சிவப்புரம் ​சோமாஸ்கந்தர் – ​சொல்லப்படாதக் கதை

இந்தத் தலைப்​பு பலருக்கும் ஆச்சரியத்தைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை. ஏ​னெனில்​ சிவப்புரத்தின் பிரசித்தி பெற்ற தலைப்பு சிவப்புரம் நடராஜர் – ஒரு வே​ளை தலைப்பைத் தவறாக இட்டிருக்கிறேனோ என்று தோன்றக்கூடும். இல்லை, இன்று நீங்கள் காணப்போவது அதேக் கோவிலின் மற்ற ​வெண்கலச்சிலைகள் பற்றிய கதை – யாருக்கும் சொல்லப்படாதக் கதை. ​தொன்மையான பொருட்களைத் திருப்பித் தருவது பற்றிய முக்கியத் தீர்ப்பின் இருண்ட பக்கங்கள் அவை.

புகழ் வாய்ந்த சிவப்புரம் நடராஜர் வழக்கைப் பற்றி கூகிள் மூலம் சுலபமாக அறியலாம். அதன் சாராம்சம் இ​தோ:

1951: சிவப்புரம் கோவிலின் புனரமைப்புப் பணிகளின்போது நடராஜருடன் கூட மேலும் 5 ​வெண்கலச்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்திய டி​​​ரெஷர் ட்​ரோவ் ஆக்டின்படி (Indian Treasure Trove Act) அவை அக்கோவிலுக்குத் திருப்பியளிக்கப்பட்டன. (அதன் உரி​மை மாநில அரசிடம்)

“1951-இல் தஞ்சாவூர் சிவப்புரத்தைச் ​சேர்ந்த அன்னமுத்து படையாச்சி புதையுண்டிருந்த நடராஜர், திருஞானசம்பந்தர், ​சோமாஸ்கந்தர், பிள்ளையார் மற்றும் இரண்டு அம்மன் சிலைகளைத் தன் நிலத்திலிருந்து எடுத்தார்.”

தஞ்சாவூரின் மாவட்ட ஆட்சியாளர் அந்த ஆறு சிலைகளையும் சிவப்புரம் ஸ்ரீ சிவகுருநாதசுவாமி​ கோவிலில் ஒப்ப​டைத்தார் (G.O. Ms. No. 2987/Revenue Department dated 29-10-1953)”

1954-56: ​அந்தச் சிலைகளை சீர் செய்ய அ​வை உள்ளூர் ஸ்தபதியிடம் அளிக்கப்பட்டன. அங்​கே​போலிகள் உருவாக்கப்பட்டு, கண்​டெடுக்கப்பட்ட தொன்மையான சிலைகள் திருடப்பட்டன.

கோவிலின் தர்மகர்த்தாக்கள் அந்தச் சிலைகளைப் பழுது பார்க்க விரும்பி அந்தப் பணியை கும்பகோணத்தைச் சேர்ந்த ராமசாமி ஸ்தபதியிடம் 1954 ஜூன் மாதத்தில் ஒப்புவித்தனர். 1956ஆம் ஆண்டு குத்தாலத்தைச் சேர்ந்த திலகர் மற்றும் அவனது சகோதரன் தாஸ் இருவரும் தொன்மை வாய்ந்த நடராஜர் மற்றும் 5 சிலைக​ளையும் தங்கள் வசம் தந்துவிடும்படியும் அவற்றிற்குப் பதிலாக ​போலியான சிலைகளை​ செய்துவிடும்படியும் தூண்டினர். திலகர் அந்த உண்மையான நடராஜர் சி​லை​யை தாஸின் ஏற்பாட்டின்படி பம்பாயைச் சேர்ந்த லான்ஸ் ​டேன் எனும் க​லைப்​பொருள் ​சேகரிப்பானிடம் அளித்தான். அவர் அச்சிலையை 10 ஆண்டுகள் தன்னிடம் வைத்திருந்தார்.

1963: ஒரு முக்கிய குறிப்பு மற்றும் நிகழ்ச்சி – அதைப் பற்றி பிறகு காண்போம்.

1965: பிரிட்டிஷ் மியூசியத்தைச் சேர்ந்த டாக்டர் டோக்லாஸ் பாரட் ​கோவிலுக்கு வருகைத் தருகிறார். அந்தச் சி​லைப் ​போலியானது என்று குற்றஞ்சாட்டி தனது புத்தகத்திலும் பதிவு செய்கிறார். மேலும் அசலான சி​லை பம்பா​யைச்​ சேர்ந்த வணிகரிடம் இருந்த​தையும்​ வெளிப்படுத்துகிறார்.

பிரிட்டிஷ் மியூசியத்​தைச் சேர்ந்த டாக்டர் டோக்லாஸ் பாரட் தனது ​தென்னிந்திய வெண்கலச் சிலைகள் எனும் புத்தகத்தில் சிவப்புரத்திலுள்ள நடராஜர் சி​லை​ ​போலியானது என்றும் அசல் சிலை ஒரு தனியார் க​லைப்​பொருள் ​சேகரிப்பானிடம் உள்ளது என்றும் கூறுகிறார். Tr.P.R. ஸ்ரீனிவாசன் (மியூசியத்தின் மேற்பார்வையாளர்) உட​னே மியூசியத்தின் இயக்குநருக்கும் தமிழக அரசிற்கும் எச்சரிக்​கை​ செய்தார். இதன்​பேரில் நடந்த விசாரணையின் விளைவாக நாச்சியார் ​கோவிலில் ஒரு வழக்கு பதிவு ​செய்யப்பட்டது.

P.S.Cr.No.109/69 U/S 406 IPC. குற்றப் புலனாய்வுத் து​றை தனது புலனாய்​வை மேற்கொண்டது.

1967: நடராஜர் சிலை போமன் ​பெஹ்ரம் எனும் பம்பாயைச் சேர்ந்த கலைப்​பொருள் சேகரிப்பாளரின் வசம் வந்தது. அவர் அதனை நியூயார்க்​கைச் ​சேர்ந்த க​லைப்​பொருள் வணிகர் பென் ஹெல்லருக்கு விற்றார்.

லான்ஸ் டேன் 10 ஆண்டுகள் சிலையைத் தன்னிடம் வைத்திருந்து பின் பம்பாயைச் சேர்ந்த​போமன் பெஹ்ரமிற்கு விற்றார். அவர் அதனை மெனு நரங்கிடம் விற்றார். பிறகு 1969இல் நியூயார்க்​கைச் சேர்ந்த பென் ஹெல்லர் 6 லட்சம் ரூபாய் கொடுத்து அதனை வாங்கி நார்டன் ​சைமன் ஃபவுண்​டேஷனுக்கு 9 லட்சம் அ​மெரிக்க டாலருக்கு விற்றார்.

1973: பென் ஹெல்லர் அந்தச் சிலையை நார்டன் ​சைமன் ஃபவுண்டேஷனுக்கு 9 லட்சம் அ​மெரிக்க டாலருக்கு விற்றார்.

1973: நியூயார்க்கில் உள்ள ​மெட்ரோபொலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட் (MET) எனும் கலைப்பொருள் அருங்காட்சியகம், நார்டன் சைமன் ஃபவுண்டேஷனுடைய இந்தியக் க​லைப் ​பொருட்க​ளைக்​ கொண்டு ஒரு கண்காட்சி நடத்தத் திட்டமிட்டது. அதையொட்டிய விளம்பரத்தின் மூலமாக இந்திய அரசு அச்சி​லை அ​மெரிக்காவில் இருப்பது குறித்து அறிந்து ​கொண்டது. கடத்தப்பட்ட தொன்பொருளை இந்திய அரசு முதன்மு​றையாகக் கண்டுபிடித்தது. உடனே அந்த மியூசியத்திற்கு இந்திய அரசு ஆட்​சேபம்​தெரிவித்து ஒரு கடிதம் எழுதியது. மேலும், அ​மெரிக்காவின் மாநிலத்துறையின் உதவியுடன் அந்தக் கண்காட்சி​யைத் தடை செய்தது.

1973: ​மேலும் சீர் ​செய்ய நடராஜர் சிலை ​பிரிட்டிஷ் மியூசியத்திற்கு அனுப்பப்பட்டது.

1973: இந்திய அரசு அச்சிலையை திருப்பிக் கொடுக்கக் கோரி லாஸ் ஏஞ்சல்சிலும் (நார்டன் சைமன் ஃபவுண்டேஷனின் இருப்பிடம்) நியூயார்க்கிலும் (பென் ஹெல்லரின் இருப்பிடம்) வழக்குப் பதிவு செய்தது. மேலும் இந்திய அரசு இங்கிலாந்து அரசிற்கு அரசியல்​ நெருக்கடி தரவும், அச்சிலையை ஸ்காட்லேண்டு யார்டு தன் வசம் கொணர்ந்தது. நார்டன் சைமன் ஃபவுண்டேஷன் இந்தியாவிற்கு நடராஜர் சிலையின் மீது எந்த உரி​மையும் இல்​லை​யெனக் கூறிஅத​னைத் திருப்பித் தர மறுத்தது.

1975: நீதிமன்றத்தின் ​வெளியே ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு ஏதுவாக ஒரு வருடகாலத்திற்கு இந்தியா தானாக​வே இந்த வழக்கி​னை நிறுத்தி ​வைத்தது.

1976: நார்டன் சைமன் ஃபவுண்டேஷனும் இந்திய அரசாங்கமும் நீதிமன்றத்திற்கு ​வெளியே மத்யஸ்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரு தீர்மானத்திற்கு வந்தன.

இந்தியாவில் ​வெளியான ​செய்திகள் இங்​கே தடிமனான எழுத்துகளில் உள்ளன:

லான்ஸ் ​டேன், திலகர், தாஸ், ராமசாமி ஸ்தபதி ஆகி​யோ​ரை ஒரு பிரத்​யேகக் குழு ​கைது ​செய்தது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் அப்​பொழு​தைய DIG திரு. Tr.S. கிருஷ்ணராஜ் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் ​சென்று சி​லை கடத்தலுக்கான ஆதாரங்க​ளை ​சேகரித்தார். ஸ்காட்லாண்டு யார்டு நடராஜர் சி​லை​யை நார்டன் ​சைமன்ஃபவுண்டேஷன் லண்டனில் உள்ள திருமதி. ஆனா ப்லெளடனுக்கு பழுது பார்க்க அனுப்பிய​தை அறிந்து அத​னைக் ​கைப்பற்றியது.

இந்திய அரசாங்கம் நடராஜர் சி​லை​யைத் திரும்பப் ​பெற நார்டன்​ ​சைமன் ஃபவுண்டேஷனுக்கு எதிராக இங்கிலாந்து, நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களில் வழக்குப் பதிவு ​செய்தது. ​சென்​னை​யைச் ​சேர்ந்த திரு. KK ராஜ​சேகரன் நாயர் IPS, IGP (Crime), சி​லை​யைத் திரும்பப் ​பெற​ வெளியுறவு அ​மைச்சகத்​திடம் விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசிற்கு கடிதம் எழுதினார். புது தில்லியில் உள்ள​ இந்தியத் தொல்​பொருள் ஆய்வகத்தின் ​டைரக்டர் ​ஜெனரல் டாக்டர் MS நாகராஜ ராவ் வாஷிங்கடனில் உள்ள இந்திய தூதரகத்திடமிருந்து அச்சி​லை​யைப் ​பெற்றுக்​கொண்டார். தற்​போது அந்த நடராஜர் சி​லை ​சென்​னை, மயிலாப்பூர் கபாலீசுவரர்​ ​கோவிலின் பாதுகாப்பான ​பெட்டகத்தில் உள்ளது. குற்றஞ்சாட்டப்பட்​டோர் அ​னைவரும் ​கைது ​செய்யப்பட்டு தண்ட​னையளிக்கப்பட்டது.

மற்ற சி​லைக​ளைப் பற்றி தகவல் ஏதும் இல்​லை.

இங்கு தான் சுவாரசியமான விஷய​மே உள்ளது. மற்ற 5 ​வெண்கலச் சி​லைகள் என்னவாயின?

“1951-இல் தஞ்சாவூர் சிவப்புரத்தைச் ​சேர்ந்த அன்னமுத்து படையாச்சி புதையுண்டிருந்த நடராஜர், திருஞானசம்பந்தர், ​சோமாஸ்கந்தர், பிள்ளையார் மற்றும் இரண்டு அம்மன் சிலைகளைத் தன் நிலத்திலிருந்து எடுத்தார்.”

​மே​லே குறிப்பிட்டுள்ள 1963ஆம் ஆண்டு நி​னைவிலுள்ளதா? இந்த வருடத்தில்தான் திரு. PR ஸ்ரீநிவாசன் அவர்கள் தனது​ “தென்னிந்திய ​வெண்கலச் சி​லைகள்” எனும் மிகச் சிறந்த புத்தகத்​தை ​ வெளியிட்டார். (Bronzes of South India – P.R. Srinivasan (F.E. 1963, L.R. 1994)

அதிர்ஷ்டவசமாக அவர் நடராஜர் சி​லை​யை மட்டுமில்லாமல் ​சோமாஸ்கந்தர் சிலையையும் புகைப்படம் எடுத்திருந்தார். ​மேலும் அந்தச் சி​லைகள் சிவப்புரம் ​கோவிலில் வழிபடப்படுப​வை என்று இடத்​தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இ​தோ இங்குள்ள படத்​தைப் பாருங்கள். நார்டன் ​சைமன் மியூசியத்தின் ஒரு காட்சிப்பொருள் – இது 20 டிசம்பர் 2008 ​தேதியிட்ட flickr படமாகும்.

இக்க​லைப் ப​டைப்பின் பிறப்பிடத்​தை கீழுள்ள தகடு அறிவிப்பது மிக சுவாரசியமானது.

ஒரு சாதாரண மனிதனுக்குக்கூட இந்த ஒப்பீடு எளிதில் விளங்கும்.

​மேலும் சற்று கூகிளாரின் உதவி​யைப் ​பெற்​றோமானால் அ​தே அருங்காட்சியகத்தில் 1972 மற்றும் 1973 ஆண்டுகளில் ​சேர்க்கப்பட்ட க​லைப்​பொருட்கள் எ​வையெவை என்பது நம் கவனத்​தை ஈர்க்கக்கூடிய​வை.

அதே சோமாஸ்கந்தர் ஆனால் பெயர் பலகை இல்லை.

மேலும் சில திருமேனிகள் அங்கே உள்ளன

திருஞானசம்பந்தர்

பார்வதி

பிள்ளையார்

“1951-இல் தஞ்சாவூர் சிவப்புரத்தைச் ​சேர்ந்த அன்னமுத்து படையாச்சி புதையுண்டிருந்த நடராஜர், திருஞானசம்பந்தர், ​சோமாஸ்கந்தர், பிள்ளையார் மற்றும் இரண்டு அம்மன் சிலைகளைத் தன் நிலத்திலிருந்து எடுத்தார்.”

இந்த வழக்​கைப் பற்றியத் தகவல்கள் மாநிலத்தின் வலைத்தளத்தில் இவ்வாறு முடிகிறது – “குற்றஞ்சாட்டப்பட்​டோர் அ​னைவரும் ​கைது ​செய்யப்பட்டு தண்ட​னையளிக்கப்பட்டது. மற்ற சி​லைக​ளைப் பற்றி தகவல் ஏதும் இல்​லை.”

நீதிமன்றத்தின் ​வெளி​யே ஏற்கப்பட்ட ஒப்பந்தத்தின் நிபந்த​னைகள் என்ன? அதிலும் இவ்வாறு கூறிய ஒருவருடன்:

நியூயார்க் ​டைம்ஸ் பத்திரிக்​கையில் நடராஜர் சி​லை குறித்து ​சைமன் கூறியதாவது: “ஆமாம்! அது கடத்தப்பட்டதுதான். கடந்த 2 ஆண்டுகளில் ஆசிய க​லைப்​பொருட்க​ளைப் ​பெற 15 முதல் 16 மில்லியன் டாலர் வ​ரை ​செலவழித்திருக்கி​றேன். அவற்றில் அ​நேகப் ​பொருட்கள் கடத்தப்பட்டவையே.”

தனது து​ணை​யையும், மக​னையும், பக்த​னையும் தனி​யே விட்டுச் ​சென்றா​ரோ நடராஜர்!!!

வாசகர்களின் கவன ஈர்ப்புக்கு கீழ்க்கண்டதைக் கொண்டு வருகிறோம். பொதுவாகவே இந்த தொல்சிற்பங்கள், அதை வாங்கி ஏலம் போடும் உலகளாவிய நிறுவனங்கள், அவைகளை பொருட்காட்சியாக்கும் மியூசியங்கள் பற்றிய தகவல்கள் மிகவும் எச்சரிக்கையாகக் கையாளவேண்டும். தவறான போக்கு எனத் தெரியும்போது இவர்கள் மீது நாம் எளிதாக குற்றம் சாட்டிவிடலாம். அதேசமயத்தில் இந்த விஷயத்தில் உள்ள உணர்ச்சிமயமான விஷயங்களைக் கூட கவனிக்கவேண்டும். ஆகையினால் இந்தப் பதிவு மிகக் கவனமாகக் கவனிக்கப்படவேண்டும். இங்கு நாம் யாரையும் குற்றம் குறை சொல்ல வரவில்லை. அது நம் நோக்கமும் அல்ல. அதே சமயத்தில் உண்மை என்பது எங்கு மறைத்துவைக்கப்பட்டாலும் அது தெரியப்படும்போது, அதனை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம். மேலே சொன்னபடி இந்த சிற்பங்கள் மிகத் தொன்மையானவைதான். மிகுந்த செல்வச் சிறப்பு பெற்றது கூட. அதே சமயத்தில் தெய்வத்தின் மறு உருவாகப் பார்க்கப்பட்டு வணங்கப்பட்டது கூட என்பதையும் நினைவில் நிறுத்திப் பார்க்கவேண்டும். தற்சமயம் நூற்றுக்கணக்கில் இந்த தொல் சிற்பங்கள் நமது ஊரிலேயே மியூசியத்து கோடவுனில் கிடத்தப்பட்டு கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அவைகளை உரிய இடத்தில் ஒப்படைத்தால் அவைகளின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படலாம் என்ற அச்சம் இருக்கிறது என்பது உண்மையும் கூட. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட சிறந்த நிபுணர் குழு ஒன்று அமைத்து இதற்கு சரியான தீர்வு காண்பதே வழியாகும் என்பதே எம் கூற்று.

Ref:

https://plone.unige.ch/art-adr/cases-affaires/nataraja-idol-2013-india-and-norton-simon-foundation-1/case-note-2013-nataraja-idol-2013-india-and-norton-simon-foundation/view

http://www.forbes.com/2004/05/25/cx_0525conn.html|Forbes

http://www.tneow.gov.in/IDOL/judgement.html


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஆதி தம்பதியினரிடையே இருந்த பரஸ்பரம்

முதலில் கொட்டும் மழையின் நடுவில் லண்டன் பேருந்து ஓட்டுனரிடம் அருங்காட்சியகம் போக வழி கேட்டது பெரிய தவறு. அன்றோ ஏதோ சாலையில் மராமத்துப் பணி நடக்கின்றதால் (அங்கும் !!!) பல சாலைகள் டைவேர்சண் வேறு – கூடவே சுமைதாங்கி போல முதுகில் புதிதாக வாங்கிய கிரிக்கெட் மட்டை வேறு. நட்ட நடு காட்டில் கண்ணை கட்டி விட்டது போல எங்கோ ஒரு இடத்தில இறக்கி விட்டுவிட்டு பேருந்து தன பாதையில் சென்று விட்டது. இங்கும் அங்கும் சுற்றி நாலு பேரிடம் வழி கேட்டு அவர்கள் தங்கள் பங்குக்கு நாலு பக்கம் வழி காட்டினர். முடிவில் செலவை பார்க்காமல் கைபேசியின் ஜி பி எஸ் மூலம் பார்த்து சென்றால் அது வேறொரு அருங்காட்சியகம் (Museum of London)!! நான் செல்ல வேண்டியது – British Museum!!.

மீண்டும் பேருந்து மற்றும் ரயில் பயணம் . முடிவில் பிரம்மாண்ட தோற்றத்துடன் இருந்த அருங்காட்சியகத்தை அடைந்தேன். வாயிலிலேயே தொல்லை – வாயிற் காப்போன் முதுகில் ”அது என்ன” என்று கேட்டான். முடிவில் தனது இத்தனை வருட சர்வீசில் பல வினோத மனிதர்களை பார்த்ததாகவும் ஆனால் இன்று தான் கிரிக்கெட் மட்டையுடன் அருங்காட்சியகம் வந்த ஒருவரை சந்திப்பதாக கூறி உள்ளே செல்ல அனுமதி கொடுத்தான். ஆனால் அன்று அவர்களுடன் எனது மோதலுக்கு இது ஒரு துவக்கம் தான். நாள் முழுவதும் அரைமணிக்கு ஒரு முறை அருங்காட்சியக காப்பாளருடன் சண்டை. எதற்கு…மேலே படியுங்கள்.

செப்புத் திருமேனிகள் நிறைந்த அறை என்றவுடன் அங்கேயே உட்கார்ந்து விட்டேன். அதுவும் இந்த சிற்பம்..

shiva+parvathi

பெயர் பலகை 11th C CE என்றது , அதுவும் சிவ பார்வதி கல்யாணம் – அதாவது கல்யாண சுந்தர மூர்த்தி என்றது. நாம் முன்னரே இந்த காலத்து சோழ கல்யாண சுந்தர முர்த்தி பார்த்தோம். நீங்களே ஒப்பிட்டு பாருங்கள்.

முதலில் இந்த சிற்பம் சோழர் சிற்பத்தில் மூன்றில் ஒரு பங்கு தான் உயரம், உடல் தோற்ற்றம், முக பாவம் அனைத்தும் பதினோராம் நூற்றாண்டு சோழர் சிலைகளை போல நறுக்கென்று இல்லாமல் இருப்பது தெரிகிறது. புகழ் பெற்ற பல்லவர் கால வடக்களத்தூர் கல்யாண சுந்தர மூர்த்தி சிலையின் நல்ல படங்கள் கிடைத்தால் நன்றாக ஒப்பிடலாம். என்னை பொறுத்த மட்டில் இந்த சிலை கண்டிப்பாக 9th C CE இருக்க வேண்டும்.

பார்வதியின் கழுத்தில் இருக்கும் தாலி போன்ற அணியை நாம் இதுவரை பார்த்ததில்லை. மேலும் கல்யாண சுந்தர மூர்த்தி வடிவங்களுக்கே உரியதான ’கைப் பிடித்தல்’ இல்லாததால் இதனை நாம் ஆலிங்கன முர்த்தி என்றே அழைக்க முடியும்.

செப்புத்திருமேனியின் அழகை முழுவதும் ரசிக்க முன்னழகு மட்டும் அல்ல, பின்னழகும் பார்க்க வேண்டும் என்று கூறுவார். அருங்காட்சியகங்கள் இதை மனதில் கொண்டு சிலைகளை பார்வையாளர் சுற்றி வந்து பார்க்கும் வண்ணம் அமைக்க வேண்டும். இந்த சிலையின் பின்னழகை படம் பிடிக்க நான் பட்ட பாடு…..


தற்செயலாக கண்ணாடியின் மீது சாய்ந்துவிட்டேன், உடனே அலாரம் மணி அடிக்க , மீண்டும் காவலர்களுடன் போராட்டம் – சிலையின் பின் புறம் எதற்கு படம் பிடிக்கிறாய் என்று பல கேள்விகள்.

ஆனால் அதற்க்கு கிடைத்த பலன்…ஆஹா.

முன்னழகைக் காணில் முனிவர்தாம் தவம் செய்வரோ
பின்னழகைக் காணில் பிரமன் தான் தவம் செய்வனோ (மாணிக்கவாசகர்)

பொதுவாக சிவன் உமையை அணைத்து பிடிப்பதே ஆலிங்கன மூர்த்தி என்பர் , எனினும் இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு தம்பதியினரிடையே இருந்த பரஸ்பரம் – அன்யோன்னியம் , இன்று நம் இளைய காதல் ஜோடிகள் பாணியில் , என்னே அந்த கலைஞனின் திறன் !!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு கல்யாணசுந்தர வடிவம்

போகும் வழி எல்லாம் நல்ல மழை, ஆனால் கங்கை கொண்ட சோழபுரம் அடைந்ததுமே சரியாக நமக்கென்றே நின்று ஆதவன் பளீர் என்று தனது ஆதிக்கத்தை செலுத்த துவங்கினான். மழையில் நனைந்த வரலாற்றுச் சின்னம் கண்முன்னே பளீர் என்று ஜொலித்தது.

ஆரம்பமே அங்கு இருந்த ‘ அதிகாரிகளுடன்’ வாக்கு வாதத்தோடுதான். கருவறையை படம் பிடிக்க மாட்டோம், நாங்கள் செய்யும் பணி இது என்று என்ன சொன்னாலும் அவர்கள் கேட்க வில்லை, தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த இடத்திலும் புகைப்படம் எடுக்கலாம், பணம் கட்ட தேவை இல்லை என்று அதட்டியதும் சிட்டாய்ப் பறந்து விட்டனர். வெளியில் எடுத்து முடித்த பின்னர், மீண்டும் அவர்களது தொல்லை துவங்கியது. இம்முறையும் தோல்விதானோ என்று மனம் தளரும் தருவாயில் ஒரு அதிர்ச்சி. உள்ளே ஏதோ ஒரு பெரிய நிகழ்ச்சி, ஒரே கூட்டம், வீடியோ படமே எடுத்துக் கொண்டு இருந்தது அந்தக் கூட்டம். அவர்கள் எடுக்கும் பொது நாங்கள் ஏன் எடுக்கக் கூடாது என்று சத்தம் போட்டு, அவர்களையும் மீறி படம் எடுக்க துவங்கினோம். அப்போது பார்த்து மின் தடை !!

முடிந்த வரை எது எதுவெனப் பார்த்துப் பார்த்துத் தடவி தடவி படங்களை எடுத்தோம். ஆஹா அந்த வாயிற் காவலர்கள் தான் என்ன ஒரு கம்பீரம். இவர்கள் இங்கே இருக்க ”அவர்கள்” அங்கே எதற்கு என்று தோன்றியது.

அப்பப்பா ! எத்தனை பெரிய சிலை

கால்களுக்கு அடியில் கருப்பாக தெரிகிறதே ? அது என்ன ?

ஆம், நமது கேமராவின் மூடி…

இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தோம் – சுவரின் அந்த பக்கம் இன்னும் ஒரு சிற்பம் – புடைப்புச் சிற்பம். ஆனால் இரண்டிற்கும் உள்ள அளவு வித்யாசமமானது அதை வடித்த கலைஞனின் திறமையை வெளிப்படுத்தியது. பொதுவாக வரையறுக்கப்பட்ட அளவிற்கு வரைவதோ வடிப்பதோ சுலபம். அதையே மிகவும் பெரிது படுத்தியோ அல்லது சிறிது படுத்துவதோ கடினம் – அங்க அமைப்பு சரியாக வராது.

மின்தடையின் காரணமாக வெளிச்சம் குறைவு. முக்கியமான இடம் சரியாக படம் எடுக்க முடியவில்லை.
எனினும் கதை விளங்கியது. பல முனிவர்கள் முன்னிலையிலும், பிரம்மன் முன்னிலையிலும் மீனாக்ஷி திருக்கல்யாணம நடக்கிறது.

கல்யாண சுந்தரராக சிவன், மணப்பெண்ணுக்கே உரித்தான வெட்கத்துடன் மீனாக்ஷி, பெண்ணை தாரை வாற்றுக் கொடுக்கும் பெருமாள் மற்றும் லக்ஷ்மி

உடனே நினைவுக்கு வந்தது நாம் முன்னரே பார்த்த செப்புத் திருமேனி.

இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை அபாரம்


லட்சுமி நிற்கும் பாணி.

பெருமாள் சற்றே முன்ப்பக்கம் குனிந்து இருப்பது போல உள்ளது

ஆனால் மீனாட்சியின் அந்த இடது கை, சற்றே வெட்கத்துடன் கலந்த புன்முறுவல்


இன்னும் அபாரம் பெருமாளின் கடி வஸ்திரம் ( சிவனுக்கு அப்படி இல்லை !)

நாம் சென்ற பதிவில் பார்த்தது போல

செப்புத்திருமேனியுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

ஒன்று கல் புடைப்புச் சிற்பம், மற்றொன்று செப்புத்திருமேனி , இருந்தும் இரண்டிலும் கலைஞன் தனக்கே உரிய கலையுணர்ச்சியில் சிற்ப விதிகளை வெளிகொணர்ந்த விதம் அருமை.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பனைமலை பல்லவகால ஓவியம் உயிர் பெறுகின்றது. பாகம் 2

அனைவரும் சென்ற பதிவை பார்த்து பரவசமடைந்து அடுத்த பதிவுக்காக ஆவலாக எதிர்பார்த்து காத்து நிற்பது தெரிகிறது. ஆனால் அதற்கு முன்னர் நண்பர்திரு ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி. பதிவைப் படித்தவுடன் தன்னிடத்தில் இருந்த குறிப்பு ஒன்றில் இந்த அற்புத ஓவியத்தை கண்டுபிடித்தவரின் வர்ணனை இருப்பதை சுட்டிக்காட்டி நகல் எடுத்து எனக்கு அனுப்பி உள்ளார். ‘Art I Adore’ என்ற ஸ்ரீ அமல் கோஸ் அவர்களது நூலில் – ‘A book on art based on interviews with K. Ramamurty’ என்ற குறிப்பை படித்தவுடன் மெய் சிலிர்த்தது. நீங்களும் படியுங்கள்.

ஆரம்பமே படு சுவாரசீயம் – ஒரு ரசீது. இந்தியா சுதந்திரம் அடைந்து நான்கு ஆண்டுகள் பிறகு ஒரு தேதியில் – ஒரு அருமையான சுவரோவியத்தை முதல் முதலில் நகல் எடுத்து வேலை இல்லாத ஓவியனின் ரசீது.

” This is to certify that his Museum purchased from Shri K. Ramamurti, artist, a copy of the mural painting of the Pallava period from the temple at Panamalai. Mr. Ramamurti was the very first artist to copy this interesting mural.- Superintendent, Government Museum, Madras ”

ஆஹா. மேலும் தொடர்ந்தது அவரது வர்ணனை.

திரு ராமமூர்த்தி அவர்கள் ஒருநாள் ‘தி ஹிந்து ‘ நாளேட்டில், புதுச்சேரி ஆசிரமத்தில் தங்கி இருந்த அயல்நாட்டவர் ஒருவர் தான் பனைமலை மலையில் ஒரு கோயில் சுவரில் கண்ட சில கோடுகள் சிதைந்த பிரெச்கோ ஓவியமாக இருக்கக் கூடும், என்ற தகவலை படித்தார்.

உடனே ஆர்வம் அடைந்த அவர், தான் இதை வெளிக் கொணர்ந்தால் சரித்திரத்தில் இடம் பிடிக்கும் அபார கண்டுபிடிப்பாக இருக்கும் என்று எண்ணி உடனே புறப்பட தயார் ஆனார். எனினும் பயணத்துக்கு போதுமான பணம் அவரிடத்தில் இல்லை. தன மனைவியின் நகைகளை அடமானம் வைத்து பணம் திரட்டி அடுத்த நாள் காலை பனைமலைக்கு புறப்பட்டார்.

அங்கு சென்றதும் முதலில் ஒன்றுமே கிடைக்கவில்லை. சுற்றி சுற்றித் தேடியும் ஓவியச் சுவடுகள் எங்குமே தென்படவில்லை. ஆலய பூசாரிகளுக்கும் அப்படி ஒரு ஓவியம் அங்கு இருப்பதாக தெரியவில்லை. எனினும் ராமமூர்த்தி அவர்கள் மனம் தளராது தேடினார். இரவு அங்கேயே படுத்து காலையில் எழுந்து அடியடியாக தேடினார்.

பதினைந்து நாட்கள் தேடிய பின்னர், ஒரு செவிரில் சில எச்சங்கள் தெரிந்தன. அவற்றை உற்றுப் பார்க்கும் பொது ஒரு முகம் காட்சி தந்தது. சுதை பூச்சால் மறைந்து இருந்த கோடுகளை வெளிக்கொணர கவனமாக அவற்றை விலக்கினார். உள்ளே பனைமலை பார்வதி (உமையம்மை).

தனது குருநாதர் தேவிபிரசாத் அவர்கள் கற்றுக் கொடுத்த பாணியில், அப்படியே நகல் எடுத்தார். என்றும் காலத்தை வென்று அது நிற்க வேண்டும் என்று அதனை சென்னை அருகாட்சியகத்துக்க்கு கொடுத்தார்.

இந்த நூலிற்காக அவரைப் பேட்டி கண்டு அந்த கண்டுபிடிப்பு பற்றி வேறு ஏதாவது நினைவுக்கு வருகிறதா என்று கேட்ட பொது.

” அன்று நான் அந்த பனைமலை ஓவியத்தை கண்ட பொது அடைந்த, அந்த கணத்தில், நான் அடைந்த மகிழ்ச்சியை தவிர வேறு ஒன்றுமே நினைவில் இல்லை” என்றாராம்.

இன்று அவர் எடுத்த நகல் இன்னும் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

மேலே செல்வதற்கு முன்னர், அந்த பல்லவ ஓவியனின் அபார கலை திறமையை நீங்கள் ஒரு ஓவியனின் கண்ணோட்டத்தில் ரசிக்க சில படங்கள். முகத்தின் வட்ட வடிவை கட்ட அவன் அந்த பச்சை நிறத்தை உபயோகிப்பதும் , நெற்றியிலிருந்து வளரும் மூக்கின் வடிவத்தை உணர்த்த வர்ணத்தை நீக்கி – அப்பப்பா அபாரம.

ஓவியத்தை வரைந்த ஓவியரை, ஆயிரம் ஆண்டுகள் பிறகு அதனை மீண்டும் வெளி கொண்டு வந்த நகல் எடுத்த ஓவியருக்கும் ஒரு பெரிய நன்றி கூறி, நமது தொடர்பணியை ஓவியர் திருமதி சுபாசினி அவர்களுடன் ஒப்படைக்கிறோம்.

அவர் கூறுகிறார்.

”பனைமலை உமையம்மையை வரைவது மிகவும் அருமையான அனுபவம். நமக்கு கிடைத்த மிச்சங்களை வைத்து அழிந்து போன பாகங்களைக் கற்பனை செய்து வரைவது மகிழ்ச்சிகரமாக இருந்தது. அதுவும் திரு விஜய் அவர்களின் உதவியுடன் இதற்கான மிக நேர்த்தியான புகைப் படங்கள் கிடைந்தன. அனைத்தையும் ஒன்று சேர்த்து உங்களுக்கு முழு ஓவியமாகப் படைக்கிறேன்.

அப்படி முழுதாக வரைந்த பின்னர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதை எடுத்துரைக்கவும் வார்த்தைகள் வரவில்லை.

அதில் மிகவும் பிடித்தது முதல் முதலில் வரைந்த கோடுகள். இந்த முறை அக்ரிலிக் வண்ணங்களை கொண்டு முயற்சி செய்தேன். படிப்படியாக வண்ணங்களைத் தீட்டி ஓவியத்தை வெளிக்கொண்டு வருவது பரிசுப் பொருளை பிரிப்பது போன்ற ஆர்வம் மற்றும் அனுபவம்.

ஒவ்வொரு கோடும் ஒரு புது அனுபவம், ஒரு கண்டுபிடிப்பு – சில கற்பனை. அவை அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து வந்த வடிவத்தை பல்லவ சுவரோவியம் போலவே முடிக்கவேண்டும் என்பது பெரும் சவாலாக இருந்தது.


ஓவியத்தை தீட்டும்போது படிப்படியாக படம் எடுத்து ரசித்தோம். நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

இதோ நிறைவு பெற்ற ஓவியம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஆலங்குடியானின் அற்புதக்கோலம்.

முந்தைய பதிவில் மகேசன் கையில் விடத்தை எடுக்கும் காட்சியை பார்த்தோம். இந்த பதிவு அதன் தொடர்ச்சி. ஊத்துக்கோட்டை அருகில் இருக்கும் சுருட்டுப்பள்ளி ( சென்னை திருப்தி வழியில் சுமார் அறுபது கிலோ மீட்டர் தொலைவில் ) இருக்கும் சிற்பத்தை கொண்டு, நண்பர் மருத்துவர் திரு ஷங்கர் குமார் அவர்கள் அருமையான புதிய நடையில், நண்பர் திரு அசோக் கிருஷ்ணசுவாமி அவர்களது படங்களுடன் இதோ ஆலங்குடியானின் அற்புதக்கோலம்.

திருச்சிற்றம்பலம்.

‘முடியாதுன்னா முடியாதுதான்! எவ்ளோ கெஞ்சிக் கேட்டாலும் இதான் பதில்!’ தனது தலையை இப்படியும் அப்படியுமாக வேகமாக ஆட்டியபடியே தீர்மானமாகச் சொல்கிறார் நந்தியார்!

பரிதாபமாகக் கெஞ்சியபடி நின்ற கூட்டம் நிம்மதி இழந்து தவிக்கிறது.

மஹாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன், வாயு, அக்னி, வருணன், நாரதர், மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, இன்னும் இவர்களுடன் எண்ணிலடங்காத் தேவர்களும், முனிவர்களும் அங்கே பதற்றத்துடன் நிற்கிறார்கள்.

‘எல்லாம் இவரால் வந்தது’ எரிச்சலுடன் முணுமுணுக்கிறார் வாயு பகவான்.

தன்னைப் பார்த்துத்தான் சொல்கிறார் எனப் புரிந்த இந்திரன், ‘நான் என்ன எனக்காகவே கேட்டேன்? நம்ம எல்லாருக்காவும்தானே?’ எனப் பதிலுக்கு முறைக்கிறார்.

‘சரி, சரி, இப்ப பழசையெல்லாம் கிளற வேண்டாம்’ எனச் சமாதானப் படுத்த முனைந்தார் பிரமதேவன்.

‘அதெப்படி? வாயு பகவான் சொல்வதும் சரிதானே? இந்திரன் அமிர்தம் வேணும்னு கேட்கப்போனதாலதானே இத்தனை அமர்க்களமும் ஆச்சு.’ எனச் சிண்டு முடிந்தார் நாரதர்.

‘விடாம, துரத்தித் துரத்தி நம்மளையெல்லாம் இம்சை படுத்தின ராக்ஷசர்களோட தொல்லை பொறுக்க முடியாமத்தானே பாற்கடலைக் கடைஞ்சு அமிர்தம் எடுக்க முடிவு செஞ்சோம்? அப்பவும் நம்மளோட சக்தி மட்டும் அதுக்குப் போறாதுன்னுதானே, வேற வழியில்லாம அவர்களையும் கூடச் சேர்த்துகிட்டோம்? இப்படியெல்லாம் ஆகும்னு யார் கண்டா?’ எனச் சற்று தைரியமாகக் குரலை உயர்த்தினார் இந்திரன்.

‘நீ சொல்றதுல்லாம் வாஸ்தந்தான். யாரு இல்லைன்னாங்க? வாசுகியை கயிறா வைச்சுகிட்டு, வடவரையை மத்தாட்டமா கடைஞ்சோம். எங்கே தலைப் பக்கத்தைப் பிடிச்சா பாம்பு கடிச்சிருமோன்னு பயந்துபோயி, நீங்கள்லாம் வாலைப் பிடிச்சுண்டீங்க பாரு, அங்கதான் தப்பாயிடுச்சு. அந்த முரட்டு அரக்கர்கள்லாம் சேர்ந்து வாசுகியோட தலையைக் கெட்டியாப் பிடிச்சு நசுக்கிட்டாங்க பாவிப்பசங்க! வலி தாங்க முடியாம அது தன்னோட வேலையைக் காட்டிடிச்சு. பொங்கிவந்த அந்த ஆலகால விஷத்தைப் பார்த்ததுமே, அதோட உக்ரம் தாங்கமுடியாம எல்லாருமா ‘துண்டைக் காணும், துணியைக் காணும்’னு ஓடிட்டீங்க.’ என நிறுத்தினார் பிரமன்.

‘நான் சொல்லலை…. கொஞ்சம் சீண்டிவிட்டாப் போதும். என்னோட தந்தையார் எல்லா விஷயத்தையும் சொல்லாம நிறுத்த மாட்டார்’ என்பதுபோல ஒரு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தார் நாரதர்!

அதைக் கவனியாதவர்போல பிரமன் தொடர்கிறார்.

‘விஷமா, அப்பிடியே சீறிப் பாயறது. அந்த உஷ்ணம் தாங்காம, லோகமே…. இந்தப் பிரபஞ்சமே கிடுகிடுத்துப் போயிடுத்து! எனக்கா கையும் ஓடலை, காலும் ஓடலை. என்ன பண்றதுன்னே புரியலை எனக்கு! நேரா அந்த ஆபத்பாந்தவன் சாக்ஷாத் பரமசிவனை விட்டா வேற வழியில்லைன்னு புரிஞ்சிடுத்து.’

‘நிஷ்டையுல இருந்த பரமேச்வரனைப் பாக்கறதுகாக, அப்பவும், இதோ கெஞ்சிக் கூத்தாடிண்டு நிக்கறோமே, அப்படித்தான் இந்த நந்தி பகவான்கிட்ட மன்னாடி, ஒருவழியா அவரையும் மீறிண்டு உள்ளே போயிட்டேன். எல்லாம் புரிஞ்சவர்மாதிரி, தன்னோட கடைக்கண்ணால, பக்கத்துல் நிக்கற சுந்தரரைப் பாக்கறார் சர்வேச்வரன்.’

‘அடுத்த நொடியே, சுந்தரரைக் காணலை அங்கே! சித்த நாழியுல, கையுல அந்த விஷத்தை எடுத்துகிட்டு வரார் அந்தப் பிரபு! கொஞ்சங்கூட முகத்துல இருக்கற களை மாறவேயில்லை அவருக்கு! இத்தனைக் கொடிய விஷத்தைக் கையுல வச்சிண்டிருக்கோமேன்ற பதட்டமே இல்லாம வரார்! அப்படியே வந்து பவ்யமா சிவன் முன்னாடி கையை நீட்டிண்டு நிக்கறார்.’

‘அப்போ நடந்ததுதான் பெரிய ஆஸ்சர்யம்!…. நீங்கள்லாந்தான் அங்கே அப்போ இல்லியே! அதனாலத்தான் இவ்வளவு விவரமாச் சொல்றேன்…… பரமசிவன் லேசாக் கண்ணைத் திறந்து பார்க்கிறார். சுந்தரமூர்த்தி நாயனாரின் கையிலிருக்கிற விஷத்தை நொடிப்பொழுதுல எடுத்து, என்னப் பண்ணப் போறாரோன்னு நினைக்கறதுக்கு முன்னாடியே, அப்படியே வழிச்சு தன்னோட வாயுல போட்டுக்கறார்!’

‘என்ன ஒரு கருணை! இந்த லோகத்தும் மேல அவருக்குத்தான் எவ்வளவு அக்கறை! வெளியிலும் இருக்கக் கூடாது அந்த விஷம். தூக்கி எறியவும் இயலாது. எங்கேன்னு எறியறது அதை? இருக்கற ஒவ்வொரு கணமும் அதால இந்தப் பிரபஞ்சத்துக்கே ஆபத்து!! அப்படிப்பட்ட அந்த கடுமையான ஆலகால விஷத்தை இந்த லோக க்ஷேமத்துக்காகத் தானே குடிக்க முடிவு பண்ணின அந்தக் கருணையை நினைச்சு பரவசப்படற அந்த நேரத்துலதான்’ ….என ஒரு இடைவெளி கொடுத்து சுற்றி இருந்தவர்கள் முகத்தைப் பார்க்கிறார் பிரம்மா!

அனைவர் முகத்திலும் ஆச்சரியமும், வியப்பும், திகைப்பும் ஓட பிரம்மாவையே பார்க்கின்றனர்.

அனைவரின் கவனமும் தன் மேல்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிரமன் தொடர்கிறார்! நாரதர் முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை தவழ்கிறது!

‘ம்ம்ம். மேலே சொல்லுங்க! அப்படி என்ன நடந்தது அப்போ?’ என ஆவலை அடக்கமுடியாமல் வருணன் கேட்கிறார்.

‘வாயில் போட்ட விஷம் இன்னும் தொண்டையைத் தாண்டலை! பக்கத்துல உட்கார்ந்திருந்த உமாதேவி, தனது கையால் பரமேச்வரனோட கழுத்தை இறுக்கிப் பிடிக்கறார்! விஷம் உள்ளே இறங்காம, அப்படியே தொண்டையிலியே நின்னுடுத்து!’

‘ஏன் இப்படிப் பண்ணிட்டார்னு நாங்கள்லாம் திகைச்சுப் போயிட்டோம்! அப்பத்தான் இந்த அற்புதத்தோட அருமை புரிஞ்சுது எனக்கு! யார் இந்தப் பரமேச்வரன்? அகில லோகத்துக்கும் ஆதார சுருதியே இவர்தானே! இவரோட ஆட்டத்தாலத்தானே அகிலமே ஆடறது.. ஆடிக்கொண்டு இருக்கு! அப்படிப்பட்டவரோட வயிற்றுக்குள்ளே இந்த விஷம் இறங்கிட்டா, அப்பறம் இதை வெளியுல வைக்கறதுக்கு அர்த்தமே இல்லாமப் போயிடுமே! அது மட்டும் உள்ளே போயிட்டா, அந்த விஷம் தன்னோட வேலையைச் செஞ்சுடுத்துன்னா, இந்த லோகமே அழிஞ்சு போயிடாதா?

‘இதைப் புரிஞ்ச ஒரே ஆள் பார்வதிதான்! லோகமாதாவாச்சே அவர்! சர்வலோக ஜெகன்மாதாவுக்கு அந்தச் சிவனை விடவும் இன்னும் அதிகமான அக்கறை இந்த ஜீவராசிகள் மேலே! அதனாலத்தான், அந்த ஆலகாலத்தை அப்படியே பரமசிவனோட தொண்டைக்குக் கீழே போகவிடாம தடுத்து கருணை பண்ணியிருக்கார்! இப்படி ஒர்த்தருக்கு மேலே ஒர்த்தரா அவங்க இரண்டு பேரும் பண்ணின அற்புதத்தாலதான் இன்னைக்கு நாமெல்லாம் இப்படி நின்னு பேசிகிட்டு இருக்கோம்’ எனச் சொல்லிவிட்டு அனைவரையும் பெருமிதத்துடன் பார்த்தார்!

‘அந்த அற்புதத்துக்கு ஈடு இணை உண்டா? ஆனா, அதுக்கு அப்புறம் நடந்ததாக் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தாலத்தானே இப்ப நாம இங்கே இப்படி நின்னுகிட்டிருக்கோம்’ என அவரை நிகழ்காலத்துக்கு இட்டு வருகிறார் பெருமாள்!

‘இதோ, இங்க நிக்கறானே இந்த நாரதன், இவன் தான் அதைச் சொன்னவன்! அவனையே கேளுங்க’ என்று நாரதரைப் பார்க்கிறார் பிரமன்.

‘அதான் ஏற்கெனவே சொல்லியாச்சே! விஷத்தை எடுத்து முழுங்கின சிவபெருமான், அது உள்ளேயும் போகாம, வெளியேவும் வராம, அப்படியே அசதியா சாய்ஞ்சுட்டாராம்! அந்த மலைமகள்தான், அவரைத் தன்னோட மடியுல சாய்ச்சுண்டாராம்! இப்ப அப்படியே கண்ணைத் திறக்காம, அந்த சர்வேச்வரன் காலை நீட்டிப் பள்ளி கொண்டிருக்கிறாம்’ என்றார் நாரதர்!

‘என்னது? பள்ளிகொண்டாரா பரமசிவன்? அது என்னோட வேலையாச்சே! அவர் கண்ணை மூடிண்டு படுத்துட்டா இந்த லோகம் என்ன ஆகிறது? அதான் இந்த பிரபஞ்சமே இருளோன்னு இருக்கு. அவரைப் பார்த்து, அவருக்கும், என்னோட சகோதரி மீனாக்ஷிக்கும் அவ்வளவு துணிச்சலா இந்த லோக நன்மைக்காக இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினதுக்காக, என்னோட வணக்கத்தையும், பாராட்டையும் சொல்லலாம்னு பார்த்தா இந்த நந்தி உள்ளே விடமாட்டேன் என்கிறாரே,’ என அங்கலாய்க்கிறார் பாரளந்த பரமன்.

மற்ற எல்லாரைப் போல இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நந்தி பகவான், மஹாவிஷ்ணுவிடம் வந்து, ‘பெருசா ஒண்ணுமில்லை. லேசா தலை சுற்றுகிறாற்போல் இருக்குன்னு சொல்லிட்டு, அம்மையின் மடியில் சயனித்திருக்கிறார் எம்பெருமான். அவர் நிஷ்டையில் இருக்கும்போது எப்படி எவரையும் உள்ளே செல்ல எனக்கு அனுமதி கிடையாதோ, அதே போலத்தான் இதுவும். ‘என்றவர், உடனேயே, ‘கொஞ்சம் இருங்க. உள்ளே ஏதோ சத்தம் கேட்கிறது. என்னன்னு பார்த்துவிட்டு வருகிறேன்’ எனச் சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.

விஷயம் கேள்விப்பட்ட சூரியனும் தனது அன்றாடப் பணிகளை முடித்துவிடும் தருவாயில் லேசாக எட்டிப்பார்க்கத் துவங்கினான்!

‘நான் உதயமாக இன்னும் கொஞ்சம் நேரமிருக்கிறது. அதற்குள் சிவதரிசனம் கிடைத்தால் நல்லாயிருக்குமே’ எனச் சந்திரன் கைகளைப் பிசைந்து கொள்கிறான்.

அவன் நினைத்ததுபோலவே அருளுறை அன்னை உடன்வர, ஆலவாய் அண்ணல் அன்புப் புன்னகை பூத்தவண்ணம் வெளியே வந்து தரிசனம் தருகிறார்!

அகிலத்தையே தங்கள் கருணையால் காப்பாற்றிய அம்மையப்பனைக் கண்டதும் அனைவர் முகத்திலும் சொல்லவொண்ணா மகிழ்ச்சி ததும்புகிறது!

‘ஆலமுண்ட அண்ணலே போற்றி! அகிலம் காத்தருளிய அன்னையே போற்றி போற்றி!’ எனும் முழக்கம் விண்ணைப் பிளக்கிறது!

“தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!”

திருச்சிற்றம்பலம்!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஒரு மோதிரத்தை தேடி

மோதிரங்கள் நமது வரலாற்றுடன் பின்னிப் பயணிக்கும் ஒரு அணிகலன். அதை அணிய வேண்டும் என்றால் உடலை வருத்தி ( குத்தி )ஓட்டை போடத் தேவை இல்லை ) – மேலும் , கால் விரல்களை சேர்த்தல் இருபது மோதிரங்களைக் கூட எளிதாக அணியலாம், ஒரே விரலில் ஒன்றுக்கு மேல் போட்டுகொண்டால் – எண்ணிக்கை மேலும் பெருகும். உலக வரலாற்றில் ( விக்கி ) குறிப்புப்படி சுமார் 4800 ஆண்டு காலாசாரம் இது. எனினும் நமது பரத கண்டத்தில் ( நமது புராணங்களின் காலத்தை நிர்ணயிக்கும் சர்ச்சை இங்கு வேண்டாம் !!) முத்திரை மோதிரங்கள் பல இடங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அசோகா வனத்தில் சீதை அனுமனை ஸ்ரீ ராமனின் கணையாழி கொண்டு அடையாளம் கண்டு்கொண்டது, மனையாளை மறந்த துஷ்யந்தன் முனி சாபத்தால் நினைவு திருந்தாமல், பின்னர் மீன் வாயில் சிக்கிய தன முத்திரை மோதிரம் கண்டு சகுந்தலையை நினைவு கூர்வதும், தன சொந்த மகனான பரதனைக் கண்டு கொண்டதும் , என்று இந்த சிறு அணிகலன் ஆற்றும் பணி மிக முக்கியம்.

இன்று நாம் ஒரு மோதிரத்தைத் தேடிச் செல்கிறோம், இந்த பயணத்தின் மூலம் இரு வரலாற்றுச் சின்னங்களை ஒன்று சேர்த்து ஆய்வு செய்ய எத்தனிக்கிறோம். அணிகலன்கள் மற்றும் செப்புத் திருமேனிகள். ஒன்றுக் கொன்று, தங்கள் காலத்தை துல்லியமாக நிர்ணயிக்கும் பணிக்கு, எவ்வாறு உதவி செய்கின்றன ? இதன் மூலம் நம் வாசகர்களுக்கு மீண்டும் ஒரு கோரிக்கை. உலகெங்கும் இருக்கு அருங்காட்சியகங்களில் இருக்கும் சிலைகளை பல கோணங்களில் படம் எடுப்பதன் முக்கியத்துவம் விளங்கும் என்று நம்புகிறோம்.

இந்தப் பதிவு தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டை ஒட்டி நடந்த விழா , மற்றும் விழாவை ஒட்டி நடந்த அருங்காட்சியகத்தில் தொடங்குகிறது. திரு ராமன் அவர்கள் அருமையாக விழாவை படம் பிடித்து வந்தார். அதில் ஒன்று கண்ணைப் பறித்தது. சோழர் காலத்து அணிகலன்கள் – இதுவரை கண்டிராத ஒன்று, அதை பற்றி நூல்களிலும் வந்த மாதிரி தெரியவில்லை.

ஆர்வலர்கள், நாங்கள் இருவரும் அதை இன்னும் விரிவாக ஆராய்ந்தோம்.

திரு ராமன் அருங்காட்சியகத்தில் இருந்த பல செப்புத் திருமேனிகளை படம் பிடித்ததும், நான் சென்ற டிசம்பர் மாதம் சென்னை அருங்காட்சியக சிலைகளை படம் பிடித்ததும் மிகவும் உதவின. அதிலும் தஞ்சையில் சிலைகளின் மிக அரு்கில் சென்று அவரால் படம் எடுக்க முடிந்தது. ( சென்னையில் கண்ணாடி போட்டு சிரமமப் படுத்துவார்கள் )

தனியாக பார்க்கும் மோதிரத்தை சிலையில் தேடும் பணியில் ஈடுபட்டோம்.

அதற்கு முதலில் மோதிரத்தின் நல்ல படங்கள் – இதோ

என்ன ஒரு அருமையான மோதிரம்.

முதலில் , CE 10th நூற்றாண்டு, உமையம்மையின் சிலை, கொடிக்காடு , வேதாரண்யம் தாலுகா, நாகை

அருமையான சிலை – எனினும் நேராக மோதிரங்களுக்கு போவோம்.

கையில் இருக்கும் மோதிரங்கள், பொதுவாக எளிமையாகவே உள்ளன. தடிமனான கம்பி போலவும் , அதில் சிறு வேலைப்பாடும் தெரிகிறது.

அடுத்து ஒரு நூறு ஆண்டுகள் அடுத்து , CE 11th நூற்றாண்டு உமையம்மை தம் தோழியுடன் , திருவேங்கிமலை , திருச்சி

இன்னும் அருகில் சென்று, இடைப்பட்ட காலத்தில் அணிகளின் வடிப்பதிலும் அணிவதிலும் மாறுதல் தெரிகிறதா என்று பார்ப்போம்.

நல்ல மாற்றம் தெரிகிறது. நடுவில் கல் பதித்து, அதை சுற்றி சிறு மலர் இதழ்கள் விரிவது போல இருப்பது நன்றாக தெரிகிறது.

அதே நூற்றாண்டை சேர்ந்த உமையொரு பாகர், 11th C CE, திருவெண்காடு , மயிலாடுதுறை .

உமை பாகத்தில் உள்ள கையில் இருக்கும் மோதிரத்தை அருகில் சென்று பார்ப்போம்.

சென்ற சிலையை விட சற்று எளிமையாக உள்ளன மோதிரங்கள். இந்த சிலை 11th நூற்றாண்டின் முதல் பாதியில் வடித்ததாக கொள்ளலாமோ?. மோதிரம் சற்று தட்டையாகவும், நடு பகுதி சற்று விரிவு பெற்று தெரிகிறது.

இன்னும், 12th மற்றும் 13th நூற்றாண்டு சிலைகளை தேடி, அவற்றில் இருக்கும் மோதிரங்களை ஆய்வு செய்யவேண்டும், எனினும் அடுத்து நாம் பார்க்கும் சிலையில், நம் தேடல் வெற்றி பெற்றது. உமை, தேவர்கண்டனல்லூர் , திருவாரூர்.

இந்த சிலையின் காலம் தெளிவாக இல்லை. சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கும் பொது 14th C CE என்றும், தஞ்சையில் 15th நூற்றாண்டு என்றும் பலகைகள் உள்ளன. ( அருங்காட்சி அட்டவணை நூலில் எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும் )

எனினும், உமையின் வலது கையில் நம் தேடலின் நிறைவு …

அருகில் சென்று பாருங்கள், நாம் தேடிய மோதிரம் – இதோ இந்த செப்புத்திருமேனியில்

இப்போது கடினமான கேள்வி – இந்த மோதிரத்தின் காலம் என்ன ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் மூன்று

கடந்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாய் இன்றும் நமது வாசகர்கள், முன் வரிசையில் அமர்ந்து, இந்த அற்புத ஓவியப் பயணத்தை நம்முடன் தொடர்கிறார்கள். இதுவரை பயணம் அருமையாக சென்றுக் கொண்டிருக்கிறது. காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் ராஜசிம்மன் காலத்து அரிய சோமஸ்கந்தர் ஓவியத்தின் சிதைந்த பகுதிகள் கொண்டு முழு ஓவியத்தையும் தீட்டும் நமது முயற்சி இன்றும் தொடர்கிறது.

இந்த ஓவியத்தின் நடு நாயகனான ஈசன் மீது முதலில் நாம் கவனம் செலுத்துவோம்.

அடுத்து உமை

உமையின் வடிவத்தை ஓவியத்தில் உற்றுப் பார்க்கும் பொது, அம்மை மஞ்சள் நிற மேலாடை அணிந்திருப்பது போல தெரிந்தது. மஞ்சள் பூசி உள்ளாரோ அல்லது மஞ்சள் நிற கச்சை அணித்து இருக்கிறாரோ ?

ஓவியத்திற்கு இப்போது வண்ணம் தீட்டுகிறோம். முதலில் மெல்லிய வண்ணம். உடல் வண்ணங்கள்.

மகேசன் வண்ணம் பெறுகிறார், நீலகண்டர் ஆயிற்றே !

உமை இன்னும் வண்ணம் ஏற்றி அழகு பெறுகிறார்.

அம்மை அப்பன் எப்படி ஒன்றாக அழகுபட காட்சி அளிக்க ஆரம்பிக்கின்றனர்.

கேயுரம் எனப்படும் மேல் கை பட்டை, மற்ற ஆபரணங்கள் என்று இன்னும் ஜொலிக்க ஆரம்பிக்கயார் மகேசன் .

ஆசனம், கணம் , தோழி என்று அனைவரும் வண்ணம் பூசப்படுகின்றனர்.

முடியும் தருவாயில், மீண்டும் ஒரு முறை நாம் எதையாவது விட்டு விட்டோமோ என்று ஓவியத்துடன் ஒத்துப் பார்க்கிறோம்.

அடடே, நான்முகனின் அஞ்சலி ஹஸ்தம் சரி செய்ய மறந்துவிட்டோமே.

ஈசனின் கை முத்திரைகள் சில சரியாக தெரியவில்லை, அதைப் பற்றி படிக்க, நாம் சோமஸ்கந்தர் பற்றி தொடரை ஆரம்பிக்க காரணமான திரு கிப்ட் சிரோமனி அவர்களது 1971 ஆம் ஆண்டு குறிப்பை மீண்டும் சென்று படித்தேன்

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

சோமஸ்கந்தர் வடிவம் பற்றி அவர் சொல்லும்போது ராஜசிம்மன் காலத்திற்கு முந்தைய சோமஸ்கந்தர் கல் சிற்பம் பற்றி இவ்வாறு விவரிக்கிறார். ” சிவனின் நான்கு கைகளில், மேல் வலது கையில் ஒரு பாம்பை பிடித்து இருக்கிறார் ”

ராஜசிம்மன் காலத்து சோமஸ்கந்தர் வடிவத்தில் அவர் குறிப்பாக இந்த பாம்பை பற்றி ஒன்றும் கூறவில்லை. எனினும் பாம்பு கண்ணில் தென்படுகிறதா என்று தேடிப் பார்த்தோம்.

மேல் வலது கையில் ஒன்றும் தெரியவில்லை , ஆனால் கீழ் வலது கையின் அருகில்

படம் எடுத்து ஆடும் பாம்பு தெரிகிறதா ?

அத்துடன் நமது இந்த பயணம் முடிவுக்கு வருகிறது, மீண்டும் ஒரு முறை நாம் ரசிக்கும் வண்ணம் சலிக்காமல் வரைந்த ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களையும், சரியான தருணத்தில் நல்ல படங்களை தந்து உதவிய இளம் நண்பர் திரு ஜகதீஷ் அவர்களையும் வாழ்த்தி , முடிவு பெற்ற ஓவியத்தை படைக்கிறேன்.

இந்த ஓவியப் பயணம் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் உற்சாக வரவேற்புடன் இன்னும் பல பணிகளை இது போலவே எடுத்து நிறைவேற்ற முயற்சிக்கிறோம்.இது ஒரு முயற்சி தான், பிழைகள், தவறுகள் ஏதேனும் இருந்தால் முதலில் மன்னிக்கவும் , பிறகு கண்டிப்பாக எடுத்துக் கூறவும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் இரண்டு

முதல் பாகத்தை படித்து பலரும் அனுப்பிய நல்ல மறுமொழிகள் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. யாருமே சென்று காணாத இந்த பல்லவர் கால சுவர் ஓவியங்கள் இன்று புத்துயிர் பெற்று நம்முடன் பேசுவது போன்ற உணர்ச்சி பெறுகிறோம். இந்த பயணத்தில் நானும் ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களும் பல புதிய விஷயங்களை தெரிந்துக்கொண்டோம். அதை அப்படியே உங்களுடன் பகிர்கின்றோம்.

நண்பர் திரு ஜகதீஷ், அவருக்கு மீண்டும் ஒரு நன்றி. அவர் தந்த படங்கள் எங்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருந்தது எனபது இந்த பதிவை படித்து முடித்தவுடன் புரியும். தக்க சமயத்தில் உதவினார் இந்த பதினோராவது வகுப்ப மாணவன்.

சென்ற பதிவில், படத்தில் யார் யார் இருக்கின்றனர், எங்கெங்கே என்று குறித்து விவரித்தோம் நாங்கள், இன்னும் அருகில் சென்று ஒவ்வொரு சிறு குறிப்புகளையும் பார்த்தோம். பூத கணம், எங்குமே முழுமையாக தெரியவில்லை. கொஞ்சம் கற்பனைத் திறனை கலந்து வரைந்து முடித்து விட்டார் ஓவியர்.

அருகில் இருக்கும் தோழி அப்படி அல்ல. நல்ல படம் இருந்தது, மேலே உமையின் ஆடையில் இருக்கும் வேலைப்பாடு கூட கிடைத்தது.


அடுத்து இருவருக்கும் நடுவில் ஏதாவது இருக்குமோ.அனைத்து ஓவியங்களிலும் இந்த பகுதியில் சிதைந்து விட்டது ( மொத்தம் நான்கு சுவர் ஓவியங்களை வைத்து நாம் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம் ) . சோமஸ்கந்தர் பற்றிய நமது தொடரை வாசிக்கும் நண்பர்கள், பொதுவாக சோமஸ்கந்தர் வடிவங்களில் தரையில் ஒரு கூஜா இருப்பதை கவனித்து இருப்பார்கள். இதோ இந்த மலை கடற்கரை கோயில் வடிவம் போல

அதனால் அதை நமது ஓவியத்திலும் போட்டுவிட்டோம்.

அடுத்து பிரம்மா. ஒரே ஒரு ஓவியத்தில் மட்டும், அவரது உருவம் தெரிகிறது. ( இரு கைகளையும் கூப்பி அஞ்சலி முத்திரையில் அவரை காட்டவேண்டும். மூன்றாம் பாகத்தில் திருத்தி விடுவோம் )

எப்படி அவரது மற்ற முகங்களை காட்டுவது என்று யோசிக்க, புள்ளமங்கை பிரம்மா நினைவுக்கு வந்தார்.
.

அவரை முன்மாதிரியாக வாய்த்த இந்த பிரம்மன் படத்தை வரைந்தாயிற்று.

விஷ்ணு உருவத்திற்கு இந்த நிலை இல்லை. ஒரு ஓவியத்தில் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் எங்கள் பணி எளிதாயிற்று.

அடுத்து குழந்தை முருகன்.

முருகன் – அழகன். அதுவும் குழந்தை முருகன் என்றால் !! சரியாக வரவேண்டுமே.

அருகில் சென்று படங்களை பார்க்கும் பொது தான் நாங்கள் முதலில் நினைத்ததைப் போல ஆசனத்தின் கால்களில் சிங்க வடிவங்கள் இல்லை என்பது தெரிந்தது.

அடுத்து உமை.


ஈசன், இந்த வடிவத்தின் நடு நாயகன் – மிகவும் நேர்த்தியாக வரவேண்டும் என்பதால், இன்னும் கவனமாக படங்களை ஆராய்ந்தோம். குறிப்பாக அவர் கை முத்திரைகள். ( ஒரு குறிப்பு மிகவும் உதவியாக இருந்தது – அது என்ன வென்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்) . இடது மேல் கரம் இங்கே பாருங்கள்.

ஈசனின் மகுடம். நிறைய வேலைப்பாடுடன் இருந்ததால் மிகவும் கடினமாக இருந்தது.

குறிப்பாக மகுடத்தில் உள்ள ஒரு அணிகலன். இதுவரை நாங்கள் பார்க்காததாக இருந்தது. எனினும் அந்த வடிவம் நாம் முன்னரே எங்கோ பார்த்த வடிவம். அப்போது திரு நாகசாமி அவரது செப்புத்திருமேனி (Masterpieces of South Indian Bronzes)நூலில் ஒரு குறிப்பு கிடைத்தது. பல்லவர் கால செப்ப்புத்திருமேனி ஒன்றில் இரு மகர ஒப்பனை கொண்டு இந்த அணிகலன் உள்ளது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

ஆம், அதே நம் ஓவியத்திலும்.


இப்போது ஒரு அளவிற்கு நமது ஓவியம் வந்து விட்டது. இன்னும் சிறு சிறு அமைப்புகளை சரி செய்து வண்ணம் பூசினால் முடிந்து விடும்.

அதற்கு, அடுத்த இறுதிப் பதிவு விரைவில் பார்ப்போம்.

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் ஒன்று

தமிழ் நாட்டு ஓவியக்கலையின் மிக தொன்மையான பல்லவ ஓவியங்கள் இன்றும் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் இங்கும் அங்குமாய் சிதைந்த நிலையில் பார்க்க முடிகிறது. பார்த்த சில நொடிக்களிலேயே நம்மை சொக்க வைக்கும் அழகைக் கொண்ட இந்த ஓவியங்களைப் பார்க்கும் பொது ஒருபக்கம் பரவசமும் மறு பக்கம் பெரும் துக்கமும் வரும். பரவசம், ஆயிரத்திமுன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே தனது கலையில் இப்படி ஒரு உன்னத நிலையை நம் மண்ணின் கலைஞன் எட்டிவிட்டான் என்பதும், அவனது கலை காலத்தை வென்று இன்று வரை நின்றுள்ளது என்பதும். துக்கம், இங்கும் அங்குமாய் தெரிந்த சில கோடுகள், சில வண்ணங்கள், என்று நாம் இன்று காணும் இந்த ஓவியங்கள், அடுத்த தலைமுறை பார்க்க , பரவசம் அடைய இந்த அரிய பொக்கிஷங்களை , நம் குல தனங்களை, நிலைக்க வைக்க முடியுமா என்ற கேள்வி.

நம்மால் முடிந்தது – இன்றைய நிலையை அப்படியே படம் பிடித்து இணையம் மூலம் கருவூலம் அமைத்து பாதுகாக்கமுடியும். எனினும், எங்கோ மூலையில் ஒரு சின்ன ஆசை. இவை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி வண்ணங்களின் பிரதிபலிப்பாய் ஜொலித்திருக்கும் என மனக்கண்ணில் அப்படியே அவற்றை கற்பனை செய்து ரசிப்பது உண்டு, எனினும் அப்படி மனக்கண்ணில் கண்ட காட்சியை அனைவருடன் எப்படி பகிர்வது. பல்லவ சிற்பியுடன் போட்டி போட நமக்கு தேர்ச்சி இல்லை, தற்போது உள்ள கணினி தொழில்நுட்பம் கொண்டு படங்களை ஒற்றி எடுத்தும், ஒரு ஓவியம் கூட முழுவதுமாக இன்று நிலைக்க வில்லை. இது சாமானியன் செய்யும் வேலை இல்லை என்று புரிந்தது. இந்த கலை ரத்தத்திலேயே ஊறி போன ஒருவரால் மட்டுமே இவற்றுக்கு உயிர் கொடுக்க முடியும் என்று தெளிவாக தெரிந்து. ஓவியர் நண்பர்கள் யாரை சந்தித்தாலும் கோரிக்கை மனு கொடுத்து வைப்பேன்.

இப்படி இருக்கையில், தற்செயலாக நண்பர் ஒருவரின் ஓவியக் கண்காட்சி ஒன்றிற்கு சென்ற பொது, ஓவியர் மணியம் அவர்களின் வழித்தோன்றல் இருவரை சந்திக்க நேர்ந்தது. ஆம் அவர்தான், அமரர் கல்கியின் கதை காலத்திற்கு மெருக் ஏற்றி அற்புத ஓவியங்களை படைத்தவர். அவரது கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டு வந்தவர். திரு மணியம் அவர்களின் ஓவியங்கள் சில , அவரது மகன் திரு மணியம் செல்வன் அவர்களும் சிறந்த ஓவியர், அவரது ஓவியங்கள் சில ,ஆனால் நான் சந்தித்தது அவரது புதல்விகளை . புலிக்கு பிறந்தது பூனை யாகுமா. இருவருமே சிறந்த ஓவியர்கள். அப்படியே நின்றுக் கொண்டே பேசினோம், கல்கி , பார்த்திபன் கனவு , பொன்னியின் செல்வன் என்று போன உரையாடல் முடிவில் கோரிக்கை மனுவை நீட்டினேன். திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்கள் அவரது ஓவியங்கள் ,முயற்சி செய்து பார்ப்போம் என்று கூறினார்.

பணி மிகவும் கடினம், ஓவியங்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தன. நான்கு இடங்களில் உள்ள இதே வடிவம், ஒரு இடத்தில கூட முழுவதுமாக இல்லை. போதாத குறைக்கு என்னிடத்தில் நல்ல படங்களும் இல்லை. நண்பர்கள் இடத்தில கேட்டுப் பார்த்தேன், யாரிடத்திலும் எங்களுக்கு தேவைப்படும் அளவிற்கு பெரிய படங்கள் இல்லை.


இருப்பதை வைத்து, முதலில் வேலையை துவங்கினோம். நன்றாக வருமோ என்ற ஐயம் எழும் முன்னரே, உடனே வந்தது சுபாஷினி அவர்களின் முதல் பிரதி

சரியான இடத்தில தான் பணியை ஒப்படைத்துள்ளோம் என்று சொன்னது மனம். வாழை அடி வாழையாய் வந்த கலை, அவர்களது கையில் விளையாடியது . எனினும் மிக நேர்த்தியாக வரையவேண்டும் என்றால் நல்ல படம் சீக்கிரம் தேவை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொடிருந்த பொது, ஒரு இனிய அதிர்ச்சி. மே மாதம் தற்செயலாக தளத்தின் மூலம் உரையாடிய பத்தாம் வகுப்பு மாணவன் ஜகதீஷ், ஒரு மடல் அனுப்பினான். எனது காஞ்சி பயண புகை படங்கள் என்றது தலைப்பு. கூடவே,”ஹலோ அண்ணா , என்னை நினைவுள்ளதா, நான் ராஜகேசரி ( புனைப்பெயர் ) , சமீபத்தில் காஞ்சிபுரம் சென்றிருந்தேன் , அங்கு எடுத்த படங்கள் இதோ ”

உள்ளே, நான் தேடிக்கொண்டிருந்த படங்கள். உடனே தொடர்பு கொண்டு, முழு அளவில் படத்தை அனுப்பு என்று சொன்னவுடன் உதவினான் நம் தோழன், இந்த சின்ன வயதில் -வேலூர் பள்ளியில் இப்போது பதினொன்றாம் வகுப்பு படிக்கும் நம் ஹீரோ இதோ.

பல்லவ கலை, ராஜசிம்ம பல்லவனால் வளர்க்கப்பட்ட கலை, இன்று இந்த மாணவன் உதவியுடன் அடுத்த தலைமுறைக்கு செல்கிறது.

பிரம்மா

உமை

விஷ்ணு

நல்ல படங்கள் ஏன் தேவை பட்டன என்பதற்கு, கிழே இருக்கும் பூத கணம், மற்றும் பணிப்பெண் உருவங்களை கண்டு கொள்ள பெரிதும் உதவின.

ஆசனத்தின் கால்கள் சிங்க முகங்கள் போல சித்தரிக்க நினைத்தோம். ( மலை மகிஷாசுரமர்தினி மண்டபம் போல )

அடுத்து இன்னும் பல விவரங்களை எடுத்து ஓவியத்தை பூர்த்தி செய்ய ஆரம்பித்தோம்.

நன்றாக வருகிறது . இன்னும் பார்க்க ஆவலா ? பொறுமை, அடுத்த பதிவில் தொடரும் இந்த ஓவியம்.

ஈசனின் மாப்பிள்ளை ஊர்வலம்

ஒரே நாளில் மூன்று முறை அதிர்ஷ்டம் அடிப்பது கடினம். எனது மனைவியின் பிறந்த நாளன்று், தற்செயலாக நாங்கள் தஞ்சையில் இருந்தோம் – முதல் வேலையாக பெரிய கோயில் ( நானும் அரவிந்தும் விடியல் காலையிலேயே எழுந்து புள்ளமங்கை தனியே சென்று வந்து விட்டோம்). ஒரு போன் போட்டு குடவாயில் பாலு ஐயா இருக்கிறார்களா என்று பார்த்தோம். அவரோ, இதோ வருகிறேன் என்று அடுத்த நிமிடம் பெரிய கோயிலுக்கு வந்தது மட்டும் அல்லாமால், வாங்க.. நானே சுற்றிக் காட்டுகிறேன் என்று புறப்பட்டுவிட்டார். கரும்பு கடிக்க கூலி தேவையா. வாருங்கள் ஒரு கரும்பை, சாறு பிழிந்து உங்களுடன் பகிர்கின்றேன். சிறிய புடைப்புச் சிற்பம் தான், எனினும் சோழ சிற்பியின் கைவண்ணம் குடவாயில் பாலு அவர்கள் சொல்வண்ணம் இரண்டும் சேர்ந்தால். ..

நாம் முன்னரே பெரிய கோயிலில் உள்ள தக்ஷன் தலையை கொய்தது மற்றும் காமனை எரிக்கும் படலங்களின் சிற்பங்களை பார்த்து விட்டோம்

தக்ஷன் தலையை கொய்த ஈசன் –

காமனை எரிக்கும் ஈசன்

இன்று நாம் பார்க்கும் காட்சி, அவற்றை அடுத்து வருபவை. மகேசன் மீண்டும் குடும்பஸ்தானாக ஆக சம்மதிக்க வைத்துவிட்டனர். தாக்ஷாயினி மீண்டும் உமையாக, பர்வத ராஜன் ஹிமவானின் குமாரியாக பிறந்து வளர்ந்து வருகிறாள். ஈசனே தன் கணவனாக வருவதற்கு தவமும் செய்யத் தொடங்கிவிட்டாள்.கந்தபுராணத்தில் இந்த காட்சியின் ஒரு வர்ணனை உண்டு ( சிற்பம் காலத்தால் அந்த காவியத்திற்கு முற்ப்பட்டது ).

கதை மிகவும் சுவாரசியம். பர்வத ராஜன் ஈசன் தூது அனுப்பிய ஏழு முனிவர்களின் பேச்சை ஏற்று தனது மகளை மகேசனுக்கு கொடுக்க ஒப்புக் கொண்டு விட்டான். ஈசன் தனது திருமணத்திற்கு கிளம்பி வருகிறார். அப்போது ஹிமவானின் மனைவி, ராணி மேனை , ஒரு அம்மாவுக்கே உண்டான ஆர்வத்துடன் தன மருமகனைக் காண விரைந்து செல்கிறாள். தன அருமை மகள் கரம் பிடிப்பவன் என்ன வதன சௌந்தர்யம் பொருந்தியவனாக இருப்பன் என்று பார்க்க அவளுக்கு ஆவல்.

ஈசன் எப்படி வருகிறார் – அவர் தான் திருவிளையாடல் நாயகன் ஆயிற்றே. இன்றும் ஜானவாசம் எப்படி எல்லாம் நாம் கொண்டாடுகிறோம் . என்ன தோரணை, பள பளக்கும் பட்டாடை, உடலெங்கும் தொங்கும் தங்க ஆபரணங்கள் , சிகை அலங்காரம் என்ன நகை அலங்காரம் என்ன, குதிரை மேலே மாப்பிள்ளை வர, ஆட்டம் பாட்டம் என்று கூட வரும் கோஷ்டி அடிக்கும் லூட்டி வேறு.

இதை எல்லாம் எதிர்பார்த்து சென்ற மேனைக்கு அங்கே ஒரு பெரும் அதிர்ச்சி.

பூத கணங்கள் சூழ்ந்து , ரிஷப வாஹனத்தில், அண்ணல் யானை தோல் உடுத்தி, நாக ஆபரணம் பூண்டு, பரதேசி போல வரும் கோலம். அதுவும் நமக்காக திரும்பி படம் பிடிக்க போஸ் கொடுக்கிறார் பாருங்கள்.

வரவேற்க வந்த மேனைக்கும் அவள் தோழிகளுக்கும் தூக்கி வாரி போட்டது. உடனே சென்று தன கணவரிடம் முறையிட்டாள்.

ஏற்கனவே சிவன் மகா கோபக்காரன். பிரமன் தலையை. தட்சன் தலையைக் கொய்தவர். இப்படிப்பட்டவர் எப்படி வருகிறார் பாருங்கள்.. இவருக்கா நம் மகளைத் தருவது?என்னால் ஒப்புக் கொள்ளமுடியாது..

http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0239.html

மலரயன் புதல்வன் றன்னோர் மடந்தையை மணத்தின் நல்க
அலைபுனற் சடிலத் தண்ணல் அவன்றலை கொண்டான் என்பர்
நிலைமையங் கதனை யுன்னி நெஞ்சக மஞ்சு மெங்கள்
குலமகள் தனைய வற்குக் கொடுத்திட லெவனோ வென்றாள்.

அருகில் இருக்கும் பிரம்மன், விஷ்ணு, நாரதர் எடுத்துரைக்க – நடந்தது தக்ஷன் செய்த குற்றத்தின் வினைப்பயன். அதையும் மன்னித்து மகேசன் அவனை உயிர்ப்பித்து ( ஆட்டு தலையு்டன் ) விட்ட கதையை கூறி, உன் மகளுக்கு இவரே ஏற்ற கணவர் என்றும், ஏற்கனவே உள்ளதை கவர்ந்துவிட்டார் என்றும் கூறி சமாளித்து விட்டனர்.

முடிவில் திருமணம் சிறப்பாக நடை பெற்று அனைவரும் நலாமாக கிளை திரும்பினர். அடுத்து குமார சம்பவம் தான். …

குடவாயில் ஐயாவுக்கு மீண்டும் ஒரு பெரிய நன்றி எனினும் அவர் இந்த சிற்ப்பத்தை தனது நூலில் வேறு விதமாக விவரித்துள்ளார் . அதையும் விரைவில் பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment