சோமஸ்கந்தர் வடிவம் – செப்புத் திருமேனி, பல்லவர் காலம்

நாம் இதுவரையில் கல்லில் சோமஸ்கந்தர் வடிவத்தின் பரிணாம வளர்ச்சியை பற்றி பார்த்தோம். இதுவரையில் நாம் பார்த்த அனைத்து சிற்பங்களும் பல்லவ சிற்பங்களே. இன்று நாம் ஒரு செப்புத் திருமேனியை பார்க்கப்போகிறோம். பொதுவாக செப்புத் திருமேனி என்றவுடன் நாம் சோழர் காலம் என்றே நினைப்போம். எனினும் அவர்களுக்கு முன்னரே பல்லவர் காலத்தில் பல அற்புத செப்புத் திருமேனிகள் வடிக்கப்பட்டன. இன்றைக்கு அவற்றில் ஒன்றான சோமஸ்கந்தர் செப்புத் திருமேனியை பார்ப்போம்.

இந்த சிற்பம் அதன் அமைப்பு, அணிகலன் , வாகு போன்ற பலவற்றை கொண்டு சோழர் காலத்திற்கு முற்பட்ட காலம் என்று அடையாளம் கொள்ளப்படுகிறது. அதன் அளவை முதலில் மனதில் கொள்ள வேண்டும். சோழர் கால சோமஸ்கந்தர் வடிவங்களில் பாதி உயரமே உள்ளது இந்த சிற்பம். அளவு மட்டும் அல்ல, அதில் அமர்ந்திருக்கும் திருக்கோலமும் சற்று வித்தியாசமாக உள்ளது. இவற்றைக் கொண்டே இது சோழர் காலத்துக்கு முந்தைய சிற்பம் என்று கருதப்படு்கிறது. முருகர் வடிவம் தொலைந்துபோய் விட்டது.

அப்படி என்ன வித்தியாசம் இந்த அமர்ந்திருக்கும் கோலத்தில்?. படங்களை பாருங்கள்.


சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் ஈசன், சற்று பின்னால் சாய்ந்து அமர்த்தப்பட்டவாறு இருப்பது தெரிகிறதா. இது அவரது கம்பீர தோற்றத்தை இன்னும் அதிகரிக்கிறது.

அம்மை அப்பனின் உருவத்திலும் , முக ஜாடையிலும் கூட வித்தியாசங்கள் உண்டு. ஈசனின் முகம் வட்டமாக உள்ளது – அதில் கண் , மூக்கு மற்றும் வாயை கைகளால் சிற்பி அமைத்தது போல உள்ளது. தலையில் ஜடா மகுடம் , மற்றும் கழுத்தில் இரு சிறிய சங்கிளிகளிகள் மற்றும் ஹாரம் என ஜொலிக்கும் அவரது யக்நோபவீதம் தங்க கம்பிகளால் ஆனது போல உள்ளது. அதில் அவரது இடது மார்பின் மேல் ஒரு முடிச்சு மிகவும் அழகாக உள்ளது.



முகம் வட்டமாக , தலையில் முக்கோண வடிவில் கரண்ட மகுடம் ஜொலிக்க, லக்ஷணமான முகத்தொட்ட்ரத்துடன் அமர்ந்திருக்கும் உமை அழகு.

மகேசனின் பல கைகள் இணைக்கப் படுகிற பாணியும் ஒரு வழிகாட்டி. மேல் கைகள் பிரிவதும் – பிரியும் கோணமும் நாம் பார்க்க வேண்டும்.

கைகளில் அவர்கள் தங்கள் ஆயுதங்களை பிடித்திருக்கும் முறையும், கை முத்திரைகளையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

சிவன்

அணிகலன்களில் மிகவும் அழகான நாக கேயுர வகை இருப்பது அழகு.

உமை

கால் மற்றும் கைகள் மிகவும் நேர்த்தியாக நளினம் ததும்பும் வண்ணம் உள்ளன. இவையும் காலத்தை எடுத்துக்காட்டும் .


அங்க அணிகலன்கள், ஈசனின் இடுப்புப் பட்டையில் நாம் பிற்காலத்திய சிற்பங்களில் வரும் சிங்க முகம் இல்லாததை நினைவில் வைக்க வேண்டும் . இடுப்பை வடித்துள்ள வண்ணம் மிக அருமை.


ஈசனின் சிரத்தின் பின் நாம் கல் சிற்பங்களில் பெரிதாக பார்த்த சிரஸ்சக்கரம் இங்கே சற்று அளவில் சிறியதாகி உள்ளது. ஆறு சடைகளாக பிரியும் பின்னல் அருமை.

ஈசனின் மார்பை பாருங்கள். ஒட்டி வைத்தார் போல உள்ளதே.

இவை அனைத்தையும் ஒன்று சேர்ந்து – நாம் அடுத்து பார்க்கும் சோழர் கால சுமார் 10th C மற்றும் 12 C செப்புத் திருமேனி்களுடன் வரும் பதிவுகளில் ஒப்பு நோக்கி எவ்வாறு இந்த படிமம் காலத்தால் அவற்றிற்கு முந்தையது என்பதை பார்ப்போம்.

Ref: Bronzes of South India – Sri. K. R. Srinivasan


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

உன் கரம் பிடிக்கிறேன்

உலோகத்தில் உணர்வுகளை தத்ரூபமாக கொண்டு வருவது கடினம் , அதை எடுத்துச் செய்ய திறமை வேண்டும். அந்த சவாலை ஏற்க சோழநாட்டுக் கலைஞனை விட யாரால் முடியும். அதுவும் ஒரு திருமணம் – சாதாரண திருமணம் அல்ல – அம்மை அப்பனின் திருமணம். ஆமாம், நாம் ஏற்கனவே பார்த்த தாடகை கதையின் அடுத்த காட்சி தான். சுந்தரேஸ்வரரை கண்டதும் அதுவரை இருந்த மூன்றாம் முலை மறைந்து , போர்வீராங்கனையாக இருந்த மதுரை அரசி மீனாட்சியாக மாறி , மணக்கோலம் தரித்து நிற்கும் காட்சி.

இப்படி ஒரு திருமண காட்சியை கற்பனை செய்யுங்கள். மீனாட்சியின் தமையனாக பெருமாளும் உடன் லக்ஷ்மியும் , தாரை வாற்று தரும் காட்சி.

இவற்றை மனதில் கொண்டு இந்த சிலையை பாருங்கள் – தஞ்சை ராஜ ராஜன் அருங்காட்சியகம்.

மணமகனாக சுந்தரேஸ்வரர் – மாப்பிள்ளை மெருகு , முகத்தில் ஒரு புன்சிரிப்பு, கம்பீரத் தோற்றம். தன் அன்புக்குரியவளை கரம் பிடிக்கும் பெருமிதம்.

மீனாட்சியோ – நளினமே உருவாக நிற்க, தலை சற்றே நாணத்தில் சாய, தன் கரத்தை மணாளன் பிடிக்கும் சுகத்தில் சிவக்கும் கன்னத்தை நோக்கி விரையும் கை.

கரம் பிடித்தல் (பாணிக்கிரஹணம்) என்பதன் அனைத்து பொருள்களையும் உணர்ச்சிகளால் உணர்த்தும் சிலை.

ஒவ்வொரு அசைவிலும் பல அர்த்தங்களையும் , உணர்வுகளையும் பிரதிபலிக்கும் இந்த சிலை அந்த சோழ சிற்பியின் அனுபவத்தையும் ரசனையையும் காட்டுகிறது. .


சரியான முறையில் அருங்காட்சியகத்தில் வைத்தால் இன்னும் அனுபவித்து பார்க்கலாம். படம் எடுக்கலாம். அது வரை இப்படி தான் பார்க்க வேண்டும்

ஆனால், நண்பர் பிரசாத் இருக்கும் வரை நமக்கு குறை ஏது. இதோ அவர் வரைந்த ஓவியம் உள்ளதே. (பிரசாத் இது சும்மா எப்போவோ வரைந்தது என்கிறார் !!!)

சிலைகளை வரைவது மிகவும் கடினம். அதுவும் இது மாதிரி சிலைகளை வரைவது இன்னமும் கடினம். ஏனெனில் , இவை வெறும் ஒரு உருவமோ வடிவமோ அல்ல – தெய்வத்தன்மை ததும்பும் ஒரு மாபெரும் கலை பாரம்பரியத்தின் வெளிப்பாடு. வெகு சிலருக்கு இப்படி அந்த தெய்வாம்சம் குறையாமல் வரையும் இந்த பாக்கியம் கிடைக்கும்.

கலையின் உன்னத சிகரங்களை தந்த இந்த மண்ணில் பிறந்ததற்கு மீண்டும் நான் பெருமைப் படுகிறேன்.

படங்கள் : நண்பர் சதீஷ் மற்றும் இணையத்தில் இருந்து


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவ சோமாஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – ஆறாம் பாகம் – மல்லை மகிஷாசுர மர்த்தினி மண்டபம்

இன்றைக்கு நாம் மல்லையில் இன்னொரு அற்புத புடைப்பு சிற்பத்தை பார்க்கப் போகிறோம் – மல்லை மகிஷாசுர மர்த்தினி மண்டபம் . நாம் முன்னரே இங்கு சென்று அங்குள்ள இரண்டு அற்புத சிற்பங்களை பார்த்தோம் – மகிஷாசுர மர்த்தினி சிற்பமும், சேஷ சயன பெருமாள் சிற்பமும். பொதுவாக அங்கே செல்வோர் இவ்விரு சிற்பங்களையும் பார்த்து விட்டு திரும்பிவிடுவர் – கர்ப்பக் கிருஹத்தில் உள்ள அற்புத சோமஸ்கந்தர் வடிவத்தை பார்க்க மறந்துவிடுவர். இது இயற்கை..

பல்லவர் சோமஸ்கந்தர் வடிவங்களில் இதுவே மிகவும் பெரியது. முழு கருவறை பின் சுவரை ஆக்ரமிக்கும் பிரம்மாண்ட வடிவம். மகேந்திர பல்லவர் குடைவரைகளில் சோமஸ்கந்தர் வடிவங்கள் இருப்பதில்லை என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

இந்த சிற்பத்தை ஆராய்வதற்கு முன்னர், சிலவற்றை நாம் தெரிந்துக் கொள்வது முக்கியம். மல்லை சிற்பங்களை சுற்றி பல புதிர்கள் உள்ளன. பல்லவர் காலம் என்று பொதுவாக கொண்டாலும், எந்த பல்லவ அரசனின் காலத்தில் எந்த எந்த இடங்கள் உருவாகின என்பது இன்றும் பல வல்லுனர்களை குழப்பத்தில் ஆழ்த்தும். இந்த புதிரை நீட்டிக்கும் குடைவரைகளில் இந்த குடைவரையும் ஒன்று. விடை தேட இங்கே கல்வெட்டுகள் எதுவும் இல்லை. மேலும் பல குழப்பங்களை உள்ளடக்கும் இந்த மண்டபத்தை நாம் இந்த சோமஸ்கந்தர் வடிவத்தின் காலத்தை மட்டும் வைத்து ஆய்வு செய்வோம். இதை ஒப்பிட நமக்கு உதவுவது மல்லையில் ராஜ சிம்ஹன் கல்வெட்டுகளை கொண்ட கடற்கரை கோயிலில் உள்ள சோமஸ்கந்தர் வடிவம். இதில் ஏது முந்தையது – ஏது பிந்தைய கால வடிவம் என்ற கேள்விக்கு மட்டும் விடை தேடும் பதிவு இது.

முதல் பார்வையில், இரண்டுமே ஒரே வடிவமாக தெரியும். இன்னும் நுணுக்கமாக பார்க்க இரண்டு சிற்பங்களையும் பக்கத்தில் வைத்து , குறிப்புகள் இட்டு பார்ப்போம்.

எதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்பதை விளக்கும் படம் இதோ.

என்ன அருமையான வடிவம். குழந்தை குமரனின் வடிவம் – அப்படியே அமர்ந்த வடிவில் நம்மை கண்டு தாவும்படி, சற்றே திரும்பி, வலது கையால் குமரனை அணைத்து , இடது கையில் சாய்ந்து நளினமாக அமர்ந்திருக்கும் உமையம்மை, கம்பீரமாக சுஹாசனத்தில் ஈசன் – பின்னால் விஷ்ணு, பிரும்மா – அருமை (உமைக்கு மேல் சாமரம் !!)


இரண்டு வடிவங்களுக்கும் வித்தியாசம் – அவர்கள் அமர்ந்திருக்கும் அரியணையின் கால்கள் – கடற்கரைக் கோயில் வடிவத்தில் கால்கள் வெறுமனே இருக்கும் . ஆனால் இவை இங்கு சிங்க வடிவத்தில் செய்யப்பட்டுள்ளன. காலுக்குக் கீழே இங்கே நந்தி வந்து விட்டது. ( நரசிம்ம பல்லவர் காலத்தில் பல்லவர் கொடி நந்தியில் இருந்து சிம்மத்திற்கு மாறியது !! இதே போல பல்லவ தூண்களும் மாறின – அவற்றை இன்னொரு பதிவில் பார்ப்போம் ) – மேலும் உமையம்மை காலுக்கு அடியில் இருந்த சொம்பு மாறி இங்கே ஒரு பெண் பக்தை இருக்கிறாள்.

சரி, மீண்டும் கேள்விக்கு வருவோம். இரண்டு உருவங்களில் ஏது பழையது. இன்னும் ஆராய்வோம்.

ஈசனின் அலங்காரம் எல்லாம் ஒன்றே போல தான் உள்ளது.

இரண்டு சிற்பங்களிளும் வெளித் தோற்றதில் ஒன்றே போல இருக்கின்றன. ஆடை , அணிகலன் உட்பட. இன்னும் ஒரு முறை ஒன்றுக் கொன்று அருகில் வைத்து பார்ப்போம். ஈசனின் இடது காலை கவனியுங்கள். கடற்கரை கோயில் வடிவத்தில் – அது மேல் இருந்து கீழே ஈசனின் நடுவே ஒரு கோடு போட்டால் அப்படியே அது நடுவில் வருகிறது. ஆனால் இந்த குடவரையில் அது சற்று நகர்ந்து, நந்தி உள்ளே வர வழி விட்டு , சற்று தள்ளி வந்துள்ளது.

இன்னும் சரியாக விளக்கு கணினி கொண்டு இரு உருவங்களையும் இணைத்து பார்ப்போம். நந்தி உள்ளே வர கால் எப்படி அழகாக நகர்கிறது பாருங்கள்.

இவற்றை கொண்டு பார்த்தால், மகிஷாசுர மர்த்தினி மண்டப சிற்பம் கடற்கரை கோயில் வடிவத்தை ஒத்தது. அந்தக் கோயில் கட்டப்பட்ட காலத்திலோ அல்லது அதற்கு பிறகோ தான் வடிவமைத்திருக்க வேண்டும்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

காஞ்சி மாதங்கேஸ்வரர் ஆலயம் – சோமஸ்கந்தர் வடிவம்

சிறப்பு விருந்தினர் அரவிந்த் படைக்கும் சிறப்பு விருந்து. பலரும் செல்லும் காஞ்சியில் ஒளிந்து இருக்கும் பொக்கிஷம். நண்பர் அரவிந்த் சிலை சிற்பங்கள் மேல் தீராக் காதல் கொண்டவர். சிற்பம் பற்றி பல நல்ல புத்தங்களை சேகரித்து, அவற்றை பல முறை ஆழ்ந்து படித்து, அதன் பின்னர் அங்கு சென்று மீண்டும் மீண்டும் ரசித்து ஆராய்பவர். மேலே படியுங்கள் – இனி ஓவர் டு அரவிந்த்

காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பது நான் பல நாட்களாக செய்யவேண்டும் என்று குறித்து வைத்த ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போது பலமுறை சென்றிருந்தாலும், சமீப காலத்தில் இந்த புதையல்களின் குவியலை சென்று பார்க்கவில்லையே என்ற ஒரு குறை வெகு நாட்களாக இருந்தது.

காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பது நான் பல நாட்களாக செய்யவேண்டும் என்று குறித்து வைத்த ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போது பலமுறை சென்றிருந்தாலும், சமீப காலத்தில் இந்த புதையல்களின் குவியலை சென்று பார்க்கவில்லையே என்ற ஒரு குறை வெகு நாட்களாக இருந்தது.

ஒரு நண்பருடன் பேசும்போது, ஆர்வம் மீண்டும் எழுந்தது. கடைசியில், சென்ற வாரம், இப்போதே போக வேண்டும் என்று முடிவெடுத்து – அதுவும் அது ஒரு முழு வாரக் கடைசி – இரண்டு நாட்கள் ஒதுக்கி வைத்து – முடிந்தவரையிலும் அனைத்து இடங்களை இம்முறை பார்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் புறப்பட்டேன். நண்பர் கோபிநாத ஸ்ரீநிவாஸ் அவரும் உடனே வருகிறேன் என்று சேர்ந்துக்கொண்டார்.

ஒவ்வொரு ஆலயமாக செல்லச் செல்ல, சிற்பங்களின் போதை ஏறியது, வெய்யில் அதிகம் – என்றாலும் முதல் நாள் கைலாசநாதர், கச்சபேஸ்வரர், காமாட்சி அம்மன் , உலகளந்த பெருமாள் என்று சனிக்கிழமை வந்தது தெரியாமல் ஓடியே போய் விட்டது.

அடுத்த நாள் விடியற் காலையிலேயே புறப்பட்டு விட்டோம். மதியம் நடைசாத்தும் முன்னர் முடிந்த வரையிலும் முடிக்க வேண்டும் . ஏகாம்பரேஸ்வரர் தரிசனத்தை முடித்துவிட்டு வைகுண்ட பெருமாள் கோயில் விரைந்தோம். ஏகாம்பரேஸ்வரர் கோயில் வெளியேஇருந்து பார்த்த பிரம்மாண்டத்திற்கு உள்ளே சிற்பங்கள் அப்படி ஒன்றும் விசேஷமாக இல்லை. ஆனால் வைகுண்ட பெருமாளோ …அப்பாடா – நகர முடியவில்லை – ஒவ்வொரு துணுக்கும் ஏராளமான சிலை, அவை சொல்லும் கதை. ஒரு இடத்தில ஹோங் சென், மல்லை கடற்கரை கோயில், பல்லவ மன்னர்கள் அரியணை ஏறும் வைபவம் என்று எங்கே பார்த்தாலும் சிற்பக் குவியல். அப்போது கோவில் பூசாரி பக்கத்தில் இன்னும் ஒரு நல்ல கோயில் இருக்கிறது – போய்ப் பாருங்கள் என்றார்.

வைகுண்ட பெருமாள் கோயிலில் இருந்து ஒரு இருநூறு மீட்டர் தூரம் தான் . ஆனால் அதை கண்டுபிடிப்பது சுலபம் இல்லை.

பூசாரி – இரண்டாவது வலது ரோட்டில் திரும்ப சொன்னார் – திரும்பியவுடன் கோபுரம் தெரிந்தது. ஆஹா என்று, சென்று பார்த்தால் – உள்ளே செல்லும் வழி தெரியவில்லை. எல்லா பக்கமும் நவீன வீடுகள். திரும்ப ஒருமுறை வந்த வழியே வந்து பார்த்தோம். ஆ , இதோ ஒரு சிறு பாதை. முப்பது அடி உள்ளே – அருமையான கோயில். பல்லவர் கட்டிய சிறு ஆலயம் தான் – மொத்தமே நாலாயிரம் சதுர அடி தான் இருக்கும். எதிரே ஒரு சிறு நந்தி, பக்கத்தில் ஒரு அரச மரம் ( அதுக்கு நல்ல கூட்டம் போல தெரிகிறது )


தரையில் இருந்து பத்து படி ஏறினால் மண்டபம்

உள்ளே – லிங்கம் – அதன் பின்னர் அற்புத சோமஸ்கந்தர் வடிவம். இது எந்த பாணியில் உள்ளது? பார்த்து சொல்லுங்கள்

இந்த ஆலயத்தின் உள்பக்க சுவரிலும், வெளி பிரகாரத்திலும் இன்னும் மிக அற்புத சிற்பங்கள் உள்ளன. இவற்றின் அழகை முழுவதுமாக ரசிக்க மீண்டும் ஒரு முறை வர வேண்டும்.

அற்புத சிற்பங்களையும் இந்த ஆலயத்தின் வரலாற்றையும் பற்றி – தொடரும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – இரண்டாம் பாகம்

சென்ற பதிவில், சோமஸ்கந்தர் வடிவத்தின் மிக தொன்மையான உருவத்தையும் தற்காலச் சிலையையும் பார்த்தோம்.

தர்மராஜா ரதத்தில் உள்ள சோமஸ்கந்தர் வடிவத்தை மிகவும் தொன்மைவாய்ந்தது என்று சொல்கிறார்களே அது எப்படி! அதனை மீண்டும் ஒரு முறை பார்த்துஆராய்வோம். படங்களும், வினாக்களும் என்னுடையது, விடையை நீங்கள்தான் கொடுக்கவேண்டும்.

இதை பல்லவ மன்னன் ராஜசிம்ஹன் காலத்து சோமஸ்கந்தர் வடிவத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் ஏதும் பிடிபடுகிறதா என்று பார்ப்போம். நாம் கொடுத்து வைத்தவர்கள், சிற்பக் கலைக்கு மெருகேற்றியஅவனது காலத்து சோமஸ்கந்தர் வடிவங்கள் பல இடங்களில் உள்ளன. மல்லை கடற்கரை கோயிலில் அற்புதமான வடிவம் ஒன்று உள்ளது. (மல்லை கடற்கரை கோயில் உண்மையில் மூன்று ஆலயங்கள் கொண்டது. முதலில் இருந்த சயன பெருமாள் கோயில், அதனை ஒட்டி ராஜ சிம்ஹன் எடுப்பித்த ராஜசிம்மேஷ்வரம் மற்றும் ஷத்ரியசிம்மேஷ்வரம் என்ற இரு சிவ ஆலயங்கள், நாம் இன்று பார்க்கும் சோமஸ்கந்தர் வடிவம் ராஜசிம்மேஷ்வர ஆலயத்தில் உள்ளது. ஷத்ரியசிம்மேஷ்வரம் சோமஸ்கந்தர் வடிவத்தை அடுத்து வரும் பதிவுகளில் அலசுவோம்).

இரண்டு சிற்பங்களுக்கும் உள்ள வேற்றுமையை எளிதில் கண்டறிய ஒற்றி எடுத்த கோட்டோவியங்கள் உதவும். ஆறு வித்தியாசம் கண்டுபிடிப்பது போல், இரண்டு சோமஸ்கந்தர் வடிவங்களுக்கும் உள்ள வேற்றுமைகளை நீங்களே ஒரு பட்டியல் இடுங்கள் பார்ப்போம்.

மல்லையின் புதிர்களில் இன்னும் ஒரு புதிர். மல்லை ராமானுஜ மண்டபம், அங்கிருக்கும் குடைவரைகளிலேயே மிகவும் முழுமை பெற்ற குடைவரை. எனினும் வன் செயல்களால் இங்கு உள்ள அனைத்து சிற்பங்களும் அழிக்கப்பட்டுள்ளன. .இரு வாயிற் காப்போன்கள் முதல் உள்ளே இருக்கும் மூன்று புடைப்பு சிற்பங்களும் உளி கொண்டு முழுவதுமாக செதுக்கி எடுக்கப்பட்டுள்ளன. ( யாரால், எதற்கு ?)

ஆனால், எந்தக் கயவனும் தடயம் விடாமல் செல்ல மாட்டானே. கருவறையில் உள்ள பின் சுவரில் அழிக்கபட்ட சிற்பத்தின் தடயங்கள் இன்னும் தெரிகின்றன – ஆம் அதுவும் ஒரு சோமஸ்கந்தர் வடிவமே.

நன்றாக உற்றுப் பாருங்கள், சரி இதையும் ஒற்றி எடுத்து பார்ப்போம். சோமஸ்கந்தர் எந்த வகை? தர்மராஜா ரதம் பாணியா அல்லது ராஜசிம்மேஷ்வர பாணியா? நீங்களே கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

உங்கள் பணியை எளிதாக்க , தர்மராஜ ரதத்தில் உள்ள சோமஸ்கந்தர் வடிவத்தை இரண்டாய் பிரித்து உமை ஒரு பாகமாகவும் ஈசனை மற்றொரு பாகமுமாகத் தருகிறேன்.

இன்னும் உதவி தேவையா. படங்களை நான்றாக தலையை சாய்த்து பாருங்கள் !!

படங்களுக்கு நன்றி:

Varalaaru.com. மற்றும் திரு அசோக்

ஆணுக்குப் பெண் வளைந்து கொடுக்க வேண்டுமா?

ஆணுக்குப் பெண் வளைந்து கொடுக்க வேண்டுமா அல்லது பெண்ணுக்கு ஆண் வளைய வேண்டுமா ?

பதறாதீர்கள், சிற்பத்தை பற்றித் தான் பேசுகிறோம்.

முந்தைய பதிவில் அர்தனாரி வடிவம் எப்படி படிப் படியாக சிற்பியின் கையில் மெருகு பெற்றது என்பதை பார்த்தோம். அதில் கற்சிற்பங்களில் எப்படி பெண்ணின் நளினத்தை வளைவுகளிலும் அதை ஈடு கட்ட அப்பனை விடையின் மீது சாய்த்து வடிக்க நேர்ந்தது என்பதையும் பார்த்தோம். முடிவில் வெண்கல சிலைகளில் இந்த வடிவத்தை பிறகு பார்ப்போம் என்று நிறுத்தினோம். அங்கிருந்து இன்று தொடர்வோம்.

கல்கி நந்தினியை பற்றி பொன்னியின் செல்வனில் சொல்வார்..” தன் காலால் இட்ட பணியை ஆண்கள் தலையால் செய்து முடிக்க வைப்பாள்” என்று. இவை அந்த உத்தரவை கூட செய்ய வேண்டாம் – பார்த்தாலே அவற்றின் மதிவதன அழகில் சொக்கி கொத்தடிமைகளாய் ஆக்கும் நம்மை, பார்க்கப் பார்க்க சிந்தையை மயக்கி நமக்குப் பித்து பிடிக்க வைக்கும். ஆம், வெறும் வெண்கல சிலைகளை அல்ல, சோழர் சிலைகளையே பார்ப்போம். அதுவும் வெறும் சோழர் சிலையல்ல , ஒரு அற்புதச் சிலை. (தற்போது இருக்கும் இடம் கிளீவ்லாந்து அருங்காட்சியகம் ,அவர்களது படங்களுக்கு நன்றி )

அருகில் சென்றுதான் பார்ப்போமே. சிலையை அல்ல, அதை ஒத்தி எடுத்த ஓவியத்தை.

சிலர் பார்த்தவுடனேயே, அது என்ன அப்பனுக்கு இரண்டு கை, அம்மைக்கு ஒரே கை, இது ஆண் ஆதிக்கம் என்பர். ஐயா, இது அப்படி அல்ல. ஆணும் பெண்ணும் சரி சமானம் என்பதை நமக்கு உணர்த்தவே இந்த அற்புதக் கோலம். பின்னர் எதற்கு ஈசனுக்கு இரண்டு கைகள். பொறுமை. ஓவியத்தை மீண்டும் பார்ப்போம். ( இன்னும் கொஞ்சம் பின்னால் நகர்ந்து )

கற்சிலைகளில் பார்த்தது போலவே, இங்கும் உமையின் இடையை கடல் அலையென வளைத்து, உடலை திரிபங்கத்தில் வார்த்துள்ளான் சிற்பி. மீண்டும் ஒருமுறை கல்லையும் உலோகத்தையும் பார்ப்போம்.

உமையின் கை, அப்பப்பா – அழகே வடிவமாக மலர்ந்த தாமரையின் மெல்லிய காம்பை பிடித்திருப்பது போல அபிநயம் பிடிக்கும் விரல்களின் நளினம். அந்தப்பக்கம் அப்பன் மழுவை பிடித்திருக்கும் காட்சி அருமை. எதற்கு இன்னும் ஒரு கை.

சரி, விவாதத்திற்கு கையையும் விடையையும் அகற்றி விடுவோம்.

சிலை ஒரு பக்கம் வளைந்து கொண்டு – எப்படிச் சொல்வது. பயணிகள் நிறைந்த பேருந்தில் நாம் எட்டி நடத்துனரிடம் பயணச் சீட்டு வாங்குவது போலல்லவா உள்ளது!

இதை சரி செய்யவே விடையையும் அதன் தலைமேல் சாய்ந்த இரண்டாவது கையையும் கொண்டு வருகிறான் சிற்பி.

அது சரி , கேள்விக்கு விடை என்ன? கணவன் இழுத்த இழுப்புக்கு மனைவி வரவேண்டுமா? அல்லது மனைவி போடும் பாரத்தை கணவன் சுமக்க வேண்டுமா ? நமக்கு ஏன் இந்த வம்பு. சிற்பத்தை விளக்குவதோடு நிறுத்திக்கொள்வோம்.

அர்விந்த் ஒரு நல்ல கேள்வியை கேட்டார். சிவனின் கால் ஏன் மடங்கும்படி உள்ளது என்று.

பொதுவாக ஆணை வடிக்கும் பொது கட்டு மஸ்தான அளவில், நல்ல உயரமாக காட்டும் பழக்கம் உண்டே , அதனால் ஒருவேளை ஆண் பெண் இணைக்கும் பொது ஆணின் கால் பெண்ணின் காலை விட பெரியதாக காட்டுவதற்காகவா ? அல்லது இடையை வளைத்தனால் காலை மடிக்க வேண்டயுள்ளதா ?

நீங்கள் என்ன நினைகிறீர்கள்? இதை வெறும் ஆண் , பெண் வெண்கலச் சிலைகளை வைத்து மீண்டும் ஒரு பதிவில் ஆராய்வோம்.

அட, இதை ஒரு அற்புத வடிவம் என்றேனே – அது என்ன? முழுப் படத்தையும் பார்க்கவும்

ஆண்பாதி பெண்பாதி விடையோடு சூலத்தினுள் எப்படித்தான் வெங்கலத்தில் இப்படி மதிமயக்கும் அழகில் வார்த்தானோ!!!

சிற்பிக்கு “விடை”யே விடை

நண்பர் திரு தேவ் அவர்களுடன் சென்ற மடலைப் பற்றி தற்செயலாக நடந்த உரையாடலில் வந்த கேள்விகளை ஆராயும்போது கிடைத்த விடைகளை விரிவுபடுத்தி ஒரு பதிவாக இங்கு இடுகிறேன். சிற்பங்கள் வெகுவாக சிதைந்து இருப்பதால் அவற்றை கொட்டோவியங்களாகவும் உங்கள் பார்வைக்கு இடுகிறேன். ( வரைந்தவை அல்ல – ஒற்றி எடுத்தவை – திரேசிங்)

முதலில் ஒன்றை தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். இந்த பதிவின் குறிக்கோள் அர்த்தனாரி வடிவத்தின் இரு பாகங்களின் வேற்றுமைகளை எடுத்துக்காட்டுவதல்ல, அந்த வடிவம் எப்படி படிப்படியாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது என்பதை விளக்க ஒரு முயற்சி. அதுவும் ஒரு சிற்பி இந்த வடிவத்தை செதுக்கும் போது எதிர்க்கொண்ட சவால்கள் என்னவாக இருந்திருக்கும், அதனை அவன் எப்படி சமாளித்தான் என்பதை காட்டவே இந்த பதிவு.

ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள அங்க அமைப்புகளின் வித்தியாசங்கள் பல. அவற்றை இங்கு பட்டியலிடாமல், சிற்பி எவ்வாறு இவற்றை ஒரு உருவத்துள் கொண்டு வர முயற்சிக்கிறான் என்று பார்ப்போம். ஆண் பெண் இருவரையும் ஒன்றாக இணைக்க வேண்டும், ஒரே உருவமாகத் தெரிய வேண்டும், எனினும் இரு பாகங்களும் ஆண் எது பெண் எது என்றும் தெளிவாகத் தெரிய வேண்டும். அழகாகவும் இருக்க வேண்டும். இந்தக் கேள்விகளையும் அவன் கண்டுபிடித்த விடையையும் நான்கு சிற்பங்களின் மூலம் பார்ப்போம். ( சிற்பங்கள் ஒவ்வொன்றும் மிக அருமை – அவற்றிற்கென தனி இடுகை வேண்டும், எனினும் தலைப்புக்கு என்ன தேவையோ அதை மட்டும் இன்று பார்ப்போம்)

முதல் சிற்பத்தை பார்ப்போம் – முற்கால பல்லவர் வடிவம் ( முதல் வடிவம் அல்ல, எனினும் நமது பதிவின் கால அட்டவணையில் மூத்தது). மல்லை தர்மராஜ ரதம் அர்த்தனாரி சிற்பம்.

எளிதில் சிற்பத்தை ரசிக்க ஒற்றி எடுத்த கோட்டோவியம்.

முற்கால பல்லவர் சிற்பம் என்பதற்கு சான்றுகள், மிகவும் குறைந்த அளவு ஆபரணங்கள் மற்றும் எளிமையான வடிவம். எனினும் பல்லவ சிற்பத்திற்கே உடைய உயிரோட்டம் இதில் இல்லை, அதே மல்லையில் உள்ள மற்ற சிற்பங்களில் உள்ள தன்மை இதில் ஏன் இல்லை. ஒருவேளை இந்த வடிவத்தை முதல் முதலில் சிற்பி வடித்ததால் இப்படியோ என்று தோன்றுகிறது. பல முறை சோதனை செய்து பார்த்து வடிக்க இது களிமண் பொம்மை இல்லையே. கருங்கல் அதுவும் நிலத்தில் இருந்த சிறு குன்றை குடைந்து வடித்த வடிவத்தின் வெளிச் சுவரில் வரும் புடைப்புச் சிற்பம். எனினும் பல்லவர் சிற்பம் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம், பலரிடத்தில் அவர்கள் சிற்பக்கலை சோழர்களின் கலையை விட மேலானது என்று நான் வாதாடியதும் உண்டு. எனினும் இந்த சிற்பம் என்னை கவரவில்லை – ரோட்டில் லாரி ஏறி கிடக்கும் தேரை போல ஒரு வெறுமை – கண்டிப்பாக இது அவனது முதல் முயற்சி என்றுதான் தோன்றுகிறது. இரண்டு பாகங்களுக்கும் வேற்றுமைகள் ஒன்றும் பெரிதாக இல்லை, வெளிப்படையாக ஒன்றே ஒன்றுதான் தெரிகின்றது – மார்பகங்கள். கால்கள் இரண்டும் வித்தியாசம் பெரிதாக எதுவும் இன்றி ஒரே போல் இருப்பது வருத்தமே.
சரி, சிற்பி இதற்கு என்ன செய்தான். அதே சிற்பி என்று சொல்லவில்லை, சிற்பக் கலை பயில்வோர் இந்தச் சிலைவடிவதை எவ்வாறு அழகூட்டுவது என்று ரூம் போட்டு யோசித்தால் ….என்ன நடந்திருக்கும்.

அடுத்த உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். வாசகர் கவனிக்க. சிற்பங்களை அட்டவணை போட்டு காலம் என்னவென்று நாங்கள் ஆராயவில்லை. பொதுவாக எப்படி இந்த உருவம் காலப்போக்கில் வளர்ச்சி பெறுகிறது என்று பார்ப்பதற்கே இந்த உதாரணங்கள்

மீண்டும் ஒற்றி எடுத்த ஓவியம்.

இங்கே சிற்பி, ஆண் பெண் வேற்றுமையை இன்னும் பிரதானமாக எடுத்துக்காட்ட வேண்டும் என்பதை உணர்ந்துள்ளான். பெண்ணின் இடுப்பை அழகாக வளைத்து திருபங்கத்திற்கு எடுத்துச்செல்ல எத்தனித்துள்ளான். ஆனால் ஒரு பக்கம் இழுத்தால் மறு பக்கம் விளைவு – அதை சரி செய்ய ஆணின் காலை சற்று மடித்து – சவாலே சமாளி !! கைகளில் சிறு வேற்றுமைகளை காணலாம். பெண்ணின் கையை நளினமாகவும், ஆணின் கையை கம்பீரமாகவும் ( இடுப்பில் வைத்து ), ஆடைகளிலும் சற்று வேறுபாட்டை காட்டுகிறான் – அம்மைக்கு புடவை, ஐயனுக்கு அரை டிரௌசர் !!

இன்னும் வளர்ச்சி – பிற்கால சோழர் சிற்பம் சென்று, பூர்த்தி பெற்ற அம்மை அப்பன் – உமை ஒரு பாகன் சிற்பத்தை பார்ப்போம். .

மீண்டும் ஓவியம்.


பெண் பாகம் முழுமையாக திருபங்கத்தில் வந்துவிட்டது, அதனை சரிகட்ட ஆணின் கால் முழுமையாக மடித்து விட்டான் சிற்பி. எனினும் ஆணின் மேல் பாகம், வெகுவாக ஒரு பக்கம் சாய்ந்துள்ளது – பார்ப்பதற்கு சிற்பம் அழகாக இருந்தாலும், ஒருபக்கம் இழுத்துக்கொண்டு இருப்பது போல இருக்குமே. என்ன செய்வது என்று யோசிக்கிறான் சிற்பி. எதன் மேலாவது சாய்வது போல காட்டினால் என்ன? கடினமான வினா! விடை என்ன ?? ஆஹா “விடை”யே விடை. ஒய்யாரமாக சாய்ந்து நிற்க அவரது கையை வாகனமான விடை மீது இறங்க விட்டு சிற்பத்தை முடித்துவிட்டான். அழகிய ஆபரணங்கள் மற்றும் அணிகளை வடித்தான். அற்புத அர்த்தனாரி வடிவம், விடை வாகன் வந்துவிட்டான். அர்த்தனாரி என்றால் இனி இந்த வடிவமே என்று எங்கும் திகழும் வண்ணம் பரவியது அவன் திறன்.

அப்படியா. இந்த விடை அங்கு வருவதற்கு இது ஒரு காரணமோ. சரி இதை சோதிக்க எளிபண்டா குடவரை செல்வோம்.

அற்புத அர்த்தனாரி வடிவம், கொள்ளை அழகு, ஆண் பெண் இருவரும் பிணைந்து நிற்கும் வடிவம். ஆஹா, அதோ இங்கேயும் நமது விடை தன் தலையை ஐயனுக்கு தந்துள்ளதே

அணிகலன், ஆபரணம் வேறுபட்டாலும் வடிவம் ஒன்றே!!

சரி, இதற்க்கு வேறு சான்று உண்டா. எப்படி சோதிப்பது. பொதுவாக அர்த்தனாரி உருவங்கள் சிவன் வலது புறம், உமை இடது புறம் என இருப்பது வழக்கம். எனினும் இதற்கும் ஒரு சிற்பம் விதி விலக்கு ( ஏன் – ஆராய வேண்டும்) – இங்கு இடம் மாறி இருக்கும் அம்மை அப்பன் பாதிகள். பாருங்கள்.

சரி, இடம் மாறி உள்ளார்கள், அதற்கும் நமது இடுகைக்கும் உள்ள தொடர்பு என்ன ? பின்னால் இருக்கும் உருவத்தை பாருங்கள் …

விடையும் இடம் மாறி, இடது புறம் நோக்கி இருப்பது – ஆண் பாதிக்கு முட்டுக்கொடுக்கவே என்பதை ஊர்ஜிதை செய்கிறது.

இது ஒரு கருத்தே. இதை இன்னும் ஆராய வேண்டும். இந்த வடிவம் கல்லில் செய்தது, பின்னர் உலோகத்திலும் வடித்தனர். கல்லில் வடித்த போது வளைத்து செதுக்கும் போது கல்லின் எடை போன்றவையை நினைவில் கொள்ள வேண்டும். அப்படி என்றால் உலோகத்தில் வார்க்கும் போது என்ன ஆகும். அதை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

படங்களுக்கு நன்றி : அமெரிக்கன் இன்ஸ்டிடுட் ஒப் ஆசியான் ஸ்டடீஸ்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

அலைபேசி அளவில் உமையொருபாகன் விடை வாகன்

புள்ளமங்கையின் ஈர்ப்பு நம்மை அவ்வளவு சுலபத்தில் அங்கிருந்து வெளிவர விடை தர மறுக்கிறது. அதனால் இன்று மீண்டும் அங்கிருந்து ஒரு சிற்ப விருந்து. நன்றி திரு அர்விந்த் அவர்களே. இந்த பதிவின் மூலம் வாசகர்களுக்கு இன்னும் ஒரு வேண்டுகோள். நீங்கள் அடுத்த முறை இத்தளங்களுக்கு செல்லும் பொது அங்கு நான் சென்றேன் என்பதற்கு அத்தாட்சியாக சிற்பங்களின் முன்னர் நின்று படம் எடுப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், ஒரு சில நிமிடங்கள் எங்களுடன் உங்கள் படங்களை பகிரும் நோக்கத்தோடு, சிற்பங்களின் கலைத் திறனை வெளிக் கொணரும் பாணியில் படங்களை எடுத்து உதவுங்கள். இப்போது முன் போல படம் எடுக்க பணம் விரயம் செய்யவேண்டிய அவசியம் இல்லை, மின்னணு புகைப்படக் கருவி வந்துவிட்டதே.படச் சுருள் தேவை இல்லை – மற்றும் எடுத்ததை அப்போதே பார்த்து பகிரலாம். இவ்வாறு படம் எடுக்க சில நொடிகள், நடுக்கம் இல்லாத கை, அருகில் இருக்கும் சாமானிய பொருள்கள் மற்றும் நல்ல உள்ளம் மட்டுமே.

திரு அர்விந்த் அவர்கள் எப்படி படம் எடுத்துள்ளார் பாருங்கள்.

இல்லை, இது அலை பேசி / கை பேசிக்கான விளம்பரம் இல்லை. எதற்காக இந்த படம் என்பது இந்த அற்புத சிற்பத்தின் பதிவின் முடிவில் விளங்கும்.

அர்தனாரி – உமை ஒரு பாகன், அம்மையும் அப்பனும் ஒன்றாய் காட்சி அளிக்கும் திருவுருவம். பெண்கள் ஆண்களுக்கு சரி சமானம் என்றும், ஆணின் சரி பாதி என்றும் உலகுக்கு உணர்த்தும் உன்னத கோலம். இந்த வடிவத்தை கல்லில் அற்புதமாக செதுக்கி உள்ளான் சிற்பி.

உமையொருபாகன் தேவார வரிகளில் பல முறை வந்தாலும், அவனது எழில் மிகு தோற்றத்துடன் நந்தி இணைந்து விடை வாகனாக குறிப்பிடும் பாடல் இதோ

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=2&Song_idField=20850&padhi=085&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

செப்புப் போன்ற இள நகில்களை உடைய உமை நங்கை ஒருபாகத்தே விளங்க விடையேறிவரும் செல்வனாகிய சிவ பிரான் தன்னை அடைந்த இளமதியையும், கங்கையையும் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்தின்கண் புகுந்து எழுந்தருளிய காரணத் தால், வெம்மை தண்மை வளி மிகுந்த பித்தம் வினைகள் இவற்றால் வரும் துன்பங்கள் நம்மை வந்து நலியா. அடியார்களுக்கும் அவை நல்லனவே செய்யும்.

இந்த சிற்பத்தின் அழகு அதை வடித்த சிற்பியின் கலை திறனைப் போற்றுகிறது. ஒரு புறம் ஆணின் வீரியம், அதனுடன் பெண்மையின் நளினத்தை இணைக்க வேண்டும், வெளி வரும் சிற்பம் இரு பாதிகளை ஒட்டியது போல இல்லாமல், பார்ப்பதற்கு ஒரு சிற்பம் போல இருக்க வேண்டும்

சிற்பத்தின் இரு பாதிகளையும் தனித்தனியாக பார்ப்போம். ஆண் பெண் என பார்த்தவுடனேயே நமக்கு உணர்த்தும் வகையில் நேர்த்தியாக செதுக்கிய அழகு அருமை

ஆண் பெண் என்ற இரு அம்சங்களையும் அவன் படித்து இரண்டிற்கும் உள்ள வேற்றுமைகளை உரிய வகையில் மிகைப் படுத்தி கல்லில் வடித்தான் என்பதை, அந்த இடையை பார்த்தாலே தெரிகிறது.

ஆண் என்பதனால் பறந்து விரிந்த தோள்கள், அதே உமைக்கோ கொடியென வளைந்து தவழும் வண்ணம் வடித்துள்ளான்.

அவன் கல்லில் இட்ட கோடுகளை சற்று மிகை படுத்தி நாம் ரசிக்க காட்டியுள்ளேன்.

அடுத்து ஈசன் கம்பிரமாய் நிற்கும் பாணி, அந்த பக்கம் உமையோ நளினமே உருவான தோற்றம். நந்தி பின்னால் – அதையும் மிக நேர்த்தியாக ( கழுத்தில் தொங்கும் சதை / தோல் ) வடித்துள்ளான் சிற்பி

அதனுடன் நமது பதிவு முடியவில்லை. அலை பேசி வரவேண்டுமே, இதோ..

அலைபேசி அளவில் உமையொருபாகன் விடை வாகன்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் – ஒரு சிற்ப விருந்து

நண்பர்களே, இன்றைக்கு நமக்கு ஒரு சிற்ப விருந்து. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வந்த இரு நண்பர்கள் – இல்லை இல்லை அவர்களை அங்கு சென்று படம் எடுத்து வாருங்கள் என்று தூண்டி இப்போது அதன் பலனை உங்களுடன் சேர்ந்து நானும் அனுபவிக்கிறேன். புள்ளமங்கை ஒரு கலைப் புதையல். ஆனால் புதையல் என்றாலே புதையுண்டு பல காலம் நினைவில் இருந்து விலகி பின்னர் கண்டுபிடிக்கப்படுவது போல, இன்னும் புதையுண்டு கிடக்கும் பொக்கிஷம் புள்ளமங்கை. அதன் அருமைகளை இந்த தொடரின் மூலம் வெளியிடுகிறோம்.

பொதுவாக இடுகைகளில் படங்களை தொலைவில் இருந்து இட்டு மெதுவாக அருகில் செல்வோம். ஆனால் இந்த பதிவுக்கு அதை சற்றி தலைகீழாக மாற்றி, முதலிலேயே அருகில் செல்வோம். படித்து முடித்தவுடன் ஏன் என்று உங்களுக்கு புரியும்.

இன்று நாம் பார்கவிருப்பது நான்கு சிற்பங்கள். கந்தன் பிறப்பை கல்லில் காட்சியை வடிக்கும் சிற்பங்கள், மற்றும் சில யாளிகள்.

எனக்கு பிடித்தமான யாளிகளுடன் துவங்குகிறேன்.

அற்புத வடிவங்கள், இவ்வளவு திறமை கொண்டு இவற்றை வடித்தான் சிற்பி என்றால், இவை வெறும் அலங்கார மதிப்புக்காகவா என்ற ஐயம் வருகிறது?

இன்னொரு யாளி ( கொம்புடன் இருப்பதால் இதனை ஆங்கிலத்தில் வ்யாலா என்கிறார்கள் )


என்னடா, முருகனின் பிறப்பு என்று சொல்லி மீண்டும் யாளிகளை வலம் வருகிறானே என்று எண்ண வேண்டாம். போகப் போக உங்களுக்கே புரியும் . சரி இதோ சிற்பங்கள்.


முதல் வடிவம். உமையும் ஈசனும் ஆடும் அற்புத நடனத்தைக் கண்டு ஸ்தம்பித்து நிற்கும் காமன் மற்றும் ரதி. இருவர் ஆட்டத்தில் தான் என்ன ஒரு உயிரோட்டம். ஆடல் வல்லானின் ஆட்டத்தின் ஆண்மை கலந்த தோரணை, உமையின் வடிவத்தில் பெண்ணிற்கே உரிய நளினம்.

அடுத்த வடிவம், உமையை தன்பால் ஈர்க்கும் ஈசன்.

வெட்கப்படும் பாவையாய் உமை, கடைக்கண் பார்வையால் தலைவனை பார்க்கும் வண்ணம் – ஆஹா, ஈசன் அமர்ந்திருக்கும் அழகைப் பாருங்கள்.

அடுத்து, இன்னும் நெருங்கி விட்டனர். தனது ஆசைக்குரிய பார்வதியை அன்புடன் சிவன் அணைக்கும் காட்சி.

இந்த சிற்பம் வடித்த சிற்பிக்கு உள்ள அறிவுக்கூர்மையை பாருங்கள். முதல் பார்வையில் ஈசனுக்கு இரண்டு வலது கரங்கள் இருப்பது போல வடித்தாலும் – ஒரு கை பின்னால் அமர்ந்திருக்கும் நந்தியின் மேல் , இன்னொரு கரம் உமையை அன்புடன் அணைப்பது போல இருந்தாலும், சிற்பத்தை இன்னும் ஒரு முறை பாருங்கள்.

கல்லில் ஈசனின் கை உயிர் பெற்று, நகர்ந்து உமையைப் பற்றுவது போல காட்டவே சிற்பி அப்படி வடித்தான் போல !!

அது சரி, அந்த முதல் ஸ்பரிசத்திற்கு உமையின் பதில். அப்பப்பா, நாணம் என்றால் இது தானோ !!!

அதனுடன் நிறுத்தவில்லை சிற்பி, நந்தியை கொஞ்சம் பாருங்கள்.

மேலே இருபுறமும் கணங்கள், கிழே பணிப்பெண் என்று பின்னுகிறான் சிற்பி.

நான்காவது சிற்பம். முருகன் பிறப்பு.

புரியவில்லையா. ஈசனின் மடியில் ஒரு குழந்தை, அப்பாவை செல்லமாக கை நீட்டி ஆசையாய் கன்னத்தை தொடுகிறது. கார்த்திகை பெண்கள் ஆறு, ஐவர் கையில் மற்ற ஐந்து குழந்தைகள்.

சிற்பங்கள் மற்றும் படங்கள் தரம் குறித்து சிலர் அதற்குள் கூறும் மறுமொழிகள் கேட்கிறது ( நல்லவை கெட்டவை இரண்டும் !!)

ஒரு நிமிடம் பொறுங்கள். காரணத்தை படங்கள் மூலமே சொல்கிறேன்.

இன்னும் முடியவில்லை

இன்னும் தொலைவில் இருந்து, இப்போது புரிகிறதா ? இந்த சிறிய சிற்ப புதையல்களை நாம் முதல் பார்வையில் விட்டு விடக் கூடும்.

நான் ” சிறு ” என்று பதிவில் சொன்னேனா ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தடாதகை – மும்முலையில் மூன்றாவது மறையும் முக்கண்ணன் பார்க்கையிலே

அண்மையில் மதுரை நண்பர்களிடம் சில படங்கள் வேண்டும் என அழைப்பு விடுத்தேன். நான் தேடிய படங்கள் திருபரங்குன்றம் பாண்டிய குடவரை – எனினும் நண்பர் திருமதி ஷோபா ராமகிருஷ்ணன் அவர்களை மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் படங்களை அனுப்பி வைத்தார். அந்த குவியலில் இந்த முத்தான படத்தை பார்த்தவுடன் இங்கே அதை பகிர்ந்து கொள்ள ஆசை – எனினும் இதை வாசகர்கள் எவ்வாறு கருதுவார்கள் என்று ஒரு சிறிய தயக்கம். சரி, முதலில் இதற்கு தகுந்த பாடல்களை எடுத்து பார்ப்போம், பின்னர் எவ்வாறு இடலாம் என்று யோசிக்கலாம் என்று எண்ணி நண்பர்களிடம் கேட்டேன். நண்பர் வைரம் பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடல் புராணத்தில் இது உள்ளது என்று கூறியவுடன் இணையத்தில் தேடினேன். தேனென இனிக்கும் தமிழில் பாடல்களை படிக்கப் படிக்க இன்பம் பொங்கியது, பயம் நீங்கியது. அழகு சிற்பம், அதை விட அமுத மொழி – வேறு என்ன வேண்டும் – ஐந்தே பாடல்களை கொண்டு கதையை விளக்குகிறேன்.

http://www.shaivam.org/tamil/sta_tiruvilaiyadal_02_u.htm

நிறைய பாடல் வரிகள் இருப்பதால் – இம்முறை முதலில் சிற்பத்தை பார்ப்போம். மூன்று முலை என்றவுடன் சிற்பத்தில் எவ்வாறு காட்ட முடியும்! அதுவும் அழகு கன்னியாய், கயல் விழியாய் காட்டவேண்டும். சளைத்தவனா நமது சிற்பி – இதோ

இப்போது வரிகளை பார்போம்

தெள்ளமுத மென்மழலை சிந்திவிள மூரல்
முள்ளெயி றரும்பமுலை மூன்றுடைய தோர்பெண்
பிள்ளையென மூவொரு பிராயமோடு நின்றாள்
எள்ளரிய பல்லுயிரும் எவ்வுலகு மீன்றாள் – Verse 542

மதுரையை ஆட்சி செய்த மலையத்துவஜ பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவர்கள் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தனர். இதன் பயனாக வேள்வி குண்டத்திலிருந்து மூன்று முலைகளுடன் பார்வதிதேவி தோன்றினாள்.

மகவின்றிப் பலபகல்யான் வருந்தியருந் தவம்புரிந்தேன் மைந்தற் பேறு
தகவிந்த மகஞ் செய்தேன் அதுவுமொரு பெண்மகவைத் தந்த தந்தோ
முகவிந்து நிலவொழுக வருபெண்ணு முலைமூன்றாய் முகிழ்த்து மாற்றார்
நகவந்த தென்னேயோ என்றுவகை யிலனாகி நலியு மெல்லை – 547

நீண்ட நாட்களுக்குப்பின் பிறந்த குழந்தை, அதுவும் அரசாள பிள்ளை வரம் வேண்டி வேள்வி நடத்திப் பெற்ற குழந்தை – மூன்று முலைகளுடன் இருப்பதை அறிந்த அரசனும் அரசியும் மிகவும் வருந்தினர்..

மன்னவநின் றிருமகட்கு மைந்தர் சடங்கனைத்தும் வழாது வேதஞ்
சொன்னமுறை செய்துபெயர் தடாதகையென் றிட்டுமுடி சூட்டு வாயிப்
பொன்னையா டனக்கிறைவன் வரும்பொழுதோர் முலைமறையும் புந்தி மாழ்கேல்
என்னவரன் அருளாலோர் திருவாக்கு விசும்பிடைநின் றெழுந்த தன்றே 548

அப்போது இறைவன் அசரீரியாக “இந்த குழந்தைக்கு தடாதகை (தடுத்தற்கரிய தடையுடை யாள்) என்று பெயர் சுட்டுமாரும், அவள் அரசனுக்கு நிகராக முடி சூட்டி ஆட்சி புரிவாள் என்றும், அவள் கணவனை முதல் முறை காணும் போது தானாகவே மூன்றாவது முலை மறையும்”என்றார்.

மீன் போன்ற விழிகளைக் கொண்டிருந்ததால் அங்கயற்கண்ணி எனவும் மீனாட்சி எனவும் அவள் அழைக்கப்பட்டாள் – ஒரு ஆண் பிள்ளையை போலவே போர்ப் பயிற்சிகளை பெற்றாள். உரிய காலத்தில் மலையத்துவசனுக்கு பின் அரசுக்கட்டிலில் அமர்ந்தாள் பாலகி அங்கயற்கண்ணி. அன்றிலிருந்து அவள் மதுரை மீனாட்சி என அழைக்கப்பட்டாள்.

அவளை எதிர்த்த அரசர்கள் அத்தனை பேரும் தோற்றனர். கைலாயத்தையும் கைப்பற்ற விழைந்த அங்கயற்கண்ணியின் படை ஆரவாரத்துடன் கைலாயத்தை அடைந்தது.

ஒற்றை வார் கழல் சரணமும் பாம்பசைத்து உடுத்த வெம் புலித் தோலும்
கொற்ற வாள் மழுக் கரமும் வெண் நீறணி கோலமும் நூல் மார்பும்
கற்றை வேணியும் தன்னையே நோக்கிய கருணை செய்திருநோக்கும்
பெற்ற தன் வலப் பாதியைத் தடாதகை பிராட்டியும் எதிர் கண்டாள் – 646

ஈசனை எப்படி எல்லாம் வர்ணிக்கிறார் புலவர். ஒப்பில்லாதவன் – ஒருவன், பாம்பு அணிகலன், புலித் தோல் அணிந்து, உடம்பெல்லாம் சாம்பல் பூசி, சடைமுடி தரித்து, முப்புரி நூல் அணிந்து சிரித்து வந்தவனைக் கண்டதும், தான் யார் என்பதும் எதிரில் நிற்பது தனக்கு ஒரு பாதியை தந்தவன் என்றும் உணர்கிறாள். உணர்தவுடன் …


கண்ட எல்லையில் ஒரு முலை மறைந்தது கருத்தில் நாண் மடம் அச்சம்
கொண்ட மைந்திடக் குனிதா மலர்ந்த பூம் கொம்பரின் ஒசிந்து ஒல்கிப்
பண்டை அன்பு வந்து இறை கொளக் கரும் குழல் பாரமும் பிடர் தாழக்
கெண்டை உண் கண்ணும் புறவடி நோக்க மண் கிளைத்து மின் என நின்றாள்

அங்கயற்கண்ணியின் மூன்று மார்பகங்களில் ஒன்று மாயமாகிப் போனது. தடாதகைப் பிராட்டிக்கு அதுவரை இருந்த குணங்கள் சற்று மாறி, தன் கைத்தலம் பற்றப் போகிறவன் கைலாயநாதன் தான் என்பதை உணர்ந்த அவள் நாணம் மேலிட தரை பார்த்து தலை சரித்தாள்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment