள பூணூல் (யக்​ஞோபவீதம்) மற்றும் தடிமனான உத்தரீயம் (இடுப்பில் கட்டும் ஆ​டை) ஆகியவற்றுடன் ஆ​டை மிக எளி​​மையாக உள்ளது. உத்தரீயம் வயிற்றில் முடி​போட்டு கட்டப்பட்டுள்ளது. ஆ​டையில் உள்ள சித்திரம் இன்றும் கண்களுக்குத் ​தெரிகிறது.

​ மே​லே உள்ள கரங்கள் மிக அற்புதமாக ​செதுக்கப்பட்டுள்ளன. ஒன்றில் உடுக்​கையும் மற்​றொன்றில் அக்னியுள்ள சிறிய சட்டியும் உள்ளன – நளினமாக அந்த சட்டி​யை விரல்களின் நுனியில் ஏந்தியுள்ள​தை எத்த​னை தத்ரூபமாக ​செதுக்கியிருக்கிறார் அந்த சிற்பி பாருங்கள்.

​கையில் சுற்றப்பட்டுள்ள பாம்புடன் அபயஹஸ்தமளிக்கிறது கீ​​ழேயுள்ள வலது கரம்,

இந்த அரு​மையான ​வெண்கலச் சிற்பத்தின் அழகுக்கு அழகு ​சேர்ப்பது கீ​ழேயுள்ள கரங்களும் ​மெல்லிய து​டைகளும். ​மேலும் பாதங்களுக்கு அடியில் உள்ள முயலகன் ஒரு ​பெரிய நாகத்துடன் வி​ளையாடுவது ​போன்ற பாவ​னை ​கொள்​ளை அழகு.

இ​வைய​னைத்​தையும் விட இந்த சிற்பத்தின் உண்​மையான அழகு நாம் அதன் பின்புறம் ​சென்று பார்க்கும்​போது தான் ​தெரிகிறது.

முடிக்கற் ​றைகள் எவ்வாறு பிரிந்து விரிந்திருக்கிறது என்பது மிக அற்புதமாக ​செதுக்கப்பட்டுள்ளது. கழுத்தணி​யை கட்டுவதற்கு உள்ள ​கொக்கி​யையும் நீங்கள் காணலாம்

இந்த ​வெண்கலச் சிற்பம் பழ​மையானது என்பதற்கு மற்று​மொரு குறிப்பு – த​லைக்கு பின்புறம் சிரச்சக்கர​மோ, முடிக்கற்​றைக​ளை தாங்கும் விதமாக வ​ளைய​மோ இல்லாதது தான்.

​மேலும் ​கெளபீனம் கட்டப்பட்டிருக்கும் விதத்​தைப் பாருங்கள், இருப்பினும் ஒரு சிற்றா​டையும் அணிந்திருக்கிறார்.

பிர ​பையில் நாம் கவனிக்க ​வேண்டிய விஷயம் – தீப்பிழம்புகள் மிகவும் இயற்​கையாக உள்ளன. பிர​​பை​யை சுற்றி இ​​வை இருந்தாலும், அக்னி ஜ்வா​லைகள் இயற்​கையாக உள்ள​தைப் ​போல் ​​மேல் ​நோக்கி​யே உள்ளன,

ஆஹா! எத்த​னை அற்புதமான உன்னத ப​டைப்பு!!

தெய்வக் குழந்தைக்கு தெய்வம் தரச்சொன்ன பரிசு

சென்ற வருடம் தற்செயலாக மேலைக்கடம்பூர் பற்றிய ஒரு அற்புத பதிவை இணையத்தில் பார்த்தேன். திரு ராஜா தீட்சிதர் அவர்களின் பல பதிவுகளை முன்னரே படித்திருந்தாலும், இந்தப் பதிவில் அவர் விளக்கங்கள் கொடுத்த முறை – கோயிற் கலை பற்றி மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் கொடுத்திருந்தார். உடனே அவரிடத்தில் தொடர்பு கொண்டு அந்த பதிவை இங்கே மொழி பெயர்த்து போடலாமா? அல்லது மேலும் பயனுள்ள பல பதிவுகளை நம்முடன் பகிரமுடியுமா என்று கேட்டு அவரும் சரி என்று சொன்ன​போது – துரதிருஷ்டவசமாக விதி விளையாடி அவர் நம்மை விட்டு போய்விட்டார்.

எனினும் இன்று நமக்கு ஒரு பாக்கியம் – அவரது பிரதான சிஷ்யை – மிஸ். லீய்ஸ்​பெத் பங்கஜ ​பென்னிங்க்
அவர்கள் நம்முடன் அவரது அனுபவங்களை தொடர் பதிவுகளாக பகிர ஒத்துக்கொண்டு, முதல் பதிவை தருகிறார்.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என்னை ஈர்த்த இரு விஷயங்கள் – அழகு மற்றும் மர்மம். அதுவும் நான் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து எங்கோ உலகின் இன்னொரு இடத்தில் என்னும்​போது ஆர்வம் இரட்டிப்பாகக் கூடும். அது போன்ற காலத்தின் ஒரு கோலமே என்னை இந்தியா கொண்டு சேர்த்தது. அது ஒரு பெரிய கதை !

அப்படியே தொடர்ந்த எனது பயணம் ஒருநாள் என்னையும், நண்பர் திரு. ராஜா தீட்சிதர் அவர்களது புதல்வர்கள் திரு. கந்தன், திரு. ஜெயகுமார் மற்றும் திரு. ஷங்கர் அவர்களையும், ஒரு புராதன ஆலயத்தின் குளத்தங்கரையில் கொண்டு சேர்த்தது . மிகவும் அமைதியான சிறு கிராமம், வீதிகளில் சில குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அருகே சிலர் தங்கள் வே​லைகளில் மூழ்கி இருந்தனர். ஆலயத்தில் உழவாரப்பணி நடந்துக்கொண்டிருந்தது. மிகவும் கவனமாக, அதன் பாரம்பரிய அழகு சற்றும் குறையாமல் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கல்லும் கதை சொல்லும். அதவும் பண்டைய தமிழ் கோயில் என்றால் அதன் கற்கள் ஒரு பெரும் கதையை பிரதிபலிக்கும். கோயில் உருவான கதை, அதன் கட்டுமான முறை, எத்தனை தளங்கள் கொண்டது, அதன் கருவறை இருக்கும் அமைப்பு, எந்தக் காலத்தில் கட்டப்பட்டது , யார் கட்டியது , தற்போது இருப்பது முதலில் இருந்த கோயிலா இல்லை இடையில் அது விஸ்தரிக்கப்பட்டதா, செங்கல் கட்டுமானமா கற்கோயிலாக மாறியதா, இது போன்ற ஆய்வுகள் ஒருபக்கம் இருக்க, அங்கே இருக்கும் சிலைகளும் கதை சொல்லுகின்றன. கோஷ்டத்தில் இருக்கும் மூர்த்திகளை கொண்டு ஆய்வுகள் செய்ய இயலுமா, சிற்பங்களின் அணிகலன், அமைப்பு கொண்டு கால நிர்ணயம், அங்கே இருக்கும் கல்வெட்டுகளில் வரும் எழுத்துகளை கொண்டு ஆய்வுகள், அவை சொல்லும் வரலாறு, அந்த நாளைய ஆட்சிமுறை, இவை போதாதென்று அந்தக் கோயிலின் ஸ்தல வரலாறு, என்ன தெய்வ லீலை நடந்ததை குறிக்க எழுந்த கோயில் அது, பாடல் பெற்ற ஸ்தலமா, பரிகார ஸ்தலமா. இவை அனைத்தையும் ஒன்று சேர பார்க்கும்​ பொழுது முதலில் மூச்சு முட்டினாலும், அவை அனைத்தும் ஒன்று கூடி ஆலயம் என்று புனித அமைப்பின் முழு ஸ்வரூபத்தையும் நமக்கு தெரிய வைக்கின்றன.

இந்தப் பதிவை துவங்கும்​போது சிறு பதிவு என்று தான் நினைத்தேன். ஆனால் அதை எழுத ஆரம்பித்தவுடன் மேலும் மேலும் கிளைக்கதைகள் என்று விரிந்துக் கொண்டே போனது. எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்ல முயற்சி செய்வதற்கு பதில், ஒரு தொடர் பதிவாக இயற்றலாம் என்று எண்ணி முதல் பாதியாக இதை எழுதுகிறேன் – திருவட்டதுரை சிவன் கோயில் பற்றிய தொடரே அது.

இந்த அருமையான கோயிலின் இறைவன் ஆரட்டதுரை நாதர். பலருக்கும் தெரியாத இந்த கோயிலில் பல அருமையான சோழர் காலத்து சிற்பங்கள் உள்ளன.

பெண்ணடத்திற்கு மிக அருகில் – திட்டக்குடி சாலையில் வெள்ளாற்றங்கரையில் இருக்கும் இந்த ஆலயம், அதன் அமைப்பு மற்றும் சிற்பங்களை கொண்டு ராஜராஜனுக்கு முந்தைய காலத்து சோழ திருப்பணி என்று கருதலாம். ஆதிசேஷனும், சப்த ரிஷிகளும் இங்கு சிவனை வழிபட்டதாக ஸ்தல புராணம் சொல்கிறது.

இந்த ஆலயத்தை ஒட்டி இன்னும் ஒரு கதை இருக்கிறது. அது திருஞானசம்பந்தர் இங்கு வந்த​போது சிவனே ஊர் மக்களின் கனவில் வந்து சோர்ந்து வரும் அவருக்கு ஒரு பல்லக்கும், குடையும் கொடுக்கும் படி கூறிய கதை. சம்பந்தரும் இந்தக் கோயிலின் இறைவனை பற்றி பல பதிகங்கள் பாடியுள்ளார்.

இந்தக் கதை மூன்று முறை இந்த கோயில் சிற்பங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது, முதல் முறை செப்பனிடப்பட்டுள்ள கோபுரத்தில்.

இரண்டாம் தளத்தில் வலது புறத்தில் சுதை உருவம். பல்லக்கின் வெளியில் சம்பந்தர், மேலே குடை, மேலே தளத்துடன் வரவேற்கப்படும் காட்சி.

அதே போல விமானத்தின் இரண்டாம் தளத்திலும் இதே காட்சி உள்ளது.

இன்னும் ஒரு இடத்தில தலைக்கு மேலே மகர தோரணங்களின் நடுவில் மிகச் சிறிய அளவில் புடைப்புச் சிற்பம் உள்ளது.

இதுவே ஆதி முதல் வடிவம் என்று நாம் கருதலாம். பல்லக்கை திடகாத்திரமான இருவர் தூக்கிக் கொண்டு சம்பந்தரையும் அவர் தந்தையாரையும் அணுகி வருகிறார்கள். பல்லக்கின் அடியில் தெரியும் ஒரு சிறிய உருவம் மேலே இருக்கும் குடையை தூக்கிப் பிடித்திருக்கும் பாணி இன்றும் நம் கோயில் உற்சவங்களில் கு​டைகளை தூக்கிப் பிடிப்போரின் பாணியில் இருக்கிறது. குழந்தைக்கு பல்லக்கை பார்த்தவுடன் ஆனந்தம், தந்தையாருக்​கோ பெருமிதம். இந்தக் காட்சிக்கு மேலே ஆனந்த தாண்டவத்தில் ஈசன், அருகில் சிவகாமி அம்மை, அனைவருக்கும் அருள்பாலித்து நிற்கின்றனர். இந்த சிறிய அளவு சிற்பத்திலும், முகத்தில் மட்டும் அல்லாமல் அவர்களது ஒவ்வொரு அசைவிலும் அமைப்பிலும் உணர்ச்சிகளை சிற்பி வெளிப்படுத்துகிறான். ஆயிரம் ஆண்டுகள் ஆன பின்னரும் பரிசை பெரும் அவர்களின் உபகாரஸ்மிருதி – அதிலும் ஒரு சிறு குழந்தையின் கள்ளம் கபடமற்ற அந்த ஆனந்த உணர்ச்சி , அதே தந்தையின் முதிர்ந்த கோட்பாடு… ஆஹா அருமை. பல்லக்கின் அமைப்பும் வடிவமும் நாம் இதுவரை பார்த்தவை போன்று இல்லாமல் சமமான இருக்கை போலவே உள்ளது.

மற்ற இரு இடங்களிலும் உள்ள பல்லக்கு தற்கால அமைப்பை ஒட்டி உள்ளது. அதிலும் சம்பந்தர் அதன் மேல் ஏறி அமர்ந்திருக்கும் வண்ணம் உள்ளது. குடை பல்லக்கின் மேலே முடுக்கி விட்டது போல உள்ளது. கூடு போல இருக்கும் இந்த பல்லக்கின் அமைப்பை பார்க்கும் பொது – மேலே கு​டைக்கு வேலையே இல்லையே என்று தோன்றுகிறது. மற்ற இரு சுதை வடிவங்களும் பிற்காலத்தில் செய்தவையாக இருக்க வேண்டும். ஆனால் எதற்காக முன்னர் இருந்த வடிவத்தை மாற்றி செய்தார்கள் என்று தெரியவில்லை.

எனக்கு ஒரே ஒரு குறைதான். விமானத்தையும் கோபுரத்தையும் செப்பனிடும்​போது பாரம்பரிய சுதை​யை உபயோகிக்காமல் சிமெண்ட் கொண்டு செய்கிறார்கள். சரியாக பராமரித்தால் சுதை பல நூற்றாண்டுகள் நிற்கும்…

ஆயிரம் பொன் – ஒரு பொற்கிழி

சரியான பாட்டுக்கு மன்னர் ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கிறார் !

எவ்வளவு பொன் ?

ஆயிரம் பொன் ?

ஒண்ணா ரெண்டா ! ஆயிரம் பொன் ! சொக்கா !!

தமிழர் எவருக்குமே தருமியாக நாகேஷ் அவர்களின் இந்த வசனத்தை மறக்க வாய்ப்பேயில்லை. ஆனால் இன்று நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா ? ஒரு மன்னன் ஒரு புலவருக்கு ஆயிரம் பொன் அளிக்கும் நிகழ்ச்சி மெய்யாக நடந்திருக்குமா. அந்த நாளைய தங்கத்தின் விலையை மனதில் வைத்திருந்தாலும் ஒரு புலவருக்கு ஆயிரம் பொன் என்பது இந்தக் காலத்து சினிமா ஸ்டார்களுக்கும் கிரிக்கட் வீரர்களுக்கும் கிடைக்கும் சம்பளத்தை காட்டிலும் மிகப் பெரிதாக இருந்திருக்கும். ஆயிரம் ஆண்டுக்கு முன் நமது நாட்டின் செழுமை , வளங்கள் அனைத்தையும் மனதில் கொண்டாலும் இது கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றுகிறது.

தமிழர் வரலாற்றில் பொன்னேட்டில் பதிக்க வேண்டிய திரு ராஜ ராஜ சோழர் காலத்தில் தான் முதன் முதலில் தங்க நாணயங்கள் அச்சிடப்பட்டன. அதுவரையிலும் ரோமானிய தங்க காசுகள் தான் புழக்கத்தில் இருந்தன. அப்படி இருக்கையில் அந்த அற்புத ஆட்சியில் ஒரு புலவருக்கு ஆயிரம் பொன் வழங்கும் செல்வம் இருந்ததா ?

நம்மில் பலருக்கும் இந்த ஐயம் வந்திருக்கும். அதனால் நாணயஇயல் நிபுணர் திரு ராமன் அவர்களை சந்திக்கும் போது அவரிடத்தில் கேட்டு தெளிவு பெற்றேன். ஆனால் முதல் கேள்வி அந்த தங்க காசு பார்க்க கிடைக்குமா ? எந்த காசு ? ராஜ ராஜா சோழர் காலத்து தங்க காசு?

அதை எடுத்து வர சென்ற பொது மேஜையில் சிறு கிழி ஒன்று இருப்பதை பார்த்தேன். சிறிய அளவு என்றாலும் அழகிய வடிவம், கச்சிதமான மூடி என்று மிகவும் அழகாக இருந்தது.

அது தான் பொற்கிழி என்றார் திரு ராமன்.

ஆஹா. அந்நாளில் இதில் தான் காசுகளை போட்டு தருவார்களோ ? மிகவும் சிறியதாக உள்ளதே. இதில் எத்தனை காசுகளை போடமுடியும் என்ற கேள்விகள் எழுந்தன.

காசை எடுத்து கையில் தந்தார்.

தங்கக் காசு, சோழர் கால தங்கக் காசு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அச்சிட்ட காசு. உடலில் மயிர் கூச்சலிட உள்ளங்கையில் பக்தியுடன் வாங்கியது தான் தெரியும் – எவ்வளவு சிறியது , கையில் எடையே தெரியவில்லை – அவ்வளவு மெல்லிய தகடு போல இருந்தது.

கண்ணையும் மனதையும் பிரித்த அந்த பொற்காசு , ஐயத்தையும் தீர்த்தது, இப்படி இருப்பின் ஆயிரம் பொன் என்ன, பத்தாயிரம் பொன் கூட தாராளமாக பரிசளிக்கலாம் !!

தஞ்சை பெரியகோயிலில் ஏன் புத்தர் வடிவங்கள் உள்ளன?

பெரிய கோயில் போன்று உலகப்புகழ் பெற்று திகழும் ஆலயத்தை ஒட்டி இருக்கும் கதைகளும் பல. நாம் முன்னரே விமானத்தின் நிழல் பற்றி பார்த்தோம். இன்று அதே போன்று இன்னொரு பரவலாக கேட்கப்படும் கேள்வி…தஞ்சை பெரியகோயிலில் ஏன் புத்தர் வடிவங்கள் உள்ளன? ஆம் வடிவங்கள்தாம் – ஒன்றல்ல – இரு இடங்களில் புடைப்புச் சிற்பம் மற்றும் புகழ் பெற்ற சோழர் கால ஓவியங்களில் புத்தர் வடிவம் உள்ளது.

( படங்களுக்கு நன்றி : திரு சதீஷ் , திரு அரவிந்த் மற்றும் நண்பர் ஓவியர் திரு தியாகராஜன் – பெரிய கோயில் ஓவியங்கள் நூல் )

திரிபுராந்தகர் பற்றிய குறிப்புகளை முதலில் பாருங்கள். ( நன்றி திவர்கர் சார்)

தாராசுரன் எனும் அசுரனின் புதல்வர்களான தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி எனும் மூவரும் மிகச் சிறந்த சிவபக்தர்களாக இருந்தனர். இவர்களுக்கு இந்த சிவபக்தியால் கிடைத்த தவ வலிமையைக் கொண்டு படைப்புக் கடவுளான பிரும்மனை நோக்கி நெடுங்காலம் கடுந்தவத்தைச் செய்தார்கள். அந்தத் தவத்தின் பலனாக திரிபுரம் எனச் சொல்லப்படும் மூன்று நகரங்களைப் பெற்றனர். மூன்றும் பறக்கும் தன்மை உடையது. அவைகள் கொண்டே பல காலம், இந்த அசுரர்கள் தங்கள் எதிரிகள் அனைவரையும் வென்று தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தீராத தொல்லையைத் தந்து கடும் இன்னல் விளைவித்தனர்.

அவர்களின் தொல்லை தாங்காது, அனைவரும் சிவனிடம் முறையிட்டார், சிவ பெருமான் தக்க நேரத்தில் அவர் குறை தீர்ப்பதாய் சொல்லி விட்டார். இந்த திரிபுர அசுரர்கள் எப்போதும் சிவபக்தியை தக்க வைத்துக் கொண்டிருந்ததும், அந்த பக்தியினால் ஈசன் அசுரர்களை அழிக்காமல் விடுவதாக ஒரு எண்ணம் தேவர்கள் மத்தியில் எழுந்தது.

இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த அசுரர்களை அழிக்கவேண்டுமென்றால் ஈசன் ஒருவனால்தான் முடியும் என்பதைத் தவிர, இந்த பறக்கும் நகரங்களான முப்புரங்களும் அழிய ஒரு குறிப்பிட்ட நாள் வேண்டும், அதாவது இந்த நகரங்கள் பூசத் திருநாளன்று ஒரு நேர்க்கோட்டில் வான் வழியே கூடும். அந்தத் திருநாள் வரும்போது மட்டுமே அழிபடக்கூடிய ஒரு சிறப்பான வரத்தைப் பெற்றிருந்தனர் இந்த அசுரர்கள். ஆகையினால் இந்த முறை வரும் அந்த பூசத் திருநாளை நிச்சயம் நழுவவிடக்கூடாது என்பதை மனதில் கொண்டு விஷ்ணுவிடம் அவர்கள் வழி கேட்டனர். காக்கும் கடவுளான மகாவிஷ்ணு தேவர்களைக் காக்கும் விதமாக முன்வந்தார்.

ஞானகுருவின் வடிவான புத்ததேவன் உருக்கொண்டு அசுரர்களிடம் குருவாக தோன்றினார். சிவபக்தியில் சிறந்த அசுரர்களை தெய்வநோக்கம் என்பது வல்லவர்களுக்குத் தேவையான ஒன்றல்ல என்பதையும் அசுரர்கள் எல்லா வல்லமையும் ஏற்கனவே பெற்ற போது தெய்வத்தின் துணையை அவர்கள் நாடுவது நல்லதல்ல என்பதையும் போதித்தார். புத்த போதனையை திரிபுர அசுரர்கள் மேற்கொண்டனர். சிவசிந்தனையும் அவர்கள் மனதை விட்டு அகன்றது.

இதுதான் சமயம் என தேவர்கள் மறுபடியும் ஈசனின் கருணை வேண்டி சிவனிடம் சென்றபோது, சிவன் சம்மதித்தார். தேவர்கள் அனைவரையும் தனக்குத் துணை வருமாறு அழைத்தார். அசுரர்களின் பறக்கும் நகரங்களை அழித்திட ரதம் ஒன்றை வடிவமைத்தனர். வரம் கொடுத்த பிரும்மன் சாரதியாக, மேருமலையே வில்லாக, மாலவன் அம்பாக, சூரிய சந்திரர்கள் ரதத்தின் இரு சக்கரமாக, ஈசன் அந்தத் தேரில் பறக்கும் நகரங்களை நோக்கி போர் செய்யப் பயணித்தார்.

எதையும் யாவற்றையும் ஆக்கி, காத்து, அழித்து மறுபடியும் உருவாக்குபவர் எனும் பெயர் கொண்ட ஈசனுக்கே இந்த அசுரர்களை அழிக்க இத்தனை உதவிகள் தேவையா எனக் கேள்வி உருவாகக்கூடும். உருவானது கூட தேவர்களின் மத்தியிலே.. அவர்களுக்கு இதனால் ஆணவம் கூட வந்தது. எத்தனைதான் ஈசனே ஆனாலும் தம் உதவியில்லாமல் ஈசனால் கூட சில காரியங்கள் நடக்காது என்பதாக உணரத் தலைப்பட்டனர்.

ஈசன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு முக்கிய காரணம் உண்டு என்பதையும் மறந்தனர். எந்தவொரு முக்கிய செயலும் கூடிச் செய்தால்தான் அதன் முக்கியத்துவத்தை நாம் உணரமுடியும் என்பதற்காகவே ஈசன் தம்முடன் தேவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார் என்பதையும் மறந்தனர்.

திரிபுரத்தை அழிக்கும் வேளை வந்த அந்தச் சமயத்தில் தேவர்கள் ஆணவத்தை உணர்ந்த ஈசன் இவர்களுக்கும் ஒரு சிறிய பாடம் எடுக்கவேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ.. பூசத் திருநாளன்று முப்புரங்களும் ஒன்று சேர்ந்த பொழுதில் ஒரு சிறு மென்னகை செய்தார், அந்த மென்னகையே அந்த திரிபுரங்களை தீ பற்றி எரிக்கத் தொடங்கியது.

”பிரமற்கும் பிரான்மற்றை மாற்கும்பிரான்
நொடிக்கும்மள விற்புரம் மூன்றெரியச்
சிலைதொட்டவ னேஉனை நான்மறவேன்”

என்பார் சுந்தரர். கண்ணிமை நொடிக்குமளவில் புரம் மூன்றையும் எரித்தவனாகப் பாடுவார்,

ஈசனுக்கு உதவியாக வந்த தேவர்கள் திகைத்தனர். ஈசனின் திருவிளையாடலை உணர்ந்த தேவர்கள் தம் தவறுக்கு வருந்தினர். ஈசனின் தாளை நினைந்து பணிந்தனர். அனைவரும் கூடிச் செயல் புரிதலின் அருட்தன்மையும் உணர்ந்தனர். ஈசன் அவர்களுக்கு அருள் புரிந்தார். அவர்களின் உதவியையும் ஏற்று மாலவனான தன் அம்பை அசுரர்களை நோக்கி ஏவி விட, திரிபுரம் மூன்றும் மொத்தமும் எரிந்து அசுரர்களும் அழிந்தனர். திரிபுர அசுரர்களை அழித்து மூவுலகமும் காத்து அருள்செய்த ஈசனை ‘திரிபுராந்தகர்’ என்று தேவர்களும் முனிவர்களும் வழிபடத் தொடங்கினர்.

சரி, இப்போது சிற்ப்பங்களை பார்ப்போம். முதல் புடைப்புச் சிற்பம்.

இன்னும் அருகில்

மேல் வரிசையில் மூவரை நான்றாக அடையாளம் காண முடிகிறது – மகிஷாசுரமர்த்தினி சிங்க வாஹனத்தில் , எலி வாஹனத்தில் கணபதி, மயில் வாஹனத்தில் முருகன்.

நடு வரிசையில் திரிபுர சண்டை காட்சி போல தெரிகிறது. கடைசி வரிசை முடிவடையாத நிலையில் உள்ளது

8866
8869

பக்கத்துக்கு வரிசைக்கு வருவோம். மேலே புத்தர் – அருகில் அவர் சொல்வதை பணிவுடன் கேட்டு நிற்கும் திரிபுர அசுரர்கள்

அடுத்த வரிசையில் – சண்டையில் தோற்று விழும் அசுரர்கள் போல உள்ளது. அருகில் நிற்பவர்கள் கை பாவங்களை பார்தால் மகேசனிடம் சரணடைய சொல்வது போல உள்ளது.

அடுத்த வரிசையில் தலை மீது சிவலிங்கத்தை வைத்து வழிபடும் காட்சி.

அடுத்த சிற்பத்தில் இதே காட்சி சற்று வேறு விதமாக உள்ளது.

முன்னர் பார்த்தவாறே புத்தர் , அருகில் அசுரர்கள்

இங்கே பாருங்கள் தனது ரதத்தில் கம்பீரமாகும் நிற்கும் மகேசன், பிரம்மன் சாரதியாக…

முடிவாக புகழ் பெற்ற சோழ ஓவியங்கள் – அதில் வரும் திரிபுர தகனம் காட்சி. நாம் முன்னரே பார்த்தது தான்.

இங்கே மேலே புத்தர், தேரின் மீது மகேசன், தேரோட்டியாக நான்முகன், அருகில் மகிஷாசுரமர்த்தினி சிங்க வாஹனத்தில் , எலி வாஹனத்தில் கணபதி, மயில் வாஹனத்தில் முருகன்.

நாம் கவனிக்க வேண்டியது பல்லவர் காலத்திலேயே புத்தரை பெருமாளின் அவதாரமாக சித்தரிக்கும் முயற்சி எழுந்துள்ளது. ஆனால் அந்த புத்தர் தான் சாக்கியமுனியா என்பது ஒரு பெரும் கேள்வி. ஆனாலும் இங்கே நாம் பார்த்தமட்டில் புத்த வடிவங்கள் அளவிலும் சரி, அமைப்பிலும் சரி ஒரு மதிப்புக்குரிய பாவத்தில் தான் உள்ளன.

மகேசன் என்றும் பதினாறு என்று அவனை வரமளித்து காத்திட்டார், ஆனால் காமரசவல்லியில் உள்ள இந்த அற்புத கோயில் ?

“ஏதாவது செய்யணும் விஜய் !” நான்கு மாதங்களுக்கு முன்னர் அர்விந்த் மற்றும் சங்கருடன் நடந்த தொலைபேசி உரையாடல் இன்னும் காதில் ஒலிக்கின்றது.

காமரசவல்லி ஆலயத்தின் நிலையை கண்டு மனம் உடைந்த அவரது குரல் தான் அது. நண்பர்கள் ஸ்ரீராம் மற்றும் சாஸ்வத் காமரசவல்லி செல்கிறோம் என்றதும் உடனே அங்கு இருக்கும் நிலையை விளக்கும் ஒரு பதிவு நீங்களே எழுதிக் கொடுங்கள் என்று சொன்னேன். ’என்றும் பதினாறு’ என்று வரம் அளித்து காத்த கதை சொல்லும் சிற்பம் இருக்கும் ஆலயத்தின் அவல நிலையை தரும் இதோ அந்த பதிவு.

நாம் முன்னரே பலமுறை பார்த்த கதை. மரண பயம் அனைவருக்கும் வரும் பயம். அதை வென்று அழியாப் புகழ் பெற்ற பாலகனின் கதை தான் இன்று நாம் பார்ப்பது. மிருகண்டு முனிவரும் அவரது மனைவி மருத்வதியும் மகப்பேறு ஒன்றும் இல்லாமல் துயரத்தில் இருந்தனர். முடிவில் அவர்கள் வணங்கும் சிவனாரிடமிருந்து துயர் துடைக்கும் வரம் கிடைக்கிறது. ஆனால் அதில் ஒரு முடிச்சு – அனைவரும் புகழும் புத்திக் கூர்மை உடைய ஆனால் சிறு வயதிலேயே அவர்களைப் பிரிந்து மடியும் மகன் வேண்டுமா அல்லது பல வருடங்கள் அவர்களுடனே இருக்கும் முட்டாள் மகன் வேண்டுமா? என்பதுதான் அந்த முடிச்சு.

’குறைவாக இருந்தாலும் அறிவும் பக்தியும் நிறைந்துள்ள புத்திசாலி மகனே வேண்டும்’ என்று இருவரும் கேட்க அப்படியே பிறக்கிறான் மார்க்கண்டேயன். அனைவரும் வியக்கும் வண்ணம் சிவ பக்தனாக விளங்குகிறான். ஆனால் அந்த பாலகனின் பதினாறு அகவை முடிந்த நிலையில் தவணை முடிந்த வாகனத்தை பறிக்கும் சர்வ வல்லமை படைத்த கடனாளி வங்கி காவலன் போல வருகிறான் காலன். பயம் கொண்டு சிவலிங்கத்தை கட்டிக்கொண்டு நிற்கும் சிறுவனைக் கண்டு தனது பாசக் கயிற்றை வீசுகிறான் எமன். அப்போது தன்னிடத்தில் சரணடைந்த பக்தனின் குரல் கேட்டு சீறி எழும் மகேசன் காலனை உதைத்துத் தள்ளிவிட்டு, தன் பக்தனான மார்க்கண்டேயன் என்றும் பதினாறாக இருக்க வரம் அளித்து விடுகிறார்.

இந்தக் காட்சியைத்தான் சிற்பி காமரசவல்லி சிற்பத்தில் எடுத்துக்கொள்கிறான். கொள்ளிடத்தின் வடக்கே , நெடுஞ்சாலையில் இருந்து சற்று தொலைவில் உள்ளது இந்த ஆலயம். அதன் வடக்கு பக்கம் உள்ள சுவரில் காணும் காட்சி.

பிள்ளையார் சிற்பத்தின் அடியில் காணும் சிறு சிற்பம் தெரிகிறதா. ?

இதோ அந்த காட்சி.

கையளவு கல்லில் கதை சொல்லும் கலை. லிங்கத்தை கட்டி அணைத்து இருக்கும் மார்க்கண்டேயன். பின்னால் திரும்பி தன்னை நெருங்கும் ஆபத்தை கண்டு அஞ்சி நடுங்கும் வண்ணம்…அவனை அடுத்து எமன். ஐயனின் காலில் புத்தி படும் வண்ணம் இருந்தாலும், எட்டி தன் இரையை பிடிக்க முயலும் எமன். அவன் மீது ஆக்ரோஷமாக ஆடும் மகேசன் – காலசம்ஹார வடிவத்தில் – நான்கு கைகள், ஒரு பக்கம் அனல் பறக்கும் கோபம் அதே உருவத்தில் பக்தனை ஆட்கொள்ளும் கருணை உருவம். அனைத்து காட்சிகளின் உணர்வையும் அப்படியே படம் பிடித்துக் கட்டும் அற்புதச் சிற்பம்.

இதே வடிவம் பல இடங்களில் இருந்தாலும் இந்த அளவிற்கு சிறிய சிற்பத்தில் இத்தனை உணர்வுகளை கொண்டு வருவது மிக மிகக் கடினம். உதாரணத்திற்கு தஞ்சை பெரிய கோயிலில் உள்ளே இதே வடிவத்தை ஒப்பிட்டு பார்ப்போம். என் பார்வையில் பிரம்மாண்ட அளவில் உள்ள இந்த சிற்பத்தை விட காமரசவல்லி சிற்பத்தில் உணர்ச்சிகளின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதே போல இரு மார்க்கண்டேய வடிவங்கள்.

ஒரு இடத்தில மண்டியிட்டு நிற்கும் வண்ணம் இருந்தாலும், பெரிய கோயில் இந்த கதையில் உள்ள மூன்று பேரையும் பிரித்து தனித் தனியே காட்டுகிறது

மிகச் சிறிய சிற்பம் என்பதால் முகபாவங்களில் காட்ட முடியாத உணர்ச்சிகளை உடல் தோற்றங்களின் சிறு நெளிவுகளில் காட்டி நமது மனதை கொள்ளை கொள்கிறான் காமரசவல்லி சிற்பி.

இப்படி ஆலயத்தில் எங்கும் நுண்ணிய சிற்ப்பங்கள் – குறைந்தது இருபத்து ஐந்து இருக்கும். ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம். இங்கும் அங்கும் இரைந்து கிடக்கும் உடைந்த தூண்கள் மனதை நெருடுகின்றன. புனரமைப்பு என்னும் பெயரில் விமானத்தில் வேலை துவங்கி நடுவிலேயே கைவிடப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகளை பார்க்கும் முன்னர் மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்.


ஏதாவது செய்ய வேண்டுமே விஜய் !!!!

ஒரு நாரை கண்ணனை விழுங்கியது !

இன்று நாம் காணப் போவது, கண்ணனின் மாய லீலையை விவரிக்கும் மற்றுமொரு சிற்பம் திருமால்புரத்திலிருந்து. நாரை உருவில் வந்த பகாசுரனை மாய்த்தக் காட்சியை விளக்கும் கவின்மிகு சிற்பம்.

வழக்கம்போல், முதலில் கதையைக் கேட்போம், பிறகு சிற்பத்தைக் அருகில் சென்று காண்போம்.

ஆயர் குலச் சிறுவர்களெல்லாம் தினமும் கன்றுகளுக்குத் தண்ணீர் காட்டுவதற்காக அவைகளை யமுனை நதிக்கரைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். ஒரு நாள் அவ்வாறு கன்றுகள் யமுனை நதியில் தண்ணீர் குடிக்கும்போது சிறுவர்களும் நீர் அருந்திவிட்டு நதிக்கரையில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கே மலைபோன்ற பெரிய வடிவம் கொண்ட ஒரு நாரையினை கண்டனர். அந்த நாரை உண்மையில் கம்ஸன் ஏவிய பகாசுரன் எனும் அரக்கனாவான். அதனைக் கண்ட மாத்திரத்தில் அறிந்து கொண்டான் கண்ணன். வெண் நிறத்தில், நீண்ட அலகுகள் கொண்டதாய், கூர்மையான நகங்கள் கொண்டு, ஆக்ரோஷம் கொண்டு நாரை வடிவு கொண்ட அரக்கன் சட்டென்று நெருங்கி வந்து அவசரமாய் கண்ணனை விழுங்கினான். இதைக் கண்ட பலராமனும் மற்ற ஆயர் குலச் சிறுவர்களும் நடுநடுங்கி மூர்ச்சையடைந்தனர்.

உள்ளே சென்ற கண்ணனோ பெரும் ஜோதிப் பிழம்பாகி எரிக்கலானான். பகாசுரனின் தொண்டையில் அக்னி பிழம்பினால் மிகுந்த எரிச்சல் உண்டாயிற்று. பொறுக்கமாட்டாது அவன் கண்ணனை வெளியில் எறிந்துவிட்டு தன் கூரிய அலகுகளால் குத்திக் கொல்ல முயன்றான். கண்ணன் உடனே பாய்ந்து, ஒரு குழந்தை எவ்வாறு ஒரு புல்லை எளிதாக பிளக்குமோ அவ்வாறே அவ்வரக்கனின் வாயை பிளந்தார். மாபெரும் அலறலுடன் பகாசுரன் மோட்ச கதியடைந்தான்.

இப்போது இந்தக் காட்சியை பாருங்கள்.

பள்ளத்தில் மேயும் பறவையுருக்கொண்டு
கள்ளவசுரன் வருவானைத் தான்கண்டு
புள்ளிதுவென்று பொதுக்கோவாய் கீண்டிட்ட
பிள்ளையை வந்துகுழல்வாராய் அக்காக்காய்.
பேய்முலையுண்டான் குழல்வாராய் அக்காக்காய்

(பெரியாழ்வார் திருமொழி – ஐந்தாம் திருமொழி)

காக்கையே! நீர்த்தாழ்வுகளிலே இரையெடுத்துத் திரிகின்ற நாரையின் ரூபத்தை ஏறிட்டுக் கொண்டு வருபவனாகிய வஞ்சனை பொருந்திய பகாசுரனை கண்டு, இது பட்சியேயென்று சாமான்னியமாக நினைத்து விரைவாக அந்த அசுரனின் வாயை கிழித்துப் போட்ட கண்ணனின் குழல் வார விரைவில் வாராய் காக்கையே! பூதனையின் நச்சுக் கலந்த பாலைக் குடித்த கோபாலனின் குழல் வார விரைவில் வாராய் காக்கையே!


ஒரு கைபேசியின் அளவேயுள்ள சின்னஞ்சிறிய சிற்பம். நாரையின் வடிவம் கொண்ட பகாசுரனின் வாயை தன் சின்னஞ்சிறு கரங்களால் பிளக்கும் காட்சி! எத்துணை அழகு! காணக் காணக் கோடி இன்பம்!!!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கதை சொல்லும் இந்த கற்கள் இன்றும் தங்கள் கதையை சொல்வது அருமை. இன்றும் இந்த கதைகள் நம் சிறுவர்களை நெகிழவைப்பதை நாம் காண்கிறோம்.


( photo courtesy: http://www.annecy.org/annecy-2011/festival:en/official-selection)

இத்துடன் பதவு முடியவேண்டும், எனினும் நமது நேயர் காத்தி பூத கணங்களுடன் நமது காதலை அறிந்து சில சிற்பங்க​ளை அனுப்பி அதில் இருக்கும் அருமையான நகைச்சுவை உணர்வு எப்படி வெளிப்படுகிறது என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அவற்றை நீங்களும் கண்டு மகிழுங்கள்.

தமிழாக்க உதவி நன்றி: வர்தினி.

கத்தியை மட்டும் தீட்டினால் போதாது, புத்தியையும் தீட்டணும்… அனுமன் vs ஸுரஸை

ராமாயணத்தில் மிகவும் பிடித்த பாத்திரங்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது ஹனுமார் தான். அதுவும் அவரது அற்புத சாகசங்கள் மிகுந்த குழந்தை பருவக் கதைகள் அருமையாக இருக்கும். அப்படியே வாய் பிளந்து பாட்டி கதை சொல்லுவதை கேட்ட பசுமையான நினைவுகள். ஒவ்வொரு கதையிலும் ஒரு அடிக்கருத்து இருக்கும். அபூர்வ சக்திகள் கூர்மையான மூளையுடன் இணையும் அவரது பாத்திர சித்தரிப்பு அருமை.

அப்படி ஒரு கதையை தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். திரு KK மாமா அவர்கள் தம்மல் வரா​ஹேஸ்வரர் ​ஆலயத்தின் உள்ள ஒரு தூண் சிற்பத்தை அற்புதமாக படமெடுத்து தந்தார். மேலும் திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களது முன்சிறை சிவன் கோயில் (கன்யாகுமாரி) படமும் இணைய தேடலில் கிடைத்தது.

கதை சிறியது தான். பெரும் ஆபத்து எதிரில் வரும்போது, கத்தியை மட்டும் தீட்டினால் போதாது, புத்தியையும் தீட்டிய அனுமனின் அற்புத செயல்.

கடல் தாவு படலத்தில் அனுமனை எதிர்க்கொண்ட ஸுரஸை

சீதையை தேடி இலங்கையை நோக்கி தாவும் அனுமனின் ஆற்றலை சோதிக்க விண்ணவர் கூடி, நாகர் குல அரசியான ஸுரஸையை ஏவுகிறார்கள். அவளும் பயங்கர அரக்கி வேடம் பூண்டு அனுமனை எதிர்க்கொண்டு , நீ என் வாயினுள் நுழையவேண்டும் என்கிறாள். வந்திருப்பது அரக்கி அல்ல, தனக்கு விண்ணவர் வைக்கும் போட்டி என்றெல்லாம் அவருக்கு தெரிந்ததோ இல்லையோ, போரிட்டு நேரத்தை வீணாக்காமல் அனுமன், தன் உருவத்தை பெரியதாக ஆக்குகிறார். ஸுரஸையும் தனது வாயை அதற்கேற்ப பெரிதாக்குகிறாள். திடீரென தன் உருவத்தை கொசு அளவிற்கு குறைத்து அவளது வாயினுள் சென்று வெளிவருகிறார் ஹனுமார்.

மேலும் விரிவாக படிக்க விரும்புவோர் கீழே சொடுக்கவும்..

ஸுரஸை தோன்றுதலும், அனுமன் அவளை வென்று விரைதலும்

மூன்று உற்ற தலத்திடை முற்றிய துன்பம் வீப்பான்
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை உணர்த்து நீ ‘ என்று,
ஆன்றுற்ற வானோர் குறை நேர, அரக்கி ஆகித்
தோன்றுற்று நின்றாள், சுரசைப் பெயர்ச் சிந்தை தூயாள். 53

பேழ் வாய் ஒர் அரக்கி உருக்கொடு, பெட்பின் ஓங்கி,
‘கோள் வாய் அரியின் குலத்தாய்! கொடுங் கூற்றும் உட்க
வாழ்வாய்! எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்கொல்?’ என்னா,
நீள் வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள். 54

‘தீயே எனல் ஆய பசிப்பிணி தீர்த்தல் செய்வாய்
ஆயே, விரைவுற்று எனை அண்மினை, வண்மையாள!
நீயே இனி வந்து, என் நிணம் கொள் பிணங்கு எயிற்றின்
வாயே புகுவாய்; வழி மற்று இலை, வானின்’ என்றாள். 55

‘பெண்பால் ஒரு நீ; பசிப் பீழை ஒறுக்க நொந்தாய்;
உண்பாய் எனது ஆக்கையை; யான் உதவற்கு நேர்வல்-
விண்பாலவர் நாயகன் ஏவல் இழைத்து மீண்டால்,
நண்பால்’ எனச் சொல்லினன், நல் அறிவாளன்; நக்காள், 56

‘காய்ந்து, ஏழ் உலகங்களும் காண, நின் யாக்கைதன்னை,
ஆர்ந்தே பசி தீர்வென்; இது ஆணை’ என்று அன்னள் சொன்னாள்;
ஓர்ந்தானும், உவந்து, ‘ஒருவேன்; நினது ஊழ் இல் பேழ் வாய்
சேர்ந்து ஏகுகின்றேன்; வலையாம்எனின் தின்றிடு’ என்றான். 57

அக்காலை, அரக்கியும், அண்டம் அனந்தம் ஆகப்
புக்கால் நிறையாத புழைப் பெரு வாய் திறந்து,
விக்காது விழுங்க நின்றாள்; அது நோக்கி வீரன்,
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான். 58

நீண்டான் உடனே சுருங்கா, நிமிர் வாள் எயிற்றின்
ஊண்தான் என உற்று, ஒர் உயிர்ப்பு உயிராத முன்னர்,
மீண்டான்; அது கண்டனர் விண் உறைவோர்கள்; ‘எம்மை
ஆண்டான் வலன்’ என்று அலர் தூஉய், நெடிது ஆசி சொன்னார். 59

சரி இப்போது, சிற்பத்திற்கு வருவோம். முதலில் தம்மல்

மிகவும் அருமையான சிற்பம். வாயினுள் நுழையும் ஹனுமானின் கால்கள் மட்டுமே தெரிந்தாலும், நேர்த்தியாக வளையும்படி செதுக்கி உள்ள சிற்பியின் ஆற்றல் அருமை. இந்த கதை தெரியாதவர்கள் யாரையோ விழுங்குகிறாள் அரக்கி ! பாவம் ! என்று பார்த்து விட்டு சென்றுவிடுவார்கள்.

அடுத்து முன்சிறையில் உள்ள சிற்பம்.

இங்கே வர்ணனைக்கு சற்று மாறாக வாயினுள் நுழையும் அனுமன் காது வழி வெளிவருவது போல உள்ளது. இது கதையை ஒட்டி அல்ல, ஏனெனில் இவ்வாறு வெளிவந்தால் செவியின் ” ஜவ்வு ” கிழிந்து விடும். சிற்பி கதையை சற்று மாற்றி விட்டானோ?

( இதே போல சுசீந்தரம் கோயிலிலும் ஒரு தூண் சிற்பம் இருக்கிறதாம். வெகு நாட்காளாக தேடி வருகிறேன். வாசகர்கள் முடிந்தால் தேடி அனுப்புங்கள் )

இணையத்தில் இந்தக் கதையின் மேலும் சில வடிவங்கள்.


http://www.kidsgen.com/fables_and_fairytales/indian_mythology_stories/hanuman_meets_surasa.htm
http://www.hinducounciluk.org/newsite/circulardet.asp?rec=84

சர்ச்சைச் சிற்பங்கள்- பாகம் இரண்டு ஹரி vs ஹரன்

இந்து மதமும் அதன் ​கொள்​கைகளும் பல்​வேறு அறிஞர்க​ளையும் இன்றும் ஆச்சரியப்படவும் தி​கைக்கவும் ​வைக்​கையில், சிற்பங்க​ளை விளக்கிக் கூறும் பணியில் மட்டும் பயணிக்க வி​ழைகி​றோம். இந்த ‘சர்ச்​சை சிற்பங்கள்’ பற்றிய முதல் பதி​வை படித்த பின்பு இந்தப் பதி​வை படிக்குமாறு வாசகர்க​ளை ​கேட்டுக் ​கொள்கி​றோம்.

இந்தப் பதி​வை இட​வேண்டும் என்று பல காலமாக நி​னைத்திருந்த​போதிலும், வாசகர்களின் அபிப்பிராயம் எவ்வாறு இருக்கு​மோ என்ற எண்ணத்தினா​லே தள்ளி​போட்டு​ ​கொண்டிருந்​தேன். ஆனால் தாராசுரம் ​சென்று வந்த நம் நண்பர் திரு. காமன் பா​லெம், இந்த சிற்பத்​தைப் பற்றி ​கேட்க​வே, அதன் அம்சங்க​ளை பற்றியாவது கூற​வேண்டு​மென இந்தப் பதி​வை இடுகி​றேன். வாசகர்கள் அ​னைவரும் இந்தப் பதி​வை​ ​பொறு​மையுடன் முழு​மையாக படித்த பிறகு தங்களது கருத்துக்க​​ளை கூறுமாறு ​கேட்டுக் ​கொள்கி​​றேன்.

தாராசுரத்தில் உள்ள இந்த சர​பேசுவரர் சிற்பமானது, ​சோழர்களின் க​லைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினாலும், ஒருவ​ரை தாழ்த்தி மற்​றொருவ​ரை உயர்த்தும் எண்ணம் காரணமாக உருவாக்கப்பட்டது என்பதா​லே​யே சற்று​ ​நெருடலான ஒன்றாகும். காலச் சக்கரத்தின் சுழற்சியில் இந்த உருவத்தின் துவக்க காலம் ​தெரியாத​போதிலும், நாம் காண்பது இரண்டாம் இராஜராஜ ​சோழனின் ஆட்சிகாலமாகிய 12 ஆம்நூற்றாண்​டைச்​ ​சேர்ந்தது. அந்தக் காலக்கட்டத்தில் சமயப் பிரிவி​னையானது உச்சத்​தை அ​டைந்தது ​வேத​னைக்குரியதாகும்.

நரசிம்ம அவதாரக் க​தை நாம் அ​னைவரும் அறிந்த​தே. பலவிதமாக அது ​சொல்லப்பட்ட ​போதிலும், அதன் சாராம்சம் இது தான். பிரம்மதேவனிடம் இருந்து விசித்திரமான வரத்தை பெற்று சாகாவரம் பெற்றதாக இறுமாந்திருந்த ஹிரண்யகசிபுவின் சம்ஹாரமே நரசிம்ம அவதாரத்தின் நோக்கம்.

“அனைத்தும் அருளும் பிரம்மதேவா! நான் வேண்டும் வரத்தை அருள்வாயாக! தங்களால் படைக்கப்பட்ட எந்த உயிரினத்தாலும் நான் கொல்லப்பட கூடாது. வீட்டின் உள்ளேயோ வெளியேயோ, பகலிலோ, இரவிலோ, வானத்திலோ, பூமியிலோ நான் இறக்க கூடாது. எந்த ஆயுதத்தாலோ, விலங்கினத்தாலோ, மனிதராலோ, தேவராலோ, அசுரராலோ, பாதாள லோகத்தில் வாழும் நாகங்களாலோ கொல்லப்பட கூடாது. அ​னைத்து உயிர்களுக்கும், தேவதைகளுக்கும் நானே அதிபதியாக வேண்டும். தவம், யோகம் போன்றவற்றினால் கிடைக்கும் சித்திகள் அனைத்தும் எனக்களிக்க வேண்டும்.”

வரம் பெற்றபின் தன்னையே சர்வ சக்தி படைத்த இறைவனாக பாவித்து கொண்டு மக்கள் எல்லோரையும் தன்னை வணங்கும்படி வற்புறுத்தினான். மறுத்தவர்களை தண்டித்தான். அவனது மகன் பிரஹலாதன் ஸ்ரீமன் நாராயணனின் சிறந்த பக்தன். தன் தந்தையை கடவுளுக்கு சமமானவன் என ஏற்க மறுத்தான். கோபம் கொண்ட ஹிரண்யகசிபு நீ வணங்கும் உன் கடவுள் எங்கிருக்கிறான் என கேட்க, பிரஹலாதன் ‘அவன் எங்கும் நிறைந்திருப்பான். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்’ என கூறுகிறான். ஆத்திரம் கட்டுகடங்காது தனது கதையினால் அருகில் இருந்த தூணை உடைக்கிறான் ஹிரண்யகசிபு.

(தெலுங்கு திரைப்படத்திலிருந்து இந்த காட்சி)

அந்த தூணில் இருந்து நரசிம்ம ரூபத்தில் மகாவிஷ்ணு தோன்றுகிறார். அவன் பெற்ற வரத்தை அனுசரித்து மனித உடலும் சிம்மத்தின் தலையும் கொண்டு, தூணை உடைத்துக் கொண்டு, வாசற்படியில் அமர்ந்து, ஹிரண்யகசிபுவை மடியில் கிடத்தி, சந்தியா வேளையில், தனது நகங்களாலேயே அவனது வயிற்​றை கிழித்து வதம் செய்கிறார். பல்வேறு சிற்பங்களில் அவரது ​கோப உக்ர வடிவத்தை காணலாம். பிரஹலாதன் தன் இனிய குரலில் துதி செய்ய நரசிம்மர் சாந்தம் அடைகிறார். இந்தக் கதை இங்கேயே முடிவடைய வேண்டியது.

ஆனால், இதற்கு பின்பும் கதை தொடருவதாகக் கூறப்படுவது, சைவ வைணவ சமயங்களின் பிரிவினையின் தாக்கம் என்றே தோன்றுகிறது. நரசிம்ம பெருமானின் உக்ரம் தணியாது, மகாலட்சுமி கூட அவரது அருகில் செல்ல இயலாத நிலை ஏற்பட, அனைத்துலகங்களும் இந்த உக்ரத்தின் பலனாக நடுநடுங்கி, முடிவில் சிவபெருமானை சரணடைகிறார்கள். அவர் முதலில் வீரபத்ரனை அனுப்புகிறார். ஆனால் வீரபத்ரனாலும் நரசிம்மருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. எனவே, சிவபெருமானே சரபேசுவர ரூபமெடுத்து செல்கிறார். அதாவது, மனிதன் + சிம்மம் + பறவை – சேர்ந்ததொரு ரூபம்.

பிறகு நடப்பது பலராலும் பலவிதங்களிலும் சொல்லப்படுகிறது. நரசிம்மரை சரபேசுவரர் ஆரத் தழுவி, அவரது சினத்தைத் தணித்து, நரசிம்மரை தக்க வைத்து, மகாவிஷ்ணுவை வெளியேற்றுகிறார்.

இந்த முழுக் கதையும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூன்றே காட்சிகளில் பறைசாற்றப்பட்டுள்ளது.

இப்போது மீண்டும் தாராசுரம் சிற்பம்.

நல்ல வேளையாக, திரு. காமன் அவர்கள் முழு சிற்பத்தையும் படமெடுத்திருந்தார்.

நரசிம்மர் உடலிலிருந்து மகாவிஷ்ணு வெளியேற்றப்படுகிறார். அந்த சிறிய உருவம், பிரஹலாதனாக இருக்கக் கூடும். மேலே, தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இக்காட்சியை காண்கிறார்கள்.

சற்று கவனித்துப் பார்த்தால், பிற்காலத்தில் காணப்படும் மதுரை சிற்பங்களைப் போல் அந்த
உருவங்களுக்கான தனித் தன்மையான அம்சங்கள் இந்த சிற்பத்தில் இல்லை என கண்டு கொள்ளலாம்.

திரு. காமன் அவர்களின் அடுத்த கேள்வி, கால்களைப் பற்றியது. சர​பேசுவரருக்கு இரு இறக்கைகளும், நான்கு ஜதை கால்களும் உண்டு.


சில இடங்களில் நிறைய கைகளுடன் கூடிய சிற்பங்களும் உள்ளன. இலங்கையில் உள்ள முனீஸ்வரர் கோவில் சிற்பத்தைப் பாருங்கள். ( படம் : விக்கி )


இதை வருந்தத் தக்கது என கூறியதன் காரணமே, சமீப காலத்தில் ப்ரத்யங்கிரா தேவி போன்று பல்வேறு தாத்பரியங்கள் சொல்லப்படுகின்றன. மக்களும் தங்கள் குறைகள் தீர, இந்தக் கோவில்களை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.

நிச்சயமாக இந்து மதம் என்பது ஒரு கடவுளையே பிரதானமாக கொண்டதன்று. இதில் முதன்மையானது, என் கடவுள் பெரியதா, உன் கடவுள் பெரியதா என்ற கேள்வி அல்ல, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதும் அல்ல; கடவுளைத் தேடிச் செல்லும் பயணத்தை அனுமதிக்கும் பக்குவமேயாகும்.

இராஜராஜ சோழனின் தஞ்சை பெரிய கோவிலில், இந்து மதத்தின் இரண்டு சமயங்களையும் இணைத்திடும் அற்புதமான ஹரிஹர சிற்பத்தைப் பாருங்கள்.

சுவாமி விவேகனந்தரின் வாசகம் தான் என் நினைவிற்கு வருகிறது. “இந்த உலகத்திற்கு சகிப்புத்தன்மையையும், அனைவரையும் தன்போல ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தையும் கற்றுத்தந்த மதத்தை சேர்ந்தவன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். எல்லா நம்பிக்கைகளையும் சகிப்பது மட்டும் அல்ல அவை அனைத்தும் உண்மை என்று நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் ”

பின்பு ஏன் ஒருவரை தாழ்த்தி மற்றொருவரை உயர்த்துகிறோம்?

துயரத்தின் உச்சியில் இருக்கும் அன்னையா அல்லது கொலைசெய்ய வந்த பாதகியா?

நண்பர் தக்ஷின் அவர்கள் மதுரை சென்று விட்டு ஒரு அற்புத சிற்ப்பத்தின் அருமையான படத்தை பூதகி / பூதனை என்ற தலைப்புடன் முகநூலில் இட்டவுடன் மனதில் எழுந்த முதல் கேள்வி ”குட்டிக் கண்ணனை கொல்ல வந்த பொல்லாத அரக்கியா இது ?”

பூதனை பற்றி மனதளவில் நாம் வைத்திருந்த உருவம் நாம் பெரும்பாலும் கதைகளிலும் சில சிற்பங்களிலும் பார்த்ததன் விளைவு தான். இதோ இங்கே நண்பர் அர்விந்த் அவர்கள் அளித்த படம் – சோழர் கால புள்ளமங்கை சிற்பம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் சுதை உருவம் – ஒரு கொடூர அரக்கி அவளின் உடலில் இருந்து ரத்தம் அனைத்தையும் உறிந்து எடுத்தவாறு உள்ள காட்சிகளே அதிகம். எனினும் கண்ணனும் யசோதை போலும் இல்லை – அந்த பெண்மணியின் முகபாவம் ஒரு கலக்கம் கலந்த துயர நிலையில் உள்ளது.

இங்கே இருப்பதோ மிகவும் அழகு வாய்ந்த பெண்மணி. வேறு யாராக இருக்க முடியும்? சில குறிப்புகளில் இந்த சிற்பம் ஹரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி என்றும் கையில் இருப்பது இறந்த குழந்தை லோஹிதாசன் என்றும் உள்ளன. எனினும் அந்தக் கதையில் சந்திரமதி ஒரு அடிமையாக விற்கப்படுகிறாள். பின்னரே லோஹிதாசன் இறப்பு வருகிறது. இங்கே இத்தனை ஆபரணங்களுடன் சிற்பி செதுக்க வாய்ப்பே இல்லை என்று தான் தோன்றுகிறது. மேலும் குழந்தை நன்றாக இருப்பது போலும் பால் அருந்த உதடுகளை வைத்திருப்பது போலவே உள்ளது.

இன்னும் அருகில் சென்று படம் எடுத்து ஆராய வேண்டும் என்று நண்பர்கள் பலரிடம் கேட்டுப் பார்த்தேன். அதிர்ஷ்டவசமாக ராமன் அவர்கள் மதுரை சென்று வேண்டிய படங்களை எடுத்து அனுப்பினார்.

சாதாரண படம் வேண்டும் என்று மட்டும் நான் கேட்கவில்லை. மிக அருகில் சென்று குழந்தையின் வலது மார்பின் படம் தேவை என்று கூறினேன். ஏன் ?

நாம் முன்னர் விஷ்ணு மார்பின் உள்ள ஸ்ரீவத்சம் என்ற மறு பற்றிய பதிவு நினைவில் உள்ளதா ? அதில் வரும் கடைசி படத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

குழந்தையும் நிறைய அணிகலன் போட்டுக்கொண்டு சிரிப்பது போலவே உள்ளது. இந்த விதமான ஆரம் கண்ணன் மற்றும் சம்பந்தர் சிலைகளில் நாம் முன்னர் பார்த்துள்ளோம்.

5068
5074
5091

எதற்காக வலது மார்பின் படம் தேவை? கல்லில் சிற்பி இந்த சிலையை வடிக்கும் பொது, சில இடங்களில் சிறு உளி வைத்து செதுக்க வேண்டும், அப்படியும் சில இடங்களில் அவனால் முழுவதுமாக செதுக்க இயலவில்லை.

இடது மார்பை முழுவதுமாக செதுக்கிய அவன், வலது மார்பை செதுக்க வாகு இல்லை. இது நீங்களே பாருங்கள்.

சரி, மார்பின் மேல் உள்ள அணிகலன்களை தனியாக பார்ப்போம்.

இதுவரை கூர்ந்து கவனித்து இருந்தால் வலது மார்பில் உள்ள அந்த சிறிய புடைப்பு தெரிந்திருக்கும்

இப்போது பாருங்கள்.

இதோ நின்ற கோலத்தில் பெருமாளின் வலது மார்பில் தெரியும் முக்கோண மறு. இதனை குழந்தையின் மார்பில் இருப்பதுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

பூதனை பற்றி மேலும் படிக்க கீதா அம்மாவின் அருமையான பதிவை பாருங்கள்.

கம்சன் பூதனையை கோகுலம் சென்று அந்தக் குழந்தையைக் கண்டு பிடித்து அதற்கு விஷப் பால் ஊட்டும்படிக் கேட்டுக் கொண்டான்.

பூதனையோ மறுக்கின்றாள். என்னால் முடியாது என்று சொல்கின்றாள். ஏற்கெனவே அனைவரும் அவளைக் கண்டாலே ஓடி ஒளிவதையும், அவளின் உடன்பிறந்தவர்களே அவளைக் கண்டால் வராதே என்று சொல்லுவதையும் தன்னுடைய முகத்தைப் பார்ப்பதே பாவம் என அவர்கள் நினைப்பதையும், அவ்வாறே நடந்து கொள்ளுவதையும் சொல்கின்றாள் பூதனை

“பூதனை, நான் ஒரு வார்த்தை சொன்னால் போதும், மகத வீரர்கள் உன்னையும், ப்ரத்யோதாவையும், வெறும் கைகளால் கொன்று விடுவார்கள். வாழ்வோ, சாவோ, என்னை மீறி நீயோ, ப்ரத்யோதாவோ ஒன்றும் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. என் கட்டளையை மீறி உங்கள் வாழ்வில் எதுவும் இல்லை.” என்றான் கம்சன். பூதனை வாயே திறக்கவில்லை. “இங்கே நிற்காதே, போ உடனே

கோகுலத்தில் அந்த மாதம் பெளர்ணமி தினத்தன்று அவர்களின் குலதெய்வம் ஆன கோபநாத் மஹாதேவருக்குத் திருவிழா வந்தது.

யசோதைக்குச்செய்தி வந்தது, மதுராவிலே யாரோ பெரிய அந்தணக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, கோகுலத்தின் கோபநாத் மஹாதேவருக்கு முக்கியப் பிரார்த்தனையை நிறைவேற்ற வந்து கொண்டிருக்கின்றாள் என.

செய்தி வந்த போது யமுனைக்கரைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த யசோதை, உடனேயே இரு இளைஞர்களை அனுப்பி வரும் விருந்தாளியை வீட்டுக்கு அழைத்துப் போய், உபசரித்துவிட்டுப் பின்னர் யமுனைக்கரைக்கு அழைத்து வரும்படி அனுப்பி வைத்தாள் அவர்களும் சென்றார்கள்.

மேலும் படிக்க

என்ன நடந்தது ?.

பூதனை அந்தக் கிருஷ்ணன் முகத்தையே பார்த்தாள். நீல நிறம் ஒளிவிட்டுப் பிரகாசிக்க, சுருண்ட கூந்தல் நெற்றியில் இருந்து தொங்கிக் குழல்கற்றைகள் முகத்தையே மறைக்க, கண்கள் இரண்டும் விஷமத்தனத்தை எடுத்துக் காட்ட, முகம் முழுதும் விஷமத்தனமான சிரிப்போடு விளையாடும் அந்தக் குழந்தையைப் பார்த்தாலே எடுத்துக் கொஞ்சிக் கட்டி அணைக்கவேண்டும் போல் தாபம் மேலிட்டது பூதனைக்கு.

ஆனால் இந்தக் குழந்தையைத் தான் அவள் கொல்லவேண்டும். அதுதான் அவளுக்கு இடப்பட்டிருக்கும் வேலை. பேசாமல் வேலையையே விட்டுடலாமா என்று கூட எண்ணினாள். இந்தக் குழந்தையைக் கொல்லுவதை விடக் கம்சன் கையால் அவள் இறந்துவிடலாமோ என்று எண்ணினாள். அவள் மட்டும் இறந்தால் பரவாயில்லை, அவள் கணவன் ப்ரத்யோதாவும் இறக்க நேரிடும். பின்னர் அவளுடைய எட்டுக் குழந்தைகளின் கதி என்னாவது? கம்சனின் கடுங்கோபம் அவளுடைய மொத்தக் குடும்பத்தையும், குலத்தையும் பாதிக்குமே. ம்ம்ம்ம்., இந்தக் குழந்தையைக் கொல்லுவதுதான் தன்னுடைய கடைசிக் கடமையாக வைத்துக் கொள்ளவேண்டும். பூதனை அந்தக் குழந்தையையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். குழந்தை அவள் பார்வையால் ஈர்க்கப் பட்டு அவளைப் பார்க்க பூதனை குழந்தையைக் கவரத் தன் கைகளால் தட்டி, வாயால் சத்தம் கொடுத்துக் குழந்தையைக் கூப்பிட்டாள் தன் பக்கம். குழந்தையும் அவளைப் பார்த்து மிக மிக மோகனமாய்ச் சிரித்தது. ஒரு கணம், ஒரே கணம் தன்னை மறந்த பூதனை பின்னர் நிதானத்துக்கு வந்தாள், தன்னிரு கைகளையும் நீட்டிக் குழந்தையைக் கூப்பிட, அவனும் வந்து அவள் கைகளில் அடைக்கலமானான்.

குழந்தையைக் கைகளில் ஏந்திய பூதனைக்குத் தன்னை அறியாமல் அந்தக் குழந்தைக்கு அமுதூட்டத் தோன்றியது. அப்போது அவள் நினைவில் வந்தது, யமுனையில் குளித்ததும், ஒருவருக்கும் தெரியாமல் தன் மார்பில் விஷம், கொடிய விஷத்தைத் தடவிக் கொண்டது. இம்மாதிரிக் கொடிய விஷத்தை மார்பில் தடவிக் கொண்டு சிறு குழந்தைகளுக்குப் பாலூட்டுவது போல் பல குழந்தைகளைத் தான் இத்தனை நாட்களாய்க் கொன்று வந்திருப்பதும், இப்போது கம்சனின் ஆணை இந்தக் குழந்தையையும் இம்மாதிரிக் கொல்லுவது என்பதே என்பது நினைவில் வர அவள் மனதில் போராட்டம். என்றாலும் அதையும் மீறித் தாய்மை உணர்வும், குழந்தையின் அழகும், இத்தனன அழகான குழந்தைக்குத் தன்னிடம் உள்ள எதைத் தான் தரக் கூடாது என்ற உணர்வும் மேலோங்கியது. குழந்தை அவள் கைகளில் மீண்டும் சிரித்தான். அந்தச் சிரிப்பில் தன் வயமிழந்த பூதனை தன்னை அறியாமலேயே குழந்தைக்குப் பாலூட்டத் தொடங்கினாள்.

பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
குறங்குவளைவந்துகாணீரே
குவிமுலையீர். வந்துகாணீரே

மீண்டும் ஒருமுறை சிற்பத்தை பார்த்தேன் – மேலே கூறப்படும் அனைத்து உணர்ச்சிகளும் அந்த முகத்தில் இருப்பது போலவே தெரிந்தது. அது பாதகி பூதனை அல்ல சந்தர்ப்ப வசத்தால் வஞ்சிக்கப்பட்ட ஒரு தாய் முகமே என்றும் புரிந்தது.

கல்லில் ஒரு நாடகம் அரங்கேறுகிறது – பிரதீப் சக்ரவர்த்தி

நண்பர்களே இன்று நண்பர் திரு பிரதீப் சக்ரவர்த்தி அவர்கள் நம்முடன் ஒரு அருமையான பதிவை பகிர்கிறார். சரித்திரம், முக்கியமாக கல்வெட்டுகளில் மிகுந்த ஆர்வம் செலுத்தும் இவரது கோயில் வாகனங்களை பற்றிய நூல் அறிமுகம் முன்னர் பார்த்தோம்.

அதை அடுத்து அவர் தஞ்சாவூர் பற்றிய ஒரு அற்புத நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார் Thanjavur A Cultural History. வரும் நாட்களில் இவரிடத்தில் இருந்து இன்னும் பலவற்றை எதிர்பார்க்கலாம். நமக்காக அவர் ஒரு விசேஷ பதிவை தருகிறார். இதோ

திருமயம் புகழ் பெற்ற யாத்திரை தலம் – மதுரை அருகில் இருக்கும் இந்தத் தலத்தை பற்றி நான் ஹிந்து பேப்பரில் விரிவாக முன்னர் எழுதி இருந்தேன். பலமுறை அந்தப் பக்கம் பயணிக்கும் போது சென்று வருவேன்.

விஜய் சிற்பங்கள் பற்றி இடும் பதிவுகளை வாசித்து விட்டு, நானும் ஒரு சிற்பி கல்லில் எப்படி பல காட்சிகளை கொண்ட நாடகத்தை இயற்றுகிறான் என்பதை, அவரைப்போலவே, இந்தப் பதிவில் விளக்க முயற்சிக்கிறேன். நாம் மூலவரை பார்ப்போம். பிரம்மாண்ட சிற்பம் பத்தடிக்கும் மேலே இருக்கும் – தாய் பாறையில் குடைந்து வடிக்கப்பட்ட இதன் காலம் சுமார் 7ஆம் நூற்றாண்டு என்றும் பெரும்பிடுகு முத்தரையர் என்ற முத்தரையர் தலைவருடைய அன்னை பெருந்தேவி என்பவர் உபயம் என்றும் தெரியவருகிறது. மேலும் வெளியில் கட்டுமானக்கோயிலின் காலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம்.

பெருமாள் ஆதிசேஷனின் மீது பள்ளிகொண்டிருக்கும் காட்சி. நாபியில் இருந்து பிரம்மா தோன்றுகிறார்.

நண்பர் அசோக் அவர்களின் அற்புத உதவியுடன் ( தூண்களை மாயமாக மறைத்துவிட்டார் – copyright image)

குப்தர் காலத்து சிற்பி போல இங்கேயும் சேஷனின் உடலை சாதாரணமாக சுருட்டி இருப்பது போல காட்சி அமைத்துள்ளார்கள் – மற்ற இடங்களில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கடுக்காக இருக்கும் ஆதிசேஷனின் உடலை போல அல்லாமல் காட்சி ஆரம்பித்து விட்டது.

அசுரர் மீது தனது விஷத்தை துப்பும் காட்சி – விஷம் அக்னி பிழம்புகளாய் சீறிச் செல்கிறது.

அவ்வளவு பலத்துடன் விஷத்தை கக்கிய பாம்பின் தலை மிகவும் தத்ரூபமாக கொத்திவிட்டு பின்னால் அசைவதை போல சிற்பி வடித்துள்ளது மிகவும் அருமை.

காட்சி நகரும் திசையை நமக்கு உணர்த்தும் வகையில் மேலே நித்யசூரிகள் பறந்து வருகின்றனர். எம்பெருமானின் திருமுகத்திற்கு மேலே சிற்பி – இயற்கையாகவே அமைந்த கல்லின் வளைவை தனது சிற்பத்தின் ஒரு அம்சமாக உபயோகித்து, மேலே பறந்து வருபவர்களுக்கும் கீழே நடக்கும் காட்சிகளுக்கும் ஒரு இடைவெளி நிறுவ முயற்சிக்கிறானோ? பறந்து வருவோரை குறிக்க அவர்களது கால்களின் அமைப்பை, அப்படி வடிக்கும் போதும் கவனமாக, கடவுளின் முகத்திற்கு முன் கால்கள் இல்லாத படி வடித்திருப்பது அருமை.

ஒரு பக்கம் கருடனும் சித்திரகுப்தனும் உள்ளனர். சிலர் இது குடைவரையை நிறுவிய அரசனின் சிலையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

அந்தப் பக்கம் பார்க்கும் போது இயற்கையாக வரும் கல்லின் வளைவை கொண்டு இரு அசுரர்களும் கொஞ்சம் தொலைவில் இருக்கின்றனர் என்று நமக்கு உணர்த்துகிறான் போல.

ஒரு பக்கம் சாயும் வண்ணம் அசுரர்களை செதுக்கி அவர்கள் சீக்கிரமே மாண்டு அழியப்போகிறார்கள் என்பதையும் உணர்த்துகிறான் அந்த சிற்பி.

இதே கதை பல்லவ சிற்பி வடித்த முறையும் முழு கதையையும் படிக்க

பிரம்மாவின் அருகில் மான் தலையுடன் இருப்பது யார்?

நன்றி படங்கள்: Flickr : lomaDI, Prof Swaminathan and http://senkottaisriram.blogspot.com/2008/04/thirumayam-near-pudukkoottai-tamil-nadu.html