ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத சித்திரங்கள்தான் ..ஆனால் !

இன்று நாம் பார்க்கவிருக்கும் வடிவங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாதவை போல முதலில் தோன்றும். அதற்கு முன்னர் நண்பர் திரு சதீஷ் அவர்கள் போட்டிருந்த ஓவியம் ஒன்றுடன் காஞ்சிப் பயணத்தை துவங்குவோம்.


சதீஷ் அவர்களின் தளம் !

சிலர் இயற்கையாகவே நேரில் இருப்பதை விட புகைப்படங்களில் பல மடங்கு அழகாக காட்சி அளிப்பர். அவர்களை ஆங்கிலத்தில் போடோசனிக் என்று அழைப்பார்கள். அதைப்போல ராஜசிம்ஹ பல்லவரின் மல்லை கடற்க்கரை கோயில், பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயம், மற்றும் காஞ்சி கைலாயநாதர் ஆலயம் – புகைப்படங்கள் எடுப்பதற்கென்றே கட்டி விட்டார் போலும். – அரைகுறை ஆர்வலருக்கே புகைப்படம் எடுத்து தள்ளும் வெறியைத்தரும் இவை – கைதேர்ந்த வல்லுனர்கள் பிடியில் சிக்கினால். இதோ நண்பர் ஆதி ஆர்ட்ஸ் கைவரிசை – இல்லை – கேமரா வரிசையை பாருங்கள்.



என்ன ஒரு அழகு – ஆயிரத்தி முந்நூறு ஆண்டுகளாக இன்னமும் நின்று சிறக்கும் பொக்கிஷம்.

அடுத்து இந்த வரிசையைப் பாருங்கள். .

அஜந்தா புத்தர் , மலை தவம் மற்றும் கைலாசநாதர் சோமாஸ்கந்தர் வடிவம் – மூன்றிக்கும் என்ன சம்பந்தம் ?

முன்னர் நாம் பார்த்த காஞ்சி சோமாஸ்கந்தர் ஓவியம் நினைவில் உள்ளதல்லவா ?

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் மூன்று

முதலில் இந்த ஓவியம் எங்கே உள்ளது என்று பார்ப்போ

படத்தில் அம்புக்குறி போட்டிருப்பது போல நேரே சென்று இடது பக்கம் திரும்பிப் பாருங்கள். நான்கு இடங்களில் மட்டும் சிதைந்த ஓவியங்கள் தெரியும். மற்ற இடத்தில சுமார் தான் !!


ஆனால் இந்த ஒரு இடம் மிகவும் முக்கியம். உள்ளே தலையை நுழைத்து வலது பக்கம் உற்று பாருங்கள்.


முதலில் வெறும் கருப்பு சாயம் போல தோன்றும் – சிறுது நேரம் கண்கள் வெளிச்சம் இல்லாமைக்கு பழகியதும் உள்ளே இன்றும் ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லவ கால ஓவியம் தெரியும்

இன்னும் அருகில் சென்று பார்ப்போம். இரு அழகிய கின்னரர்கள். அந்த பெண்மணி புல்லாங்குழல் வாசிக்கும் அழகு அற்புதம். பறவை போல கால்களும் , சிறகுகளும் இருப்பதை கவனியுங்கள்.

இப்போது மல்லை தவச் சிற்பம்.


இங்கேயும் அந்த தம்பதியினர் இருப்பதை பாருங்கள். அதே பறவை போல கால்களும் , சிறகுகளும் இருக்கின்றன. தெரிகின்றதா ?

சரி, இரண்டுமே பல்லவ காலத்தவை தான். ஆனால் இதே போல ஒன்று அஜந்தா ஓவியத்தில் உள்ளது, அதுவும் நீங்கள் பல முறை பார்த்த, ஏன் இந்த பதிவின் ஆரம்பத்தில் பார்த்த புத்தர் உருவத்திலும் உள்ளது என்றால் நம்புவீர்களா ?

சரி, இப்போது பாருங்கள்

(படங்களுக்கு நன்றி – An Album of Eighty-five Reproductions in Colour, Editor: A.Ghosh; Published by Archaeological Survey of India)


இப்போது தெரிகிறார்களா ?


உண்மையான கலைக்கு ஏது வேலி , வரம்பு ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிதலமடைந்தும் கம்பீரமாக நிற்கும் விமானம் – புள்ளலூர்

நேரம் போனது தெரியவே இல்லை. உடன் வந்திருந்த அப்பா அம்மா மற்றும் அண்ணன் காட்டிய சைகைகளும் மனதில் ஏறவில்லை. அப்படி ஒரு மயக்கம் – காஞ்சி கைலாயநாதர் கோயிலில் அப்படியே லயித்து விட்டேன். மதியம் ஆகிவிட்டது – அப்போது திடீரென கைபேசி அலறியது.

“விஜய், காஞ்சியில் இருந்து அரக்கோணம் செல்லும் பாதையில் திருமால்புரம் ரயில் நிலையம் அருகில் இருக்கிறேன். சீக்கிரம் வாரும் ” என்றார் நண்பர் திரு சங்கரநாராயணன். அங்கே ஒரு முற்கால சோழர் கோயிலை தேடி செல்வதாக முந்தைய நாள் திட்டம் போட்டிருந்தோம். சங்கரை பார்த்துவிட்டு அவர் பின்னால் தொடர்ந்த சில வினாடிகளில் போகும் பாதையில் பாதை மட்டும் இல்லை, அப்படி ஒன்று இருந்ததற்கான தடயம் கூட இல்லை என்று புரிந்தது. பெற்றோரையும் , அண்ணனையும் வண்டியுடன் சென்னைக்கு திருப்பி அனுப்பி வைத்து விட்டு சங்கருடன் அவரது வாகனத்தில் பயணம் தொடர்ந்தது. அப்போது எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல் சென்ற எனக்கு பல அதிர்ச்சிகள். திருமால்புரம் இன்ப அதிர்ச்சி ( அதை அடுத்த பதிவில் பார்ப்போம்). ஆனால் அன்று மாலை நாங்கள் கண்ட காட்சி…

சரி, அப்படி எங்கே போனோம், எதை பார்த்தோம்.வரலாற்றில் பல முக்கிய போர்களை பார்த்த மண் – அது சரி, புள்ளலூர் என்றவுடன் பானிபட் போல நமக்கு சட்டென்று சரித்திர பாடம் நினைவுக்கு வருவது கடினம், எனினும் கல்கியின் சிவகாமியின் சபதம் படித்தவர்களுக்கு ? உடனே சிவகாமியும், குண்டோதரனும், புலிகேசியும் , கண்ணபிரானும், ஆயன சிற்பியும் நினைவுக்கு வருவார்கள்.

சிவகாமியின் சபதம்/காஞ்சி முற்றுகை/புள்ளலூர்ச் சண்டை

அதற்குப் பின்னரும் திப்புவின் காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து அவனது மகத்தான வெற்றிகளில் ஒன்றாக இந்த போர் கருதப்படுகிறது. அதை பற்றி திரு முத்தையா அவர்களின் ஆங்கிலப் பதிவு

The story of Two Obelisks.

சரி, இடம் தெரிந்துவிட்டது,. அங்கே ..

எனது படம் சுய விளம்பரத்துக்காக இல்லை, காரணமாகத்தான் உள்ளது. நான் எங்கே நிற்கிறேன். அடுத்த சில படங்களை பார்த்தல் உங்களுக்கே புரியும்

இன்னும் சற்று தொலைவில் சென்று பார்ப்போம்.

புள்ளலூர் அருகே சோழர் காலத்து கோயிலை தேடிச் சென்ற எங்களுக்கு, சங்கரின் பார்வையில் தொலைவில் , மரக்கிளைகளுக்குள்ளும் புதர்களுக்குள்ளும் இந்த விமானம் தென்பட்டது. அங்கே ஊர்க்காரரை கேட்டதற்கு, அதுவா – அது எங்க ” மொட்டை கோபுரம் ” என்றார்

அருகில் சென்றவுடன் தன அதன் முழு பிரம்மாண்டம் விஷவரூபம் எடுத்தது.

விமானத்தின் அடியில் இருந்து பல செங்கல்கள் உருவப் பட்டாலும் ..

முதிர்ந்த போர் வீரரை போல, வீரத்தழும்புகள் பல உடலில் ஏந்தி இருந்தாலும், தலை சற்றும் சாயாமல் நேசி நிமிர்த்தி விண்ணோக்கி சென்ற விமானத்தின் கம்பீரம் மனதை கொள்ளையிட்டது . ஆறு தளங்கள் உடைய அற்புத செங்கல் விமானம்

விமானத்தின் மேல் தளங்களில் சில சுதை சிற்ப்பங்கள் தெரிந்தன. பல்லவர் காலத்து கட்டுமானம் போல உள்ளது.


தன்னைச் சுற்றி சிதைவுகள், குப்பை, முள்செடி , ஆயிரம் ஆண்டுகள் புறக்ணிக்கபட்டதன் விளைவினால் மேலே பல மரக்கிளைகள், எனினும் அதன் அகத்தின் அழகு குன்றவில்லை. இன்றைய அறிவியல் வளர்ச்சி, நவீன கருவிகள், புதிய கட்டுமான பொருட்களின் கண்டுப்பிடிப்பு என்று அவ்வளவும் இருந்தும் – இந்த தனி விமானம் தனது பெருமையை நமக்கு உணர்த்தியது. ஒரு சோகம் கலந்த பெருமிதம், விமானத்தின் உள்ளே சென்றவுடன் ஒரு தெளிவு…

நம் முன்னோர்களின் அறிவு முதிர்ச்சி மற்றும் அறிவியல் தேர்ச்சி கண்முன்னே கண்டதும் ஒரு பெருமிதம் – விமானத்தின் உட்புறம் சென்று மேலே பார்த்தவுடன் ஒரு மெய் சிலிர்ப்பு. அப்படி ஒரு அற்புதம், இத்தனை நூற்றாண்டுகள் ஆகியும், கேட்பாரற்று குப்பையில் கிடந்தாலும், தங்கள் பணியை இன்றும் செவ்வனே செய்து, தாங்கள் காப்பாற்றிய மூலவர் சிலை இல்லை என்றாலும் எங்கும் எதிலும் கலந்திருக்கும் அந்த தெய்வீக உணர்ச்சியை உனர்த்தும் இந்த கற்களின் பணியை கண்டு கண்கள் கலங்கின. ஒரு இணையற்ற
கலை பாரம்பரியத்தை ஈர்ந்த மண்ணில் நானும் பிறந்துள்ளேன் என்ற பெருமிதம். இவை நமது குலதனங்கள் , போற்றி கொண்டாடப்பட வேண்டிய இவை இப்படி இருப்பதை கண்டு மனம் வெந்தது. ஆர்வலர்கள் சிலர் கூடினால் எதுவும் முடியும். இன்பத்திலும் துன்பம்!!!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

காமுகனின் முரட்டு இழுப்பும் , மனம்கொண்டவனின் அன்பு அணைப்பும் !

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளியை ஒட்டிய கதை ஒன்றை எடுத்து இன்றைய சிறப்புப் பதிவாக இடலாம் என்று – மல்லைக்கு மீண்டும் செல்கிறோம். வராஹ அவதாரம். பெருமாள் பூமாதேவியை பாதாள உலகுக்கு கடத்திச் சென்ற ஹிரண்யாக்ஷனை வதம் செய்து மீட்டு வரும் காட்சி. நாம் முன்னரே பார்த்த ஒன்று தான். ஏன் மீண்டும் ?

இந்த காட்சியை வடித்த சிற்பி, அதில் கடினமான கருங்கல்லில், அதுவும் ஒரு குடைவரைக் கோயிலின் சுவரில் இப்படி ஒரு காட்சியை, அதுவும் அதில் இடம் பெரும் நாயகன் நாயகி – அவர்களின் பாவங்கள் , உணர்ச்சிகளை , கற்பனை ரசத்துடன் செதுக்கி உள்ளான். இதை முழுவதுமாக ரசிக்க சமீபத்தில் இணையத்தில் கிடைத்த ஒரு பளிங்கு சிற்பம் கொண்டு இந்த பதிவை அமைக்கிறேன். ( இந்தப் பிறவியில் நேரில் இந்த பொக்கிஷங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவல் நிறைய உள்ளது. எனினும் நான் இன்னும் ரோமாபுரி சென்றதில்லை. படங்கள் அனநிதும் இணையத்தில் தேடி எடுத்தவை. முடிவில் சுட்டிகளை தந்துள்ளேன்) –

கருங்கல்லில் செதுக்குவதை விட பளிங்கு கல்லில் செதுக்குவது சுலபம் தான். ஆனால் தனது இருபத்தி மூன்றாம் வயதில் இந்த படைப்பை தந்த திரு பெர்னினி அவர்களுக்கு தலை வணங்க வேண்டும். அப்படியே ஓரத்தில் ஒரு ஆசை – நமது பல்லவ சிற்பி மட்டும் பளிங்கில் செதுக்கி இருந்தால் ?

இன்று நாம் பார்க்கும் சிற்பம் “தி ரேப் ஆப் ப்ரோசெர்பின “. ரேப் என்பது கடத்தல் என்று படிக்கவும்.

சுவாரசியமான கதை கரு. ப்ளூடோ ப்ரோசெர்பினாவை கடத்திச் செல்லும் காட்சி. ப்ளூடோ பாதாள உலகுக்கு அதிபதி. அதன் வாசலை காக்கும் கொடிய மூன்று தலை நாய் – செரீப்ரஸ்

கதை இது தான். ப்ளூடோ காதல் வசப்பட வேண்டும் என்று எண்ணிய வீனஸ், தன மகன் அமோர் (அல்லது
குபிட் ) ஐ அங்கு அனுப்புகிறார். அவன் விடும் அம்பு ப்ளூடோவை தாக்குகிறது. அந்த சமயம் , ச்சிலி நகரில் தன தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும் ப்ரோசெர்பினாவை , அருகில் இருக்கும் எட்னா எரிமலையில் ( வெடித்து) இருந்து வெளி வரும் ப்ளூடோ கடத்திச் செல்கிறார்.

மகளை காணவில்லை என்று அம்மா செரெஸ் ( பயிர்களின் கடவுள்) மனம் வருந்தி மகள் கிடைக்கும் வரை பயிர்களை விளைய விடாமல் செய்கிறாள். பூமி வரண்டு பாலைவனம் ஆகத்தொடங்கியது.

கவலை கொண்ட கடவுள் தலைவர் ஜுபி்டர், ப்ளூட்டோவை அதட்டி ப்ரோசெர்பினாவை விடுவிக்க கட்டளையிட்டார். ஆனால் அதற்குள் அங்கே இருந்த ஆறு பழங்களை தின்றதானால் ப்ரோசெர்பின ஆண்டுக்கு ஆறு மாதம் உலகிலும், ஆறுமாதம் ப்ளூடோவுடன் இருக்க வேண்டும் என்று ஆயிற்று !)

கதை நமது கதை போலவே வருகிறதே. பல்லவ சிற்பி, அந்த ஹிரண்யாக்ஷன் பூமாதேவியை கடத்திச் செல்லும் காட்சியை கல்லில் வடித்தால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பார்ப்போம்.

அந்தக் கற்பனையை மனதில் கொண்டு, பெர்னினி சிற்பம் கண்ணில் பார்ப்போம் . ப்ளூடோ பக்கம் இருந்து. ஒரு வலிமையான ஆணின் தாக்கம்.

ப்ரோசெர்பின பக்கம், வளைவுகள் நிறைந்த ஒரு பெண்ணின் போராட்டம்.

அப்படியே பல்லவ சிற்பத்தை பார்ப்போம். கம்பீரமாக தந்து தொடையில் அமர்த்தி அழகு பார்க்கும் பெருமாளின் வராஹ உருவம், மேன்மையும் மென்மையும் ஒருங்கே கொண்ட பூமாதேவி.

தன்னைக் கடத்தும் கொடியவனின் பிடியில் இருந்து விலக போராடும் அவலப் பெண்.

இங்கோ, தன்னை காப்பாற்றிய வீரனின் எதிரில் தேவி.

பெர்னினி, என்ன திறமை, பளிங்கு என்றாலும் கல் தானே. அதில் எப்படி தான் இப்படி செதுக்க முடிந்ததோ. மந்திரம் போட்டு குருதியும் சதையுமாக இருந்த இருவரை இப்படி கல்லாக மாற்றிவிட்டனோ. ப்ளூடோ கை ஒன்று அவள் மீது படும்போது, ஒரு அசுரத் தன்மை தெரிகிறது.

அவனை வெறுத்து தள்ளும் அவள் கை, அவன் முகத்தில் படும்போது

மல்லையில் ?? ஆஹா , பட்டும் படாமலும் ஒரு ஸ்பரிசம். வலது கை அன்பு ததும்பும் அணைப்பு, இடது கை தனது பொறுப்பான வேலையை ( அவளை காப்பாற்றுவது ) உணர்த்தும் வண்ணம் வலிமையான பிடி.

மங்கையின் முகத்தில் தான் என்ன ஒரு சோகம், வெறுப்பு. கண்ணீர். அந்த திறந்த வாய் அலறும் சத்தம் கேட்கிறதே. ஓடிப்போய் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்ச்சி எழுகிறது

தேவியின் முகத்திலோ வெட்கம் , வலது கை அவர் மேல் பட்டும் படாமலும் அணைக்கும் அவரது நெஞ்சை சற்றே தொட்டுப் பார்க்க செல்கிறது, முகம் வெட்கி தலை சாய்கிறது, அதை இடது கை மறைக்க செல்கிறது.

ஆயிரம் ஆண்டுகள் சென்று விட்டன – இரண்டு மகா சிற்பிகளுக்கு இடையில், ஆனால் கலை வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஒருவர் பெயர் உலக பிரசித்தம், மற்றொருவர் தனது பெயரை விட்டுச் செல்லவே இல்லை.

முடிவாக மீண்டும் ஒரு முறை இவற்றை பார்த்துக்கொண்டே – விடைபெறுகிறேன்.

படங்கள்:

மாமல்லபுரம் – அசோக் மற்றும் ஸ்ரீராம் ,
மற்றவை இணையத்தில்

Bernini's "Rape of Proserpine"
http://www.students.sbc.edu/vermilya08/Bernini/Pluto%20and%20Proserpina.htm
http://www.youtube.com/watch?v=nXR2YZxgDV4&feature=player_embedded#!
http://en.wikipedia.org/wiki/The_Rape_of_Proserpina


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் மூன்று

கடந்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாய் இன்றும் நமது வாசகர்கள், முன் வரிசையில் அமர்ந்து, இந்த அற்புத ஓவியப் பயணத்தை நம்முடன் தொடர்கிறார்கள். இதுவரை பயணம் அருமையாக சென்றுக் கொண்டிருக்கிறது. காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் ராஜசிம்மன் காலத்து அரிய சோமஸ்கந்தர் ஓவியத்தின் சிதைந்த பகுதிகள் கொண்டு முழு ஓவியத்தையும் தீட்டும் நமது முயற்சி இன்றும் தொடர்கிறது.

இந்த ஓவியத்தின் நடு நாயகனான ஈசன் மீது முதலில் நாம் கவனம் செலுத்துவோம்.

அடுத்து உமை

உமையின் வடிவத்தை ஓவியத்தில் உற்றுப் பார்க்கும் பொது, அம்மை மஞ்சள் நிற மேலாடை அணிந்திருப்பது போல தெரிந்தது. மஞ்சள் பூசி உள்ளாரோ அல்லது மஞ்சள் நிற கச்சை அணித்து இருக்கிறாரோ ?

ஓவியத்திற்கு இப்போது வண்ணம் தீட்டுகிறோம். முதலில் மெல்லிய வண்ணம். உடல் வண்ணங்கள்.

மகேசன் வண்ணம் பெறுகிறார், நீலகண்டர் ஆயிற்றே !

உமை இன்னும் வண்ணம் ஏற்றி அழகு பெறுகிறார்.

அம்மை அப்பன் எப்படி ஒன்றாக அழகுபட காட்சி அளிக்க ஆரம்பிக்கின்றனர்.

கேயுரம் எனப்படும் மேல் கை பட்டை, மற்ற ஆபரணங்கள் என்று இன்னும் ஜொலிக்க ஆரம்பிக்கயார் மகேசன் .

ஆசனம், கணம் , தோழி என்று அனைவரும் வண்ணம் பூசப்படுகின்றனர்.

முடியும் தருவாயில், மீண்டும் ஒரு முறை நாம் எதையாவது விட்டு விட்டோமோ என்று ஓவியத்துடன் ஒத்துப் பார்க்கிறோம்.

அடடே, நான்முகனின் அஞ்சலி ஹஸ்தம் சரி செய்ய மறந்துவிட்டோமே.

ஈசனின் கை முத்திரைகள் சில சரியாக தெரியவில்லை, அதைப் பற்றி படிக்க, நாம் சோமஸ்கந்தர் பற்றி தொடரை ஆரம்பிக்க காரணமான திரு கிப்ட் சிரோமனி அவர்களது 1971 ஆம் ஆண்டு குறிப்பை மீண்டும் சென்று படித்தேன்

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

சோமஸ்கந்தர் வடிவம் பற்றி அவர் சொல்லும்போது ராஜசிம்மன் காலத்திற்கு முந்தைய சோமஸ்கந்தர் கல் சிற்பம் பற்றி இவ்வாறு விவரிக்கிறார். ” சிவனின் நான்கு கைகளில், மேல் வலது கையில் ஒரு பாம்பை பிடித்து இருக்கிறார் ”

ராஜசிம்மன் காலத்து சோமஸ்கந்தர் வடிவத்தில் அவர் குறிப்பாக இந்த பாம்பை பற்றி ஒன்றும் கூறவில்லை. எனினும் பாம்பு கண்ணில் தென்படுகிறதா என்று தேடிப் பார்த்தோம்.

மேல் வலது கையில் ஒன்றும் தெரியவில்லை , ஆனால் கீழ் வலது கையின் அருகில்

படம் எடுத்து ஆடும் பாம்பு தெரிகிறதா ?

அத்துடன் நமது இந்த பயணம் முடிவுக்கு வருகிறது, மீண்டும் ஒரு முறை நாம் ரசிக்கும் வண்ணம் சலிக்காமல் வரைந்த ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களையும், சரியான தருணத்தில் நல்ல படங்களை தந்து உதவிய இளம் நண்பர் திரு ஜகதீஷ் அவர்களையும் வாழ்த்தி , முடிவு பெற்ற ஓவியத்தை படைக்கிறேன்.

இந்த ஓவியப் பயணம் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் உற்சாக வரவேற்புடன் இன்னும் பல பணிகளை இது போலவே எடுத்து நிறைவேற்ற முயற்சிக்கிறோம்.இது ஒரு முயற்சி தான், பிழைகள், தவறுகள் ஏதேனும் இருந்தால் முதலில் மன்னிக்கவும் , பிறகு கண்டிப்பாக எடுத்துக் கூறவும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் இரண்டு

முதல் பாகத்தை படித்து பலரும் அனுப்பிய நல்ல மறுமொழிகள் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. யாருமே சென்று காணாத இந்த பல்லவர் கால சுவர் ஓவியங்கள் இன்று புத்துயிர் பெற்று நம்முடன் பேசுவது போன்ற உணர்ச்சி பெறுகிறோம். இந்த பயணத்தில் நானும் ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களும் பல புதிய விஷயங்களை தெரிந்துக்கொண்டோம். அதை அப்படியே உங்களுடன் பகிர்கின்றோம்.

நண்பர் திரு ஜகதீஷ், அவருக்கு மீண்டும் ஒரு நன்றி. அவர் தந்த படங்கள் எங்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருந்தது எனபது இந்த பதிவை படித்து முடித்தவுடன் புரியும். தக்க சமயத்தில் உதவினார் இந்த பதினோராவது வகுப்ப மாணவன்.

சென்ற பதிவில், படத்தில் யார் யார் இருக்கின்றனர், எங்கெங்கே என்று குறித்து விவரித்தோம் நாங்கள், இன்னும் அருகில் சென்று ஒவ்வொரு சிறு குறிப்புகளையும் பார்த்தோம். பூத கணம், எங்குமே முழுமையாக தெரியவில்லை. கொஞ்சம் கற்பனைத் திறனை கலந்து வரைந்து முடித்து விட்டார் ஓவியர்.

அருகில் இருக்கும் தோழி அப்படி அல்ல. நல்ல படம் இருந்தது, மேலே உமையின் ஆடையில் இருக்கும் வேலைப்பாடு கூட கிடைத்தது.


அடுத்து இருவருக்கும் நடுவில் ஏதாவது இருக்குமோ.அனைத்து ஓவியங்களிலும் இந்த பகுதியில் சிதைந்து விட்டது ( மொத்தம் நான்கு சுவர் ஓவியங்களை வைத்து நாம் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம் ) . சோமஸ்கந்தர் பற்றிய நமது தொடரை வாசிக்கும் நண்பர்கள், பொதுவாக சோமஸ்கந்தர் வடிவங்களில் தரையில் ஒரு கூஜா இருப்பதை கவனித்து இருப்பார்கள். இதோ இந்த மலை கடற்கரை கோயில் வடிவம் போல

அதனால் அதை நமது ஓவியத்திலும் போட்டுவிட்டோம்.

அடுத்து பிரம்மா. ஒரே ஒரு ஓவியத்தில் மட்டும், அவரது உருவம் தெரிகிறது. ( இரு கைகளையும் கூப்பி அஞ்சலி முத்திரையில் அவரை காட்டவேண்டும். மூன்றாம் பாகத்தில் திருத்தி விடுவோம் )

எப்படி அவரது மற்ற முகங்களை காட்டுவது என்று யோசிக்க, புள்ளமங்கை பிரம்மா நினைவுக்கு வந்தார்.
.

அவரை முன்மாதிரியாக வாய்த்த இந்த பிரம்மன் படத்தை வரைந்தாயிற்று.

விஷ்ணு உருவத்திற்கு இந்த நிலை இல்லை. ஒரு ஓவியத்தில் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் எங்கள் பணி எளிதாயிற்று.

அடுத்து குழந்தை முருகன்.

முருகன் – அழகன். அதுவும் குழந்தை முருகன் என்றால் !! சரியாக வரவேண்டுமே.

அருகில் சென்று படங்களை பார்க்கும் பொது தான் நாங்கள் முதலில் நினைத்ததைப் போல ஆசனத்தின் கால்களில் சிங்க வடிவங்கள் இல்லை என்பது தெரிந்தது.

அடுத்து உமை.


ஈசன், இந்த வடிவத்தின் நடு நாயகன் – மிகவும் நேர்த்தியாக வரவேண்டும் என்பதால், இன்னும் கவனமாக படங்களை ஆராய்ந்தோம். குறிப்பாக அவர் கை முத்திரைகள். ( ஒரு குறிப்பு மிகவும் உதவியாக இருந்தது – அது என்ன வென்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்) . இடது மேல் கரம் இங்கே பாருங்கள்.

ஈசனின் மகுடம். நிறைய வேலைப்பாடுடன் இருந்ததால் மிகவும் கடினமாக இருந்தது.

குறிப்பாக மகுடத்தில் உள்ள ஒரு அணிகலன். இதுவரை நாங்கள் பார்க்காததாக இருந்தது. எனினும் அந்த வடிவம் நாம் முன்னரே எங்கோ பார்த்த வடிவம். அப்போது திரு நாகசாமி அவரது செப்புத்திருமேனி (Masterpieces of South Indian Bronzes)நூலில் ஒரு குறிப்பு கிடைத்தது. பல்லவர் கால செப்ப்புத்திருமேனி ஒன்றில் இரு மகர ஒப்பனை கொண்டு இந்த அணிகலன் உள்ளது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

ஆம், அதே நம் ஓவியத்திலும்.


இப்போது ஒரு அளவிற்கு நமது ஓவியம் வந்து விட்டது. இன்னும் சிறு சிறு அமைப்புகளை சரி செய்து வண்ணம் பூசினால் முடிந்து விடும்.

அதற்கு, அடுத்த இறுதிப் பதிவு விரைவில் பார்ப்போம்.

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் ஒன்று

தமிழ் நாட்டு ஓவியக்கலையின் மிக தொன்மையான பல்லவ ஓவியங்கள் இன்றும் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் இங்கும் அங்குமாய் சிதைந்த நிலையில் பார்க்க முடிகிறது. பார்த்த சில நொடிக்களிலேயே நம்மை சொக்க வைக்கும் அழகைக் கொண்ட இந்த ஓவியங்களைப் பார்க்கும் பொது ஒருபக்கம் பரவசமும் மறு பக்கம் பெரும் துக்கமும் வரும். பரவசம், ஆயிரத்திமுன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே தனது கலையில் இப்படி ஒரு உன்னத நிலையை நம் மண்ணின் கலைஞன் எட்டிவிட்டான் என்பதும், அவனது கலை காலத்தை வென்று இன்று வரை நின்றுள்ளது என்பதும். துக்கம், இங்கும் அங்குமாய் தெரிந்த சில கோடுகள், சில வண்ணங்கள், என்று நாம் இன்று காணும் இந்த ஓவியங்கள், அடுத்த தலைமுறை பார்க்க , பரவசம் அடைய இந்த அரிய பொக்கிஷங்களை , நம் குல தனங்களை, நிலைக்க வைக்க முடியுமா என்ற கேள்வி.

நம்மால் முடிந்தது – இன்றைய நிலையை அப்படியே படம் பிடித்து இணையம் மூலம் கருவூலம் அமைத்து பாதுகாக்கமுடியும். எனினும், எங்கோ மூலையில் ஒரு சின்ன ஆசை. இவை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி வண்ணங்களின் பிரதிபலிப்பாய் ஜொலித்திருக்கும் என மனக்கண்ணில் அப்படியே அவற்றை கற்பனை செய்து ரசிப்பது உண்டு, எனினும் அப்படி மனக்கண்ணில் கண்ட காட்சியை அனைவருடன் எப்படி பகிர்வது. பல்லவ சிற்பியுடன் போட்டி போட நமக்கு தேர்ச்சி இல்லை, தற்போது உள்ள கணினி தொழில்நுட்பம் கொண்டு படங்களை ஒற்றி எடுத்தும், ஒரு ஓவியம் கூட முழுவதுமாக இன்று நிலைக்க வில்லை. இது சாமானியன் செய்யும் வேலை இல்லை என்று புரிந்தது. இந்த கலை ரத்தத்திலேயே ஊறி போன ஒருவரால் மட்டுமே இவற்றுக்கு உயிர் கொடுக்க முடியும் என்று தெளிவாக தெரிந்து. ஓவியர் நண்பர்கள் யாரை சந்தித்தாலும் கோரிக்கை மனு கொடுத்து வைப்பேன்.

இப்படி இருக்கையில், தற்செயலாக நண்பர் ஒருவரின் ஓவியக் கண்காட்சி ஒன்றிற்கு சென்ற பொது, ஓவியர் மணியம் அவர்களின் வழித்தோன்றல் இருவரை சந்திக்க நேர்ந்தது. ஆம் அவர்தான், அமரர் கல்கியின் கதை காலத்திற்கு மெருக் ஏற்றி அற்புத ஓவியங்களை படைத்தவர். அவரது கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டு வந்தவர். திரு மணியம் அவர்களின் ஓவியங்கள் சில , அவரது மகன் திரு மணியம் செல்வன் அவர்களும் சிறந்த ஓவியர், அவரது ஓவியங்கள் சில ,ஆனால் நான் சந்தித்தது அவரது புதல்விகளை . புலிக்கு பிறந்தது பூனை யாகுமா. இருவருமே சிறந்த ஓவியர்கள். அப்படியே நின்றுக் கொண்டே பேசினோம், கல்கி , பார்த்திபன் கனவு , பொன்னியின் செல்வன் என்று போன உரையாடல் முடிவில் கோரிக்கை மனுவை நீட்டினேன். திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்கள் அவரது ஓவியங்கள் ,முயற்சி செய்து பார்ப்போம் என்று கூறினார்.

பணி மிகவும் கடினம், ஓவியங்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தன. நான்கு இடங்களில் உள்ள இதே வடிவம், ஒரு இடத்தில கூட முழுவதுமாக இல்லை. போதாத குறைக்கு என்னிடத்தில் நல்ல படங்களும் இல்லை. நண்பர்கள் இடத்தில கேட்டுப் பார்த்தேன், யாரிடத்திலும் எங்களுக்கு தேவைப்படும் அளவிற்கு பெரிய படங்கள் இல்லை.


இருப்பதை வைத்து, முதலில் வேலையை துவங்கினோம். நன்றாக வருமோ என்ற ஐயம் எழும் முன்னரே, உடனே வந்தது சுபாஷினி அவர்களின் முதல் பிரதி

சரியான இடத்தில தான் பணியை ஒப்படைத்துள்ளோம் என்று சொன்னது மனம். வாழை அடி வாழையாய் வந்த கலை, அவர்களது கையில் விளையாடியது . எனினும் மிக நேர்த்தியாக வரையவேண்டும் என்றால் நல்ல படம் சீக்கிரம் தேவை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொடிருந்த பொது, ஒரு இனிய அதிர்ச்சி. மே மாதம் தற்செயலாக தளத்தின் மூலம் உரையாடிய பத்தாம் வகுப்பு மாணவன் ஜகதீஷ், ஒரு மடல் அனுப்பினான். எனது காஞ்சி பயண புகை படங்கள் என்றது தலைப்பு. கூடவே,”ஹலோ அண்ணா , என்னை நினைவுள்ளதா, நான் ராஜகேசரி ( புனைப்பெயர் ) , சமீபத்தில் காஞ்சிபுரம் சென்றிருந்தேன் , அங்கு எடுத்த படங்கள் இதோ ”

உள்ளே, நான் தேடிக்கொண்டிருந்த படங்கள். உடனே தொடர்பு கொண்டு, முழு அளவில் படத்தை அனுப்பு என்று சொன்னவுடன் உதவினான் நம் தோழன், இந்த சின்ன வயதில் -வேலூர் பள்ளியில் இப்போது பதினொன்றாம் வகுப்பு படிக்கும் நம் ஹீரோ இதோ.

பல்லவ கலை, ராஜசிம்ம பல்லவனால் வளர்க்கப்பட்ட கலை, இன்று இந்த மாணவன் உதவியுடன் அடுத்த தலைமுறைக்கு செல்கிறது.

பிரம்மா

உமை

விஷ்ணு

நல்ல படங்கள் ஏன் தேவை பட்டன என்பதற்கு, கிழே இருக்கும் பூத கணம், மற்றும் பணிப்பெண் உருவங்களை கண்டு கொள்ள பெரிதும் உதவின.

ஆசனத்தின் கால்கள் சிங்க முகங்கள் போல சித்தரிக்க நினைத்தோம். ( மலை மகிஷாசுரமர்தினி மண்டபம் போல )

அடுத்து இன்னும் பல விவரங்களை எடுத்து ஓவியத்தை பூர்த்தி செய்ய ஆரம்பித்தோம்.

நன்றாக வருகிறது . இன்னும் பார்க்க ஆவலா ? பொறுமை, அடுத்த பதிவில் தொடரும் இந்த ஓவியம்.

மகாபலிபுரம், முற்றுப்பெறாத கவிதைகள் – திரு சு . சுவாமிநாதன் , படங்கள் – திரு அசோக் கிருஷ்ணசுவாமி

சுட சுட வருகிறது இந்த பதிவு . இதை விமர்சனம் என்று கண்டிப்பாக சொல்ல இயலாது. இது எனக்கு மல்லையின் அதிசயங்களை ரசனையுடன் கற்றுக்கொடுத்த ஒரு ஆசிரியரின் உழைப்பு , கருங்கல்லில் காவியங்கலாகிய இவற்றை பற்றிய விழிப்புணர்வு பலரை சென்று அடையவண்டும் என்று அயராது உழைக்கும் அவரது உயரிய எண்ணமே என்னையும் அந்த பாதையில் ஒரு சிறு காலடிகளை எடுத்து வைக்க தூண்டியது. அவர் மட்டும் அல்ல, நண்பர், புகை பட நிபுணர், கணினிக் கலை வித்தகர் அசோக் அவர்களது உழைப்பும் சேர்ந்து வெளிவரும் நூலின் அறிமுகம் இது.

ஒற்றைக் காலில் நின்று, கைகளை தலைக்கு மேல் தூக்கி கூப்பியவண்ணம் தவமிருக்கும் அந்த மனிதனின் நோக்கம் என்னவாக இருந்தாலும் சரி, கலைகளை ஆராயும் கலைஞனையும், வரலாற்று ஆராய்ச்சியாளனையும், உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து தேடல் மனம் கொண்டு ஒவ்வொரு இடமாக பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளையும் நிச்சயமாக கவர்ந்திழுத்திடுவான்.

தங்கள் உழைப்பு , இல்லை இல்லை தவத்தின் பயனே இந்த புத்தகம் என்பதை நமக்கு உணர்த்தவோ என்னவோ அந்த சிற்பத்தை அட்டைப் படமாகக் ஆசிரயர் தேர்ந்தெடுத்துள்ளார். . அட்டைப்படம் எப்படியோ அப்படியே அவர்கள் உருவாக்கிய இந்த நூல் மாமல்லபுரத்தின் கற்சிற்பங்களுக்கு உயிர் கொடுத்து நம் உணர்வோடு உறவாடவைக்கிறது. எவ்வளவோ படைப்புகள் மல்லையப் பற்றி வந்துவிட்டன, இன்னும் வந்து கொண்டேயிருக்கும், ஆனால் இந்த நூல் அங்கிருக்கும் அதிசயத்தை அப்படியே பிழிந்து சாறாக மனதில் ஏற்றுகிறது. இந்த நூலைப் பிரித்து பார்த்த உடனே நீங்கள் மல்லையின் அதிசயங்களுக்கிடையே பயணிக்க ஆரம்பித்து விடுவீர்கள். உங்களோடு முனைவர் திரு. சுவாமிநாதன் அவர்களின் ரத்தினச் சுருக்கமான விளக்கங்கள் திரு. அசோக் அவர்களின் புகைப்படங்களோடு மவுனமாய் அவற்றை விவரித்துக் கொண்டிருக்கும்.

நமது வரவேற்பரையில் இப்படியொரு நூல் இருக்க வேண்டும் என்பது நீண்ட நாளைய அவா! எத்தனையோ நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் இருந்தாலும் அவற்றை படித்து விட்டு மல்லை சென்று ஒவ்வொரு சிற்பங்களையும் இவற்றின் சிறப்பு இன்னது தானென்று அறிந்து அவற்றை இரசித்து விட்டு வருபவரின் எண்ணிக்கை மிகக் குறைவு. இந்தக் குறையைப் போக்க வந்ததே இந்த நூல். திரு நரசையா அவர்கள் சிறப்பான முன்னுரையில் இதுவரை மல்லை புதிர்களை ஆராய்ந்த பலரை நாம் மறக்காமல் நினைவு கோர வைக்கிறார். இது மல்லை செல்லும் ஒவ்வொருவருக்கும் நல்லத் துணையாக இருக்கும் அல்லது சென்று வந்த பின் மனதில் பார்த்து இரசித்த அதிசயங்களைப் பற்றி மேலும் அறிந்து கொண்டு அசை போட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்ல, பல்லவக் கலைச் சிற்பங்களில் மனதை பறி கொடுத்த எம் போன்ற இரசிகர்களுக்கு இந்த நூல் முழங்கையில் வடியும் மலைத்தேன்! மல்லைக் கற்களின் கலைச்செல்வங்களை இந்த நூலில் கண்டதும் நம் காதில் தானாகவே கேட்கும் அலை ஓசையும், உப்புக் காற்றின் ஈரமான ஸ்பரிசங்களும் தவிர்க்க முடியாதவை.

இந்த நூலைப் பார்த்ததும் ஏதோ வண்ண வாழ்த்து அட்டைகளின் அணிவகுப்பு என்று நினைத்து விடாதீர்கள்! மல்லையின் படைப்புகளை விளக்கும் இதை ஒரு ஆய்வு நூல் என்றும் கொள்ளலாம். ஆனால் மற்ற ஆய்வு நூல்களைப் போலன்றி கண்ணால் பார்க்கும் அனைத்தையும் மனதிற்கு எளிதில் புரிய வைக்கும் ஓர் வண்ணக் களஞ்சியம். ஒரு பக்கத்தில் விவரத்தை படித்துவிட்டு பரப்புடன் நூலின் பின்னால் இருக்கும் படங்களை தேடும் பனி இல்லை. முனைவர் மிகவும் சாமர்த்தியமாக பல்லவக் கலைகளை மிகவும் எளிமையாய் விளக்க, அசோக்கின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் பின்னிப் பிணைந்து கற்சிலையின் உருவத்தை உங்களின் மனதிற்கு உணர்வுகள் மூலம் எடுத்துச் செல்கிறது. ஒவ்வொரு புகைப்படமும் அதோடு இணைந்த சிறு விளக்கமும் உங்களது கவனத்தை ஈர்க்கத் தவறாது! பல்லவர்களின் பரந்த நிலப்பரப்பில் அவர்கள் படைத்த ஒவ்வொரு ஆரம்பகாலச் சிற்பங்களோடு, அவர்களின் திறம் தேர்ச்சியடைந்து வார்த்தெடுத்த மல்லையின் சிற்பங்களை உலகுக்கு காட்டும் முயற்சிக்கு உறுதுணையாய் இருந்த பதிப்பாளர்களுக்கு நன்றி உடையவர்களாகிறோம்.

ஒவ்வொரு பக்கத்தை படி(பார்)க்கும் பொழுதும் ஆசிரியரின் மகிழ்ச்சி ததும்பும் மனதையும், அந்த உணர்ச்சியால் விரிந்த விழிகளும் நம்மை மேலும் உற்சாகமூட்டும் இந்த நூல் நிச்சயம் நம் கண்களுக்கும் மனதிற்கும் நல்ல விருந்து. பாதிப் புத்தகத்தில் இருக்கும் பொழுதே மீண்டும் ஆரம்பத்தில் இருந்து படிக்கத் தூண்டும் ஆனால் அதற்குப் பின்னர்தான் அதிசயம் காத்திருக்கிறது என்பது எப்படி படிப்போருக்கு புரியும்! முதன் முறையாக மனதைக் கொள்ளை கொள்ளும் தர்மராச இரத்ததின் மேல் கட்டு சிற்பங்கள் முழுமையாக அசோக் அவர்களின் படைப்பாற்றலாலும், அவரது கருவிகளாலும், தொழில்நுட்பத்தின் உதவியுடனும் நம் கண்களுக்குள் புகுந்து மனதில் காதலை தோற்றுவிக்கின்றன. அதே போல் கோவர்த்தன கிரி சிற்பங்களும் பிற்காலத் தூண்கள் மறைந்து முழுமையாக மனதை இலயிக்க வைக்கின்றன. அது மட்டுமல்ல அதற்கு மேல் ஒரு படி சென்று ஆரம்பத்தில் சொன்ன தவத்தைக் காட்டும் சிற்பங்கள் இரண்டு பக்கங்களாக விரிந்து ஒவ்வொரு சிற்பத்தையும் சிறப்புரக் காட்டி அப்பப்பா சொல்லவே வார்த்தையில்லை! ஆனால் ஒன்று உறுதி இந்த நூலைப் பிரித்தால் உங்களால் படி(பார்)ப்பதை நிச்சயம் நிறுத்தமுடியாது அப்படியொரு பொருள் பொதிந்த பொக்கிஷம் இது.

அத்யந்தகாமனுக்கு ஒரு அற்புதமான அர்ப்பணிப்பு

விரைவில் கடைகளில் வந்து வெற்றி நடை போட எங்கள் அன்பு கலந்த வாழ்துக்கள்

மேலும் விவரம் பெற

ARKEY GRAPHICS
[email protected]
( இந்த நூல் ஆங்கிலத்தில் வந்துள்ளது. விரைவில் தமிழ் மற்றும் இதர மொழிகளிலும் வரவேண்டும் என்ற கோரிக்கை இங்கே வைக்கிறோம் )

இணையத்தில் உங்கள் பிரதியை வாங்க

இணையத்தில் வாங்க இங்கே சொடுக்கவும்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஒரு தனித்தன்மை வாய்ந்த நந்தி – மலையடிப்பட்டி சிவன் குடைவரை

புதுக்கோட்டை மாவட்டம், இயற்கை கொஞ்சம் எழில் என சொல்லிக்கொள்ள பச்சை ஆடை போர்த்திய வயல்கள் என்றெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை. எங்கும் ஒரே செந்நிறம், அதில் ஒரு பாதை. அதுவும் செந்நிறம் தான். மலையடிப்பட்டி நோக்கி காலை பத்து மணியளவில் சென்றுக்கொண்டிருந்தோம். திடீரென பாதை முடிந்தது. அருகில் சில வீடுகள். ஒரு புளிய மரம் – மரத்தடியில் ஒரு சிறு வால் பையன்கள் கூட்டம் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தது. அருகில் வயதாலும் நோயாலும் வளைந்து தனது கைத்தடியின் உதவியுடன் ஒரு பெரியவர். சற்று தொலைவில் ஒரு சிறு குன்று, அருகில் ஒரு தடாகம். ஆஹா, இவ்வளவு தொலைவு வெறும் செம்மண்ணையே பார்த்துக்கொண்டு வந்த நமக்கு இப்படி ஒரு ரம்மியமான இடமா ? மகேந்திரர் குடைவரைகள் இருக்கும் இடங்கள் போலவே உள்ளதே என்று மனதில் ஒரு எதிர்பார்ப்பு. ஆம், இங்கே இரண்டு குடைவரைகள் உள்ளன. ஈஸ்வரன் சிவனுக்கு ஒன்று பெருமாளுக்கு ஒன்று. அந்தப் பெரியவர் தான் இந்த இரு குடைவரைகளுக்கும் காவல். மாதத்தில் ஒரு நாள் மட்டுமே கூட்டம் வருமாம். மற்றபடி ஈ காக்கா இல்லை. நம்மை போல யாராவது தெரியாமல் வந்தால்தான் உண்டு. ஆனால் சலிக்காமல் திறந்து காட்டினார். அவரிடம் ‘நாங்கள் நிதானமாய் பார்ப்போம் . ஒரு இரண்டு மூன்று மணி எடுக்கும் !!. என்று சொல்லிவிட்டு ‘போய் சாப்பிட்டு விட்டு வாங்க’ என்று சொல்லிக் கொஞ்சம் பணம் தந்தோம்.அப்போது அவர் பழைய கால் சட்டை இருந்தால் கொடுங்கள் என்றார். ( பதிவை பார்த்துவிட்டு அங்கு செல்லும் நண்பர்கள் ஓரிரு பழைய சட்டைகள் எடுத்துசென்று கொடுங்கள்.புண்ணியமாகப் போகும்!!)

இந்த பதிவில் காலத்தால் முந்தைய – தந்தி வர்ம பல்லவ காலத்து சிவனின் முத்தரையர் குடைவரையை பார்ப்போம் ( அப்படிதான் இருக்க வேண்டும், ஏன் என்றால் அந்த காலத்தில் இந்த பகுதியை ஆண்ட அரசர்கள் முத்தரையர்கள்).

முதலில் உள்ளே இருக்கும் சிற்பாம்சம் – நந்தி.

அப்படி என்ன இந்த நந்தியின் சிறப்பு? நல்ல சிலை தான், எனினும் பல இடங்களில் இதுபோல கலையம்சம் பொருந்திய நந்திகளை நாம் பார்க்கிறோமே. இதன் சிறப்பு அதை செதுக்கிய சிற்பி அதனை ஆயிரம் ஆண்டுகள் அதே இடத்தில இருக்கும் படி செதுக்கியதுதான். என்ன, புரியவில்லையா.

மேலே படியுங்கள்.

முதலில் படத்தை கொஞ்சம் கணினியில் திருத்தி குடைவரை முகப்பு பின்னாளைய கட்டுமானங்களை விளக்கி பார்ப்போம்.

அடுத்து, இன்னும் அருகில் செல்வோம். வெறும் மண்டபம் தான் முதலில் காட்சி தருகிறது.

ஆனால் ,உள்ளே சென்று வலது புறம் திரும்பினால் சற்று நேரம் உள்ளே உள்ள இருளுக்கு நம் கண்கள் பழகும் வரை ஒன்றுமே தெரியவில்லை. இன்னும் சிறிது நேரம் கழிந்தவுடன் , ஆஹா என்ன அபாரம்.

ஈசனுக்கு எடுப்பித்த இந்த குடைவரையில் பார்க்க நிறைய உள்ளது. இடது புறம் கருவறை காவலர்கள் காவல் காக்க, அருமையான கருவறை, எதிரில் நமது நந்தி, ஒரு பக்கம் வீரபத்ரர் , விநாயகர் மறுபக்கம் இருக்க அழகிய சப்த மாத்ரிகா வடிவங்கள், இன்னொரு பக்கம் துர்க்கை, பெருமாள் என்று ….வரும் பதிவுகளில் பார்ப்போம்.

படத்தின் வலது புறத்தில் நமது நந்தி தெரிகிறதா? மீண்டும் கணினி கொண்டு தூண்களை விளக்கிவிடுவோம்.


இப்போது புரிகிறதா. நந்தி, நந்திமேடை – அனைத்தும் ஒரே கல் – அதுவும் தாய்பாறையில் செதுக்கியது. அந்த நாளில் இருந்த திறமை, ஒரு மலைப்பாறையை இப்படி குடைய, அதுவும் துளி கூட தவறுக்கே இடம் இல்லாத இடத்தில இப்படி ஒரு கடினமான சிலையை செதுக்க முயற்சிக்கும் தைரியம், அவன் திறமையில் அவனுக்கு இருக்கும் நம்பிக்கை – நம்மை பிரமிக்க வைக்கிறது.

இப்போது புரிகிறதா – இந்த நந்திக்கு ஏன் தனிச்சிறப்பு என்று


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

திருச்சி – கீழ்க் குடைவரை – “ஏன் சார், வேஸ்ட் பண்றீங்க. அங்கே பார்க்க ஒன்றும் இல்லை!!”.

ஐயப்பன் சீசன். கூட்டம் களை கட்டியது. நோ என்ட்ரி.. புதிர்களை தாண்டி மலைகோட்டை அடைவதற்குள் சூரியன் தனது அரைநாள் வேலையை முடித்து விட்டு மேலே நகர்ந்துக்கொண்டிருந்தான். முதல் படியிலேயே சண்டை – தேவஸ்தான அதிகாரியுடன் – கேமரா டிக்கெட் வாங்கியே ஆகவேண்டும் என்று அவர் ஒரே பிடியாய் நிற்க, நாங்கள் ஆசி குடைவரைகளை பார்க்க மட்டும் தான் போகிறோம் – அதற்க்கு சீட்டு தேவை இல்லை என்று வாதாடி தோற்றோம் ( எந்த ஆசி தளத்திற்குள் சென்று படம் எடுக்க கட்டணம் தர தேவை இல்லை. முக்காலி கொண்டு எடுக்க வேண்டும் என்றால் தான் பிரச்சினை ). வேண்டா வெறுப்பாக கட்டணத்தைக் கட்டி சீட்டை பெற்றுக்கொண்டு முதல் தளத்தை கடந்து இடது புறம் திரும்பினோம். உடனே அருகில் இருந்த உங்கள் நண்பன் – அவர்தான் நம்ப ஆட்டோ காரர் – ஒரு விதமாக பார்த்தார். அந்தப் பக்கம் உட்டு அடிக்க வந்தோம் என்று முதலில் நினைத்தாரோ என்னமோ. பின்னர், இது தப்பான வழி. அப்படி போ என்றார். சுற்றி பார்த்தோம் – அறிவு ஜீவிகள் – பேர் பலகையில் முழு பக்கம் வரைந்து வைத்துள்ளனர். அதுவும் பல்லவர் குடைவரை செல்லும் வழி என்று ( பெரும்பாலான அறிஞர்கள் இந்தக் குடைவரை பாண்டியர் குடைவரை என்று கருதுகின்றனர் ). எனினும் அவர் விட வில்லை. எங்கே சார் போகணும் என்றார். குடைவரைக்கு என்று சொன்னோம். ”ஏன் சார், வேஸ்ட் பண்றீங்க. அங்கே பார்க்க ஒன்றும் இல்லை. மேலே போங்க!” என்றார்.

அதை பார்க்கத்தான் வந்தோம் என்றவுடன்,எதோ புழு பூச்சியை சாப்பிட்டது போல ஒரு எக்ஸ்பிரஷன் காட்டி மீண்டும் பீடியை ஊத ஆரம்பித்தார். ஒரு நூறு அடி நடந்ததும் எங்களுக்கே ஒரு கலக்கம். இது சரியான வழியா என்று. நல்ல வேளை, வீடுகளின் நடுவில் ஒரு சின்ன குறுக்கு பாதை மலையை நோக்கி சென்றதை கண்டு அதனுள் விரைந்தோம். பத்து அடி சென்றவுடன்….எதிரே பிரம்மாண்டம்.

அப்படியே பெரிய மலையின் அடியில் எப்படித்தான் இடம் பார்த்து இப்படி குடைந்தார்களோ. பாறையும் அதன் அடியி உள்ள குடைவரையும் கண்ணைப் பறித்தன. அங்கே அலை மோதிய கூட்டம், ஆனால் இங்கே ஈ காக்கா இல்லை. சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்தனர் ( சிற்பத்தின் கால்கள் தான் ஸ்டம்ப்_. ஆசி நபர்கள் இருவர் இருந்தனர்

மலையை ஆழமாக்க குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை. வெளித் தூண்களே எப்படி உள்பக்கமாக இருக்கின்றன பாருங்கள்.

தூணைப் பார்த்தவுடனேயே சந்தேகங்கள் – இது பல்லவ தூண் மாதிரி இல்லையே. அருகே ஆசி பலகை – இது மாமல்லர் காலம் என்று அடித்துச் சொன்னது 640 to 670 AD.

நீள்சதுர வடிவில் இருக்கும் குடைவரையின் இரு பக்கங்களில் இரு அர்த்த மண்டபங்கள் வெட்டப்பட்டுள்ளன. உள்ளே கர்ப்பக்கிருஹம் – ஒன்று சிவனுக்கு,மற்றொன்று பெருமாளுக்கு. இரண்டு கருவறைகளுக்கும் கருவறை காவலர்கள், மற்றும் அர்த்த மண்டபத்துக்கும் இரு வாயிற் காவலர்கள் – என்று மொத்தம் எட்டு வாயிற் காப்போன் சிலைகள் உள்ளன !! ( ஒவ்வொன்றாக அடுத்த பதிவில் பார்ப்போம்)

பின் சுவரில் சிற்பி தனது முழு திறனையும் காட்டி – விநாயகர் ( மாமல்லர் காலத்தில் விநாயகர் சிற்பமா?) , நான்முகன், முருகன், சூரியன் மற்றும் துர்க்கை சிற்பங்கள் உள்ளன.

ஒவ்வொன்றாக வரும் பதிவுகளில் அவற்றை பார்ப்போம். ஆசி ஓவியர் சிற்பங்களை வரைந்துக்கொண்டிருந்தார். ( கரும்பு கடிக்க கூலி வேணுமா – நமக்கு )

ஏனோ அந்த ஆட்டோ காரர் சொன்ன “ஏன் சார், அங்கே வேஸ்ட் பண்றீங்க. அங்கே பார்க்க ஒன்றும் இல்லை ” என்ற வார்த்தைகள் இப்போதும் வலித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் அறியாமை தமிழகத்தில் இப்படியும் இருக்கலாகுமோ…


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவ சோமாஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – ஆறாம் பாகம் – மல்லை மகிஷாசுர மர்த்தினி மண்டபம்

இன்றைக்கு நாம் மல்லையில் இன்னொரு அற்புத புடைப்பு சிற்பத்தை பார்க்கப் போகிறோம் – மல்லை மகிஷாசுர மர்த்தினி மண்டபம் . நாம் முன்னரே இங்கு சென்று அங்குள்ள இரண்டு அற்புத சிற்பங்களை பார்த்தோம் – மகிஷாசுர மர்த்தினி சிற்பமும், சேஷ சயன பெருமாள் சிற்பமும். பொதுவாக அங்கே செல்வோர் இவ்விரு சிற்பங்களையும் பார்த்து விட்டு திரும்பிவிடுவர் – கர்ப்பக் கிருஹத்தில் உள்ள அற்புத சோமஸ்கந்தர் வடிவத்தை பார்க்க மறந்துவிடுவர். இது இயற்கை..

பல்லவர் சோமஸ்கந்தர் வடிவங்களில் இதுவே மிகவும் பெரியது. முழு கருவறை பின் சுவரை ஆக்ரமிக்கும் பிரம்மாண்ட வடிவம். மகேந்திர பல்லவர் குடைவரைகளில் சோமஸ்கந்தர் வடிவங்கள் இருப்பதில்லை என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

இந்த சிற்பத்தை ஆராய்வதற்கு முன்னர், சிலவற்றை நாம் தெரிந்துக் கொள்வது முக்கியம். மல்லை சிற்பங்களை சுற்றி பல புதிர்கள் உள்ளன. பல்லவர் காலம் என்று பொதுவாக கொண்டாலும், எந்த பல்லவ அரசனின் காலத்தில் எந்த எந்த இடங்கள் உருவாகின என்பது இன்றும் பல வல்லுனர்களை குழப்பத்தில் ஆழ்த்தும். இந்த புதிரை நீட்டிக்கும் குடைவரைகளில் இந்த குடைவரையும் ஒன்று. விடை தேட இங்கே கல்வெட்டுகள் எதுவும் இல்லை. மேலும் பல குழப்பங்களை உள்ளடக்கும் இந்த மண்டபத்தை நாம் இந்த சோமஸ்கந்தர் வடிவத்தின் காலத்தை மட்டும் வைத்து ஆய்வு செய்வோம். இதை ஒப்பிட நமக்கு உதவுவது மல்லையில் ராஜ சிம்ஹன் கல்வெட்டுகளை கொண்ட கடற்கரை கோயிலில் உள்ள சோமஸ்கந்தர் வடிவம். இதில் ஏது முந்தையது – ஏது பிந்தைய கால வடிவம் என்ற கேள்விக்கு மட்டும் விடை தேடும் பதிவு இது.

முதல் பார்வையில், இரண்டுமே ஒரே வடிவமாக தெரியும். இன்னும் நுணுக்கமாக பார்க்க இரண்டு சிற்பங்களையும் பக்கத்தில் வைத்து , குறிப்புகள் இட்டு பார்ப்போம்.

எதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்பதை விளக்கும் படம் இதோ.

என்ன அருமையான வடிவம். குழந்தை குமரனின் வடிவம் – அப்படியே அமர்ந்த வடிவில் நம்மை கண்டு தாவும்படி, சற்றே திரும்பி, வலது கையால் குமரனை அணைத்து , இடது கையில் சாய்ந்து நளினமாக அமர்ந்திருக்கும் உமையம்மை, கம்பீரமாக சுஹாசனத்தில் ஈசன் – பின்னால் விஷ்ணு, பிரும்மா – அருமை (உமைக்கு மேல் சாமரம் !!)


இரண்டு வடிவங்களுக்கும் வித்தியாசம் – அவர்கள் அமர்ந்திருக்கும் அரியணையின் கால்கள் – கடற்கரைக் கோயில் வடிவத்தில் கால்கள் வெறுமனே இருக்கும் . ஆனால் இவை இங்கு சிங்க வடிவத்தில் செய்யப்பட்டுள்ளன. காலுக்குக் கீழே இங்கே நந்தி வந்து விட்டது. ( நரசிம்ம பல்லவர் காலத்தில் பல்லவர் கொடி நந்தியில் இருந்து சிம்மத்திற்கு மாறியது !! இதே போல பல்லவ தூண்களும் மாறின – அவற்றை இன்னொரு பதிவில் பார்ப்போம் ) – மேலும் உமையம்மை காலுக்கு அடியில் இருந்த சொம்பு மாறி இங்கே ஒரு பெண் பக்தை இருக்கிறாள்.

சரி, மீண்டும் கேள்விக்கு வருவோம். இரண்டு உருவங்களில் ஏது பழையது. இன்னும் ஆராய்வோம்.

ஈசனின் அலங்காரம் எல்லாம் ஒன்றே போல தான் உள்ளது.

இரண்டு சிற்பங்களிளும் வெளித் தோற்றதில் ஒன்றே போல இருக்கின்றன. ஆடை , அணிகலன் உட்பட. இன்னும் ஒரு முறை ஒன்றுக் கொன்று அருகில் வைத்து பார்ப்போம். ஈசனின் இடது காலை கவனியுங்கள். கடற்கரை கோயில் வடிவத்தில் – அது மேல் இருந்து கீழே ஈசனின் நடுவே ஒரு கோடு போட்டால் அப்படியே அது நடுவில் வருகிறது. ஆனால் இந்த குடவரையில் அது சற்று நகர்ந்து, நந்தி உள்ளே வர வழி விட்டு , சற்று தள்ளி வந்துள்ளது.

இன்னும் சரியாக விளக்கு கணினி கொண்டு இரு உருவங்களையும் இணைத்து பார்ப்போம். நந்தி உள்ளே வர கால் எப்படி அழகாக நகர்கிறது பாருங்கள்.

இவற்றை கொண்டு பார்த்தால், மகிஷாசுர மர்த்தினி மண்டப சிற்பம் கடற்கரை கோயில் வடிவத்தை ஒத்தது. அந்தக் கோயில் கட்டப்பட்ட காலத்திலோ அல்லது அதற்கு பிறகோ தான் வடிவமைத்திருக்க வேண்டும்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment