சர்ச்சைச் சிற்பங்கள்- பாகம் இரண்டு ஹரி vs ஹரன்

இந்து மதமும் அதன் ​கொள்​கைகளும் பல்​வேறு அறிஞர்க​ளையும் இன்றும் ஆச்சரியப்படவும் தி​கைக்கவும் ​வைக்​கையில், சிற்பங்க​ளை விளக்கிக் கூறும் பணியில் மட்டும் பயணிக்க வி​ழைகி​றோம். இந்த ‘சர்ச்​சை சிற்பங்கள்’ பற்றிய முதல் பதி​வை படித்த பின்பு இந்தப் பதி​வை படிக்குமாறு வாசகர்க​ளை ​கேட்டுக் ​கொள்கி​றோம்.

இந்தப் பதி​வை இட​வேண்டும் என்று பல காலமாக நி​னைத்திருந்த​போதிலும், வாசகர்களின் அபிப்பிராயம் எவ்வாறு இருக்கு​மோ என்ற எண்ணத்தினா​லே தள்ளி​போட்டு​ ​கொண்டிருந்​தேன். ஆனால் தாராசுரம் ​சென்று வந்த நம் நண்பர் திரு. காமன் பா​லெம், இந்த சிற்பத்​தைப் பற்றி ​கேட்க​வே, அதன் அம்சங்க​ளை பற்றியாவது கூற​வேண்டு​மென இந்தப் பதி​வை இடுகி​றேன். வாசகர்கள் அ​னைவரும் இந்தப் பதி​வை​ ​பொறு​மையுடன் முழு​மையாக படித்த பிறகு தங்களது கருத்துக்க​​ளை கூறுமாறு ​கேட்டுக் ​கொள்கி​​றேன்.

தாராசுரத்தில் உள்ள இந்த சர​பேசுவரர் சிற்பமானது, ​சோழர்களின் க​லைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினாலும், ஒருவ​ரை தாழ்த்தி மற்​றொருவ​ரை உயர்த்தும் எண்ணம் காரணமாக உருவாக்கப்பட்டது என்பதா​லே​யே சற்று​ ​நெருடலான ஒன்றாகும். காலச் சக்கரத்தின் சுழற்சியில் இந்த உருவத்தின் துவக்க காலம் ​தெரியாத​போதிலும், நாம் காண்பது இரண்டாம் இராஜராஜ ​சோழனின் ஆட்சிகாலமாகிய 12 ஆம்நூற்றாண்​டைச்​ ​சேர்ந்தது. அந்தக் காலக்கட்டத்தில் சமயப் பிரிவி​னையானது உச்சத்​தை அ​டைந்தது ​வேத​னைக்குரியதாகும்.

நரசிம்ம அவதாரக் க​தை நாம் அ​னைவரும் அறிந்த​தே. பலவிதமாக அது ​சொல்லப்பட்ட ​போதிலும், அதன் சாராம்சம் இது தான். பிரம்மதேவனிடம் இருந்து விசித்திரமான வரத்தை பெற்று சாகாவரம் பெற்றதாக இறுமாந்திருந்த ஹிரண்யகசிபுவின் சம்ஹாரமே நரசிம்ம அவதாரத்தின் நோக்கம்.

“அனைத்தும் அருளும் பிரம்மதேவா! நான் வேண்டும் வரத்தை அருள்வாயாக! தங்களால் படைக்கப்பட்ட எந்த உயிரினத்தாலும் நான் கொல்லப்பட கூடாது. வீட்டின் உள்ளேயோ வெளியேயோ, பகலிலோ, இரவிலோ, வானத்திலோ, பூமியிலோ நான் இறக்க கூடாது. எந்த ஆயுதத்தாலோ, விலங்கினத்தாலோ, மனிதராலோ, தேவராலோ, அசுரராலோ, பாதாள லோகத்தில் வாழும் நாகங்களாலோ கொல்லப்பட கூடாது. அ​னைத்து உயிர்களுக்கும், தேவதைகளுக்கும் நானே அதிபதியாக வேண்டும். தவம், யோகம் போன்றவற்றினால் கிடைக்கும் சித்திகள் அனைத்தும் எனக்களிக்க வேண்டும்.”

வரம் பெற்றபின் தன்னையே சர்வ சக்தி படைத்த இறைவனாக பாவித்து கொண்டு மக்கள் எல்லோரையும் தன்னை வணங்கும்படி வற்புறுத்தினான். மறுத்தவர்களை தண்டித்தான். அவனது மகன் பிரஹலாதன் ஸ்ரீமன் நாராயணனின் சிறந்த பக்தன். தன் தந்தையை கடவுளுக்கு சமமானவன் என ஏற்க மறுத்தான். கோபம் கொண்ட ஹிரண்யகசிபு நீ வணங்கும் உன் கடவுள் எங்கிருக்கிறான் என கேட்க, பிரஹலாதன் ‘அவன் எங்கும் நிறைந்திருப்பான். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்’ என கூறுகிறான். ஆத்திரம் கட்டுகடங்காது தனது கதையினால் அருகில் இருந்த தூணை உடைக்கிறான் ஹிரண்யகசிபு.

(தெலுங்கு திரைப்படத்திலிருந்து இந்த காட்சி)

அந்த தூணில் இருந்து நரசிம்ம ரூபத்தில் மகாவிஷ்ணு தோன்றுகிறார். அவன் பெற்ற வரத்தை அனுசரித்து மனித உடலும் சிம்மத்தின் தலையும் கொண்டு, தூணை உடைத்துக் கொண்டு, வாசற்படியில் அமர்ந்து, ஹிரண்யகசிபுவை மடியில் கிடத்தி, சந்தியா வேளையில், தனது நகங்களாலேயே அவனது வயிற்​றை கிழித்து வதம் செய்கிறார். பல்வேறு சிற்பங்களில் அவரது ​கோப உக்ர வடிவத்தை காணலாம். பிரஹலாதன் தன் இனிய குரலில் துதி செய்ய நரசிம்மர் சாந்தம் அடைகிறார். இந்தக் கதை இங்கேயே முடிவடைய வேண்டியது.

ஆனால், இதற்கு பின்பும் கதை தொடருவதாகக் கூறப்படுவது, சைவ வைணவ சமயங்களின் பிரிவினையின் தாக்கம் என்றே தோன்றுகிறது. நரசிம்ம பெருமானின் உக்ரம் தணியாது, மகாலட்சுமி கூட அவரது அருகில் செல்ல இயலாத நிலை ஏற்பட, அனைத்துலகங்களும் இந்த உக்ரத்தின் பலனாக நடுநடுங்கி, முடிவில் சிவபெருமானை சரணடைகிறார்கள். அவர் முதலில் வீரபத்ரனை அனுப்புகிறார். ஆனால் வீரபத்ரனாலும் நரசிம்மருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. எனவே, சிவபெருமானே சரபேசுவர ரூபமெடுத்து செல்கிறார். அதாவது, மனிதன் + சிம்மம் + பறவை – சேர்ந்ததொரு ரூபம்.

பிறகு நடப்பது பலராலும் பலவிதங்களிலும் சொல்லப்படுகிறது. நரசிம்மரை சரபேசுவரர் ஆரத் தழுவி, அவரது சினத்தைத் தணித்து, நரசிம்மரை தக்க வைத்து, மகாவிஷ்ணுவை வெளியேற்றுகிறார்.

இந்த முழுக் கதையும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூன்றே காட்சிகளில் பறைசாற்றப்பட்டுள்ளது.

இப்போது மீண்டும் தாராசுரம் சிற்பம்.

நல்ல வேளையாக, திரு. காமன் அவர்கள் முழு சிற்பத்தையும் படமெடுத்திருந்தார்.

நரசிம்மர் உடலிலிருந்து மகாவிஷ்ணு வெளியேற்றப்படுகிறார். அந்த சிறிய உருவம், பிரஹலாதனாக இருக்கக் கூடும். மேலே, தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இக்காட்சியை காண்கிறார்கள்.

சற்று கவனித்துப் பார்த்தால், பிற்காலத்தில் காணப்படும் மதுரை சிற்பங்களைப் போல் அந்த
உருவங்களுக்கான தனித் தன்மையான அம்சங்கள் இந்த சிற்பத்தில் இல்லை என கண்டு கொள்ளலாம்.

திரு. காமன் அவர்களின் அடுத்த கேள்வி, கால்களைப் பற்றியது. சர​பேசுவரருக்கு இரு இறக்கைகளும், நான்கு ஜதை கால்களும் உண்டு.


சில இடங்களில் நிறைய கைகளுடன் கூடிய சிற்பங்களும் உள்ளன. இலங்கையில் உள்ள முனீஸ்வரர் கோவில் சிற்பத்தைப் பாருங்கள். ( படம் : விக்கி )


இதை வருந்தத் தக்கது என கூறியதன் காரணமே, சமீப காலத்தில் ப்ரத்யங்கிரா தேவி போன்று பல்வேறு தாத்பரியங்கள் சொல்லப்படுகின்றன. மக்களும் தங்கள் குறைகள் தீர, இந்தக் கோவில்களை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.

நிச்சயமாக இந்து மதம் என்பது ஒரு கடவுளையே பிரதானமாக கொண்டதன்று. இதில் முதன்மையானது, என் கடவுள் பெரியதா, உன் கடவுள் பெரியதா என்ற கேள்வி அல்ல, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதும் அல்ல; கடவுளைத் தேடிச் செல்லும் பயணத்தை அனுமதிக்கும் பக்குவமேயாகும்.

இராஜராஜ சோழனின் தஞ்சை பெரிய கோவிலில், இந்து மதத்தின் இரண்டு சமயங்களையும் இணைத்திடும் அற்புதமான ஹரிஹர சிற்பத்தைப் பாருங்கள்.

சுவாமி விவேகனந்தரின் வாசகம் தான் என் நினைவிற்கு வருகிறது. “இந்த உலகத்திற்கு சகிப்புத்தன்மையையும், அனைவரையும் தன்போல ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தையும் கற்றுத்தந்த மதத்தை சேர்ந்தவன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். எல்லா நம்பிக்கைகளையும் சகிப்பது மட்டும் அல்ல அவை அனைத்தும் உண்மை என்று நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் ”

பின்பு ஏன் ஒருவரை தாழ்த்தி மற்றொருவரை உயர்த்துகிறோம்?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

முழங்கை தேய்த்தார் கட்டும்புறந் தோல்நரம் பென்பு கரைந்து தேய.

இன்றைக்கு மீண்டும் தாராசுரம் – பெரியபுராணக் கதை பார்க்கப்போகிறோம். – மூர்த்தி நாயனார் புராணம். நன்றி திரு அர்விந்த் ( படங்கள்) அவர்கள் மற்றும் விக்கி ( உரை )

பாண்டி நாட்டிலே உள்ள மதுரை மாநகரில் வணிக குலத்திலே பிறந்தவர் மூர்த்தியார். அவர் திருஆலவாயில் உறையும் சொக்கலிங்கப் பெருமான் திருமேனிக்குத் தினமும் மெய்ப்பூச்சுக்குத் சந்தனக்காப்பு அரைத்துக் கொடுக்கும் திருப்பணியை வழுவாமற் செய்து வந்தார்.

அந்நாளில் வடுகக் கர்நாடக அரசன் ஒருவன் நீதிவகையாலன்றிப் படைவலிமையினாலே வலிந்து மண்கவரும் ஆசையால் பெரும் படை கொண்டு வந்தான். பாண்டியனோடு போர் செய்து பாண்டி நாட்டின் அரசாட்சியைக் கவர்ந்து கொண்டான். அவன் வேறு மதத்தை சார்ந்தவன் என்பதால் சைவ வழிபாடுகளுக்கு பல தடங்கல்களை கொடுத்தான். அவ்வாறு திருப்பணி செய்யும் அடியவர்களுக்கு பல கொடுமைகள் செய்தான்.

தன் திருப்பணியை தொடர்ந்து செய்யும் மூர்த்தியாரின் பணி தடங்கல் உண்டாக்க, அக்கொடியோன் அவருக்குச் சந்தனக் கட்டை கிடைக்காதவாறு செய்தான்.

அன்று பகல் முழுவதும் சந்தனக்கட்டை தேடியும் பெறாது வருந்தி மனம்தளர்ந்து இறைவரது திருக்கோயிலுக்கு வந்தார்.

அப்போது

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=12&Song_idField=1215&padhi=72&startLimit=20&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

நட்டம்புரி வார்அணி நற்றிரு
மெய்ப்பூச் சின்று
முட்டும்பரி சாயினுந் தேய்க்குங்கை
முட்டா தென்று
வட்டந்திகழ் பாறையின் வைத்து
முழங்கை தேய்த்தார்
கட்டும்புறந் தோல்நரம் பென்பு
கரைந்து தேய.

`அருட் கூத்தியற்றும் பெருமான் அணிதற்குரிய திருமேனிப் பூச்சாகிய சந்தனக் காப்பு அணியும் தொண்டிற்கு, இன்று எனக்குத் தடை நேர்ந்திடினும், கல்லில் தேய்ப்பதற்கு உரிய என் கை தடையின்றி உள்ளது` என்று நினைந்து, வட்டமாகத் திகழ்ந்திருக்கும் சந்தனக் கல்லில் தம் முழங்கையைப் போர்த்த தோல், நரம்பு, எலும்பு எல்லாம் உராய்ந்து கரைந்து தேயுமாறு தேய்த்தார்.

இப்போது சிற்ப்பத்தை பார்ப்போம்.

என்ன நேர்த்தியாக இரு முட்டியையும் கல்லில் வைத்து தேய்க்கும் போதும், முகத்தில் எந்த வித வலியும் தெரியாமல், அமைதியான ஆனந்த உருவை செதுக்கியுள்ள சிற்பியன் வேலை அருமை.

பின்னர் என்ன நடந்தது

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=12&Song_idField=1215&padhi=72&startLimit=21&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

கல்லின்புறந் தேய்த்த முழங்கை
கலுழ்ந்து சோரி
செல்லும்பரப் பெங்கணும் என்பு
திறந்து மூளை
புல்லும்படி கண்டு பொறுத்திலர்
தம்பி ரானார்
அல்லின்கண் எழுந்த துவந்தருள்
செய்த வாக்கு.

சந்தனக் கல்லின்மேல் வைத்துத் தேய்த்த அவர்தம் முழங்கை குருதி பெருகத், தேய்த்துச் செல்லும் இடம் எங்கும் எலும்பு நொறுங்கி அதனுள் இருந்த (மூளையில் இருந்து வரும்) நரம்பும் வெளிப்படக் கண்ட பெருமான், பொறுத்திலர். அப்பெருமானின் திருவருளால், அவ்விரவின்கண் எழுந்தது வான் வழியாக வருவ தொரு வாக்கு,

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=12&Song_idField=1215&padhi=72&startLimit=22&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அன்பின்துணி வால்இது செய்திடல்
ஐய உன்பால்
வன்புன்கண் விளைத்தவன் கொண்டமண்
எல்லாங் கொண்டு
முன்பின்னல் புகுந்தன முற்றவும்
நீத்துக் காத்துப்
பின்புன்பணி செய்துநம் பேருல
கெய்து கென்ன.

`ஐயனே! அன்பின் துணிவால் இதனைச் செய்யற்க! உனக்குக் கொடிய துன்பத்தைச் செய்வித்த அக்கொடி யோன் வலிந்து கொண்ட நாடு முழுவதையும் நீயே கொண்டு, முன்பு அவனால் இந்நாட்டில் புகுந்த இன்னல் யாவற்றையும் நீக்கி, உயிர்களைச் செப்பமுறக் காத்து, இதுவரை மேற்கொண்டிருந்த பணியையும் செய்து, பின் நமது பேருலகை அடைந்திடுவாய்,` என்று அருள.

இதன் பிறகு…இந்த தெய்வ வாக்கு நிறைவேறியதா ? எப்படி நிகழ்ந்தது ??


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

“கிருஷ்ணர் மாதிரியே புல்லாங்குழல் வைத்திருக்கும் நாயனார் ஒருவரும் உண்டு.”

“கிருஷ்ணர் மாதிரியே புல்லாங்குழல் வைத்திருக்கும் நாயனார் ஒருவரும் உண்டு.” திரு கண்ணன் அவர்கள் சென்ற பதிவுக்கு இப்படி ஒரு மறுமொழி தந்தவுடன், யார் அவர் என்று உடனே தேடலை ஆரம்பித்தேன். அதிஷ்ட வசமாக நண்பர் திரு அர்விந்த் வெங்கடராமன் சென்ற வாரம் தஞ்சை சென்ற பொது தராசுரமும் சென்றார். அவரிடம் கேட்டவுடன் கிடைத்தது சிற்பம். அதன் விளைவே இந்த பதிவு. நாம் பார்க்கவிருக்கும் நாயனார் ஆனாயர்.

சிற்பத்தை பாருங்கள்

திரு கண்ணன் அவர்கள் சொன்னதில் தப்பே இல்லை. கண்ணன் சிற்பம் என்றே நினைக்க தோன்றும். ஆனால் அருகில் இருப்பது அம்மை அப்பன் – பெரியபுராணம் சிற்பங்கள் இவை.

நாயனார் கதையை படிக்க இங்கே செல்லுங்கள்

http://www.shaivam.org/naaanaay.html

எல்லாவற்றிற்கும் தாயானவரும், சடையில் பிறை சூடிய தூயவரும், ஆகிய சிவபிரானுடைய திருவடிகளைத் தம் மனத்தில் விடாது வைத்து, அவருடைய பழமை வாய்ந்த பெருமைகளை வேய்ங்குழல் இசையால் பரவும், மேல் மழநாட்டு நீர்வளம் மிக்க திருமங்கலத்தில் தோன்றிய ஆனாயர், என்னை உவகையுடன் ஆட்கொண்டு அருளியவராவர்.

சரி, தேவாரம் வரிகளை பார்ப்போம்

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1214&padhi=72&startLimit=22&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

ஏழுவிரல் இடையிட்ட
இன்னிசைவங் கியமெடுத்துத்
தாழுமலர் வரிவண்டு
தாதுபிடிப் பனபோலச்
சூழுமுரன் றெழநின்று
தூயபெருந் தனித்துளையில்
வாழியநந் தோன்றலார்
மணியதரம் வைத்தூத.

ஏழு விரல்கள் இடையீடுபடத் துளையிட்ட இனிய ஓசையையுடைய வேய்ங்குழலினை ஆனாய நாயனார் எடுத்துப் பூக்களில் தேனை உண்டிடப் படியும் வண்டு எழுவதும் இருப்பதும் போல, அங்குள்ள துளைகளில் தமது விரல்களை வைத்து, எடுத்துச் சுருதி பெற நிற்றலும் எழுதலும் ஆகிய இத்தன்மைகளைச் செய்து, தூய பெரிய துளையில் பெருவாழ்வுடையராய நம் தலைவர் ஆனாயர், தமது வாயிதழ் மேல் வைத்து ஊத,

ஆஹா, குழலை வாசிக்கும் பொது விரல்களின் அசைவை பூவின் மீது ஆடும் வண்டினை உவமை படுத்துவது அருமை.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1214&padhi=72&startLimit=30&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

ஆடுமயில் இனங்களும்அங்
கசைவயர்ந்து மருங்கணுக
ஊடுசெவி யிசைநிறைந்த
உள்ளமொடு புள்ளினமும்
மாடுபடிந் துணர்வொழிய
மருங்குதொழில் புரிந்தொழுகும்
கூடியவன் கோவலரும்
குறைவினையின் துறைநின்றார்.

ஆடுகின்றமயில் இனங்களும் தம் ஆடலை மறந்து அணையவும், காதூடு சென்ற இசையமுதம் நிறைந்த உள்ளத்துடன் பறவைகளின் இனமும் பக்கத்தில் வந்து தமது உணர்வு ஒழிந்திடவும், அவர் அருகில் கோல்தொழில் புரிந்து பசுநிரைகாக்கும் வலிமையுடன் கூடிய இடையர்களும் தாம் எடுத்த செயலை மறந்து குறைவினையாக விடுத்து நின்ற நிலையில், இசை கேட்டு மெய்ம் மறந்து உருகி நின்றனர்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1214&padhi=72&startLimit=37&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

ஆனாயர் குழலோசை
கேட்டருளி அருட்கருணை
தானாய திருவுள்ளம்
உடையதவ வல்லியுடன்
கானாதி காரணராம்
கண்ணுதலார் விடையுகைத்து
வானாறு வந்தணைந்தார்
மதிநாறும் சடைதாழ.

ஆனாய நாயனாரின் குழலிசையைக் கேட்டருளி, அருள் வயத்ததாய கருணையையே திருவுள்ளமாகக் கொண்டிருக் கும் தவக் கொடியாய உமையம்மையாருடன், இசைக்கலைக் கெல் லாம் மூலகாரணராய கண்ணுதற் கடவுள், தமது ஆனேற்றைச் செலுத்தி, தமது அழகுடைய இனிமை மணக்கும் இளம்பிறை அணிந்த திருச்சடை தாழ்ந்திட, வான்வழியாக அவ்விடத்து வந்தணைந்தார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1214&padhi=72&startLimit=39&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

முன்னின்ற மழவிடைமேல்
முதல்வனார் எப்பொழுதும்
செந்நின்ற மனப்பெரியோர்
திருக்குழல்வா சனைகேட்க
இந்நின்ற நிலையேநம்
பாலணைவாய் எனஅவரும்
அந்நின்ற நிலைபெயர்ப்பார்
ஐயர்திரு மருங்கணைந்தார்.

முன்னாக ஆனேற்றின்மீது அமர்ந்தருளிவந்த முதல்வனாராய சிவபெருமான், செவ்விதாய மனமுடைய ஆனாய நாயனாரின் வேய்ங்குழலின் வாசித்தலை எக்காலத்தும் கேட்டருள விரும்பி, அவரை நோக்கி, `இங்கு நீ நின்ற இந்நிலையேயாக எம் முடன் அணைந்து வந்திடுவாய்`, எனத் திருவருள் புரிந்திடலும், அதனைக் கேட்டருளிய ஆனாய நாயனாரும் தாம் அங்கிருந்தும் பெயர்ந்து, தலைவராய பெருமானாரின் அருகணைந்தார்.

அப்பாடா, என்ன அருமையான வரிகள்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

“அவர் நம்மவர் “- கொலையாளியை கூட மன்னிக்கும் பண்பு

வாசகர்களே இன்று மீண்டும் ஒரு பெரியபுராண சிற்பம் – தாராசுரத்தில் இருந்து. நாம் இந்த சிற்பத்தின் அருகில் உள்ள சிற்பத்தை முன்னரே பார்த்தோம் – இளையான்குடி மாறர் புராணம். இன்று அதை போல இன்னும் ஒரு அற்புத நாயன்மார் கதை.

மடிந்தாலும் நேருக்கு நேர் நின்று மார்பில் வேலை வாங்கி வீர மரணம் அடைவதை பெருமையாக கொண்ட தமிழ் குடியில், வந்திருப்பது துரோகி , தனது எதிரி, தன்னை ஏமாற்றி கொல்ல வந்த கொலையாளி என்று தெரிந்தும் , அவனை மன்னித்து அவனுக்கு எந்த துயரும் இழைக்காமல் விட்டு விட்ட ஒரு அரசனின் கதை. அப்படி அவன் ஏன் செய்தான். மேலே படியுங்கள்.

முதலில் சிற்பம். தொலைவில் இருந்து. இடது புறம் கீழே பாருங்கள்.

நாம் பார்ப்பது மெய்பொருள் நாயனார் கதை சொல்லும் சிற்பம். பெரிய புராண வரிகளை கொண்டே இந்த கதை விளக்குகிறேன்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=12050&padhi=72&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

சேதிநன் னாட்டு நீடு
திருக்கோவ லூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின்
வழிவரு மலாடர் கோமான்
வேதநன் னெறியின் வாய்மை
விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க் கன்பர்
கருத்தறிந் தேவல் செய்வார்.

நன்மை மிகுந்த சேதி நாட்டின்கண் உள்ள மேன்மை பொருந்திய திருக்கோவலூரின்கண் வாழ்ந்தருளி, உமையம்மை யாரை ஒரு கூற்றில் வைத்தருளும் சிவபெருமானிடத்துப் பத்திமை செய்தொழுகும் மலையமான் நாட்டிற்குரிய அரசர், நன்மை மிகுந்த மறைவழியில் உலகம் விளங்குதற்கு ஏதுவான பெருமை மிக்க நற் குணங்களைத் தாங்கி, பெருவிருப்போடு சிவபெருமானின் அடியவர் கட்கு அவர்தம் திருவுள்ளக் குறிப்புணர்ந்து பணிவிடை செய்து வருவார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=5&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

இன்னவா றொழுகு நாளில்
இகல்திறம் புரிந்ததோர் மன்னன்
அன்னவர் தம்மை வெல்லும்
ஆசையால் அமர்மேற் கொண்டு
பொன்னணி யோடை யானை
பொருபரி காலாள் மற்றும்
பன்முறை இழந்து தோற்றுப்
பரிபவப் பட்டுப் போனான்.

இவ்வாறாக இவ்வடியவர் தம் கடமைகளைச் செய்து வரும் நாளில், அவரொடு பகைத்து நின்ற ஓர் அரசன், அவரைத் தான் போரில் வெல்லக் கருதும் ஆசை மிகுதியால், போர் செய்தலை மேற்கொண்டு, பொன்னால் செய்த நெற்றிப் பட்டத்தை உடைய யானைகளையும், போர் செய்தற்குரிய குதிரைகளையும், காலாட் படைகளையும், பலகாலும் இழந்து தோற்றுவிட, அதனால் மானம் இழந்து போனான்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=6&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

இப்படி இழந்த மாற்றான்
இகலினால் வெல்ல மாட்டான்
மெய்ப்பொருள் வேந்தன் சீலம்
அறிந்துவெண் ணீறு சாத்தும்
அப்பெரு வேடங் கொண்டே
அற்றத்தில் வெல்வா னாகச்
செப்பரு நிலைமை எண்ணித்
திருக்கோவ லூரிற் சேர்வான்.

இவ்வாறு பலகாலும் தோல்வியடைந்த அப் பகைவன், தன்வலியினால் வெல்ல இயலாதனவாகி, மெய்ப்பொருள் நாயனாருக்கு அடியவர்மீது இருக்கும் பத்திமையை உணர்ந்து, வெண் ணீறு அணிதலாகிய அடியவர்களின் பெருமையான திரு வேடத்தை வஞ்சனையாக மேற்கொண்டு, அவ்வஞ்சனையைப் பிறர் அறியாத வாறு, காலமறிந்து வெல்லும் கருத்துடையனாக வாயினாற் சொலற்கரிய தீமையைச் செய்யக் கருதித் திருக்கோவலூரை அடைவானாயினன்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

மெய்யெலாம் நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினிற் படைக ரந்த
புத்தகக் கவளி யேந்தி
மைபொதி விளக்கே யென்ன
மனத்தினுட் கறுப்பு வைத்துப்
பொய்தவ வேடங் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்.

தன் உடல் முழுமையும் திருநீற்றை அணிந்து கொண்டு, சடைகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி, தன் கையிடத்து, உடைவாளை உள்ளே மறைத்த புத்தகச் சுவடிகளைத் தாங்கிக் கொண்டு, கருமையான நிறத்தைத் தன்னுள் வைத்திருக்கும் ஒளி விளக்குப் போலத் தன் மனத்தில் சினத்தை வைத்துக் கொண்டு பொய் யாகிய ஒரு தவவேடத்தைக் கொண்டு சென்றான். அவன் முத்த நாதன் எனும் பெயரினன்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=9&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

கடையுடைக் காவ லாளர்
கைதொழுதேற நின்றே
உடையவர் தாமே வந்தார்
உள்ளெழுந் தருளும் என்னத்
தடைபல புக்க பின்பு
தனித்தடை நின்ற தத்தன்
இடைதெரிந் தருள வேண்டும்
துயில்கொளும் இறைவ னென்றான்.

அரண்மனை வாயில்கள் தொறும் காவல் செய்து கொண்டிருப்பவர்கள் கைகுவித்து வணங்கி விலகிநின்று நம்மை ஆட்கொள்ளும் சிவபெருமானின் அடியார் ஒருவர், தாமே வலிய எழுந்தருளினார் என்று கூறி, உள்ளே எழுந்தருள வேண்டும் என வேண்டிக் கொள்ள, இவ்வாறாய வாயில்கள் பலவற்றையும் கடந்து சென்ற பின்பு இறுதியாக உள்ள தனிவாயிலில் காவல்புரிந்து நிற்கும் தத்தன் என்பான், `உட்செல்லுதற்குரிய அமையம் தெரிந்து எழுந்தருள வேண்டும்; இதுபொழுது அரசர் துயில் கொள்கின்றார்` என்று கூறினான்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=14&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

திருமக ளென்ன நின்ற
தேவியார் தம்மை நோக்கிப்
புரிவுடன் விரைய அந்தப்
புரத்திடைப் போக ஏவித்
தருதவ வேடத் தானைத்
தவிசின்மேல் இருத்தித் தாமும்
இருநிலத் திருந்து போற்றி
இனியருள் செய்யும் என்றார்.

திருமகளைப் போல அங்கு நிற்கும் தம் மனைவியாரைப் பார்த்து, அருளுரை கேட்கும் பெருவிருப்பால், அவரை விரைவாக அந்தப்புரத்திற்குப் போகுமாறு பணித்து, இயல் பாகவன்றி வலிய எடுத்துக்கொண்ட தவவேடமுடைய முத்தநாதனை ஓர் இருக்கையின்மீது இருக்கச் செய்து, தாம் வெறுநிலத்திலிருந்து வழி பட்டவாறு, இனி அருள் செய்ய வேண்டு மென்று விண்ணப்பித்துக் கொண்டார்.

இப்போது சுட்டிக்காட்டி உள்ள வரிகளை சற்று கவனமாக படியுங்கள். ஏனெனில் சிற்பி சிற்பம் செதுக்கும் பொது எப்படி இவற்றை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறான் என்பதை நாம் ரசிக்க வேண்டுமே!

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=15&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

கைத்தலத் திருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்தவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப்
பொருளெனத் தொழுது வென்றார்.

அவன், தன் கையில் வைத்திருந்த வஞ்சனை யாகக் கொண்ட புத்தகப் பையைத் தன் மடியின் மேல் வைத்து, உள் ளிருந்த அப்புத்தகத்தைத் திறப்பவனைப்போல, விரும்பி அந்நாய னார் வணங்கும் சமயத்தில், அதனுள் மறைத்து வைத்திருந்த உடை வாளை எடுத்துத்தான் முன் கருதியவாறே செய்ய, அவ்வடியவர் தாமும், மெய்ம்மையான பொருளாகக் கொண்ட தவவேடத்தையே மெய்ப்பொருளாகக் கருதி வணங்கி வென்றார்.

சரி, இப்போது சிற்பத்தை மீண்டும் பார்ப்போம். அருகில் சென்று

கதை மிக சுவாரசீயமாக போகிறது. முதல் பாகம் சிற்பத்தில்

போலி சிவனடியார் இடது கையில் புத்தகப் பை,வலது கையில் கத்தி, அவர் ஆசனத்தின் மேலே அமர்திருப்பது, அரசன் தரையில் அமர்திருப்பது – எப்படி சின்ன சின்ன விஷயங்களை கூர்ந்து கவனித்து சிற்பி இந்த சிறய சிற்பத்தில் கதையை அழகாக சொல்கிறான் பாருங்கள்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=16&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

மறைத்தவன் புகுந்த போதே
மனம்அங்கு வைத்த தத்தன்
இறைப்பொழு தின்கட் கூடி
வாளினால் எறிய லுற்றான்
நிறைத்தசெங் குருதி சோர
வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் தத்தா
நமரெனத் தடுத்து வீழ்ந்தார்.

உள்ளத்தில் கொண்டிருந்த வஞ்சனையை மறைத்துத் தவவேடம் பூண்ட அம்முத்த நாதன் உள்ளே சென்ற பொழுதே, தன் மனத்தை அவனுடன் போக நிறுத்திய தத்தன் என்பான், ஒரு நொடிப் பொழுதில் சென்று, வாட்படையால் அவனை எறியத் தொடங்கினான். தம் திருமேனியில் இரத்தம் சோர நிலத்தில் வீழ்கின்ற அந்நாயனார், `தத்தனே! அவர் நம்மவர்` என்றுகூறித் தம் நீண்ட கையினால் தடுத்து வீழ்ந்தார்.

என்ன அற்புதாமான தருணம். தனது அரசனை காக்க பாய்ந்து வரும் மெயகப்பாலன் தத்தன் – சிற்பத்தில் பாருங்கள், அவனது ஆடை பறக்க, வாழை உயர்த்தி அடுத்த கணம் போலி சாமியாரின் தலை துண்டாகும் என்பதை உணர்த்தும் வண்ணம் – ஆனால் அரசனின் கரம் தடுக்கிறது

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=17&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

வேதனை யெய்தி வீழ்ந்த
வேந்தரால் விலக்கப் பட்ட
தாதனாந் தத்தன் தானும்
தலையினால் வணங்கித் தாங்கி
யாதுநான் செய்கே னென்ன
எம்பிரா னடியார் போக
மீதிடை விலக்கா வண்ணம்
கொண்டுபோய் விடுநீ யென்றார்.

இக்கொடுஞ்செயலால் வருத்தப்பட்டு நிலத்தில் வீழ்ந்த மெய்ப்பொருள் நாயனாரால் `தத்தா நமர்` என்றுகூறித் தடுக்கப் பெற்ற அவரை, (வேந்தரை) அடியவனாகிய தத்தன் என்பவனும் தலையால் வணங்கி, அவர்தம் தலையைத் தம் கையால் தாங்கிய வண்ணம் `அடியேன் செய்யும் பணி யாது?` என்று வினவ, `எம் தலை வனாய சிவபெருமானின் அடியவராகிய இவர் (முத்தநாதன்) செல்லும் பொழுது இடையில் எவரும் மேற்சென்று விலக்காதவாறு இவரைக் கொண்டுபோய் விடுவாயாக என்று கட்டளையிட்டார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=20&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

மற்றவன் கொண்டு போன
வஞ்சனை வேடத் தான்மேல்
செற்றவர் தம்மை நீக்கித் தீ
திலா நெறியில் விட்ட
சொற்றிறங் கேட்க வேண்டிச்
சோர்கின்ற ஆவி தாங்கும்
கொற்றவன் முன்பு சென்றான்
கோமகன் குறிப்பில் நின்றான்.

தத்தன் தான் அழைத்துக் கொண்டு சென்ற வஞ்சனையான வேடத்தையுடைய முத்தநாதனை, சினந்து எதிர்த்த வர்களை விலக்கி, குற்றம் நேராதவாறு விட்ட நற்சொல்லின் வகைமை யைக் கேட்க விரும்பி, உடலை விட்டு நீங்குதற்குரிய உயிரைத் தாங்கிக் கொண்டிருக்கும் மெய்ப்பொருள் நாயனார் முன்பு, அவர்தம் குறிப்பில் நிற்கும் தத்தன் போய் நின்றான்.

ஆஹா, என்ன ஒரு வர்ணனை. அந்த மன்னனுக்குத் தான் என்ன பக்தி.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=23&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

தொண்டனார்க் கிமையப் பாவை
துணைவனார் அவர்முன் தம்மைக்
கண்டவா றெதிரே நின்று
காட்சிதந் தருளி மிக்க
அண்டவா னவர்கட் கெட்டா
அருட்கழல் நீழல் சேரக்
கொண்டவா றிடைய றாமல்
கும்பிடுங் கொள்கை ஈந்தார்.

அம்மெய்ப்பொருள் நாயனாருக்கு உமையம்மை யாரின் கணவராகிய சிவபெருமான், அவர்தம்மை மனத்தகத்து எண்ணியிருந்த வடிவே வடிவாக, அவர் முன்னிலையில் வெளிப் பட்டருளி, அவரை மேலான விண்ணுலகின்கண் வாழும் தேவர் களுக்கும் எட்டாத அருள் வடிவான தம் திருவடி நிழலில் கலந்து இன்புறுமாறு அருள் செய்து, அவர் தம்மை இடைவிடாது வணங்கி வாழும் பேற்றினையும் வழங்கியருளினார்.

சிற்பியும் இதையே கடை காட்சியாக நமக்கு படைக்கிறான்

என் நெஞ்சை நெகிழ வைத்த கதை, அதை விளக்கும் அற்புத சிற்பம். அவற்றை உங்களுடன் பகிர்வதில் மிகவும் சந்தோஷமாக உள்ளது.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

எங்கே என் கோமணம், கோவணக் கள்வர்

என்னடா ? இப்படி ஒரு தலைப்பா என்று சிரிக்க வேண்டாம். இதுவும் ஒரு பெரியபுராண கதை தான். தாராசுரம் சிற்பம். அமர்நீதி நாயனார் புராணம்.

முதலில் சிற்பம் இருக்கும் இடத்தை பாருங்கள்.

அடுத்து கதை : ( நன்றி விக்கி)

வணிகத்தால் பெரும் பொருள் தேடிச் செல்வந்தராய் விளங்கிய இவர் சிவனடியார்க்குப் பணிசெய்வதையே தனது நாளாந்த தொண்டாகக் கொண்டிருந்தார். சிவனடியார்க்கு திருவமுது (உணவு), ஆடை, கீழ்கோவணம் அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார். சிவனடியார்களுக்குத் திருவமுது கொடுப்பதற்காகத் திருநல்லூரில் மடம் கட்டினார். திருவிழாக்காலங்களில் தம் சுற்றத்தவரோடு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது, உடை, கோவணம் என்பன அளித்து மகிழ்ந்தார்.

அன்பர் பணி செய்யும் அமர்நீதியாருக்குச் சிவபெருமான் அருள் புரியத் திருவுளங்கொண்டார். அவர் ஒரு நாள் அந்தணர் குலத்து பிரம்மச்சாரியாக கோலங்கொண்டார். கையில் இருகோவணம் முடிந்த ஒரு தண்டுடன் கோவண ஆடையுடன் திருநல்லூரில் உள்ள அமர்நீதியார் மடத்தை அடைந்தார்.

அவரைக் கண்டு அமர்நீதியார் மிக முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரித்தார். அமர்நீதியார் அவரை உணவுண்ண அழைத்தார். பிரம்மச்சாரியார் அவ்வேண்டுகோளிற்கிசைந்து காவிரியில் நீராடச் சென்றார். செல்லும் பொழுது மழை வரினும் வரும் எனக்கூறித் தமது தண்டில் கட்டி இருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறினார்.

அது எப்படி பட்ட கோமணம் , பாட்டை படியுங்கள்

பன்னிரண்டாம் திருமுறை

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=14&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவா றுமக்கே
ஈங்கு நான்சொல்ல வேண்டுவ தில்லைநீ ரிதனை
வாங்கி நான்வரு மளவும்உம் மிடத்திக ழாதே
ஆங்கு வைத்துநீர் தாரும்என் றவர்கையிற் கொடுத்தார்.

மேற்கூறிய குணநலம் சான்ற கோவணத்தின் பெருமையை உள்ளவாறு உமக்கு இங்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை. நீர் இதை வாங்கி நான் நீராடி வரும் வரையில் உம்மிடத்தில் பாதுகாப்பாக வைத்துப் பின் திருப்பித் தருவீராக என்று சொல்லி, அதனை அந்நாயனார் கையில் கொடுத்தார்.

அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் சேமித்து வைத்தார். எப்படி பட்ட இடம்

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=16&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

தந்த கோவணம் வாங்கிய தனிப்பெருந் தொண்டர்
முந்தை அந்தணர் மொழிகொண்டு முன்புதாம் கொடுக்கும்
கந்தை கீளுடை கோவண மன்றியோர் காப்புச்
சிந்தை செய்துவே றிடத்தொரு சேமத்தின் வைத்தார்.

மறையவராக வந்தவர் தந்த கோவணத்தை வாங்கிய ஒப்பற்ற பெருந்தொண்டர், முதன்மை பொருந்திய அந்தணராகிய அவர்தம் மொழியினை ஏற்றவராய், இதற்கு முன் தாம் அடியவர்களுக்குக் கொடுப்பதற்கென வைத்திருக்கும் கந்தை, கீள், உடை, கோவணம் எனும் இவற்றை வைத்திருக்கும் இடத்திலன்றிப் பாதுகாப்பான இடத்தை எண்ணி, அவ்விடத்தில் அதனைக்காவல் பொருந்திய தொரு தனியிடத்தில் வைத்தார்.

சிவனடியார் கோவணத்தை மறையும்படி செய்து மழையில் நனைந்தவராய் வந்தார். வைத்த கோவணத்தை கொண்டு வருமாறு கூறினார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=19&limitPerPage=1&sortBy=&sortOrder=தேசக்

தொண்டர் அன்பெனுந் தூயநீ ராடுதல் வேண்டி
மண்டு தண்புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்
தண்டின் மேலதும் ஈரம்நான் தந்தகோ வணத்தைக்
கொண்டு வாரும்என் றுரைத்தனர் கோவணக் கள்வர்.


தொண்டர்தம் அன்பு எனும் தூய நீரினில் ஆட விரும்பி, அவரை நோக்கிச் செறிவும் குளிர்ச்சியும் மிக்க நீரில் ஆடி வந்ததால், ஈரமுடைய கோவணத்தை மாற்றுதற்குத் தண்டின் மேல் உள்ளதும் ஈரமாகிய கோவணம் ஆதலின், நான் தந்த கோவணத்தைக் கொண்டு வருவீராக என்றுரைத்தார் கோவணக் கள்வர்.

சிற்பி இதை கவனித்து செதுக்கி உள்ளதை பாருங்கள்.

கோவணம் கொண்டுவரச் சென்ற தொண்டர் வைத்த இடத்தில் காணாது திகைத்தார். பிற இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் பிறிதொரு கோவணத்தை எடுத்துக்கொண்டு பிரமச்சாரியிடம் வந்தார். அடிகளே!, தாங்கள் தந்த கோவணத்தை வைத்த இடத்தில் காணவில்லை. அது மறைந்ததோ பெரும் மாயமாக உள்ளது. இது வேறு ஒரு நல்ல கோவணம்; இது ஆடையிற் கிழிக்கப்பட்டதல்ல. கோவணமாகவே நெய்யப்பட்டது. நனைந்த கோவணத்தை களைந்து (அகற்றி) இதனை அணிந்து அடியேனது குற்றத்தைப் பொறுத்து அருளுங்கள் என வேண்டினார்.

இதனைக் கேட்ட சிவனடியார் சீறிச் சினந்தார். அமர்நீதியாரே!, நாம் உம்மிடம் தந்த கோவணத்திற்கு ஒத்தது தண்டில் உள்ள இந்தக் கோவணம். இந்தக் கோவணத்திற்கு எடையான கோவணத்தைக் கொடுப்பீராக என்று கூறினார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=31&limitPerPage=1&sortBy=&sortOrder=தேசக்

உடுத்த கோவண மொழியநாம் உங்கையில் தரநீர்
கெடுத்த தாகமுன் சொல்லும்அக் கிழித்தகோ வணநேர்
அடுத்த கோவண மிதுவென்று தண்டினில் அவிழா
எடுத்து மற்றிதன் எடையிடுங் கோவண மென்றார்.

நாம் உடுத்தியிருக்கும் கோவணம் தவிர, உம்கையில் நாம் தர, நீர் அதனைப் போக்கியதாக முன் கூறிய அக் கிழிந்த கோவணத்திற்கு ஒப்பாகும் கோவணம் இதுவாகும்` என்று கூறி, தண்டில் கட்டியிருந்த கோவணத்தினை அவிழ்த்து எடுத்து, `இக் கோவணத்திற்கு ஒத்த எடையுடைய கோவணத்தை இடுவீராக` என்று தனது கோவணத்தை தராசில் இட்டார். ( இதையும் சிற்பி செதுக்கி உள்ளான் )

அதனை ஏற்றுக்கொண்ட அமர்நீதியார்,அதற்கு ஈடாகத் தம்மில் உள்ள நெய்த கோவணத்தை மற்றொரு தட்டில் வைத்தபோழுது அது நிறை போதாமையால் மேலெழுந்தது. அது கண்ட அமர்நீதியார், தாம் அடியார்களுக்குக் கொடுத்தற் பொருட்டு வைத்திருந்த கோவணங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இட்டார். அப்பொழுதும் அன்பரது தட்டு மேற்பட அடியாரது கோவணத்தட்டு நிறையால் கீழே தாழ்ந்தது. அந்நிலையில் அமர்நீதியார், தம்மிடம் உள்ள பொன், வெள்ளி, நவமணித் திரள் முதலிய அரும்பொருள்களையும் இட்டார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=39&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

தவநி றைந்தநான் மறைப்பொருள் நூல்களாற் சமைந்த
சிவன்வி ரும்பிய கோவண மிடுஞ்செழுந் தட்டுக்
கவனி மேலமர் நீதியார் தனமெலா மன்றிப்
புவனம் யாவையும் நேர்நிலா என்பது புகழோ.

தவத்தால் நிரம்பிய நான்மறைப் பொருளாக உள்ள நூல்களால் அமைந்ததும், சிவபெருமான் விரும்புதற்குரியதா யுள்ளது மான கோவணம், இட்டமேலான தட்டுக்கு, இவ்வுலகில் வாழும் அமர் நீதீயார் செல்வங்கள் மட்டுமேயன்றி, அனைத்துலகங் களும் கூட ஒப்ப நிற்கமாட்டா என்று சொல்வதும் அதற்கொரு புகழாமோ? ஆகாது என்பதாம்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=40&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

நிலைமை மற்றது நோக்கிய நிகரிலார் நேர்நின்
றுலைவில் பல்தனம் ஒன்றொழி யாமைஉய்த் தொழிந்தேன்
தலைவ யானுமென் மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையி லேறிடப் பெறுவதுன் னருளெனத் தொழுதார்.

இந்நிலைமையை நோக்கிய ஒப்பற்றவராகிய நாயனார், மறையவர் முன் நேர்நின்று, கெடுதல் இல்லாத பல்வகைச் செல்வங்களையும் ஒன்று கூட விடாமல் தட்டில் வைத்துள்ளேன்; என்னுயிர்த் தலைவ! யானும் என், மனைவியும், சிறுவனும் ஒப்பாதற் குரிய பொருளாமேல், துலையில் ஏறப் பெறுதற்கு உன் அருள் முன்னிற்பதாகுக எனத் தொழுதனர்.

அடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். படத்தை பாருங்கள், அம்மை அப்பன் நந்தியின் மேலே .

அமர்நீதியாரும் மனைவியாரும் மைந்தரும் சிவலோகவாழ்வினைப் பெற்று இன்புற்றார்கள்.

ஒரு கோவணத்தை வைத்துக்கொண்டு கூத்தபிரான் விளையாடிய திருவிளையாடல் பார்த்தீர்களா . அற்புத கதை மற்றும் சிற்பம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

திருமுடியினையே விளக்காக மாட்டி எரித்த கணம்புல்லர்

நண்பர்களே , சென்ற பதிவில் வெறும் தண்ணீர் கொண்டு விளக்கு எரிந்ததை பார்த்தோம். அப்போது இவ்வாறு எழுதினேன் ” விளக்கு எரிய வேறு ஒரு வஸ்துவை உபயோகித்த இன்னொரு நாயனார் கதையும் உண்டு.” அவர் கதையை இன்று பார்க்க போகிறோம். இன்னொரு தாராசுரம் பெரியபுராணம் சிற்பம் : கணம்புல்ல நாயனார்

வடவெள்ளாற்றுத் தென்கரையிலே அமைந்த இருக்கு வேளூரிலே அவ்வூர்க் குடிமக்களின் தலைவராய்த் திகழ்ந்தவர் கணம்புல்லர். அவர் சிவபக்தியும் பெருஞ்செல்வமும் உடையவராய் விளங்கினார். “மெய்ப்பொருளாவது திருவடியே” எனும் கொள்கையினரான இவர் செல்வப் பயன் திருவிளக்கெரித்தலே என்று எண்ணி திருவிளக்குப் பணிசெய்து வாயாரப் பாடி வழிபட்டு வந்தார். நெடுநாட்களாக இப்பணி செய்துவந்த நாயனார்க்குத் திருவருளாலே வறுமை வந்தெய்தியது. அதனால் ஊரைவிட்டு நீங்கித் தில்லையை அடைந்து தம் வீடு முதலியவற்றை விற்று விளக்கேற்றி வந்தார். அவரிடமிருந்த பொருள் யாவும் ஒழிந்து போகும் நிலை நேர்ந்தது. அவர் பிறரிடம் இரத்தற்கு நாணினார். தமது உடல் முயற்சியினால் அரிந்து கொண்டு வந்த கணம்புல்லினை விலைப்படுத்தி அப்பொருளினால் நெய் பெற்று விளக்கெரித்து வந்தார். அதனால் அவருக்கு கணம்புல்லர் என்று பெயராயிற்று.
சிற்பத்தின் முதல் பகுதியை பார்ப்போம்


ஒருநாள் அவர் கொண்டு வந்த புல் எவ்விடத்தும் விலை போகாதாயிற்று. விளக்கேற்றும் பணி முட்டாதிருத்தற் பொருட்டு அப்புல்லையே மாட்டி விளக்கெரித்தார். அப்போது , சிற்பத்தை மீண்டும் பாருங்கள்.

விளங்க வில்லையா – இன்னும் அருகில் சென்று சிற்பத்தின் அடுத்த பக்துதியை பார்ப்போம்


இப்போது பாடலை பாருங்கள்

பன்னிரண்டாம் திருமுறை

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1248&padhi=72&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

முன்புதிரு விளக்கெரிக்கும்
முறையாமங் குறையாமல்
மென்புல்லும் விளக்கெரிக்கப்
போதாமை மெய்யான
அன்புபுரி வார்அடுத்த
விளக்குத்தந் திருமுடியை
என்புருக மடுத்தெரித்தார்
இருவினையின் தொடக்கெரித்தார்.

இறைவரின் திருமுன்பு விளக்கு எரிக்கும் முறைப் படி தாம் கருதிய யாமங்களில் குறையாமல் விளக்கை எரிப்பதற்கு அப்புல் போதாமையால், மெய்ம்மை அன்பினால் திருத்தொண்டு செய்பவரான அந்நாயனார், அடுத்த விளக்காகத் தம் திருமுடியி னையே எலும்பும் கரைந்து உருகுமாறு தீயை மூட்டி எரித்தார். அதனால் இருவினைகளான தொடக்கை எரிப்பவர் ஆனார்.

பக்தி ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்ய தூண்டுகிறது பாருங்கள்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

நமிநந்தியடிகள் நாயனார் புராணம் – தாராசுரம்

நண்பர்களே, இன்று நாம் மீண்டும் தாராசுரம் பயணிக்கிறோம். மீண்டும் ஒரு பெரியபுராணம் சிற்பம். இறை பக்தி , அதன் அற்புத தன்மைகளை விளக்கும் கதை. நமிநந்தி அடிகள் புராணம். முதலில் தொலைவில் இருந்து பாருங்கள்

பதினோறாம் திருமுறை
திருத்தொண்டர் திருவந்தாதி

வேத மறிக்கரத் தாரூர் அரற்கு விளக்குநெய்யைத் தீது செறிஅமண் கையர்அட் டாவிடத் தெண்புனலால் ஏத முறுக அருகரென் றன்று விளக்கெரித்தான் நாதன் எழில்ஏமப் பேறூர் அதிபன் நமிநந்தியே.

அழகிய ஏமப்பேறூர்த் தலைவராகிய நமிநந்தி அடிகளே, மறைவடிவாய மானை ஏந்திய கையினராகிய ஆருர்ப் பெருமானுக்கு, விளக்கு எரிக்க நெய் தாராது அமணர் மறுக்க, தெளிந்த நீராலேயே விளக்கு எரித்து, அமணர் துயருறச் செய்த பெரியவர் ஆவார்.

பேரூரில் பிறந்த நமிநந்தி அடிகளுக்கு திருவாரூர் தியாகராஜர் மீது மிகுந்த பற்று, பக்தி. ஒருமுறை ஆலயத்திற்கு சென்ற அவர், பல மணி நேரம் அங்கேயே கழித்தார். கதிரவன் மறையும் தருவாயில் விளக்குகளை ஏற்ற எண்ணெய் தேடி, அருகில் இருந்த வீட்டை பார்த்து, அங்கு இருந்தவர்களிடம் உதவி – விளக்கு ஏற்ற எண்ணெய் கேட்டார். வேற்று மதத்தை சான்ற அவர்கள் எண்ணெய் கொடுக்கு மறுத்தது மட்டும் அல்லாமல் , உங்கள் ஈசன் தான் கையிலேயே தீயை வைத்து ஆடுபவன் தானே , அவனுக்கு எதற்கு எண்ணெய், வெறும் தண்ணீரே போதுமே என்றனர்.

இதை கேட்டு மிகவும் மனம் உடைந்து மீண்டும் கோயில் மண்டபத்தில் வந்து அமர்ந்த அவருக்கு ஒரு அசரீரி குரல் கொடுத்து. தாமரை குளத்து தண்ணீர் கொண்டு வந்து விளக்கை ஏற்று என்று. …

அவரும் அவ்வாறே செய்ய – அதிசயம், விளக்குகள் அனைத்தும் மிக பிரகாசமாக எரிந்தன. விளக்கு எரிய எரிபொருள் தேவை இல்லை, அது எரிந்தது அவரது பக்தி மற்றும் இறை நம்பிக்கையினாலே …

சரி , சிற்பத்தை பார்ப்போம்.

இரு பாகங்களாக பிரித்து பார்க்கவேண்டும்.

முதல் பாகம், தடாகத்தில் இருந்து தன்னேர் எடுக்கும் காட்சி ( தடாகத்தில் பூக்கள், மீன்கள் மற்றும் ஒரு கொக்கு வேறு ) , அடுத்து ஆலயத்தின் விளக்குகளுக்கு மிகுந்த பக்தியுடன் நீரை ஊற்றி எரிய வைக்கும் காட்சி, மிகவும் அற்புதம்

அது சரி, விளக்கு எரிய வேறு ஒரு வஸ்துவை உபயோகித்த இன்னொரு நாயனார் கதையும் உண்டு. அடுத்த இடுகையில் அதையும் பார்ப்போம்.

படங்கள் நன்றி : பொன்னியின் செல்வன் குழும நண்பர்கள் : சதீஷ் மற்றும் சாத்மீகா


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பூவை முகர்ந்ததற்கு கையை வெட்டு

நாயன்மார்களின் சரித்திரத்தைச் சித்தரிக்கும் பல தாராசுர சிற்பங்களை ஏற்கனவே நாம் ரசித்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு சிற்பத்தை மிகவும் விரிவான விவரங்களுடன் இன்று காண்போம். மேலோட்டமாக பார்த்தால் இந்தக் கதை ஏதோ குரூர தோற்றமுடையதாகத் தெரியும், ஆனால் சற்றே கவனமாக அதன் பின்னனியைப் படித்தோமானால் தெளிவாகும். இதனை முழுமையாக புரிந்து கொள்ள எதிர்மறையான விளைவுகளைக் கொண்ட இரு வேறுபட்ட சம்பவங்களை காண்போம்.

முதல் சம்பவத்துடன் துவங்குவோம். முதலில் சிற்பம்

இதில் ஆடம்பரமான கிரீடம் அணிந்த அரசன் போன்ற ஒருவர், ஒரு பெண்ணின் முழங்கையோடு அவள் கையை வெட்ட முற்படுவதுபோல் கத்தியை உயர்த்தி பிடித்துள்ளார். குரூரமாகத் தோன்றும் இந்தக் காட்சியில், ஆணின் முகத்தில் புன்னகை தெரிகிறது, பெண்ணின் மூக்கோ சிதிலமடைந்துள்ளது. இதற்கு பின்னனி ஏதும் உள்ளதா? வாருங்கள் பார்ப்போம்.

ஆம், இந்தக் கதை கழற்சிங்க நாயானாருடையதுதான்: பல்லவ வம்சத்தைச் சேர்ந்த இந்த நாயனார் மிகவும் சிவ பக்தியுடையவர். ஒருமுறை இவர் சிவாலயங்களை தரிசிக்க யாத்திரை சென்ற பொழுது திருவாரூர் வந்து சேர்ந்தார். அங்கு இறைவனை வணங்கிக் கொண்டிருக்கும் பொழுது, வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு வந்தார் அவரது மனைவியும் அரசியுமான சங்கா (இவர் ராஷ்டிரகூட மன்னர் அமோக வர்ஷ நிருபதுங்கனின் மகள், சைன மதத்தில் பற்றுடையவர்கள் – ஆதாரம் பல்லவ வரலாறு). அவ்வாறு வலம்வரும் சமயம் பிரகாரத்தின் மூலையில் ஒரு மலர் விழுந்து கிடந்ததைப் பார்த்த இவர், அதனுடைய நறுமணத்தால் ஈர்க்கப் பட்டு அதனை எடுத்து முகர்ந்தார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1253&padhi=72&startLimit=5&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

கோயிலை வலங்கொண்டு அங்கண்
குலவிய பெருமை யெல்லாம்
சாயல்மா மயிலே போல்வாள்
தனித்தனி கண்டு வந்து
தூயமென் பள்ளித் தாமம்
தொடுக்குமண் டபத்தின் பாங்கர்
மேயதோர் புதுப்பூ அங்கு
விழுந்ததொன் றெடுத்து மோந்தாள்.

பொழிப்புரை :
சாயலால் மயிலைப் போன்ற அத்தேவியார் கோயிலை வலமாக வந்து, அங்குள்ள வளங்களை எல்லாம் தனித் தனியே பார்த்து மகிழ்ந்தவள், தூய மென்மையான பள்ளித் தாமம் தொடுக்கும் மண்டபத்தின் பக்கத்தில் புதிய பூ ஒன்று விழுந்து கிடப் பதைக் கண்டு எடுத்து மோந்தாள்.

இதனைக் கண்ட செருத்துணை என்னும் தீவிர சிவபக்தர், ஆஹா இறைவனுக்காக படைக்கப் படவிருந்த மலரின் புனிதத்தை அதை முகர்ந்து கெடுத்துவிட்டாரே என்று கோபப்பட்டு அரசியின் மூக்கை துண்டித்துவிட்டார். (இந்த சம்பவத்தால் இவரும் நாயன்மார் வரிசையில் சேர்ந்துவிட்டார், இவரது சரித்திரத்தை காட்டும் சிற்பத்தை தனியானதொரு பதிவில் பார்க்கலாம்).

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1253&padhi=72&startLimit=6&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

புதுமலர் மோந்த போதில்
செருத்துணைப் புனிதத் தொண்டர்
இதுமலர் திருமுற் றத்துள்
எடுத்துமோந் தனளாம் என்று
கதுமென ஓடிச் சென்று
கருவிகைக் கொண்டு பற்றி
மதுமலர்த் திருவொப் பாள்தன்
மூக்கினைப் பிடித்து வார்ந்தார்.

பொழிப்புரை :
புதிய மலரை மோந்த போதில், செருத்துணையார் என்னும் தூய தொண்டனார், இம் மலரை மலர் மண்டபத் திருமுற்றத் தில் எடுத்து மோந்தனள் என்று எண்ணித், துணிந்து, தேன் பொருந் திய தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போன்ற அவள் மூக்கைப் பிடித்து அரிந்தார்.

காயப்பட்ட அரசியின் ஓலத்தைக் கேட்ட கழற்சிங்கர் ஓடோடி வந்தார், அரசியின் நிலையைப் பார்த்து “இதனை யார் செய்தது” என்று கர்ஜித்தார். உடனே செருத்துணை முன்வந்து, தானே இந்த பங்கத்தை செய்தவர் எனச் சொல்லி மன்னிப்பு கோரினார். மன்னரோ அவரைத் தண்டிக்காமல் ஒருபடி மேல் சென்று, கை தானே முதலில் மலரை எடுத்தது அதனால் கை தான் முதலில் தவறு செய்தது என்று கூறி தன் வாளை எடுத்து அரசியின் கையை வெட்டி விட்டார்.

அரசி மன்னருக்கு மிகவும் பிடித்தமானவள், மிகவும் அழகானவள், அதிகாரமுடையவள் இருந்தும் மன்னருக்கு இறைவன் மீதான பக்திதான் பெரிதாக இருந்தது.

இந்த சிவலீலையை கண்ணுற்ற வானவர்கள் இவர்களின் பக்தியை மெச்சி மலர்மாரி தூவினர்.

இதோ இந்த சம்பவத்தை குறிப்பிடும் பெரிய புராணப் பாடல்;

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1253&padhi=72&startLimit=10&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

கட்டிய வுடைவாள் தன்னை
உருவிஅக் கமழ்வா சப்பூத்
தொட்டு முன்னெடுத்த கையாம்
முற்படத் துணிப்ப தென்று
பட்டமும் அணிந்து காதல்
பயில்பெருந் தேவி யான
மட்டவிழ் குழலாள் செங்கை
வளையொடுந் துணித்தா ரன்றே.

பொழிப்புரை :
தம் இடையில் கட்டியிருந்த உடைவாளை உருவி, அம் மணம் கமழும் மலரைத் தொட்டு, முன்பு எடுத்த கைதான் முதலில் துண்டிக்கத் தகுவது என்று கூறி, தம் அரசுரிமைப் பட்டம் பூண்டு, தம் அன்பையும் பூண்டு விளங்கும் பெருந்தேவியான மணம் கமழும் கூந்தலையுடைய அவளது கையை, அணிந்த வளையலுடன் அப் போதே துண்டித்தார்.

இப்பொழுது மேற்குறிப்பிட்ட சம்பவத்தை ஆண்டாள் சரித்திரத்தோடு ஒப்பிட்டு பார்ப்போம்.

( செட்டிபுணியம் தேவ நாராயண பெருமாள் கோயில் – படம் நன்றி அசோக் )

ஆண்டாள் கண்ணனையே காதலனாக வரித்தாள். அந்தக் கண்ணனே மணாளனாகவும் வேண்டும் என்று விரதமிருந்தவள்.

பாவை விரதம் முதல் மன்மதனுக்கு வேண்டி நோன்பு இருப்பது வரை பல நோன்புகள் நோர்த்தவள். எல்லாமே கண்ணனின் கரம் பற்றவேண்டித்தான். இவள் விரதம் முடிப்பதற்கு எல்லாத் தேவதைகளையும் கூவி அழைத்தவள். (மன்மதனின் தம்பி முதற்கொண்டு வருணதேவன் சுமந்து செல்லும் மழைமேகங்கள் வரை அனைவருமே ஆண்டாளுக்குக் காதல் தூதுதான்.)

கண்ணனே தன் கணவன் என்பதை கனவிலும் நனவிலும் நன்குணர்ந்தவளாகையால், கண்ணனுக்கு செய்யப்படும் கைங்கரியங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்தாள். அதில் ஒன்றுதான் கண்ணனுக்கு பூமாலை சரிபார்த்துச் சார்த்துதல்.

தந்தையாரான விஷ்ணுசித்தனார் (பெரியாழ்வார்) நாளும் தோட்டத்தில் தானே கொய்த மலர்களைக் கோர்த்து பரந்தாமனுக்காக சார்த்துவதற்காக எடுத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த மலர் மாலையைக் கூட ஆண்டாள் விடவில்லை. முதலில் தனக்கு சார்த்திக் கொள்வாள். கண்ணாடி பார்ப்பாள். ‘அழகோ அழகு.. கொள்ளை அழகு.. கண்ணனுக்கு சார்த்தவேண்டிய மாலைதான் இது’ என்று ஒப்புதல் (தனக்குத் தானே) கொடுத்துக் கொள்வாள்’. அடுத்தநாள் அதிகாலை அந்த மாலை கண்ணனின் தோள் மீது ஒய்யாரமாக அலங்கரிக்கப்படும்போதெல்லாம் அவள் உள்ளம் மகிழ்ச்சியில் பூரிக்கும்.
ஆனால் ஒருமுறை இந்தச் செயலை பெரியாழ்வார் கண்டுவிட்டார். ‘ஆகா.. மாதவனின் மலர் மாலை மானிடர் கழுத்தில் முதலில் போடப்பட்டு அதன் பின்னரே அவனுக்கு சார்த்தப்படுகிறதா.. இந்தக் குற்றத்தைத் தன் பெண்ணே செய்து விட்டாளே’ என்ற பெருங்குறையில் தவித்துவிடுகிறார்.

இரவில் கண்ணன் அவர் கனவில் வருகிறான் ‘கலங்கவேண்டாம்.. உங்கள் கோதை தான் சூடி எனக்குச் சூடும் மாலைதான் என் விருப்பம்’ என்று சொல்லித் தேற்றுகிறான். பெரியாழ்வாருக்கு ஆண்டாளின் தெய்வீகம் புரிகிறது.

அன்னவயற்புதுவையாண்டாளர ங்கற்குப்
பன்னுதிருப்பாவைப்பல் பதியம்- இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை
பாடியருளவல்ல பல்வளையாய்- நாடி நீ
வேங்கடவற்கென்னவிதியென்ற விம்மாற்றம்
நாம்கடவா வண்ணமே நல்கு.

‘சூடிக் கொடுத்த சுடர்கொடியாளே’ என்று தன் மகளை கண்ணில் ஆனந்தநீர் மல்க அணைத்துக் கொள்கிறார்.

இறைவனுக்காண மலரை முகர்ந்த ஒருத்தருக்கு தண்டனையும், இறைவனுக்காண மாலையை தான் சூடிப் பார்த்து தந்த ஆண்டாளை வழிபடுவதற்குமான காரணம் இப்பொழுது புரிகிறதல்லவா. அரசி சங்கா மலரை முகர்ந்து பார்த்தது அதனுடய நறுமணத்தால் ஈர்க்கப்பட்டு, தன் மகிழ்ச்சிக்காக முகர்ந்தாள், தண்டனையை அனுபவித்தாள். ஆனால் ஆண்டாளோ இறைவனுக்கு மாலை சரியாக இருக்குமோ, அவன் மகிழ்ச்சியடைவானோ என்ற நோக்கில் மாலையை சூடித் தந்தாள், அதனால் வழிபாட்டுக்குரியவளானாள்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பாதி பீமனை நீ சாப்பிடலாம் ..

இன்று நாம் மூன்று சிற்பங்கள் பார்க்கப் போகிறோம். இரண்டு தாராசுரத்தில் இருந்து நண்பர் திரு அர்விந்த் வெங்கடராமன் அவர்கள் உபயம் ( தேடித்தந்த குவைத் சதீஷுக்கு நன்றி ) , மற்றும் ஒன்று கிருஷ்ணபுரம் நெல்லை – நண்பர் ஓவியர் திரு A. P ஸ்ரீதர் அவர்கள் கொடுத்து உதவிய அமரர் ஓவியர் சிற்பி அவர்களின் படைப்பும் – எல்லாம் ஒரே கதையை ஒட்டி

அப்படி என்ன கதை – மகாபாரத கதை, ஆனால் ஒரு கிளை கதை ( பல பேர் பல மாதிரி இந்த கதையை கூறுகின்றனர் – அதனால் சிற்பத்தை விளக்க எவ்வளவு தேவையோ அதை மட்டும் இங்கே இடுகிறேன் )

ஒரு சமயம் யுதிஷ்டிரருக்குப் புருஷமிருகத்தின் உதவி தேவைப்பட்டது. ஒரு முக்கியமான யாகத்தை முடிக்க ( அதனிடத்தில் பால் வேண்டுமாம் – அது எப்படி , சரி அதை விடுங்க)

பாதி மனுஷராகவும், பாதி மிருகமாகவும் காட்சி அளிக்கும் இவரிடமிருந்து உதவி (பாலைப்) பெற்று வரவேண்டும். சிறந்த சிவபக்தர் இந்த புருஷாமிருகம்.

மாயக் கண்ணனின் அறிவுரையின் பெயரில் யுதிஷ்டிரர் பீமனை இந்த வேலையை செய்ய நியமனம் செய்கிறார்.
பீமனும் செல்கின்றான். கண்ணன் அவனிடத்தில் 12 கற்கள் ( சில குறிப்புகளில் ருத்ராக்ஷம் அல்லது சிவலிங்கங்களைக் )கொடுக்கின்றார். பீமன் திகைக்கின்றான். இவை எதுக்கு எனக் கேட்க, உனக்குக் காட்டில் என்னுடைய உதவி கிடைக்காது. இவற்றின் உதவியோடு நீ உன் வேலையை முடித்துக் கொண்டு வரவேண்டும். எப்போது உதவி தேவைப் படுகின்றதோ அப்போது ஒரு கல்லை கீழே போடு எனச் சொல்லி அனுப்புகின்றார். பீமனும் காட்டிற்குச் செல்லுகின்றான். காட்டின் உள்ளே புருஷாமிருகம் இருக்கும் இடத்திற்கு சென்று விடுகின்றான்.

அங்கே ஒரு வாக்கு வாதம் அல்லது ஒரு போட்டி நடைபெறுகிறது . சரி, தன் எல்லையை விட்டு ( காட்டின் எல்லை ) பீமன் வெளி வந்தால் அவனுக்கு வெற்றி, நடுவில் பிடிபட்டால் அவன் புருஷாமிருகத்துக்கு இறை.

பீமன் முழு பலத்தை கொண்டு ஓடியும் அவனால் வெகு தூரம் செல்ல முடியவில்லை – அதற்குள் மிருகம் அருகில் வந்துவிட்டது. உடனே கண்ணன் கொடுத்த கல்லை கீழே போடுகிறான். அது ஒரு சிவலிங்கமாக மாறுகிறது ( சிவன் கோயிலாக மாறியது என்று சிலர் )

புருஷாமிருகமும் ஆச்சரியம் அடைந்து அந்தக் கோயிலில் ஈசனை வழிபடச் சென்றுவிட்டார். பீமன் விடாமல் ஓடுகிறான் – பூஜையை முடித்துவிட்டு புருஷாமிருகம் பீமனைத் துரத்துகின்றார்.

இதோ சிற்பம் – தாராசுரம் புடைப்பு சிற்பம். பீமனை துரத்தும் புருஷாமிருகம்

சில மைல் தூரம் போனதும் மீண்டும் பீமன் வெகு அருகில் புருஷாமிருகம் வந்துவிட்டது , மீண்டும் இன்னொரு சிவலிங்கம். இப்படியே 12 கற்கள் (சிவலிங்கங்களையும்) பீமன் போட்டுவிட்டுக் காட்டை விட்டு வெளியேவந்து விடும் வேளையில், ஒரு கால் நாட்டிலும் ஒரு கால் கட்டிலும் இருக்கும் போது – புருஷாமிருகம் வந்து பிடித்துக் கொள்ள, பீமன் வாதாடுகின்றான். தான் புருஷாமிருகத்தின் ஆட்சிப் பகுதியில் இல்லை என்றும் தன்னை விட்டுவிட வேண்டும் என்றும் சொல்லுகின்றான்.

வாக்குவாதம் பலக்க, யுதிஷ்டிரர் வந்துவிடுகின்றார். அவரோட தீர்ப்பு, பீமனின் உடலின் ஒரு பாதி புருஷாமிருகத்துக்குச் சொந்தம், மற்றொரு பாதி தான் இந்தப் பகுதிக்குச் சொந்தம் எனத் தீர்ப்புக் கொடுக்க, தம்பி என்றும் பார்க்காமல் இவ்வாறு நியாயமான தீர்ப்புக் கொடுத்த தருமரின் நீதியில் மெய்ம்மறந்து போன புருஷாமிருகம் பீமனை விட்டு விடுகின்றார்.

இதோ இதுவம் தாராசுரம் சிற்பத்தில் – ஒரு புறம் வாதி ப்ரிதிவாதி இருவரும்,மறுபுறம் வழக்கை கேட்கும் தர்மர் ( அவரை அடுத்து பணிப்பெண் ?)

இந்த கதையை தூண் சிற்பத்தில் க்ரிஷ்ணபுரத்தில் பாருங்கள். இருவரும் சிறு கதை கொண்டு ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ள தயார் ஆகும் காட்சி

இதே தூணை வரைந்த அற்புத ஓவியர் அமரர் சிற்பி அவர்களின் ஓவியம் இதோ.

+++++++++++
கண்டிப்பாக திரு ராஜா தீட்சிதர் அவர்களது தளத்தை சென்று பாருங்கள். அவர் நம்மை விட்டு சென்று விட்டார் என்பதை நம்பமுடியவில்லை http://www.sphinxofindia.rajadeekshithar.com/


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சுந்தரர் திருவையாற்றில் காவிரியை பிரிய செய்யும் காட்சி

இன்று மீண்டும் தராசுரம் – பெரியபுராணம் சிற்பம். முதலில் சிற்பம் இருக்கும் இடம் பார்க்க சதீஷ் அவர்களின் படங்கள்.

இப்போது சிற்பம். மிகச்சிறிய அளவில் உள்ள இந்த சிற்பம் எதனை குறிக்கிறது என்ற அறியாமல் பல நாட்கள் தேடினேன்.

ஒரு கோயிலின் முன் இருவர் – ஒருவர் ராஜ தோரணையில் இருகரம் கூப்பி பக்திப்பரவசத்தில் – மற்றும் ஒருவர் ஒரு கையை மடித்து ஏதோ சொல்ல – மறு கரம் உயர்த்தி – எதோ ஒரு மரத்தை இடித்து /வெட்டி கோயிலின் மேல் விழச் செய்வது போல இருந்தது.

பிறகு திரு நா . கணேசன் அவர்கள் ஒரு அருமையான ஆய்வுக்கட்டுரையை தந்தார் – சான் இரால்சுடன் மார் அவர்களது ( Marr, JR, “The Periya Puranam frieze at Taracuram: Episodes in the Lives of the Tamil Saiva Saints’ ). அப்போது தான் விளங்கியது. என்ன ஒரு அற்புத நிகழ்வு , அதை பற்றி பெரியபுராண குறிப்புகளை தேடும்போது, திரு சதீஷ், திரு திவாகர் , திரு சுப்ரமணியம் அவர்கள் உதவியுடன் இவை கிடைத்தன .

சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனாருடன் மலை நாட்டுக்குச் செல்லும் பொழுது , திருக்கண்டியூர் வணங்கி வெளியே வரும் பொழுது திருவையாறு எதிர்தோன்ற , சேரமான் பெருமாள் நாயனார் அங்குச் சென்று இறைவரைப் பணிய வேண்டுமென்று கூறுதலும் ஓடம் முதலியவை செல்லாதபடி காவிரியில் பெருவெள்ளம் சென்றதைக் கண்டு…


130. பொன் பரப்பி மணிவரன்றி புனல் பரக்கும் காவேரித் 3877-1
தென் கரை போய்ச் சிவன் மகிழ்ந்த கோயில் பல சென்று இறைஞ்சி 3877-2
மின் பரப்பும் சடை அண்ணல் விரும்பும் திருக் கண்டியூர் 3877-3
அன்புருக்கும் சிந்தை உடன் பணிந்து புறத்து அணைந்தார்கள் 3877-4

131. வட கரையில் திருவையாறு எதிர் தோன்ற மலர்க் கரங்கள் 3878-1
உடலுருக உள்ளுருக உச்சியின்மேல் குவித்து அருளிக் 3878-2
கடல் பரந்தது எனப் பெருகும் காவிரியைக் கடந்து ஏறித் 3878-3
தொடர்வு உடைய திருவடியை தொழுவதற்கு நினைவுற்றார் 3878-4

132. ஐயாறு அதனைக் கண்டு தொழுது அருள ஆரூரர் தமை நோக்கி 3879-1
செய்யாள் பிரியாச் சேரமான் பெருமாள் அருளிச் செய்கின்றார் 3879-2
மையார் கண்டர் மருவு திரு ஐயாறு இறைஞ்ச மனம் உருகி 3879-3
நையா நின்றது இவ்வாறு கடந்து பணிவோம் நாம் என்ன 3879-4

133. ஆறு பெருகி இரு கரையும் பொருது விசும்பில் எழுவது போல் 3880-1
வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகை மிகைப்ப 3880-2
நீறு விளங்கும் திருமேனி நிருத்தர் பாதம் பணிந்தன்பின் 3880-3
ஆறு நெறியாச் செலவுரியார் தரியாது அழைத்துப் பாடுவார் 3880-4

134. பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளிப் பாடும் திருப்பாட்டின் முடிவில் 3881-1
அரவம் புனைவார் தமை ஐயாறு உடைய அடிகளோ என்று 3881-2
விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமைத் திருப்பதிகம் 3881-3
நிரவும் இசையில் வன்தொண்டர் நின்று தொழுது பாடுதலும் 3881-4

135. மன்றில் நிறைந்து நடமாட வல்லார் தொல்லை ஐயாற்றில் 3882-1
கன்று தடை உண்டு எதிர் அழைக்க கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல் 3882-2
ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலம் என 3882-3
நின்று மொழிந்தார் பொன்னி மா நதியும் நீங்கி நெறி காட்ட 3882-4

136. விண்ணின் முட்டும் பெருக்காறு மேல்பால் பளிக்கு வெற்பு என்ன 3883-1
நண்ணி நிற்கக் கீழ்பால் நீர் வடிந்த நடுவு நல்லவழிப் 3883-2
பண்ணிக் குளிர்ந்த மணல் பரப்பக் கண்டதொண்டர் பயில் மாரி 3883-3
கண்ணில் பொழிந்து மயிர்ப் புளகம் கலக்கக் கை அஞ்சலி குவித்தார் 3883-4

137. நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர் 3884-1
செம்பொன் முந்நூல் மணிமார்பர் சேரர் பெருமான் எதிர் வணங்கி 3884-2
உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ என்ன உடன் மகிழ்ந்து 3884-3
தம்பிரானைப் போற்றி இசைத்து தடம் காவேரி நடு அணைந்தார் 3884-4

138. செஞ்சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம் பெருமான் 3885-1
எஞ்சல் இல்லா நிறை ஆற்றின் இடையே அளித்த மணல் வழியில் 3885-2
தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறித் தலைச்சென்று 3885-3
பஞ்ச நதி வாணரைப் பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார்

நன்றி மதுரை திட்டம்

சிற்பத்தில் இருப்பவர்கள் சுந்தரர் மற்றும் சேரமான் பெருமாள். இடது புறம் ( நம் பார்வையில் ) இருப்பது கண்டியூர் கோயில். நடுவில் காவிரி கரை புரண்டு ஓடும் காட்சி – வெள்ளம் அலை மோதி செல்லும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ள முறை அருமை. வலது கரையில் திருவையாறு கோயில். ராஜ உடையில் இருப்பவர் சேரமான் பெருமாள் – காவிரியை நோக்கி ( வெள்ளம் கரை புரண்டு ஓடும் சத்தத்தில் அவர் பாட்டு கேட்க கையை அப்படி வைத்து கூவுகின்றாரோ ?) – இதே போன்று சிறு வயதில் பிரபல ஹாலிவுட் திரைப்படம் – ஈஸ்ட் மேன் கலரில், சிசில் டி மில்லி இயக்கம், சார்ல்டன் ஹெஸ்டன் , யுள் பிரின்னர் – பிரம்மாண்ட படைப்பு இறுதிக்காட்சி நினைவுக்கு வருகிறது – யூதர்கள் செங்கடலை கடக்கும் காட்சி.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment