லிங்கோத்பவர் தோற்றமும், அதன் வடிவமைப்பின் வளர்ச்சியும்…

எந்த ஒரு சிற்பத்தைப் பார்க்கும் பொழுதும் நமக்கு மனதில் எழும் முதல் வினா, ’இது எந்தக் காலத்தைச் சார்ந்ததாக இருக்கும்?’. அது கற்சிலைகளாக இருந்தால் நன்று, ஏனெனில் பெரும்பான்மையான் சிற்பங்கள் அது ஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே அதே இடத்திலேயே இருப்பதால் கல்வெட்டுக்களை வைத்தோ அல்லது வரலாற்றைத் தேடியோ நம்மால் அதன் பூர்வீகத்தை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இது உலோகச் சிற்பங்களுக்கு சாத்தியமில்லை. காரணாம் ஏனைய உலோகச் சிற்பங்கள் அதன் இடங்களில் இருந்து பெயர்க்கப்பட்டு உலகின் வெவ்வேறு மூலைகளில், காட்சியகங்களில் வைக்கப் பட்டுள்ளன. அது மட்டுமின்றி, அதே இடத்தில் இருக்கும் சிற்பங்களைப் பற்றி அறிய நம் வழிபாட்டு முறை கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. ஆகவே, நாம் இங்கு கல்லில் வடிக்கப்பட்ட லிங்கோத்பவரின் கலைப் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பார்ப்போம்.

ஒவ்வொரு சிவாலயத்திலும் உள் பிரகாரச் சுற்றில் கருவறைக்கு பின்புறம், மூலவருக்குச் சரியாக பின்னால் எதிர்ப்புறம் நோக்கியச் சிற்பம் லிங்கோத்பவராகத்தான் இருக்கும். பெரும்பான்மையான ஆலயங்கள் கிழக்குப் பார்த்த நிலையில், கருவறையின் மேற்குப் பகுதியில் வீற்றிருப்பார் நம் கட்டுரையின் நாயகர். பல்லவர் காலம் தொட்டு, முற்கால மற்றும் பிற்காலச் சோழர்களின் கலையையும் எடுத்துக் காட்டும் விதமாக ஆறு சிற்பங்களை எடுத்துக் கொள்வோம்.

இது காஞ்சி கைலாசநாதர் ஆலயத்திலிருந்து – ராஜசிம்ம பல்லவன் (700-728CE)

இந்தச் சிற்பம் பிற்காலப் பல்லவர் கலையைச் சார்ந்தது, அதாவது குடைவரைகளிலிருந்து மாறுபட்டு தனிக்கோயில்களாக கட்டத் தொடங்கிய பின்பு உருவானது. உற்று நோக்கினால், பல்லவர்களுக்கே உரித்தான மிகவும் கனமான யக்னோபவிதம் மற்றும் ஆபரண அலங்காரங்கள் தெரியும். கட்டு மஸ்தான உருவமாக அல்லாமல சிவன் ஒரு சாதாரண இளைஞன் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளார். அக்னி லிங்கத்தைப் பிளந்து காட்சியளிப்பது போல் அல்லாமல், தனியாக ஒரு சாய்ந்த சதுரவடிவத்திற்குள்ளே வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திரிசூலம், பிறைச் சந்திரன், பக்கவாட்டில் உள்ள பிரம்மாவையும், விஷ்ணுவையும் போல் நீண்ட மேல் பாகத்து உடல், வட்ட வடிவ முகம், தடித்த மூக்கு, அலங்காரத் தோரணங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

என்ன அழகு! அது சரி இந்தச் சிற்பம் அந்த ஆலயத்தில் எங்குள்ளது என்று சொல்லுங்கள் பார்ப்போம்!

திருமயம் சத்யகிரி சிவ குகையிலிருந்து…

ஏறக்குறைய முன் கண்ட சிற்பத்தின் காலக்கட்டமே இதுவும், ஆனால் இதனை வடிவமைத்தவர் பல்லவர்கள் என்றும், பாண்டியர்கள் என்றும், முத்தரையர்கள் என்றும் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

அற்புதமான சிற்பம். அக்னி பிழம்புகள் தூணின் பக்கவாட்டில் இருந்து கிளம்பி, இயற்கையாய் மேல் நோக்கி வளர்வதைப் போல் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகள் மட்டும் கொண்டு சாம பங்கத்தில் நிற்கும் சிவன், இடக்கையை இடுப்பின் மீது வைத்து கதி ஹஸ்த முத்திரையையும், வலது கையில் வரத ஹஸ்த முத்திரையையும் காட்டி வரமளிக்கும் தோற்றத்தில் உள்ளார். நீள்வட்டத்தில் சிவபெருமானை அழாய் வெளிப்படுத்துகிறது அந்தத் தூண்.

தூணின் தடிமனை பயன்படுத்தி, வலது கையை மடித்து வைத்து அழகுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறான் சிற்பி. தடித்த நாசிகளும், உதடுகளும், அழகிய வதனமும் அமைதியைக் காட்டுகிறது. சில்பசாஸ்திரங்கள் சொல்வதைப் போல், முகத்தின் உயரத்திற்கும் மேல் வளர்ந்த சடாமுடியின் கட்டமைப்பு சிறப்பு. ஆபரண அணிகலன்கள் குறைவு, அதே சமயம் தொப்புளுக்கு மேலே உள்ள் மிகவும் தடித்த உதர பந்தனம் குறிப்பிடத்தக்கது. அழகாய் வடிக்கப்பட்ட கீழாடையிலும் கற்கள் பதிக்கப்பட்ட அல்லது சிங்க முத்திரை இடுப்புக் கச்சையும் காணப்படாதது குறிப்பிடத்தக்கது.

வலது கையின் மேல் ஒற்றை நூலாலான மிகவும் தடித்த யக்னோபவிதம், சுவாரசியம் கூட்டுகிறது. பல்லவருக்கு உரித்தான வடிவமைப்பு அல்லவா! இயற்கையான ஒரு சாதுவைப் போன்றதொரு உருவமைப்பு, கட்டுமஸ்தாக இல்லைதான் ஆனாலும் வலிமையான் தோள்கள். குறைந்த ஆபரணங்களும், இந்த வடிவமைப்பும் சிற்ப சாஸ்திர நூல்களின் குறிப்புகள் படி ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக காட்டுகிறது. அங்கே கிடைக்கும் சிதைந்த கிரந்த கல்வெட்டுகளும் உறுதிப் படுத்தும் ஆனாலும் ப்ரம்மனையும், விஷ்ணுவையும் ஏன் அன்னமாகவும், பன்றியாகவும் கூட அந்த சிற்பி இங்கு காட்டவில்லை?!

சோழம் மீண்டும் துளிர்த்ததும், ஆலயங்கள் கட்டுவது மிகுந்தது. அதனால் சிற்பிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு அந்தக் கலையை வளர்த்தனர். ஆகவே, இனிவரும் உருவங்களைப் படித்தல் சற்று கடினமான வேலைதான். பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த புஞ்சை நல்துணை ஈஸ்வரம் மற்றும் புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் சிற்பங்களைக் காண்போம்.

புள்ளமங்கை – முதலாம் பராந்தகச் சோழன் ( 907 – 955 CE)

சிவனின் முகம் சிதைந்துள்ளது. மாபெரும் லிங்கோத்பவர், விஸ்ணுவும், ப்ரம்மாவும் இரண்டு பக்கமும். இதைத் தவிர வேறு சிற்பங்கள் இங்கு தனித்துவம் பெறவில்லை. இரண்டு நூற்றாண்டுகளின் வளர்ச்சி, தேவைக்கு அதிமானவை நீக்கப்பட்டு லிங்கோத்பவர் மட்டும் தனித்துவம் பெறுகிறார். அதோடு ப்ரம்மா மேலே பறந்து செல்வது போலும், விஸ்ணு பூமியை வராகமாகி துளைத்துச் செல்வது போன்ற காட்சி தத்ரூபம். இந்தத் தூண் மொத்தமும் இன்னும் சிற்பத்தால் ஆக்கிரமிக்கப்படவில்லை, தூணில் இருந்து அக்னி வெளிப்படுவது போன்ற காட்சிதான் இன்னமும் தெரிகிறது.


சிவனைத் தவிர மற்ற இரு உருவங்களிம் அளவில் சிறியதாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய ஆனால் தெளிவான முத்திரைகளாக மானும், மழுவும் கொண்ட கைகள் தூணிற்குள்ளே மற்றும் இடையளவு யக்னோபவிதம் கொண்ட மெலிதான ஒல்லி உருவம், அழகிய நீள்வட்ட முகம். பல்லவர் கால நேர்கோட்டிலிருந்து சற்றே வளைந்த வடிவத்திற்குள் இருந்து கால்கள் தெரியும் அளவிற்கு வடிக்கப் பட்ட உருவம். என்ன கலையின் வளர்ச்சி தெரிகிறதா?

புஞ்சை – 955 CE

கல்வெட்டுகளில் புஞ்சைப் பற்றிய குறிப்புகள் இரண்டாம் ஆதித்தர் காலத்தைக் ( 965-969 CE) குறித்தாலும் சிற்பங்களின் வடிவமைப்பு முதலாம் பராந்தகர் காலத்தையே காட்டுகிறது.

ஆஹா! லிங்கோத்பவருக்கென்றே சிறந்த தோரணம், லிங்கத்திற்கு தொப்பி போன்ற உருவமைப்பு மலர் வளையத்துடன், அன்னமாக ப்ரம்மனும், வராகமாக விஸ்ணுவும் கொள்ளையழகு. இங்கு தனியாக சிற்பங்கள் ப்ரம்மனுக்கும், விஸ்ணுவுக்கும் இங்கு இல்லை. மற்றும், அக்னி சுவாலைகள் தூணின் பக்கவாட்டிலிருந்தே இன்னமும் கிளம்புகின்றன.

பல்லவர் காலம், பல்லவர் காலத்திற்கும் சோழர்களுக்கும் இடைப்பட்ட மற்றும் முந்திய சோழர் காலம், இந்த காலகட்டத்தில் லிங்கோத்பவரின் கலை வளர்ச்சி இரண்டு நூற்றாண்டுகளில் அபரிமிதம்! நன்கு தெளிவான, வலிமையான மார்பு, வட்ட வடிவ முகம், சிம்ம முகம் பதாகை, லிங்கத்தின் திறப்பு குறிப்பிடத்தக்கவை.

தஞ்சாவூர் ப்ரஹதீஸ்வரர் – ஸ்ரீ ராஜ ராஜ சோழர் ( 985 -1014 CE)

மற்றுமொரு நூற்றாண்டில் ஏராளமான மாற்றங்கள், முழுமையான லிங்கம், அளவில் மிகவும் குறைந்த ப்ரம்மாவும், விஸ்ணுவும், துல்லியமான முக வடிவமைப்பு, நன்கு விரிந்த மார்புகள், மெலிந்த இடை, அக்னி தூண் முதலியன குறிப்பிடத்தக்கவை.

திருபுவனம் – மூன்றாம் குலோத்துங்க சோழன்( 1178 -1218CE)

மேலும் ஒரு நூற்றாண்டு, சிற்பக்கலை அதன் சிகரத்தில்! விதிகள் வளர்ந்து, தன்னிஷ்டம் போல் வடிக்கும் அலங்காரங்கள் குறைக்கப்பட்டு, முழு லிங்கமும் சிவ பெருமானால் ஆக்கிரமிக்கப் பட்டு, அளவில் குறைந்த, மேலே பார்த்ததை விட சற்று பெரியதான ப்ரம்மாவும், விஸ்ணுவும் கொண்டு, சிவனைச் சுற்றிய நீள்வட்ட வெளிப்பாடு துல்லியமாக விதிகளுக்குட்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கடைசி சோழ மன்னன் குலோத்துங்கன் காலச் சிற்பம்.

படங்கள்: நண்பர்கள் அசோக், சௌரப், அர்விந்த், சதீஷ் , சாஸ்வத் மற்றும் ஸ்ரீராம்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

குகைக்குள் மறைந்திருக்கும் பல்லவர் சிற்பம்

சென்ற வருடம் டிசம்பர் மாதம் நண்பர் அர்விந்த் அவர்களுடன் ஐந்து நாட்கள் பாண்டிய நாட்டு பக்கம் பயணம் மேற்கொண்ட​போது பல இனிய அனுபவங்கள். டீ ஷர்ட், அரை டிரௌசர், கேமரா என்று எங்களைப் பார்த்தவுடனே அந்தக் கார் டிரைவருக்கு சந்தோஷம் தான். அதைவிட ஐந்து நாட்கள் புக்கிங் என்றவுடன் அவருக்கு ஒரே எதிர்ப்பார்ப்பு, நல்ல சவாரி என்று. “சார், நான் பன்னிரண்டு வருடங்கள் இங்கே தான் ஓட்டறேன். நீங்க எங்க போகணும் சொல்லுங்க” என்று முதல் நாள் விறுவிறுப்பாக கிளம்பியவர், ஐந்தாவது நாள் இரவு எங்களை நெல்லை ரயில்வே நிலையத்தில் டாட்டா கட்டி விடை அனுப்பும்​போது விட்ட பெருமூச்சு…அந்த ஐந்து நாட்கள் அவர் நாங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள இடங்களுக்கு வழி கேட்டு கேட்டு சலித்துவிட்டார் !! அதைவிட அவருக்கு பெரிய குறை – ஒரு சின்ன குகையை வளைத்து வளைத்து ஐந்து மணி நேரம் படம் எடுக்கும் நாங்கள் பெரிய ஆலயங்களில் வாசலில் விட்டுவிட்டு டீ சாப்பிட்டுவிட்டு வருவதற்குள்ளே வெளியில் வந்து விடுகிறோமே என்ற குழப்பம் தான்!! எங்களது ரசனை என்னவென்பது பாவம் அவருக்கு கடைசி வரை புரியவேயில்லை.

அந்த மாதிரி செய்தால் தானே இன்றைக்கு நாம் பார்க்கவிருக்கும் அற்புத வடிவங்களை உங்களுக்கு எடுத்துத் தர இயலும். பனைமலை – நாம் ஏற்கனவே அங்குள்ள அற்புத உமை பல்லவ ஓவியத்தை பார்த்து விட்டோம். அங்குள்ள சிதைந்த சிவபெருமானின் ஆடல் காட்சியை ஓவியமாக உயிர்ப்பிக்கும் முயற்சி இன்னும் நிறைபெறவில்லை. எனினும் அங்கேயே இன்னும் ஒரு பொக்கிஷம் உள்ளது.

மலை மேலே இருக்கும் கோவிலுக்கே யாரும் செல்வதில்லை. அப்படியிருக்க நாம் இன்று பார்க்கப் போகும் அதிசயம் – மலையடிவாரத்தில் உள்ளது. எங்களுக்கு இது தெரியாது. மலை ஏறிய களைப்பில் நிறைய தண்ணீர் குடித்துவிட்டோம் – அதனால் இறங்கியதும் இயற்கை வேலையை காட்டியது – மரம் வளர்க்க அருகில் சென்றபோது – ஒரு பக்கம் ஒரு ஆட்டுப் பாதை… அதில் ஒரு இயற்கை குகை. நண்பர் அசோக் அவர்கள் ஒரு புகைப்பட வித்துவான் என்றே சொல்ல வேண்டும். எப்படியோ உள்ளே புகுந்து எங்களுக்கு படங்களை அருமையாக எடுத்து விடுவார்.

மகிஷாசுரமர்தினி சிலை – தாய் பாறையில் ராஜசிம்ம பல்லவனின் சிற்பிகளின் கைவண்ணம்.

ராஜசிம்மனுக்கு சிம்மம் என்றால் ஒரு தனி ஈர்ப்பு. அந்த சிங்கத்தின் வலிமையை எப்படி செதுக்கி உள்ளனர்!

எட்டுக் கைகளுடன் அவளின் அழகு அருமை, ஒரு காலை மடித்து சிங்கத்தின் முதுகில் ஊன்றி, அந்த வில்லை கையில் பிடித்து நிற்கும் பாணியில் ஒரு யதார்த்தம் !! அருமை. அவள் அணிந்திருக்கும் உடை, ஆபரணங்கள் – பல்லவர் பாணியில் பிரயோக சக்கரம், கனமான வாள். கவனிக்க வேண்டிய ஒன்று வலது கையில் மூன்று தலை நாகம் ஒன்று உள்ளது. இதுவரை நாம் கண்ட பல்லவ துர்க்கை வடிவங்களில் இதை நாம் பார்த்தில்லை. அதே போல பல்லவர் சிற்பங்களில் வாளை இடுப்பில் வைக்காமல் முதுகில் வைப்பது வழக்கம் போல உள்ளதே? முதுகில் இருபக்கம் கூடு உள்ளது. ஒரு பக்கம் அம்புக்கூடு என கருதலாம். காஞ்சி கைலாசநாதர் ஆலயத்து கிராட அர்ஜுனம் சிற்பத்திலும் இதே போல இருப்பதை நாம் காணலாம்.

ராஜசிம்மன் நம்மை போல கலை ஆர்வலர்களுக்கு மட்டும் அல்லாமல் வரலாற்று ஆர்வலர்களுக்கும் மிகவும் நல்லவன் போல. பிற்காலத்தில் யார் இவற்றை எடுப்பித்தனர் என்ற சர்ச்சை வர வாய்ப்பே கொடுக்காமல் (காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் ஒன்றுக்கு அடியில் ஒன்றாய் நான்கு முறை தனது 244 பெயர்களை பிருடா பட்டப்பெயர்களை – செதுக்கிய அரசன் அல்லவோ!) இந்த சிறு சிற்பத்தையும் விட்டுவைக்கவில்லை – ஸ்ரீபர மற்றும் ரணஜெயா என்ற தனது பெயர்களை செதுக்கி விட்டு இது என்னுடையதே என்று சந்தேகத்துக்கு இடமே இல்லாமல் செதுக்கி விட்டான்.

வாசகர்களுக்கு ஒரு கேள்வி. மேலே பார்த்தப் படங்களில் ஒன்றை விட்டு விட்டோம். என்னவென்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்?

படங்களுக்கு நன்றி : திரு அசோக் கிருஷ்ணசுவாமி மற்றும் திரு சாஸ்வத்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பனைமலை பல்லவகால ஓவியம் உயிர் பெறுகின்றது. பாகம் 2

அனைவரும் சென்ற பதிவை பார்த்து பரவசமடைந்து அடுத்த பதிவுக்காக ஆவலாக எதிர்பார்த்து காத்து நிற்பது தெரிகிறது. ஆனால் அதற்கு முன்னர் நண்பர்திரு ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி. பதிவைப் படித்தவுடன் தன்னிடத்தில் இருந்த குறிப்பு ஒன்றில் இந்த அற்புத ஓவியத்தை கண்டுபிடித்தவரின் வர்ணனை இருப்பதை சுட்டிக்காட்டி நகல் எடுத்து எனக்கு அனுப்பி உள்ளார். ‘Art I Adore’ என்ற ஸ்ரீ அமல் கோஸ் அவர்களது நூலில் – ‘A book on art based on interviews with K. Ramamurty’ என்ற குறிப்பை படித்தவுடன் மெய் சிலிர்த்தது. நீங்களும் படியுங்கள்.

ஆரம்பமே படு சுவாரசீயம் – ஒரு ரசீது. இந்தியா சுதந்திரம் அடைந்து நான்கு ஆண்டுகள் பிறகு ஒரு தேதியில் – ஒரு அருமையான சுவரோவியத்தை முதல் முதலில் நகல் எடுத்து வேலை இல்லாத ஓவியனின் ரசீது.

” This is to certify that his Museum purchased from Shri K. Ramamurti, artist, a copy of the mural painting of the Pallava period from the temple at Panamalai. Mr. Ramamurti was the very first artist to copy this interesting mural.- Superintendent, Government Museum, Madras ”

ஆஹா. மேலும் தொடர்ந்தது அவரது வர்ணனை.

திரு ராமமூர்த்தி அவர்கள் ஒருநாள் ‘தி ஹிந்து ‘ நாளேட்டில், புதுச்சேரி ஆசிரமத்தில் தங்கி இருந்த அயல்நாட்டவர் ஒருவர் தான் பனைமலை மலையில் ஒரு கோயில் சுவரில் கண்ட சில கோடுகள் சிதைந்த பிரெச்கோ ஓவியமாக இருக்கக் கூடும், என்ற தகவலை படித்தார்.

உடனே ஆர்வம் அடைந்த அவர், தான் இதை வெளிக் கொணர்ந்தால் சரித்திரத்தில் இடம் பிடிக்கும் அபார கண்டுபிடிப்பாக இருக்கும் என்று எண்ணி உடனே புறப்பட தயார் ஆனார். எனினும் பயணத்துக்கு போதுமான பணம் அவரிடத்தில் இல்லை. தன மனைவியின் நகைகளை அடமானம் வைத்து பணம் திரட்டி அடுத்த நாள் காலை பனைமலைக்கு புறப்பட்டார்.

அங்கு சென்றதும் முதலில் ஒன்றுமே கிடைக்கவில்லை. சுற்றி சுற்றித் தேடியும் ஓவியச் சுவடுகள் எங்குமே தென்படவில்லை. ஆலய பூசாரிகளுக்கும் அப்படி ஒரு ஓவியம் அங்கு இருப்பதாக தெரியவில்லை. எனினும் ராமமூர்த்தி அவர்கள் மனம் தளராது தேடினார். இரவு அங்கேயே படுத்து காலையில் எழுந்து அடியடியாக தேடினார்.

பதினைந்து நாட்கள் தேடிய பின்னர், ஒரு செவிரில் சில எச்சங்கள் தெரிந்தன. அவற்றை உற்றுப் பார்க்கும் பொது ஒரு முகம் காட்சி தந்தது. சுதை பூச்சால் மறைந்து இருந்த கோடுகளை வெளிக்கொணர கவனமாக அவற்றை விலக்கினார். உள்ளே பனைமலை பார்வதி (உமையம்மை).

தனது குருநாதர் தேவிபிரசாத் அவர்கள் கற்றுக் கொடுத்த பாணியில், அப்படியே நகல் எடுத்தார். என்றும் காலத்தை வென்று அது நிற்க வேண்டும் என்று அதனை சென்னை அருகாட்சியகத்துக்க்கு கொடுத்தார்.

இந்த நூலிற்காக அவரைப் பேட்டி கண்டு அந்த கண்டுபிடிப்பு பற்றி வேறு ஏதாவது நினைவுக்கு வருகிறதா என்று கேட்ட பொது.

” அன்று நான் அந்த பனைமலை ஓவியத்தை கண்ட பொது அடைந்த, அந்த கணத்தில், நான் அடைந்த மகிழ்ச்சியை தவிர வேறு ஒன்றுமே நினைவில் இல்லை” என்றாராம்.

இன்று அவர் எடுத்த நகல் இன்னும் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

மேலே செல்வதற்கு முன்னர், அந்த பல்லவ ஓவியனின் அபார கலை திறமையை நீங்கள் ஒரு ஓவியனின் கண்ணோட்டத்தில் ரசிக்க சில படங்கள். முகத்தின் வட்ட வடிவை கட்ட அவன் அந்த பச்சை நிறத்தை உபயோகிப்பதும் , நெற்றியிலிருந்து வளரும் மூக்கின் வடிவத்தை உணர்த்த வர்ணத்தை நீக்கி – அப்பப்பா அபாரம.

ஓவியத்தை வரைந்த ஓவியரை, ஆயிரம் ஆண்டுகள் பிறகு அதனை மீண்டும் வெளி கொண்டு வந்த நகல் எடுத்த ஓவியருக்கும் ஒரு பெரிய நன்றி கூறி, நமது தொடர்பணியை ஓவியர் திருமதி சுபாசினி அவர்களுடன் ஒப்படைக்கிறோம்.

அவர் கூறுகிறார்.

”பனைமலை உமையம்மையை வரைவது மிகவும் அருமையான அனுபவம். நமக்கு கிடைத்த மிச்சங்களை வைத்து அழிந்து போன பாகங்களைக் கற்பனை செய்து வரைவது மகிழ்ச்சிகரமாக இருந்தது. அதுவும் திரு விஜய் அவர்களின் உதவியுடன் இதற்கான மிக நேர்த்தியான புகைப் படங்கள் கிடைந்தன. அனைத்தையும் ஒன்று சேர்த்து உங்களுக்கு முழு ஓவியமாகப் படைக்கிறேன்.

அப்படி முழுதாக வரைந்த பின்னர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதை எடுத்துரைக்கவும் வார்த்தைகள் வரவில்லை.

அதில் மிகவும் பிடித்தது முதல் முதலில் வரைந்த கோடுகள். இந்த முறை அக்ரிலிக் வண்ணங்களை கொண்டு முயற்சி செய்தேன். படிப்படியாக வண்ணங்களைத் தீட்டி ஓவியத்தை வெளிக்கொண்டு வருவது பரிசுப் பொருளை பிரிப்பது போன்ற ஆர்வம் மற்றும் அனுபவம்.

ஒவ்வொரு கோடும் ஒரு புது அனுபவம், ஒரு கண்டுபிடிப்பு – சில கற்பனை. அவை அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து வந்த வடிவத்தை பல்லவ சுவரோவியம் போலவே முடிக்கவேண்டும் என்பது பெரும் சவாலாக இருந்தது.


ஓவியத்தை தீட்டும்போது படிப்படியாக படம் எடுத்து ரசித்தோம். நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

இதோ நிறைவு பெற்ற ஓவியம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பனைமலை பல்லவகால ஓவியம் உயிர் பெறுகின்றது. பாகம் 1

சிதைந்த பல்லவர் கால ஓவியங்களை அவற்றின் புராதன வசீகரத்துடன் வெளிக்காட்டும் முயற்சியில் இன்று மீண்டும் ஒரு பயணம். காஞ்சி கைலாசநாதர் ஆலயத்து சோமாஸ்கந்தர் ஓவிய பதிவுகளுக்கு – – பதிவு 1, பதிவு 2,. பதிவு 3, தாங்கள் அனைவரும் கொடுத்த வரவேற்பும் உற்சாகமும் எங்களை அடுத்து மீண்டும் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியம் ( ஓவியர் திரு மணியம் மற்றும் திரு மணியம் செல்வன் அவர்களின் வழித்தோன்றல் என்றால் சும்மாவா?) அவர்களின் உதவியுடன் இன்னும் ஒரு கடினமான அதே சமயத்தில் ஆனந்தமான பணியை மேற்கொண்டு உங்கள் முன் வருகிறோம்.

பொன்னியின் செல்வன் குழும நண்பர்களுடன் பனைமலை சென்று இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. எனினும் இன்றுவரை அதை பற்றிய பதிவை நான் இடவில்லை. சிற்பங்களை அவைகளுள் இருக்கும் அற்புத வடிவத்தை கண்டிப்பாக சரியான முறையில் வெளிக்காட்டினால் தான் முறையாக இருக்கும் என காத்திருந்தேன். ஆனால் இன்றும் பசுமையான நினைவுகள். செஞ்சி அருகே ஒரு சிறிய மலைதான் பனை மலை.

ஆஹா, மேலே ஏறும் போதே ராஜ சிம்ஹாபல்லவரின் ஆலயம் – தாளகிரீசுவரர்’.

ராஜ சிம்மர் என்றாலே விமானங்களின் அழகுதான் முதலில் நம்மை ஈர்க்கும். காலத்தை வெல்லும் கொள்ளை அழகு


அனால் இந்த பொக்கிஷம் முத்துச் சிப்பியை போல உள்ளே ஒரு அரிய முத்தை உள்ளடக்கி வைத்துள்ளது.

ராஜ சிம்மர் தனது காலத்தில் தனது படைப்புகளான ஆலயங்கள் அனைத்தையும் தலைமுதல் கால் வரை
ஓவியங்களை கொண்டு அழகுக்கு அழகு சேர்த்தார். இதனை நாம் முன்னரே காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் பார்த்தோம். இங்கேயும் அதே போல ஒரு காலத்தில் இருந்திருக்க வேண்டும். நமது துரதிஷ்டம், இன்று எங்கோ இங்கும் அங்கும் ஒரு சில இடங்களில் மட்டும் எச்சங்களே மிஞ்சி உள்ளன. ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல – தூரிகையின் ஒரு சில கோடுகளிலேயே பல்லவ ஓவியனின் கைத்திறன் நம்மை சொக்க வைக்கின்றது

விமானத்தின் உட்புறமோ, கருவரையிலோ இன்று ஓவியங்கள் எவையும் பிழைக்க வில்லை. எனினும், விமானத்தை சுற்றி வரும் பொது, வலது புறம் தரையில் இருந்து சுமார் நான்கு அடி உயரத்தில் சிவலிங்கத்தை கொண்ட ஒரு சிறு சன்னதி உள்ளது. மேலே ஏறுவதற்கு கொஞ்சம் கஷ்டப் பட வேண்டும். ஆனால் அதைக் கண்டும், அஞ்சி ஏறவில்லை என்றால் போச்சு!….அதனுள் தான் புதையல் உள்ளது.

ஏறிவிட்டீர்களா ? முதல் பார்வையில் ஒன்றுமே இல்லையே என்று நினைக்க வேண்டாம். வலது புறம் சுவற்றை நன்றாக பாருங்கள். கண்டிப்பாக தெனிந்தியாவில் இவளை போன்ற அழகி வேறெங்கும் இல்லை.

இன்னும் நன்றாக அருகில் சென்று பாருங்கள்.

உமை அம்மை – பார்த்த கணத்தில் நம்மை சொக்கி அடிக்கும் மதி வதனம். மேலே வர்ணிக்க வார்த்தைகள் வராது.

காலத்தின் கோலத்தில் பல இடங்களில் உடைந்தும் அழிந்தும் போன நிலையிலும், அந்த ஓவியனின் தூரிகை தீட்டிய கோடுகள், வண்ணங்கள் – அவை ஒன்று சேர்ந்து உமையின் முகத்தில் வெளிக்கொணரும் உணர்வு அலை, நிற்கும் நளினம். .

மிகவும் சிதைந்த நிலையில் இருப்பதால், ஓவியத்தில் பல இடங்களில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை – மேலே வண்ண குடை தவிர , இன்னொரு பக்கம் இருப்பது ஒரு பல்லவக் குடைவரைக் கோயிலின் தூண் போல தெரிகிறது.

வலது புறம் உமை இருக்க, நடு சுவரில் மிகவும் மெல்லிய ஓவியச் சுவடுகள் தெரிகின்றன.

அருகில் சென்று ஆராயும்போது அவை சிவபெருமான் முப்புரம் எரித்த பின்னர், மகிழ்ச்சியில் ஆடிய ஆளிதன்றிட (Alidhanrita) நடனம் என்று தெரிந்துக் கொண்டோம். இதை அடுத்த பதிவில் மேலும் காண்போம். ஆனால் இந்த வடிவம் ராஜ சிம்ஹரின் பல சிற்பங்களில் நாம் பார்க்க முடியும், காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் இதே போல சிவன் அவர் ஆட உமை பார்க்கும் காட்சி இருக்கிறது – “திரிபுராந்தகி சமேத திரிபுராந்தகாய நமஹ”

உமை ( திரிபுராந்தகி) இங்கும் பனை மலை போல இருப்பது நமக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

இவை அனைத்தையும் மனதில் கொண்டு, இந்த ஓவியத்தை சுபாஷினி வரையத் துவங்கினார்.

வண்ணங்கள் மெதுவாக தோன்றின.

போன முறை ஜகதீஷ் படங்களை தந்து உதவியது போலவே, இம்முறை திரு பிரான்க் ரோந்டோட் என்பவர் உதவினார். வெகு நாள் வரை பனைமலை ஓவியத்தின் நல்ல புகைப்படம் இணையத்தில் இல்லை, அப்போது திரு பிரான்க் அவர்களின் தலத்தில் நல்ல படங்களை கண்டு, நமது முந்தைய பதிவையும் என்ன செய்ய இந்த படங்கள் தேவை என்றும் விளக்கினேன். அவரும் உடனே படங்களை நமக்கு தந்து உதவினார். இவை நமக்கு மிகவும் உதவின – ஏனெனில், இவை பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படங்கள் – அதற்கு பின்னர் சில இடங்களில் ஓவியம் சிதைவு அடைந்துள்ளது !!

மேலும் பொன்னியின் செல்வன் குழு நண்பர்கள் சௌராப் , சாஸ்வத் , ஸ்ரீராம் , ஸ்ரீ என்று பலரும் தங்கள் படங்களை கொடுத்து உதவினர்.

மெதுவாக ஓவியம் வளர்ந்தது…

தொடரும்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ரிஷபாந்திகா , வீணாதாரா, அர்தனாரி சிவன் – திரு லாக்வூட் அவர்களது பல்லவ கலை நூலில் இருந்து

நமது பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு இந்த தளத்தில் திரு கிஃப்ட் சிரோமனி அவர்களது
தாக்கம் பற்றி தெரிந்திருக்கும்

பல்லவ துவாரபாலகர்களுக்கு என்ன கொம்பா முளைத்துள்ளது?

அந்த பதிவில் நான் இவ்வாறு எழுதி இருந்தேன்

” நண்பர்களே , இன்று நான் என்னை மிகவும் கவர்ந்த மனிதரை பற்றி எழுதுகிறேன். எனது அறிவுப்பசியைத் (சிற்பங்களை சார்ந்த!!) துவக்கி வைத்த அற்புத மனிதர், இணையத்தின் பலம், அதன் முழு பயன், வரும் சந்ததியனருக்கு நாம் விட்டுச்செல்ல கூடிய பொக்கிஷங்கள் போன்றவற்றை எனக்கு உணர்த்திய மாமனிதர். திரு ஐன்ஸ்டீன் அவர்கள் தனது அற்புத கண்டுபிடுப்புகளை பற்றி இவ்வாறு கூறினாராம்..” தொலைவில் உள்ள ஒரு நல்ல பொருளை என்னால் காணமுடிவதற்குக் காரணம் நான் உயர்ந்தவர்களின் தோளில் இருந்து பார்ப்பதால்தான்”

அது போல ஒரு உயர்ந்தவரை பற்றிய பதிவே இது. நான் எழுதும் அந்த மனிதரை நான் நேரில் சந்தித்தது கிடையாது. நான் எனது வாழ்கையை எப்படி எழுதவேண்டும் என்பதை பற்றிய தெளிவைப் பெறுவதற்கு முன்னரே, அதாவது 1988 இல் அவர் மறைந்துவிட்டார்.

எனது பாக்கியம் சென்ற மாதம் சென்னை சென்றபோது அவரது மனைவியார் திருமதி ராணி சிரோமனி அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் தனது கணவரின் நெருங்கிய நண்பரான திரு மைக்கல் லாக்வூட் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அவரும் மிகுந்த ஆர்வத்துடன் துவங்கினார் ” எனக்கு மாமல்லபுரத்தின் ஜாலங்களை அறிமுகப் படுத்தியவர் திரு கிஃப்ட் சிரோமனி ” என்று..

அவர் தனது ஆராய்ச்சிக் குறிப்புகள், நூல்கள் அனைத்தையும் அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ள அனுமதி தந்துள்ளார். இதற்காக நாம் திரு லாக்வூட் அவர்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளோம். இதோ அவர் தன இளமை பருவத்தில் வல்லம் குடைவரை அருகில். 1969 ஆம் ஆண்டு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் (அப்போது அவருக்கு வயது முப்பத்தி ஆறு ) – நான் இன்னும் பிறக்க கூட இல்லை !

அவரை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள படியுங்கள்

Dr. Lockwood

அறிமுகம் கிடைத்தவுடன் மிகுந்த ஆர்வத்துடன் பல பல்லவர் சம்மந்தமுள்ள பதிவுகளை அவருக்கு அனுப்பினேன். அவரும் பொறுமையாக படித்து தன் கருத்துகளைத் தந்தார். அப்படி ஒரு பதிவில் நாங்கள் சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி என்ற தொடருக்காக திருக்கழுக்குன்றம் சென்றபோது அங்குள்ள ஒரு சிற்பம் பற்றி எடுத்துரைத்தார்.

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – நான்காம் பாகம்

பல காலம் முன்னர் நடந்த விவாதம் பற்றி தெரியாமல், வெளிச்சுற்றில் இருக்கும் இந்த சிற்பத்தை ரிஷபவாஹன சிவன் என்று நான் குறிப்பிட்டு இருந்தேன். இதனை பற்றி விளக்கம் தரும் வகையில் தனது பல்லவ கலை என்னும் நூலில் உள்ள குறிப்புகளை திரு லாக் வூட் எனக்கு அனுப்பி வைத்தார். கருவறையின் உள்ள சுவற்றிலும் இதே சிற்பம் இருப்பதாகவும், வெளியில் இருப்பதை விட இன்னும் நல்ல நிலைமையில் இருப்பதால் நன்றாக ஆராய முடியும் என்றும் கூறினார்

அவரது குறிப்பைப் படிக்குபோது மல்லை கடற்கரை கோயிலில் உள்ள ஒரு சிறு ஆலயத்தில் உள்ளே இருக்கும் சிற்பமும் இதே வடிவம் என்ற அவரது கருத்து தெளிவானது.

நண்பர் அசோக் அவர்களது படங்கள் கொண்டு நாம் இன்னும் நன்றாகப் பார்க்க முடிகிறது

இதைப் பார்த்தவுடன் இது சிவன், வெறும் ரிஷப வாஹன சிவன் மட்டும் இல்லை வீணாதாரா என்று சொன்னால் – அப்படியே ஒப்புக்கொண்டு இருப்பேன். ஆனால் திரு லாக்வூட் அவர்கள் இது ஒரு அர்த்தநாரி வடிவம் என்று கூறுகிறார். பல்லவ அரசன் ராஜசிம்ஹ பல்லவன் தனக்கென்று ஒரு சில சிறப்பு சிற்பங்களை வைத்துள்ளான். அவற்றை நாம் மல்லை ஓலக்கனேஸ்வர கோயில், கடற்கரை கோயில் மற்றும் காஞ்சி கைலாயநாதர் ஆலயம் என்று எங்கோ ஓரிடத்தில் திரும்ப திரும்ப பார்க்க இயலும்.

ஓலக்கனேஸ்வர ஆலயத்தில் இந்த சிற்பம் இல்லை. கடற்கரைக் கோயிலுக்கு செல்லும் முன்னர் கஞ்சி கைலாயநாதர் கோயில் சென்று தேடுவோம். அங்கே ஒரு வீணாதாரா சிற்பமும் ஒரு வீணாதாரா அர்த்தனாரி வடிவங்களும் உள்ளன.

படங்களுக்கு நன்றி திரு சௌராப் மற்றும் கிருஷ்ணமுர்த்தி மாமா

நாம் முன்னரே அர்த்தனாரி வடிவத்தை பற்றிய பதிவில் எப்படி இரு பாகங்களும் வேறு படுகின்றன என்று பார்தோம்.

சிற்பிக்கு “விடை”யே விடை

இப்போது கைலாயநாதர் சிற்ப்பத்தை அருகில் சென்று பார்ப்போம்.

அர்த்தனாரி என்று தெளிவாகிய பின்னர் வீணையை பார்ப்போம்.

சுமார் எட்டாம் நூற்றாண்டில் வீணை எப்படி இருந்தது என்று நாம் அறியமுடிகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று மேலே இருக்கும் பாகம் குடம் போல இல்லாமல் , திருப்பி பொருத்தப்பட்ட குவளை போல உள்ளது. இதனை மார்புடன் அணைத்து வாத்தியத்தை வாசிக்கும் பொது கலைஞன் இசையுடன் எப்படி இணைத்து வாசித்து இருப்பான் என்று யூகிக்க முடிகிறது. இந்த விதமான வாத்தியம் பல இடங்களில் நாம் பார்க்கிறோம். புதுகோட்டை பைரவர் ( நன்றி காத்தி ), பாதாமி அர்த்தனாரி ( நன்றி பிகாசா ) , நேபாளத்து சரஸ்வதி ( நன்றி காலதர்ஷன )

தற்போதைய வீணை இப்படி இருக்கிறது. மேலே இருக்கும் குடம் போன்ற பகுதிக்கு சரோக்கை என்று பெயர், ஆனால் அதற்க்கு இப்போது வேலை உண்டா என்று தெரிய வில்லை.

ஆனால் அந்நாளைய வீணையை போல இந்த திருப்பி பொருத்தப்பட்ட குவளை போன்ற வீணைகள் இன்றும் இருக்கின்றனவா ? அதை மீட்டும் பொது இசையுடன் கலக்கும் உணர்ச்சிகள் …

சரி, மீண்டும் நமது சிற்ப புதிருக்கு வருவோம். இந்த சிற்பம் ஒரு வீணாதாரா அர்த்தனாரி ரிஷபவாகன சிவன் என்று சொல்கிறார் திரு லாக்வூட். அதற்கு சான்றாக இந்த இரு படங்களையும் தருகிறார்.

படம் A கைலாயநாதர் ஆலயத்தின் வெளிச்சுற்றில் அந்நாளில் இருந்தது. பார்ப்பதற்கு மல்லை மற்றும் திருக்கழுக்குன்றம் சிற்பம் போலவே உள்ளது.

படம் B வீணாதாரா அர்ததனாரி ஆனால் இங்கு ரிஷப வாஹனம் இல்லை அதற்கு பதில் அரியணையில் அமர்ந்திருக்கும் வண்ணம் உள்ளது. இந்த சிற்பம் நான்கு புறமும் சிற்பம் கொண்ட பாறையின் ஒரு பக்கத்தில் உள்ளது. இந்த சிற்பம் மல்லை கடற்கரை கோயிலின் வெளிச்சுற்றில் அந்நாளில் இருந்தது.

மேலும் அவர் கூறுகையில் முன்னர் பார்த்த கைலாயநாதர் வீணாதாரா அர்த்தனாரி வடிவமும் அரியணை மீது அமர்ந்த வண்ணம் உள்ளது. இது மேற்கு புறம் வெளிச்சுவரில் உள்ளது

முடிவாக இந்த புதிரின் விடை மூன்று இடங்களில் உள்ளது. ஒன்று திருக்கழுகுன்றம் கருவறை சிற்பம் – கைத்தேர்ந்த ஓவியர் யாரையாவது வைத்து நேரில் பார்த்து வரையவைத்துப் பார்க்கலாம். மற்ற இரண்டு சிற்பங்களும் தற்போது எங்கே உள்ளன.. தேடிப்பார்க்க வேண்டும்.. படங்கள் எடுத்த ஆண்டு 1969.

பல்லவ கலைகள் நூல் 1997 ஆம் ஆண்டு மறுபதிவின் பொது திரு லாக்வூட் எழுதிய குறிப்பு

இரு சிற்பங்களும் தற்போது தொல்லியல் துறை மல்லை அருங்காட்சியகத்தில் உள்ளன !!

தற்போது இந்த இரு சிற்பங்களும் எங்கு உள்ளன என்று ஆர்வலர் தேடி படம் பிடித்து தர வேண்டுகிறோம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத சித்திரங்கள்தான் ..ஆனால் !

இன்று நாம் பார்க்கவிருக்கும் வடிவங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாதவை போல முதலில் தோன்றும். அதற்கு முன்னர் நண்பர் திரு சதீஷ் அவர்கள் போட்டிருந்த ஓவியம் ஒன்றுடன் காஞ்சிப் பயணத்தை துவங்குவோம்.


சதீஷ் அவர்களின் தளம் !

சிலர் இயற்கையாகவே நேரில் இருப்பதை விட புகைப்படங்களில் பல மடங்கு அழகாக காட்சி அளிப்பர். அவர்களை ஆங்கிலத்தில் போடோசனிக் என்று அழைப்பார்கள். அதைப்போல ராஜசிம்ஹ பல்லவரின் மல்லை கடற்க்கரை கோயில், பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயம், மற்றும் காஞ்சி கைலாயநாதர் ஆலயம் – புகைப்படங்கள் எடுப்பதற்கென்றே கட்டி விட்டார் போலும். – அரைகுறை ஆர்வலருக்கே புகைப்படம் எடுத்து தள்ளும் வெறியைத்தரும் இவை – கைதேர்ந்த வல்லுனர்கள் பிடியில் சிக்கினால். இதோ நண்பர் ஆதி ஆர்ட்ஸ் கைவரிசை – இல்லை – கேமரா வரிசையை பாருங்கள்.



என்ன ஒரு அழகு – ஆயிரத்தி முந்நூறு ஆண்டுகளாக இன்னமும் நின்று சிறக்கும் பொக்கிஷம்.

அடுத்து இந்த வரிசையைப் பாருங்கள். .

அஜந்தா புத்தர் , மலை தவம் மற்றும் கைலாசநாதர் சோமாஸ்கந்தர் வடிவம் – மூன்றிக்கும் என்ன சம்பந்தம் ?

முன்னர் நாம் பார்த்த காஞ்சி சோமாஸ்கந்தர் ஓவியம் நினைவில் உள்ளதல்லவா ?

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் மூன்று

முதலில் இந்த ஓவியம் எங்கே உள்ளது என்று பார்ப்போ

படத்தில் அம்புக்குறி போட்டிருப்பது போல நேரே சென்று இடது பக்கம் திரும்பிப் பாருங்கள். நான்கு இடங்களில் மட்டும் சிதைந்த ஓவியங்கள் தெரியும். மற்ற இடத்தில சுமார் தான் !!


ஆனால் இந்த ஒரு இடம் மிகவும் முக்கியம். உள்ளே தலையை நுழைத்து வலது பக்கம் உற்று பாருங்கள்.


முதலில் வெறும் கருப்பு சாயம் போல தோன்றும் – சிறுது நேரம் கண்கள் வெளிச்சம் இல்லாமைக்கு பழகியதும் உள்ளே இன்றும் ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லவ கால ஓவியம் தெரியும்

இன்னும் அருகில் சென்று பார்ப்போம். இரு அழகிய கின்னரர்கள். அந்த பெண்மணி புல்லாங்குழல் வாசிக்கும் அழகு அற்புதம். பறவை போல கால்களும் , சிறகுகளும் இருப்பதை கவனியுங்கள்.

இப்போது மல்லை தவச் சிற்பம்.


இங்கேயும் அந்த தம்பதியினர் இருப்பதை பாருங்கள். அதே பறவை போல கால்களும் , சிறகுகளும் இருக்கின்றன. தெரிகின்றதா ?

சரி, இரண்டுமே பல்லவ காலத்தவை தான். ஆனால் இதே போல ஒன்று அஜந்தா ஓவியத்தில் உள்ளது, அதுவும் நீங்கள் பல முறை பார்த்த, ஏன் இந்த பதிவின் ஆரம்பத்தில் பார்த்த புத்தர் உருவத்திலும் உள்ளது என்றால் நம்புவீர்களா ?

சரி, இப்போது பாருங்கள்

(படங்களுக்கு நன்றி – An Album of Eighty-five Reproductions in Colour, Editor: A.Ghosh; Published by Archaeological Survey of India)


இப்போது தெரிகிறார்களா ?


உண்மையான கலைக்கு ஏது வேலி , வரம்பு ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் மூன்று

கடந்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாய் இன்றும் நமது வாசகர்கள், முன் வரிசையில் அமர்ந்து, இந்த அற்புத ஓவியப் பயணத்தை நம்முடன் தொடர்கிறார்கள். இதுவரை பயணம் அருமையாக சென்றுக் கொண்டிருக்கிறது. காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் ராஜசிம்மன் காலத்து அரிய சோமஸ்கந்தர் ஓவியத்தின் சிதைந்த பகுதிகள் கொண்டு முழு ஓவியத்தையும் தீட்டும் நமது முயற்சி இன்றும் தொடர்கிறது.

இந்த ஓவியத்தின் நடு நாயகனான ஈசன் மீது முதலில் நாம் கவனம் செலுத்துவோம்.

அடுத்து உமை

உமையின் வடிவத்தை ஓவியத்தில் உற்றுப் பார்க்கும் பொது, அம்மை மஞ்சள் நிற மேலாடை அணிந்திருப்பது போல தெரிந்தது. மஞ்சள் பூசி உள்ளாரோ அல்லது மஞ்சள் நிற கச்சை அணித்து இருக்கிறாரோ ?

ஓவியத்திற்கு இப்போது வண்ணம் தீட்டுகிறோம். முதலில் மெல்லிய வண்ணம். உடல் வண்ணங்கள்.

மகேசன் வண்ணம் பெறுகிறார், நீலகண்டர் ஆயிற்றே !

உமை இன்னும் வண்ணம் ஏற்றி அழகு பெறுகிறார்.

அம்மை அப்பன் எப்படி ஒன்றாக அழகுபட காட்சி அளிக்க ஆரம்பிக்கின்றனர்.

கேயுரம் எனப்படும் மேல் கை பட்டை, மற்ற ஆபரணங்கள் என்று இன்னும் ஜொலிக்க ஆரம்பிக்கயார் மகேசன் .

ஆசனம், கணம் , தோழி என்று அனைவரும் வண்ணம் பூசப்படுகின்றனர்.

முடியும் தருவாயில், மீண்டும் ஒரு முறை நாம் எதையாவது விட்டு விட்டோமோ என்று ஓவியத்துடன் ஒத்துப் பார்க்கிறோம்.

அடடே, நான்முகனின் அஞ்சலி ஹஸ்தம் சரி செய்ய மறந்துவிட்டோமே.

ஈசனின் கை முத்திரைகள் சில சரியாக தெரியவில்லை, அதைப் பற்றி படிக்க, நாம் சோமஸ்கந்தர் பற்றி தொடரை ஆரம்பிக்க காரணமான திரு கிப்ட் சிரோமனி அவர்களது 1971 ஆம் ஆண்டு குறிப்பை மீண்டும் சென்று படித்தேன்

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

சோமஸ்கந்தர் வடிவம் பற்றி அவர் சொல்லும்போது ராஜசிம்மன் காலத்திற்கு முந்தைய சோமஸ்கந்தர் கல் சிற்பம் பற்றி இவ்வாறு விவரிக்கிறார். ” சிவனின் நான்கு கைகளில், மேல் வலது கையில் ஒரு பாம்பை பிடித்து இருக்கிறார் ”

ராஜசிம்மன் காலத்து சோமஸ்கந்தர் வடிவத்தில் அவர் குறிப்பாக இந்த பாம்பை பற்றி ஒன்றும் கூறவில்லை. எனினும் பாம்பு கண்ணில் தென்படுகிறதா என்று தேடிப் பார்த்தோம்.

மேல் வலது கையில் ஒன்றும் தெரியவில்லை , ஆனால் கீழ் வலது கையின் அருகில்

படம் எடுத்து ஆடும் பாம்பு தெரிகிறதா ?

அத்துடன் நமது இந்த பயணம் முடிவுக்கு வருகிறது, மீண்டும் ஒரு முறை நாம் ரசிக்கும் வண்ணம் சலிக்காமல் வரைந்த ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களையும், சரியான தருணத்தில் நல்ல படங்களை தந்து உதவிய இளம் நண்பர் திரு ஜகதீஷ் அவர்களையும் வாழ்த்தி , முடிவு பெற்ற ஓவியத்தை படைக்கிறேன்.

இந்த ஓவியப் பயணம் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் உற்சாக வரவேற்புடன் இன்னும் பல பணிகளை இது போலவே எடுத்து நிறைவேற்ற முயற்சிக்கிறோம்.இது ஒரு முயற்சி தான், பிழைகள், தவறுகள் ஏதேனும் இருந்தால் முதலில் மன்னிக்கவும் , பிறகு கண்டிப்பாக எடுத்துக் கூறவும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் இரண்டு

முதல் பாகத்தை படித்து பலரும் அனுப்பிய நல்ல மறுமொழிகள் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. யாருமே சென்று காணாத இந்த பல்லவர் கால சுவர் ஓவியங்கள் இன்று புத்துயிர் பெற்று நம்முடன் பேசுவது போன்ற உணர்ச்சி பெறுகிறோம். இந்த பயணத்தில் நானும் ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களும் பல புதிய விஷயங்களை தெரிந்துக்கொண்டோம். அதை அப்படியே உங்களுடன் பகிர்கின்றோம்.

நண்பர் திரு ஜகதீஷ், அவருக்கு மீண்டும் ஒரு நன்றி. அவர் தந்த படங்கள் எங்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருந்தது எனபது இந்த பதிவை படித்து முடித்தவுடன் புரியும். தக்க சமயத்தில் உதவினார் இந்த பதினோராவது வகுப்ப மாணவன்.

சென்ற பதிவில், படத்தில் யார் யார் இருக்கின்றனர், எங்கெங்கே என்று குறித்து விவரித்தோம் நாங்கள், இன்னும் அருகில் சென்று ஒவ்வொரு சிறு குறிப்புகளையும் பார்த்தோம். பூத கணம், எங்குமே முழுமையாக தெரியவில்லை. கொஞ்சம் கற்பனைத் திறனை கலந்து வரைந்து முடித்து விட்டார் ஓவியர்.

அருகில் இருக்கும் தோழி அப்படி அல்ல. நல்ல படம் இருந்தது, மேலே உமையின் ஆடையில் இருக்கும் வேலைப்பாடு கூட கிடைத்தது.


அடுத்து இருவருக்கும் நடுவில் ஏதாவது இருக்குமோ.அனைத்து ஓவியங்களிலும் இந்த பகுதியில் சிதைந்து விட்டது ( மொத்தம் நான்கு சுவர் ஓவியங்களை வைத்து நாம் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம் ) . சோமஸ்கந்தர் பற்றிய நமது தொடரை வாசிக்கும் நண்பர்கள், பொதுவாக சோமஸ்கந்தர் வடிவங்களில் தரையில் ஒரு கூஜா இருப்பதை கவனித்து இருப்பார்கள். இதோ இந்த மலை கடற்கரை கோயில் வடிவம் போல

அதனால் அதை நமது ஓவியத்திலும் போட்டுவிட்டோம்.

அடுத்து பிரம்மா. ஒரே ஒரு ஓவியத்தில் மட்டும், அவரது உருவம் தெரிகிறது. ( இரு கைகளையும் கூப்பி அஞ்சலி முத்திரையில் அவரை காட்டவேண்டும். மூன்றாம் பாகத்தில் திருத்தி விடுவோம் )

எப்படி அவரது மற்ற முகங்களை காட்டுவது என்று யோசிக்க, புள்ளமங்கை பிரம்மா நினைவுக்கு வந்தார்.
.

அவரை முன்மாதிரியாக வாய்த்த இந்த பிரம்மன் படத்தை வரைந்தாயிற்று.

விஷ்ணு உருவத்திற்கு இந்த நிலை இல்லை. ஒரு ஓவியத்தில் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் எங்கள் பணி எளிதாயிற்று.

அடுத்து குழந்தை முருகன்.

முருகன் – அழகன். அதுவும் குழந்தை முருகன் என்றால் !! சரியாக வரவேண்டுமே.

அருகில் சென்று படங்களை பார்க்கும் பொது தான் நாங்கள் முதலில் நினைத்ததைப் போல ஆசனத்தின் கால்களில் சிங்க வடிவங்கள் இல்லை என்பது தெரிந்தது.

அடுத்து உமை.


ஈசன், இந்த வடிவத்தின் நடு நாயகன் – மிகவும் நேர்த்தியாக வரவேண்டும் என்பதால், இன்னும் கவனமாக படங்களை ஆராய்ந்தோம். குறிப்பாக அவர் கை முத்திரைகள். ( ஒரு குறிப்பு மிகவும் உதவியாக இருந்தது – அது என்ன வென்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்) . இடது மேல் கரம் இங்கே பாருங்கள்.

ஈசனின் மகுடம். நிறைய வேலைப்பாடுடன் இருந்ததால் மிகவும் கடினமாக இருந்தது.

குறிப்பாக மகுடத்தில் உள்ள ஒரு அணிகலன். இதுவரை நாங்கள் பார்க்காததாக இருந்தது. எனினும் அந்த வடிவம் நாம் முன்னரே எங்கோ பார்த்த வடிவம். அப்போது திரு நாகசாமி அவரது செப்புத்திருமேனி (Masterpieces of South Indian Bronzes)நூலில் ஒரு குறிப்பு கிடைத்தது. பல்லவர் கால செப்ப்புத்திருமேனி ஒன்றில் இரு மகர ஒப்பனை கொண்டு இந்த அணிகலன் உள்ளது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

ஆம், அதே நம் ஓவியத்திலும்.


இப்போது ஒரு அளவிற்கு நமது ஓவியம் வந்து விட்டது. இன்னும் சிறு சிறு அமைப்புகளை சரி செய்து வண்ணம் பூசினால் முடிந்து விடும்.

அதற்கு, அடுத்த இறுதிப் பதிவு விரைவில் பார்ப்போம்.

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் ஒன்று

தமிழ் நாட்டு ஓவியக்கலையின் மிக தொன்மையான பல்லவ ஓவியங்கள் இன்றும் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் இங்கும் அங்குமாய் சிதைந்த நிலையில் பார்க்க முடிகிறது. பார்த்த சில நொடிக்களிலேயே நம்மை சொக்க வைக்கும் அழகைக் கொண்ட இந்த ஓவியங்களைப் பார்க்கும் பொது ஒருபக்கம் பரவசமும் மறு பக்கம் பெரும் துக்கமும் வரும். பரவசம், ஆயிரத்திமுன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே தனது கலையில் இப்படி ஒரு உன்னத நிலையை நம் மண்ணின் கலைஞன் எட்டிவிட்டான் என்பதும், அவனது கலை காலத்தை வென்று இன்று வரை நின்றுள்ளது என்பதும். துக்கம், இங்கும் அங்குமாய் தெரிந்த சில கோடுகள், சில வண்ணங்கள், என்று நாம் இன்று காணும் இந்த ஓவியங்கள், அடுத்த தலைமுறை பார்க்க , பரவசம் அடைய இந்த அரிய பொக்கிஷங்களை , நம் குல தனங்களை, நிலைக்க வைக்க முடியுமா என்ற கேள்வி.

நம்மால் முடிந்தது – இன்றைய நிலையை அப்படியே படம் பிடித்து இணையம் மூலம் கருவூலம் அமைத்து பாதுகாக்கமுடியும். எனினும், எங்கோ மூலையில் ஒரு சின்ன ஆசை. இவை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி வண்ணங்களின் பிரதிபலிப்பாய் ஜொலித்திருக்கும் என மனக்கண்ணில் அப்படியே அவற்றை கற்பனை செய்து ரசிப்பது உண்டு, எனினும் அப்படி மனக்கண்ணில் கண்ட காட்சியை அனைவருடன் எப்படி பகிர்வது. பல்லவ சிற்பியுடன் போட்டி போட நமக்கு தேர்ச்சி இல்லை, தற்போது உள்ள கணினி தொழில்நுட்பம் கொண்டு படங்களை ஒற்றி எடுத்தும், ஒரு ஓவியம் கூட முழுவதுமாக இன்று நிலைக்க வில்லை. இது சாமானியன் செய்யும் வேலை இல்லை என்று புரிந்தது. இந்த கலை ரத்தத்திலேயே ஊறி போன ஒருவரால் மட்டுமே இவற்றுக்கு உயிர் கொடுக்க முடியும் என்று தெளிவாக தெரிந்து. ஓவியர் நண்பர்கள் யாரை சந்தித்தாலும் கோரிக்கை மனு கொடுத்து வைப்பேன்.

இப்படி இருக்கையில், தற்செயலாக நண்பர் ஒருவரின் ஓவியக் கண்காட்சி ஒன்றிற்கு சென்ற பொது, ஓவியர் மணியம் அவர்களின் வழித்தோன்றல் இருவரை சந்திக்க நேர்ந்தது. ஆம் அவர்தான், அமரர் கல்கியின் கதை காலத்திற்கு மெருக் ஏற்றி அற்புத ஓவியங்களை படைத்தவர். அவரது கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டு வந்தவர். திரு மணியம் அவர்களின் ஓவியங்கள் சில , அவரது மகன் திரு மணியம் செல்வன் அவர்களும் சிறந்த ஓவியர், அவரது ஓவியங்கள் சில ,ஆனால் நான் சந்தித்தது அவரது புதல்விகளை . புலிக்கு பிறந்தது பூனை யாகுமா. இருவருமே சிறந்த ஓவியர்கள். அப்படியே நின்றுக் கொண்டே பேசினோம், கல்கி , பார்த்திபன் கனவு , பொன்னியின் செல்வன் என்று போன உரையாடல் முடிவில் கோரிக்கை மனுவை நீட்டினேன். திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்கள் அவரது ஓவியங்கள் ,முயற்சி செய்து பார்ப்போம் என்று கூறினார்.

பணி மிகவும் கடினம், ஓவியங்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தன. நான்கு இடங்களில் உள்ள இதே வடிவம், ஒரு இடத்தில கூட முழுவதுமாக இல்லை. போதாத குறைக்கு என்னிடத்தில் நல்ல படங்களும் இல்லை. நண்பர்கள் இடத்தில கேட்டுப் பார்த்தேன், யாரிடத்திலும் எங்களுக்கு தேவைப்படும் அளவிற்கு பெரிய படங்கள் இல்லை.


இருப்பதை வைத்து, முதலில் வேலையை துவங்கினோம். நன்றாக வருமோ என்ற ஐயம் எழும் முன்னரே, உடனே வந்தது சுபாஷினி அவர்களின் முதல் பிரதி

சரியான இடத்தில தான் பணியை ஒப்படைத்துள்ளோம் என்று சொன்னது மனம். வாழை அடி வாழையாய் வந்த கலை, அவர்களது கையில் விளையாடியது . எனினும் மிக நேர்த்தியாக வரையவேண்டும் என்றால் நல்ல படம் சீக்கிரம் தேவை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொடிருந்த பொது, ஒரு இனிய அதிர்ச்சி. மே மாதம் தற்செயலாக தளத்தின் மூலம் உரையாடிய பத்தாம் வகுப்பு மாணவன் ஜகதீஷ், ஒரு மடல் அனுப்பினான். எனது காஞ்சி பயண புகை படங்கள் என்றது தலைப்பு. கூடவே,”ஹலோ அண்ணா , என்னை நினைவுள்ளதா, நான் ராஜகேசரி ( புனைப்பெயர் ) , சமீபத்தில் காஞ்சிபுரம் சென்றிருந்தேன் , அங்கு எடுத்த படங்கள் இதோ ”

உள்ளே, நான் தேடிக்கொண்டிருந்த படங்கள். உடனே தொடர்பு கொண்டு, முழு அளவில் படத்தை அனுப்பு என்று சொன்னவுடன் உதவினான் நம் தோழன், இந்த சின்ன வயதில் -வேலூர் பள்ளியில் இப்போது பதினொன்றாம் வகுப்பு படிக்கும் நம் ஹீரோ இதோ.

பல்லவ கலை, ராஜசிம்ம பல்லவனால் வளர்க்கப்பட்ட கலை, இன்று இந்த மாணவன் உதவியுடன் அடுத்த தலைமுறைக்கு செல்கிறது.

பிரம்மா

உமை

விஷ்ணு

நல்ல படங்கள் ஏன் தேவை பட்டன என்பதற்கு, கிழே இருக்கும் பூத கணம், மற்றும் பணிப்பெண் உருவங்களை கண்டு கொள்ள பெரிதும் உதவின.

ஆசனத்தின் கால்கள் சிங்க முகங்கள் போல சித்தரிக்க நினைத்தோம். ( மலை மகிஷாசுரமர்தினி மண்டபம் போல )

அடுத்து இன்னும் பல விவரங்களை எடுத்து ஓவியத்தை பூர்த்தி செய்ய ஆரம்பித்தோம்.

நன்றாக வருகிறது . இன்னும் பார்க்க ஆவலா ? பொறுமை, அடுத்த பதிவில் தொடரும் இந்த ஓவியம்.

சர்ச்சைச் சிற்பங்கள்- பாகம் ஒன்று – திருமாலுக் காழி யளித்தாய் போற்றி

கடவுளுக்கும் கடவுளுக்கும் போட்டியா? இல்லை என் கடவுளுக்கும் உன் கடவுளுக்கும் போட்டியா? பெரும்பாலும் இது மாதிரி சர்ச்சைக்குரிய வாதங்களை தவிர்க்க முயற்சிப்போம்.

ஆனால் சில நேரங்களில் இவை அத்து மீறிப் போகும் பொழுது, நாம் அந்த வாதங்களை சரியான முறையில் பார்ப்பதற்கு முன் முதலில் அங்கே என்ன இருக்கிறது என்பதை எடுத்துரைக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவற்றில் எது சரி எது தவறு என்ற அனைத்தும் இன்றும் அப்படியே இருக்கும் என்பது சாத்தியம் இல்லை. எனினும் அன்று என்ன இருந்தது என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். இருப்பதை ஆராய்ந்து பார்க்கும் முன்னரே போர்க்கொடி தூக்குவது நல்லதன்று. சிற்பம் என்பது எங்கும் நிறைந்திருக்கும் ஒன்றை மனிதனின் மனதால் கட்டுப்படுத்தி செதுக்கப்பட்ட பொருள் என்று மட்டும் பார்க்காமல் மனதை கட்டுப்படுத்தி அடுத்த நிலைக்கு எடுத்தும் செல்லும் கருவி என்றே நாம் பார்க்கவேண்டும்.

இந்த தளத்தின் நோக்கம் சிற்பங்களில் மறைந்து இருக்கும் கதைகளையும் நுணுக்கங்களையும் அனைவரும் விளங்கும் வண்ணம் எடுத்துச் சொல்வதே. கடந்து வந்த பாதை கரடு முரடானது. பல மதங்கள் காலப்போக்கில் ஒன்றுக்கொன்று போட்டி போட்டன, ஒரே மதங்களினுள்ளும் இந்த போட்டி நிலவியது. எனினும் இவையும் நமது பாரம்பரியத்தின் இழையாக பிணைந்து விட்டன. இவற்றில் சரி தவறு என்ற வாதங்களை எடுத்தாண்டு எதிரிகளாக நிற்காமல் இருப்பதை இருந்தாக பாருங்கள் என்பது முதல் வேண்டுகோள். இப்படி பார்க்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள் தயவு செய்து இப்போதே மேலும் படிக்காமல் விலகி விடுங்கள் என்பது இரண்டாவது வேண்டுகோள்.

என்னடா பில்ட் அப் பெரியதாக இருக்கிறதே என்று பார்க்க வேண்டாம். இது போன்ற சர்ச்சை வடிவங்கள் பல உண்டு. ஏன் பரவலாக காணப்படும் லிங்கோத்பவர், காண்பதற்கரிய சரபேஸ்வரர் என்று ஒரு பக்கம். வாமன அவதாரத்தில் கங்கை உரு பெற்ற கதை சொல்லும் சிற்பங்கள் என்று இன்றைய சினிமா படம் போல ஆடியன்சுக்கு ஏற்ப சிற்பங்களும் செதுக்கப்பட்டன. அரசர்களும் தங்களுக்குப் பிடித்த தெய்வங்களை உயர்த்தியும் போற்றியும் குறிப்பிட்ட மதத்தை வளர்த்தனர். நாம் இன்று இரு சிற்பங்களை பார்க்க போகிறோம். விஷ்ணு அனுக்ரஹா மூர்த்தி / சக்கர தானர், இது மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் சிற்பம், காலத்தால் மாலிக் கபூர் தாக்குதலுக்கு பின்னர் உருவானதாக இருக்கலாம். மற்றொன்று அதையும் விட பழமை வாய்ந்த எட்டாம் நூற்றாண்டு ராஜ ஸிம்ஹ பல்லவனின் காஞ்சி கைலாசநாதர் கோயில் சிற்பம்.

சிற்பங்களை ஒட்டிய கதை ஏதோ நான் ஓட்டுகின்ற கதை அல்ல என்பதை முதலிலேயே தெளிவு படுத்த அப்பர் சுவாமிகளின் தேவாரத்தை இங்கே எடுத்துக் கொடுத்துள்ளேன்.

ஆறாம் திருமுறை

பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
திருமாலுக் காழி யளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

ஒரு வழியாக சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லியாகி விட்டது. இப்போது கதைக்குள் செல்வோம். வழக்கம் போல இந்த கருவை கொண்டு பல கதைகள் உள்ளன.

முதல் பாகம்:

ஜலந்தரன் என்னும் சமுத்திரராஜனின் மகன் தன்னுடைய ஆட்சியை எங்கும் நிலைநாட்ட, தேவலோகம், மற்ற தேவர்கள் அனைவரையும் தனக்குக் கீழ் கொண்டு வர எண்ணினான். அவன் மனைவியான பிருந்தை பதிவிரதை என்பதாலும், சிவ பக்தை என்பதாலும் அவளின் சிவ பக்தியும், கற்பின் சக்தியும் அவனைக் கட்டிக் காத்ததால் யாராலும் இந்த ஜலந்தரனை அழிக்கமுடியவில்லை.ஆனாலும் ஈசனோடும் ஜலந்தரன் போர் புரிகிறான். ஈசனுக்கோ, தன் பக்தையின் கணவனை எங்ஙனம் அழிப்பது என்று தன்னுடனும் போருக்கு வரும் ஜாலந்தரனைத் திருப்பி அனுப்புகிறார்.மகாவிஷ்ணுவின் மூலமே அவனை அழிக்கவேண்டும் என எண்ணினார் ஈசன்.

மஹாவிஷ்ணுவும் அதற்கு உடன்பட்டு சிவனுக்கு வழிபாடுகள் செய்கின்றார். ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை அர்ச்சித்து விஷ்ணு வழிபட ஆயிரமாவது தாமரை இல்லாமல் 999 தாமரைகளே இருக்கின்றன. எண்ணிக்கையில் ஒன்று குறைவதைக் கண்ட விஷ்ணு ஆயிரமாவது தாமரைக்காகத் தன் கண்ணைப் ( அவன் தான் கமலக்கண்ணன் ஆயிற்றே!! ) பிடுங்கி அர்ச்சிக்கிறார்…. (இதோ காஞ்சி கைலாசந்தர் கோயில் சிற்பம்.)

பல்லவ சிற்பியின் தனித்துவம் இங்கும் தெரிகிறது. ஈசன் அமர்ந்திர்க்கும் பாணியில்தான் என்ன ஒரு யதார்த்தம். ஒரு காலை மடித்து , வலது கரத்தை ஆசனத்தில் முட்டுக் கொடுத்து அமர்ந்திருக்கும் காட்சி அருமை. தலைக்கு மேலே மற்ற இரு கைகளும் என்ன செய்கின்றன? ஏதோ தலைப்பாகையை கட்டுவது போல உள்ளது, அருகில் உமையம்மை. பெருமாள் ஒரு காலை மடித்து, இரு கரங்களிலும் தாமரை மலர்களை சிவனுக்கு அளிப்பது போல உள்ளது. இன்னொரு இடது கரம் கண்ணப்பர் போல தனது இடது கண்ணை பறிக்க செல்கிறது.

சிற்பி இங்கே பின்னணியில் உள்ள கதைக்கு ஏற்ப சிற்பத்தை செதுக்கி உள்ளான். ஒரு வேளை அதில் நமக்கு எதாவது சொல்ல வருகிறானோ. தான் யார் என்பதை மறந்து அவனுடன் ஒன்றாகும் நிலையே பக்தி அல்லவா?

கதையின் அடுத்த பகுதியையும் மதுரை சிற்பதையும் அடுத்து பார்ப்போம்.

பெருமாளின் செய்கையை பார்த்து, ஈசன் பிரத்யக்ஷமாகி அவரைத் தடுத்துத் தரையில் காலால் கீறி ஒரு வட்டம் வரைகிறார். அதைச் சக்கரமாக வரைந்து அதைப் பெயர்த்தெடுத்து அந்தச் சக்கரத்தின் மூலம் ஜலந்தரனைக் கொல்லச் சொல்கிறார். இதுவே அறுபத்து நாலு சிவ வடிவங்களின் புராணக்கதைகளிலும்,ஈசனின் வீரச் செயல்களைப் பற்றிச் சொல்லும்போதும் வேறுவிதமாய் ஈசனே அந்தச் சக்கரத்தை ஜலந்தரன் மேல் வீசி எறிந்து அவனை இரண்டாகப் பிளந்ததாயும் வரும். பின்னரே அந்தச் சக்கரத்தை விஷ்ணுவுக்குக் கொடுத்ததாய்ச் சொல்வார்கள். நமக்கு இப்போது தேவை ஈசன் பெருமாளுக்கு சக்கரம் தருவது மட்டுமே.

இந்த காட்சியை மதுரை சிற்பதில் பாருங்கள்.

விஷ்ணு மற்றும் சிவன், அருகில் நான்முகன். கைகளில் உள்ள ஆயுதங்களைக் கொண்டு யார் யார் என்று தெளிவாக புரிகிறது. இந்த காலத்தில் ஆகமங்கள் மேலோங்கி நின்று சிற்பியின் திறனை தாங்கள் இட்ட சட்டங்களுள் கொண்டுவந்து விட்டன. எனவே பல்லவ சிற்பதில் பார்த்த உயிரோட்டம் இங்கே இல்லை. சிற்பம் சிலையாக சொல்லும் கதையை சொல்வதில் மட்டும் தன் கவனத்தை செலுத்துகிறது.

தூண் சிற்பம் தான், எனினும் சிற்பி இன்னும் சற்று சமமான முறையில் அனைவரையும் காண்பித்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. கலைக் கண்ணோடு பார்ப்பவருக்கும் சரி சமயக் கண்ணோடு பார்ப்போருக்கும் சரியாக இருந்திருக்கும். ஏன் சொல்கிறேன் என்றால் வெவ்வேறு அளவில் செதுக்கியதால் சக்ராயுதத்தை பெருமாளின் அளவுக்கு ஏற்ப செதுக்க , அது ஈசனின் கையில் சொப்பு போல தெரிகிறது…..இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment